Friday 26 August 2016

முத்துக்குவியல்-42 !!!!

அசத்தும் முத்து:

உமைத் பவன் பாலஸ்

உலகிலேயே மிகச்சிறந்த‌ தங்கும் விடுதி நம் இந்தியாவில்தான் இருக்கிறது! ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூரில் அமைந்துள்ள உமைத் பவன் அரண்மணையில் ஒரு பகுதியில் இது இயங்கி வருகிறது. இந்த அரண்மனை தற்போதைய மஹாராஜாவான கஜ் சிங்கின் பாட்டனாரான உமைத் சிங் பெயரில் தான்  இயங்கி வருகிறது. இந்த அரண்மனையின் ஒரு பகுதியில் மியூசியம் இயங்கி வருகிறது. இன்னொரு பகுதியில் ராஜ குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மூன்றாவது பகுதி தான் உலகத்திலேயே தாஜ் பாலஸ் ஹோட்டல் என்ற பெரிய ஹோட்டலாக தாஜ் குழுமத்தினர் நிர்வகித்து வருகிறார்கள்.



சமீபத்தில் உலகிலேயே மிகச்சிறந்த ஹோட்டல் என்ற விருதையும் இந்த அரண்மனை பெற்றிருக்கிறது. ராஜஸ்தானில் பஞ்சம் வந்த காலத்தில் ராஜா உமைத் சிங் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவே இதைக்கட்டினாராம்! 1928ல் ஆரம்பிக்கப்பட்டு 1943ல் முடிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு உள்ள மிகச் சிறிய அறைக்கான கட்டணம் 60000 டாலர்கள் [ 40 லட்சம் ரூபாய்!]


ஆச்சரிய முத்து:
தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செல்களும் நியூட்ரான்களும் சக்தி பெறுகின்றனவாம். குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் தோப்புக்கரணம் போட ஆரம்பித்த பிறகு நிறைய மதிப்பெண்கள் வாங்குவதாக அமெரிக்க மருத்துவர் எரிக் ராபின்ஸ் கண்டு பிடித்துள்ளார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.




தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார்.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

குறிப்பு முத்து:

காய்கறிச்செடிகள் செழித்து வளர, விதைகள் ஊன்றும்போது அவைகளுடன் 2 ஸ்பூன் எப்ஸம் சால்ட் கலந்து தெளிக்கவும். செடிகள் பூச்சிகள் தொந்தரவின்றி செழித்து வளரும்!!

மருத்துவ முத்து:

வாய்ப்புண், தொண்டைப்புண் குணமாவதற்கு துளசி ஒரு கண்கண்ட மருந்தாக செயல்படுகிறது.




துளசி இலைகளை வாய்க்குள் வைத்து அதக்கியவாறே மெல்லும்போது வெளி வரும் சாறு அந்தப்புண்களின்மீது பட்டுச் செல்லும்போது எரிச்சல் ஏற்படுகிறது. ஒரு தடவை 10 துளசி இலைகளை மென்று அதன் சாறு உள்ளே போனதுமே சிறிது நேரத்தில் புண் ஆற ஆரம்பித்திருப்பது புரியும்.  மூன்று, நான்கு தடவைகள் துளசி இலைகளை மென்று வந்தால் முற்றிலுமாக வாய்ப்புண் மறைந்து விடும்.

இசை முத்து:

எல்லோருக்கும் 'பனி விழும் மலர் வனம்' என்ற திரைப்பாடல் பற்றித்தெரியும். அது ஒரு FUSION MUSIC-ஆக கார்த்திக் குரலில் பல‌ ஸ்வரங்களுடன் இங்கே இசை விருந்தே நடை பெறுகிறது! கேட்டுப்பாருங்கள்!




Saturday 13 August 2016

சாவி அவர்களுடன் மலரும் நினைவுகள்!

மறைந்த எழுத்தாளர் சாவி அவர்களைப்பற்றி எல்லோரும் நிறையவே எழுதி விட்டார்கள். எங்கள் இல்லத்திலும் முக்கியமாக எனது குறுகிய பத்திரிகைப்பயணத்தில் அவருக்கு முக்கிய இடம் உண்டு.



