Tuesday 24 December 2019

விடியலுக்கு ஒரு வழி!!!


இதற்கு முந்தைய பதிவில் டாக்டர். கண்ணன் அவர்களைப்பற்றிக்குறிப்பிட்டிருந்தேன். பிரபல இதய மருத்துவராக இருந்தாலும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு அவர் கூறி வரும் அறிவுரைகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். நானும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றாலும் இதுவரை அதைப்பற்றிய பல விழிப்புணர்வு கட்டுரைகள் படித்திருந்தாலும், பல மருத்துவர்களின் ஆலோசனைகளைப்பின்பற்றிக்கொண்டிருந்தாலும் இது வரை இந்த அளவு தெள்ளத் தெளிவாக சர்க்கரை நோய் பற்றி, அதை எப்படி குறைக்கலாம் என்பது பற்றி, அதற்கான உணவு முறைகள் பற்றி, யாருமே சொன்னதில்லை. இவரின் ஆலோசனையைப்பின்பற்றி அதன் படி உணவு முறைகளைக் கையாண்டால் நிச்சயம் சர்க்கரையின் அளவு குறைவதைக் கண்ணால் காண்கிறேன். 



சரிவிகித உணவு உண்ணுவது பற்றியும் தெளிவாக அவர் விளக்கியுள்ளார். நம் உணவில் 50-55 சதவிகிதம் மாவுச்சத்தும் 25-30 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் 20 சதவிகிதம் புரதமும்  இருக்க வேண்டும். நாம் யாருமே இதில் சொல்லப்பட்டிருக்கும் அளவு புரதமோ, கொழுப்போ உட்கொள்வது இல்லை. மாறாக, இதில் சொல்லப்பட்டிருக்கும் அளவு மாவுச்சத்தை இரு மடங்காக சாப்பிடுகிறோம். உதாரணத்துக்கு காலையில் இட்லி, தோசை, மதியம் சாதம், இரவில் மறுபடியும் இட்லி அல்லது சப்பாத்தி. இதனால் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் மாவுச்சத்தை நம் உடலில் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் கொழுப்பாக மாற்றி உடலில் சேர்த்து வைக்கிறது. இன்சுலின் சரியாக சுரக்காவிட்டால், இன்சுலின் குறைபாடு இருந்தால் அதிகப்படியாக உட்கொள்ளும் மாவுச்சத்து அப்படியே எந்த மாறுதலுக்கும் ஆளாகாமல் ரத்தத்தில் அப்படியே தேங்கி நிற்கிறது. இது தான் சர்க்கரை நோயாக மாறுகிறது. 



அதனால் எந்த அளவிற்கு சிறுதானியங்கள், அரிசி வகைகள், கோதுமை, கேழ்வரகு வகைகள் இவற்றைக்குறைத்து, நவதானியங்களுக்கு மாறுகிறோமோ, அந்த அளவிற்கு சர்க்கரை அளவு குறையும் என்பதை வலியுறுத்தும் இவர், அதற்கான உணவு முறைகளையும் ஆலோசனைகளாக வழங்குகிறார்.

அவர் கொழுப்பு வகைகள் பற்றி சொல்லியிருக்கும் கருத்துகள் எல்லோருக்கும் நிச்சயம் பயன்படக்கூடியவை. அதைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.




கொழுப்பு என்றால் என்ன? அதில் நிறைய வகைகள் இருக்கு.
நாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது?
முதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது.இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். 
நம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது?ம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா? இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது ? மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்
அடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL  கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது.

உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.
இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது ?. பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர். 
தேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை.



அடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா? அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா? கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்வது கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை.

கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். ருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது.
கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

இந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்ற கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது.
எப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது   டிரான்ஸ்ஃபேட்.  எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். எந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் ? அனைத்து பேக்கரி உணவுகள்,  கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட  உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.

ஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்? அதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் தாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது.

அடுத்த பதிவில் நான் எந்த மாதிரி உணவு வகைகள் எடுத்துக்கொண்டு வருகின்றேன் என்பதை விரிவாக எழுதுகிறேன்.


Thursday 12 December 2019

இதயத்திலிருந்து!!!


மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்சை அனுபவங்களுடன் பல மேற்படிப்புகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் செய்திருப்பவர். பல‌ விருதுகளைப்பெற்றவர். எளிமையான வாழ்க்கை முறை உடையவர். மதுரை வடமலையான் மருத்துவ மனையில் நாள் முழுதும் சிகிச்சை செய்து வருகிறார். 

