Friday, 21 February 2020

சர்க்கரை நோய்க்கான உணவு முறை- பகுதி-3


இதுவரை மதியம் உணவு வரை சர்க்கரை நோய்க்கான உணவு முறைகளை எழுதியிருந்தேன். இனி இரவில் என்னென்ன சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் வாரம் ஒரு முறை தயிர் வடை சாப்பிடலாம் [ இரண்டு வடைகளை தயிரில் மூழ்கடித்து ] சாப்பிடலாம் என்று சொன்னார். காராமணி, கருப்புக்கொண்டகடலை,முழுப்பயிறு இவைகளை ஊறவைத்து முளைகட்ட வைத்து உப்பு, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக வைத்து அல்லது குறைந்த நீரில் இலேசான வேக்காடு வைத்து நீரெல்லாம் சுண்டியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து ஒரு கிண்ணம் சாப்பிடலாம். கூடவே ஒரு சிறிய ஆரஞ்சுப்பழம் அல்லது பாதி ஆப்பிள் பழம் சாப்பிடலாம். வயிறும் நிரம்புவதுடன் சத்தான ஆகாரமும்கூட! மாவுச்சத்து இல்லாததால் உடல் இலேசாக இருப்பதை உணர முடியும்.
கொள்ளு அல்லது பாசிப்பயிறு கால் கப், கோதுமை ரவா கால் கப் என்று சம அளவில் எடுத்து வெங்காயம் தக்காளி சீரகம் பூண்டுப்பற்கள் மல்லித்தழை சேர்த்து கஞ்சி செய்து தேங்காய்த்துருவல் அல்லது சிறிது தேங்காப்பால் சேர்த்து கஞ்சி குடிக்கலாம்.
முன்பு எழுதியிருந்த கீன்வா விதைகளை சாலட் அல்லது தக்காளி சாதம் போல செய்து சாப்பிடலாம். அதன் செய்முறைகளை கீழே எழுதுகிறேன்.
கீன்வா தக்காளி சாதம்:

அரை கப் கீன்வாவை 1 கப் நீர், ¼ ஸ்பூன் எண்ணெயில் சமைக்கவும். 1 மே.க எண்ணெயில் ஒரு கிராம்பு, ஒரு சிறு துண்டு பட்டை தாளித்து 1 மே.க நறுக்கிய பூண்டு, 1 வெங்காயம், 2 தக்காளி 1 பச்சை மிளகாய் வதக்கவும். 1/2 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து நன்கு குழைய வதக்கி கீன்வாவை சேர்த்து மல்லி சேர்த்து கிளறவும். 
கீன்வா சாலட்:
இது கீன்வா சேர்க்காத கொண்டக்கடலை காய்கறி சாலட்
பொதுவாய் இந்த கீன்வாவை நான் முன்பே சொன்னபடி சமைத்து இலேசாக உப்பு எண்ணெய் சேர்த்து கெட்டியானதும் ஆற வைத்து ஃபிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். இதில் எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்து காரட் வெள்ளரி வெங்காய்த்துண்டுகள் வேக வைத்த கொண்டக்கடலை சிறிது 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் தேவையான உப்பு எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் கலந்து உண்ணலாம். தயிர் சாலட் செய்ய வேண்டுமென்றால் கீன்வா கால் கப் எடுத்து போதிய தயிரில் கலந்து அதில் சில மாதுளை முத்துக்களை சேர்க்கவும். சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு வேர்க்கடலை பொட்டுக்கடலை தலா ஒரு ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தக்காளியைப்பொடியாய் அரிந்து போட்டு  துருவிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அதையும் வதக்கிக்கொட்டவும். எல்லாம் நன்றாக கலக்கவும். இதுவும் ஒரு முழு உணவிற்கு சமமானது.
பயிறு ஓட்ஸ் கலந்து பணியாரம் செய்து சாப்பிடலாம். அரிசி அல்லது கோதுமை அதிகம் சேர்க்காமல் எண்ணற்ற சமையல் குறிப்புகள் கிடைக்கின்றன. நமக்கு வேண்டியதெல்லாம் ஆர்வம் மட்டும்தான்.
சகோதரர் தனபாலன் கால் மதமதப்பு பற்றி கேட்டிருந்தார். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு நாளடைவில் வரும் பிரச்சினை இது. சில சமயம் இது சர்க்கரை நோயால் தான் என்று நினைத்து அசட்டையாக விட்டிருப்போம். கால்களில் வரிகோஸ் என்ற நரம்பு பிரச்சினையினாலும் இந்த மதமதப்பு ஏற்படும். அதனால் முதலில் இந்த மதமதப்பு எதனால் வந்திருக்கிறது என்பதை ஒரு மருத்துவரிடம் சென்று தான் கண்டு பிடிக்க வேண்டும்.. ஒரு வஸ்குலர் சர்ஜன் நம் நரம்புகளில் வரிகோஸ் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டு பிடித்து அதற்கான தீர்வும் சொல்வார்.
சர்க்கரை என்றாலும் வரிகோஸ் என்றாலும் கால்களில் மதமதப்பு குறைய நல்ல மூலிகை எண்ணெய் தேய்ப்பதிலும் முறையான யோகப்பயிற்சி மருத்துவர்களிடம் அதற்கான பயிற்சிகளைக்கற்றுக்கொள்வதிலும் சில நல்ல ஹோமியோபதி மருத்துவத்திலும் அக்குபங்க்ச்சர் மருத்துவத்திலும் நிறைய வாய்ப்பிருக்கின்றன. முயற்சி செய்து பாருங்கள் சகோதரர் தனபாலன்.
இந்த பதிவுகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவியாய் இருந்தால் அதுவே இந்தப்பதிவுகளை எழுதியதற்கான பலன் என்று நம்புகிறேன்.