Thursday 30 March 2017

முருங்கைக்காய் ரசம்!!!

வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு சமயல் குறிப்பு. ஊரெல்லாம் பச்சைப்பசேலென்று அருமையாக முருங்கைக்காய் கிடைக்கிறது. பொதுவாய் முருங்கைக்காயை வாரம் இருமுறை சமைப்பதால் இரத்தத்திற்கும் சிறுநீருக்கும் சக்தி கிடைக்கின்றன. முருங்கைக்காயை ரசமாகவோ அதன் சாற்றை வைத்தோ சமைத்து உண்பது தோல் சம்பந்தமான பிரச்சினைகளையும் நீக்குகிறது என்றும் சொல்கிறார்கள். சதைப்பற்றான ஒரு முருங்கைக்காயை வைத்து ஒரு சமையல்!



மிளகு ரசம், பருப்பு ரசம், தக்காளி ரசம், புதினா ரசம், எலுமிச்சை ரசம் என்று பழைய வகை ரசங்களுக்கு அப்பால் இப்போது வாழைத்தண்டு ரசம், முள்ளங்கி ரசம், கண்டத்திப்பிலி ரசம், முடக்கத்தான் ரசம் என்று பல புதிய வகை ரசங்களையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இப்போது முருங்கைக்காய் ரசம்!




முருங்கைக்காய் ரசம்!

செய்வதற்கான பொருள்கள்:

சதைப்பற்றான ஒரு நீளமான முருங்கைக்காய்
தக்காளிப்பழம் பெரிதாக ஒன்று
சின்ன வெங்காயம் 4
தேங்காய்த்துருவல் ஒரு மேசைக்கரண்டி
பூண்டு 4 பல்
துருவிய இஞ்சி அரை ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் ஒன்று
பொடியாக நறுக்கிய மல்லித்தழை 2 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நெய் 1 ஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
கட்டிப்பெருங்காயம் 1 துண்டு
புளி சிறு எலுமிச்சம்பழ அளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
சாம்பார்ப்பொடி அரை ஸ்பூன்

செய்முறை:

ஒரு சிறு பாத்திரத்தில் துண்டு துண்டாய் அரிந்த முருங்கைக்காயைப்போட்டு துவரம்பருப்பு, மஞ்சள் தூள், தக்காளித்துண்டுகள் சேர்த்து அவை மூழ்க்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசிலுக்கு வேக வைக்கவும்.
ஆறியதும் முருங்கை, தக்காளி, பருப்பை கையால் நன்கு பிசைந்து, முருங்கைக்காய் தோல்களை அப்புறப்படுத்தவும்.
இந்த முருங்கைக்காய், தக்காளி கலவையுடன் மல்லி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
புளியைக்கரைத்து சேர்க்கவும்.
மொத்தம் நாலைந்து தம்ளர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள‌வும்.
தேங்காய், இஞ்சி, பூண்டு, மிளகு, சேரகம், சின்ன வெங்காயம் இவற்றை ஒன்று பாதியாக தட்டி சேர்க்கவும்.
உப்பு சேர்த்து ருசியையையும் உப்பையும் சரி பார்த்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகும் பெருங்காயமும் போட்டு கடுகு வெடித்ததும் ரசத்தைக் கொட்டவும்.
ரசம் நன்கு நுரைத்து வரும்போது சாம்பார்ப்பொடியைத்தூவி மறுபடியும் ஒரு கொதி வரும்போது தீயை அணத்து ரசத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
சுவையான முருங்கைக்காய் ரசம் தயார்!

Thursday 16 March 2017

முத்துக்குவியல்-45!!!

ஆதங்க முத்து:

சென்ற வாரம் பெங்களூரிலிருந்து தஞ்சைக்கு இரவில்      பயணித்தோம். இரவு ஏழு மணிக்கு ரயில் புறப்பட ஆரம்பித்ததும் 10 பேர் அடங்கிய குழு வந்து சேர்ந்தது. அதில் இருவர் எங்களுக்கு மேல் படுக்கையிலும் இன்னும் இருவர் எதிர்ப்படுக்கைகளிலும் மற்றவர்கள் அடுத்தடுத்த பெட்டிகளிலும் அமர்ந்தனர். அதில் வயது முதிர்ந்த ஒருவர் இருந்தார். எல்லோரும் மாற்றி மாற்றி அவரிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரே சப்தம், இரைச்சல், உணவை எடுத்து ஒருத்தர் மாற்றி இன்னொருத்தரிடம் கொடுப்பதுமாக அமைதி என்பது ஒரு சதவிகிதம் கூட அங்கில்லை. அங்கு நான் மட்டும்தான் பெண். நானும் என் கணவரும் ஒரு வழியாக சாப்பிட்டு, படுக்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னதும் மெதுவாக எழுந்து நின்றார்கள். நாங்கள் படுக்கையை விரித்து படுத்ததும் பார்த்தால் எங்கள் காலடியில் சிலர் அமர்ந்து கொண்டு மறுபடியும்



