Monday 21 February 2011

வடிகால்

முந்தைய வாரத்தின் தொடர்ச்சி......   



“ இது விளையாட்டில்லை பாட்டி. யாசகம். ஒரு குழந்தையைப் பெற முடியாதவளின் ஆசை. ஒரு விபத்தில் இவளுக்குத் தாய்மையின் தகுதி போய் விட்டது. ஒருவருக்கு மற்றவர்தான் துணை என்று அவளைப் பழக்கினேன். ஆனால் அவளுடைய ஏக்கத்தை என்னால் போக்க முடியவில்லை. ஏதாவது ஒரு குழந்தையை-அதுவும் இந்தியாவில்-தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற முடிவு செய்த பிறகு நாங்கள் முதன் முதலாக நுழைந்த ஊர் இதுதான். இந்தக் குழந்தையைப் பார்த்த பிறகு என் மனைவி கேட்டது சரிதானோ எனக்குத் தோன்றுகிறது” என்றார் ஜார்ஜ்.

“ இதற்குப்பெயர் யாசகம் இல்லை. இல்லாததைக் கேட்டு வாங்குவது என்பது யாசகமாய் இருக்கலாம். ஆனால் மற்றவருடைய குழந்தையை தன் வயிற்றில் பிறந்ததாக நினைத்து வளர்க்க, அதற்கு கல்வி, மற்ற எல்லா செல்வங்களையும் கொடுத்து உயர் நிலையில் வைக்க மனதில் ரொம்பவும் கருணை-பெருந்தன்மை வேண்டும்”

பாட்டியின் அழகான ஆங்கிலத்தில் அதிசயித்துப்போய் ரோஸரீனா கேட்டாள்.

“எப்படி பாட்டி இத்தனை அழகாக உங்களால் ஆங்கிலம் பேச முடிகிறது?”

“அதுவா? நான் சின்னப் பெண்ணாக இருந்தபோதே கற்றுக்கொண்டது.. .. ..”

பாட்டியின் முகம்-எதிலோ-எந்த நினைவிலோ மெய்மறப்பது போலிருந்தது.
பாட்டிக்கு தன் சிறு வயதுப்பெயர் ஞாபகத்திற்கு வந்தது.

குமுதம்!

ஓர் ஆசிரியரின் மகளாய்ப் பிறந்ததால் இயற்கையாகவே அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் அவளுள் நிரம்பியிருந்தது. தந்தை தன் மாணவர்களுக்காக திண்ணையில் ஆங்கிலம் கற்பித்தபோது இவளும் உட்புறத்தில் அமர்ந்தவாறே நோட்டில் எழுதிப்படித்துக் கற்றாள்.
அவ்வளவு உற்சாகம்.. ஆசை..அன்பு..கருணை என வாழ்க்கையில் எத்தனையோ உணர்ச்சிகளை வைத்திருந்தவள், பதினைந்து வயதில் திருமணம் என்ற ஒன்று ஆனதுமே மாறிப்போனாள்.

கணவனிடம் தோழமையில்லை. அவனுடைய தாயிடம் தாயின் பரிவில்லை. மற்றவர்களிடமோ உண்மையான அன்பில்லை. அவளின் கருணைக்கோ, பரிவிற்கோ அங்கு எந்தப்பயனுமில்லாமல், வெகுளித்தனமான மனசில் நிறைய அடிகள் விழ விழ அவள் மாறிப்போனாள். திரும்பவும் பெற்றோரைப் புகலிடமாக நினைத்துப்போக அவர்கள் உயிருடன் இல்லாத நிலையில், வெளியே சென்று பிழைக்கும் அளவிற்குக் கல்வித்தகுதியுமில்லை என்ற நிதர்சனத்தில்  அவள் முற்றிலும் ஜடமாகிப்போனாள். மலடி என்ற பட்டம் அவள் உள்ள‌த்தைக் கிழித்துப்போட்ட பிறகு, எதற்காவது சிரிப்பு என்று வந்தால்கூட அதைத் தொண்டையிலேயே நிறுத்தி விடும் அள‌வு அவள் பழகிப்போனாள்.

