Saturday 21 March 2020

கொரோனா -ஒரு பார்வை!!!

சைனாவின் ஹுபைய் மாகாணத்திலுள்ள உவான் என்னும் நகரத்து மக்களுக்கு சென்ற வருடம் டிசம்பர் மாத மத்தியில் இனம் புரியாத நுரைஇயீரல் தொற்றுக்கள் உண்டாக ஆரம்பித்தன. அவற்றில் பெரும்பாலான தொற்றுக்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நிமோனியா தொற்றுக்களாக மாற ஆரம்பித்தன.



அன்றிலிருந்து இன்று வரை உலகம் முழுமையும் 2 இலட்சத்து எழுபத்தைந்து பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். 91000க்கும் மேற்பட்டோர் குணமடைந்திருக்கிறார்கள்.

இதில் சீனாவில் மட்டும் 81000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 3240 மரணமெய்திருக்கிறார்கள். 71000க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்திருக்கிறார்கள். சற்று தாமதமாக இந்தியாவில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 234 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அதில் 23 பேர்கள் குணமடைந்திருக்க, 4 பேர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
சீனாவும் இந்த நோய் உலகம் முழுவதும் பரவாமல் தடுக்க பல முயற்சிகள் செய்து வருகிறது. அதற்கு முதல்படியாக ஊஹான் நகரையும் அதில் வாழும் ஒரு கோடி மக்களையும் தனிமைப்படுத்தியிருக்கிறது. உலகத்தில் ஒரு கொள்ளை நோய்க்காக இத்தனை பெரிய தனிமைப்படுத்துதல் நடந்ததில்லை.சீனாவும் உலகத்திடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறது. உலகமும் சீனாவை தனிமைப்படுத்தியிருக்கிறது.

இது முதலில் NOVEL CORONA VAIRUS 2019 என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் SARS coV-2 என்று அழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ் எப்படி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது?

ஆய்வுப்படி, 80 சதவிகிதம் கொரோனா தொற்று, கைகளால் வைரஸ் தொற்றுள்ள பகுதிகளைத்தொடுவதாலேயும் அந்த கிருமி பாதித்த கைகளை வாய், மூக்குபோன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதாலேயும் ஏற்படுகிறது.
20 சதவீதம் கரோனோ தொற்று நேரடியாக மற்றவர்கள்மீது தும்முவதன் மூலமாகவும் இருமுவது மூலமாகவும் பரவுகிறது. இந்த வைரஸ் உயிருடன் இருக்கும் காலம் 30 முதல் 40 டிகிரி வெப்ப நிலையில் கணிசமான அளவு குறைகிறது. அதனால் தான் இந்தியாவிலும் ஆப்பிரிக்க கண்டத்திலும் அதிகமாக பரவாமல் இருக்கிறது.
4 முதல் 8 டிகிரி வெப்ப நிலையில் இந்த வைரஸ் 28 நாட்கள் வரையிலும் கூட வாழும் தன்மையுடனிருக்கிறது.

கொரோனா தொற்றின் அறிகுறிகள்:

அதிகமான காய்ச்சல், தொண்டை வலி, வரட்டு இருமல், மூச்சி விடுவதில் சிரமம், மூச்சுத்திணற‌ல்.
கொரோனா பரவாமல் தடுக்க:
1. கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும்.
2. மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் நம் கைகளை கண்ட இடங்களில் வைக்கக்கூடாது.
3. சளி இருமல் இருப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்.
4. முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், நீரிழிவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஜன சந்தடியுள்ள இடங்களில் புழங்குவதை தவிர்க்க வேண்டும்.
5. வீட்டின் கழிப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
6. வெளியில் எச்சில் துப்புதல் கூடாது.