 சுவாரஸ்யமான பேச்சைத் தொடர்ந்தார்கள். நாங்கள் எங்கள் பக்கம் லைட்டை 'ஆஃப்' செய்தால் எதிர்ப்பக்கம் லைட்டைப்போட்டுக்கொண்டு, இரவு 11 மணி வரை இந்தக் கதை தொடர்ந்தது. என் கணவர் உறங்கி விட்டார்கள். என்னால் இந்த சப்தத்தில் உறங்க முடியவில்லை. பாத்ரூம் பக்கம் அடிக்கடி போய் வந்தேன். அப்படியும்கூட ஒரு அடிப்படை நாகரீகமோ, அடுத்தவருடைய அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறோமே என்கிற சிறு குற்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை. 12 மணிக்கு மேல் தான் உறங்க ஆரம்பித்தேன். இரவுப்பயணம் என்பது நெடிய பயணத்தை உறங்கியவாறே கழித்து விடலாமென்பதுடன் உடல் களைப்பையும் குறைத்துக்கொன்டு விடலாமென்று தான் நிறைய பேர் இரவுப்பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள். எத்தனை நோயாளிகள், சிறு குழந்தைகள், சரியாக உறங்க முடியாதவர்கள் கூடவே பயணம் செய்கிறார்கள்! அடிப்படை நாகரீகமோ மனிதாபிமான உணர்வோ இல்லாத இந்த மாதிரி மனிதர்களை என்ன செய்வது?

அசத்திய முத்து:

அபிலாஷா ஒரு மாற்றுத்திறனாளி. சிறு குழந்தையாக ஒரு வயதில் இருந்த போது ஃபிட்ஸ் வந்திருக்கிறது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மருந்தின் அளவை அதிகமாய்க்கொடுத்ததால் இவரது வலது காது கேட்காமல் போய் விட்டது. கேட்க முடியாததால் பேசும் திறனும் போய் விட்டது. நான்கு வயதில் இவருக்கு இவரைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. காது கேட்கும் திறனுக்காக ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டிருக்க மறு பக்கம் ஐந்து வயதில் சென்னையில் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த இவர் மற்ற  ஆசிரியைகளின் கிண்டல்களால் மிகவும் மன பாதிப்பையடைந்தார்.



வேறு பள்ளியில் சேர்த்த பிறகு தான் ஆசிரியைகளின் அன்பாலும் அரவணைப்பாலும் இவருக்கு தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது. மற்ற‌வர்கள் பரதம் ஆடும்போது தரையில் ஏற்படும் அதிர்வை வைத்து, அதை இசையாக மாற்றி இவர் பரதம் கற்றுக்கொண்டார். படிப்பு, ஓவியம், அபாக்ஸ் என இவர் இப்போது சகலகலாவல்லியாக இருக்கிறார். தன்னைப்போலவே பாதிக்கப்பட்டவர்கள் தன்னைப்போல அனைத்தும் சாதிக்க வேண்டுமென்ற உந்துதலில் 'Voice of the Unheard ' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர்கள் தங்கள் குறைகளைப்பற்றிய விழிப்புணர்வை முதலில் அடைய வேண்டூம் என்பது தான் இவரின் முதல் நோக்கம். அதோடு அவர்கள் தங்கள் பாதிப்புகளை எப்படியெல்லாம் சரி செய்யலாம், அதிக குறைகள் இல்லாதவர்கள் அவற்றிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்லுவது, வசதி இல்லாதவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, சமூக வலைத்தளத்தில் இவரின் அமைப்பைப்பற்றிய செய்திகளை வெளியிடுவது, பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கும் கூடப்பிறந்தவர்களுக்கும் கவுன்ஸிலிங் தருவது என்று உற்சாகமாக இருக்கிறார் இவர். வசதியற்றவர்களுக்கு ஸ்பீச் தெரஃபியும் காது கேட்கும் கருவியும் வாங்கித்த‌ர வேண்டும், கிராமங்களிலும் சேவைகள் செய்ய கால் பாதிக்க வேன்டும் என்று இவரின் கனவுகள் விரிகின்றன!

