Wednesday 27 July 2016

துபாய் ஏர்போர்ட்!!





அன்னிய தேசங்களிலிருந்து அதிக அளவில் இன்றைக்கு வருகை தரும் விமான நிலையம் துபாய் பன்னாட்டு விமான நிலையம். 1937ல் மிகச்சிறிய அளவில் இங்கிலாந்திற்கும் கராச்சிக்கு மட்டும் இயங்கி வந்த விமானப் போக்குவரத்து

1960ல் மிகச் சிறிய விமான நிலையத்தைக்கட்டி சிட்னிக்கும் ஆப்பிரிக்காவிற்கும் போக்குவரத்தை ஆரம்பித்தது



1960களில் முறையான கட்டிடங்கள், பொறியியல் வல்லுனர்கள் கொண்டு, நல்லதொரு ஓடுதளத்துடன் துபாய் விமான நிலையம் இயங்க ஆரம்பித்தது.

1970களில் கட்டிய இந்த ஏர்போர்ட் நவீனமயமாக்கப்பட்டு இப்போது டெர்மினல் 1 என்ற பெயருடன் இயங்கி வருகிறது.
 50 வருடங்களுக்குப்பிறகு, இன்றைக்கு பணத்தால் ஒவ்வொரு சதுர அடியும் இழைக்கப்பட்டு அனைவரையும் எப்போது போனாலும் பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கிறது! ஒவ்வொரு முறையும் அசத்தலான ஏதேனுமொரு மாற்றத்தைப்பார்க்கிறேன் இப்போதெல்லாம்

2015 ஆம் ஆண்டு மட்டும் இந்த விமான நிலையம் 78 மில்லியன் பயணிகளை பார்த்திருக்கிறது. துபாய் அரசுக்குச் சொந்தமான எமிரேட்ஸ் விமானங்கள் கிட்டத்தட்ட துபாய் ஏர்ப்போர்ட்டிலிருந்து பாதியளவு பயணங்களை மேற்கொள்கின்றன. துபாய் ஏர்ப்போர்டில் மூன்று டெர்மினல்கள் உள்ளன. டெர்மினல் 1 1970களிலிருந்து உள்ளது. இப்போது நவீன மயமாக்கப்படிருக்கிறது. பெரும்பாலும் உலகின் பல நாடுகளுக்கு இங்கிருந்து தான் விமானக்கள் செல்கின்றன. டெர்மினல் 2 பட்ஜெட் விமானக்களை அதிகமாக கையாளுகிறது. டெர்மினல் 3 உலகின் மிகப்பெரிய தளம் உள்ளகட்டிடத்தைக் கொண்டிருக்கிறது.உலகிலேயே அதிக பரப்பளவு கொண்ட டெர்மினலும் இதுவே. முன்னால் எமிரேட்ஸ் விமானக்களுக்காக மட்டும் இயங்கி வந்த இந்த டெர்மினல் தற்போது 'காண்டாஸ் விமானங்களை இங்கிருந்து இயங்க ஒப்பந்தம் மூலம் அனுமதித்துள்ளது. இந்த வருட ஆரம்பத்திலிருந்து வாரம் 7000க்கும் அதிகமான விமானங்களை இயக்கி வருகிறது


துபாய் விமான நிலையத்தின் அத்தனை அழகையும் காமிராவிற்குள் அடக்கி விட முடியாது. ஒரு சில படங்கள் உங்களுக்காக

கடைகளும் இளைப்பாறும் இடங்களும்
பயணிகள் விமானம் ஏறு முன் காத்திருக்கும் இடம்!




வெளியிலிருந்து வந்திறங்கும் விமானப்பயணிகள் இமிக்ரேஷன் செல்வதற்காக மெட்ரோ ரயிலில் ஏறக்காத்திருக்கிறார்கள். முன்பு நீண்ட நடைப்பயணம் இருந்தது. இப்போது இந்த சொகுசு வசதியை ஏற்படுத்தி அந்த சிரமத்தை அகற்றி விட்டார்கள்!
உள்ளே கடைகள்!


அவரவர் விமானம் நிற்கும் இடத்திற்கு நடந்து செல்லாமல் இந்த 'டிராவலேட்டரில்' பயணம் செய்யலாம்!
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு துபாய் வழியே செல்லும்போது துபாயில் சில ம‌ணி நேரங்கள் தங்க நேரிடும். அதுவே மறு நாள் தான் மறுபடியும் செல்லும் விமானம் கிளம்புமென்றால் ட்ரான்ஸிட் பயணிகள் தங்க வசதியாக ஏர்போர்ட்டிலேயே இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்!
சில ம‌ணிநேரங்கள் தங்கும் டிரான்ஸிட் பயணிகள் தூங்குவதற்கு வசதியான அறை!
டிரான்ஸிட் பயணிகள் தங்கள் பொழுதைக்கழிப்பதற்கு ஏர்போர்ட்டிலேயே ஒரு பசுமையான தோட்டம்!
குழந்தைகள் விளையாட ஒரு இடம்!
ஏர்போர்ட் உள்ளே இருக்கும் ஒரு நகைக்கடை!

