Monday 16 May 2022

ஜாதகமும் நானும்-2!!!

என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தபோது, ஒரு நாள் அவர் பெண்ணுக்கு திடீரென ஒரு வரன் வந்துள்ளதாக அவர் கணவர் ஊரிலிருந்து ஃபோன் செய்தார். கூரியர் மூலம் வந்த மாப்பிள்ளையின் விபரங்கள் எல்லாமே நன்கிருந்தன. என் சினேகிதி பிராமண குலம் என்பதாலும் அவர் சமூகத்தில் இதெல்லாம் தவிர்க்கமுடியாதவை என்பதாலும் ஒரு நல்ல ஜோதிடரிடம் போக வேண்டும் என்றார். தெரிந்த ஒருவரிடம் கேட்டு அவர் சொன்ன மிகப் பிரபலமான ஜோதிடரிடம் சென்றோம். அவர் ‘பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும் கொடுத்து விட்டு செல்லுங்கள். நாளை வாருங்கள்’ என்றார். அதன்படியே மறு நாள் சென்றோம். கூட்டம் வேறு இருந்தது. ஜோதிடர் என் சினேகிதியிடம் ‘ உங்கள் பெண்ணுக்கு மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும். இதுபோல சில ஜாதகங்களை நம்பி கல்யாணத்தில் இறங்க வேண்டாம். பொருத்தம் இருப்பது மாதிரி தோன்றும் அதை நம்பி நீங்கள் திருமணம் செய்தால் பையன் உங்கள் பெண்ணை விட்டு விட்டு ஓடிப்போய் விடுவார். “ என்று ஒரேயடியாக குண்டைப் போட்டார். என் மகனின் ஜாதகத்தையும் முதன் முதலாக காண்பித்தேன். என் மகனின் ஜாதகத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லையென்றும் ஆனால் எப்படி முயன்றாலும் மூன்று வருடங்கள் கழித்துத்தான் திருமணம் நடக்கும் என்றார். எனக்கு இதில் எல்லாம் பழக்கமோ, நம்பிக்கையோ இல்லையென்பதால் என் மனதில் எந்த பாதிப்புமில்லை. ஆனால் வீட்டுக்குச் சென்றதிலிருந்து இரவு முழுவதும் என் சினேகிதியின் விழிகளிலிருந்து கண்ணீர் மழைதான் பொழிந்து கொண்டிருந்தது. நான் எவ்வளவு சமாதானம் சொன்னாலும் மனம் ஆறவில்லை அவருக்கு! 

‘ கவலைப்படாதே, நாம் வேறு ஒரு நல்ல ஜோதிடரைத் தேடுவோம்’ என்று சமாதானம் செய்தேன்.

[ஆனால் உண்மையில் நடந்ததென்னவோ, என் மகனுக்கு ஆறு மாதங்கள் கழித்து திருமணம் நடந்தது. அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து என் சினேகிதியின் பெண்ணுக்குத் திருமணம் நடந்து அடுத்த‌ இரண்டு வருடங்களில் ஒரு அழகான ஆண் குழந்தைக்கும் தாயானார்! ]

மறுபடியும் வேறு ஒரு சினேகிதியின் பரிந்துரை பேரில் ஊருக்கு வெளியே ஒரு ஜோதிடரைப்பார்க்கச் என்றோம். சிவப்பழமாக வயதானவராக அமர்ந்திருந்தார் அவர். பக்கத்தில் நிறைய ஜோதிட புத்தகங்கள், நோட்டுக்கள், கடவுள் சிலைகள்! அவர் எங்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்கச் சென்றபோதுதான் கவனித்தேன், அவரின் இடப்பக்கம் வெளிநாட்டு மது வகைகள் பல தினுசில் இருந்ததை! உடனேயே சினேகிதியிடம் விபரம்கூட சொல்லாமல் எழுந்து வந்து விட்டேன். அப்புறம் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஒரு பக்கம் தாங்க முடியாத கோபம், மறு பக்கமோ சிரிப்பு வேறு!

