Tuesday 9 March 2021

இது ஒரு அதிசயம்!!!

என் சினேகிதியின் பெண் ஒரு  காணொளியை அனுப்பியிருந்தார். வெறும் காய்கறிகளால் வைத்தியம் செய்யும் முறையைப்பற்றியும் அந்த வைத்தியம் செய்யும் மருத்துவர் பற்றியுமான காணொளி அது. எனக்கு பல ஆச்சரியங்களை அந்த காணொளி கொடுத்தது. கோவையிலும் பெங்களூருவிலும் பல தீவிர நோய்களை, குணப்படுத்த முடியாமல் கைவிட்ட நோயாளிகளை தங்களுடைய காய்கறி வைத்தியத்தை செய்து காப்பாற்றி வரும்  மருத்துவர்கள் இருப்பதை அறிந்தேன். கோவையிலிருக்கும் மருத்துவரைப்பார்ப்பது எனக்கு வசதி என்பதால் அவரைப்பற்றியும் அவர் மருத்துவமனை பற்றியும் நண்பர்களிடம் விசாரித்து தகவல்கள் அனுப்பச் சொன்னேன்.

மருத்துவர் அருண் பிரகாஷ் மொத்தம் 12 நாட்டு காய்கறிகளான புடலங்காய், கத்தரிக்காய், பரங்கிக்காய், கொத்தவரை, எலுமிச்சை, கோவைக்காய், வெண் பூசணி, முருங்கைக்காய், தேங்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளைக்கொண்டு வைத்தியம் செய்கிறார்.


செரிமானத்திற்கு வெண் பூசணி, சிறுநீரக பிரச்சினைகளுக்கு கத்தரிக்காய், நரம்பு மண்டலத்திற்கு கொத்தவரை, வாயு மண்டலத்திற்கு புடலங்காய், தசை மண்டலத்திற்கு பரங்கி, தோல் மண்டலத்திற்கு கோவைக்காய், சுவாச மண்டலத்திற்கு முருங்கை,  நிணநீர் மண்டலத்திற்கு பீர்க்கை,  நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கு எலுமிச்சை,  எலும்பு மண்டலத்திற்கு தேங்காய்,  நாளமுள்ள சுரப்பி மண்டலத்திற்கு வெண்டைக்காய்,  இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வாழைக்காய் என்று நம் உடலுக்கான நல்ல பயன்பாடுகள் இந்த காய்கறிகள் மூலம் கிடைக்கும் என்று சொல்லுகிறார். 

வர மிளகாய், முக்கியமாக பச்சை மிளகாய் உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது தான் இவரது தாரக மந்திரம். எந்த வியாதிக்கு எந்த காய்கறி என்பதை தேர்ந்தெடுத்து அவற்றுடன் வெற்றிலைகளை அரைத்து உப்பு போட்டோ அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்தோ குடிக்கச் சொல்லுகிறார். உணவில் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்றும் பால் சார்ந்த பொருள்கள், பருப்பு வகைகள் இவற்றை தவிர்க்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். எந்த விதமான மருத்துவ ரிப்போர்ட்களையும் இவர் பார்க்க மறுக்கிறார். நோயாளியின் கைகளையும் பாதங்களையும் பார்த்தே தான் மருத்துவம் செய்வதாகக் கூறுகிறார். நேரில் செல்லும் நோயாளிகளுக்கு நாடி பிடித்து பார்ப்பதாக என் சினேகிதி சொன்னார். 

பல நோய்களை சரியாக்கிய காணொளிகளைப் பார்த்தேன். தொண்டையில் புற்று நோய் வந்து மரணத்தருவாயிலிருந்த ஒரு பெண்மணியை வெறும் எலுமிச்சம்பழத்தின் மூலம் உயிர் பிழைக்க வைத்த செய்தியையும் பத்தே மணி நேரத்தில் எந்த வலியுமில்லாமல் சிறுநீரக கற்கள் வெளியே வந்ததாக கூறிய நோயாளியின் கதையையும் தாங்கிய காணொளிகள் கண்டேன். டயாலிஸ் செய்யும் நிலைக்கு வந்த நோயாளிகளின் சிறு நீரகப்பிரச்சினைகளையும் அடிக்கடி சரியாக்கிக்கொண்டுள்ளார்.

