Showing posts with label மருத்துவ முத்துக்கள். Show all posts
Showing posts with label மருத்துவ முத்துக்கள். Show all posts

Wednesday, 17 May 2023

சர்க்கரை நோயும் சிறுநீரகமும்!!!!

 சர்க்கரை நோயின் தாக்கம் உடலின் பல உறுப்புகளை நாளடைவில் பாதிக்க ஆரம்பித்தாலும் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் சிறுநீரகத்தை பல விதங்களிலும் கடுமையாக தாக்க ஆரம்பிகிறது. சிறுநீரகங்கள் சுருங்க ஆரம்பிக்கின்றன. சிறுநீர்ப்பை, சிறுநீர்த்தாரைக்களில் அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுகின்றன. நமது சிறுநீரகங்களில் மில்லியன் கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன. இந்த நெஃப்ரான்கள் தான் நம் உடம்பில் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையை செய்கிறது. எனவே சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இந்த நெப்ரான்கள் கழிவுகளை வடிகட்டும் செயல்திறனை இழக்கின்றன. நாளடைவில் சிறுநீரில் புரதம் வெளியேற ஆரம்பிக்கும். 


இந்த புரதம் கழிதல் சிறுநீரக பாதிப்பால் தான் வந்ததா அல்லது சர்க்கரை நோயை தவிர்த்து பிற நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதிக அளவில் வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளுதல், தொண்டை வலி போன்றவற்றாலும் புரதம் கழிதல் வரும். கண்டு கொள்ளாமலோ, கண்டு பிடிக்காமலோ இருந்தால் 4-வது நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும், 5-வது நிலையை அடையும்போது யூரியா கிரியேட்டின் மிகவும் அதிகரித்து விடும். உடலில் தங்கி இருக்கும் அசுத்தங்கள் வெளியேற முடியாமல் தங்கி விட நேரும் போதுதான் கிரியேட்டின் உடலில் அதிக அளவில் இருக்கும். இது கடுமையான சிக்கல்களை உருவாக்கி விடும். சிலருக்கு சர்க்கரை நோய் உடலில் இருக்கிறது என்று கண்டு பிடிக்கும்போதே இந்த புரதமும் சிறுநீரில் வெளியேறிக்கொண்டிருக்கும். நிறைய மருத்துவ மனைகளில் இந்த குறைப்பாட்டை கண்டு கொள்வதில்லை. சர்க்கரை நோய்க்கு மட்டுமே மருந்துகள் தருகிறார்கள். அதனால் நோயாளிக்கு தன் மிகப்பெரிய பிரச்சினை தெரிவதில்லை. வருடக்கணக்கில் இது தெரியாமலேயே இருந்து தாமதமாக யாராவது ஒரு மருத்துவரால் தெரிய வரும்போது புரதம் அதிகமாக வெளியேறும் நிலை வந்திருக்கும். 

நானும் ஒரு சிறுநீரக மருத்துவரிடமும் கேட்டிருக்கிறேன், “ மருத்துவ பரிசோதனைகளில் புரதம் அதிகமாக வெளியேறுகிறது என்று இருக்கும்போது அதை ஏன் நீங்கள் நோயாளிகளிடம் சொல்லுவதில்லை? “என்று! அதற்கு அந்த மருத்துவர் சொன்னார் “ நீங்கள் படித்திருக்கிறீர்கள், அதனால் நீங்கள் கேட்கிறீர்கள். நாங்கள் அதைப்பற்றி சொல்கிறோம். ஆனால் பொதுவாக நோயாளிகளிடம் இதையெல்லாம் நாங்கள் சொல்லுவதில்லை. “ என்றார். எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு மருத்துவர் கிரியாட்டினினும் யூரியாவும் சரியான நிலையில் இருக்கும் வரை நாங்கள் புரதம் வெளியேறுவதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எப்போது கிரியாட்டினின் இரண்டு பாயிண்டுக்கு மேல் போகிறதோ அப்போது தான் நாங்கள் மருத்துவம் செய்ய ஆரம்பிப்போம் “ என்றார். அதையே துபாயின் புகழ் பெற்ற சிறுநீரக மருத்துவரும் ஆமோதித்தார். துபாயிலுள்ள என் குடும்ப மருத்துவரும் “ இந்தப்பிரச்சினைக்கு மருத்துவ உலகில் ஆரம்ப நிலையிலேயே இதை குறைப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ சிகிச்சை கிடையாது என்பது தான் உண்மை! “ என்றார்.

ஒரு சர்க்கரை நோயாளிக்கு மருத்துவ பரிசோதனையில் புரதம் வெளியேறுவது தெரிய வரும்போது, மருத்துவர் நோயாளிக்கு புரதம் வெளியேறும் அளவைப்பொறுத்து எந்த அளவு அவர் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும், எவற்றையெல்லாம் அவர் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறுதல் மிகவும் அவசியம். அதிர்ஷ்ட வசமாக, எல்லா சர்க்கரை நோயாளிகளுக்கும் புரதம் வெளியேறுவதில்லை. சிலருக்கு மட்டுமே புரதம் வெளியேறுகிறது. ஜீன்ஸ் காரணம் என்கிறார்கள். வலிக்கான மாத்திரைகளில் பாரசிட்டமால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அலோபதியில் புரதம் கழிதல் நோயுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட அளவு புரதம் எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறார்கள். அசைவ உணவுகளில் அதிக சதவிகிதம் புரதம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு அவற்றையும் எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறார்கள். ஆனால் சித்த வைத்தியத்தில் அசைவ உணவுகளை அறவே அனுமதிப்பதில்லை. காளான் உணவுகளைக்கூட அவர்கள் மறுக்கிறார்கள். புரதம் வெளியேறும் அளவினை கணிக்க 24 hours urine test செய்வதுண்டு. 24 மணி நேரங்களில் வெளியேறும் சிறுநீரை சேமித்து கொடுக்கச் சொல்வார்கள். பரிசோதனை சாலையில் அந்த சிறுநீரில் எவ்வளவு புரதம் வெளியேறி இருக்கிறது, குறித்த அளவிற்குட்பட்டு இருக்கிறதா, அல்லது எந்த அளவு அதிகமாயிருக்கிறது என்று கணக்கிடுவார்கள். ஆனாலும் அளவுக்கு அதிகமாக வெளியேறும் புரதத்தை குறைக்க எந்த மருத்துவமும் கிடையாது. அதனால் 

சர்க்கரை நோயாளிகள் தான் இதில் கவனமாக இருக்க வேண்டும். வருடம் ஒரு முறையாவது மேற்சொன்ன பரிசோதனையும் கூடவே சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட பொட்டாஷியம், சோடியம், கிரியாட்டினின், யூரியா இவற்றுக்கான அளவுகளை பரிசோதனை செய்து சரி பார்த்துக்கொள்வதும் நல்லது. 


Thursday, 5 August 2021

சில வழிமுறைகளும் தீர்வுகளும்!!

 வயதானால் வலிகளுக்குப் பஞ்சமில்லை.

எலும்பு சம்பந்தமான மூட்டு வலி, குதிகால் வல், இடுப்பு வலி என்று தொடர்ந்து வருவதும் சர்க்கரை ஏறுவதும் இரத்த அழுத்தம் உயர்வதும் முதியவர்களை அதிகமாகவே ஆட்டிப்படைக்கின்றன. நோய்களை கட்டுப்பாட்டில் வைப்பதும் அதிக வலிகள் இல்லாமல் உடலை பராமரிப்பதும் சவால்களாகவே இன்றைக்கு இருந்து வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, பல வித மருத்துவ முறைகளை கடைப்பிடிக்க நேருகின்றது. அதையும் தாண்டி சின்னச் சின்ன வைத்திய முறைகள் நமது நோய்களின் கடுமையைக் குறைக்க வழி செய்கின்றன. அந்த மாதிரி சில வைத்திய முறைகள், நான் என் ஃபைலில் சேகரித்து வைத்திருந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். யாருக்கேனும் இவை பலன் கொடுத்து நோயின் கடுமையைக்குறைத்தால் அதுவே இந்தப்பதிவிற்கான பரிசாய் மாறும்.  

சர்க்கரை நோய் குறைய:

1. எருக்கம் இலைகள் இரண்டை எடுத்து கால்களை நன்கு கழுவிக்கொண்டு காலின் அடிபாகத்தில் இலைகளின் அடிபாகத்தை வைத்து சாக்ஸ் போட்டு பொருத்திக்கொள்ள வேண்டும். இரவில் இதை உபயோகிக்கக்கூடாது. 


பகலில் தினமும் 6 மணி நேரம் உபயோகிக்க வேண்டும். இதைப்போல ஏழு நாட்கள் செய்யும்போது எட்டாம் நாள் உங்களுக்கு 50 முதல் 60 வரை சர்க்கரை குறைந்திருக்கும்.

2. 300 கிராம் செலரி தண்டுகளை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். அதை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு 6 எலுமிச்சம்பழங்களின் சாறை அதன் மீது பிழிந்து ஒரு சிறு தட்டால் மூடி, ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் ஊற்றி, இந்த சிறிய பாத்திரத்தை அதனுள் வைத்து அந்த தண்ணீரை கொதிக்க விடவும்.


 கொதி வந்ததும் தீயைக் குறைத்து கொதி நிலையில் 2 மணி நேரம் வைத்திருக்கவும். பின் அடுப்பை அணைத்து, சூடு நன்றாக குறைந்ததும் சிறு பாத்திரத்தில் வைத்த செலரிக்கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு மேசைக்கரண்டி குடித்து வரவும். விரைவில் சர்க்கரை நார்மலுக்கு வரும்.

சைனஸ் பிரச்சினைக்கான தீர்வு இது:

சாறு நீக்கிய எலுமிச்சம்பழத்தோல்களைப்போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். எந்த மூக்கு துவாரத்தில் நீர் வடிகிறதோ அந்த மூக்கு துவாரத்தால் இழுத்து அடுத்த துவாரத்தால் காற்றை வெளி விட வேண்டும். பிறகு அதே துவாரத்தால் உள்ளே இழுத்து நீர் வடியும் துவாரத்தால் வெளி விட வேண்டும். 

