Monday 25 November 2019

பீட்ரூட் பயிறு பொரியல்!!!


பீட்ரூட்டில் அதிக மருத்துவ பயன்கள் இருந்தாலும் மற்ற காய்கறிகள் போல இது அதிகம் சமையலில் பங்கேற்பதில்லை. அதன் அதிக இனிப்பு சுவை தான் காரணமென்று நினைக்கிறேன்.   

பொதுவாய் பீட்ரூட்டில் அல்வா ஜுஸ் முதலியவை மிகவும் பிரபலம்.,  பொரியல் எல்லோரும் செய்வதுண்டு. அது இனிப்பு சுவையானது என்பதால் காரம் கூடுதலாக சேர்த்தால் தான் சுவை அதிகமாகத் தெரியும். இந்த பொரியல் பீட்ரூட்டுடன் வேக வைத்த முழுப்பயறு சேர்த்து செய்வது. செய்முறை கேரள சமையல் முறையைச் சேர்ந்தது. மிகவும் ருசியாக இருக்கும் இந்த பொரியல், ரசம், சாம்பார் இவற்றுக்கு பொருத்தமான பக்கத்துணை!
பீட்ரூட் பயிறு பொரியல்

தேவையானவை:
பெரியதாக பீட்ரூட்-2
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்-அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சில இலைகள்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
முழுப்பயிறு- கால் கப்
அரைக்க:
சின்ன வெங்காயம்- 5, பச்சை மிளகாய்- 3, பூண்டு பற்கள் சிறியது- 4, சீரகம்- அரை ஸ்பூன், தேங்காய்த்துருவல்- ஒரு கை

செய்முறை:
முழுப்பயறை முதல் நாளே ஊறவைத்து மறு நாள் தண்ணீரை வ‌டித்து விட்டு வேறு தண்ணீரால் அது முழுகும் வரை நிரப்பி, போதுமான உப்பு, சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து வேக வைக்கவும். குக்கரில் வேக வைப்பதென்றால் கவனம் தேவை. இரண்டு விசில் போதும். அதிக விசில் என்றால் பயிறு குழைந்து விடும். அல்லது சாதாரணமாகவே வேக வைக்கலாம்.
 அரைக்கக்கொடுத்திருப்பவற்றை மையாக அரைக்காமல் சிதைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அது பொரிந்ததும் உ.பருப்பு, காயம் சேர்த்து கிளறவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். சில தடவைகள் கிளறிய பிறகு சிதைத்து வைத்திருப்பவற்றை சேர்த்து கிளறவும். 5 நிமிடம் குறைந்த தீயில் கிளறி விடவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் பயிறு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

Monday 11 November 2019

முகங்கள்-1 !!

வாழ்க்கையில் சிறு வயது முதல் இன்றைய நாள் வரை பல முகங்களை அவ்வப்போது பார்க்கிறோம். ஒவ்வொருத்தருக்கும் பல முகங்கள் இருப்பது கண்டு திகைக்கிறோம், அதிர்ச்சி அடைகிறோம், பல சமயங்களில் கண்ணீரில் வீழ்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையென்றில்லாமல் அதற்கப்பாற்பட்டு அவ்வப்போது எதிர்பாராமல் தோன்றும் சில முகங்கள் நமக்கு படிப்பினையை கற்றுக்கொடுக்கின்றன. சில முகங்கள் நம்மைத் தெளிவடைய வைக்கின்றன. சில முகங்கள் நம்மை மிகவும் பாதித்து நிறைய சிந்திக்கவும் வைக்கின்றன. அப்படி ஒரு முகத்தை சமீபத்தில் நான் பார்த்தேன்.

சென்ற மாதம் சென்னை ஏர்ப்போர்ட்டுக்கு நாங்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியிலிருந்து கிளம்பிய போது நாங்கள் முதல் நாளே கேட்டிருந்தபடி ஓலா கார் வந்து நின்றது. ஓட்டுனரைப்பார்த்தபோது சற்று தயக்கமாக இருந்தது. விஜய் படத்து வில்லனின் அடியாட்களில் ஒருவன் போல தோற்றம். வாராத சுருட்டை முடி. கழுத்தில், கைகளில் மணிமாலைகள். முரட்டுத்தனமான முகம். சற்று தூரம் வரை காரில் மெளனம் நிலவியது. அருகே உட்கார்ந்திருந்த என் கணவர் கேட்டார்கள், சீட் பெல்ட் போடவில்லையா என்று. அதற்குப்பிறகு அந்த மனிதர் பேசினார் பாருங்கள், அசர வைக்கிற பேச்சு!