Saturday 9 July 2016

அழகிய கண்ணே!!!

20 நாட்களுக்கு முன் ஒரு விடியற்காலை. முதல் நாள் இரவு தான் சென்னையிலிருந்து திரும்பியிருந்தேன். படுக்கும்போது மூடிய வலது கண்ணில் விரல்கள் பட்ட போது இலேசாக ஒரு வலி. அப்படியே உறங்கி விட்டேன். காலை முகம் கழுவியவாறே கண்ணாடியில் பார்த்த போது வலது கண்ணில் வெள்ளை விழி சிறிது கூடத் தெரியாத அளவு இரத்த சிவப்பாக மாறியிருந்தது. கருவிழியும்  அந்த இரத்தச் சிவப்பில் பழுப்பு கலர் போலத் தெரிந்தது. ஆனால் பார்வையில் எந்த வித்தியாசமும் இல்லை. என் கணவர் பதறிப்போய் ஏற்கனவே அந்தக் கண்ணில் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்த என் சகோதரி மகளை தொலைபேசியில் அழைத்தார். பயப்படத்தேவையில்லை என்று சொன்ன எங்கள் மகளிடம் திருச்சியிலுள்ள‌ அவரின் கிளினிக்கிற்கு உடன் வருவதாகச் சொல்லி திருச்சி சென்றோம்.

எங்கள் பெண் பரிசோதனை செய்து விட்டு கண்ணில் சொட்டு மருந்து ஊற்றி  dialate செய்து ரெடீனாவும் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தார். இது Subconjunctival hemorrhage  என்றார்.




வெள்ளை விழியை மூடி பாதுகாத்துக்கொண்டிருக்கும் conjunctiva என்ற மெல்லிய டிஷ்யூவிலுள்ள மிகச் சிறிய இரத்தக்குழாய்களில் ஏதேனும் ஒன்று சில சமயங்களில் நிலையில்லாமல் ஏறி இறங்கும் அதிக உயர் இரத்த அழுத்தம் காரணமாகவோ அல்லது கண்களில் திடீரென்று ஏற்படும் விபத்தாலோ அல்லது தலையில் உள்ள நரம்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டாலோ இந்த இரத்தக்குழாய்கள் மிகவும் இலேசானது என்பதால் உடைந்து  இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது என்று சொன்னார். வெள்ளை விழிக்கும் conjunctiva என்ற இந்த மெல்லிய திரைக்கும் இடையே இந்த இரத்தக்கசிவு ஏபடுவதால் இரத்தம் வெளியே வருவதில்லை.

சில சமயங்களில் பலமாகத் தும்மினால்கூட‌ இந்த நிலை ஏற்படுகிறது. லேஸிக் அறுவை சிகிச்சை அல்லது காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் கூட ஒரு காரணமாகிறது!

எனக்கு வேறெந்தக் காரணமும் இல்லை காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டதைத்தவிர! ஆனாலும் இப்படி நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு கடுமையான தலைவலி இருந்தது நினைவுக்கு வந்தது
.
இதற்கு எந்த மருந்துகளும் தேவையில்லை என்று கூறிய என் பெண் ஒரு சொட்டு மருந்தைத்தந்தார். அதை தினமும் மூன்று தடவைகள் உபயோகிக்கும்படி சொல்லி இந்த சொட்டு மருந்து கூட கண்களுக்கு ஒரு குளுமை தருவதற்காக மட்டுமே என்றும் இந்த சிவப்பு 15 நாட்களில் தானாகவே சரியாகி விடுமென்றும் கூறினார். ஒரு வாரத்திற்குப்பின் சிறிது சிறிதாக கருஞ்சிவப்பு சிவப்பாக மாற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கண் முழுவதுமாக இருந்த சிவப்பு மறைய ஆரம்பித்தது.  நான்கு நாட்களுக்கு முன் இது முழுவதுமாக மறைந்து விட்டது!

பொதுவாக 50 வயதைக்கடந்த பின் கண்களில் இப்படி ஏதேனும் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது. ஒரு நாள் காலை எழுந்ததும் உங்கள் வெள்ளை விழிகள் முழுமையாக சிகப்பாக காட்சி தந்தால் பயந்து விட வேண்டாம். உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகவும்.