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான, அர்த்தமுள்ள மனவியல் சம்பந்தப்பட்ட சிகிச்சையும் செய்து வருகிறார். அது சர்க்கரை நோயாளிகளுக்கான ஆலோசனை. அரிசியையும் கோதுமையுமான கார்போஹைட்ரேட் உணவுகளை மன வலிமையுடன் நிறுத்தினாலே சர்க்கரை நோய் தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அவரைப்பார்க்க வரும் நோயாளிகளுக்கு இது சம்பந்தமான குறிப்புகள் அடங்கிய காகிதங்களையும் தருகிறார். இது தவிர, ' இதயத்திலிருந்து' என்ற பல அனுபவங்களைக்கொண்ட குறிப்புகள் அடங்கிய புதினத்தையும் எழுதியிருக்கிறார்.
இதற்கு அணிந்துரை எழுதியிருக்கும் எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, ' இதைப்படிக்கும்போது உங்கள் கண்களிலிருந்து பொங்கும் கண்ணீர் ஒரு சக்தி வாய்ந்த கிருமிநாசினி. இதயத்தில் மண்டியிருக்கும் அன்பின்மை என்ற கிருமியை அது அடையாளம் தெரியாமல் அழித்து விடும்' என்று சொல்லியிருப்பது இந்த மருத்துவருக்கு ஒரு எழுத்தாளர் சூட்டியிருக்கும் மகுடம் என்று சொல்லத்தோன்றுகிறது.

ஒரு புகழ்பெற்ற மருத்துவர் ஒரு மனிதாபிமானியாக, மழை பெய்தால் உடனே சைக்கிளில் அல்லது நடையில் அந்த மழையை அனுபவித்துக்கொண்டே செல்லும் ரசனையுடையவராக, ' அன்பான மனைவியே ஒரு மனிதனின் நோய் தீர்க்கும் மருந்து ' என்று சொல்லும் அற்புதமான கணவராக, பெருமாளின் பக்தராக பல அவதாரங்களை எடுக்கும் ஒரு மனிதராக இந்த நூலில் காட்சியளிக்கிறார்.
மனித நேயம் என்பது மதங்களுக்கும் மருத்துவத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை பிரார்த்தனை என்ற சிறுகதை அக்கதையிலுள்ள அர்ச்சகருக்குள் மட்டுமல்ல, நமக்குள்ளும் அழுத்தமாக பதிய வைக்கிறது. எந்த உறவினாலும் திருத்த முடியாத ஒரு தவறான பழக்கத்தை ஒரு சிறு குழந்தை தன் செய்கையால் திருத்தியபோது தந்தைக்கு பிரணவ மந்திரம் சொல்லி தகப்பன்சாமியாக ஆன அந்த மகனை நினைத்து சிலிர்த்துப்போகிறார் ' தெய்வ மகன் ' என்ற சிறுகதையில்! ஒரு நோயாளியைக் காப்பாற்ற ஒரு மருத்துவர் எப்படியெல்லாம் பசி மறந்து, தூக்கம் மறந்து போராடுகிறார் என்பதையும் கடைசியில் அத்தனை முயற்சியையும் மீறி அந்த மனிதன் இறக்க நேரிடும்போது அந்த மருத்துவர் அடைகின்ற மனவேதனை எத்தகையது என்பதையும் அவை எதையுமே உணராத மனிதர்கள் அந்த மருத்துவரைப்பற்றி தவறாகப் பேசும்போது ஏற்படும் துயரத்தையும் விவரித்திருப்பதைப்படித்தபோது ஒரு மருத்துவர் எந்த மாதிரி சோதனைகளையெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக நமக்குப்புரிகிறது.  இப்படி ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு அனுபவத்தை சொல்லி நம்மை சில சமயங்களில் தெளிவடைய வைக்கிறது. சில சமயங்களில் மனதை தாக்குகிறது. சில சமயங்களில் நெகிழ வைக்கிறது.
அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.

Tuesday 3 December 2019

முத்துக்குவியல்-54!!!!


தகவல் முத்து:
கண் நீர் அழுத்த நோய்
கிளாக்கோமா என்னும் கண் நீர் அழுத்த நோய் பார்வை நரம்பை பாதிக்கக்கூடியது. பார்வை நரம்பு என்பது கண்களிலிருந்து மூளைக்கு தகவல்களை எடுத்துச் செல்வது. கண்ணில் ஏற்படும் அதிக நீர் அழுத்தம் பார்வை நரம்பை அழுத்தி, பாதித்து முதலில் பக்க பார்வையை குறைத்து விடும். அதன் பிறகும் ஏற்படும் அதிக அழுத்தம் படிப்படியாக பார்வையை குறைத்து விடும்.
பிறந்த குழந்தையிலிருந்து அனைத்து வயதினரையும் தாக்கும் நோய் இது. ஆனால் பலருக்கு இந்த நோயின் அறிகுறிகள் எதுவும் தெரியாது.அதனால் 40 வயதுக்கு மேலுள்ள அனைவருமே கண் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