" நேற்று பாண்டிச்சேரி போனேன் சார். ஐந்தாறு காலேஜ் பெண்கள் என்னை புக் செய்திருந்தார்கள். பீச் போகச் சொன்னார்கள் சார். அங்கே ஒரே குடியும் கும்மாளமுமாக ஒரே ரகளை! தமிழ்நாட்டுப்பொண்ணுங்க சார்! எல்லாம் சின்ன பொண்ணுங்க சார்! என் கார் சீட் பெல்ட்டையும் உடைத்து விட்டார்கள். எப்படி சார் இப்படி குடித்து, ஆட்டம் போடுகிறார்கள்! ஒரு வீட்டில் கூடவா அம்மாவோ அப்பாவோ ஒழுங்காயில்லை? தட்டிக் கேட்க மாட்டாங்களா சார்! எங்க சார் போகுது நம்ம நாடு?"

என் கணவருக்கும் சரி, எனக்கும் சரி ஒரு நிமிடம் பதில் சொல்லவே முடியவேயில்லை. அவர் பேச்சில் இருந்த சமூக அக்கறை அசர வைத்தது.
மறுபடியும் தொடர்ந்தார் அவர்.

"இப்ப இருக்கிற சின்னப்பொண்ணுங்களையெல்லாம் பார்க்கிறப்போ ரொம்ப கவலையாக இருக்கு சார். எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு சார். அதை படிக்க அனுப்பும்போதே சொல்லிட்டேன். நல்ல படிக்கணும். வேறெ எதிலேயும் கவனம் போகக்கூடாது. உன் கல்யாணம் வரைக்கும் நான் கார் ஓட்டி சாம்பாத்திப்பதே உன்னை கரை சேர்க்கத்தான். அதை மனசில வச்சுக்கிட்டு நீ படின்னு கண்டிச்சு சொல்லிட்டேன்."

நான் கேட்டேன், " அதென்ன கல்யாணம் வரைக்கும் கார் ஓட்டுவது? தங்கச்சி கல்யாணத்துக்கப்புறமும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்க்க வேண்டாமா?" என்று.

அவர் பதிலில்
" அம்மா, நான் காசிமேட்டுக்காரம்மா. மீன் பிடிப்பது தான் என் தொழில். படகோட்டுவது மட்டும் தானம்மா வாழ்க்கை, கனவு. சின்ன வ‌யசிலேயே பன்னிரெண்டு வயசிலேயே அப்பாவும் அம்மாவும் இறந்திட்டாங்க. தங்கச்சி சின்ன குழந்தை. ஒரு சொந்தக்காரன் கூட உதவிக்கு வரவில்லை. அக்கம் பக்கத்துக்காரங்க உதவினாங்க. என் தங்கச்சியை வளர்த்தேன். ஒரு சொந்தக்காரன் கிட்டக்கூட நான் உதவின்னு போய் நிக்கலை. மீன் பிடிச்சுத்தான் வளர்த்தேன். பணம் பத்தலை. அப்பப்போ விஜய், விக்ரம் படங்களில் வேஷம் கட்டுறேன். அப்புறம் இந்தக்காரைப் புடிச்சேன். எப்போ தங்கச்சி கல்யாணம் முடியுதோ, அதற்கப்புறம் நான் படகிலெ ஏறிடுவேன்"

" வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாமே? நல்ல பணம் கிடைக்கும். சீக்கிரம் தங்கச்சிக்கு கல்யாணம் முடிக்கலாம்"

" வெளிநாடெல்லாம் வேண்டாம்மா. எனக்கு என் குப்பம் தாம்மா வாழ்க்கை. சீக்கிரம் கடமையை முடிச்சிட்டு படகேறி கடலில் போகணும். அதாம்மா என் கனவு. தங்கச்சி கூட சொன்னது, நானும் வேலைக்குப்போய் சம்பாதித்தால் உன் கடனையெல்லாம் சீக்கிரம் முடிச்சிடலாம் அண்ணேன்னு சொன்னது. கடனையெல்லாம் முடிச்சிட்டுத்தான் கல்யாணம் என்றால் நீ ஒளவையாராகி தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிட்டேன் அம்மா."

' கவலைப்படாதே, உன் நல்ல மனசுக்கு நீ என்றைக்கும் நல்லாத்தான் இருப்பாய்' என்றேன் காரிலிருந்து இறங்கும்போது.

' எங்கேம்மா, எத்தனை சம்பாதித்தாலும் பணம் கரைந்து போகிறது. எப்படி நன்றாக இருப்பது?



கார் சென்ற பிறகும் மனம் கனத்துக்கொண்டிருந்தது கொஞ்ச நேரம் வரை.