Thursday 22 October 2020

முகங்கள்-3!!!!

 

என் கணவரின் நண்பர் அவர். கல்லூரி நண்பர். கல்லூரிக்காலங்களில் சீரான சிந்தனைகள் கொண்டிருந்தார்.  வெடிச்சிரிப்பும் கிண்டல் பேச்சுகளும் சுறுசுறுப்பும் அவரின் கூடப்பிறந்தவை. வங்கி அதிகாரியாக அவருக்கு வேலை கிடைத்தது.. அவரவர் திருமணங்களுக்குப்பிறகு சந்திப்புகள் குறைந்து விட்டன.  அதுவும் வெளிநாட்டில் வாழ்வதால் குறைந்து போன உறவுகளில் அவரின் நட்பும் ஒன்று.

ரொம்ப காலத்துக்குப்பிறகு, சமீபத்தில் என் கணவர் தன் கல்லூரி நண்பர்களையெல்லாம் தேடிப்பிடித்து சந்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர் இருக்குமிடத்தையும் கண்டுபிடித்து அவரின் வீட்டுக்குச் செல்ல முடிவு பண்ணினோம்.

ஒரு வழியாய் தஞ்சைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றபோது கோலூன்றி எங்களை வரவேற்ற அவரைப்பார்த்ததும் ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது. தவறி விழுந்து கால் எலும்பு நொறுங்கி பல முறை அறுவை சிகிச்சைகள் செய்திருந்தார். அவற்றில் தவறுதலான வழிகாட்டுதல்களின் காரணமாக  சில தவறான சிகிச்சைகள் செய்ததால் அவருக்கு பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அவரைப்பார்த்தபோது மனது கனமாகிப்போனது. அவரின் மகன்கள் இருவரும் குடும்பத்துடன் சென்னையில் இருப்பதாயும் தன் மனைவியுடன் தான் தனியாக இருப்பதாயும் சொன்னார்.  எந்த நோய்க்கும் எந்த அறுவை சிகிச்சைக்கும் அவர் இரண்டாவது ஒப்பினியன் எந்த மருத்துவரிடமும் எடுக்கவில்லை என்பது புரிந்தது. அவரை தஞ்சையிலுள்ள எங்கள் உறவினரான அறுவை சிகிச்சை நிபுணரிடம் காட்டி கால்களை பரிசோதிக்க வைத்தோம். என் கணவர் அவருக்கு உடைகள் மாற்றவும் நடக்க வைக்கவும் உதவியபோது கண்கள் கலங்கி விட்டார்.



அப்புறம் தான் எங்களுக்கு ஒரு அத்திர்ச்சியான விஷயம் தெரிந்தது. 20 வருடங்களுக்கு முன் அவர் பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்டு மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டபோது மருத்துவர் அவர் குடும்பத்தினரிடம்
இவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழியிருக்கிறது. ஒரு வீரியம் மிக்க ஊசி போடுவதன் மூலம் இவரின் உயிரைக் காப்பாற்றி விட முடியும். ஆனால் எப்போது வேண்டுமானாலும் இவரின் பார்வை போய் விடும். நீங்கள் சம்மதித்தால் மட்டுமே இந்த ஊசி போட முடியும்.” என்று சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் கூடிப்பேசி, சம்மதித்து அவருக்கு அந்த ஊசி போடப்பட்டு அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.  கடந்த 20 வருடங்களுக்கு அவரின் பார்வை போகவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். கடந்த சில வருடங்களாகத்தான் அவர் பார்வை இலேசாக மங்கத்தொடங்க ஆரம்பித்திருக்கிறது. இதில் அதிர்ச்சியும் ஆச்சரியமுமான விஷயம் ஒன்றே ஒன்று தான். இந்த 20 வருடங்களில் அவரோ அவர் குடும்பத்திலுள்ளவர்களோ இதற்கான எந்த முயற்சியையும் எடுக்க வில்லை! ஒரு கண் மருத்துவரிடம் சென்று இதைப்பற்றி அலசி கண்களைக்காப்பாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என்ற எந்த பிரயத்தனமும் செய்யவில்லை என்பதை நம்பவே முடியவில்லை. இத்தனைக்கும் நன்கு படித்த, அரசியல் செல்வாக்குள்ள குடும்பம்.  இப்போது அவருக்கு இலேசாக பார்வைக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எங்களின் வற்புறுத்தலுக்கு சம்மதித்து என் சகோதரியின் மகளான கண் மருத்துவரிடம் சென்றார். கண் அறுவை சிகிச்சை நிபுணரான அவர் பார்வை குறையத்தொடங்கி விட்டது. இனி பார்வையைத்திரும்பப் பெற முடியாது  என்று ஆழ்ந்த பரிசோதனைக்குப்பின் உறுதியாகச் சொல்லி விட்டார்.  மிகவும் வருத்தமாக இருந்தது எங்களுக்கு.

இப்போது தன் முன்னே அருகில் வந்து நிற்பவர்களை மட்டுமே அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது அவரால்.   எழுபதுகளில் இருக்கும் அவருக்கு சரியாக நடக்க முடியாத நிலையில் இதுவரை இருந்த பார்வையும் முழுமையாக இல்லாது போய் விட்டால், அப்புறம் மீதமிருக்கும் வாழ்க்கையை எப்படி அவரால் மனதளவிலும் உடலளவிலும் சமாளிக்க முடியும் என்பதை நினைக்கையில் மனம் வேதனையில் ஆழ்கிறது.

கண் பார்வை கொஞ்ச நஞ்சம் இருக்கும்போதே எங்கள் இல்லத்துக்கு வர வேண்டுமென்று ஆசைப்பட்டார். நாங்களும் சரியென்றோம். ஆனால் இந்தக் கொரோனாவால் வர இயலாமல் போய் விட்டது. இனி எப்போது பார்க்க நேரிட்டாலும் அப்போது அவரது பார்வை இருக்குமா?

Sunday 4 October 2020

பழைய ஓவியமும் புதிய வாசகமும்!!!

னக்கு ஒரு வாட்ஸ் அப் வந்தது. அறுபதுகளில் வெளி வந்த, கோபுலு, மாயா, ஜெயராஜ் போன்ற‌ பிரபல ஓவியர்கள் வரைந்த அட்டைப்படங்களுக்கு இன்றைய சூழ்நிலையில் அனைவரையும் தாக்கி வரும் கொரோனா வைரஸ் எங்கும் உலவி வரும் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல வாசகங்கள் இணைக்கப்பட்டு வெளி வந்திருக்கும் வாட்ஸ் அப் அது. இங்கே பதிவிடுகிறேன். நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!!