Sunday 25 April 2021

கொரோனா நிகழ்வுகள்!!!

கடந்த சில நாட்களாகவே, நடிகர் விவேக் மரணம் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைப்பவர்களை தயங்க வைக்கிறது. ஏகப்பட்ட குழப்பங்கள். இதைப்பற்றி நிறையவே யூ டியூபில் விவாதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் இந்த நிகழ்வுகளினால் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் போக்க பல மருத்துவர்கள் தாமாகவே முன் வந்து விளக்கங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒரு மருத்துவர் மிக‌ நன்றாக விளக்கம் சொல்லியிருக்கிறார். கேட்டுப்பாருங்கள். பலருக்கும் இது பலன் தரக்கூடியதாக இருக்கும்.

 

நானும் இங்கு [ துபாய் ] என் குடும்பத்தினருடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றேன். அன்று காலையிலிருந்து எனக்கு வயிற்றுப்போகு இருந்தது. மருத்துவ மனை சென்ற சமயம் தான் அது நின்றிருந்தது. அதையும் சொன்னதும் எனக்கு மட்டும் அப்போது தடுப்பூசி வேண்டாம் என்று சொல்லி மே முதல் வாரம் தேதி கொடுத்திருக்கிறார்கள்.

பதினைந்து நாட்களுக்கு முன் என் அக்காவிற்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை நடந்தது. அக்கா மகன் தான் அருகிருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அக்கா மருமகள் வீட்டைப் பார்த்துக்கொண்டார். பிரபல மருத்துவமனை அது. மருத்துவமனையில் ஏகப்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்ததால் மற்ற நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்திருந்தது.  

அக்காவை டிஸ்சார்ஜ் செய்த மறுநாள் அக்கா மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. மருமகளுக்கு இருமல். அவர்களை கவனித்த மருத்துவர் இது கொரோனாவாக இருக்காது என்று மருந்துகள் கொடுத்திருக்கிறார். சரியாகாமல் காய்ச்சலும் இருமலும் அதிகமாகவே, இருவரும் தஞ்சையிலுள்ள மெடிகல் கல்லூரியில் டெஸ்ட் செய்ததில் இருவருக்குமே கொரோனா பாஸிடிவ் என்று ரிசல்ட் வந்து விட்டது. இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்குள் அக்கா மகனுக்கு மூச்சுத்திணறல் ஆரம்பித்து விட்டது. அவரை வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் வைத்திருக்கிறார்கள். இரத்த அழுத்தமும் பிராணவாயுவும் கீழே இறங்க ஆரம்பித்து தீவிர சிகிச்சையால் தற்போது சீரான நிலைமையில் இருக்கிறது. இதற்கிடையே, ஒரு குறிப்பிட்ட ஊசி போட்டால் அவருக்கு விரைவாக குணமாகும் என்று மருத்துவர் சொன்னதன் பேரில் அந்த ஊசிக்காக எல்லா இடங்களிலும் அதை வாங்க தீவிர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வரையில் அதில் வெற்றி கிடைக்கவில்லை. இங்கே அந்த ஊசி உள்ளது. மருத்துவரின் கடிதத்துடன் தான் அதை வாங்க வேண்டும். விலை நம் பணத்துக்கு 1 1/4 லட்சம். ஊரில் 35000 விலையுள்ள இந்த ஊசி தற்போதுள்ள நெருக்கடியால் 1 1/2 லட்சமாக உயர்ந்திருக்கிறதாம். நாளை தான் நாங்கள் வாங்கி அனுப்ப வேண்டுமா என்பது தெரியும். முதலில் அந்த மருந்தை வாங்க வேண்டும். அதை எடுத்து செல்பவருக்கு பி.சி.ஆர் டெஸ்ட் பண்ணி நெகடிவ் என்று ரிசல்ட் வர வேண்டும். டிக்கட் உடனேயே கிடைக்க வேண்டும். குறிப்பிட்ட அளவுள்ள டெம்பரேச்சர் உள்ள குளிர்ந்த பையில் தான் அதை பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். 

இந்த நிகழ்வுகளால் கடந்த 15 நாட்களாய் எல்லோருக்குமே மன உளைச்சல் வீட்டில். எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை மட்டும் தான் மிச்சமிருக்கிறது.  

Thursday 8 April 2021

மனிதம்!!!