எழுபதுகளின் தொடக்கத்தில் திருமணத்திற்கு முன் நான் ஓவிய ஆசிரியையாக அரசுப்பள்ளியில் பணி புரிந்த சமயம் தினமணி கதிர் இதழ் அழகிய ஓவியங்களுடன் வாராவாரம் வெளி வந்து கொண்டிருந்தது. ஓவியங்களில் வண்ணக்கலவைகள் அத்தனை அற்புதமாக இருக்கும். சாவி அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு தான் அட்டைப்படம் அழகிய ஓவியங்களில் பிரகாசித்தது. நான் அப்போது  ' பிரிந்த பாதைகள் இணைவதில்லை' என்ற சிறுகதையை எழுதி அனுப்பியிருந்தேன். இது தான் எனது முதல் சிறுகதை! அனுப்பி ஒரு மாதத்திலேயே ஜெயராஜின் ஓவியத்துடன் என் சிறு கதை பெரும்பாலும் எந்த மாற்றங்களுக்கும் ஆட்படாமல் வெளி வந்தது. தன் முதல் குழந்தையைப்பார்த்த ஒரு தாயின் பரவசத்தில் நான் திக்குமுக்காடிப்போனேன். ஆசிரியரின் கடிதம் என்னை அடுத்த கதையை அனுப்ப உற்சாகப்படுத்தியது.

அந்தக்கதையின் தலைப்பை 'கல்யாணத்தேதியை கவனித்தேன்' என்று மாற்றி பிரசுரித்தார்கள். அந்த சமயம் தினமணி கதிரில் கறுப்பு வெள்ளை வண்ணக்கலவையில் தொடர்ந்து வரைந்து கொண்டிருந்த ஓவியர் பாலு அந்தக்கதைக்கு வரைந்திருந்தார். வாழ்க்கையின் மாற்றங்கள் என் எழுத்துப்பாதையை மாற்றின. வெளி நாட்டுக்குத் தொடர்ந்த வாழ்க்கைப்பயணம் என் எழுத்துலகப்பயணத்தை கொஞ்ச காலத்துக்குத் தள்ளி வைத்தன.

1984 என நினைக்கிறேன், சாவி அவர்கள் 'சாவி' வார இதழை ஆரம்பித்த பிறகு மறுபடியும் ஒரு சிறுகதை அனுப்பினேன். உடனேயே அது பிரசுரமாயிற்று. கூடவே சாவியில் வைத்த ஓவியப்போட்டிக்கும் ஓவியம் அனுப்பினேன். முதல் பரிசு கிடைத்தது.

சாவியில் பரிசு பெற்ற ஓவியம்
அதன் பின் வலது கை சுட்டு விரலில் ஏற்பட்ட ஒரு விபத்தால் ஓவியம், கதை எல்லாவற்றுக்கும் ஒரு நீண்ட இடைவெளி விட வேன்டியதாயிற்று.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷார்ஜாவில் தமிழக நற்பணி மன்றம் சாவி அவர்களை விருந்தினராக அழைத்திருந்தது. மதியம் எங்கள் இல்லத்தில் விருந்து. அவருக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டறிந்து நிறைய பூண்டு போட்டு வற்றல் குழம்பும் கீரை கூட்டும் செய்திருந்தேன்.

சாவி அவர்கள் வலது புறம் என் கணவர், மகனுடன் நான்!!
ரசித்து, சுவைத்து சாப்பிட்டவர் என் தாயார் கையால் சாப்பிட்ட அற்புதமான உணவிற்குப்பிறகு இப்போது தான் இத்தனை சுவையாக சாப்பிடுகிறேன்' என்று அவர் மனதார பாராட்டியது என் பாக்கியமாக இப்போதும் கருதுகிறேன். அதற்கப்புறம் வீட்டிலிருக்கும் என் ஓவியங்களைக்கண்டு ரசித்தவர் என் குறுகிய கால பத்திரிகைப்பயணம் கேட்டு ஆச்சரியப்பட்டார்.



பத்திரிகைகளில் வெளி வந்த என் ஓவியங்களைப்பார்த்து விட்டு அப்போது பிரபலமாயிருந்த ஒரு ஓவியரைக்குறிப்பிட்டு ' அவர் கூட உங்கள் அளவிற்கு இத்தனை அழகாக வரைய முடியாது. முக்கியமாக நீங்கள் வரைந்த பெண்களின் விரல்கள் அத்தனை நளினமாக இருக்கிறது' என்று பாராட்டியதும் என்றும் என் நினைவில் இருக்கிறது.

