Tuesday 24 December 2019

விடியலுக்கு ஒரு வழி!!!


இதற்கு முந்தைய பதிவில் டாக்டர். கண்ணன் அவர்களைப்பற்றிக்குறிப்பிட்டிருந்தேன். பிரபல இதய மருத்துவராக இருந்தாலும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு அவர் கூறி வரும் அறிவுரைகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். நானும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றாலும் இதுவரை அதைப்பற்றிய பல விழிப்புணர்வு கட்டுரைகள் படித்திருந்தாலும், பல மருத்துவர்களின் ஆலோசனைகளைப்பின்பற்றிக்கொண்டிருந்தாலும் இது வரை இந்த அளவு தெள்ளத் தெளிவாக சர்க்கரை நோய் பற்றி, அதை எப்படி குறைக்கலாம் என்பது பற்றி, அதற்கான உணவு முறைகள் பற்றி, யாருமே சொன்னதில்லை. இவரின் ஆலோசனையைப்பின்பற்றி அதன் படி உணவு முறைகளைக் கையாண்டால் நிச்சயம் சர்க்கரையின் அளவு குறைவதைக் கண்ணால் காண்கிறேன். 



சரிவிகித உணவு உண்ணுவது பற்றியும் தெளிவாக அவர் விளக்கியுள்ளார். நம் உணவில் 50-55 சதவிகிதம் மாவுச்சத்தும் 25-30 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் 20 சதவிகிதம் புரதமும்  இருக்க வேண்டும். நாம் யாருமே இதில் சொல்லப்பட்டிருக்கும் அளவு புரதமோ, கொழுப்போ உட்கொள்வது இல்லை. மாறாக, இதில் சொல்லப்பட்டிருக்கும் அளவு மாவுச்சத்தை இரு மடங்காக சாப்பிடுகிறோம். உதாரணத்துக்கு காலையில் இட்லி, தோசை, மதியம் சாதம், இரவில் மறுபடியும் இட்லி அல்லது சப்பாத்தி. இதனால் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் மாவுச்சத்தை நம் உடலில் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் கொழுப்பாக மாற்றி உடலில் சேர்த்து வைக்கிறது. இன்சுலின் சரியாக சுரக்காவிட்டால், இன்சுலின் குறைபாடு இருந்தால் அதிகப்படியாக உட்கொள்ளும் மாவுச்சத்து அப்படியே எந்த மாறுதலுக்கும் ஆளாகாமல் ரத்தத்தில் அப்படியே தேங்கி நிற்கிறது. இது தான் சர்க்கரை நோயாக மாறுகிறது. 



அதனால் எந்த அளவிற்கு சிறுதானியங்கள், அரிசி வகைகள், கோதுமை, கேழ்வரகு வகைகள் இவற்றைக்குறைத்து, நவதானியங்களுக்கு மாறுகிறோமோ, அந்த அளவிற்கு சர்க்கரை அளவு குறையும் என்பதை வலியுறுத்தும் இவர், அதற்கான உணவு முறைகளையும் ஆலோசனைகளாக வழங்குகிறார்.

அவர் கொழுப்பு வகைகள் பற்றி சொல்லியிருக்கும் கருத்துகள் எல்லோருக்கும் நிச்சயம் பயன்படக்கூடியவை. அதைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.




கொழுப்பு என்றால் என்ன? அதில் நிறைய வகைகள் இருக்கு.
நாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது?
முதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது.இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். 
நம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது?ம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா? இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது ? மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்
அடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL  கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது.

உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.
இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது ?. பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர். 
தேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை.



அடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா? அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா? கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்வது கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை.

கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். ருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது.
கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

இந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்ற கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது.
எப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது   டிரான்ஸ்ஃபேட்.  எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். எந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் ? அனைத்து பேக்கரி உணவுகள்,  கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட  உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.

ஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்? அதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் தாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது.

அடுத்த பதிவில் நான் எந்த மாதிரி உணவு வகைகள் எடுத்துக்கொண்டு வருகின்றேன் என்பதை விரிவாக எழுதுகிறேன்.


Thursday 12 December 2019

இதயத்திலிருந்து!!!


மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்சை அனுபவங்களுடன் பல மேற்படிப்புகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் செய்திருப்பவர். பல‌ விருதுகளைப்பெற்றவர். எளிமையான வாழ்க்கை முறை உடையவர். மதுரை வடமலையான் மருத்துவ மனையில் நாள் முழுதும் சிகிச்சை செய்து வருகிறார். 