மூட்டு வலி‍ யூரிக் அமிலம் அதிகரித்தால்:



பப்பாளிக்காய் ஒன்றை எடுத்து சிறு துண்டுகளாக்கியது 1 கப் வேண்டும். இதை 2 கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். 5 சின்ன வெங்காயம் அரிந்து போட்டு தீயைக் குறைகக்வும். இடித்த பூண்டுப்பற்கள் 4, சீரகம் அரை ஸ்பூன், ஒன்று பாதியாய் இடித்த மிளகுத்தூள் 1 ஸ்பூன், 2 சிட்டிகை உப்பு போட்டு ஐந்து நிமிடம் குறைந்த தீயில் கொதித்ததும் இறக்கி சூப் போல சாப்பிடவும். 7 நாட்களுக்கு காலை 11 மணி போல சாப்பிடவும். அதிகப்படியாக தேங்கி நிற்கும் யூரிக் அமிலம் நீங்கும். வலி குறையும். அதன் பின் வாரம் இரு முறையாவது இதை செய்து குடிக்கவும். யூரிக் அமிலத்தின் அளவு சீராகி விடும்.

பித்தப்பை கற்களுக்கு:


ஒரு வெள்ளை கத்தரிக்காயும் தோலுடன் ஒரு எலுமிச்சம்பழமும் நன்கு அரைத்து சிறிது நீர் கலந்து வடிகட்டி ஏழு நாட்களுக்கு குடித்து வரவும். எட்டாவது நாள் கற்கள் நீங்கி விடும்.

களைப்பிற்கு:

முருங்கைக்காய் விதை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். 



அதை வாங்கி உடைத்துப்பார்த்தால் உள்ளே கருப்பு விதை இருக்கும். இது விட்டமின் பி அதிகம் உள்ளது. தினமும் ஒரு விதை சாப்பிட்டு வரவும். 

குதிகால் வலிக்கு:


கொள்ளு மாவு 2 ஸ்பூன், நல்லேண்ணெய் 1 ஸ்பூன், வினீகர் 1 ஸ்பூன், கல்லுப்பு 1 ஸ்பூன் இவற்றை ஒரு கப் தயிரில் நன்கு கலந்து குழைக்கவும். இந்த பேஸ்டை குதிகாலில் பாதி கால் வரை தடவி துணி வைத்து கட்டி இரவு தூங்க வேண்டும்.. கால் வலி காலையில் சரியாகி விடும்.


Friday, 26 March 2021

காய்கறி வைத்தியம்- தொடர்ச்சி!!!

மருத்துவர் அருண் பிரகாஷ் காய்கறிகளை வேக வைக்காமல் பச்சையாகவே உண்ணும்போதுதான் அதன் முழுமையான சக்தி நமக்கு கிடைக்கும் என்பதை வலியுறுத்துகிறார். எப்படியெல்லாம் சுவையாக காய்கறிகளை, முக்கியமாக அவர் குறிப்பிடும் இந்த பன்னிரெண்டு நாட்டு காய்கறிகளை சத்துள்ள உணவாக, சமைக்காமல் சாப்பிட முடியும் என்று சில செய்முறைகளை சொல்லியுள்ளார். அனைவருக்கும் பயன்படும் என்று கருதி இங்கே அவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். 

நல்ல கெட்டியான தேங்காய்ப்பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அப்படியே மூடி வைத்தால் சில மணி நேரங்களில் அது தயிராக மாறும். அது சாப்பிடவும் நன்றாக இருக்கும் என்றும் மிகவும் ஆரோக்கியமானது என்றும் கூறுகிறார் மருத்துவர். 

வாழைக்காயை எப்படி பச்சையாக சாப்பிடலாம்?



வாழைக்காயை தோல் சீவி மிகவும் பொடிப்பொடியாக நறுக்கி அதே மடங்கு வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கி நாட்டு சர்க்கரை கலந்து உண்ணலாம். ஒரு மணி நேரம் ஊற வைத்து சாப்பிடும்போது இது மிகவும் சுவையாக இருக்கும்..

அதன் தோலை பொடியாக நறுக்கி உப்பு, வெண் மிளகுத்தூள், தேங்காய்த்துருவல் போட்டு உண்ணலாம்.

வெண் பூசணியை பச்சையாக எப்படி சாப்பிடலாம்? 



பூசணிக்காயை அதன் சதைப்பகுதியையும் அதன் தோலையும் பொடியாக நறுக்கவும். அதில் நாலில் ஒரு பங்கு இஞ்சித்துருவல் சேர்த்து உப்பு, வெண் மிளகுத்தூள், மாங்காய்ப்பொடி  சேர்த்துக் கலந்து ஊற வைக்கவும். பின் தேங்காய்ப்பாலில் செய்த மோரில் போட்டு சாப்பிடவும்.

கொத்தவரங்காயை எப்படி சாப்பிடுவது?


10 கொத்தவரங்காயை மிகவும் பொடியாக அரியவும். அதில் வெண் மிளகுத்தூள், மாங்காய்ப்பொடி, உப்பு கலந்து பின் கொத்தவரங்காயில் கால் பகுதி இஞ்சி துருவலும் கலந்து வைக்கவும். இவற்றை வைப்பரில் தனியாக ஒரு நிமிடம் அடிக்கவும். பின் தனியாக அரிந்த கொத்தமல்லி இலையை      [ கொத்தவரங்காயின் அளவு] வைப்பரில் போட்டெடுத்து கொத்தவரங்காயுடன் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சம அளவு தேங்காய்த்துருவல் கலந்து கொள்ளவும்.  இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அல்லது ஏதேனும் சுண்டல் வேக வைத்து அதில் கலந்தும் சாப்பிடலாம்.

புடலங்காயை எப்படி பச்சையாக சாப்பிடுவது?



மேற்கண்ட முறையில் புடலங்காயையும் செய்யலாம். கொத்தமல்லிக்கு பதிலாக புதினா சேர்க்கவும்.

பீர்க்கங்காயை எப்படி உபயோகிப்பது?




இதே போல பீர்க்கங்கங்காயின் தோலிலும் செய்யலாம். அதில் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பீர்க்கங்காயை சும்மாவே சாப்பிடலாம்.

பரங்கிக்காயை எப்படி சாப்பிடுவது?



இதேபோல பரங்கிக்காயை பொடியாக நறுக்கி அதில் நாலில் ஒரு பங்கு இஞ்சி துருவல் சேர்த்து வைப்பரில் அடிக்கவும். பரங்கி அளவு பேரீச்சை நறுக்கி நட்டு சர்க்கரை  சிறிது சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமை மாவு 4 ஸ்பூன், நாட்டு சர்க்கரை 8 ஸ்பூன் சேர்த்து கரைத்து அது கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து ஊற வைத்திருப்பவற்றை போட்டு கலக்கவும். இது பாயசம். கோதுமை கொதிக்கும்போது தேங்காயையும் சேர்க்கலாம்.

கோவைக்காயை எப்படி பச்சையாக சாப்பிடுவது?


கோவைக்காயையும் வெள்ளரியையும் பொடியாக நறுக்கி உப்பு, வெண் மிளகுப்பொடி, மாங்காய்ப்பொடி போட்டு ஊறவைக்கவும் [ 1 மணி நேரம்] 3 நாட்டுத்தக்காளி 3ஐ வெந்நீரில் போட்டு பிறகு தோலெடுத்து அரைத்துக்கொள்ளவும்.. அதை கொதிக்க விட்டு அது ஒரு ரசப்பதத்தில் இருக்கும் போது இறக்கி ஊறியவற்றை அதில் போட்டு குடிக்கவும். இரவு நேரத்தில் குடிப்பது நல்லது..

தேங்காய்த்துருவலை எப்படி உபயோகிப்பது?  



தேங்காய்த்துருவல் ஒரு பங்கு என்றால் அதில் அரைப்பங்கு கோதுமை மாவு. ஒரு பங்கு நாட்டு சர்க்கரை சேர்த்து கைகளால் பிசைந்தால் எல்லம் சேர்ந்து ஒரு இனிப்பு வரும். அது உடம்புக்கு நல்லது.

எலுமிச்சையை எப்படி ஆரோக்கியமாக சாப்பிடலாம்?

 

2 தக்காளி+ ஒரு எலுமிச்சை தோலுடன் அரைத்து உப்பு அல்லது நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம்.

வெண்டைக்காயை எப்படி உபயோகிக்கலாம்?



வெண்டைக்காய் 10 எடுத்து பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு ஊற வைத்து காயை தனியாக எடுத்து விட்டு  தண்ணீருடன் நட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம். வறுத்த தனியா தூள் 2 ஸ்பூன், வறுத்த எள் 2 ஸ்பூன், உப்பு, மாங்காய்ப்பொடி, வெண் மிளகுப்பொடி, நாட்டு சர்க்கரை , சிறிது தேங்காய் அனைத்தையும் அரைத்து வெண்டைக்காய் கலந்து சாப்பிடவும்.

கத்தரிக்காயை எப்படி சாப்பிடலாம்?

2 கத்தரிக்காய், 2 தக்காளி எடுத்து வெந்நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்திருந்தால் அவை மிருதுவாக மாறும். பின் அவற்றை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து அதில் உப்பு, சிறிது சாம்பார்ப்பொடி அல்லது ரசப்பொடி கலந்து குடிக்கலாம்.

 

Tuesday, 9 March 2021

இது ஒரு அதிசயம்!!!

என் சினேகிதியின் பெண் ஒரு  காணொளியை அனுப்பியிருந்தார். வெறும் காய்கறிகளால் வைத்தியம் செய்யும் முறையைப்பற்றியும் அந்த வைத்தியம் செய்யும் மருத்துவர் பற்றியுமான காணொளி அது. எனக்கு பல ஆச்சரியங்களை அந்த காணொளி கொடுத்தது. கோவையிலும் பெங்களூருவிலும் பல தீவிர நோய்களை, குணப்படுத்த முடியாமல் கைவிட்ட நோயாளிகளை தங்களுடைய காய்கறி வைத்தியத்தை செய்து காப்பாற்றி வரும்  மருத்துவர்கள் இருப்பதை அறிந்தேன். கோவையிலிருக்கும் மருத்துவரைப்பார்ப்பது எனக்கு வசதி என்பதால் அவரைப்பற்றியும் அவர் மருத்துவமனை பற்றியும் நண்பர்களிடம் விசாரித்து தகவல்கள் அனுப்பச் சொன்னேன்.

மருத்துவர் அருண் பிரகாஷ் மொத்தம் 12 நாட்டு காய்கறிகளான புடலங்காய், கத்தரிக்காய், பரங்கிக்காய், கொத்தவரை, எலுமிச்சை, கோவைக்காய், வெண் பூசணி, முருங்கைக்காய், தேங்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளைக்கொண்டு வைத்தியம் செய்கிறார்.


