Thursday 16 February 2023

மருத்துவ சிகிச்சையின் இரண்டு பக்கங்கள்!

 ஒரு மருத்துவ சிகிச்சை அதுவும் ஒரு அறுவை சிகிச்சை கருணையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் மனிதாபிமானத்துடனும் செய்யப்படும்போது அது வெற்றிகரமாக மாறி நோயாளியும் காப்பாற்றப்பட்டு மருத்துவர் கடவுளாக போற்றப்படுகிறார். அதேசமயம் மிகவும் சாதாரண சிகிச்சை ஒருவரை திடீர் மரணத்துக்குள் தள்ளி விடுகிறது. அந்த இரண்டு பக்கங்களையும் இங்கே எழுதியிருக்கிறேன். 

மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டு உயிரைத்திருப்பிக்கொடுத்த சிகிச்சை:

மணப்பாறையை சேர்ந்த கூலி தொழிலாளி திரு.அழகேசனின் மகன் 13 வயதான மணிகண்டன்  கடந்த 11 ஆண்டுகளாக சென்னையில் உள்ள எக்மோர்-குழந்தைகள் நல  சிறப்பு மருத்துவமனையில் ஹெமாட்டாலஜி துறையில் பரம்பரை இரத்தக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

 (ஹீமோகுளோபினோபதி) அவரது இரத்தத்தில்  பரம்பரையாய் வருகிற ஜீன் மரபணு கோளாறு காரணமாக ஹீமோகுளோபின் உற்பத்தியில்  குறைபாடு காரணமாக அசாதாரண ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகமாகி இருதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தார்.

 திருச்சி மருத்துவக் கல்லூரி மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இந்த அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவு இல்லாததினால் ஒவ்வொரு மாதமும்  சிறுவனை சென்னை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு  ஒவ்வொரு முறையும் பரிந்துரை செய்யப்படும் போது  ஏழை பெற்றோரால்  சிறுவனை சென்னைக்கு அழைத்து செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

மனப்பாறை சட்டமன்ற உறுப்பினர்  திரு. ப அப்துல் சமது சிறுவனை பற்றி  துவரங்குறிச்சி அரசு மருத்துவ மனையை சமீப காலமாக சிறப்பாக வழிநடத்தி வரும் மருத்துவர். ஜான் விஸ்வநாத்திடம் சிறுவனுக்கு உதவும் படி பரிந்துரைத்தார்.  

மருத்துவர் ஜான் விஸ்வநாத் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில்  பணியில் இணைந்த கடந்த 8 மாதங்களில் பல அற்புதமான மருத்துத்துவ சேவைகளை  செய்து  பல்வேறு  சிறப்பு மருத்துவ  சிகிச்சைகளையும் அப்பகுதி ஏழை மக்களுக்கு வழங்கி  மருத்துவ மனை சிறப்பாகசெயல்பட்டு வருகிறது.

பாதிக்கபட்ட சிறுவனை வரவழைத்து  பரிசோதித்து, அவனுக்கு HbFc என்கிற அரிய வகை பரம்பரை இரத்த குறைபாடு நோய் இருப்பதை கண்டறிந்தார். தொடர்ந்து சி.எம்.சி வேலூரின் ஹெமாட்டாலஜி துறையில் உள்ள தனது நண்பர்களுடன் ஆன்லைன் வீடியோ மருத்துத்  ஆலோசனைக்கு  ஏற்பாடு செய்து அவர்களின் ஆலோசனையைப் பெற்ற பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார்.

அதற்கப்புறம் மருத்துவர் சொன்னது:

" சிறுவனை என்னிடம் கொண்டுவரப்பட்டபோது அவன்  உடல்நிலை மிகவும் மோசமாக  இருந்தது .மிகவும் கடுமையான இரத்த சோகை மற்றும் இதய செயலிழப்புடன் (கார்டியாக் ஃபெயிலியர்) இருந்தார். இந்த அரிய பரம்பரை  இரத்த  கோளாறின் விளைவாக சிறுவனின்  மண்ணீரல் 10 மடங்கு பெரிதாக வீங்கியிருந்தது. கொண்டுவரப்பட்டபோது சிறுவனுக்கு மூச்சுத்திணறல் மற்றும் குறைந்த  இருதய துடிப்பு இருந்தது.