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான, அர்த்தமுள்ள மனவியல் சம்பந்தப்பட்ட சிகிச்சையும் செய்து வருகிறார். அது சர்க்கரை நோயாளிகளுக்கான ஆலோசனை. அரிசியையும் கோதுமையுமான கார்போஹைட்ரேட் உணவுகளை மன வலிமையுடன் நிறுத்தினாலே சர்க்கரை நோய் தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அவரைப்பார்க்க வரும் நோயாளிகளுக்கு இது சம்பந்தமான குறிப்புகள் அடங்கிய காகிதங்களையும் தருகிறார். இது தவிர, ' இதயத்திலிருந்து' என்ற பல அனுபவங்களைக்கொண்ட குறிப்புகள் அடங்கிய புதினத்தையும் எழுதியிருக்கிறார்.
இதற்கு அணிந்துரை எழுதியிருக்கும் எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, ' இதைப்படிக்கும்போது உங்கள் கண்களிலிருந்து பொங்கும் கண்ணீர் ஒரு சக்தி வாய்ந்த கிருமிநாசினி. இதயத்தில் மண்டியிருக்கும் அன்பின்மை என்ற கிருமியை அது அடையாளம் தெரியாமல் அழித்து விடும்' என்று சொல்லியிருப்பது இந்த மருத்துவருக்கு ஒரு எழுத்தாளர் சூட்டியிருக்கும் மகுடம் என்று சொல்லத்தோன்றுகிறது.

ஒரு புகழ்பெற்ற மருத்துவர் ஒரு மனிதாபிமானியாக, மழை பெய்தால் உடனே சைக்கிளில் அல்லது நடையில் அந்த மழையை அனுபவித்துக்கொண்டே செல்லும் ரசனையுடையவராக, ' அன்பான மனைவியே ஒரு மனிதனின் நோய் தீர்க்கும் மருந்து ' என்று சொல்லும் அற்புதமான கணவராக, பெருமாளின் பக்தராக பல அவதாரங்களை எடுக்கும் ஒரு மனிதராக இந்த நூலில் காட்சியளிக்கிறார்.
மனித நேயம் என்பது மதங்களுக்கும் மருத்துவத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை பிரார்த்தனை என்ற சிறுகதை அக்கதையிலுள்ள அர்ச்சகருக்குள் மட்டுமல்ல, நமக்குள்ளும் அழுத்தமாக பதிய வைக்கிறது. எந்த உறவினாலும் திருத்த முடியாத ஒரு தவறான பழக்கத்தை ஒரு சிறு குழந்தை தன் செய்கையால் திருத்தியபோது தந்தைக்கு பிரணவ மந்திரம் சொல்லி தகப்பன்சாமியாக ஆன அந்த மகனை நினைத்து சிலிர்த்துப்போகிறார் ' தெய்வ மகன் ' என்ற சிறுகதையில்! ஒரு நோயாளியைக் காப்பாற்ற ஒரு மருத்துவர் எப்படியெல்லாம் பசி மறந்து, தூக்கம் மறந்து போராடுகிறார் என்பதையும் கடைசியில் அத்தனை முயற்சியையும் மீறி அந்த மனிதன் இறக்க நேரிடும்போது அந்த மருத்துவர் அடைகின்ற மனவேதனை எத்தகையது என்பதையும் அவை எதையுமே உணராத மனிதர்கள் அந்த மருத்துவரைப்பற்றி தவறாகப் பேசும்போது ஏற்படும் துயரத்தையும் விவரித்திருப்பதைப்படித்தபோது ஒரு மருத்துவர் எந்த மாதிரி சோதனைகளையெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக நமக்குப்புரிகிறது.  இப்படி ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு அனுபவத்தை சொல்லி நம்மை சில சமயங்களில் தெளிவடைய வைக்கிறது. சில சமயங்களில் மனதை தாக்குகிறது. சில சமயங்களில் நெகிழ வைக்கிறது.
அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.

Tuesday 3 December 2019

முத்துக்குவியல்-54!!!!


தகவல் முத்து:
கண் நீர் அழுத்த நோய்
கிளாக்கோமா என்னும் கண் நீர் அழுத்த நோய் பார்வை நரம்பை பாதிக்கக்கூடியது. பார்வை நரம்பு என்பது கண்களிலிருந்து மூளைக்கு தகவல்களை எடுத்துச் செல்வது. கண்ணில் ஏற்படும் அதிக நீர் அழுத்தம் பார்வை நரம்பை அழுத்தி, பாதித்து முதலில் பக்க பார்வையை குறைத்து விடும். அதன் பிறகும் ஏற்படும் அதிக அழுத்தம் படிப்படியாக பார்வையை குறைத்து விடும்.
பிறந்த குழந்தையிலிருந்து அனைத்து வயதினரையும் தாக்கும் நோய் இது. ஆனால் பலருக்கு இந்த நோயின் அறிகுறிகள் எதுவும் தெரியாது.அதனால் 40 வயதுக்கு மேலுள்ள அனைவருமே கண் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

