Monday 17 July 2017

பாடல்கள் கோடி பெறும்!!

சில சமயங்களில் எப்போதோ படித்த, மறக்க முடியாத சில வரிகள் பளிச்சென்று மனதில் தோன்றும். அவை பாடல் வரிகளாக இருக்கலாம் அல்லது ஒரு திரைப்படத்தில் பேசப்பட்ட வரிகளாக இருக்கலாம் அல்லது ஒரு பாடலில் வந்த வரிகளாகக்கூட இருக்கலாம்.  எங்கு கேட்டோம், எங்கு படித்தோம் என்று சினேகிதிகளுடன் அலசி ஆராய்ந்து கண்டு பிடிப்பதில் ஒரு தனியான சுகம் இருக்கும்.

அப்படித்தான் ஒரு நாள் சினேகிதியுடன் பேசிக்கொண்டிருந்த போது ‘ சுட்ட பழம், சுடாத பழம்’ பற்றிய விவாதம் வந்தது.  அவ்வையார் பாடிய பல பாடல்கள் சாகா வரம் பெற்றவை. அதையெல்லாம் கணினி உதவியுடன் திரும்பப் படித்து ரசித்தோம். அதிலிருந்து மிகவும் ரசித்த இரண்டு பாடல்கள் மட்டும் எழுதுகிறேன்...

முதல் பாடல்:

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை ஒரு நாள் அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் அமர்ந்திருந்தார்கள்.  அப்போது அங்கே வந்த ஒளவையார்  புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார்.

இது தான் அந்த நாலு கோடி பாடல்!

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்; 
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெறும்; 
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு 
கூடுதல் கோடி பெறும்; 
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்.  

(ஒளவையார் தனிப் பாடல்:42)

1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

இரண்டாவது பாடல்:

காட்டில் அலைந்து திரிந்து களைப்புடன் அமர்ந்திருந்த அவ்வையாரிடம் அங்கே வந்த மாடு மேய்க்கும் சிறுவன் கேட்கிறான்.

உங்களுக்குச் சுட்ட பழங்கள் வேண்டுமா? அல்லது சுடாத பழங்கள் வேண்டுமா?"

ஔவையார் திகைத்து நின்றார். தமிழ் மொழியில் மிகவும் கற்றுத் தேர்ந்த புலவரான அவர் பலவிதமான பழங்களைப் பற்றி அறிந்திருக்கின்றார். ஆனால், சுட்ட பழம், சுடாத பழம் என்று அவர் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால், பள்ளிக்கூடத்துக்கே போயறியாத இந்த மாடு மேய்க்கும் சிறுவன் புதிதாக சுட்ட பழம், சுடாத பழம் என்று பேசுகின்றானே என்று அவர் ஆச்சரியப்பட்டார்.

பின்னர், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, எதுவும் தோன்றாமல், "சரி தம்பி, எனக்குச் சுட்ட பழங்களையே பறித்துப் போடு" என்று கேட்டார்.
சிறுவன் சிரித்தான். பின்னர், அந்த மரத்தின் கிளை ஒன்றைப் பிடித்துப் பலமாகக் குலுக்கினான்.
ஔவையார் தரையில் கிடந்த பழங்களில் நன்கு கனிந்திருந்த பழங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துக்கொண்டார்.



அந்தப் பழங்களில் மணல் ஒட்டியிருந்த மணலை நீக்குவதற்காக வாயால் ஊதினார்.

மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த சிறுவன் வாய்விட்டுச் சிரித்தான். "என்ன பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்டான்.
அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத ஔவையார், திகைத்து நின்றார்.
கனிந்த பழங்களைச் சுட்ட பழம் என்றும், காய்களைச் சுடாத பழம் என்றும் சிறுவன் அறிவுடன் குறிப்பிட்டது அவருக்குப் புரிந்தது. இந்தச் சிறு விஷயம் தெரியாமல், ஒரு எருமை மேய்க்கும் சிறுவனிடம் நாம் தோற்றுப் போனோமே என்று வெட்கம் அடைந்த ஔவையார்,

" கருங்காலிக்கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித்துத் தண்டுக்கு நாணும் பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்!'

பொருள்:

கருங்காலி மரத்தை வெட்டும் கோடாலி, வெறும் வாழைத்தண்டை வெட்ட முடியாமல் தோற்கும். படிப்பறிவில்லாத எருமை மேய்க்கும் பையனிடம் நான் தோற்று விட்டேன். அவமானம். இரண்டு நாள் உறக்கமற்று என் கண்கள் விழித்திருக்கும்!



[காணொளியில் சுட்ட பழம், சுடாத பழம்...’]

ஒரு புலவர் தோல்வியை ஒப்புக்கொண்டு பாடுவது எத்தனை அரிதானது. எல்லாம் தெரியுமென்ற அகந்தை கூடாது. ஒருவருக்குத் தெரியாததொன்று இன்னொருத்தருக்குத் தெரியும். அது தான் யாருமே கண்டு பிடிக்க முடியாத அற்புதம்!





15 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான இரண்டு கவிதைகளை
மீண்டும் அருமையாக பதிவு செய்து
நினைந்து மகிழச் செய்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

இரண்டாவது எல்லோருக்கும் தெரியும். முதலாவது இப்போதுதான் அறிகிறேன். ரசித்தேன். அவ்வையார் சுடாத பழம்தான் கேட்பார் இன்று நினைவு. அதனால்தான் பழங்களை எடுத்து ஊதியதும் என்ன பாட்டி பழம் சுடுதா? என்று கேட்பதாக வரும் என்றும் நினைவு. நான் தவறாகவும் இருக்கலாம்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத பாடல்கள்...

KILLERGEE Devakottai said...

விளக்கமுடன் விவரித்து சொன்னவிதம் அருமை நன்றி சகோ.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எக்காலத்திற்கும் பொருந்துவன. நன்றி.

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டி, வாழ்த்துக்களும் சொன்னதற்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

காணொளியைப் பார்த்தீர்களா ஸ்ரீராம்? அதில் ‘ சுட்ட பழம்’ கேட்பதாகத்தான் இருக்கிறது! ரசித்து எழுதியதற்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இனிய நன்றி நாகேந்திர பாரதி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

துரை செல்வராஜூ said...

ஔவையாரின் பாடல்கள் தான் குழந்தைகளுக்குப் பாலபாடம்..

பள்ளியில் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் முன்பாக தாய் சொல்லிக் கொடுப்பது..
ஔவையாரின் அமுத வாக்கினைப் பதிவில் கண்டு மகிழ்ச்சி..

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாடல்கள்! சுட்ட பழம் சுடாத பழம் பாடல் அறிவோம். முதல் பாடல் புதியது. தங்களின் பதிவு மூலம் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி! சகோ/ மனோக்கா

துளசிதரன், கீதா