Wednesday 25 November 2020

சில பாதிப்புகள், சில நிவாரணங்கள்-2 !!!

 அனுபவ ரீதியாக மிகச் சிறிய கை வைத்தியம் நம்மை அசத்தும் அளவிற்கு நமக்கு பலன் தருவதுண்டு. பல வருடங்களாக நாம் அவதியுற்று துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் சில வியாதிகளை, நோய்க்குறைபாடுகளை நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு சிறிய பொருள் சரியாகுவதுண்டு.  அப்படிப்பட்ட சில நிவாரணங்கள, நான் நேரிடையாக பலனடைந்த சில கை வைத்திய முறைகளை அனைவரும் நலம் பெற வேண்டி இங்கே தெரிவிக்கிறேன். 

ப‌ல் வலிக்கு நார்த்தங்காய் உப்பு ஊறுகாய்


பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது. சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இப்படித்தான் நார்த்தங்காயின் பலன் பற்றி எனக்கு முன்பு தெரியும். 

ஒரு சமயம் ஒரு பழைய புத்தக்த்தொகுப்பை [ 30 வருடங்களுக்கு முன் வெளி வந்தது  ]படித்துக்கொண்டிருந்தபோது, அதில் ஒரு சிறிய செய்தி ஈர்த்தது. பல்வலியால் அவதியுற்ற ஒருவர் அப்போது தான் ஒரு கிராமத்தில் தங்கியிருந்ததாகவும் பக்கத்து வீடில் சொன்ன வைத்தியத்தை தான் கடைபிடித்ததில் அப்போது போன பல்வலி அப்புறம் திரும்ப வரவேயில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். பல்வலி வந்தால் எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தில் ஒரு உப்பு நார்த்தங்காய் துண்டை வைத்து சற்று அழுத்தி மேல் பல்லால் அமிழ்த்தி வாயை மூடிக்கொண்டு ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்தால் பல்வலி அப்ப‌டியே குறைந்து விடும் என்றும் இரவு படுக்கப்போகும்போது இது போல செய்து கொண்டு தான் உறங்கியதாகவும் காலை அதை துப்பி விட்டு வெதுவெதுப்பான நீரில் வாய்கொப்பளித்ததும் வலி சுத்தமாக போய் விட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை நான் அப்போது இந்த வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தேன். ஒரு நாள் என் உறவினர் எனக்கு ஃபோன் செய்தார். திடீரென்று கடுமையான பல்வலி வந்ததாகவும் இந்த வைத்தியத்தை கடைபிடித்ததில் வலி பறந்து போய் விட்டது என்றும் கூறி எனக்கு நன்றி தெரிவித்தார். அப்புறம் என் நெருங்கிய உறவுகள், சினேகிதர்கள் அனைவருமே இந்த வைத்திய முறையை உபயோகிக்கிறார்கள். மருத்துவ ரீதியாக நார்த்தங்காய் ஊறுகாயிலுள்ள கசப்பும் உப்பும் பல் வலியை குணமாக்குகிறது.

முழங்கால் வலிக்கு சியா விதைகள்



சினேகிதி சொன்னாரென்று சியா விதைகள் சாப்பிட ஆரம்பித்தேன் சென்ற வருடம். பொதுவாய் சியா விதைகள் பாஸ்பரஸ், கால்ஷியம் போன்ற பல வகை சத்துக்கள் உடையது என்றும் ‌இரத்த அழுத்தத்திற்கு, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு மற்றும் பல நோய்களுக்கு மிக நல்ல பலன் தருமென்றும்  தெரிய வந்ததால் தினமும் அரை ஸ்பூன் எடுத்து கால் கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின் காய்ச்சிய பாலில் ஊற்றி மறுபடியும் கொதிக்க வைத்து குடிக்க ஆரம்பித்தேன். ஒரு மாதங்கழித்து திடீரென்று முழங்காலில் வலி குறைய ஆரம்பித்தது. கால் குடைச்சல், நரம்பு இழுத்தல் போன்ற கால் பிரச்சினைகள் எல்லாமே சரியாகி, 15 வருடங்களாக இரவில் அடிக்கடி ஏற்படும் நரம்பு சுருட்டலும் நின்று போய் விட்டது.எந்த பிரச்சினைகளுமில்லாமல் நடக்க முடிவது மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அப்புறம் முழங்கால் வலி இருப்பவர்களுக்கு இந்த வைத்தியத்தை சொல்ல ஆரம்பித்தேன். எங்கள் வீட்டைக் கட்டிய என்ஜினீயருக்கு சொல்லி அவரின் கால் வலி மிக மிகக் குறைந்து விட்டது என்று அவர் நன்றி சொன்னதும் மகிழ்வாக இருந்தது.