கண் நீர் அழுத்த நோயால் பார்வை பாதிக்கப்பட்டால் இழந்த பார்வையை மீட்க இயலாது. எனினும் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் எதிர்காலத்தில் பார்வை இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். இதற்கு தொடர்ந்த மருத்துவரின் கண்காணிப்பும் சிகிச்சையும் மிக மிக அவசியம்.
இது பரம்பரையாக தாக்கக்கூடியது. நெருங்கிய உறவில் கிளாக்கோமா பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால் மற்றவர்களும் வருடத்திற்கொரு முறை கிளாக்கோமா பரிசோதனை நல்லதொரு கண் மருத்துவ மனையில் செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் உயர் கண் அழுத்தம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் உயர் இரத்த அழுத்தத்தால் உயர் கண் அழுத்தம் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஆச்சரிய முத்து:
என் மூத்த சகோதரிக்கு 75 வயதாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் அவருக்கு வயிற்று வலி  தொடர்ந்து வந்ததன் காரணமாக பல வித பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு அம்ப்ளிக்கல் ஹெர்னியா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமென்று ஆலோசனை செய்ததில் இதய பரிசோதனைகளில் அவரின் இதயத்தின் வால்வு பகுதியில் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. அதனால் அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து வ‌ரலாமென்று மருத்துவர்கள் சொன்னதில் அவரும் காரமேயில்லாத செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே சாப்பிட்டு வந்தார். ஆனால் உடலினுள்ளே குடல் இருப்பதே தெரியாமல் சுற்றிக்கொண்டு, வலி, வாந்தி என்று சென்ற வாரம் திடீரென்று மிகவும் அவதிப்பட, அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். குடல் வெடித்தும் விடும் அபாயம் இருப்பதால் உடனே அறுவை சிகிச்சை செய்து குடலை ஏற்றி வைத்து தைக்க முடிவு செய்தார்கள். அறுவை சிகிச்சை நடைபெறும் மேடையிலேயே எது வேண்டுமானாலும் நடக்குமென்று சொல்லியே செய்தார்கள். இதய மருத்துவர், மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர்கள் மூவர் அருகிலிருக்க அறுவை சிகிச்சை நடந்தது. இங்கே துபாயில் நாங்களெல்லாம் கதி கலங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் அறுவை சிகிச்சை எந்த வித பிரச்சினையுமின்றி நடந்தேறியது!!! என் சகோதரி உயிர் பிழைத்தார் என்பதையே நம்ப முடியவில்லை! மூன்று வருடங்களாக பயந்து கொண்டிருந்த விஷயம் இது!
புன்னகை முத்து:

என் பேரன் வாங்கிய மெடல்களை தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு என் பேத்தி கொடுத்த போஸ்!



மருத்துவ முத்து:
பூனையால் கண்களில் ஏற்படும் பாதிப்பு:

பூனையின் கழிவில் உள்ள நுண் தொற்றுக் கிருமி TOXOPLASMOSIS GONDII  கண்களை பாதிக்கும். இதன் காரணமாக பார்வைக்குறைவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இந்தக்கிருமி மனிதனின் இரத்தத்தில் கலந்து பின் கண்களை பாதிக்கிறது. எந்த இடத்தில் அழற்சி ஏற்படுகிறதோ அந்த இடத்தைப்பொறுத்து பார்வை இழப்பை குணப்படுத்த முடியும். பாதிப்பு பார்வை நரம்புகளில் இருந்தால் பார்வை இழப்பை சரி செய்ய முடியாது. பார்வை நரம்பை சுற்றியுள்ள இடங்களில் பார்வை இழப்பை குறைக்கலாம்.
இசைக்கும் முத்து:
துன்பங்களிலும் பிரச்சினைகளிலுமிருந்து சிறிது நேரம் நம்மை மறந்து இளைப்பாற நல்ல புத்தகங்களும் இசையும் வேண்டும் என்று சொல்பவர்களில் நானும் ஒருத்தி. ஆனால் வாசிப்பதைக்காட்டிலும் சற்று உயர்ந்த நிலையிலுள்ளது இசை. வாசிக்கும்போது கூட சில சம‌யங்களில் அதிலிருந்து கவனம் சிதறும். ஆனால் நல்ல இசை பிரச்சினைகளில் உழன்று கொண்டிருக்கும்போது கூட நம்மை அதிலிருந்து தன்பால் வசப்படுத்தக்கூடிய சக்தி கொண்டது.
சத்யநாராயணன் ஒரு பிறவி இசைக்கலைஞர். மேற்கத்திய வாத்தியத்தில் ஆறு வயது பாலகனாக இருந்தபோதே மாபெரும் கச்சேரி செய்தவர். 



லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் எலெக்ட்ரானிக் கீபோர்டில் எட்டாவது கிரேடை தேர்ச்சி செய்த இளைஞர்களில் ஒருவர். 1900ற்கும் மேற்பட்ட கச்சேரிகளை உலகமுழுதும் நடத்தியுள்ளார். கலைமாமணி உள்பட பல பட்டங்களைப்பெற்றுள்ள‌ இவர் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, கன்யாகுமரி முதலியவர்களிடம் பாடம் பெற்று இணைந்து வாசித்துள்ளார். பல வாத்தியங்கள் இவரின் கை விரல்களில் உயிர் பெற்று நர்த்தனமாடுகின்றன.