அருமையான முத்து:

அன்பான‌வர்கள் தரும் பழையமுதம்கூட அருமையான, சுவையான விருந்தாகும். அன்பில்லாதவர்கள் தரும் அறுசுவை விருந்து எந்த சுவையும் தருவதில்லை. இந்த அர்த்தத்தைப்பொதிந்து விவேக சிந்தாமணி சொல்லும் இந்தப்பாடலை படித்துப்பாருங்கள்!

விவேக சிந்தாமணி

ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பில்லாக்கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம்
முகம் கடுத்து இடுவார் ஆயின்
கப்பிய பசியினோடு
கடும்பசி ஆகும் தானே

[ கப்பிய பசி=முன்பிருந்த பசி]

அறிய வேண்டிய முத்து:

செம்மை வனம்

எதுவும் செய்யாத வேளாண்மை’ எனப்படும் இயற்கை வேளாண்மையின் களம். தஞ்சாவூரில் இருந்து 35 கிலோ மீட்டரில் செங்கிப்பட்டியை அடுத்த ஆச்சாம்பட்டியில் இருக்கிறது. இங்கு தேக்கு மரத்தில் தொடங்கி, மா, பலா, வாழை, காய்கனிகள் என குதிரைவாலி வரைக்கும் அனைத்து வகையான தாவர வகைகளும், அரியவகை மரங்களும் உண்டு. இயற்கை வேளாண்மையின் விளைநிலமாக மட்டும் இல்லாமல், மரபு மருத்துவம், மரபுத் தொழிற்பயிற்சி என மரபு வாழ்வியலின் ஆசான் பள்ளியாக இருக்கிறது செம்மை வனம்.

தொடர்புகொள்ள

தஞ்சாவூர்:

1961, விவேகானந்தர் தெரு,
ராஜாஜி நகர் விரிவு,
மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் – 613 004.
தொலைபேசி: 04362 – 246774

இசை முத்து:

'சர்க்கர‌ முத்து' என்ற மலையாளத்திரைப்படத்தில் வரும் இந்த பாடலை பார்த்து, கேட்டு ரசியுங்கள்!




Friday 3 March 2017

பேலியோ டயட்-பகுதி-2!!!

நம்முடைய ஒரு நாள் உணவில் 40 கிராம் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளும், மற்றவை முழுவதும் கொழுப்பு சார்ந்த உணவுகளுமாக இருந்தால் உடலானது, க்ளுக்கோஸை கைவிட்டு கொழுப்பை தனது எரிசக்திக்காக எடுத்துக்கொள்ளும். அதே சமயம் 200 கிராம் கார்போஹைட்ரேட்டும் 300 கிராம் கொழுப்பும் இருந்தால், உடலானது க்ளுக்கோஸை மட்டும் எரிசக்தியாக எடுத்துக்கொள்ளும். அதனால் பாக்கியுள்ள கொழுப்பு நமது வயிற்றைச் சுற்றி சேகரமாகிறது. இதுவே தொப்பையாகிறது.

ஆண்டுக்கணக்கில் இது போன்ற உணவே சாப்பிடும்போது அதிக சர்க்கரையானது உடலில் தேங்கத் தேங்க இன்சுலின் உற்பத்தி தடை பட்டு நாம் சர்க்கரை நோயாளியாகிறோம்.