 சிறுவனை  108 ஆம்புலன்சில் ஐ.சி.எச் சென்னைக்கு அனுப்பப்பட்டாலும் அவன் உடல் நிலை  நீண்ட பிரயாணத்தை தாக்கு பிடிக்காது என்பதை உணர்ந்து துவரங்குறிச்சி அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். 

சிறுவனின் அரிய வகை இரத்த குறைபாடு நோய் மற்றும் அவனின் தற்போதைய மோசமான உடல் நிலைமை கண்டு சிகிச்சையளிக்க வேறு எந்த மருத்துவமனையும் ஏற்றுக்கொள்ளாது என்பது எங்களுக்குத் தெரியும்.

 எனவே கடவுளிடம் மிகுந்த  பிரார்த்தனையுடன் நாங்கள் அதை சவாலாக எடுத்து சிகிச்சை அளிக்க தொடங்கினோம்., சி.எம்.சி வேலூரில் உள்ள ஹீமாட்டாலஜி துறையில் உள்ள எனது நண்பர்கள் சிலரிடமிருந்து அவசர வீடியோ ஆலோசனைக்கு ஏற்பாடு செய்து அவர்களின் ஆலோசனையின் படி  சிறுவனின் இதய செயலிழப்பைக் கட்டுப்படுத்தினோம். அவர்களின் ஆலோசனையுடன்_ மற்றும் கடவுளின் தூய கிருபையால் கடுமையான இருதய செயலிழப்பிலிருந்து நாங்கள் சிறுவனை வெற்றிகரமாக  மீட்டெடுக்க முடிந்தது. பின்பு அவனது அரிய இரத்த  கோளாறுக்கான சிறப்பு சிகிச்சையைத் தொடங்கியுள்ளோம்..அந்த சிறுவனைக் காப்பாற்ற ஏற்ற வேளையில் உதவியதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறோம் " என்று கூறி  டாக்டர் விஸ்வநாத் மனம் நெகிழ்ந்தார்.

மகன் நடந்து செல்வதையும் வழக்கமான செயல்களைச் செய்வதையும் பார்த்து பெற்றோர் மிகவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்கள்..

நோயாளியை சினிமா பார்க்கச் சொல்லி விட்டு அறுவை சிகிச்சையையும் செய்திருக்கிறார் இவர். 

அந்த நோயாளிக்கு ஒரு விபத்தில் வலது கை மோதிர விரல் நசுங்கிப்போய் விட்டது. அருகிலுள்ள மருத்துவ மனையில் சிதந்து போன தசைகளையெல்லாம் வெட்டி விட்டு தையல் போட்டிருக்கிறார்கள். அப்போது தசை நாண் வெட்டுப்பட்டது தெரியாமல் தோலை மட்டும் தைத்து விட்டிருக்கிறார்கள். அதனால் வீடு திரும்பியதும் வலியால் துடித்த அவர் தனியார் மருத்துவ மனைகளை நாடியிருக்கிறார். அங்கே 5 லட்சம் வரை செலவாகும் என்பதாலும் பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்யும் அரசு மருத்துவமனைகளான சென்னை ஸ்டான்லி, மதுரை ராஜீவ் காந்தி, வேலூர் சி.எம்.சி செல்லுவதும் சிரமமான நிலையில் பத்திரிகைகளில் துவரங்குறிச்சி அரசு மருத்துமனையில் வெற்றிகரமாக சிக்கலான அறுவை சிகிச்ச்சைகள் கூட செய்து வருவதாக கேள்விப்பட்டு இந்த மருத்துவ மனைக்கு அவர் வந்து சேர்ந்தார். 