இங்கே ஹம்ஸத்வனி ராகத்தை கலைஞர் சத்யநாராயணன் தன் எலெக்ட்ரானிக் கீபோர்டில் ட்ரம், கிடார், மிருதங்கம், வயலின், கடம் புடை சூழ வாசிப்பதை ரசித்து அனுபவிக்கலாம்! 

Monday 25 November 2019

பீட்ரூட் பயிறு பொரியல்!!!


பீட்ரூட்டில் அதிக மருத்துவ பயன்கள் இருந்தாலும் மற்ற காய்கறிகள் போல இது அதிகம் சமையலில் பங்கேற்பதில்லை. அதன் அதிக இனிப்பு சுவை தான் காரணமென்று நினைக்கிறேன்.   

பொதுவாய் பீட்ரூட்டில் அல்வா ஜுஸ் முதலியவை மிகவும் பிரபலம்.,  பொரியல் எல்லோரும் செய்வதுண்டு. அது இனிப்பு சுவையானது என்பதால் காரம் கூடுதலாக சேர்த்தால் தான் சுவை அதிகமாகத் தெரியும். இந்த பொரியல் பீட்ரூட்டுடன் வேக வைத்த முழுப்பயறு சேர்த்து செய்வது. செய்முறை கேரள சமையல் முறையைச் சேர்ந்தது. மிகவும் ருசியாக இருக்கும் இந்த பொரியல், ரசம், சாம்பார் இவற்றுக்கு பொருத்தமான பக்கத்துணை!
பீட்ரூட் பயிறு பொரியல்

தேவையானவை:
பெரியதாக பீட்ரூட்-2
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்-அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சில இலைகள்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
முழுப்பயிறு- கால் கப்
அரைக்க:
சின்ன வெங்காயம்- 5, பச்சை மிளகாய்- 3, பூண்டு பற்கள் சிறியது- 4, சீரகம்- அரை ஸ்பூன், தேங்காய்த்துருவல்- ஒரு கை

செய்முறை:
முழுப்பயறை முதல் நாளே ஊறவைத்து மறு நாள் தண்ணீரை வ‌டித்து விட்டு வேறு தண்ணீரால் அது முழுகும் வரை நிரப்பி, போதுமான உப்பு, சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து வேக வைக்கவும். குக்கரில் வேக வைப்பதென்றால் கவனம் தேவை. இரண்டு விசில் போதும். அதிக விசில் என்றால் பயிறு குழைந்து விடும். அல்லது சாதாரணமாகவே வேக வைக்கலாம்.
 அரைக்கக்கொடுத்திருப்பவற்றை மையாக அரைக்காமல் சிதைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அது பொரிந்ததும் உ.பருப்பு, காயம் சேர்த்து கிளறவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். சில தடவைகள் கிளறிய பிறகு சிதைத்து வைத்திருப்பவற்றை சேர்த்து கிளறவும். 5 நிமிடம் குறைந்த தீயில் கிளறி விடவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் பயிறு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

Monday 11 November 2019

முகங்கள்-1 !!

வாழ்க்கையில் சிறு வயது முதல் இன்றைய நாள் வரை பல முகங்களை அவ்வப்போது பார்க்கிறோம். ஒவ்வொருத்தருக்கும் பல முகங்கள் இருப்பது கண்டு திகைக்கிறோம், அதிர்ச்சி அடைகிறோம், பல சமயங்களில் கண்ணீரில் வீழ்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையென்றில்லாமல் அதற்கப்பாற்பட்டு அவ்வப்போது எதிர்பாராமல் தோன்றும் சில முகங்கள் நமக்கு படிப்பினையை கற்றுக்கொடுக்கின்றன. சில முகங்கள் நம்மைத் தெளிவடைய வைக்கின்றன. சில முகங்கள் நம்மை மிகவும் பாதித்து நிறைய சிந்திக்கவும் வைக்கின்றன. அப்படி ஒரு முகத்தை சமீபத்தில் நான் பார்த்தேன்.

சென்ற மாதம் சென்னை ஏர்ப்போர்ட்டுக்கு நாங்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியிலிருந்து கிளம்பிய போது நாங்கள் முதல் நாளே கேட்டிருந்தபடி ஓலா கார் வந்து நின்றது. ஓட்டுனரைப்பார்த்தபோது சற்று தயக்கமாக இருந்தது. விஜய் படத்து வில்லனின் அடியாட்களில் ஒருவன் போல தோற்றம். வாராத சுருட்டை முடி. கழுத்தில், கைகளில் மணிமாலைகள். முரட்டுத்தனமான முகம். சற்று தூரம் வரை காரில் மெளனம் நிலவியது. அருகே உட்கார்ந்திருந்த என் கணவர் கேட்டார்கள், சீட் பெல்ட் போடவில்லையா என்று. அதற்குப்பிறகு அந்த மனிதர் பேசினார் பாருங்கள், அசர வைக்கிற பேச்சு!