கருணையும் இரக்கமும் மனிதநேயமும் கிலோ என்ன விலை என்றாகி விட்ட இன்றைய உலகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில் புனிதமான மழைத்துளியைப்போல உண்மையான மனித நேயத்தையும் கருணையையும் தரிசிக்க நேரும்போது உண்மையிலேயே கண்கள் கலங்குகின்றன!! நெஞ்சம் நெகிழுகிறது!! 

அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் இது!

மனித நேயம்-1

சிறுவாணி தண்ணீரில், மிருதுவான இட்லியை தயாரித்து, அடுப்பு தீயின் நடுவே ஆவி பறக்க, பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பவர் கமலாத்தாள் பாட்டி. பல இடங்களில் இட்லியின் விலை 6 முதல் 10 ரூபாய் வரை இருக்க, பாட்டியோ யார் எப்படி விலை வைத்து விற்றாலும் நான் ஒரு ரூபாய்க்குத் தான் இட்லி விற்பேன் என்று இன்று வரை அதை செய்து வருகிறார். கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி. 85 வயதாகும் 


ஊரடங்கால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.100-க்கு விற்றுவந்த பொட்டுக்கடலை மற்றும் உளுந்து இப்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ரூ.150-க்கு விற்கப்பட்ட மிளகாய் இப்போது ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்குதான் இட்லியை விற்று வருகிறார். யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்தி வருகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் தருகிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி இருக்கிறார்.

சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது, மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது, சட்னி அரைக்க மிக்சி கிடையாது, எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான். சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடியற்காலையிலேயே தயார் செய்து விற்று வந்தார். இவரது இந்த கைப்பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் வந்து செல்கிறார்கள். வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் எனத் தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார் கமலாத்தாள்.

ஊரடங்கு உத்தரவால் கமலாத்தாள் பாட்டியும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

கமலாத்தாள் பாட்டியின் இந்த சேவையை அறிந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டினார். அப்போது தான் எல்லோருக்கும் கமலத்தாள் பாட்டி அறிமுகமானார். இந்நிலையில், கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார்.


"நாங்கள் எல்லாம் சோளக்களி, ராகி, கம்பஞ்சோறு போன்ற உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தோம். இதனால்தான் இன்றும் என் உடலில் தெம்பு இருக்கிறது." என்று தான் இந்த வயதிலும் திடமாக உழைக்கும் ரகசியத்தை தெரிவிக்கிறார் கமலாத்தாள் பாட்டி.

மேலும், தற்போதெல்லாம் அனைவரும் அரிசி சோறே அதிகம் சாப்பிடுவதாகவும், அதனாலேயே யாருக்கும் தெம்பு இருப்பதில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்தக்கடையின் தினசரி வாடிக்கையாளர் ராமசாமி கூறுகையில், "இப்பவும் இங்க இட்லி ஒரு ரூபாய்தான். 10 ரூபாய் இருந்தால் வயிறு நிறைய இங்கு சாப்பிடலாம். இன்னிக்கு எங்கிட்ட காசு இல்ல, நாளைக்கு தரேன் என்று சொன்னால்கூட, அவர் ஒன்னும் சொல்லமாட்டார். என் கையில் 500 ரூபாய் இருந்தாலும், நான் இங்கு வந்துதான் சாப்பிடுவேன். காரணம் சுவை. ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைப்பார். அம்மிக்கல்லில்தான் சட்னி அரைப்பார். சாம்பாரும் மிகப் பிரமாதமாக இருக்கும்" என்கிறார்.

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி சேவை புரிந்து வந்த கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளார். அதற்கான ஆவணங்களும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. 


மஹிந்திரா வழங்கியுள்ள நிலத்தில் கமலாத்தாளுக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கி உள்ளது. மக்கள் பசியாற சேவையாற்றும் கமலாத்தாள் அவர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் உதவும் செய்தி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக மனிதர்களுக்கு இந்த ஏழமை நிலையிலும் மிகக்குறைந்த விலையில் பசியாற்றும் இந்த உயர்ந்த பெண்மணியின் மனித நேயம் மிக உயர்ந்தது என்றால் அவருக்கு உதவ முன்வந்துள்ள கருணை உள்ளங்களின் மனித நேயத்திற்கு ஈடு இணை ஏது?