எந்த விஷயத்திலுமே நம்பிக்கை இருப்பதும் இல்லாமலிருப்பதும் மனமும் அறிவும் சார்ந்த விஷயங்கள். ஆனால் என்னவென்றே தெரியாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவது மிகவும் முட்டாள்தனமாகத் தோன்ற ஆரம்பித்தது. ஜாதகங்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நிறைய புத்தகங்கள், இண்டர்னெட், இவைகள் எல்லாம் உதவிகள் செய்தன. எப்படி ஆத்திக வாதங்களுக்கும் நாத்திக வாதங்களுக்கும் இன்று வரை ஒரு முடிவில்லையோ, அதுபோலத்தான் இதுவும். ஜாதகங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அதை உறுதி செய்ய நிறைய வாதங்கள் உள்ளன. அதே சமயம் அதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிர் வாதங்களும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன. அதனால் அதிகம் மூளையைக் குழப்பிக்கொள்ளாமல் அதைப்பற்றிய விஷயங்களை ஓரளவு தெரிந்து கொள்ளவே இந்த ஆராய்ச்சிகளைச் செய்தேன்.

20 வருடங்களுக்கு முன்னால்வரை இந்த பழக்கம் குறிப்பிட்ட சமுதாயத்தில் மட்டுமே அதிகமாக இருந்தது. இப்போதோ ஜாதகப்பொருத்தம் பார்க்காத ஜாதிகளே இல்லை. முதலில் ஜாதகப்பொருத்தம் பார்த்து, பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே, பெண்னையோ, மாப்பிள்ளையையோ பார்ப்பதற்கும் மற்ற விஷயங்களையும் பற்றிப் பேசவும் இரு தரப்பிலும் சம்மதிக்கின்றனர். அதுவும் என் விஷயத்தில் பெண் வீட்டை அழைத்துப் பேச முற்படும்போதே, ‘ மாப்பிள்ளை வீடான நீங்கள்தான் முதலில் ஜாதகம் பார்க்க வேண்டும், அதன் பின் தான் நாங்கள் பார்ப்போம். அதனால் பார்த்ததும் திரும்பக் கூப்பிடுங்கள்’ என்றுதான் சொன்னார்கள்.

பொதுவாக திருக்கணித முறைப்படியும் பாம்பு பஞ்சாங்க [வாக்கியப்பஞ்சாங்க] முறைப்படியும்தான் ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன. இதில் திருக்கணித முறையை ஒட்டித்தான் அனைத்து கம்யூட்டர் ஸாப்ட்வேர்களிலும் ஜாதகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறைப்படி தயாரிக்கப்படும் ஜாதகங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று சரியாகவே இருக்கும். வைதீகர்களும் பண்டிதர்களும் பின்பற்றுவது வாக்கியப்பஞ்சாங்கத்தை மட்டுமே. இதில் ஒருவரின் கணிப்புபோல மற்றவருடைய கணிப்பு இருப்பதில்லை. இவர்கள் திருக்கணித முறையை ஒத்துக்கொள்ளுவதில்லை. ஒருவரின் ஜாதகம் இந்த இரு முறைகளிலும் வேறுபடும்.

மற்ற மதங்களிலும் வெளி நாடுகளில் சிலவற்றிலும் ஜாதகம் பார்ப்பதைக் கேள்வியுற்றபோது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. என் வீட்டில் வேலை செய்யும் கிறிஸ்தவப்பெண்[தெலுங்கு], அவர்கள் சமூகத்தில் ஜாதகம் பார்க்காமல் யாருமே திருமணம் செய்வதில்லை என்றார்.

