Wednesday 26 May 2021

ருசி!!!!

 இதை எழுத ஆரம்பிக்கும்போது ' கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்' பாடல் நினைவுக்கு வருகிறது. இப்போதெல்லாம் எந்த கல்யாண வீட்டில் சாப்பாடு நன்றாக இருக்கிறது?

சுவை என்பது நாவின் ருசி நரம்புகளுக்குப் புரிவது. அதுவே, அந்த சுவையில் உணவை அளிப்பவர் மனதின் அன்பும் அக்கறையும் தெரிகிறபோது அந்த சுவை பன்மடங்காகத்தெரியும். அதனால் தான் தன் அம்மாவின் கைப்பக்குவத்தை எந்த மகனும் வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை 

சமைப்பவன்  கலைஞன் என்றால் அதை ருசித்து சாப்பிடுபவன் மகா கலைஞன் என்று ஒரு இதழில் படித்தேன். ர்சித்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதை சமைத்தவர்களை மனந்திறந்து பாராட்டும் மனம் எத்தனை பேருக்கு  இருக்கிறது?அதில் மனம் சுருங்கிப்போகும் பெண்களில் ஏராளமானோர் ஏதோ சமைத்தோம் ஏதோ பரிமாறினோம் என்பதைத்தான் தன் வாழ்க்கையில் செய்கிறார்கள்.


மறக்கமுடியாத சுவை கொண்ட உணவுகளை நம் வாழ்நாளில் சில சமயங்களில் பார்த்திருப்போம். ஒவ்வொருத்தருக்கும் அது சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மாறுபடுகிறது. பல வருடங்களுக்கு முன்நான் தாய்மையுற்றிருந்த சமயம் எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, நகரின் மையப்பகுதியில் என் அம்மா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். எட்டாம் மாதம் நடந்து கொண்டிருந்த போது, 1977ம் வருடம் அது, தஞ்சைப்பகுதியில் பலத்த புயல் அடிக்க ஆரம்பித்திருந்தது. மின்சாரமில்லை. ஊரெங்கும் வெள்ளக்காடாக இருந்தது. அந்த வீட்டுக்காரம்மா, என் அம்மா சமையல் செய்யும் வரை காத்திராமல் என்னை அழைத்துச் சென்று அமர வைத்து நிறைய தயிர் ஊற்றி பிசைந்த சாதமும் புளியும் வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்து செய்திருந்த நார்த்தங்காய் ஊறுகாயும் தருவார்கள். அன்போடு அளித்த அந்த தயிர் சாதத்தின் சுவையை என்னால் எப்போதுமே மறக்க முடிந்ததில்லை.

என் புகுந்த வீடான கிராமத்தில் என் மாமியார் பொங்கல் அன்று சர்க்கரை பொங்கலும் வெண் பொங்கலும் காய்கறி குழம்பும் தன் பிள்ளைகளுடன் பெரிய பானைகளில் செய்வார்கள். வெண் பொங்கல் பச்சரிசியும் பசும்பாலும் தேங்காய்த்துருவலும் சிறிது உப்பும் சேர்த்து செய்வார்கள். இரவு அந்த வெண் பொங்கலில் நீர் ஊற்றி வைத்து விடுவார்கள். கிராமம் என்பதால் கட்டித்தயிருக்கு பஞ்சமில்லை. காலையில் அந்த சாதத்தில் பசும்பாலில் உறைய வைக்கப்பட்ட தயிர் கலந்து மீதமிருக்கும் குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது தனி சுகம். 

தஞ்சாவூரில் எங்களுக்கு ஒரு பழைய வீடு இருந்தது. பின்னால் கிணறும் பக்கவாட்டில் முருங்கை, கொய்யா, தென்னை, நெல்லி மரங்களுடன் கீரைப்பாத்திகளுமிருக்கும். கீழ் வீட்டில் வாடகைக்கு விட்டு விட்டு, மேல் வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். ஒரு சமயம் வெளியே போய் விட்டு திரும்பும்போது அவர்களை அழைக்க யாரையும் காணவில்லை. கிணற்றுப்பக்கம் பேச்சுக்குரல் கேட்டதூ. அங்கே சென்று பார்த்தால் கீழே குடியிருந்தவரின் அம்மாவும் அப்பாவும் ஊரிலிருந்து வந்திருந்தார்கள் போலிருக்கிறது, இருவரும் இலை வடாம் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அந்த பெரியவருக்கு 85 வயதிற்கு மேலாம். அவரின் மனைவிக்கு 80 வயதிருக்கும். கணவர் இலை வடாம் மாவை சிறு சிறு தட்டுகளில் வட்டமாக எழுத, அவரின் மனைவி சுறுசுறுப்பாக அவற்றை ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்து தாம்பாளத்தில் பரப்புகிறார். [ பிறகு அவற்றை வெய்யிலில் காய வைக்க வேண்டும்.] என்னைப்பார்த்ததும் எனக்கு ஒரு நாற்காலி போட்டு அமர வைத்து பேசியவாறே தங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் மீது மற்றவர் காட்டிய அக்கறையும் பகிர்ந்து கொண்ட புன்னகைகளும் அவர்களின் சுறுசுறுப்பும் இருவருக்குள்ளும் இருந்த புரிதலும் என்னை கட்டிப்போட்டன. இலை வடாமை அவர்கள் தயாரிப்பதைப்பார்ப்பதை விட அவர்களையே நான் ரசித்துக்கொண்டிருந்தேன். சில நாட்களில் பொரித்த இலை வடாம்கள் எனக்கு கொண்டு வந்து த‌ந்தார்கள். அவை அத்தனை ருசி! 