உள்ள‌த்தால் பல விஷயங்களில் உயர்ந்திருந்த அந்தப்பெரியவர் என்றும் எல்லோரது நினைவிலும் நிலைத்து நிற்பார்!



























Tuesday 2 August 2016

பயணங்கள் முடிவதில்லை!!!

சில மாதங்களுக்கு முன் சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களது வலைத்தளத்தில் பயணம் பற்றிய தொடர்பதிவு ஒன்றில் கலந்து கொண்டு அதன் கேள்விகளுக்கு பதில்கள் எழுதி பதிவு செய்து, என்னையும் அதில் கலந்து கொள்ளச் சொல்லி எழுதினார்கள். பல வித சூழ்நிலைகள் காரணமாக என்னால் இதுவரையில் அதில் பதிவெழுத இயலவில்லை. இப்போது தான் அந்தத் தொடர்பதிவிலிருந்த கேள்விகளுக்கு  பதிலெழுதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பளித்ததற்கும் தொடர்பதிவு எழுதச் சொல்லி என்னை அழைத்ததற்கும் சகோதரர் அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயணம் என்றதும் உடலால் செல்லும் பயணம் உடனே நினைவுக்கு வருவதில்லை! வாழ்க்கைப்பயணம் தான் உடன் நினைவுக்கு வருகிறது! வாழ்க்கையென்னும் பயணத்தில் யாரைல்லாம் நம்முடன் கூடவே வருவார்கள் என்று நம்புகிறோமோ அவர்கள் ரயில் பயணம் மாதிரி இடையிலேயே இறங்கி விடுகிறார்கள். இவர்களுடைய பிரியமெல்லாம் நிலைக்காது என்று யாரை நினைக்கிறோமோ அவர்கள் இடையிலேயே இறங்கி விடாமல் வழித்துணையாக கூடவே இணைந்து வருகிறார்கள்! வாழ்க்கையின் விசித்திரமும் நிதர்சனமும் இது தான்!

இந்தப் பயணத்தை வைத்து எத்தனை அருமையான திரைப்படங்கள் வந்திருக்கின்றன! பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' எனக்கு மிகவும் பிடித்தமான சீரியல் என்றுமே! விமானப்பயணமும் கடலில் சிறு படகுப்பயணமும் இணைந்த ' பாண்டிஷ்' என்ற பழைய பாகிஸ்தானிய திரைப்படம் என்றுமே எனக்கு மறக்க முடியாத காவியம்! விரைவில் அதை ஒரு பதிவாக எழுதுவேன். 1976ல் காலஞ்சென்ற எம்.எஸ்.விஸ்வநாதன் ' பயணம் ' பற்றி ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதில் வரும் சில வரிகள்...

"ஆரம்பம் பள்ளிக்கு பயணம்!பின்பு
அடுத்தது ஆசையின் பயணம்!
இளம் காதலர் கண்களில் பயணம்!அந்த
கலக்கத்தில் கண்ணீரில் பயணம்!
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ!"

கண்ணதாசன் எழுதிய பாடல் இது!

இனி கேள்விகளுக்கு பதில்கள்!

1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

முதல் பயணம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. சின்னஞ்சிறு  வயதில் என் நாத்தனாரின் திருமணம் நீடாமங்கலத்தில் நடந்தது. அப்போது எனக்கு 11 வயதிருக்கும். அதன் பின் மாப்பிள்ளை வீடிருக்கும் திருவையாறு சென்று பின் தஞ்சையில் நீடாமங்கலம் செல்ல இரயிலேறியது நினைவில் எழுகிறது. எல்லோரும் என்னையும் என் தங்கையையும் பாடச் சொல்ல ' பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே, பொருத்தமானதொரு ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே' என்ற பிரபலமான பாடலை நாங்கள் பாட, மணப்பெண் [12 வருடங்கள் கழித்து என் நாத்தனாரானார்!] கழுத்தில் மணமாலையுடன் வெட்கத்தில் தலை கவிழ, அனைவரும் கைதட்டிச்சிரித்த அந்தக் காட்சி இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது!                                      

 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது? 