அவளுடைய பதினைந்து வயதிலிருந்து அறுபது வயது வரை அனுபவித்த சிறைவாசம் அவளுடைய கணவனின் இறப்பென்ற முடிவில் ஒரு நாள் நின்று போனது. அத்துடன் அவள் கணவனால் ஏற்பட்டிருந்த கடன்களுக்கு அந்தப் பெரிய வீடும் அதன் சொத்துக்களும் சரியாகப்போனதும் அவள் அமைதியாக பெற்றோர் அவளுக்கென விட்டுச் சென்ற இந்த பழைய வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

அவளுக்கு தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் பிடிக்கவில்லை. மூச்சு முட்ட அனுபவித்த சிறை வாசம் நின்று போன மகிழ்வில், இந்த விடுதலையை-அதன் அமைதியையாவது அவள் எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் அனுபவிக்கத் தீர்மானித்திருந்தாள்.

“ பாட்டி!”

ஒரு நிமிடத்தில் பழைய உலகிற்குப்போனவள் மறுபடியும் அதே வேகத்தில் நிகழ்காலத்திற்கு வந்தாள்.

“ ஒண்ணுமில்லை.. .. பழைய ஞாபகங்கள்.. ..”

அவர்கள் விடை பெற எழுந்தார்கள்.

“ பாட்டி! குழந்தையைப்பற்றி  .. ..”

 “ இல்லையப்பா! இத்தனை நாட்கள் எந்த பந்தமுமில்லாது வாழ்ந்து விட்டேன். இந்தப் புதிய உறவு இந்த வயதில்கூட எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது!”

“ ஓ.கே.பாட்டி! நாங்கள் கிளம்புகிறோம், இங்கு மலை மேலுள்ள கோவிலுக்கு இன்றைக்கு மாலை சென்று விட்டு அப்படியே ஊருக்குக் கிளம்புகிறோம். ஒரு வேளை உங்கள் மனசு மாறினால் .. .. எங்களை நீங்கள் அங்கே சந்திக்கலாம்.”

அவர்கள் விடை பெற்றுப்போய் ரொம்ப நேரமாகியும் அவள் பேசாமலேயே அந்த சாய்வு நாற்காலியிலேயே சாய்ந்து கிடந்தாள்.

‘இந்தப் புதிய உறவு எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் எழுபது வயதாயிருக்கும் என்னால் இந்தக் குழந்தையின் வாழ்க்கையில் புத்துணர்ச்சியைத் தர முடியுமா? நல்ல கல்வியைத் தர முடியுமா? உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியுமா? யாருடைய அன்பாவது வேண்டும் என்ற தவிப்பான வயது போய், யாருடைய அன்பும் தேவையில்லை என்ற முதிர்ச்சியான‌ வயதில் இருக்கும் எனக்கு எதற்காக ஒரு பந்தம்? இந்த பந்தத்தினால் ஒரு குழந்தையின் வாழ்க்கையை-அதன் எதிர்காலத்தையல்லவா அழிக்கிறேன்?”

மனம் கனக்க ஏதேதோ குற்ற உணர்ச்சியால் சிந்தனை குழம்பியது. கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் அலை பாய்ந்தன.   பாரதியின் பாடல்களை அனிச்சையாகப் புரட்டிக்கொண்டே வந்தவளின் கண்கள் திடீரென அனிச்சையாக ஓரிடத்தில் நிலைத்தன.

“ மரணமு மஞ்சேன் நோய்களை அஞ்சேன் மாரவெம் பேயினை அஞ்சேன்
இரணமும் சுகமும் பழியும்- நற்புகழ் யாவுமோர் பொருளெனக்கொள்ளேன்..
.. .. .. . . . . . .. . . . . .. .. .. .. .. . . . . . .
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும் மயங்கிலேன், மனமென்னும் பெயர்கொள் கண்ணிலாப்பேயை யெள்ளுவேன், இனியெக்காலுமே.. .. அமைதியிலிருப்பேன் .. .. ’
அவள் மெதுவாகக்  கண்களை மூடினாள். மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. கூடவே மனதில் ரொம்ப நாட்களாய் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகி விட்டதைப்போலிருந்தது. இதுவரை அவளறியாத ஓர் அமைதி மனதில் குடி கொண்டது.