" நேற்று பாண்டிச்சேரி போனேன் சார். ஐந்தாறு காலேஜ் பெண்கள் என்னை புக் செய்திருந்தார்கள். பீச் போகச் சொன்னார்கள் சார். அங்கே ஒரே குடியும் கும்மாளமுமாக ஒரே ரகளை! தமிழ்நாட்டுப்பொண்ணுங்க சார்! எல்லாம் சின்ன பொண்ணுங்க சார்! என் கார் சீட் பெல்ட்டையும் உடைத்து விட்டார்கள். எப்படி சார் இப்படி குடித்து, ஆட்டம் போடுகிறார்கள்! ஒரு வீட்டில் கூடவா அம்மாவோ அப்பாவோ ஒழுங்காயில்லை? தட்டிக் கேட்க மாட்டாங்களா சார்! எங்க சார் போகுது நம்ம நாடு?"

என் கணவருக்கும் சரி, எனக்கும் சரி ஒரு நிமிடம் பதில் சொல்லவே முடியவேயில்லை. அவர் பேச்சில் இருந்த சமூக அக்கறை அசர வைத்தது.
மறுபடியும் தொடர்ந்தார் அவர்.

"இப்ப இருக்கிற சின்னப்பொண்ணுங்களையெல்லாம் பார்க்கிறப்போ ரொம்ப கவலையாக இருக்கு சார். எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு சார். அதை படிக்க அனுப்பும்போதே சொல்லிட்டேன். நல்ல படிக்கணும். வேறெ எதிலேயும் கவனம் போகக்கூடாது. உன் கல்யாணம் வரைக்கும் நான் கார் ஓட்டி சாம்பாத்திப்பதே உன்னை கரை சேர்க்கத்தான். அதை மனசில வச்சுக்கிட்டு நீ படின்னு கண்டிச்சு சொல்லிட்டேன்."

நான் கேட்டேன், " அதென்ன கல்யாணம் வரைக்கும் கார் ஓட்டுவது? தங்கச்சி கல்யாணத்துக்கப்புறமும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்க்க வேண்டாமா?" என்று.

அவர் பதிலில்
" அம்மா, நான் காசிமேட்டுக்காரம்மா. மீன் பிடிப்பது தான் என் தொழில். படகோட்டுவது மட்டும் தானம்மா வாழ்க்கை, கனவு. சின்ன வ‌யசிலேயே பன்னிரெண்டு வயசிலேயே அப்பாவும் அம்மாவும் இறந்திட்டாங்க. தங்கச்சி சின்ன குழந்தை. ஒரு சொந்தக்காரன் கூட உதவிக்கு வரவில்லை. அக்கம் பக்கத்துக்காரங்க உதவினாங்க. என் தங்கச்சியை வளர்த்தேன். ஒரு சொந்தக்காரன் கிட்டக்கூட நான் உதவின்னு போய் நிக்கலை. மீன் பிடிச்சுத்தான் வளர்த்தேன். பணம் பத்தலை. அப்பப்போ விஜய், விக்ரம் படங்களில் வேஷம் கட்டுறேன். அப்புறம் இந்தக்காரைப் புடிச்சேன். எப்போ தங்கச்சி கல்யாணம் முடியுதோ, அதற்கப்புறம் நான் படகிலெ ஏறிடுவேன்"

" வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாமே? நல்ல பணம் கிடைக்கும். சீக்கிரம் தங்கச்சிக்கு கல்யாணம் முடிக்கலாம்"

" வெளிநாடெல்லாம் வேண்டாம்மா. எனக்கு என் குப்பம் தாம்மா வாழ்க்கை. சீக்கிரம் கடமையை முடிச்சிட்டு படகேறி கடலில் போகணும். அதாம்மா என் கனவு. தங்கச்சி கூட சொன்னது, நானும் வேலைக்குப்போய் சம்பாதித்தால் உன் கடனையெல்லாம் சீக்கிரம் முடிச்சிடலாம் அண்ணேன்னு சொன்னது. கடனையெல்லாம் முடிச்சிட்டுத்தான் கல்யாணம் என்றால் நீ ஒளவையாராகி தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிட்டேன் அம்மா."

' கவலைப்படாதே, உன் நல்ல மனசுக்கு நீ என்றைக்கும் நல்லாத்தான் இருப்பாய்' என்றேன் காரிலிருந்து இறங்கும்போது.

' எங்கேம்மா, எத்தனை சம்பாதித்தாலும் பணம் கரைந்து போகிறது. எப்படி நன்றாக இருப்பது?



கார் சென்ற பிறகும் மனம் கனத்துக்கொண்டிருந்தது கொஞ்ச நேரம் வரை.

Thursday 24 October 2019

45 வருடங்களுக்கு முன்!