யாரெல்லாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்?
ஆய்வுகள் படி,9 வயது குழந்தைகள் வரை இந்த வைரஸ் ஒரு மரணம் கூட உண்டாக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம். இதற்கு முன் வந்த சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்கள் கூட குழந்தைகளை விட்டு வைத்திருக்கிறது. ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க, கொரோனாவின் மரணம் உண்டாக்கும் விகிதமும் அதிகரிக்கிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மரணம் உண்டாக்கும் விகிதம் 14.8 சதவிகிதம் இருக்கிறது. சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, புற்று நோய் முதலியவற்றுடன் போராடிக்கொண்டிருப்பவர்களிடம் மரண சதவிகிதம் அதிகரிக்கிறது. இதில் பெண்களை விட ஆண்கள் அதிக தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்.

சில மூட நம்பிக்கைகளும் அதற்கு நேர்மாறான உண்மையும்:

1. நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டால் கொரோனா தாக்காது.

   இது தவறானது.

2. கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும்       ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொள்ளலாமா?

கொரோனா வைரஸை கொல்வதற்கு வைரஸ் கொல்லி மருந்துகள் மட்டுமே பயன்படும். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பாக்டீரியாக்களைக்கொல்பவை. எனவே அவை கொரோனாவை அழிக்காது.

3. வென்னீர் குடித்தால் வைரஸ் தாக்காது. அதில் உப்பு போட்டு வைரஸ் குடித்தால் தாக்காது. மூக்கில் சொட்டு மருந்து விட்டால் கொரோனா வைரஸ் தாக்காது. மவுத் வாஷ் உபயோகித்தால் தொற்று ஏற்படாது. பூண்டு, மஞ்சள், கீழாநெல்லி உபயோகித்தால் தொற்று ஏற்படாது.

இதெல்லாம் உண்மையில்லை.

4. குழந்தைகளுக்கு போடப்படும் நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசி கொரோனா வைரஸ் உருவாக்கும் நிமோனியாவை தடுக்குமா?

தடுக்காது. இப்போதைக்கு கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கிடையாது.

5. கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

கோழிகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள், மீன்கள் மூலம் கொரோனா பரவுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிப்பதால் அசைவம் சாப்பிடுவதில் தவறில்லை. 

தகவல்களுக்கு நன்றி: "மல்லிகை மகள்"

Wednesday 4 March 2020

முகங்கள்-2!!!



வாழ்க்கையில் நிறைய விசித்திரங்களைப்பார்க்கிறோம். சில சமயங்களில் அவற்றின் அர்த்தங்கள் புரிவ‌தேயில்லை. இதுவும் அந்த மாதிரியான ஒரு விசித்திரம்.

35 வருடங்களுக்கு மேலாக எங்களுக்குப்பழக்கமானவர் அவர். அவரின் மனைவியைப்பற்றித்தான் இந்தக்கதை. திருமணம் ஆன போதே எல்லா தரப்பிலும் பிடித்து தான் திருமணம் ஆனது. ஆனால் நாகரீகம் அறியாத, அதிகம் படிக்காத, எதற்கும் குதர்க்கமாக பேசுகிற‌ மனைவியால் இருவருக்குள்ளும் சச்சரவுகள் அதிகமாய் தொடர்ந்தன. இதில் இவரின் அம்மாவும் இந்த மாதிரி மருமகளுடன் நான் இருக்க மாட்டேனென்று அடிக்கடி வாதம் செய்ய பிரச்சினைகள் அதிகமானாலும் இல்லறமும் குடும்ப வாழ்க்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. முக்கிய காரணம் அது கிராமம். விவாக ரத்து என்ற சொல்லுக்கே பயப்பட்ட காலம் அது. அதனால் இந்த இல்லறம் கசப்புகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. வருடங்கள் பறந்தன. அம்மா மறைந்தார். பெண்களுக்கு திருமணமாயின. இவர் மனைவிக்கு சர்க்கரை நோய் வந்தது. அதிக சர்க்கரையினால் உடல் நிலையில் நிறைய பாதிப்புகள். இவர் மனைவியை நன்றாக செலவழித்து கவனித்தார். ஆனாலும் அவர் மனைவி எந்த மாத்திரைகளையும் சாப்பிடாமல் அப்ப‌டியே வைத்திருப்பார். காலையில் 10 மணிக்கு எழுந்து தட்டு நிறைய பழையமுது சாப்பிடுவார். இந்த விஷயத்தில் கணவருடைய சொல்லையோ அல்லது வேறு. யாரும் எதுவும் சொன்னாலும் மதிக்க மாட்டார். மதிய சாப்பாடு மாலை 4 மணிக்குத்தான். நண்பர் அதனால் கிராமத்து டீக்கடை சென்று தன் சாப்பாட்டை பார்த்துக்கொள்வார். இதனால் வீட்டு நிலைமை வெளியில் தெரிந்த அவமானம் வேறு நண்பர் மனதுக்குள் புழுங்குவார். அவர் மனைவிக்கு மாத்திரைகளுடன் இன்சுலினும் கூடியது. அப்படியும் இரத்த சர்க்கரை அளவு 400க்கும் கீழே வரவில்லை. அதனாலெல்லாம் அவர் கவலைப்படவில்லை. நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பேச்சு வார்த்தை குறைந்து ஒரு நாள் நின்றே போனது. 
ஒரு நாள் அவர் மனைவி இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு எல்லோரும் ஓடினார்கள். கல்லீரலில் 4 ஓட்டைகள் என்று சொல்லி மருத்துவமனையில் அதை அடைத்தார்கள். ஒழுங்காக மருந்துகளை உட்கொண்டால் 5 வருடங்கள் உயிருடன் இருக்கலாம் என்ற அறிவுறுத்தலுடன் திரும்ப வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

