Monday 11 November 2019

முகங்கள்-1 !!

வாழ்க்கையில் சிறு வயது முதல் இன்றைய நாள் வரை பல முகங்களை அவ்வப்போது பார்க்கிறோம். ஒவ்வொருத்தருக்கும் பல முகங்கள் இருப்பது கண்டு திகைக்கிறோம், அதிர்ச்சி அடைகிறோம், பல சமயங்களில் கண்ணீரில் வீழ்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையென்றில்லாமல் அதற்கப்பாற்பட்டு அவ்வப்போது எதிர்பாராமல் தோன்றும் சில முகங்கள் நமக்கு படிப்பினையை கற்றுக்கொடுக்கின்றன. சில முகங்கள் நம்மைத் தெளிவடைய வைக்கின்றன. சில முகங்கள் நம்மை மிகவும் பாதித்து நிறைய சிந்திக்கவும் வைக்கின்றன. அப்படி ஒரு முகத்தை சமீபத்தில் நான் பார்த்தேன்.

சென்ற மாதம் சென்னை ஏர்ப்போர்ட்டுக்கு நாங்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியிலிருந்து கிளம்பிய போது நாங்கள் முதல் நாளே கேட்டிருந்தபடி ஓலா கார் வந்து நின்றது. ஓட்டுனரைப்பார்த்தபோது சற்று தயக்கமாக இருந்தது. விஜய் படத்து வில்லனின் அடியாட்களில் ஒருவன் போல தோற்றம். வாராத சுருட்டை முடி. கழுத்தில், கைகளில் மணிமாலைகள். முரட்டுத்தனமான முகம். சற்று தூரம் வரை காரில் மெளனம் நிலவியது. அருகே உட்கார்ந்திருந்த என் கணவர் கேட்டார்கள், சீட் பெல்ட் போடவில்லையா என்று. அதற்குப்பிறகு அந்த மனிதர் பேசினார் பாருங்கள், அசர வைக்கிற பேச்சு!

" நேற்று பாண்டிச்சேரி போனேன் சார். ஐந்தாறு காலேஜ் பெண்கள் என்னை புக் செய்திருந்தார்கள். பீச் போகச் சொன்னார்கள் சார். அங்கே ஒரே குடியும் கும்மாளமுமாக ஒரே ரகளை! தமிழ்நாட்டுப்பொண்ணுங்க சார்! எல்லாம் சின்ன பொண்ணுங்க சார்! என் கார் சீட் பெல்ட்டையும் உடைத்து விட்டார்கள். எப்படி சார் இப்படி குடித்து, ஆட்டம் போடுகிறார்கள்! ஒரு வீட்டில் கூடவா அம்மாவோ அப்பாவோ ஒழுங்காயில்லை? தட்டிக் கேட்க மாட்டாங்களா சார்! எங்க சார் போகுது நம்ம நாடு?"

என் கணவருக்கும் சரி, எனக்கும் சரி ஒரு நிமிடம் பதில் சொல்லவே முடியவேயில்லை. அவர் பேச்சில் இருந்த சமூக அக்கறை அசர வைத்தது.
மறுபடியும் தொடர்ந்தார் அவர்.

"இப்ப இருக்கிற சின்னப்பொண்ணுங்களையெல்லாம் பார்க்கிறப்போ ரொம்ப கவலையாக இருக்கு சார். எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு சார். அதை படிக்க அனுப்பும்போதே சொல்லிட்டேன். நல்ல படிக்கணும். வேறெ எதிலேயும் கவனம் போகக்கூடாது. உன் கல்யாணம் வரைக்கும் நான் கார் ஓட்டி சாம்பாத்திப்பதே உன்னை கரை சேர்க்கத்தான். அதை மனசில வச்சுக்கிட்டு நீ படின்னு கண்டிச்சு சொல்லிட்டேன்."

நான் கேட்டேன், " அதென்ன கல்யாணம் வரைக்கும் கார் ஓட்டுவது? தங்கச்சி கல்யாணத்துக்கப்புறமும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்க்க வேண்டாமா?" என்று.

அவர் பதிலில்
" அம்மா, நான் காசிமேட்டுக்காரம்மா. மீன் பிடிப்பது தான் என் தொழில். படகோட்டுவது மட்டும் தானம்மா வாழ்க்கை, கனவு. சின்ன வ‌யசிலேயே பன்னிரெண்டு வயசிலேயே அப்பாவும் அம்மாவும் இறந்திட்டாங்க. தங்கச்சி சின்ன குழந்தை. ஒரு சொந்தக்காரன் கூட உதவிக்கு வரவில்லை. அக்கம் பக்கத்துக்காரங்க உதவினாங்க. என் தங்கச்சியை வளர்த்தேன். ஒரு சொந்தக்காரன் கிட்டக்கூட நான் உதவின்னு போய் நிக்கலை. மீன் பிடிச்சுத்தான் வளர்த்தேன். பணம் பத்தலை. அப்பப்போ விஜய், விக்ரம் படங்களில் வேஷம் கட்டுறேன். அப்புறம் இந்தக்காரைப் புடிச்சேன். எப்போ தங்கச்சி கல்யாணம் முடியுதோ, அதற்கப்புறம் நான் படகிலெ ஏறிடுவேன்"

" வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாமே? நல்ல பணம் கிடைக்கும். சீக்கிரம் தங்கச்சிக்கு கல்யாணம் முடிக்கலாம்"

" வெளிநாடெல்லாம் வேண்டாம்மா. எனக்கு என் குப்பம் தாம்மா வாழ்க்கை. சீக்கிரம் கடமையை முடிச்சிட்டு படகேறி கடலில் போகணும். அதாம்மா என் கனவு. தங்கச்சி கூட சொன்னது, நானும் வேலைக்குப்போய் சம்பாதித்தால் உன் கடனையெல்லாம் சீக்கிரம் முடிச்சிடலாம் அண்ணேன்னு சொன்னது. கடனையெல்லாம் முடிச்சிட்டுத்தான் கல்யாணம் என்றால் நீ ஒளவையாராகி தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிட்டேன் அம்மா."