செரிமானத்திற்கு வெண் பூசணி, சிறுநீரக பிரச்சினைகளுக்கு கத்தரிக்காய், நரம்பு மண்டலத்திற்கு கொத்தவரை, வாயு மண்டலத்திற்கு புடலங்காய், தசை மண்டலத்திற்கு பரங்கி, தோல் மண்டலத்திற்கு கோவைக்காய், சுவாச மண்டலத்திற்கு முருங்கை,  நிணநீர் மண்டலத்திற்கு பீர்க்கை,  நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கு எலுமிச்சை,  எலும்பு மண்டலத்திற்கு தேங்காய்,  நாளமுள்ள சுரப்பி மண்டலத்திற்கு வெண்டைக்காய்,  இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வாழைக்காய் என்று நம் உடலுக்கான நல்ல பயன்பாடுகள் இந்த காய்கறிகள் மூலம் கிடைக்கும் என்று சொல்லுகிறார். 

வர மிளகாய், முக்கியமாக பச்சை மிளகாய் உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது தான் இவரது தாரக மந்திரம். எந்த வியாதிக்கு எந்த காய்கறி என்பதை தேர்ந்தெடுத்து அவற்றுடன் வெற்றிலைகளை அரைத்து உப்பு போட்டோ அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்தோ குடிக்கச் சொல்லுகிறார். உணவில் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்றும் பால் சார்ந்த பொருள்கள், பருப்பு வகைகள் இவற்றை தவிர்க்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். எந்த விதமான மருத்துவ ரிப்போர்ட்களையும் இவர் பார்க்க மறுக்கிறார். நோயாளியின் கைகளையும் பாதங்களையும் பார்த்தே தான் மருத்துவம் செய்வதாகக் கூறுகிறார். நேரில் செல்லும் நோயாளிகளுக்கு நாடி பிடித்து பார்ப்பதாக என் சினேகிதி சொன்னார். 

பல நோய்களை சரியாக்கிய காணொளிகளைப் பார்த்தேன். தொண்டையில் புற்று நோய் வந்து மரணத்தருவாயிலிருந்த ஒரு பெண்மணியை வெறும் எலுமிச்சம்பழத்தின் மூலம் உயிர் பிழைக்க வைத்த செய்தியையும் பத்தே மணி நேரத்தில் எந்த வலியுமில்லாமல் சிறுநீரக கற்கள் வெளியே வந்ததாக கூறிய நோயாளியின் கதையையும் தாங்கிய காணொளிகள் கண்டேன். டயாலிஸ் செய்யும் நிலைக்கு வந்த நோயாளிகளின் சிறு நீரகப்பிரச்சினைகளையும் அடிக்கடி சரியாக்கிக்கொண்டுள்ளார்.

 


சர்க்கரை நோய்க்காக‌வும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்காகவும் அவரது மருத்துவ மனைக்கு சில மாதங்களுக்கு முன் அழைத்தேன். வரவேற்பில் இருந்த பெண் நான் சொல்லிய விவரங்களைக் கேட்டு விட்டு மூன்று புகைப்ப‌டங்களை, 1. இரண்டு உள்ள‌ங்கைகளை, 2. பாதங்களை, 3. இடுப்பு வரையிலான நம் தோற்ற‌ம் என்று அனுப்பச் சொல்லியது. கூடவே 650 ரூபாய்க்கு டிராஃப்ட் எடுத்து அனுப்பச் சொன்னது. எல்லாம் கிடைத்ததும் உங்களுக்கு டாக்டர் உங்களிடம் பேசுவது பற்றி தகவல் தருகிறோம் என்று சொன்னது. இந்த முறை வெளி மாநிலத்தில், வெளிநாட்டில் உள்ள‌வர்களுக்கும் பிரயாணம் செய்து நேரில் வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. என் சினேகிதியின் பிரச்சினைக்கு நான் இவரிடம் போகச் சொன்னேன். அவர் கோவையிலுள்ளவர். அவர் 300ரூ fees தந்ததாக கூறினார். 

அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் செய்து அனுப்பியதும் ஒரு தொலைபேசி எண்ணுக்கு மாலையில் அழைக்கச் சொன்னார்கள். அதன்படி மாலையில் அழைத்தேன். மருத்துவர் பொறுமையாக அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்து விட்டு, உங்களுக்கு எப்படி இதற்கு உணவு எடுக்க வேண்டும் என்ற குறிப்புகள் எல்லாம் சிறிது நேரத்தில் வாட்ஸ் அப் மூலம் வரும் என்று சொன்னார்.

அதன்படி சில நிமிடங்களில் நான் எப்படி எப்படி என்னென்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல்கள், என் பதிவு எண் போன்ற விபரங்கள் வந்தன. 

காலையிலும் இரவிலும்  உணவுக்கு முன் 2 கத்தரிக்காய்கள், 2 தக்காளி, 6 வெற்றிலையை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி நாட்டு சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். காலையில் கத்தரிக்காய் சாறுடன் 100 கிராம் தேங்காய்த்துருவல்+ 3 பேரீச்சம்பழங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்ட பின் பசித்தால் ஏதேனும் சாப்பிட்டுக்கொள்ளலாம். 11 மணியளவில் நன்கு ஊற வைத்த கோதுமை 5 மேசைக்கரண்டி நன்கு மென்று உண்ண வேண்டும். இரவில் கூடுதலாக கத்தரிக்காய் சாறுடன் 6 வெண்டைக்காய்கள் பச்சையாக கடித்து சாப்பிட வேண்டும். பால் சார்ந்த பொருள்களான தயிர், வெண்ணெய், சீஸ், பால் பவுடர் மற்றும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றையும் வெங்காயம் பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், மிளகாய்த்தூள் இவற்றையும் நீக்க வேண்டும். அதற்கு பதிலாக முழுத்துவரை, கொள்ளு, முழு பச்சைப்பயறு இவற்றை சேர்த்துக்கொள்லலாம். முன்பே சொல்லியுள்ள‌ மாதிரி எண்ணெய் வகைகளை உபயோகிக்க வேண்டும். 

அதன் படியே உண்ன ஆரம்பித்தேன். தவிர்க்க வேண்டிய பொருள்களை அகற்றி புதியதாக சில குறிப்புகள் கண்டு பிடித்து சாப்பிட முடிந்தது. இல்லையென்றாலும் அரிசியும் கொள்ளும் சேர்த்த பொங்கல், தோசை, இட்லி, சப்பாத்தி, வெங்காயம், பூண்டு இல்லாத கிரேவிகள், சாத வகைகள் என்று உண்ண ஆரம்பித்தேன். 10 நாட்களுக்குப்பிறகு என் சர்க்கரை குறைய ஆரம்பித்தது. 80க்கு கீழ் வெறும் வயிற்றில் சர்க்கரை இறங்கியதும் 2 மாத்திரைகளை நீக்கினேன். அதன் பிறகும் சர்க்கரை 74லேயே இருந்தது. வயிற்றில் பிரச்சினைகள் யாவும் குறைந்தது. வயிற்றுப்பொருமல், செரிமானக்குறைவு, வாயு பிரச்சினை, எல்லம் நீங்கியது. உள்ளங்காலில் வெடிப்புகள் மறைய ஆரம்பித்தன. சர்க்கரை நோய் ஏற்பட்ட பிறகு நெடுங்காலமாய் தொடர்ந்து இரவு நேரங்களில் கால் நரம்புகள் இழுப்பதும் நின்று போனதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. மொத்தத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாய் நெடு நாட்களுக்குப்பின் உணர முடிகிறது. 

பொங்கலுக்குப்பிறகு, கொரோனாவாலும் என் காலில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டதாலும் வெளியிலிருந்து உணவு பல சமயங்களில் வாங்கி உண்ண வேண்டியிருந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதன் பிறகு சர்க்கரை மட்டும் ஏறத்தொடங்கியது. இப்போது மறுபடியும் என்னால் சமைக்க முடிந்த நிலையில் மீண்டும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர 10 நாட்கள் தேவையாக இருந்தன. அதனால் இந்த உணவுக்கட்டுப்பாடுகளை அவசியம் தவறாது கடைபிடிக்க வேண்டியது முக்கியம்.

இந்த வைத்தியத்தில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லையென்பதால் தான் இந்த வைத்தியத்தை தேர்ந்தெடுத்தேன். கூடவே காய்கறிகளின் சத்துக்களும் வேக வைக்காமல் நம்மிடம் முழுமையாக வந்து சேருகிறது. முக்கியமான தேவைகள் நாவிற்கான கட்டுப்பாடுகளும் மனக்கட்டுப்பாடுகளும் தான்! இவை உறுதியாக இருந்தால் நாம் நோயை வென்று விடலாம். 

மருத்துவருக்கு வலைத்தளம் உள்ளது. அதில் அவரது விலாசமும் தொலைபேசி எண்ணும் உள்ளது. கீழே அதன் இணைப்பும் சில காணொளிகளும் இணைத்திருக்கிறேன்.

ஒரு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைத்து  நாள்பட்ட நோய்கள் அளித்து வரும் துன்பங்கள் நிறைய பேருக்கு நீங்கி வாழ்க்கையில் அனைவரும் நலமுடனிருக்க வேண்டுமென்ற எண்ணமே இந்தப்பதிவிற்கு காரணம். முக்கியமாக திரு.தனபாலனுக்கு இந்தப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றே நம்புகிறேன். அனைவரும் என்றும் நலம் பெற வேண்டுகிறேன்

http://www.vegetableclinic.com/

 

 

Wednesday, 25 November 2020

சில பாதிப்புகள், சில நிவாரணங்கள்-2 !!!

 அனுபவ ரீதியாக மிகச் சிறிய கை வைத்தியம் நம்மை அசத்தும் அளவிற்கு நமக்கு பலன் தருவதுண்டு. பல வருடங்களாக நாம் அவதியுற்று துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் சில வியாதிகளை, நோய்க்குறைபாடுகளை நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு சிறிய பொருள் சரியாகுவதுண்டு.  அப்படிப்பட்ட சில நிவாரணங்கள, நான் நேரிடையாக பலனடைந்த சில கை வைத்திய முறைகளை அனைவரும் நலம் பெற வேண்டி இங்கே தெரிவிக்கிறேன். 

ப‌ல் வலிக்கு நார்த்தங்காய் உப்பு ஊறுகாய்


பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது. சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இப்படித்தான் நார்த்தங்காயின் பலன் பற்றி எனக்கு முன்பு தெரியும். 