இத்தனை முக்கிய மூலப்பொருளான கொழுப்பை நம் உடல் தானே தயாரித்துக்கொள்ளும் வலிமையைப் பெற்றுள்ளது. நம் உடலில் ஒவ்வொரு செல்லும் கொழுப்பை உற்பத்தி செய்கிறது. இது தவிர நமக்குத் தேவையான கொழுப்பை நம் உடலிலிருந்தும் பெறலாம். கொழுப்பு இல்லையெனில் அட்ரினலின், கார்ட்டிக்கோல், விட்டமின்கள் போன்றவை நம் உடலில் உற்பத்தி ஆகாது. இந்தப்பணிகளுக்கு தினமும் 2000 மி.கி கொழுப்பு தேவைப்படுகிறது. அதை நம் உணவிலிருந்து சேகரிக்க கல்லீரலுக்கு பெரும் சக்தியும் நேரமும் தேவைப்படுகிறது. அதற்கு பதிலாக நாம் கொழுப்பு மிகுந்த உணவையே உண்ணும்போது அதற்குத்தேவையான கொழுப்பு கிடைத்து விடுவதால் கல்லீரலுக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. 
கல்லீரலிலிருந்து உடலெங்குமுள்ள செல்களுக்குத் தேவையான கொழுப்பை LDL [ LOW DENSITY LIPPO PROTEIN ] எனப்படும் கெட்ட கொழுப்பு எடுத்துச் செல்கிறது. செல்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை மீண்டும் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று கழிவுப்பொருளாய் வெளியேற்ற உதவுவது  HDL [ HIGH DENSITY LIPPO PROTEIN] எனப்படும் நல்ல கொழுப்பு. இந்த கெட்ட கொழுப்பு ஒரு புரதம் மட்டுமே. கொழுப்பு நீரில் கலக்காது. அதனால் கொழுப்பை புரதத்தில் ஏற்றி நம் கல்லீரல் உடலின் செல்களுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கிறது. இதனால்தான் நம் ஹார்மோன் உற்பத்தி தடைபெறாது நடைபெறுகிறது.

வெள்ளை அரிசி, மைதா, சர்க்கரை போன்றவைகளாலும் TRANS FAT எனப்படும் செயற்கை கொழுப்புக்களை உண்பதாலும் உள் காயங்கள் உண்டாகின்றன.
 
உதாரணத்திற்கு சமையல் எண்ணையை சாதாரணமாக சமைக்க முடியாது. இதன் அதிக உஷ்ண நிலையை கட்டுப்படுத்தி சமையலுக்கு ஏற்றதாக மாற்ற சூரியகாந்தி, சஃபோலா, நல்லெண்ணெய் போன்றவற்றை ஹைட்ரஜனேற்றம் என்கிற ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. அதாவது இந்த எண்ணெய்களிலுள்ள கொழுப்பில் ஒரு ஹைட்ரஜன் அணுவை செயற்கையாக நுழைக்கும்போது அந்த கொழுப்புகள் திரிந்து
TRANS FAT கொழுப்பாக மாறுகின்றன. அதன் பின் அந்த எண்ணெய்கள் உயர் சூட்டிற்கு சமையலுக்கு ஏற்றதாக மாறி விடுகின்றன. இயற்கை கொழுப்பிற்கு பழக்கப்பட்ட நம் கல்லீரல் செயற்கை கொழுப்பை ஏற்க முடியாமல் இதனால் உள்காயம் அடைகின்றன. இந்தக் காயம் உடல் உறுப்புகள் அனைத்திலும் ஏற்படுகின்றன. முதுகெலும்பில் ஏற்பட்டால் முதுகு வலி உண்டாகிறது. குடலில் ஏற்பட்டால் வயிற்று வலி உண்டாகிறது.



தேங்காய் எண்ணெய், முட்டை போன்ற இயற்கை உணவில் இருக்கும் நிறை கொழுப்பு உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. தாய்ப்பாலில் இருக்கும் லாரிக் அமிலம் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக தேங்காயெண்ணையில் மட்டுமே லாரிக் அமிலம் இருக்கிறது.
பேலியோ டயட் எடுத்துக்கொள்ளும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 2ஸ்பூன் ஃபிளாக் சீட் சாப்பிட்டால் 1.2மி.கி இரும்புச் சத்து கிடைக்கும். தினமும் ஒரு தேங்காய் சாப்பிட்டால் 10 மி.கி இரும்புச்சத்து கிடைக்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவை உண்ணும்போது பால், தயிர் போன்ற கால்சியம் அதிகமான உணவைத் தவிர்க்க வேண்டும். கால்சியம் இரும்பின் அளவைக் குறைத்து விடும். ஹார்மோன்களை அழிக்கும் சோயா பீன்ஸ் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

பேலியோவில் தவிர்க்கவேண்டியவை:

உருளைக்கிழங்கு, பீன்ஸ் (அனைத்து வகைகளும்), சுண்டல், பச்சைப் பட்டாணி - பருப்புவகைகள் அனைத்தும், பயறுவகைகள் அனைத்தும், நிலக்கடலை, சோயா, டோஃபு (சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்கட்டி), மீல்மேக்கர், அவரைக்காய், மரவள்ளி, சர்க்கரைவள்ளி,               பனங்கிழங்கு, பலாக்காய், வாழைக்காய், பழங்கள் அனைத்தும்.