கண் நீர் அழுத்த நோயால் பார்வை பாதிக்கப்பட்டால் இழந்த பார்வையை மீட்க இயலாது. எனினும் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் எதிர்காலத்தில் பார்வை இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். இதற்கு தொடர்ந்த மருத்துவரின் கண்காணிப்பும் சிகிச்சையும் மிக மிக அவசியம்.
இது பரம்பரையாக தாக்கக்கூடியது. நெருங்கிய உறவில் கிளாக்கோமா பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால் மற்றவர்களும் வருடத்திற்கொரு முறை கிளாக்கோமா பரிசோதனை நல்லதொரு கண் மருத்துவ மனையில் செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் உயர் கண் அழுத்தம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் உயர் இரத்த அழுத்தத்தால் உயர் கண் அழுத்தம் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஆச்சரிய முத்து:
என் மூத்த சகோதரிக்கு 75 வயதாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் அவருக்கு வயிற்று வலி  தொடர்ந்து வந்ததன் காரணமாக பல வித பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு அம்ப்ளிக்கல் ஹெர்னியா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமென்று ஆலோசனை செய்ததில் இதய பரிசோதனைகளில் அவரின் இதயத்தின் வால்வு பகுதியில் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. அதனால் அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து வ‌ரலாமென்று மருத்துவர்கள் சொன்னதில் அவரும் காரமேயில்லாத செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே சாப்பிட்டு வந்தார். ஆனால் உடலினுள்ளே குடல் இருப்பதே தெரியாமல் சுற்றிக்கொண்டு, வலி, வாந்தி என்று சென்ற வாரம் திடீரென்று மிகவும் அவதிப்பட, அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். குடல் வெடித்தும் விடும் அபாயம் இருப்பதால் உடனே அறுவை சிகிச்சை செய்து குடலை ஏற்றி வைத்து தைக்க முடிவு செய்தார்கள். அறுவை சிகிச்சை நடைபெறும் மேடையிலேயே எது வேண்டுமானாலும் நடக்குமென்று சொல்லியே செய்தார்கள். இதய மருத்துவர், மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர்கள் மூவர் அருகிலிருக்க அறுவை சிகிச்சை நடந்தது. இங்கே துபாயில் நாங்களெல்லாம் கதி கலங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் அறுவை சிகிச்சை எந்த வித பிரச்சினையுமின்றி நடந்தேறியது!!! என் சகோதரி உயிர் பிழைத்தார் என்பதையே நம்ப முடியவில்லை! மூன்று வருடங்களாக பயந்து கொண்டிருந்த விஷயம் இது!
புன்னகை முத்து:

என் பேரன் வாங்கிய மெடல்களை தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு என் பேத்தி கொடுத்த போஸ்!



மருத்துவ முத்து:
பூனையால் கண்களில் ஏற்படும் பாதிப்பு:

பூனையின் கழிவில் உள்ள நுண் தொற்றுக் கிருமி TOXOPLASMOSIS GONDII  கண்களை பாதிக்கும். இதன் காரணமாக பார்வைக்குறைவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இந்தக்கிருமி மனிதனின் இரத்தத்தில் கலந்து பின் கண்களை பாதிக்கிறது. எந்த இடத்தில் அழற்சி ஏற்படுகிறதோ அந்த இடத்தைப்பொறுத்து பார்வை இழப்பை குணப்படுத்த முடியும். பாதிப்பு பார்வை நரம்புகளில் இருந்தால் பார்வை இழப்பை சரி செய்ய முடியாது. பார்வை நரம்பை சுற்றியுள்ள இடங்களில் பார்வை இழப்பை குறைக்கலாம்.
இசைக்கும் முத்து:
துன்பங்களிலும் பிரச்சினைகளிலுமிருந்து சிறிது நேரம் நம்மை மறந்து இளைப்பாற நல்ல புத்தகங்களும் இசையும் வேண்டும் என்று சொல்பவர்களில் நானும் ஒருத்தி. ஆனால் வாசிப்பதைக்காட்டிலும் சற்று உயர்ந்த நிலையிலுள்ளது இசை. வாசிக்கும்போது கூட சில சம‌யங்களில் அதிலிருந்து கவனம் சிதறும். ஆனால் நல்ல இசை பிரச்சினைகளில் உழன்று கொண்டிருக்கும்போது கூட நம்மை அதிலிருந்து தன்பால் வசப்படுத்தக்கூடிய சக்தி கொண்டது.
சத்யநாராயணன் ஒரு பிறவி இசைக்கலைஞர். மேற்கத்திய வாத்தியத்தில் ஆறு வயது பாலகனாக இருந்தபோதே மாபெரும் கச்சேரி செய்தவர். 



லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் எலெக்ட்ரானிக் கீபோர்டில் எட்டாவது கிரேடை தேர்ச்சி செய்த இளைஞர்களில் ஒருவர். 1900ற்கும் மேற்பட்ட கச்சேரிகளை உலகமுழுதும் நடத்தியுள்ளார். கலைமாமணி உள்பட பல பட்டங்களைப்பெற்றுள்ள‌ இவர் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, கன்யாகுமரி முதலியவர்களிடம் பாடம் பெற்று இணைந்து வாசித்துள்ளார். பல வாத்தியங்கள் இவரின் கை விரல்களில் உயிர் பெற்று நர்த்தனமாடுகின்றன.


இங்கே ஹம்ஸத்வனி ராகத்தை கலைஞர் சத்யநாராயணன் தன் எலெக்ட்ரானிக் கீபோர்டில் ட்ரம், கிடார், மிருதங்கம், வயலின், கடம் புடை சூழ வாசிப்பதை ரசித்து அனுபவிக்கலாம்!