இவருடைய மோதிர விரல் நுனியிலிருந்து மணிக்கட்டு வரை 16 செ.மீ நீளத்திற்கு தசை நாண் நரம்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்புறமுள்ள நரம்பில் அதே அளவு நீளத்துக்கு வெட்டியெடுத்து சிதைந்து போன மோதிர விரலில் பொருத்தி, அதே நேரம் முன்பக்கமுள்ள நரம்புக்கு பாதிப்பு வராத வகையில் செயற்கை நரம்புகளால் பலப்படுத்தியும் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்திருகிறார் மருத்துவர் ஜான் விஸ்வநாத். நோயாளிக்கு தோள் பட்டையிலிருந்து சம்பந்தப்பட்ட கைகள் வரை மட்டும் மரத்துப்போகிற மாதிரி மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் நோயாளி இயல்பாக பேசிக்கொண்டிருக்க முடியும். பிடித்த சினிமாவைப் பார்க்க முடியும். ப்ளூடூத் மூலம் உறவினர்களிடம் பேசிக்கொண்டிருக்க முடியும். அதனால் மருத்துவர் ஜான் விஸ்வனாத் நோயாளிடம் விருப்பத்தைக்கேட்டு, அவர் விருப்பப்படி விஜய் ப்டத்தைப்போட்டு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். முதல் அமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இந்த சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. 

ஒரு மிகச் சாதாரண, சிறிய மருத்துமனையில் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை ஒரு சாமான்யனுக்கு ஒரு திறமையான மருத்துவரால் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டிருக்கிறது! எவ்வளவு பெரிய விஷயம் இது!

ஒரு சாதாரண சிகிச்சை எப்படி ஒருவரை மரணத்துக்குள் தள்ளியது என்பதற்கு உதாரணம் இது:

என் இளைய சகோதரி [ வயது 69 ] பத்து நாட்களாக விட்டு விட்டு வந்த ஜுரத்தால் அவதியுற்றுக்கொண்டிருந்தார். ஓரளவிற்கு இருமலும் ஜலதோஷமும் இருந்தது. ஜுரம் 103 வரை போவதும் பின் இறங்குவதுமாய் இருந்தது. வரிசையாக எல்லா பரிசோதனைகளும் செய்ததில் exrayல் மட்டும் வலது நுரையீரலில் சிறிதளவு மாஸ் போல [ கட்டி போல ] தென்பட்டதால் அது எதுவும் அபாயகரமான கட்டியா என்று பரிசோதிக்க, வலது நுரையீரலில் பயாப்ஸி எடுக்க மருத்துமனையில் வரச்சொல்ல கடந்த 9ந்தேதி என் சகோதரி தன் கணவருடனும் தன் மாப்பிள்ளையுடனும் [ மாப்பிள்ளை அங்கேயே எலும்பு மருத்துவ சிக்கிச்சையில் உயர்தர அறுவை சிகிச்ச்சை நிபுணர்] சென்றார். அனஸ்திஷியா கொடுத்த பின் அவரது வலது நுரையீரலிலிருந்து ஒரு முறை டிஷ்யூ எடுக்கப்பட்டது. மாப்பிள்ளையின் நேரடி கண்காப்பிலேயே இரண்டாவது முறை டிஷ்யூ எடுக்க அந்த ஊசியை [ தலைமுடியையும் விட மெல்லியதாம் ] மறுபடியும் அழுத்தியபோது உடனேயே இருமி மாப்பிள்ளை மேலேயே இரத்த வாந்தி எடுத்து அடுத்த வினாடியில் என் சகோதரியின் உயிர் பிரிந்து விட்டது ‘ கார்டியாக் அர்ரெஸ்ட்’ என்ற பெயரில்! ஏன் இப்படி நடந்தது, இது யாருடைய தவறு என்று எதுவுமே புரியாமல் இங்கே நாங்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறோம். எதையுமே கேட்க முடியாமல் என் சகோதரியின் கணவர், பெண், மாப்பிள்ளை எல்லோரும் துக்கத்தில் வீழ்ந்திருக்கிறார்கள். நன்றாக நடந்து சென்று சென்றவர், ‘ நான் திரும்பி வரும்போது எனக்கு அசதியாக இருக்கும். பிஸ்கட்டும் தண்ணீரும் வாங்கி வையுங்கள் ‘ என்று கணவரிடம் சொல்லி உள்ளே சென்றவர் ஒரு மணி நேரத்திற்குள் வெறும் சடலமாக திரும்பி வந்தார். இந்த அதிர்ச்சியை இன்னுமே முழுங்க முடியாமல் தவிக்கும்போது, 104 வயதான் என் தாயார் அழுவதற்கு ஆறுதலும் சொல்ல முடியவில்லை.  