அரிசி. (பொன்னி, கைக்குத்தல், பாஸ்மதி, சுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசி, பாரம்பரிய அரிசி, ஆர்கானிக் அரிசி)
கோதுமை. (குட்டை கோதுமை, நெட்டை கோதுமை, டயாப்ரீ கோதுமை, சப்பாத்தி, ப்ரெட்)
மைதா. (கேக்குகள், பரோட்டாக்கள்)
பேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)
பழங்கள் / ஜூஸ்.
அனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல், டால்டாவில் செய்யப்பட்டது வரை)
தேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுகர் ப்ரீ மாத்திரைகள்
ஓட்ஸ், மேகி,
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.


ரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர், தேங்காய், நல்ல, கடலை , கடுகு , கனோலா, ரைஸ்பார்ன், டால்டா, பாமாயில் எண்ணெய்கள்.
ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும்.
அனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),
அனைத்து வகை பருப்புகள், புளி.
அனைத்துவகை சோயா பொருட்கள்.
காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ்,

பேலியோ டயட் எடுக்கும்போது சேர்க்க வேண்டிய காய்கறிகள்:
பரிந்துரைக்கப்படும் உணவுகள்:


கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்.
பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்.
மஞ்சள் கருவுடன் முட்டைகள்.
கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.
அனைத்துவகை கடல் உணவுகள்.
நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.
அனைத்துவகை கீரைகள்.

அவகேடோ, தக்காளி, வெங்காயம், காரட், ப்ரோக்கலி, குடமிளகாய், பூசணி, சுரைக்காய், புடலை போன்ற நீர் அடங்கியிருக்கும் காய்கறிகள்,காளிபிளவர், முட்டைகோஸ்,   பாகற்காய், பீட்ரூட், தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, அனைத்துவகைக் கீரைகள், முருங்கை, ஆஸ்பாரகஸ், காளான், தேங்காய், எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி,

அசைவத்தில் அனைத்தும் உண்ணலாம். ஓமேகா 3 அடங்கியுள்ள முட்டை நல்லது. எதுவானாலும் எண்ணெயில் வறுத்த உணவை அடியோடு தவிர்க்க வேண்டும். நெய்யில் செய்த ஆம்லெட் சாப்பிடலாம்.

பேலியோ டயட் [ அசைவம்]: 

காலை உணவு: 100 பாதாம் கொட்டைகள். பாதாமை வாணலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு தோலுடன் உண்பது சிறந்தது.

மதிய உணவு: 4 முட்டைகள். முட்டையை மஞ்சள் கருவுடன் உண்ணவேண்டும். ஆம்லெட், ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம். முட்டையுடன் உப்பு, வெங்காயம், தக்காளி போன்றவற்றைச் சேர்க்கலாம்.

மாலைச் சிற்றுண்டி: 1 கோப்பை பால் அருந்த வேண்டும். உடன் கால் கிலோ அளவிலான பேலியோ காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். காய்கறிகளை சாலட் ஆகவும், வாணலியில் நெய் விட்டு வணக்கி எடுத்தும் உண்ணலாம்.

இரவு உணவு: இறைச்சி எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி, வாத்து போன்ற இறைச்சிகளைப் பசி அடங்கும் வரை கணக்கு பார்க்காமல் உண்ணலாம்.
எண்ணெயில் பொறிக்கப்பட்ட இறைச்சியைத் தவிர்க்கவேண்டும். கருவாடு மிதமான அளவுகளில் உண்ணலாம். தினமும் வேண்டாம். துரித உணவகங்களில் கிடைக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.