ஒரு சமயம் ஒரு பழைய புத்தக்த்தொகுப்பை [ 30 வருடங்களுக்கு முன் வெளி வந்தது  ]படித்துக்கொண்டிருந்தபோது, அதில் ஒரு சிறிய செய்தி ஈர்த்தது. பல்வலியால் அவதியுற்ற ஒருவர் அப்போது தான் ஒரு கிராமத்தில் தங்கியிருந்ததாகவும் பக்கத்து வீடில் சொன்ன வைத்தியத்தை தான் கடைபிடித்ததில் அப்போது போன பல்வலி அப்புறம் திரும்ப வரவேயில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். பல்வலி வந்தால் எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தில் ஒரு உப்பு நார்த்தங்காய் துண்டை வைத்து சற்று அழுத்தி மேல் பல்லால் அமிழ்த்தி வாயை மூடிக்கொண்டு ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்தால் பல்வலி அப்ப‌டியே குறைந்து விடும் என்றும் இரவு படுக்கப்போகும்போது இது போல செய்து கொண்டு தான் உறங்கியதாகவும் காலை அதை துப்பி விட்டு வெதுவெதுப்பான நீரில் வாய்கொப்பளித்ததும் வலி சுத்தமாக போய் விட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை நான் அப்போது இந்த வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தேன். ஒரு நாள் என் உறவினர் எனக்கு ஃபோன் செய்தார். திடீரென்று கடுமையான பல்வலி வந்ததாகவும் இந்த வைத்தியத்தை கடைபிடித்ததில் வலி பறந்து போய் விட்டது என்றும் கூறி எனக்கு நன்றி தெரிவித்தார். அப்புறம் என் நெருங்கிய உறவுகள், சினேகிதர்கள் அனைவருமே இந்த வைத்திய முறையை உபயோகிக்கிறார்கள். மருத்துவ ரீதியாக நார்த்தங்காய் ஊறுகாயிலுள்ள கசப்பும் உப்பும் பல் வலியை குணமாக்குகிறது.

முழங்கால் வலிக்கு சியா விதைகள்



சினேகிதி சொன்னாரென்று சியா விதைகள் சாப்பிட ஆரம்பித்தேன் சென்ற வருடம். பொதுவாய் சியா விதைகள் பாஸ்பரஸ், கால்ஷியம் போன்ற பல வகை சத்துக்கள் உடையது என்றும் ‌இரத்த அழுத்தத்திற்கு, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு மற்றும் பல நோய்களுக்கு மிக நல்ல பலன் தருமென்றும்  தெரிய வந்ததால் தினமும் அரை ஸ்பூன் எடுத்து கால் கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின் காய்ச்சிய பாலில் ஊற்றி மறுபடியும் கொதிக்க வைத்து குடிக்க ஆரம்பித்தேன். ஒரு மாதங்கழித்து திடீரென்று முழங்காலில் வலி குறைய ஆரம்பித்தது. கால் குடைச்சல், நரம்பு இழுத்தல் போன்ற கால் பிரச்சினைகள் எல்லாமே சரியாகி, 15 வருடங்களாக இரவில் அடிக்கடி ஏற்படும் நரம்பு சுருட்டலும் நின்று போய் விட்டது.எந்த பிரச்சினைகளுமில்லாமல் நடக்க முடிவது மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அப்புறம் முழங்கால் வலி இருப்பவர்களுக்கு இந்த வைத்தியத்தை சொல்ல ஆரம்பித்தேன். எங்கள் வீட்டைக் கட்டிய என்ஜினீயருக்கு சொல்லி அவரின் கால் வலி மிக மிகக் குறைந்து விட்டது என்று அவர் நன்றி சொன்னதும் மகிழ்வாக இருந்தது.

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் இதை எடுக்கக்கூடாது. மிகத்தரமான புரதம் இதில் இருப்பதால் அவை சிறுநீரகத்திற்கு பாதிப்பு உண்டாக்கலாம்.

வயிற்றுப்போக்கிற்கு:



வயிற்றுப்போக்கு அதிகமாகும்போது, ஒரு ஸ்பூன் சீனி, ஒரு ஸ்பூன் உப்பு இரண்டையும் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு மெதுவாக நிற்க ஆரம்பிக்கும். சிறு குழந்தைகளுக்கு இரண்டையும் சிட்டிகை அளவில்  போட்டுத்தர வேண்டும்.

ஏலக்காய் வைத்தியம்:


எப்படி நெஞ்சு வலிக்கு நெஞ்சின் நடுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு அமுக்குவது போன்ற உணர்வு, நெஞ்செரிச்சல், தொண்டையை இறுக்குதல், அடி நெஞ்சில் வலிப்பது போன்ற உணர்வு என்றெல்லாம் ஏற்படுகிறதோ, அதே பிரச்சினைகள் அஜீரணம், வாயுக்கோளாறு, இவற்றிற்கும் ஏற்படும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலிக்கும்.  என் மகனுக்கு திருமணம் ஆன சமயம். நள்ளிரவில் என் மகன் எங்கள் அறைக்கதவைத்தட்டி மருமகள் நெஞ்சு வலியால் துடிப்பதாயும் உடனேயே மருத்துவமனைக்கு கிளம்புமாறும் மிகுந்த பதற்றத்துடன் சொன்னார். நான் மருமகளுக்கு தைரியம் சொல்லி விட்டு, 3 ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று அதன் சாற்றை விழுங்கிக்கொண்டே தயாராகும்படியும் நாங்களும் உடனேயே கிளம்புகிறோம் என்று சொல்லி உடை மாற்றிக்கொண்டு கிளம்பும்போதே என் மருமகளுக்கு நெஞ்சு வலி சட்டென்று நின்றது. நெஞ்செரிச்சல், திணறல் எல்லாமே சரியாகி விட்டது. ஆரோக்கியமான, இளம் பெண்ணுக்கு இதய பிரச்சினை இப்படி திடீரென்று வர வாய்ப்பில்லை என்று நினைத்தது சரியாகி விட்டது. இப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும் என் மருமகள் சென்ற வாரம் கூட இதை நினைவு கூர்ந்து பேசினார்.  இந்த வைத்தியத்தை சொல்லி பலனடைந்தவர்கள் ஏராள்ம். அப்போது கிடைக்கும் மன திருப்திக்கு நிகராக எதுவுமேயில்லை என்று கூட சொல்லலாம். இப்போதும்கூட, வயிறு ஒரு மாதிரியாக சங்கடம் பண்ணினால் 3 ஏலக்காய்களை எடுத்துப்போட்டுக்கொள்வேன். அந்த மாதிரியான அருமையான மருந்து இந்த ஏலக்காய். 


Wednesday, 4 November 2020

சில பாதிப்புகள், சில நிவாரணங்கள்!!

 மூட்டு வலிக்கு முடவாட்டுக்கால் சூப்

ஊரில் இருந்தபோது நான் நாட்டு மருந்து கடைக்குச் சென்ற போது தற்செயலாக நான் இந்த மூலிகைக்கிழங்கை பார்த்தேன். சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, விற்பனையாளர் ஒரு கப் சூப் கொடுத்து குடிக்கச் சொன்னார். சுவை அருமையாக இருந்தது. இதையே வீட்டில் நாம் தாராளமாக சாமான்கள் சேர்த்துப் போடும்போது இன்னும் அருமையாக இருக்குமென்று நினைத்துக்கொண்டேன். விசாரித்த போது,  அது ‘ முடவாட்டுக்கால் கிழங்கு சூப்’ என்றும் மூட்டு வலிகள் அனைத்தையும் போக்க வல்லது என்றும் சொன்னார்கள். கிழங்கையும் கையில் எடுத்துப்பார்த்து விட்டு சூப் தயாரிக்கும் முறையையும் கேட்டறிந்து கொண்டேன். இந்தக் கிழங்கை கொல்லிமலையிலிருந்து தருவித்திருக்கிறார்கள்.



இம்மூலிகை கிழங்கு மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. இது கொல்லிமலை, ஏற்காடு, , கஞ்ச மலையிலும் மற்றும் சதுரகிரி மலையில் கிடைக்கின்றது.

இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.

முடவாட்டுக்கால் என்பதன் விளக்கம் :



முடவன் - ஆட்டும் - கால் என்பதாகும்.அதாவது மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி,முடக்கு வாதம்  [ Arthritis ] நீங்கி குணமடைவார்கள். 

முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :

முடவாட்டுக்கால் கிழங்கு     - 50 - கிராம் 

மிளகு                                    - 20 - No

சீரகம்                                    - 1/4- டீஸ்பூன் 

பூண்டு                                   - 3  பல் 

தக்காளி                                 - 1

அனைத்தையும் ஒன்றிரண்டாய் நசுக்கி அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும்.சுவையாக இருக்கும். 

இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும். ஒரு வீடியோவில் பார்த்தபோது, இரவில் இந்தக் கஷாயம் வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்று சொன்னார்கள். இதோடு சில புதினா இலைகளோ, கறிவேப்பிலைகளோ சேர்க்கலாம் என்றும் அதிக வலியால் கஷ்டப்படுபவர்கள் ஒரு மண்டலம் [ 48 நாட்கள் ] சாப்பிட்டு வர வேண்டுமென்றும் சொன்னார்கள்.

2006 ம் வருடத்தில் தோன்றிய சிக்குன் குனியா என்னும் மூட்டுவாத காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர்  முடவாட்டுக்கால் [சூப்] கசாயத்தினால் எளிதில் குணமடைந்தார்களாம். .

கைகளில் ஆணி:

பொதுவாய் நான் கால்களில் தான் ஆணி வந்து பார்த்திருக்கிறேன். வெறும் கால்களில் நடக்கும்போது, ஏதாவது குத்தி காயம் ஆழமாகப்போய் அதற்கு மருத்துவம் செய்து கொண்டாலும் அந்த இடத்தில் ஆணி வளர்வதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என் உறவினருக்கு கைகளில், கை விரல்களில் ஆணிகள் வளர்ந்தன. வலியினால் மிகவும் துடித்துக்கொண்டிருப்பார். இதைப்பற்றி இன்னொரு சினேகிதியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மல்லிகை இலைகளை நசுக்கி சாறெடுத்து தடவி வரச்சொன்னார். இதை என் உறவினரிடம் நான் சொல்லி, அது போலவே தடவிய ஓரிரு நாட்களிலேயே அத்தனை ஆணிகளும் மறைந்து விட்டதாகவும் ஆணிகள் இருந்த சுவடே தெரியவில்லை என்றும் என் உறவினர் மிகுந்த மகிழ்ச்சியோடு சொன்னார். வலி நீங்கிய அவரது குரலின் மகிழ்ச்சி என்னை நெகிழ வைத்தது.