என் சினேகிதி ஒருவர் மணத்தக்காளிக்கீரையும் சின்ன வெங்காயமும் நிறைய போட்டு நல்லெண்ணையில் அருமையாக ஒரு புளிக்குழம்பு செய்வார். சுடு சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். பொதுவாய் மணத்தக்காளி கீரையில் என் மாமியார் சாறு செய்வார்கள். ரசம் மாதிரி இருக்கும் அது ரொம்பவும் ருசியாக இருக்கும். அதைத்தவிர கூட்டு செய்வேன். ஆனால் புளிக்குழம்பு இந்த மாதிரி செய்ததில்லை. என் சினேகிதியிடம் கற்ற பிறகு அடிக்கடி செய்ததில் அது மிகவும் புகழடைந்து விட்டது. 

என் பாட்டி நாக்கடுகு துவையல் செய்வார்கள். பிரமாதமாக இருக்கும். இப்போது நாக்கடுகு கிடைக்குமா என்பது தெரியவில்லை. 

இப்படியெல்லாம் நம் வாழ்க்கை முழுக்க பல விதமான ருசிகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. சில ருசிகளைத்தந்தவர்கள் காற்றோடு கலந்து விட்டாலும் ருசிகள் மனதில் அப்படியே தேங்கி நின்று விட்டன!


Wednesday 5 May 2021

முத்துக்குவியல்-61!!!

 வணங்க வைக்கும் முத்து:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லட்சுமிக்குட்டி அம்மா என்ற 74 வயதான காணி என்னும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியம் பார்க்கும் மூதாட்டியை வன முத்தச்சி என்று அப்பகுதியினர் செல்லமாக அழைக்கின்றனர். கல்வி கற்பதற்காக 1950களிலேயே மலையை விட்டு இறங்கி வந்திருக்கிறார் இவர். அந்தக் காலத்தில் இதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க அந்தப்பள்ளியில் வசதியில்லாத காரணத்தால் படிப்பை நிறுத்தி விட்டாலும் தன்னைப்படிக்க வைத்த பெற்றோரை இந்த 75 வயதிலும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறார். இயற்கையை நன்றியுடன் நினைத்துப்பார்க்க வலியுறுத்தும் இவர், தினமும் அதிகலையில் எழுந்து தானே தன் குடிசைக்கெதிரே கட்டமைத்திருக்கும்  கோவிலில் தீபமேற்றி வழிபாடு செய்து விட்டு அதிகாலையில் மூலிகைகள் பறித்து வர காட்டினுள் செல்லும் இவர் மூலிகைகளை வணங்கி அதன் பின்னரே பறித்தெடுத்து வருகிறார். " ஒவ்வொரு மூலிகையின் இளந்தண்டுகளின் நரம்புகள் மனிதனின் இரத்த நாளங்களுக்கு இணையானவை. அவைகளிலிருந்து வெளிப்படும் ஆற்றல் தான் நம் உடலுக்குள் பாய்ந்து குணப்படுத்துகிறது. என்னைப்பொறுத்தவரை, ஒவ்வொரு இலையும் மந்திரம். இந்த மூலிகை சிகிச்சை ஒரு தெய்வ வழிபாடு" என்று சொல்லும் இவர் ஒரு இலையைக்கூட அதிகமாகப்பறித்து வீணாக்காமல் தேவைக்கு வேண்டியதை மட்டும் பறிப்பதை ஒரு விரதமாகவே வைத்திருக்கிறார். 


தன் தாயிடம் கற்ற இந்த சிகிச்சை முறைகளை, சின்ன வயதில் பத்து கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குச் சென்ற போது கூடவே துணையாக வந்து பதினாறு வயதில் விரும்பி திருமணம் செய்து கொண்ட தன் கணவர் தான் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார் என்று அன்புடன் நினைவு கூர்கிறார். மூன்று ஆண் குழந்தைகள், குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருந்த போது, இளைய மகன் எதிர்பாராத விதமாக பாம்பு தீண்டி இறந்த போது தான் இனி இந்த துன்பம் இன்னொருவருக்கு நிகழக்கூடாது என்று தான் கற்றிருந்த மூலிகை சிகிச்சையை கையில் எடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை கடந்த 50 வருடங்களாக நானூறு பேர்களை பாம்புக்கடியால் இறக்கும் தருவாயில் இருந்தவர்களை உயிர் பிழைக்க வைத்திருக்கிறார். இன்னொரு மகன் யானை மிதித்து மரணமடைந்தார்.  தற்போது ரயில்வேயில் வேலை செய்து கொண்டிருக்கும் மூத்த மகன் தன்னுடன் வந்து இருக்குமாறு வற்புறுத்தியபோதும் ‘ இந்தக்காட்டில் தான் என் வாழ்வும் பாரம்பரியமும் இருக்கிறது’ என்று சொல்லி அவருடன் செல்ல மறுத்து விட்டார்.