மாலைக்கதிரவனின் ஒளிக்கீற்றுக்களிடையே பாட்டி மெதுவாகப் படி ஏறினாள். இருபது படிகள் ஏறுவதற்குள்ளாகவே மூச்சு இரைக்கவே, மெதுவாக படிகளுக்கிடையே இருந்த அந்த சிறு மண்டபத்தில் குழந்தையோடு அமர்ந்து கொண்டாள்.
“ பாட்டி”!
நிமிர்ந்தவளை அவர்கள் கை குவித்து வணங்கினர்.
“ என்ன பாட்டி.. ..மனசு மாறி விட்டதா?”
அந்தப் பெண்ணின் மகிழ்ச்சிப் பரவசத்தைப்பார்த்து மனம் கனிந்தவாறே
ஊமைப்பாட்டி கூறினாள்.

“ ஆமாம்மா! மனசு மாறி விட்டது. என் காலம் முடியப்போகிற நேரத்தில் பந்தம் எதுவும் வேண்டாம் என்று தோன்றியது. என் வேண்டுகோள் எல்லாம் இந்தக் குழந்தையை நீங்கள் நன்றாக படிக்க வைத்து, சமூகத்தில் ஒரு நல்ல உயர் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வளவுதான்.”

பாட்டி மெதுவாகக் குழந்தையைக் கொடுத்தாள்.

“பாட்டி! இந்தக் குழந்தைக்கு ஏதாவது பணம்..”

“ இந்தப்பணமென்பது என்னிடம் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை உங்களிடம் தந்திருக்க மாட்டேன்..”

அவர்கள் பல முறை நன்றி கூறி, கண்கள் கலங்கப் புறப்பட்டுச் சென்ற பிறகும்.. போய் வெகு நேரமாகியும் பாட்டி சிவந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு மனம் நிறைந்து, திடீரெனெ ஏற்பட்ட ஒரு பந்தத்தை ‘தன்னைப்போன்ற’ இன்னொருத்திக்கு அர்ப்பணித்தபோது.. ..இத்தனை நாட்கள் செயலற்று, வழியற்றுக் கிடந்த அவளின் கருணைக்கும் அன்புக்கும் இந்த வடிகால் கிடைத்த நிறைவில் அவள் மனது மகிழ்ச்சியால் பொங்கியது. சுத்தமாக பந்தங்களையும் பாசங்களையும் அறுத்து விட்டு, யாருக்கும் பயப்படட் தேவையில்லாமல்.. .. சுதந்திரமாக, நிச்சலனமாக.. .. தன் மனதுக்குப் பிடித்தமான ஒன்றை மற்றொருவருடைய மகிழ்ச்சிக்காக அர்ப்பணிப்பது எவ்வளவு  பெரிய விஷயம்? எழுபது வருட ரணங்களும் துன்பங்களும் இந்த சாதனையில் தூசியாய் மறைய ஆரம்பிக்க, கிழவி சிரித்தவாறே இறங்க ஆரம்பித்தாள்.

கீழே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் “டேய்! ஊமைப்பாட்டி சிரிக்கிறாங்கடா!” என்று ஆச்சரியத்துடன் கூச்சலிட்டார்கள்!!   

 [நிறைவடைந்தது]                                  

46 comments:

சுதர்ஷன் said...

.// தன் மனதுக்குப் பிடித்தமான ஒன்றை மற்றொருவருடைய மகிழ்ச்சிக்காக அர்ப்பணிப்பது எவ்வளவு பெரிய விஷயம்?//
:)
வலி கலந்த மகிழ்ச்சி கிடைக்கும் :) வாழ்த்துக்கள் :)

தமிழால் வளர்ந்தேன் - உலக தாய்மொழி தினம்

தமிழ் உதயம் said...

நேசம், மானுடம், அர்ப்பணிப்பு என்று அனைத்தையும் சொன்ன கதை.

'பரிவை' சே.குமார் said...

Amma...
romba niraivai mudinthirukkirathu kathai...
arumai...
niraiya kathai ezhuthungal...

raji said...