 


சர்க்கரை நோய்க்காக‌வும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்காகவும் அவரது மருத்துவ மனைக்கு சில மாதங்களுக்கு முன் அழைத்தேன். வரவேற்பில் இருந்த பெண் நான் சொல்லிய விவரங்களைக் கேட்டு விட்டு மூன்று புகைப்ப‌டங்களை, 1. இரண்டு உள்ள‌ங்கைகளை, 2. பாதங்களை, 3. இடுப்பு வரையிலான நம் தோற்ற‌ம் என்று அனுப்பச் சொல்லியது. கூடவே 650 ரூபாய்க்கு டிராஃப்ட் எடுத்து அனுப்பச் சொன்னது. எல்லாம் கிடைத்ததும் உங்களுக்கு டாக்டர் உங்களிடம் பேசுவது பற்றி தகவல் தருகிறோம் என்று சொன்னது. இந்த முறை வெளி மாநிலத்தில், வெளிநாட்டில் உள்ள‌வர்களுக்கும் பிரயாணம் செய்து நேரில் வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. என் சினேகிதியின் பிரச்சினைக்கு நான் இவரிடம் போகச் சொன்னேன். அவர் கோவையிலுள்ளவர். அவர் 300ரூ fees தந்ததாக கூறினார். 

அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் செய்து அனுப்பியதும் ஒரு தொலைபேசி எண்ணுக்கு மாலையில் அழைக்கச் சொன்னார்கள். அதன்படி மாலையில் அழைத்தேன். மருத்துவர் பொறுமையாக அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்து விட்டு, உங்களுக்கு எப்படி இதற்கு உணவு எடுக்க வேண்டும் என்ற குறிப்புகள் எல்லாம் சிறிது நேரத்தில் வாட்ஸ் அப் மூலம் வரும் என்று சொன்னார்.

அதன்படி சில நிமிடங்களில் நான் எப்படி எப்படி என்னென்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல்கள், என் பதிவு எண் போன்ற விபரங்கள் வந்தன. 

காலையிலும் இரவிலும்  உணவுக்கு முன் 2 கத்தரிக்காய்கள், 2 தக்காளி, 6 வெற்றிலையை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி நாட்டு சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். காலையில் கத்தரிக்காய் சாறுடன் 100 கிராம் தேங்காய்த்துருவல்+ 3 பேரீச்சம்பழங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்ட பின் பசித்தால் ஏதேனும் சாப்பிட்டுக்கொள்ளலாம். 11 மணியளவில் நன்கு ஊற வைத்த கோதுமை 5 மேசைக்கரண்டி நன்கு மென்று உண்ண வேண்டும். இரவில் கூடுதலாக கத்தரிக்காய் சாறுடன் 6 வெண்டைக்காய்கள் பச்சையாக கடித்து சாப்பிட வேண்டும். பால் சார்ந்த பொருள்களான தயிர், வெண்ணெய், சீஸ், பால் பவுடர் மற்றும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றையும் வெங்காயம் பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், மிளகாய்த்தூள் இவற்றையும் நீக்க வேண்டும். அதற்கு பதிலாக முழுத்துவரை, கொள்ளு, முழு பச்சைப்பயறு இவற்றை சேர்த்துக்கொள்லலாம். முன்பே சொல்லியுள்ள‌ மாதிரி எண்ணெய் வகைகளை உபயோகிக்க வேண்டும். 

அதன் படியே உண்ன ஆரம்பித்தேன். தவிர்க்க வேண்டிய பொருள்களை அகற்றி புதியதாக சில குறிப்புகள் கண்டு பிடித்து சாப்பிட முடிந்தது. இல்லையென்றாலும் அரிசியும் கொள்ளும் சேர்த்த பொங்கல், தோசை, இட்லி, சப்பாத்தி, வெங்காயம், பூண்டு இல்லாத கிரேவிகள், சாத வகைகள் என்று உண்ண ஆரம்பித்தேன். 10 நாட்களுக்குப்பிறகு என் சர்க்கரை குறைய ஆரம்பித்தது. 80க்கு கீழ் வெறும் வயிற்றில் சர்க்கரை இறங்கியதும் 2 மாத்திரைகளை நீக்கினேன். அதன் பிறகும் சர்க்கரை 74லேயே இருந்தது. வயிற்றில் பிரச்சினைகள் யாவும் குறைந்தது. வயிற்றுப்பொருமல், செரிமானக்குறைவு, வாயு பிரச்சினை, எல்லம் நீங்கியது. உள்ளங்காலில் வெடிப்புகள் மறைய ஆரம்பித்தன. சர்க்கரை நோய் ஏற்பட்ட பிறகு நெடுங்காலமாய் தொடர்ந்து இரவு நேரங்களில் கால் நரம்புகள் இழுப்பதும் நின்று போனதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. மொத்தத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாய் நெடு நாட்களுக்குப்பின் உணர முடிகிறது. 