தொடந்து தளராமல் சேவை செய்து வருகிறார். கடந்த 1995ல் லட்சுமி பாட்டியை கேரள அரசு ‘நாட்டு வைத்திய ரத்னம்’ என்ற விருதை அளித்து கவுரவித்தது.  8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் இவர் கல்லார் பகுதியிலுள்ள நாட்டுப்புற கலை பண்பாட்டு மையத்திற்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுப்பது உண்டு. மேலும் திருவனந்தபுரம் நெடுமங்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கலாசார நிகழ்ச்சிகளுக்கு சென்று உரையாற்றுவதும் இந்த லட்சுமி பாட்டியின் வழக்கம். இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது! இவரது கைவசம் 500க்கும் மேற்பட்ட நாட்டு சிகிச்சை முறைகள் உள்ளன. 

இந்த லட்சுமி பாட்டியிடம் அப்படி என்ன விஷயம் இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காகவும், அவரிடமிருந்து வைத்திய முறைகளை அறிந்து கொள்வதற்காகவும் மாணவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர். அனைவரிடமும் தனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை இவர். திருவனந்தபுரம் நகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பொன்முடி செல்லும் வழியில் கல்லார் என்ற இடத்தில் நடுக்காட்டில் தான் இந்த பாட்டியின் குடில். சரியான சாலையே இல்லாத காட்டுக்குள் இருக்கும் தன் குடிசைக்கு வைத்தியத்திற்காக வருபவர்களுக்கு துளசி நீரும் வேக வைத்த காட்டுக்கிழங்குகளும் உணவாகத் தருவது இவர் வழக்கம். தனது மருத்துவத்தை தற்சமயம் முறைப்படுத்தி, ஆவணப்படுத்தும் முயற்சியில் அமிர்த பலா, காட்டு முல்லை என்ற பெயர்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கேரள அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார். தொடர் விருதுகளுக்குப்பின் இவரைத்தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தாலும் இன்னும் தளராமல் இவர் உழைத்து வருகிறார்.இந்த அருமையான பெண்மணியை வணங்கி வாழ்த்துவோம்!  

உயர்ந்த முத்து:

இந்திய கிரிக்கெட் அணியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் டி.நடராஜன். தமிழகத்தின் சேலம் மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்தவர். ஏழ்மை நிலையில் வளர்ந்தவர். 


தந்தை நெசவு வேலையில் தினக்கூலி. தாயார் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்து வந்தார். ஐந்து குழந்தைகளில் மூத்தவரான நடராஜன் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்க ளை வீழ்த்தி புகழ் பெற்றார். யார்க்கர் பந்துவீச்சில் அசத்தி வரும் நடராஜன், டி20 போட்டிகளில் இறுதிகட்ட ஓவர்களில் அசத்தலாக பந்து வீசி வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் என்று கடந்த ஜனவரி அறிவித்திருந்தார். அதன்படி எல்லோருக்கும் கார் பரிசாக சில தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.

இத்தனை ஏழ்மையான சூழ்நிலையிலிருந்து வந்து, புகழ் பெற்றாலும் உடனே வானத்துக்குப் பறக்காமல் தன் மனதில் நன்றியுணர்ச்சியை செயலில் காட்டியிருக்கிறார் நடராஜன்.  தனக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய தார் காரை தனது பயிற்சியாளரும் தன்னை ஊக்கப்படுத்தி வருபவருமான ஜெயப்பிரகாஷுக்கு பரிசளித்து,  நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார் நடராஜன்.

இசை முத்து:

இந்தப்பாடல் கவிஞர் வாலியால் எழுதப்பட்டு இசை ஞானி இளையராஜாவால் இசையமைக்கப்பட்டு, கே.ஜே.ஜேசுதாஸ், திருமதி.கே.எஸ்.சித்ரா இருவராலும் பாடப்பட்டது.. இருவருமே இந்தப்பாடலை போட்டி போட்டுக்கொண்டு பாடியிருப்பார்கள். பாடலின் முதல் பகுதி கர்நாடக தேவகாந்தாரி ராகத்தில் தொடங்கி நடுவில் பாகேஸ்ரீ ராகத்தில் தவழ்ந்து கடைசி பகுதி சுமனேஸரஞ்சனி ராகத்தில் மிதந்து முடியும். கேட்டு ரசியுங்கள். இதில் சுபஸ்ரீ தணிகாசலாம் இந்தப்பாடலின் இனிமையில் மயங்கிப்போய் சொல்கிற மாதிரி, நாமும் "கேட்கலாம், கிறங்கலாம் "! '