மறுபடியும் அதே கதை தான். நண்பர் மருந்து மாத்திரைகள் வாங்கிக்குவிப்பதும் வெளியில் சாப்பிடுவதுமாக இருக்க, அவர் மனைவி வழக்கம்போல மருந்துகளை ஒழுங்காக எடுக்காமலும் நேரம் தவறிய சாப்பாடுமாக இருப்பதும் தொடர்ந்தது. அப்படியும் 4 வருடங்கள் எந்த விதப்பிரச்சினையுமில்லாமல் ஓடி விட்டன. நாலரை வருடங்கள் முடிந்த நிலையில் சென்ற மாதம் மறுபடியும் இரத்த வாந்தி எடுத்தார். இந்த முறை மிக அதிகம். நாங்கள் அவர் பிழைக்க மாட்டாரென்றே நினைத்தோம். செய்தி தொலைபேசி மூலம் நண்பர் சொன்னபோது வயிறு கலங்கி விட்டது.

மறுபடியும் அதே மருத்துவர் கல்லீரலில் ஏற்பட்ட 3 ஓட்டைக‌ளை அடைத்தார். இந்த முறை 3 வருடங்கள் பிழைத்திருந்தாலே அதிகம் என்று எச்சரித்தும் சொல்லி விட்டார். 

நண்பரின் மனைவியும் வீட்டுக்கு நலமாக திரும்பி விட்டார். 
கணவனும் மனைவியும் பேச்சு வார்த்தையில்லாமலேயே கணவர் செலவு செய்ய, ம‌னைவி நலமாகி விட்டார். வாழ்க்கையின் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

எத்தனையோ பேர் தங்கள் உடல் நலத்தை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளுகிறார்கள். கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் அன்புடனும் அக்க‌றையுடனும் கவனிக்கிறார்கள்! ஆனாலும் நிறைய பேருக்கு நோய் தணிவதில்லை. மரணங்களும் நிகழ்கின்றன. ஆனால் மருந்துகளும் ஒழுங்காக எடுக்காமல் சரியான உணவுமின்றி, இந்த அளவு பேராபத்திலிருந்து நண்பரின் மனைவி மீண்டது எப்படி? அவர் அதிர்ஷ்டக்காரர் என்று சொல்வதா? அல்லது கொடுத்து வைத்தவர் என்று சொல்லுவதா? இல்லை, அவரின் ஆயுசு கெட்டி என்று சொல்வதா? இதன் பொருள் உண்மையிலேயே  விளங்கவில்லை எனக்கு!