Monday 19 June 2023

முத்துக்குவியல்-69!!!

ரசித்த முத்து:

ஒரு நாட்டின் அரசன், எதிர்காலத்தில் நடக்கவிருக்கிருக்கும் அத்தனை விஷயங்களையும் துல்லியமாக கணித்து சொல்லக்கூடிய ஜோசியர் ஒருவர் இருக்கிறார் என்பதைக்கேள்விப்பட்டு, அந்த ஜோசியரை வரவழைத்து மரியாதைகள் செய்து, “ ஜோசியரே, எனக்கும் எதிர்காலத்தைப்பற்றித்தெரிந்து கொள்ள ஆசை வந்திருக்கிறது. நான் என் மனைவிக்கு முன் இறப்பேனா? அல்லது என் மனைவி எனக்கு முன் இறப்பாரா என்பதைக்கணித்து சொல்லும்” என்று கேட்டாராம். 

ஜோசியரும் தயங்கி விட்டு பின் “ உங்கள் மனைவி 3 மாதங்கள் கழித்து இறந்து விடுவார்” என்று சொன்னாராம். அவர் சொன்னது போலவே மூன்று மாதங்கள் கழித்து யானை மிதித்து அரசி இறந்து விட்டார். சோகத்தில் ஆழ்ந்த மன்னன் ஒருவாறு தன்னிலைக்கு திரும்பியதும் அவனுக்கு ஜோதிடர் மீது கட்டுக்கடங்கா கோபம் ஏற்பட்டது. ‘யானையால் தான் அரசி இறப்பார் என்று சொல்லியிருந்தால் நாமும் முன் ஜாக்கிரதையாக இருந்து அந்த யானை தாக்காதவாறு அரசியைக்காப்பாறியிருக்கலாமே’ என்ற ஆதங்கமும் தலைகால் புரியாத சினமும் அரசனைத்தாக்க வீரர்களிடம் ‘ அந்த ஜோசியன் எங்கேயிருந்தாலும் இழுத்து வாருங்கள். அவனைக்கொன்றால் தான் எனக்கு நிம்மதி’ என்று உத்தரவிட, வீரர்களும்  அந்த ஜோசியனைக்கண்டு பிடித்து அரசவைக்கு அழைத்து வந்தார்கள். ஜோசியரும் தன்னைக்கொல்லாமல் விட மாட்டார்கள் என்பதைப்புரிந்து உள்ளூர நடுங்கிக்கொண்டேக்கொண்டே அரசவைக்கு வந்தார். மன்னன் அவரைப்பார்த்ததும் ‘ ஜோசியரே, நீர் எப்போது இறப்பீர் என்பதைக்கணித்து வைத்திருக்கிறீரா?’ என்று கேட்கிறார். ஜோசியர் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு,’ மன்னா! நம்மைப்பற்றி கணிக்கும் திறமையை என் குருநாதர் எனக்குக் கற்றுத்தரவில்லை. ஆனால் ஒன்று சொல்லியிருக்கிறார். நான் இறந்து போன பின்பு, இந்த நாடு சின்னாபின்னமாகி, சுக்கு நூறாக உடைந்து போகுமாம்,..’!!

அவ்வளவு தான், அரசர் பயபக்தியுடன் சகல மரியாதைகளையும் ஜோசியருக்கு செய்து அவரை வழியனுப்பி வைத்தாராம்!!

மருத்துவ முத்து:

நாட்டு மருந்துக்கடைக்கு தாளிசாதி சூரணம் வாங்கப்போயிருந்தேன். [ தொடர்ந்து தொண்டையில் சளி இருந்து கொண்டே இருந்தால் இந்த சூரணம் அரை ஸ்பூன் எடுத்து மிதமான வென்னீர் அரை தம்ளரில் கலந்து காலை, இரவு சாப்பாட்டிற்குப்பிறகு குடித்தால் நிச்சயம் சளித்தொல்லை மட்டுப்படும் ] கடையில் சாமான் எடுத்துக் கொடுக்கும் பையன் இந்த மருந்து யாருக்காக வாங்குகிறீர்கள்? என்று கேட்டான்.  ‘எனக்குத்தான்” என்றேன். 

நீங்கள் இரவில் இட்லி அல்லது தோசை சாப்பிடுவீர்களா’ என்று கேட்டான். நான் ஆமாம் என்றதும் ‘ இரவில் எப்போதுமே இட்லி, தோசை சாப்பிடவே கூடாது. புளித்துப்போன உணவு இவையெல்லாம். புளிப்பு எப்போதுமே உடலில் கபத்தை அதிகரிக்கும். கபம் அதிகமாக, அதிகமாக சளித்தொல்லை குறையவே குறையாது. புளித்த மாவிற்கு பதிலாக இரவில் இடியாப்பம், கஞ்சி என்று சாப்பிட்டால் உடல்ல் கபம் குறையும். நீங்கள் சாப்பிடுகிற மருந்தும் பலனளிக்கும்’ என்று சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியமாகிப்போனது. அவன் சொல்வது உண்மை தான். புளித்த உணவுகள் எப்போதும் உடலில் கபத்தை ஏற்றும். இனியாவது இரவில் இந்த உணவுகளைக்குறைத்துகொள்ள வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன்.

இசை முத்து:

இது சன் டிவியில் வரும் ‘ பொன்னி ‘ என்ற சீரியலுக்கான தலைப்புப்பாடல். ஆரம்பித்த அன்று மட்டுமே காண்பித்தார்கள். திருமுருகாற்றுப்படை முருகனைப்பற்றிய பாடல். மிகவும் அருமையான பாடல். சாய் விக்னேஷும் சுர்முகியும் அருமையாகப்பாடியிருக்கிறார்கள். நீங்களும் கேட்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.