இப்படி ஜோதிட முறைகளில் பல வகைகள் இருக்கும்போது, ஜோதிடர்களின் பாண்டித்யங்களில் பல வேறுபாடுகள் இருக்கும்போது, பாண்டித்யமே இல்லாத, காசை மட்டுமே பிரதானமாக எண்ணும் சாதாரண ஜோதிடர்களின் கணிப்புகள் என்ற விபரீதங்களுக்கிடையே, ஒரு பெண்ணுடைய வாழ்க்கையும் ஒரு ஆணுடைய வாழ்க்கையும் எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எப்படி முடிவெடுப்பது? இப்படி எடுக்கும் முடிவு சரியானதுதானா என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாம்பு பஞ்சாங்கத்தில் பொருத்தம் அவ்வளவாகச் சரியில்லையென்று கண்டு பிடிக்கும் ஒரு சாதாரண ஜோதிடர் தனக்கு சாதகமாக திருக்கணித முறைப்படி பொருத்தம் பார்த்து 8 அல்லது 9 பொருத்தம் இருப்பதாக சொல்வதை எதுவுமறியாத மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இன்றைக்கு தற்போது பல ஜோதிடர்கள் இப்படித்தான் வியாபாரத்திற்காகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்கும் அதுபோல ஒரு அனுபவம் அதற்குப்பிறகு ஏற்பட்டது. நான் ஏற்கனவே சொல்லியிருக்கும் திருச்சி தகவல் மையத்திலிருந்து அதன் நிறுவனர் என்னை அழைத்து, தர்மபுரியில் ஒரு பெண் உள்ளது என்றும் எட்டு பொருத்தங்கள் இருப்பதாயும் பெண் வீட்டில் பெண் பார்க்க வரச்சொல்லுவதாயும் சொன்னார். போகும் வழியில் அவர் பெண்ணின் ஜாதகத்தையும் என் மகனின் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்த விபரங்களையும் என்னிடம் கொடுத்துப்பார்க்கச் சொன்னார். அவரே வாக்கியப் பஞ்சாங்க முறையில் கணித்த ஜாதகம் முதல் பக்கத்தில் இருந்தது. அடுத்தது பெண்ணின் ஜாதகம். மூன்றாவது பக்கத்தில் என் மகனின் ஜாதகம் திருக்கணித முறையில் எடுக்கப்பட்டு அந்தப்பெண்ணின் ஜாதகமும் இணைக்கப்பட்டு 8 பொருத்தங்கள் உள்ளதாக விபரங்கள் எழுதப்பட்டு இருந்தன. நான் அப்போது ஒன்றுமே சொல்லவில்லை. பேசாமல் என் கைப்பையில் வைத்துக்கொண்டேன். பெண் பார்த்து விட்டுத் திரும்பும்போதும், அவரைக் காரிலிருந்து அவர் இருப்பிடத்திற்கு அருகில் இறக்கி விட்டபோது, அவரிடம் அவைகளைக் காண்பித்து, ‘ இதென்ன முதலில் என் மகனுக்கு வாக்கியப் பஞ்சாங்க முறைப்படி ஜாதகம் தயாரித்துக் கொடுத்தீர்கள். இப்போது என்னவென்றால் திருக்கணித முறையில் வேறு ஒரு ஜாதகம் தயாரித்துப் பொருத்தம் பார்த்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டதும் அவர் அப்படியே ஸ்தம்பித்துப்போனார்.

‘ இல்லைம்மா. அது அவ்வளவா பொருந்தவில்லை. அதனால்தான் இப்படி..” என்றார்.

‘அப்படியானால் வசதிக்குத்தகுந்தப்படி ஜாதகத்தை மாற்றிக்கொள்வீர்களா? இது இருவர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம், எப்படி உங்கள் வசதிக்குத் தகுந்தபடி மாற்றலாம்?’ என்று கேட்டதும் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி எத்தனை பேர் வெறும் பணத்திற்குச் செய்கிறார்களோ? எத்தனை பேர் விபரம் தெரியாமல் ஏமாறுவார்கள்! என் மகனுக்கு அவ்வளவாகப் பிடித்தம் இல்லாததால் இந்தத் திருமணம் நடக்கவில்லை. ஆனாலும் பெண்ணின் அம்மாவைக்கூப்பிட்டு விபரம் சொல்லி எதிர்காலத்தில் கவனமாக இருப்பதுடன் வேறு ஒரு நல்ல ஜோதிடரைப்பார்த்து விபரங்கள் தெரிந்து கொள்ளச் சொன்னேன்.

இத்தனை அனுபவங்களுக்குப்பிறகு, அதிர்ச்சிகளுக்குப்பிறகு, ஒரு தரமான ஜோதிடரை விசாரிக்க முயன்றதில் கிடைத்தவர் ஒரு இஸ்லாமிய ஜோதிடர். ஐந்து தலைமுறைகளாய் ஜோதிடம் பார்த்துச் சொல்லும் குடும்பமென்றும், மரியாதை, தொழிலில் அக்கறை எல்லாம் நிரம்பியவர், செல்வந்தர்கள் என்றாலும் ஏழைகள் என்றாலும் ஒரே மாதிரிதான் நடத்துவார் என்றெல்லாம் கேள்விப்பட்டதும் என் சினேகிதியுடன் அவரைப்பார்க்கச் சென்றேன். அவரிடம் பேசிய போது, ‘ நான் திருக்கணித முறையைத்தான் பின்பற்றுகிறேன்.’ என்று சொல்லி என் மகனின் ஜாதகத்தையும் வாங்கி ஆராய்ந்து பார்த்தார்.. ‘ இது சரியான ஜாதகம். திருக்கணித முறைப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் மகனின் திருமணம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவாகி விடும். தூரத்து சொந்தத்தில் பெண் அமையும்.’ என்றார்.