திருமணம் ஆனதும் எங்களின் முதல் ரயில் பயணம் சென்னையிலிருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் ஆரம்பித்தது. பசுமையான மரங்களும் அண்ணாந்து பார்த்து ரசித்த‌  அழகிய மலைகளும் அந்த மலைகளினூடே ரயில் மெதுவாக உள்நுழைந்து போனதும் இயற்கை அழகில் அப்படியே சொக்கிப்போய் பிரமித்து அமர்ந்திருந்தது எப்போதுமே மறக்க முடியாத விஷயம்!




3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

இளம் வயதில் ரயில் கம்பிகளில் சாய்ந்து கொண்டு   நிலவைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்த போது அத்தனை சுகமாக இருக்கும். அப்புறம் கண்ணாடித்தடுப்புகள். குளிர்ப்பதனம் செய்யப்பட்ட பெட்டிகள் தான் பயணம் என்றாகி விட்டது. 40 வருடங்களுக்கு மேல் வெளிநாட்டு வாழ்க்கை என்பதால் விமானப்பயணங்கள் அலுத்து விட்டது. கார்ப்பயணங்கள் என்றால் நல்ல பாட்டுக்கள் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் இயற்கை அழகை முழுமையாக ரசிக்க முடியும் எனக்கு. மாட்டு வண்டி பயணங்கள் கிராமங்களில் அத்தனை ரம்மியமாக இருக்கும். விடியற்காலை நேரத்தில்  இளங்காற்று முகத்தில் மோத, வயல்களின் நாற்றுக்கள் வாசத்தை நுகர்ந்து கொண்டே செல்லும் பேருந்து பயணங்களும் மிகவும் பிடிக்கும்!!




4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

எப்போதுமே தமிழ்த்திரையிசைக்குத்தான் முதலிடம். சிலசமயம் மலையாளப்பாடல்கள், ஹிந்திப் பாடல்கள் கேட்பதுண்டு.1965லிருந்து இன்றைய பாடல்கள் வரை தமிழின் மென்மையான பாடல்கள் எப்போதுமே என்னுடன் பயணத்தில் சிடி வடிவத்தில் வரும். பெரும்பாலும் எங்கள் காரில் போகாமல் தெரிந்தவர் ஒருவரின் காரில் தான் செல்வோம். கிளம்பியதுமே அவர் என்னிடம் ரிமோட்டைக் கொடுத்து விடுவார். நான் மாற்றி மாற்றி அவரிடம் சிடி கொடுத்துக்கொண்டிருப்பேன். இப்படித்தான் பயணம் இனிமையாக, இசையுடன் செல்லும் எப்போதும்!

 5.விருப்பமான பயண நேரம்?

விடியற்காலைப்பயணம் தான் ரசனையாக இருக்கும்! ஆனால் எங்களுக்குள் ஒரு உறுதிப்பாடு உண்டு. எங்கு பயணித்தாலும் மாலை 6 மணிக்கு மேல் பயணம் செய்ய மாட்டோம். இரவு நேரங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து விடுவோம்!

6.விருப்பமான பயணத்துணை?

கணவரின் துணையில் பரிவும் பாதுகாப்பும் இருக்கும். மகனின் துணையில் அன்பும் அக்கறையுமிருக்கும். தோழியருடனான உரையாடல்களில் சிரிப்பும் புரிதலுமிருக்கும். இசையில் மன நிறைவிருக்கும்!



7.பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

நீண்ட நேர விமானப்பயணம் என்றால் நிச்சயம் ஒரு ஆங்கில நாவல் இருக்கும். [ ஆங்கில நாவல் என்றால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும். தமிழ் நாவலென்றால் விரைவிலேயே முடிந்து விடும்.] நம் ஊர்ப்பயணங்கள் என்றால் புத்தகங்களைத்தொடுவதில்லை! ஆனால் கை வசத்தில் இரண்டு நாவல்கள் எப்போதும் இருக்கும்!

8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

அப்படி எதுவுமில்லை!

9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

நல்ல பாடல்களைக் கேட்கும்போது தானாகவே அதோடு சேர்ந்து மெதுவாகப் ஹம்மிங் பண்ணுவதுண்டு!

10.கனவுப் பயணம் ஏதாவது ?

தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களுக்கு பயணித்து, அங்குள்ள உண‌வு முறைகள், பழக்க வழக்கங்கள், சரித்திரப்புகழ் பெற்ற கோவில்கள் இவற்றையெல்லாம் பார்க்க வேன்டும் என்ற ஆவல் உண்டு!