சைவை பேலியோ டயட்:

காலை அதே உண‌வு தான். மதியம் நிறைய காய்கறிகள் சாலட், வேக வைத்த, நெய்யில் வதக்கிய காய்கறி வகைகள், முக்கியமாக காலிஃபிளவரை நிறைய உண்ணலாம். இரவில் பனீர் உணவுகள். வெண்ணெயில் தக்காளி, வெங்காய, குடமிள‌காய் வதக்கி பனீர் சேர்த்து கறி செய்து ஒரு பெரிய கப் சாப்பிடலாம். கூடவே ஏதேனும் ஒரு காய்கறி சூப் சாப்பிடலாம். கொடுக்கப்பட்டுள்ள காய்கறி வகைகளில் எப்படி வேண்டுமானாலும் தயார் செய்து சாப்பிடலாம்.


இந்த பேலியோ டயட்டில் எடைக் குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி தவிர இதர உடல் பிரச்னைகள், வியாதிகளை (உதா: கிட்னி பிரச்னை) கணக்கில் கொள்ளவில்லை. எனவே அதுபோன்ற நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைகள் இன்றி இந்த டயட்டைப் பின்பற்றவேண்டாம்.

என் மகனுக்கும் இந்த உணவு முறையை நான் வெளிநாட்டில் இருந்த போது பின்பற்றச் சொல்லி அவரும் பின்பற்றுகிறார்.

அவர் காலை உணவாக 50 பாதாம் கொட்டைகளும் [வறுத்தது], ஒரு ஆப்பிளும் எடுக்கிறார். [ ஆப்பிள் பேலியோ டயட்டில் கிடையாது. இருந்தாலும் என் மகன் அதை விரும்பி உண்கிறார்.]

மதியம் காய்கறி சால்ட், கீரை கூட்டு, 2 முட்டைகளில் ஆம்லட், இரவில் சில சமயம் கோழி பொடிமாஸ் அல்லது பனீர், குடமிளகாய், தக்காளி சேர்த்து ஒரு கறியுடன் ஒரு சூப்.

தினமணியில் பிரசுரமான பேலியோ டயட் எடுத்தவரது அனுபவத்துடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

முட்டையுடன் கூடிய சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றி உயர் ரத்த அழுத்தத்தை விரட்டியவர், திருமதி. டாலிபாலா. பெங்களூரில் வசிக்கும் 54 வயது இல்லத்தரசியான இவர், சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றி சுமார் 17 கிலோ வரை எடையைக் குறைத்தது மட்டுமின்றி, பல ஆண்டுகளாக இருந்த உயர் ரத்த அழுத்தப் பிரச்னையிலிருந்தும் மீண்டு வந்துள்ளார். தன் டயட் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

வாழ்க்கையில் இனிமேல் உடல் எடை குறையவே குறையாது என்கிற மனநிலையில் இருந்தேன். கூடவே சில உடல் உபாதைகளும் எனக்கு இருந்தது. வேறு ஒரு டயட்டால் என் எடை ஓரளவு குறைந்தாலும் அதனால் வேறுவிதமான உடல் பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால் அந்த டயட்டைக் கைவிட்டேன். பழைய எடையை மீண்டும் அடைய நேரிட்டது. அப்போதுதான் நானே எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது.

ஃபேஸ்புக்கில் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தின் அறிமுகம் கிடைத்தது. அதில் எடைக்குறைப்பு மற்றும் ஆரோக்கிய உடல்நலன் குறித்து படிக்க நிறைய இருக்கும். நியாண்டர் செல்வன் பரிந்துரைத்த தானியம் தவிர்த்த உணவுமுறை என்னை ஆச்சரியப்படுத்தியது. நிறைய கேள்விகளும் தோன்றின. முக்கியமாக இந்த உணவுமுறை, சைவ உணவுமுறையைப் பின்பற்றுபவர்களுக்குச் சரிப்பட்டு வருமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. உயர் கொழுப்பு உணவு என்று வரும்போது சைவர்களுக்கு அதிகத் தேர்வுகள் இல்லை என்பதால். ஆனாலும் இந்த டயட்டை முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது. உடல் பிரச்னைகளால் இழந்தது ஏராளம் என்பதால் இனி புதிதாக இழக்க எதுவும் இல்லை என்கிற மனோபாவத்துடனும் கூடவே வீட்டினரின் எதிர்ப்புகளுடனும் இந்த டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