இது நாங்கள் 1975ல் மும்பையை அடுத்த பன்வேல் என்னும் கிராமத்திலிருந்த போது வரைந்தது. கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்!!! திருமணமான புதிது. அங்கு தான் ஹிந்தி, மராத்தி மொழிகள் பழக்கமாயின!

ஹிந்தி திரைப்படங்கள் புரிந்து ரசிக்க ஆரம்பித்த காலம். பக்கத்து வீடு கேரளத்தினர். எதிர் வீடு பீஹாரைச்சேர்ந்த குடும்பம். முன் மதிய நேரங்களில் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய் விடுவார்கள். அவர்கள் வீட்டில் தான் சப்பாத்தி செய்ய கற்றுக்கொண்டேன். தினமும் சப்பாத்தி தானென்பதால் அது அவர்களுக்கு அனாயசமாக செய்ய வரும். நிறைய கோதுமை மாவை ஒரு பெரிய கல்லில் கொட்டி நடுவில் ஒரு பள்ள‌ம் பறித்து உப்பும் தண்ணீரும் ஊற்றி ஒரு நீளமான கட்டையால் அந்த காலத்தில் குளத்தில் குளிக்கும்போது துணிகளை அடித்து துவைப்பது போல அந்த கட்டையால் மாவை அடிப்பார்கள். அந்த மாவு அப்படியே திரண்டு உப்பி வரும். அதில் போடும் சப்பாத்தியோ பூரி போல உப்பி வரும். தொட்டுக்கொள்ள நெத்திலி மீன் கறி செய்வார்கள். அதையும் கற்றுக்கொண்டேன். சமையலில் அங்கே தான் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. சற்று தள்ளி மராத்தி குடும்பம் இருந்தது. அங்கே இனிப்பு சாதம், பேடா என்று கற்றேன். சமையலுக்கு எல்லைகள் ஏது?



இது அப்போது வெளி வந்து கொண்டிருந்த ஃபிலிம் ஃபேர் ஒன்றில் வெளியாகியிருந்த புகைப்படத்தைப்பார்த்து வரைந்தேன். பென்சில் ஓவியம். 

Tuesday 1 October 2019

துபாய் ஃபிரேம்’!!!!



துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரமாண்ட புகைப்பட சட்டம்போல ‘துபாய் பிரேம்’ என்ற கட்டுமானம் உள்ளது. 250 கோடி திர்ஹாம் செலவில் 492 அடி உயரமுள்ள இரண்டு டவர்கள் , 305 அடி அகலமான பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்திலிருந்து ஒரு பக்கம் நவீன துபாயையும் இன்னொரு பக்கம் பழமையான துபாயையும் பார்க்க முடியும். கீழ்த்தளத்தில் ஒரு மியூசியம் உள்ளது. இங்கே பல்லாண்டுகளுக்கு முன்னதான அரேபியரின் வாழ்க்கை முறைகளையும் கலாச்சாரத்தையும் நாம் உணர்ந்து ரசிக்கும்படி வீடியோக்கள், நிழற்படங்கள், பொருள்கள் என்று அனைத்தும் உள்ளன. இவற்றை பார்த்து முடித்ததும் மின் தூக்கி நம்மை உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. வெளியேறுமுன்பு வருங்கால துபாய் எப்படி இருக்கும் என்பதை 3D மூலம் அசத்துகிறார்கள். உண்மையிலேயே மனம் பிரமித்துப்போகிறது. சட்டென்று அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்ட துபாய் பிரேமை ஒரே நேரத்தில் 200 பேர் பார்வையிடலாம். இந்த கட்டிடம் உலகின் மிக பிரம்மாண்டமான கட்டிடம் என்ற கின்னஸ் சாதனையை அடைந்துள்ளது.


தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்பட சட்டத்திற்குள் துபாய் நகரம் உள்ளதுபோல தெரியும். இது இரும்பு தளவாடங்கள் மற்றும் கான்கிரீட் போன்றவற்றால் முப்பரிமாண பிரதியெடுக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது.



பழங்கால அரேபிய வீடு
பழங்கால அரேபியர்களின் பொருள்கள்


மேற்புறத்தில் தங்கநிற உலோக தகடுகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் உட்புறம் மற்றும் மேற்புறம் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட கண்ணாடிகளால் சூழப்பட்ட நடைமேடையும், இருபுறங்களில் ‘லிப்ட்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.



old dubai
new dubai
RULER OF DUBAI
RULER OF ABU DHABI AND THE PRESIDENT OF UAE
உட்புறத்தில்!!





இதன் உச்சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை ரசிக்க முடியும். பெரியவர்களுக்கு 50 திரஹம்ஸ் என்றும் 3லிருந்து 12 வயது குழந்தைகளுக்கு 20 திரஹம்ஸ் என்றும் நுழைவுச்சீட்டு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்குத்துணையாக வருபவர்களுக்கும் நுழைவு சீட்டு இலவசம்.