சமீபத்தில் RELISPRAY என்னும் மருந்து கால் ஆணிகளுக்கு நல்ல பலன் தருவதாகப்படித்தேன். இது பொதுவாய் மூட்டு வலி, முதுகு வலி போன்ற எந்த வலிக்கும் உடனடி நிவாரணம் தருமாம். 

நீர்க்கடுப்பு:

வெய்யில் காலங்களில் வியர்வை அதிகமாக கொட்டித்தீர்க்குமளவு நாம் வெளியில் அலைய நேரிடும்போது அதிக வியர்வையினால் உடல் நீர் சுருங்கி சிறுநீர் கழிப்பதில் பெரும் வலி உண்டாகும். சில சமயங்களில் சொட்டு சொட்டாய்  சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் தீப்பற்றி எரிவது போல இருக்கும். நீர்க்கடுப்பு என்பது சிறுநீரக பாதையில் உண்டாகும் அழற்சி. 



இதற்கு புளி நீரும் கருப்பட்டி அல்லது வெல்லமும் கலந்து குடித்தால் உடனேயே சரியாகும் என்று சொல்வார்கள். கால் விரல்களில் சுண்ணாம்பு வைத்தால் நீர்க்கடுப்பு சரியாகுமென்பார்கள். வெந்தய நீர், பார்லி வேக வைத்த நீர் நல்லதென்பார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக நல்லதான ஒரு வைத்தியம் இருக்கிறது. கறுப்பு உளுந்து ஒரு கைப்பிடி எடுத்து நன்கு கழுவி ஒரு சொம்பு நீரில் ஊற வைத்து குடித்து வர வேண்டும். ஒரு அரை மணி நேரம் ஊற வைத்த நீர் கூட உடனடியாக பலனளிக்கும். அதைக்குடித்த பிறகு சிறுநீர் பிரியும்போது வலி வெகுவாக குறைந்திருக்கும். குடிக்கக் குடிக்க சுத்தமாக வலியென்பதே இருக்காது. இதை பல வருடங்களாக நாங்கள் கடைப்பிடிக்கிறோம். நாடு விட்டு நாடு மாறும்போது எங்களுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படுவது இந்தப்பிரச்சினையால் தான். என் சினேகிதிகள், உறவுகள் அனைவருக்குமே இந்த வைத்தியம் தெரியும்.  கறுப்பு உளுந்து இல்லாவிட்டால் வெள்ளை உளுந்து கூட உபயோகிக்கலாம்.  காலை ஊறவைத்த நீர் குடிக்ககுடிக்க மீண்டும் அதை நிரப்பிக்கொள்ளலாம். இரவில் சற்று வாடை அதிகமாயிருந்தால் மீண்டும் அதையே கழுவி உபயோகிக்கலாம். அல்லது மீண்டும் ஒரு கைப்பிடி உளுந்தை ஊற வைக்கலாம். ஒரு நாள் முழுவதும் அவ்வப்போது குடித்து வந்தால் பல நாட்களுக்கு பாதிப்பு மீண்டும் வராது.

தொடரும்....



Friday, 21 February 2020

சர்க்கரை நோய்க்கான உணவு முறை- பகுதி-3


இதுவரை மதியம் உணவு வரை சர்க்கரை நோய்க்கான உணவு முறைகளை எழுதியிருந்தேன். இனி இரவில் என்னென்ன சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் வாரம் ஒரு முறை தயிர் வடை சாப்பிடலாம் [ இரண்டு வடைகளை தயிரில் மூழ்கடித்து ] சாப்பிடலாம் என்று சொன்னார். காராமணி, கருப்புக்கொண்டகடலை,முழுப்பயிறு இவைகளை ஊறவைத்து முளைகட்ட வைத்து உப்பு, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக வைத்து அல்லது குறைந்த நீரில் இலேசான வேக்காடு வைத்து நீரெல்லாம் சுண்டியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து ஒரு கிண்ணம் சாப்பிடலாம். கூடவே ஒரு சிறிய ஆரஞ்சுப்பழம் அல்லது பாதி ஆப்பிள் பழம் சாப்பிடலாம். வயிறும் நிரம்புவதுடன் சத்தான ஆகாரமும்கூட! மாவுச்சத்து இல்லாததால் உடல் இலேசாக இருப்பதை உணர முடியும்.
கொள்ளு அல்லது பாசிப்பயிறு கால் கப், கோதுமை ரவா கால் கப் என்று சம அளவில் எடுத்து வெங்காயம் தக்காளி சீரகம் பூண்டுப்பற்கள் மல்லித்தழை சேர்த்து கஞ்சி செய்து தேங்காய்த்துருவல் அல்லது சிறிது தேங்காப்பால் சேர்த்து கஞ்சி குடிக்கலாம்.
முன்பு எழுதியிருந்த கீன்வா விதைகளை சாலட் அல்லது தக்காளி சாதம் போல செய்து சாப்பிடலாம். அதன் செய்முறைகளை கீழே எழுதுகிறேன்.
கீன்வா தக்காளி சாதம்:

அரை கப் கீன்வாவை 1 கப் நீர், ¼ ஸ்பூன் எண்ணெயில் சமைக்கவும். 1 மே.க எண்ணெயில் ஒரு கிராம்பு, ஒரு சிறு துண்டு பட்டை தாளித்து 1 மே.க நறுக்கிய பூண்டு, 1 வெங்காயம், 2 தக்காளி 1 பச்சை மிளகாய் வதக்கவும். 1/2 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து நன்கு குழைய வதக்கி கீன்வாவை சேர்த்து மல்லி சேர்த்து கிளறவும். 
கீன்வா சாலட்:
இது கீன்வா சேர்க்காத கொண்டக்கடலை காய்கறி சாலட்
பொதுவாய் இந்த கீன்வாவை நான் முன்பே சொன்னபடி சமைத்து இலேசாக உப்பு எண்ணெய் சேர்த்து கெட்டியானதும் ஆற வைத்து ஃபிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். இதில் எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்து காரட் வெள்ளரி வெங்காய்த்துண்டுகள் வேக வைத்த கொண்டக்கடலை சிறிது 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் தேவையான உப்பு எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் கலந்து உண்ணலாம். தயிர் சாலட் செய்ய வேண்டுமென்றால் கீன்வா கால் கப் எடுத்து போதிய தயிரில் கலந்து அதில் சில மாதுளை முத்துக்களை சேர்க்கவும். சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு வேர்க்கடலை பொட்டுக்கடலை தலா ஒரு ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தக்காளியைப்பொடியாய் அரிந்து போட்டு  துருவிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அதையும் வதக்கிக்கொட்டவும். எல்லாம் நன்றாக கலக்கவும். இதுவும் ஒரு முழு உணவிற்கு சமமானது.
பயிறு ஓட்ஸ் கலந்து பணியாரம் செய்து சாப்பிடலாம். அரிசி அல்லது கோதுமை அதிகம் சேர்க்காமல் எண்ணற்ற சமையல் குறிப்புகள் கிடைக்கின்றன. நமக்கு வேண்டியதெல்லாம் ஆர்வம் மட்டும்தான்.
சகோதரர் தனபாலன் கால் மதமதப்பு பற்றி கேட்டிருந்தார். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு நாளடைவில் வரும் பிரச்சினை இது. சில சமயம் இது சர்க்கரை நோயால் தான் என்று நினைத்து அசட்டையாக விட்டிருப்போம். கால்களில் வரிகோஸ் என்ற நரம்பு பிரச்சினையினாலும் இந்த மதமதப்பு ஏற்படும். அதனால் முதலில் இந்த மதமதப்பு எதனால் வந்திருக்கிறது என்பதை ஒரு மருத்துவரிடம் சென்று தான் கண்டு பிடிக்க வேண்டும்.. ஒரு வஸ்குலர் சர்ஜன் நம் நரம்புகளில் வரிகோஸ் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டு பிடித்து அதற்கான தீர்வும் சொல்வார்.
சர்க்கரை என்றாலும் வரிகோஸ் என்றாலும் கால்களில் மதமதப்பு குறைய நல்ல மூலிகை எண்ணெய் தேய்ப்பதிலும் முறையான யோகப்பயிற்சி மருத்துவர்களிடம் அதற்கான பயிற்சிகளைக்கற்றுக்கொள்வதிலும் சில நல்ல ஹோமியோபதி மருத்துவத்திலும் அக்குபங்க்ச்சர் மருத்துவத்திலும் நிறைய வாய்ப்பிருக்கின்றன. முயற்சி செய்து பாருங்கள் சகோதரர் தனபாலன்.
இந்த பதிவுகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவியாய் இருந்தால் அதுவே இந்தப்பதிவுகளை எழுதியதற்கான பலன் என்று நம்புகிறேன்.



Sunday, 2 February 2020

சர்க்கரை நோய்க்கான உணவு முறைகள்-பகுதி 2 !!!


இதன் முதல் பகுதிக்கும் இப்போது எழுதப்போகும் இரண்டாம் பகுதிக்கும் இடையே புது வருடம், பொங்கல், உடல் நலமின்மை என்று பல விஷயங்கள் குறுக்கே வந்து விட்டன. தவிர்க்க முடியவில்லை. இப்போது இரண்டாம் பகுதியைத் தொடங்குகிறேன்.

சர்க்கரை குறைபாட்டை முதலில் நோய் என்று அழைத்தல் கூடாது என்கிறர்கள் மருத்துவர்கள். ஆனாலும் இந்த குறைபாட்டினால் அடுக்கடுக்காய் மற்ற நோய்கள் வந்து நம்மைத்தாக்கும்போது இதையும் ஒரு நோய் என்றே குறிப்பிட வேண்டுமென்றே தோன்றுகிறது. அதனால் இந்த குறைபாட்டை ஆராய்ந்து எந்த மாதிரி உணவு வகைகளை எடுத்துக்கொண்டால் உடலில் ஏறும் சர்க்கரையை ஏறவிடாமல் பாதுகாக்கலாம் என்ற முயற்சியில் தற்போது பல மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதைப்பற்றித்தான் இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் விரிவாகக்குறிப்பிட்டிருந்தேன். மதுரை மருத்துவர் கண்ணன் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஈரோடு மருத்துவர் திரு.அருண்குமாரும் இதே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மருத்துவர் கண்ணனை ஒட்டியே தன் கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அவரின் கருத்துக்களை கீழுள்ள லிங்க்கில் பார்க்கலாம்.

https://doctorarunkumar.com/



ஒரு இட்லியில் 16கிராம் அளவு மாவுச்சத்தும் 75 கலோரியும் இருக்கும் அதே சமயம் ஒரு முட்டையில் எந்த மாவுச்சத்தும் இல்லாததோடு கலோரி அதே அளவிலேயே உள்ளது. இப்படித்தான் அவர்கள் மாவுச்சத்தை தவிர்த்து நவதான்யங்களையும் கொழுப்பு சார்ந்த உணவையும் பரிந்துரைக்கிறார்கள்.