முட்டை, பாதாம், பனீர், காய்கறி என்று மிகக் குறைந்த அளவு உணவு வகைகளுடன் என்னுடைய பேலியோ டயட் ஆரம்பமானது. செல்வன் தவிர்க்கச் சொன்னதில் மிக முக்கியமானவை - தானியங்கள், சர்க்கரை, மாவுச்சத்து உணவுகள், ஹோட்டல் உணவுகள், நொறுக்குத் தீனிகள் போன்றவை. இதில் எனக்குச் சர்க்கரையைத் தவிர்ப்பது கடினமாக இருக்கவில்லை. காபிக்குச் சர்க்கரை போட்டுக் குடிப்பதில்லை என்பதால். ஆனால் டீ-க்குச் சர்க்கரை சேர்ப்பேன். அதனால் டீ-யைச் சர்க்கரை இல்லாமல் குடிக்க முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. (ஆனால் அதுவும் இப்போது பழகி விட்டது.) அதேபோல காபி குடிக்கவில்லையென்றால் எனக்குத் தலைவலி வரும். இந்த நிலையெல்லாம் இந்தியாவில்தான். அமெரிக்கா போன பிறகு காபியை விட்டு விட்டேன். தலைவலியும் வரவில்லை.  (காபி குடிக்கவேண்டாம் என செல்வன் அறிவுறுத்தினார். காபியால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதால். பல வருடங்களாக ஒரு நாளைக்கு ஏழெட்டு காபி குடித்துப் பழகியிருந்தாலும் உடல் நலனை முன்னிட்டு காபியை விட்டுவிட்டேன்.)

அரிசியைத் தவிர்ப்பது கஷ்டமாக இருக்கவில்லை. காரணம், வாரம் இரு முறைதான் சாதம் சாப்பிடுவேன். ஆனால், சப்பாத்தி உண்ணாமல் எப்படி இருக்க முடியும்? தினமும் மதியம் ஒன்று அல்லது இரண்டு சப்பாத்தி உண்பது பல வருடப் பழக்கம். முதல் இரண்டு நாள்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. எப்படியோ அதையும் தவிர்த்தபடி பேலியோ டயட்டைத் தொடர்தேன். இதனால் எனக்கு எந்தத் தொல்லையும் ஏற்படவில்லை. தானியம் இல்லாத உணவுமுறை தலைவலியை உண்டாக்கும், வாந்தி வரும், மயக்கம் ஏற்படும் என்றெல்லாம் சிலர் பயமுறுத்தினார்கள். ஆனால், எனக்கு அப்படி எதுவும் ஆகவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பசித்தது. பிறகு அதுவும் பழகிவிட்டது. நிறைய காய்கறிகள், பனீர், பாதாம் எல்லாம் உண்பேன். முதலில் முட்டை சாப்பிடுவதை நிறுத்தியிருந்தேன். பிறகு அதையும் சாப்பிட ஆரம்பித்ததால் பசி ஏற்படும் பிரச்னையும் அகன்றது.

பல வருடங்களாக கேல்லோக்ஸ் (kellogs) தான் எனது காலை உணவு . இல்லாவிட்டால் ஓட்ஸ் (oats). இந்த இரண்டு உணவுகளும் என் எடையைக் குறைக்க உதவும் என்று நம்பியிருந்தேன். பேலியோ டயட்டில் சீரியல் உணவுக்கு (breakfast cereal) இடமில்லை. அதனால் அவற்றையும் தவிர்த்தேன். அமெரிக்காவில் இருந்தபோது உணவகங்களில் உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கே சைவ உணவு என்றாலே வெறும் இலை, தழை நிரம்பிய சாலட்தான் அதிகம் கிடைக்கும் என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

பேலியோ உணவு முறையினால், முதல் வாரத்திலேயே பலன் தெரிய ஆரம்பித்தது. உடல் எடை குறைந்தது. ரத்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக செட் ஆனது. மாத முடிவில் ரத்தப் பரிசோதனை செய்துகொண்டேன். அளவுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இதனால், பல வருடங்களாக எடுத்துக்கொண்டிருந்த கொலஸ்டிரால் குறைப்பு மாத்திரையான ஸ்டாடினை (statin) நிறுத்தினேன்.

முதல் ஏழு மாதங்களில், கிட்டத்தட்ட பத்துகிலோ எடை குறைந்தது. என் வயதுக்கு இந்த முன்னேற்றம் மிக அதிகம்தான். எடை குறைந்ததால் நடப்பது எளிதாகிவிட்டது. ஆறு கிலோமீட்டர் தொடர்ந்து நடக்க முடிகிறது.