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் இதை எடுக்கக்கூடாது. மிகத்தரமான புரதம் இதில் இருப்பதால் அவை சிறுநீரகத்திற்கு பாதிப்பு உண்டாக்கலாம்.

வயிற்றுப்போக்கிற்கு:



வயிற்றுப்போக்கு அதிகமாகும்போது, ஒரு ஸ்பூன் சீனி, ஒரு ஸ்பூன் உப்பு இரண்டையும் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு மெதுவாக நிற்க ஆரம்பிக்கும். சிறு குழந்தைகளுக்கு இரண்டையும் சிட்டிகை அளவில்  போட்டுத்தர வேண்டும்.

ஏலக்காய் வைத்தியம்:


எப்படி நெஞ்சு வலிக்கு நெஞ்சின் நடுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு அமுக்குவது போன்ற உணர்வு, நெஞ்செரிச்சல், தொண்டையை இறுக்குதல், அடி நெஞ்சில் வலிப்பது போன்ற உணர்வு என்றெல்லாம் ஏற்படுகிறதோ, அதே பிரச்சினைகள் அஜீரணம், வாயுக்கோளாறு, இவற்றிற்கும் ஏற்படும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலிக்கும்.  என் மகனுக்கு திருமணம் ஆன சமயம். நள்ளிரவில் என் மகன் எங்கள் அறைக்கதவைத்தட்டி மருமகள் நெஞ்சு வலியால் துடிப்பதாயும் உடனேயே மருத்துவமனைக்கு கிளம்புமாறும் மிகுந்த பதற்றத்துடன் சொன்னார். நான் மருமகளுக்கு தைரியம் சொல்லி விட்டு, 3 ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று அதன் சாற்றை விழுங்கிக்கொண்டே தயாராகும்படியும் நாங்களும் உடனேயே கிளம்புகிறோம் என்று சொல்லி உடை மாற்றிக்கொண்டு கிளம்பும்போதே என் மருமகளுக்கு நெஞ்சு வலி சட்டென்று நின்றது. நெஞ்செரிச்சல், திணறல் எல்லாமே சரியாகி விட்டது. ஆரோக்கியமான, இளம் பெண்ணுக்கு இதய பிரச்சினை இப்படி திடீரென்று வர வாய்ப்பில்லை என்று நினைத்தது சரியாகி விட்டது. இப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும் என் மருமகள் சென்ற வாரம் கூட இதை நினைவு கூர்ந்து பேசினார்.  இந்த வைத்தியத்தை சொல்லி பலனடைந்தவர்கள் ஏராள்ம். அப்போது கிடைக்கும் மன திருப்திக்கு நிகராக எதுவுமேயில்லை என்று கூட சொல்லலாம். இப்போதும்கூட, வயிறு ஒரு மாதிரியாக சங்கடம் பண்ணினால் 3 ஏலக்காய்களை எடுத்துப்போட்டுக்கொள்வேன். அந்த மாதிரியான அருமையான மருந்து இந்த ஏலக்காய். 


19 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மூன்று ஏலக்காய் வைத்தியம், தாங்கள் ஏற்கனவே பதிவிட்டிருந்தீர்கள்.
அன்று முதல் தினமும் இரவு மூன்று ஏலக்காய் சாப்பிட்டு வருகிறேன்
நெஞ்சு பிரச்சினை ஏதுமின்றி நிம்மதியாகத் தூங்குகிறேன்
நன்றி சகோதரி

மனோ சாமிநாதன் said...

ஏலக்காய் வைத்தியம் தினமும் நீங்கள் செய்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன் சகோதரர் ஜெயக்குமார்! எந்தப்பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாகத் தூங்குவது இரட்டிப்பு சந்தோஷம்! வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சியா விதைகள் பயன்பாடு குறித்து இப்போதுதான் அறிகிறேன். பிறவற்றை அறிவேன். பயனுள்ள பதிவு.

நெல்லைத் தமிழன் said...

பயனுள்ள பதிவு.

பல்வலி வரும்போது உங்கள் வைத்தியத்தை உபயோகித்துப் பார்க்கிறேன் (அதற்குள் உப்பு நார்த்தங்காய் வாங்கி வைக்கணும்).