சென்ற வாரம் முழுவதும் கடுமையான ஜலதோஷம் இருந்தது. ஏற்கனவே இங்குள்ள மருத்துவர் உடல் நோய்வாய்ப்பட்டிருக்கும் காலங்களில் அது மிக்கச்சிறிய அளவே ஆனாலும் உடலிலுள்ள சர்க்கரை அந்த infection-ஆல் ஏறும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து இந்த உணவு முறையை 90 சதவிகிதம் கடைபிடிப்பதால் இந்த கடுமையான ஜலதோஷம், தொடர் இருமல், உள்சுரத்திலும்கூட என் சர்க்கரையின் அளவு உணவிற்கு முன் 100 லிருந்து 110 வரைதான் இருந்தது. இது எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது.

இதற்கு முன் பகுதியில் காலை உணவுகள் பற்றியும் விடியற்காலை என்னென்ன குடிக்கலாம் என்பது பற்றியும் எழுதியிருந்தேன். முதலில் மதியம் உணவு உண்பதற்கு முன் காலை 11 மணி அளவில் என்ன குடிக்கலாம், சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

காலை 11 மணி: 

பொதுவாய் மருத்துவர்கள் ' பொரி ' அல்லது 'பாப்கார்ன்' ஒரு கப் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். அல்லது சில வகைகள் ஜுஸ் குடிக்கலாம். அல்லது அவித்த வேர்க்கடலை கொஞ்சம் சாப்பிடலாம். ஜுஸ் வகைகள் என்னும்போது ஒவ்வொரு நாளும் விதவிதமாக குடிக்கலாம்.
தக்காளி ஜுஸ் எடுத்து வடிகட்டி அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை உப்பு கலந்து குடிப்பது கால் நரம்புகளுக்கு மிகவும் நல்லது. சுரைக்காய் ஜுஸ் சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. எனக்குத்தெரிந்த ஒரு பெண்மணி தன் கிரியாட்டின் அளவைக்குறைக்க வேண்டி தினமும் சுரைக்கயை உப்பு சேர்க்காமல் பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ சாப்பிட்டு கிரியாட்டினைக்குறைத்தார்கள். அந்த அளவு சுரைக்காய்க்கு மிகுந்த மருத்துவ குணம் உண்டு. முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி எடுத்து சூப் வைத்து குடிக்கலாம். ஒரு கை வாழைப்பூவிலும் சூப் செய்யலாம். மாதுளை அல்லது காரட் ஒன்று பெரியதாக எடுத்துக்கொண்டு அதில் 3 தேங்காய் துண்டுகள் போட்டு அரைத்து வ‌டிகட்டி குடிக்கலாம். அல்லது பழங்கள் சாப்பிடலாம். 3 பேரீச்சை அல்லது 1 ஆரஞ்சு அல்லது 1 ஆப்பிள் சாப்பிடலாம்.

மதிய உணவு:

மதியம் அரிசி சாதமோ அல்லது கோதுமை உணவுகளான சப்பாத்தியோ எடுக்கவே கூடாது என்கிறார் மருத்துவர். வேண்டுமானால் ஒரு கை [ 2 மேசைக்கரண்டி ] அரிசி சாதம் அல்லது ஒரு சப்பாத்தி மட்டும் எடுக்கலாம். இதன் அடிப்படையில் ஒரு சப்பாத்தியுடன் நிறைய காய்கறிகள் கலந்த கூட்டு உண்ணலாம். 2 மேசைக்கரண்டி அரிசி சாதம் 3 அல்லது 4 கப் காய்கறிகள் என்ற விகிதத்தில் ஃபிரைட் ரைஸ் செய்யலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். கோதுமை ரவா ஃபைபர் அதிகமானது என்பதால் அதோடு பருப்பு வகைகள் கலந்து உணவு வகைகள் தயாரிக்கலாம். QUINOA [ கீன்வா என்றழைக்க வேண்டும் ] என்றொரு விதை இப்போது பரவலாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது. தென் அமெரிக்க உணவு இது. சர்க்கரை நோய்க்கும் பல வியாதிகளுக்கும் இந்த உணவு நல்லது என்று பல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதால் சமீப காலங்களில் நிறைய பேர் இதை சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு திணையரிசி மாதிரி இருக்கும். மற்ற தானியங்களைப்போலல்லாது இதை ஏழெட்டு தடவையாவது நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும். அப்படிக்கழுவுவதால் அதிலுள்ள இலேசான கசப்பு மறைந்து விடும். அதை வேக வைப்பதற்கும் சில நிமிடங்களே பிடிக்கும். இதில் சூப், சாலட், சாத வகைகள் பண்ணலாம். மிக சுவையாக இருக்கும். அதுவும் யு டியூப் போனாலே பல வித சமையல் குறிப்புகள் கிடைக்கும். சில மதிய உணவுக்குறிப்புகள் இங்கே எழுதுகிறேன்.

பருப்பு கோதுமை ரவா கிச்சடி

பயத்தம்பருப்பு துவரம்பருப்பு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தலா கால் கப் எடுத்து ஊறவைத்து உப்பு 2 வற்றல் மிளகாய் 2 பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதோடு ஒரு கப் கோதுமை ரவா, தகுந்த உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து இட்லி சுட வேண்டும். சுட்டதை உதிர்த்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காயம், உளுத்தம்பருப்பு தாளிதம் செய்து வெங்காயம் தக்காளி வதக்கி, கறிவேப்பில்லை, மல்லியிலை சேர்த்து உதிர்த்ததைப்போட்டுக் கிளற வேண்டும். இறுதியில் தேங்காய்த்த்குருவல் சேர்க்கலாம்.

மிகவும் சுவையான உணவு இது. வயிற்றை சீக்கிரம் நிரப்பி விடும்.

 காய்கறி ஃபிரைட் ரைஸ்

தேவை:

அரிந்த பெரிய துண்டங்களான காலிஃபிளவர்‍- 1 கப்
பனீர் துண்டங்கள்- 1 கப்
காரட் துருவியது -2 மேசைக்கரண்டி
பட்டாணி -கால் கப்
மஷ்ரூம் துண்டுகள் -1 கப்
பேபிகார்ன் துண்டுகள் -1 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் -1 கப்
சாதம் -2 மேசைக்கரண்டி
சில்லி சாஸ்-1 ஸ்பூன், சோயா சாஸ்- அரை ஸ்பூன், மிளகு தூள்- கால் ஸ்பூன், மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு அரைத்த விழுது- 1 ஸ்பூன், தேவையான உப்பு



செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப்போட்டு வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் பனீர் தவிர மற்ற காய்கறிகளை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேகும் வரை வதக்கவும். காய்கறிகள் வெந்ததும் குறைந்த தீயில் பனீர் துண்டுகள் சேர்த்து வதக்கவும். உப்பை சரிபார்க்கவும். சாஸ் வகைகள் மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். இறுதியாக சாதம் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி எடுக்கவும். மிகவும் சுவையான ஃபிரைட்ரைஸ் இது.

கீன்வா கொண்டக்கடலை கஞ்சி அல்லது சூப்:



தேவை:

கீன்வா அரை கப்[ 10 நிமிடங்கள் ஊறவைத்து ஏழெட்டு தடவை கழுவி 1 கப் நீரில் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்]

முதல் நாளே ஊற வைத்து பின் மறு நாள் உப்புடன் வேக வைத்த கொண்ட கடலை கால் கப்

செய்முறை:

வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக அரிந்த ஒரு வெங்காயம் வதக்கவும். ஏழெட்டு சிறிய பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். பின் 2 தக்காளி , மஞ்சள் தூள் அரை ஸ்பூன் சேர்த்து குழைவாக வதக்கவும். சில புதினா இலைகள், கொத்தமல்லி இலை 2 மேசைக்கரண்டி சேர்த்து வதக்கவும். வெந்த கொண்டக்கடலை, மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், உப்பு, 1 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கழித்து வெந்த கீன்வா, தேங்காய்த்துருவல் கால் கப் சேர்த்து சில நிமிடங்கள் எல்லாம் சேர்ந்து வரும்வரை கொதிக்க விடவும். இதை கஞ்சி போல திக்காகவோ அல்லது சூப் போலவோ சாப்பிடலாம். எல்லா சத்துக்களும் சேர்ந்த சுவையான உணவு இது.

மாவு சத்து இல்லாமல் சர்க்கரை சத்து இல்லாமல் சமையல் குறிப்புகள் இணையங்கள் யு டியூப் ல் நிறைய கிடைக்கின்றன. விதவிதமாக சமைத்து சாப்பிடலாம். சர்க்கரையை அடியோடு நீக்கலாம். ஆர்வமும் உற்சாகமும் பழகிப்போன நாவின் ருசியை மறந்து அந்த நாவை நமக்கு அடிமையாக்க‌ வேண்டுமென்ற பிடிவாதமும் இருந்தால் சர்க்கரை நோய் என்ற ஒன்றை மறந்து விடலாம்.

இரவு உணவை அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

Saturday, 4 January 2020

சர்க்கரை நோய்க்கான உணவு முறைகள்.!!!!

சரிவிகித உணவு




சர்க்கரை நோய்க்காக இது வரை மருத்துவர்கள் காலையில் குறைந்த அளவில் நீராவியில் செய்த பலகாரங்களான இட்லி, இடியாப்பம் இவற்றைத்தான் பரிந்துரை செய்து நான் பார்த்திருக்கிறேன். இரவும் அதே தான். சாப்பிடும் அளவின் உணவு குறைவாக இருக்க வேண்டும். சப்பாத்தியானால் 2 இருக்க வேண்டும். இனிப்புகளையும் இனிப்பு அதிகமான பழங்களையும் அறவே தவிர்க்க வேண்டும். காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். இது தான் வழக்கமான முறை.

ஆனால் மருத்துவர் கண்ணன் இதிலிருந்து வேறுபடுகிறார்.