மனதை உருக்கும் மிக அருமையான கதை

தன் வாழ்கையில் கிடைத்த சோலையை பிறருக்கு
அர்ப்பணிக்கவும் மன பக்குவம் வேண்டும்

Asiya Omar said...

நல்ல முடிவு.அருமையான எழுத்து நடை.

middleclassmadhavi said...

//இனியெக்காலுமே.. .. அமைதியிலிருப்பேன்// பாட்டி மன அமைதியோடு சிரிக்கட்டும்!

அருமையான கதை!

Yaathoramani.blogspot.com said...

ஒரு குழந்தைக்கு இரு தாய் சண்டையிட்டதில்
கொடுத்ததன் மூலமே தாய்மையை நிரூபித்த
ஒரு தாயின் தாய்மையை ஊமைக் கிழவியின்
உருவில் சந்தித்தேன்.மன நிறைவு தந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பத்மநாபன் said...

உணர்ச்சி வசமிக்க சூழ்நிலையிலும் ,பாட்டி அறிவுபூர்வமாக எடுத்த முடிவு நிறைய கதைகளை சொல்கிறது..அக்குழந்தைக்கும் நல்வாழ்வு கிடைப்பது மட்டுமில்லாமல் அத்தம்பதியர்க்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது ..பாட்டியின் வெறுமைக்கு கிடைத்த பெரிய வடிகால்.. கதை சொன்ன பாங்கு மிக அருமையாக இருந்தது மேடம்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு...

ஹைஷ்126 said...

அக்கா சூப்பர் கதை. ஆனால் நான் எதிர் பார்த்தமுடிவுதான். ஆனால் 25 வருஷத்திற்க்கு பிறகு :)

பாட்டியின் முடிவு மிக சரியான முடிவுதான்.

வாழ்க வளமுடன்

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் சுதர்சனன்!!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
R. Gopi said...

இரண்டு பகுதிகளையும் படித்தேன். மிகச் சிறப்பான கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிறுகதையைப் படித்ததும், கதையின் முடிவு, மனதுக்கு நிறைவாகவே இருந்தது.

நான் மிகவும் ரசித்த வரிகள்:


//அவள் உள்ள‌த்தைக் கிழித்துப்போட்ட பிறகு, எதற்காவது சிரிப்பு என்று வந்தால்கூட அதைத் தொண்டையிலேயே நிறுத்தி விடும் அள‌வு அவள் பழகிப்போனாள்.

தன் மனதுக்குப் பிடித்தமான ஒன்றை மற்றொருவருடைய மகிழ்ச்சிக்காக அர்ப்பணிப்பது எவ்வளவு பெரிய விஷயம்? //

Chitra said...

நெகிழ வைக்கும் கதைங்க.... உங்கள் எழுத்து நடையும், வார்த்தை பிரயோகமும் அம்சமாக இருக்குதுங்க...

ஸாதிகா said...

கதையினை சுபமாக முடித்து இருந்தது இதமாக இருந்தது அக்கா.

அக்கா இதனை படித்து கருத்து சொல்லுங்கள்

ADHI VENKAT said...

அருமையான நடை. கதை முடிவு நன்றாக இருந்ததும்மா.

athira said...

மிக நன்றாக ஆரம்பித்து நன்றாகவே முடித்திருக்கிறீங்க மனோ அக்கா, இப்போதான் இரு பகுதியையும் படித்து முடிக்க நேரம் கிடைத்தது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என் அம்மாவிடம் படித்துக் காண்பித்தேன்..மிக..மிக ..சந்தோஷப் பட்டார்கள்!

Jaleela Kamal said...

அருமையான முடிவு,

மனோ சாமிநாதன் said...

ஊக்குவிப்பிற்கும் அன்பான பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் குமார்!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு மனங்கனிந்த நன்றி தமிழ் உதயம்!!

Kanchana Radhakrishnan said...

நல்ல முடிவு.அருமையா இருக்கு.

இலா said...

மனோ ஆன்டி! ரொம்ப உருக்கமான கதை. பாட்டி முடிவும் அருமை. பெறா பிள்ளைக்கு துடிக்கும் இரு தாய்மார் ரொம்ப நல்ல கருத்து.