வீட்டுக்கு வந்து யோசனை செய்ததுதான் மிச்சம். சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ எந்தப்பெண்ணும் இல்லை.

ஆனால் அவர் சொன்னதுபடியே தான் நடந்தது. என் கணவரின் அண்ணிக்கு நெருங்கிய உறவு- எப்போதோ விட்டு விலகிப்போன உறவில் பெண் அமைந்தது. அதுவும் அவர் சொன்ன மாதிரி ஆறாம் மாதம் முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்பு திருமணம் முடிவானது. என் சினேகிதியின் பெண்ணுக்கும் அவர் சொன்ன மாதிரியே தான் திருமணம் நடைபெற்றது.

ஜாதகத்தில் நம்பிக்கையோ, பற்றோ இப்பொழுதும் இல்லையென்றாலும் இப்படி நடந்தவைகளெல்லாம் இன்று நினைத்தாலும் ஆச்சரியமான விஷயங்களாகவே இருக்கின்றன. வாழ்க்கையின் வழி நெடுகக் கிடைக்கும் வியப்புகளும் அனுபவங்களும் நிறைய! ஆனாலும் கற்றுக்கொண்டதோ அதையும் விட நிறைய!!


  

Wednesday 4 May 2022

ஜாதகமும் நானும்!- முதல் பகுதி

 இன்றைக்கு ' எங்கள் பிளாகில்' ஜாதகம், ஜோஸ்யம் பற்றிய கருத்துக்களைப்படித்த போது 12 வருடங்களுக்கு முன்னால் இதைப்பற்றி நான் பதிவிட்டது நினைவுக்கு வந்தது. என் அனுபவங்களைத்தான் அதில் விரிவாக எழுதியிருந்தேன். அதற்கு எனக்கு நிறைய பின்னூட்டங்களும் சில மறுப்புகளும் வந்த‌ன.அதையே இங்கே மீள் பதிவாக வெளியிடுகிறேன்.

ஜாதகமும் நானும்!

நான் புகுந்த வீடு என் சொந்த அத்தை வீடு தான் என்றாலும் பெரியாரின் கொள்கை வழி நடப்பவர்கள், ஜாதகம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற நிலையில் என் வீட்டுக்கு முற்றிலும் வேறான சூழ்நிலைகளுள்ள இல்லத்தில் குடி புகுந்தேன். பெரிய அளவில் கூட்டுக்குடும்பமாக அப்போது எங்கள் கிராமத்தில் திகழ்ந்த வீடு என்பதால் இந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மீறிய பாசத்திலும் மகிழ்விலும் அதிலேயே ஒன்றிப்போக முடிந்ததுடன் ‘அன்பே உலகம், உழைப்பே கடவுள்’ என்ற நினைப்பில் வாழவும் வளரவும் முடிந்தது. என் மகனுக்குத் திருமண வயது வருகிற வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதற்கப்புறம் தான் ஜாதகப்பிரச்சினைகள் எல்லாம் ஆரம்பமாயின. ஜாதகம், ஜோதிடம் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத குடும்பம் என்பதால் பிறந்ததும் என் மகனுக்கு ஜாதகமெல்லாம் எழுதவில்லை.