13 comments:

துரை செல்வராஜூ said...

தங்கள் குடும்பத்தில் நேர்ந்துள்ள துயரம் நெஞ்சை அழுத்துகின்றது..

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்வோம்..

நெல்லைத் தமிழன் said...

எப்போதுமே ரிசல்ட் நன்றாக அமைந்துவிட்டால் மருத்துவர்களைப் புகழ்வதும், அதுவே தவறாகிவிட்டால் குற்றம் சுமத்துவதும் இயல்பு. இது எல்லாத் தொழில்களிலும் உண்டு.

மருத்துவர் தவறு செய்திருக்கலாம். இல்லை வேறு தவறு நடந்திருக்கலாம். ஆனால் நோயாளியோ போயாச்சு. அதனால் அதனைப்பற்றிச் சிந்தித்தால் வருத்தம்தான் மிஞ்சும். அவங்களுடைய நேரம் வந்துவிட்டது என்றுதான் நினைத்துக்கொள்ளணும்.

எழுதும்போது சுலபமாக இருக்கிறது. என் மாமனார், ஒரு ஹாஸ்பிடலில் கோவிட் சமயத்தில் மறைந்தபோது அந்த டாக்டர்கள், மருத்துவமனைமீது ஆறாத கோபம் இருந்தது. அந்த ஹாஸ்பிடல் பெயரை எடுத்தாலே வெறுப்பாக இருந்தேன். சில நாட்கள் முன்பு அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்தவர் சொன்னால், அந்த கோவில் நேரத்தில் அங்குள்ள ஒரு மருத்துவரும் மறைந்தாராம்.

படிச்சவன் சூது வாது செய்தால் ஐயோ என்று போவான் என்று பாரதி சொல்லியிருக்கிறார். மருத்துவர்கள் பொறுப்புணர்வுடன் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள் என்றே நாம் நம்பவேண்டும்.

ஸ்ரீராம். said...

சிறுவனின் சிகிச்சை பற்றிச் சொல்லும்போது வார்த்தைக்கு வார்த்தை, ஒவ்வொரு ஸ்டெப்பிலும் கடவுள் கிருபை, கடவுளின் அருளில் என்று மருத்துவர் சொல்லி இருப்பது அவர் டெடிகேஷனைக் காட்டுகிறது.  நல்ல செய்தி.

கோமதி அரசு said...

மருத்துவர் ஜான் விஸ்வநாத் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணியில் இணைந்த கடந்த 8 மாதங்களில் பல அற்புதமான மருத்துத்துவ சேவைகளை செய்து பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளையும் அப்பகுதி ஏழை மக்களுக்கு வழங்கி மருத்துவ மனை சிறப்பாகசெயல்பட்டு வருகிறது.//

அரசு மருத்துவமனை என்றாலே சிலர் மட்டமாக நினைப்பார்கள்.
அரசுமருத்துவமனை மருத்துவர் ஜான் விஸ்வநாத் அவர்களை பாராட்ட வேண்டும்.

உங்கள் தங்ககையை பற்றி முன்பு பதிவு போட்டு இருந்தீர்கள்.
அவர்களின் இழப்பு மனதை கனக்க வைக்கிறது, அம்மாவுக்கு இன்னும் வருத்தம் அதிகமாக இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கு,

தங்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு சற்று அமைதியளித்தது. அன்பு நன்றி உங்களுக்கு!

நெடுநாள் படுத்திருந்து இந்த மரணம் நிகழ்ந்திருந்தால் சற்று மனதை அமைதிப்படுத்திக்கொள்ளலாம். திடீரென்று நிகழ்ந்து அநியாயமாய் போய் விட்டதால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவோ சீரணம் செய்து கொள்ளவோ முடியவில்லை!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் நெல்லைத்தமிழன்!