Anisha Yunus said...

romba arumaiyaaga irunthathu akka. unarchikalukku utpadaama unarvugalai ubayogithu mudivu seytha antha oomaippaatti unmaiyil paaraattath thakkaval.

nanri, nallathoru pagirvirku. :)

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

பாசங்களை அறுத்து, பற்றுக்கோடுகளை அழித்து மரணத்தை வரவேற்கும் காலத்தில் பாட்டி எடுத்த முடிவு சரியானதே!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் ராஜி! தன் மனதிற்குப்பிடித்தவற்றை மற்ற‌வர்களுக்குக் கொடுத்து சந்தோஷப்படுத்தும் மனப்பக்குவம் வாழ்க்கையில் வெகு சிலருக்கே இருக்கும். உங்களின் மனந்திறந்த பாராட்டுக்கு என் மகிழ்வான நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!!

மனோ சாமிநாதன் said...

பாரதியின் வார்த்தையோடு பாராட்டியிருக்கிறீர்கள் மாதவி!! என் அன்பார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அருமையான வரிகளுடன் பாராட்டியதற்காக இனிய நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

அழகிய வார்த்தைகளைக் கோர்த்து என் கதையினைப் பாராட்டியதற்கு உளமார்ந்த நன்றி சகோதரர் பத்மநாபன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் நாஞ்சில் மனோ!!

மனோ சாமிநாதன் said...

அன்புப் பாராட்டிற்கு என் மனங்கனிந்த நன்றி ஹைஷ்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு நெஞ்சம் நிறைந்த மகிழ்வான நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
நீங்கள் ரசித்த வரிகள் என் மனதுக்கும் மிகவும் பிடித்த வரிகள்!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டில் மனம் மகிழ, நெகிழ்வாய் நன்றியை உதிர்க்கிறேன் சித்ரா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஸாதிகா!
உங்களின் 'வார்த்தை ஜாலம்' அருமை! பின்னூட்டமிட்டிருக்கிறேன். பார்த்திருப்பீர்கள் என் நினைக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டுக்கு மகிழ்வான நன்றி ஆதி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டு மகிழ்வைத்தந்தது அதிரா! நீங்கள் தற்போது அடிக்கடி வந்து பின்னூட்டமிடுவது அதையும் விட மகிழ்வையும் நெகிழ்வையும் தருகிறது!!

மனோ சாமிநாதன் said...

அம்மாவிடம் படித்துக் காண்பித்த தங்களின் அக்கறைக்கு என் இதயங்கனிந்த நன்றி சகோதரர் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி!! அம்மா அவர்கள் சந்தோஷப்பட்டது என் பாக்கியம்! வயதில் மூத்தவர்களை சந்தோஷப்படுத்தியதில் என் மன நிறைவு இரட்டிப்பாக்கிறது!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பான நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு மகிழ்வான நன்றி காஞ்சனா!!

மனோ சாமிநாதன் said...

அன்பு இலா! ரொம்ப நாட்களுக்குப்பின் உங்களை இங்கு பார்க்கிறேன்! மகிழ்வாக இருக்கிறது!பாராட்டிப் பின்னூட்டமிட்டதற்கு என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

உனர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்காது மன உனர்வுகளுக்கு மரியாதை செய்த இந்த பாட்டியின் முடிவு உங்களுக்கு பிடித்துப்போய் அன்பான பின்னூட்டமிட்டதற்கு என் இனிய நன்றி அன்னு!!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் எழுதியது மிகவும் சரி சகோதரர் லக்ஷ்மி நாராயணன்!
தன்னுடையதை மற்ற‌வர்களுக்கு மன நிறைவுடன் தானமளிக்கிற பெருந்தன்மை வெகு சிலருக்குத்தான் வரும்!!
அன்பான பின்னூட்டத்திற்கு என் மகிழ்வான நன்றி!!

இமா க்றிஸ் said...

வெகு காலம் கழித்து அருமையான ஓர் கதை படித்த நிறைவு. பாராட்டுக்கள் அக்கா.