“ எல்லாப்பொழுதும் நாம் மாவுச்சத்தையே உண்பதால் நம் உடலுக்குத் தேவையான மாவுச்சத்து இரு மடங்காக உள்ளே போகிறது. அதிகப்படியான மாவுச்சத்து இன்சுலின் என்னும் ஹார்மோனால் கொழுப்பாக மாறுகிறது. இந்த கொழுப்பு தான் உடலுக்கு தீங்கை விளைவிப்பது. இன்சுலின் குறைபாடு இருப்பவர்களுக்கு அந்த அதிகப்படியான மாவுச்சத்து எந்த வித மாறுதலுக்கும் ஆளாகாமல் அப்படியே இரத்த்தத்தில் தேங்கி நிற்பதால் அதுவே சர்க்கரை நோயாக மாறுகிறது.” என்று சொல்லும் அவர் “ எந்த அளவிற்கு சிறுதானியங்கள், அரிசி வகைகள், கோதுமை, கேழ்வரகு வகைகள் இவற்றைக்குறைத்து, நவதானியங்களுக்கு மாறுகிறோமோ, அந்த அளவிற்கு சர்க்கரை அளவு குறையும் “ என்பதை வலியுறுத்துகிறார்.
அவர் சொன்னது போல நவதானியங்கள், பால், பால் சார்ந்த பொருள்கள், காய்கறிகளைக்கொண்டு அதி ருசியான உணவு வகைகளை செய்ய முடியும். பழக்கத்திலிருந்து விடுபடும் மன வலிமையும் திருப்தியும் மட்டுமே வேண்டும்.

நவதானியங்கள்

அவர் பாணியில் எனக்கு ஒரு டயட் சார்ட் போட்டு அதன் படியே உணவு எடுத்து வருவதில் சர்க்கரை வெறும் வயிற்றில் 100க்கும் கீழேயும் சாப்பிட்டபின் 120லிருந்து 140 வரையும் இருக்கிறது. அதிகப்படியான உடம்பு வலி வயிற்றுக்கோளாறுகள் எல்லாமே நிறைய குறைந்து உடம்பும் சுசுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

மாவுச்சத்து  இல்லாத உணவுப் பொருள்களை நம் வீட்டில் தயார் செய்வது மிக சுலபம். அதோடு நவதானியங்களான கொள்ளு உளுந்து பாசிப்பயறு சிகப்பு கொண்டக்கடலையோடு சிகப்பு காராமணி கொய்னா போன்றவற்றிலும் உணவு வகைகள் செய்யலாம். நவதானியங்களைச் சேர்ந்தது தான் கோதுமையும் நெல்லும் [ அரிசியும் ]. இதில் அரிசியை மிக மிக குறைவாக சேர்க்கலாம். உடைத்த கோதுமையை சாதமாக சாம்பாருடன் நெய் சேர்த்து சாப்பிடலாம். கோதுமை ரவாவுடன் பருப்பு உசிலி கலந்து உப்புமாவாக சாப்பிடலாம்.

வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு பிரச்சினை இல்லை. அவரவர் வீட்டுப் பெண்மணிகள் அக்கறையோடு அனைத்தும் செய்து கொடுத்து விடுவார்கள். ஆனால் பெண்கள் தனக்கென்று ஒரு உணவும் வீட்டிலுள்ளவர்களுக்கு தனியாக ஒரு உணவு செய்வதும் தான் மிகவும் கடினம். தனக்கென்று ஒரு உணவு செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் அலுப்பும் அயர்ச்சியுமே அவர்களை தன் நலத்தை கவனிக்காமல் செய்து விடுகிறது. அதிலும்கூட மருத்துவர் கண்ணன் “ இந்த சரிவிகித உணவை தயார் செய்வது வீட்டிலிருக்கும் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. தன் கணவர் குறைத்து சாப்பிடுகிறாரே என்ற ஆதங்கத்தில் அவர்களே இன்னுமொரு இட்லியை அதிகமாக கணவருக்கு வைப்பதுண்டு. அவர்கள் தான் மன உறுதியுடன் இந்த சரிவிகித உணவை தயாரிக்க வேண்டும் “ என்று குறிப்பிடுகிறார்.

இப்போது காலையில் எழுந்ததும் என்ன குடிக்கலாம் என்ற கேள்விக்கு வருவோம்.

காலை 6 மணி:

காப்பியோ டீயோ குடிப்பதை நிறுத்துங்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சிலர் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஏதேனும் மூலிகைக் கஷாயம் குடிக்கிறார்கள். சித்த மருத்துவ மனைகளில் அவ்வாரம்பூ, மாவிலை, கொய்யா இலை, இன்னும் பற்பல மூலிகைகள் கலந்த பொடி கிடைக்கிறது. அதை வாங்கி அதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கல்கண்டு கலந்தோ அல்லது வெறுமனே எதுவும் கலக்காமலும் குடிக்கலாம்.

நான் ஒரு தம்ளர் இளஞ்சூடான வெந்நீரில் 2 ஸ்பூன் தேன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினீகர் கலந்து குடிக்கிறேன். சிறுநீரகங்கள் கல்லீரல் பித்தப்பை வயிறு போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் இது நல்லதென்பதால். ஆனால் இந்த ஆப்பிள் சிடெர் வினீகர் வாங்கும்போது APPLE CIDER VINEGAR WITH MOTHER என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

அடுத்து காலை உணவிற்கு  வரலாம். என்னென்ன வகைகள் செய்யலாம் என்பதை சொல்லுகிறேன்.

காலை 8 மணி:

1. ஒரு பெசரட் தோசை, தக்காளி சட்னி, மோர்

2. 1 இட்லி [ நிறைய நெய் தடவி] + ஒரு சிறு கப் தயிர்

3. அவல் வாழைத்தண்டு சாலட் அல்லது பூசணி அவல் சாலட்

[ இது நான் வாரம் இரு தடவைகள் உண்ணுவேன். அவல் அரிசியிலிருந்து தான் வந்தது என்றாலும் இயற்கை மருத்துவ மனைகளில் இதை இயற்கை உணவாக பாவிப்பதால் ஒரு கை அவல் உபயோகிப்பதில் தவறில்லை. அவலைக்கழுவி நீரை வடித்து வைத்திருந்தால் சில நிமிடங்களில் அது ஊறி விடும். பின் அதில் ஒரு கை மிகப்பொடியாக அரிந்த வாழைத்தண்டு அல்லது துருவிய பூசணி [ பூசணியைத்துருவியதும் நீரைப் பிழிந்து விட வேண்டும்] ஒரு கப் தயிர் அல்லது கெட்டி மோர் அரை ஸ்பூன் சீரகம் உப்பு, மிகப்பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் 5 எல்லாம் கலந்து வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் மோரோ அல்லது தயிரோ கலந்து கால் மணி நேரம் கழித்து உண்ணவும். எல்லாம் ஊறி பழையமுது சாப்பிடும் திருப்தி கிடைக்கும். சுவையும் அதி அற்புதமாக இருக்கும். இது ஒரு முழு உணவு. இது ஒரு பெரிய கிண்ணம் சாப்பிடலாம். சர்க்கரையின் அளவு இதை சாப்பிடுவதால் நன்றாகவே குறையும்.



4.முளை கட்டிய பயறு சாலட்:

முளை கட்டிய பயறு முக்கால் கிண்ணம், அதில் பொடியாக அரிந்த வெங்காயம் 2 மேசைக்கரண்டி, தக்காளி 2 மேசைக்கரண்டி, பொதினா அல்லது கொத்தமல்லி இலைகள் சிறிது, பொடியாக அரிந்த வெள்ளரிக்காய் 3 மே.க, 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு கலந்து உண்ணலாம். முளைக்கட்டிய பயிறை சிறிது உப்பு தெளித்து நீராவியில் வேக வைத்துக்கொள்ளலாம். இது தவிர இளம் பேபி கார்ன், முட்டைக்கோஸ் அரிந்தும் சேர்க்கலாம். இது மிகவும் சுவையான உணவு.

5. சிகப்பு கொண்டகடலை சுண்டல்
[ மருத்துவர்கள் வெள்ளைக்கொண்டக்கடலையை பரிந்துரை செய்வதில்லை.]

6. வேக வைத்த முட்டை 1 அல்லது 2 + பால் 1 கப்

7. கீரை ஆம்லட்

8. பயிறு பிஸ்ஸா



2 கப் முழுப்பயிறு, 2 மே.க பச்சரிசி ஊறவைத்து அரைக்கும்போது அதில் ஒரு சிறு துண்டு இஞ்சி 2 பச்சை மிளகாய், 2 பிரெட் ஸ்லைசஸ் போட்டு அரைத்து தோசை மாவிற்கு கரைக்க வேண்டும். முட்டைக்கோஸ், வெங்காயம், குடமிளகாய், காரட் இவற்றை மெல்லிய துருவல்களாய் அரிந்து கொள்ள வேண்டும்.  Mozerella cheese துருவல் ஒரு கிண்ணம் வைத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தீயில் மாவை தோசையாக பரத்தி அரை ஸ்பூன் தக்காளி கெட்சப்பை சுற்றிலும் ஊற்ற வேண்டும். அதன் மேல் காய்கறித்துருவலகளை பரத்தி அதன் மேல் சீஸ் பரவலாக தூவி மூடி வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து சீஸ் உருகிப்பரவி தோசை அடியில் பொன்னிறம் வந்ததும் எடுத்து விடலாம். தக்காளி தொக்கு இதற்கு ஒரு நல்ல பக்கத்துணை. ஒன்று மட்டுமே சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்தே காணப்படும்.

இனி மதிய உணவுக்கு வரலாம்.

Tuesday, 24 December 2019

விடியலுக்கு ஒரு வழி!!!


இதற்கு முந்தைய பதிவில் டாக்டர். கண்ணன் அவர்களைப்பற்றிக்குறிப்பிட்டிருந்தேன். பிரபல இதய மருத்துவராக இருந்தாலும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு அவர் கூறி வரும் அறிவுரைகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். நானும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றாலும் இதுவரை அதைப்பற்றிய பல விழிப்புணர்வு கட்டுரைகள் படித்திருந்தாலும், பல மருத்துவர்களின் ஆலோசனைகளைப்பின்பற்றிக்கொண்டிருந்தாலும் இது வரை இந்த அளவு தெள்ளத் தெளிவாக சர்க்கரை நோய் பற்றி, அதை எப்படி குறைக்கலாம் என்பது பற்றி, அதற்கான உணவு முறைகள் பற்றி, யாருமே சொன்னதில்லை. இவரின் ஆலோசனையைப்பின்பற்றி அதன் படி உணவு முறைகளைக் கையாண்டால் நிச்சயம் சர்க்கரையின் அளவு குறைவதைக் கண்ணால் காண்கிறேன். 