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று புரிகிறது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. நேரில் போனால் தான் விபரங்களும் தெரியும். அதற்குள் அவர்களும் சற்று மீண்டெழுந்திருப்பார்கள். சில அதிர்ச்சிகள் அத்தனை சீக்கிரம் ஜீரணம் பண்ண முடியாது. அவற்றில் இதுவும் ஒன்று!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!

நான் என் தங்கையைப்பற்றி எதுவும் முன்பு எழுதியதில்லை. மூத்த சகோதரியைப்பற்றி எழுதியிருக்கிறேன். அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர்களின் கண்ணீர்க்குரல் மனதை கனக்க வைக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தமாக உள்ளது அம்மா...

Thulasidharan V Thillaiakathu said...

நேற்றே இரவு வாசித்துவிட்டேன் நெட் படுத்தியதால் கமென்ட் போட முடியவில்லை மனோக்கா.

முதல் செய்தி மிக மிக மகிழ்வான செய்தி. மருத்துவர் ஜான் விஸ்வநாத் அருமையான மருத்துவர். அசாத்தியமான டெடிக்கேஷன் அதுவும் அவர் வணங்கும் இறைவன் மீதான நம்பிக்கை! இப்படியான மருத்துவர்கள்தான் நமக்குத் தேவை. குறித்தும் வைத்துக் கொண்டேன்.

இரண்டாவது மனதை வேதனைப்படுத்தியது மனோக்கா. உங்களுக்கும் குடும்பத்து உறுப்பினர் எல்லோருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை மனோக்கா. அதுவும் நடந்து உள்ளே சென்றவர் வெளியே வரும் போது இப்படி....அதிர்ச்சியாக இருந்திருக்கும் கண்டிப்பாக. என்ன நடந்திருக்கும் அதற்குள்? என்ன தவறு எங்கு பல கேள்விகள் குடைகின்றன. என்னதான் நேரம் விதி என்று பல வார்த்தைகள் சொன்னாலும் இந்தக் கேள்விகள் நமக்கு மனம் சமாதானப்படும்படி விடை கிடைக்கும் வரை குடையும்...இத்தனைக்கும் மருத்துவரான மாப்பிள்ளை கூடவே இருந்திருக்கிறார்.

வேதனை மனோக்கா...அதுவும் 104 வயதான உங்கள் அம்மா அவருக்கு மனம் ரொம்ப வேதனையாக இருக்கும்....அம்மாவின் வயது 104...அம்மாவின் வயது ஆச்சரியம் மற்றும் அது பல செய்திகள் சொல்வதாகத் தெரிகிறது.

கீதா

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் தனபாலன்! வருத்தத்தை பகிர்ந்து கொண்டது ஆறுதலாக இருந்தது. அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா! முதலாவது செய்தியை படித்தபோதே நான் மிகவும் வியந்து போனேன். அரசு மருத்துவமனைகளுக்கு இவர் கெளரவம் சேர்த்திருக்கிறார். இவரது சிகிச்சை முறையும் செயல்பாடுகளும் இன்னும் நிறைய பேர்களுக்கு போய் சேர வேண்டும். அதனால் தான் அவரைப்பற்றி இங்கே பகிர்ந்து கொண்டேன்.

என் தங்கை இறந்த விதத்தில் நீங்கள் சொல்வது போல மனதில் ஆயிரம் சந்தேகங்க்ளும் கேள்விகளும் குடைகின்றன. நேரில் செல்லும்போது தான் விடை கிடைக்கும். ஆனால் அதையெல்லாம் மீறிய அதிர்ச்சி இன்னும் இருந்து கொண்டேயிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் தான் அம்மாவின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடினோம். சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களை அதற்கு அழைத்திருந்தேன். அதைப்பற்றிய ஒரு பதிவும் அவர் வெளியிட்டிருந்தார். என் தங்கையின் வீட்டில் தான் அம்மா இருக்கிறார்கள்.

ஆறுதல் வார்த்தைகளுக்கு அன்பு நன்றி கீதா!

மாதேவி said...

மிகவும் வேதனையான சம்பவம். ஆழ்ந்த வருத்தங்கள்.