Saturday 21 September 2019

குன்றின் மேலிட்ட விளக்கு!!!


திருமதி. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பற்றி ஒரு பதிவு. நிறைய பேருக்கு இவரைப்பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக சில விபரங்கள். சிறந்த மனித நேயமுள்ளவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் முதுகலைப்பட்டங்கள், முனைவர் பட்டங்கள் பெற்று கோவையிலிருக்கும் கல்லூரி ஒன்றில் விரிவிரையாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு என்பது அவரது வேலைக்கு, வயதையொட்டிய காரணமாக ஏற்பட்டதே தவிர அவருடைய மனதுக்கும் மேன்மையான சிந்தனைகளுக்குமல்ல. அருமையான கருத்துக்களுடனும் உயர்ந்த சிந்தனைகளுடனும் தெளிவுடனும் அழகிய தமிழில் இவர் பேசும்போது இவரின் நாவன்மை நம் உடலை மட்டுமல்ல, மனதையும் சிலிர்க்க வைக்கிறது.
குன்றின் மேலிட்ட விளக்காய் திகழ்கிறார் இவர்! இந்த தீபத்தின் சுடர்கள்  தன்னைச் சுற்றியுள்ள அத்தனையையும் அத்தனை மனங்களையும் பிரகாசிக்க வைக்கிறது!



அவரின் சொற்பொழிவுகளிலிருந்து சில முத்துக்களை இங்கே மாலையாக கோர்த்திருக்கிறேன்.
ஆண்மை அழகைச் சார்ந்தது, பெண்மை என்பது வீரத்தைச் சார்ந்தது என்று நீங்கள் சொல்வது சரியா என்று ஒருவர் கேட்க அழகான பதில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனிடமிருந்து வந்தது. பெண் முறத்தால் அடித்து புலியை விரட்டவில்லை. மன உரத்தால் விரட்டினாள். “அழகிய தோகையை விரித்தாடுவது மயில். பிடரி மிகுந்த அழகிய சிங்கம் ஆண். ஆனால் எல்லைக்காளி வீரம் மிகுந்தவள். உடல் உறுதி அப்பாவிடம் இருக்கலாம். ஆனால் மன உறுதி அம்மாவிடம் தான் இருக்கிறது. வரம் கொடுப்பது ஆண் தெய்வம், வதம் செய்வது பெண் தெய்வமாகத்தான் எப்போதும் இருக்கிறது.”     
14 வயதிலிருந்து 17 வயது வரையுள்ள குழந்தைகள் குழந்தைகளாக இருப்பது மிகவும் கடினமானது. எனக்குக் கிடைக்காததெல்லம் என் குழந்தைக்கு கிடைக்கணும் என்று சொல்லும் பெற்றோர், எனக்கு எத்தனை நல்ல விஷயங்கள் கிடைத்தது, அதெல்லாம் என் குழந்தைக்கு கிடைக்கணும் என்று சொல்லாதது ஏன்? கூட்டுக்குடும்பத்தில் இருந்த போது பகிர்ந்துண்ண கற்றுக்கொண்டோம். பொறுமை கற்றோம்.ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள‌ கற்றோம். தோல்வியைக்கற்றோம். இவற்றை நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டாமா? நாம் பட்ட கஷ்டம் என் குழந்தை படக்கூடாது என்பது சரி. ஆனால் என் குழந்தை கஷ்டமே படக்கூடாது என்பது சரியா? '
எங்க காலத்தில் எப்ப‌டி இருந்தது தெரியுமா என்று சொல்லும் பெற்றோர் 2019ல் 14, 15, 16, 17 வயது குழந்தைகள் அவர்களுடைய‌ குழந்தைத்தனத்தை என்றைக்கோ தொலைத்து விட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்தக்குழந்தைகள் கண்டிப்பாக மொபைல் ஃபோன் கண்டு பிடிக்கவில்லை. மோசமான , கூச்சப்படக்கூடிய படங்களையோ, பாடல்களையோ உருவாக்கியவர்கள் அல்ல.  இவற்றையெல்லாம் உருவாக்கியது 40, 45 வயதிற்கு மேலுள்ளவ‌ர்கள் தான். பசி என்று நம்மிடம் கையேந்தும் குழந்தைக்ளுக்கு வெறும் குப்பையைத் தருகின்றவர்கள் இவர்கள். எங்களுக்கு முன்னால் சென்ற சமுதாயம் இப்படியெல்லாம் பண்ணவில்லை. அவர்கள் எல்லாம் சமுதாயத்திற்கு கல்வி வேண்டுமென்று பாடுபட்டார்கள்.மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று போராடினார்கள். காமராஜர், பாரதி, பாரதிதாசன், அப்துல் கலாம் எல்லோரும் மூத்த தலைமுறை எப்ப்டி இருக்க வேன்டுமோ அப்படி வாழ்ந்து விட்டு போனார்கள்.”
குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் தெரியுமா! ஒரு பக்கம் ஆசிரியரும் இன்னொரு பக்கம் பெற்றோரும் நின்று குழந்தையை பாதுகாக்க வேன்டும். விளக்கு சாதாரணமாகவே எரியும். ஆனால் ஊழிக்காற்றில் அது எரிய வேண்டும். பெருமழையில் அது எரிய வேண்டும். எத்தனை துன்பம் வந்தாலும் அது அணைந்து விடாமல் எரிய வைக்கும் பொறுப்பு பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இருக்கிறது.