சரிவிகித உணவு உண்ணுவது பற்றியும் தெளிவாக அவர் விளக்கியுள்ளார். நம் உணவில் 50-55 சதவிகிதம் மாவுச்சத்தும் 25-30 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் 20 சதவிகிதம் புரதமும்  இருக்க வேண்டும். நாம் யாருமே இதில் சொல்லப்பட்டிருக்கும் அளவு புரதமோ, கொழுப்போ உட்கொள்வது இல்லை. மாறாக, இதில் சொல்லப்பட்டிருக்கும் அளவு மாவுச்சத்தை இரு மடங்காக சாப்பிடுகிறோம். உதாரணத்துக்கு காலையில் இட்லி, தோசை, மதியம் சாதம், இரவில் மறுபடியும் இட்லி அல்லது சப்பாத்தி. இதனால் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் மாவுச்சத்தை நம் உடலில் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் கொழுப்பாக மாற்றி உடலில் சேர்த்து வைக்கிறது. இன்சுலின் சரியாக சுரக்காவிட்டால், இன்சுலின் குறைபாடு இருந்தால் அதிகப்படியாக உட்கொள்ளும் மாவுச்சத்து அப்படியே எந்த மாறுதலுக்கும் ஆளாகாமல் ரத்தத்தில் அப்படியே தேங்கி நிற்கிறது. இது தான் சர்க்கரை நோயாக மாறுகிறது. 



அதனால் எந்த அளவிற்கு சிறுதானியங்கள், அரிசி வகைகள், கோதுமை, கேழ்வரகு வகைகள் இவற்றைக்குறைத்து, நவதானியங்களுக்கு மாறுகிறோமோ, அந்த அளவிற்கு சர்க்கரை அளவு குறையும் என்பதை வலியுறுத்தும் இவர், அதற்கான உணவு முறைகளையும் ஆலோசனைகளாக வழங்குகிறார்.

அவர் கொழுப்பு வகைகள் பற்றி சொல்லியிருக்கும் கருத்துகள் எல்லோருக்கும் நிச்சயம் பயன்படக்கூடியவை. அதைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.




கொழுப்பு என்றால் என்ன? அதில் நிறைய வகைகள் இருக்கு.
நாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது?
முதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது.இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். 
நம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது?ம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா? இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது ? மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்
அடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL  கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது.

உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.
இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது ?. பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர். 
தேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை.



அடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா? அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா? கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்வது கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை.

கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். ருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது.
கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

இந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்ற கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது.
எப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது   டிரான்ஸ்ஃபேட்.  எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். எந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் ? அனைத்து பேக்கரி உணவுகள்,  கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட  உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.

ஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்? அதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் தாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது.

அடுத்த பதிவில் நான் எந்த மாதிரி உணவு வகைகள் எடுத்துக்கொண்டு வருகின்றேன் என்பதை விரிவாக எழுதுகிறேன்.


Thursday, 30 August 2018

உயர்ந்தவர்கள்!!

இன்றைய மருத்துவ முத்துக்களில் மூன்று சிறந்த மருத்துவர்களையும் அவர்களின் சாதனைகளையும் குறிப்பிட்டிருக்கிறேன். நோயால் வாடும் யாருக்கேனும் இந்த மருத்துவர்களின் வைத்தியம் கிடைத்து அவர்கள் குணமானால் அதுவே இந்தப்பதிவை எழுதியதற்கான நிறைவைத்தந்து விடும்!

DR.MOHAN RAO

தெரிந்த 2 நண்பர்கள் சொன்ன விபரம் இது. அவர்களின் நண்பர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு கால்கள், கைகள், பேச்சு செயலிழந்த நிலையில் இந்த மருத்துவரிடம் சென்று அதுவும் ஒரு மாதங்கழித்து யாரோ சொன்னதன் பேரில் சென்று வைத்தியம் பார்த்ததில் நடக்கவும் பேசவும் முடிவதாக சொன்னார்கள். பக்கவாத தாக்குதல் ஏற்பட்டு கூடிய விரைவில் சென்றால் அவர் முழுவதும் குணப்படுத்தி விடுவதாகவும் சொன்னார்கள். என்னிடம் அந்த மருத்துவரைப்பற்றிய நோட்டீஸ் ஒன்றைக்கொடுத்தார்கள். அதில் வைத்தியரிடம் மூன்று முறை திரவ ரூபத்தில் கொடுக்கப்படும் மருந்தை சாப்பிட வேண்டும் என்றும்  நோயாளிகள் வரும்போது ஒரு கிலோ சாப்பாட்டு புழுங்கலரிசி எடுத்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சில சமயம் இரவில் தங்குவதற்கும் ஆயத்தமாக வர வேன்டும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நண்பர்கள் அன்று மாலையே மருந்து கொடுத்து அனுப்பி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதற்கு கடும் பத்தியம் இருக்கிறது. 15 நாட்கள் வரை அசைவம், இனிப்பு, வெற்றிலை பாக்கு உபயோகிக்கக்கூடாது.
2 மாதம் வரை தக்காளி, தேங்காய், நெய், பால், தயிர், மீன் கேழ்வரகு, உளுத்தம்பருப்பு [ இட்லி,தோசை கூடாது ] சாப்பிடக்கூடாது. ஆந்திர அரசு இந்த வைத்தியசாலைக்கு தனி பஸ் விட்டிருக்கிறதாம்.

மருத்துவர் மோகன்ராவ் குடும்பம் நூறு வருடங்களாக இந்த வைத்தியம் செய்து, பக்கவாதத்தை குணப்படுத்தி வருகிறது! மூன்று வேளைகள் மருந்து கொடுத்து கையிலும் மருந்துகள் கொடுத்து நோய்க்கு ஏற்ப 15 அல்லது 20 நாட்கள் கழித்து மருத்துவர் மோகன்ராவ் வரச்சொல்கிறாராம். மருந்துகளுக்கு மட்டும் ரூ.500 வாங்கிக்கொள்கிறாராம்!!

இந்த வைத்தியரின் விலாசம்:
DR.C.MOHAN RAO,
Marati C Ranoji Paralysis Vydyam) , Virupakshi Puram Village, Near ChappidipallePost
Palamaner, Chittoor - 517408, ,
CELL: 9440459200/PHONE: 08579 200347.

DR.JAYALAKSHMI.

டாக்டர் திருமதி ஜயலக்ஷ்மி பற்றி நிறைய பேர் அறிந்திருப்பார்கள். தொலைக்காட்சி, யு டியூப், வார பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் முதலியவற்றில் இவரது தொடுசிகிச்சை பற்றிய தகவல்களை அடிக்கடி அளித்து வருகிறார். அக்குபங்க்சர், அக்குப்பிரெஷர் சிகிச்சை மூலம் பல நோய்களை சரியாக்குகிறார் இவர்.



பல வருடங்களுக்கு முன் என் கணவருக்கு தோள்பட்டை வலி மிக அதிகமாக இருந்தது. அலோபதி வைத்தியம், நாட்டு வைத்தியம் எதனாலும் சரியாகவில்லை. முதன் முதலாக இவரைப்பற்றி கேள்விப்பட்டு சென்னைக்கு இவரிடம் காண்பிக்கச் சென்றோம். காதருகில் 2 இடங்களிலும் தோள்பட்டை அருகிலும் அக்குபங்சர் செய்தார். 10 நிமிடங்கள் கழித்து கையை உதறச் சொன்னார். சுத்தமாக வலி போய் விட்டிருந்தது. எங்களால் அதை நம்பவே முடியவில்லை! இன்று வரை அந்த வலி இல்லை. அதனால் எனக்கு எந்த உடல்நலப்பிரச்சினையென்றாலும் இவரிடம்தான் சென்று வருகிறேன். மருந்தில்லா வைத்தியம் என்பதால் என்ற பிரச்சினைகள் இல்லை.
இவர் விலாசம்: no:19, door no:C-5, woodbridge apartment, Venkatraman street, T.NAGAR, CHENNAI-17. Phone: 044 - 28151832, 9840095385

ஞாயிறன்றும் புதனன்றும் இவர் வைத்தியம் பார்ப்பதில்லை. மற்ற நாட்களில் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை மட்டுமே நோயாளியைப்பார்க்கிறார், இப்போதெல்லாம் புதன்கிழமை கூட இவரது உதவியாளர்கள் பார்ப்பதாக தற்போது டாக்டர் சொன்னார்கள்.

DR.PRATHEEP NAMBIYAR

டாக்டர் பிரதீப் நம்பியார் இந்தியாவின் மிகச்சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரில் ஒருவர். இதயம், நுரையீரல், நெஞ்சுப்பகுதி என்று கிட்டத்தட்ட 7000 அறுவை சிகிச்சைகள் தனது 25 வருட அனுபவத்தில் செய்துள்ளார்.



அதில் நுண்ணிய இதய அறுவை சிகிச்சைகளும் அடங்கும். ' நம்பியார் டெக்னிக் ' என்று அவர் பெயரில் தற்போது டெல்லியில் மட்டும் ஒரு நுண்ணிய பை பாஸ் அறுவை சிகிச்சை இதயத்தில் செய்யப்படுகிறது! இதைப்பற்றி டாக்டர் பிரதீப் குமார் " இதில் பின்ஹோல் சர்ஜரி மூலம் நோயாளியின் இட‌து மார்புக்குக்கீழே 2 அங்குல அளவு கிழிக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று இரத்தக்குழாய்களில் பிளாக் இருக்கும்போது பைபாஸ் செய்வதற்கு மார்புக்குள்ளிலிருந்து மார்பின் உள் தமனி உபயோகப்படுத்தப்படுகிறது. கால் நரம்புகளை வைத்து பைபாஸ் செய்யும்போது அது சாதாரணமாக 10,12 வருடங்களுக்குத்தான் செயல்படுகிறது. இந்த சர்ஜரி 25,30 வருடங்களுக்கு நிலைத்து நிற்கக்கூடியது. நோயாளி 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 10 நாட்களில் அவர் நார்மலாக தன் வேலைகளில் ஈடுபடலாம். மேலும் தொற்று ஏற்படுவதும்  தழும்பு வருவதும் மற்றும் ரத்த‌ம் ஏற்ற வேண்டிய அவசியம் இவை அனைத்துக்குமான அபாயம் இந்த சர்ஜரி முறையில் குறைவு "என்றார்.
இந்த அறுவை சிகிச்சை தற்போது டெல்லியில் மட்டுமே செய்யப்படுகிறது.

டாக்டர் பிரதீப் நம்பியார் தற்போது ஹரியானாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் இருக்கிறார்.

HOSPITAL ADDRESS
Columbia Asia Hospital, Block F, Gol Chakkar,
Palam Vihar
Gurgaon Haryana 122017
India