பொங்கலுக்குப்பிறகு, கொரோனாவாலும் என் காலில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டதாலும் வெளியிலிருந்து உணவு பல சமயங்களில் வாங்கி உண்ண வேண்டியிருந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதன் பிறகு சர்க்கரை மட்டும் ஏறத்தொடங்கியது. இப்போது மறுபடியும் என்னால் சமைக்க முடிந்த நிலையில் மீண்டும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர 10 நாட்கள் தேவையாக இருந்தன. அதனால் இந்த உணவுக்கட்டுப்பாடுகளை அவசியம் தவறாது கடைபிடிக்க வேண்டியது முக்கியம்.

இந்த வைத்தியத்தில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லையென்பதால் தான் இந்த வைத்தியத்தை தேர்ந்தெடுத்தேன். கூடவே காய்கறிகளின் சத்துக்களும் வேக வைக்காமல் நம்மிடம் முழுமையாக வந்து சேருகிறது. முக்கியமான தேவைகள் நாவிற்கான கட்டுப்பாடுகளும் மனக்கட்டுப்பாடுகளும் தான்! இவை உறுதியாக இருந்தால் நாம் நோயை வென்று விடலாம். 

மருத்துவருக்கு வலைத்தளம் உள்ளது. அதில் அவரது விலாசமும் தொலைபேசி எண்ணும் உள்ளது. கீழே அதன் இணைப்பும் சில காணொளிகளும் இணைத்திருக்கிறேன்.

ஒரு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைத்து  நாள்பட்ட நோய்கள் அளித்து வரும் துன்பங்கள் நிறைய பேருக்கு நீங்கி வாழ்க்கையில் அனைவரும் நலமுடனிருக்க வேண்டுமென்ற எண்ணமே இந்தப்பதிவிற்கு காரணம். முக்கியமாக திரு.தனபாலனுக்கு இந்தப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றே நம்புகிறேன். அனைவரும் என்றும் நலம் பெற வேண்டுகிறேன்

http://www.vegetableclinic.com/

 

 

21 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது
போற்றுதலுக்கு உரிய மருத்துவர்
தகவலுக்கு நன்றி சகோதரியாரே

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்திட்டமைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

அனுபவப்பூர்வமாக எனக்கு ஏற்பட்ட நன்மைகளுக்குப்பிறகே இப்பதிவை எழுதியிருக்கிறேன். சர்க்கரை நோய்க்கும் தீவிரமான நோய்கள் பலவற்றுக்கும் drugs என்றழைக்கப்படும் அதி தீவிர மருந்துகளால் உடலில் பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. எனக்கும் அந்த மாதிரியான பாதிப்புகள் உண்டு. அந்த மாதிரி பக்க விளைவுகள் இல்லாமல் ஒரு வைத்தியம் என்பதை ஒரு வரப்பிரசாதமாகவே நான் கருதுகிறேன்.

துரை செல்வராஜூ said...

பயனுள்ள இச்செய்திகளை மின்னஞ்சல் வழியாக எனக்கும் அளித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக...

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

கோமதி அரசு said...

பயனுள்ள செய்தி .
பக்கவிளைவு இல்லா மருத்துவம் அருமை.
பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

ஆச்சர்யமான, உபயோகமான செய்தி.  நீங்களே இந்த வகை மருத்துவத்தை எடுத்து அனுபவபூர்வமாக பதிவிடுவது சிறப்பு.  குறித்துக் கொள்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பதிவு..விரிவாகப்பகிர்ந்மைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

Geetha Sambasivam said...

என் நண்பர் ஒருவர் இந்தக் காய்கறி வைத்தியத்தினால் சர்க்கரைக் குறைபாட்டில் இருந்து முழுமையாக நலம் பெற்றிருக்கும் செய்தியை அறிவேன். மருத்துவர் இவரா என்பது தெரியாது. இத்தனை விபரங்கள் கொடுத்தமைக்கும் விளக்கமான பதிவுக்கும் நன்றி. இதில் பாதி அளவாவது முயற்சி செய்ய முடியுமா என்பது யோசனைக்கு உரியது. இதுவும் கிட்டத்தட்ட ஒரு பேலியோ உணவு முறை தான். இல்லையா?