தூக்கம் வராதவர்களுக்கு, படுக்கப்போகும்போது, தேங்காய் எண்ணை இரு சொட்டுக்களை இரு கால் பாதங்களிலும் கொஞ்சம் தேய்த்துவிட்டுப் படுக்கப்போனால் நல்லா தூக்கம் வரும் என்பதைப் படித்ததிலிருந்து அதனைச் செய்துவருகிறேன் (இது தவிர வேறு நன்மைகளும் உண்டாம்). ரொம்ப உபயோகமாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

உங்களின் இதுபோன்ற குறிப்புகள் எப்போதுமே மிகவும் பயனுள்ளவை.  எனக்கு இப்போதும் பல்வலி இருக்கிறது அவசியம் செய்து பார்க்கிறேன்.  எங்கள் வீட்டில் எப்போதும் உப்பு நார்த்தங்காய் இருக்கும்.  

ஸ்ரீராம். said...

சியா விதைகள் என்றால் என்ன?  எங்கே கிடைக்கும்?  ஏலக்காய் வைத்தியம் நான் வேறு மாதிரி செய்துகொள்வேன்.  கால் டம்ளர் வெதுவெதுப்பான நீரில்  கால் சிட்டிகை மஞ்சள் தூளும், ஒரு ஏலக்காயைப் பொடி செய்து அதையும் கலந்து குடிப்பதுண்டு.

ஸ்ரீராம். said...

//அன்று முதல் தினமும் இரவு மூன்று ஏலக்காய் சாப்பிட்டு வருகிறேன்//

ஏலக்காய் தினமும் சாப்பிடுவதும் தவறு என்றும் சொல்வார்களே...

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள குறிப்புகள்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!

கூடவே தூக்கம் வருவதற்கு நல்ல குறிப்பினையும் தந்ததற்கு மறுபடியும் நன்றி! இது முக்கியமான குறிப்பு. நல்ல தூக்கம் இல்லாமல் எத்தனை பேர் தவிக்கிறார்கள்! எத்தனையோ பேருக்கு இது பயன்படும்!

மனோ சாமிநாதன் said...

பல்வலிக்கு அவசியம் நார்த்தங்காய் ஊறுகாயை உபயோகித்துப்பாருங்கள் சகோதரர் ஸ்ரீராம்!அதன் பலனை உணர்கையில் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

சியா விதைகள் [ CHIA SEEDS ] சப்ஜா விதைகள் போல தோற்றமளிக்கும். நாட்டு மருந்து கடைகளிலும் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும். 100 கிராம் 65 ரூபாயிலிருந்து 100 ரூ வரை விற்கிறார்கள்.

ஏலக்காய் தினமும் சாப்பிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் அது ஒரு மருந்துப்பொருள் என்பதால் தவறில்லை என்று தான் நினைக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களிடம் பேச வேண்டும் அம்மா...

நன்றி...

Geetha Sambasivam said...

சியா விதைகள் பற்றி இப்போது தான் கேள்விப் படுகிறேன். இங்கே கிடைக்கிறதா என்றும் பார்க்கிறேன். மற்றவை அடிக்கடி செய்வது தான். என்றாலும் விரிவான தகவல்களுக்கு நன்றி.

Thulasidharan thilaiakathu said...

ஏலக்காய் வைத்தியம் புதுசு மனோக்கா. சூப்பர் எனக்கு மிகவும் பயனுள்ளது. அதுபோல நார்த்தாங்காய் பல் வலிக்கும் நிவாரணம் என்பதும் புதிது.

வயிற்றுப் போக்கு இது வீட்டில் செய்வதுண்டு

சியா விதைகள் நான் எடுத்துக் கொள்கிறேன். அதன் அந்த வழ வழப்பு ரொம்பப் பிடிக்கும் எனக்கு. அது போல சப்ஜா விதையும்.

கீதா

Anuprem said...

நல்ல குறிப்புகள் மா ...

ஏலக்காய் குறிப்பு குறித்து கொள்கிறேன் ..

சப்ஜா விதைகள் உபயோகித்து இருக்கிறேன்... ஆனால் சியா விதைகள் தேடி பார்க்கிறேன் ...

மனோ சாமிநாதன் said...

விரைவில் பேசுகிறேன் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!

மனோ சாமிநாதன் said...

ஏலக்காய் வைத்தியம் செய்து பாருங்கள் கீதா! அதன் அருமையை உடனேயே உணர்வீர்கள்!நார்த்தங்காய் உப்பு ஊறுகாய் வீட்டு குளிர்சாதனப்பெட்டியில் எப்போதும் இருப்பது நல்லது. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி அனு ப்ரேம்குமார்!!