' கவலைப்படாதே, உன் நல்ல மனசுக்கு நீ என்றைக்கும் நல்லாத்தான் இருப்பாய்' என்றேன் காரிலிருந்து இறங்கும்போது.

' எங்கேம்மா, எத்தனை சம்பாதித்தாலும் பணம் கரைந்து போகிறது. எப்படி நன்றாக இருப்பது?



கார் சென்ற பிறகும் மனம் கனத்துக்கொண்டிருந்தது கொஞ்ச நேரம் வரை.

16 comments:

Angel said...

தங்கைக்காக வாழும் உழைக்கும் நல்லுள்ளம் .அவர் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கணும் .முகங்கள் என்னுடைய அடுத்த பதிவுக்கு தலைப்பு கிடைச்சாச்சு .. நீங்கள் சந்தித்த முகம் என் மனதையும் கனக்க வைத்தது .

திண்டுக்கல் தனபாலன் said...

அவரின் நல்ல உள்ளத்திற்கு அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்...

Avargal Unmaigal said...


இப்படி சாதாரண வேலை பார்ப்பவர்கள் தங்களின் உறவுகளின் வளர்ச்சிக்காக உழைப்பார்கள் ஆனால் வசதி படைத்தவர்களோ தங்களின் குழந்தைகள் மீது அக்கறை கொள்ளாமல் வளர்ப்பத்தால்தான் காரில் குடித்து கும்மாளம்மிடும் அளவிற்கு இந்த பெண்களைப் போல தறுதலைகளாக வளர்கிறார்கள்

ஸ்ரீராம். said...

சிறந்த ஒரு சிறுகதை படிப்பதுபோல இருந்தது.   நிஜத்திலிருந்துதானே கற்பனைக் கதைகளும்?!  உருவத்தைக் கண்டு யாரையும் எடைபோட முடியாது என்று தெரியாது.  அவர் எண்ணங்கள் ஈடேறட்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

தோற்றத்திற்கும் மனதிற்கும் தொடர்பில்லை என்பதை மெய்பித்திருக்கிறார்
போற்றுதலுக்கு உரியவர்

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஏஞ்சல்!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் தனபாலன், அவரின் நல்ல உள்ளத்துக்கும் நேர்மைக்கும் நிச்சயம் அவருக்கு நல்லதே நடக்கும் என்று நானும் நினைத்துக்கொண்டேன். வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி மதுரைத்தமிழன்!

மனோ சாமிநாதன் said...

நானுமே இப்படித்தான், \நிஜத்திலிருந்து வருபவை தானே கற்பனை கதைகள்?' என்று அன்று நினைத்தேன். நீங்களும் அதையே சொல்லியிருக்கிறீர்கள் சகோதரர் ஸ்ரீராம்! ஆனாம் பெரும்பாலும் நிஜங்கள் சில சமயங்களில் மிகவும் பயங்கரமாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

வாழ்க்கையில் பல நேரங்களில் இப்படித்தான் தோற்றத்தைப்பார்த்து தப்புக்கணக்கு போட்டு விடுகிறோம். இவர் நீங்கள் சொல்லியிருப்பது போல தோற்றத்துக்கும் மனதுக்கும் தொடர்பில்லை என்று நிரூபித்திருக்கிறார். வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

ராமலக்ஷ்மி said...

அவரது இலட்சியம் விரைவில் ஈடேறட்டும்.

முகங்களின் வாயிலாக மனித மனங்களை வாசிக்கக் காத்திருக்கிறோம். தொடருங்கள்.

priyasaki said...

ஒருவரின் தோற்றத்தை வைத்து எடை போடகூடாது என்பது என்னளவிலும் நடந்திருக்கு. இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள். அந்த நல்ல மனிதருக்கு நல்லதே நடக்கும்.. இறைவன் கண்டிப்பா கூடவே இருப்பார்.நெகிழ்ச்சியான பதிவு மனோக்கா.

முற்றும் அறிந்த அதிரா said...

ஓ இக்காலத்திலும் இப்படி மனிதர்கள்... தங்கைக்காக ஒழுக்கமாக உழைக்கும் அண்ணன், அங்கே சில அண்ணன்களின் தங்கைகள் குடித்து விட்டுக் கும்மாளமிடும் பக்கம்.. என்ன சொல்வது... சில விசu்யங்களுக்குப் பெற்றோரைத்தான் குறை சொல்ல வேண்டும், நாகரீகமாக வளர்க்கிறோம் என நினைச்சு இப்படிக் கை விட்டு விடுகின்றனர்... இவர்களின் வருங்காலத்தை நினைக்கப் பயமாகத்தான் இருக்கு..

ஓலா ட்றைவருக்காக நானும் பிரார்த்திக்கிறேன் அவருக்கும் விரைவில் மணமாகட்டும்..

“ஆடையைப் பார்த்து எடை போடாதீர்கள், சேற்றிலேதான் செந்தாமரை முளைக்கிறது”..

kowsy said...

உங்கள் அனுபவம் என் மனதையும் பாதித்தது

Bhanumathy Venkateswaran said...

நல்ல பதிவு. கார் டிரைவர்கள் பலர் நம்மை வியக்க வைப்பார்கள். நான் தனியாக பயணிக்கும் பொழுது, ஆட்டோவோ, காரோ அந்த டிரைவரிடம் பேச்சுக்கொடுப்பேன். பலர் நம்மை அசர வைப்பார்கள். 

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!