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மிக்க நன்றி அம்மா... கொடுத்துள்ள இணைப்பின் மூலம் இடத்தையும், மற்ற விவரங்களையும் அறிந்தேன்... அவர்களை தொடர்பு கொள்கிறேன்... நேரில் சென்று விடலாம் என்றும் உள்ளோம்...

நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்... நன்றி அம்மா... அவ்வப்போது தொடர்பு கொள்கிறேன்...

ராமலக்ஷ்மி said...

இவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். நேரடியாக வைத்தியம் பெறாவிட்டாலும், இவரது குறிப்புகளின் அடிப்படையில் சில காலம் சில காய்களைப் பச்சையாகச் சாப்பிட்டுப் பலனும் பெற்றிருக்கிறேன். தங்கள் பகிர்வு பலருக்கும் பயனாகும்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

நெடு நாள் கழித்து தந்த வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா!
பேலியோ உணவு என்பது முழுமையான கொழுப்புக்கள் சார்ந்த உணவு வகைகளை எடுப்பது. இந்த வைத்தியத்தில் பால் சார்ந்த பொருள்களான நெய், வெண்ணெய், பனீர் கூட தவிர்க்க வேண்டும். அசைவம் சுத்தமாகக்கிடையாது. அனைத்து நன்மைகளும் மொத்தமாக காய்கறிகளிலேயே அடங்கியிருப்பதாக உறுதியுடன் சொல்கிறார் இந்த வைத்தியர்.
இந்த காய்கறி வைத்தியம் சற்று கடுமையானது தான். ஆனால் நோயிலிருந்தும் அதன் வேதனைகளிலிருந்தும் நீங்க முடிகிறதே?

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் தனபாலன்!
நீங்கள் எடுத்த முடிவு தான் சரியானது. நேரில் செல்லும்போது அனைத்து சந்தேகங்களையும் தெளிவாக கேட்டு விடை பெற முடியும். விரைவில் உங்கள் பிரச்சினைகள் முழுமையாக நீங்க வாழ்த்துகிறேன்!!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!
நீங்களும் பச்சை காய்கறிகளை சாப்பிட்டு பலன் பெற்றிருக்கிறீர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
மிக அதிசயமான பதிவு.
கடினமான உணவுப் பத்தியம்.
ஆமாம் காலில் நரம்பு சுருட்டல்,மரத்துப் போதல், எரிச்சல் எல்லாம்
உண்டுதான்.

இவ்வளவு மருந்து எடுத்தும் நலம் பேணப்படவில்லை.
வெரூம் காய்கறிகளினாலயே குணப்படுத்துகிறார் என்றால்
ஆச்சரியமாக இருக்கிறது.
சாதமே சாப்பிடக் கூடாதா? ரொம்பக் கஷ்டமாச்சே அது.
வாழ்க்கை முச்சூடும் கடைப்பிடிக்க வேண்டுமா.

மீண்ட்டும் படிக்கிறேன். மிக மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான செய்தி. கோவையில் இருப்பதால் தெரிந்தவர்களுக்கு தகவல் சொல்கிறேன்.

பயனுள்ள தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள வல்லிசிம்ஹன்!
இனிய கருத்துரைக்கு நன்றி!
மதியத்திற்கு நிச்சயமாக சாதம் சாப்பிடலாம். மிளகாய் போடாத ரசம், வெங்காயம், மிளகாய், பூன்டு இல்லாத சமையல் என்று செய்து சாப்பிடலாம். தயிர் போட்டு சாதம் சாப்பிட முடியாதது மட்டும் தான் கஷ்டம். அதற்கும் மனது பழகி விட்டது. அதைத்தவிர, இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி எல்லாமே சாப்பிடலாம். பருப்பு வகைகளுக்கு பதிலாக கொள்ளு, முழுப்பயிறு, முழுத்துவரை சாப்பிடலாம். உரைப்பிற்கு இஞ்சி, குறுமிளகு சேர்த்துக்கொள்ளச் சொல்லி மருத்துவர் சொன்னார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ ,
மிக நன்றி மா.
கடைப் பிடிக்கப் பார்க்கிறேன். இருக்கும் இடத்தில் கிடைக்கும் காய்கறிகளைப்
பொறுத்து அமையும்.
எல்லோரும் பயன் பெறுவார்கள்.
காணொளிகள் மிக அருமை.

Bhanumathy Venkateswaran said...

என் சினேகிதியின் தாயார் இப்படி காய்கறிகளை சமைக்காமல் சாப்பிட்டு எடை குறைத்தார்.