இந்த உணவுப் பழக்கத்தால் எனக்கு ஏற்பட்ட நன்மைகளை இங்கே பட்டியலிடுகிறேன். எல்லா நன்மைகளையும் என்னால் ஞாபகம் வைத்துச் சொல்லமுடியாவிட்டாலும், முடிந்ததைச் சொல்கிறேன்:

54 வயதில் சைவ உணவுப் பழக்கம் கொண்ட நான் முட்டை மட்டும் சேர்த்து கொண்டு இந்த டயட்டைப் பின்பற்றியதால் கிடைத்த நன்மைகள்:

1. எடைக் குறைப்பு. 17 கிலோ.

2. முதலில் உயர் ரத்த அழுத்தத்தின் அளவு மூன்று மாத்திரைகளுடன் 140/90 என்றிருந்தது. ஆனால், பேலியோ டயட்டால் மளமளவென 110/70க்குச் சரிந்தது. இன்று வரை இதே அளவுதான். ஒரே ஒரு மாத்திரை மட்டுமே இப்போது எடுத்துக்கொள்கிறேன்.  ‘ரத்த அழுத்தம் இறங்கி நார்மலாக ஆனாலும், சில வருடங்கள் மாத்திரையை நிறுத்தவேண்டாம்’ என மருத்துவர் அறிவுறுத்தியதால் ஒரு மாத்திரையை மட்டும் உட்கொள்கிறேன். பத்து ஆண்டுகளாக மாத்திரை எடுத்து வருவதால், அதை மெதுவாகத்தான் நிறுத்தவேண்டும் என்பது என் மருத்துவரின் பரிந்துரை. ஆனால் என்னுடைய ஃபிரஷர் அளவுகள் நார்மலாகவே உள்ளன.

3. இதயத்துடிப்பு மிக அதிகமாக இருந்ததால் அதற்காகப் பல வருடங்களாக எடுத்துவந்த மாத்திரையையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்திவிட்டேன்.

4. கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும் ஸ்டாட்டின் (Statin) என்கிற மாத்திரையைப் பல வருடங்களாக எடுத்துக் கொண்டிருந்தேன். பேலியோ டயட்டின் தைரியத்தில் அதையும் நானே நிறுத்திவிட்டேன். பிறகு, என் மருத்துவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். ரத்தப் பரிசோதனை அறிக்கையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

5. அடுத்தபடியாக என் தோல் நல்ல பளபளப்பாக மாறியுள்ளது. இது நானாகச் சொல்லவில்லை. நண்பர்களின் கருத்து.

6. முன்பு, நடைப் பயிற்சியில் என்னால் ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடக்கமுடியாது. இப்போது சர்வ சாதாரணமாக ஆறு கிலோமீட்டருக்கு மேல் நடக்கிறேன்.

7. எனக்குக் கொஞ்சம் ஹார்மோன் பிரச்சனை உண்டு. அதன் பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது.

8. உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

9. காலில் தசைப்பிடிப்பு அடிக்கடி வரும். அது சுத்தமாகக் குறைந்துவிட்டது.

10. முதலில் இருந்த பல் வலித் தொந்தரவும் இப்போது குறைந்துவிட்டது. நூறு பாதாம் தினமும் சாப்பிடுகிறேனே!

இப்படிப் பல விதங்களில் எனக்கு நன்மைகள். பேலியோ டயட் என்பது வெறும் டயட்டாக மட்டும் இல்லாமல், என் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டது.


 

இறுதியாக ஒன்று! திரு.நியாண்டர் செல்வன் எழுதிய 'பேலியோ டயட்' என்ற புத்தகத்தைப்படித்த பின் எனக்கு ஏற்பட்ட பாதிப்பினால்தான் இந்த பதிவையே நான் எழுத வந்தேன். அசைவம் தான் உண்ன வேண்டுமென்பதில்லை. 




சைவ பேலியோ டயட்டை பின்பற்றி மாவுப்பொருள்கள் சார்ந்த உணவை நீக்கி  நிறைய காய்கறிகளும் பாதாம், பனீர் உணவுகளும் எடுத்து வந்தாலே போதும், நாம் சர்க்கரையை வெல்ல முடியும் என்பதில் சந்தேகமில்லை! அவரின் இந்தப்புத்தகம் எல்லா புத்தக ஸ்டால்களிலும் கிடைக்கிறது.