சைக்கிள் ஓட்ட அன்று பழக்கப்ப‌டுத்த உற‌வுகள் அப்பா, அண்ணா, சித்தப்பா என்று இருந்தார்கள். விழுந்தால் பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ள‌ பொறுப்புள்ள‌வர்கள் இருந்த காலம் இருந்தது. இன்றைக்கு சைக்கிள் பழகும்போது இருபக்கமும் சப்போர்ட்டிங் வீல்ஸ் உள்ள‌து. விழாமல் உன்னை நீயே பார்த்துக்கொள் என்று சொல்லும்போது, அங்கே பொறுப்பின்மை வந்து விடுகிறது. இப்படி நம் கையை உதறி விடும்போது அதைப்பிடித்துக்கொள்ள‌ சமுதாயத்தில் அசுர சக்திகளின் கைகள் காத்துக்கொன்டிருக்கின்றன. அத‌ன் கைகளில் குழந்தைகள் அகப்பட்டுக்கொண்ட பின் அதற்கப்புறம் உட்கார்ந்து அழக்கூடாது. என் குழந்தை தடுமாறி விட்டது, தப்பு செய்து விட்டது என்று.”
போகிற போக்கில் விதைகளை தூவிப்போகிற உழவனல்ல நான். நின்று விதைகளை ஊன்றி விட்டுப்போகிற உழவன் நான். ஏனெனில் விதைகளைத் தூவினால் அது வரப்பில் விழலாம், பள்ளத்தில் விழலாம், பாதையில் விழலாம். வயலில்தான் விழும் என்று அர்த்தமில்லை.
மழை வரும்வரை நெருஞ்சி பூக்க காத்திருக்கும் . ஆனால் குறிஞ்சி பூக்க 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும்”.
எல்லா அம்மாக்களும் தன் குழந்தைகளை நொந்து தான் பெற்றிருப்பார்கள். ஆனால் எல்லா குழந்தைகளும் அடுத்தவர் நோவை போக்கக்கூடிய குழந்தைகளாகுமா என்று தெரியாது.”


Dyslexia -வால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைப்பற்றி சொல்கிறார் ஒரு மேடையில்.
"  உன்னை யாரும் புரிந்து கொள்லவில்லையென்றால் என்ன செய்வாய்? " என்று ஆங்கிலத்தில் கேட்டதற்கு பளீரென்று  சிரித்தது அவன் முகம்! யாராலுமே அப்படி அழகாய் சிரிக்க முடியாது. மனசு சிரிச்சால் மட்டுமே அந்த சிரிப்பில் அப்படி ஒரு வெளிச்சம் விழும் !
அந்த குழந்தை சொன்னது, ' எனக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. எனக்கு புரிகிறது அவர்களுக்கு என்னைப்புரியவில்லை என்று!' எவ்வளவு பெரிய தத்துவம் இது! ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாதபோது தான் இணக்கமில்லாமல் பிணக்கம் வருகிறது. ' என்னை உனக்கு புரியவில்லை என்பது எனக்குப்புரிகிறது' என்று சொல்லும்போதே சண்டைக்கான சூழ்நிலையே அங்கில்லையே? போர் தொடங்குவதற்கு முன்னமேயே அமைதிப்பிரகடனம் ஏற்படுகிறதே? எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாடம் இது!
பெண்களுக்கு அவர் சொல்லுகிறார்:
உங்கள் கணவரிடம் பார்க்கக்கூடிய எல்லா நல்ல குணங்களுக்கும் உங்கள் மாமன், மாமிக்கு நன்றி சொல்லி கொண்டாட உங்களால் முடிந்தால் நல்லதொரு குடும்பத்திற்கான அஸ்திவாரத்தை அங்கு தான் உங்களால் போட முடியும். குடும்பம் என்கிற வங்கியில் அன்பு என்கிற அக்கவுண்ட் பெருகினால்தான் உங்கள் வயோதிகக்காலத்தில் அதிலிருந்து உங்களுக்கு எல்லாமே கிடைக்கும்.”
பெற்றவர்கள் கிடைக்காமல் கிடைத்த வரம் போன்றவர்கள். அதை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல குழ‌ந்தைகள் வாராது வந்த மாமணியைப்போன்றவர்கள். அவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். சிறுசிறு ஏமாற்றங்களை தாங்கப்பழக்க வேண்டும்.”