முதல் கட்டமாக சில முக்கிய திருமண மையங்களில் என் மகனின் விபரங்களைப் பதிவு செய்தேன். சில மாதங்கள் கழித்து வடலூர் அருகில் ஒரு பெண் வீட்டிலிருந்து பேசினார்கள். தந்தை பொறியியல் வல்லுனராக இருந்து இறந்தவர். மற்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்கவே நானும் எங்கள் இல்லத்தைப் பற்றி, எங்கள் நம்பிக்கைகளைப் பற்றிச் சொன்னேன். அதற்கு பெண்ணின் தாயார், ‘ எனக்கு இந்த ஜாதகப்பொருத்தம் மற்றதெல்லாம் தேவையேயில்லைங்க. நான் கடவுளிடம் பூ போட்டு பார்த்தேன். எல்லாம் சுபமாகவே வந்தது. எனக்கும் என் பெற்றோருக்கும் சம்மதம். நீங்கள் உங்கள் கணவருடன் சென்னைக்கு என் அப்பா வீட்டுக்கு வாருங்கள். மகனையும் வரச்சொல்லுங்கள்’ என்றார். கிட்டத்தட்ட முடிவான விஷயம் என்பதால் என் மகனையும் துபாயிலிருந்து வரச்சொல்லி மூவருமாகப் போய் பெண் பார்த்தோம். ஆனால் பெண்ணின் முகத்திலும் பெண்ணின் அம்மா முகத்திலேயும் உற்சாகமேயில்லை. நாங்கள் திரும்ப ஊருக்கு வந்து சேர்ந்ததும் பெண்ணின் அம்மா கூப்பிட்டு “என் சொந்தங்கள் அத்தனை பேரும் ஜாதகப்பொருத்தம் சரியில்லை என்கிறார்கள். அவர்களை மீறிக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.” என்று அழுதார். நான் “ பின் ஏன் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று சொன்னீர்கள்? இதனால் எங்களுக்கு எத்தனை செலவு, அலைச்சல், மனக்கஷ்டம்? நாங்களும் எங்கள் சொந்தக்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று வருத்தப்பட, மறுபடியும் அவர்கள் அழ, அதற்குப்பிறகும்கூட நான் ஜாதகத்தைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை.

அதற்குப்பின் என் சினேகிதி ஒருவருடன் திருச்சியிலுள்ள ஒரு திருமண மையம் சென்றேன். அங்கிருந்த விபரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு முதியவர் என்னருகில் வந்து அமர்ந்தார்.

‘ அம்மா, நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுடைய மகனின் தகுதிகள் அனைத்தும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று கூறி, இங்கு வருபவர்கள் ஜாதகம் இல்லையென்றதும் வேண்டாமென்று போய் விடுகிறார்கள். எதனால் நீங்கள் ஜாதகம் வைக்கவில்லை?’ என்று கேட்டார். நான் எங்கள் குடும்பத்தைப்பற்றி சொன்னதும் அவர் ‘ அம்மா, உலகம் முழுவதும் இப்போது ஜாதகத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது உங்களுக்கு தெரியவில்லை. ஆடையில்லா உலகத்தில் ஆடையணிந்தவன் தான் பைத்தியக்காரன். உலகத்தோடு அதன் போக்கில் நிறைய சமயங்களில் நாமும் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் அடுத்த முறை வரும்போது ஜாதகம் எடுத்து வாருங்கள்” என்றார். எனக்கு திருவள்ளுவரின் ‘ உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்’ குறள் தான் ஞாபகம் வந்தது.

என் சினேகிதி தனக்குத் தெரிந்த ஒரு பெரியவரிடம் ஜாதகம் கணித்து எடுத்து வந்து தந்தார். இடையே திருச்சியில் வேறொரு திருமண மையத்தில்[ சூர்யா மையம் என்று வைத்துக்கொள்வோம்] அதன் நிறுவனர் ‘ நான் முதலில் வரனின் ஜாதகத்தைக் கணித்து வைத்துக் கொண்டு, அதன் பிறகுதான் பெண்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்வேன்” என்றார். அவர் அதுபோல பெண்கள் வீட்டுக்கும் பையன்களின் வீட்டுக்கும் ஜாதகங்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். நானும் அந்த ஜாதகத்தையும் கையில் எடுத்து வந்தேன். இடையே என் உறவினர் அவருடைய நண்பரிடம் [ஜாதகம் கணிப்பதில் சூரப்புலி என்று பெயர் வாங்கியவர் ] ஜாதகம் எழுதி வாங்கி வந்தார். ஆக மூன்றாவது ஜாதகமும் வந்து சேர்ந்தது. இடையே எனக்கு பல வருடங்களாக பழக்கமான பெரியவர் ஒருவர்- அமெரிக்காவில் இருப்பவர்- என் வேண்டுகோளுக்காக அவரும் ஜாதகம் கணித்து அனுப்பியிருந்தார். 

இடையே ஒரு நாள் மயிலாடுதுறையில் இருக்கும் ஒரு தகவல் மையத்திலிருந்து ஒரு பெண்ணைப்பற்றிய தகவல்களை எடுத்து வந்திருந்தேன். அதன் நிறுவனர் தெரிந்தவர்தான் என்றாலும் நான் எடுத்து வந்தபோது அவர் இல்லை. தகவல்களை ஆராய்ந்தபோது, பெண்ணின் வீட்டில் ஏழு பேர் கூடப்பிறந்தவர்கள் என்றும் பெண் முதுகலைப்பட்டம் பெற்றவர், அழகானவர், நல்ல குடும்பம் என்றும், ஆனால் வசதியாக இருந்து நொடித்துப்போன குடும்பம் என்றும் தெரிய வந்தது. அந்தப் பெண் வசித்த ஊரிலிருந்த என் உறவினர்கள், தெரிந்தவர்கள், ‘ பெரிய குடும்பம், வசதியில்லை, வேண்டாம்’ என்று கூற, நான் ‘ நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. முதலில் பெண்னை பார்த்து விட்டு வந்து அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன். பெண்ணின் தகப்பனாரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் என் மகனின் தகவல்களை அனுப்பச் சொன்னார். அதன்படியே அனுப்பி விட்டு உட்கார்ந்தால், திருமண தகவல் மைய நிறுவனர் என்னை அழைத்து ‘ அந்தப் பெண் வேண்டாம். நம் குடும்பத்திற்கு சரியாக வராது’ என்றார். அப்போதும் நான் மறுத்து, ‘ முதலில் நான் போய் பார்த்து விட்டு வந்து விடுகிறேன். அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம்’ என்றதற்கு அவர் ஒரேயடியாக மறுத்துப்பேசினார். ஃபோனை வைத்ததும் ஒரே யோசனை மேல் யோசனை! அப்போதுதான் திடீரென்று அந்த எண்ணம் வந்தது! அருகில் அமர்ந்திருந்த என் சினேகிதியிடம் சொன்னேன், ‘ எல்லா ஜாதகங்களையும் எடுத்துப்பார்ப்போம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதா என்று ஆராயலாம்’ என்று!! நான்கு ஜாதகங்களையும் எடுத்துப்பார்த்தால் தலை சுற்றியது. சந்திரனும் சூரியனும் குருவும் ஒவ்வொரு ஜாதகத்திலும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது! அப்படியென்றால் எது சரியானது என்று எப்படித்தெரியும்?

தன் நண்பரிடம் ஜாதகம் என் மகனுக்கு எழுதி வாங்கி வந்த என் உறவினரிடம் சென்று அனைத்து ஜாதகங்களையும் தந்து, “ எது சரியானது, ஏன் இப்படி ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கின்றன என்று உங்கள் நண்பரிடம் கேட்டு வாருங்கள்” என்று சொன்னேன்.

அவர் வந்து சொன்ன பதில் எனக்கு இன்னுமே தலை சுற்ற வைத்தது!

‘என்னுடைய நண்பர் தூக்கக்கலக்கத்தில் இந்த ஜாதகத்தில் சில தவறுகள் செய்து விட்டாராம். இப்போது சரியாக எழுதிக் கொடுத்திருக்கிறார். உன் அமெரிக்க நண்பர் எழுதிக்கொடுத்ததுதான் சரியானதாம்!’

எனக்கு எப்படி இருந்திருக்கும்? அவரிடம் வருத்தப்பட்டுக்கொண்டு வெளியே வந்தேன். அந்த பெண் வீட்டுக்கு இவர் எழுதிக்கொடுத்த ஜாதகத்தைத்தான் அனுப்பியிருந்தேன். எல்லோரும் சொல்கிற மாதிரி அந்தப் பெண் அமைய வேண்டாம் என்றிருக்கிறது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாளே அந்தப் பெண்ணின் தகப்பனாரிடமிருந்து ஃபோன்!

‘ அம்மா, எங்கள் பக்கத்தில் என் பெண்ணின் ஜாதகத்துடன் உங்கள் பையனின் ஜாதகம் மிக நன்றாகப்பொருந்தியிருக்கிறது, எப்போது பெண் பார்க்க வருகிறீர்கள்?’

நான் அனுப்பியதே தவறான ஜாதகம் என்று எப்படிச் சொல்லுவது? ‘ எங்கள் ஜோதிடர் அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று கூறுகிறார்’ என்று உளறி பேச்சை முடித்தேன்!!

மறுபடியும் தொடரும்.. .. .. ..