Wednesday, 7 December 2011

முருங்கைக்கீரை அடை

சமையல் பகுதிக்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டதால் இந்த முறை ஒரு ருசிகரமான சமையல் குறிப்பை சமையல் முத்தாகப் படைக்கிறேன்.

பொதுவாக அடை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் வித விதமான அடைகள் இருக்கின்றன. கார அடையில் நிறைய வகைகள். முறுமுறுவென்ற அடை, மிருதுவான அடை, பருப்புக்கள் அதிகம் சேர்க்காத மரவள்ளி அடை, சர்க்கரை வள்ளி அடை, பரங்கி அடை இப்படி பல வகைகளில் அடைகள் செய்யும் விதங்கள் இருக்கின்றன.

அது போல‌ அடைக்குத் தொட்டுக்கொள்ள‌ ஒவ்வொருத்த‌ரின் ரசனை ஒவ்வொரு விதம். சிலருக்கு கெட்டியான தேங்காய்ச் சட்னி வேண்டும். சிலருக்கு காரமான மிளகாய்ச் சட்னி வேண்டும். சிலருக்கோ வெல்லமும் வெண்ணெயும் வேண்டும். உணவகங்களில் அடைக்கு அவியல்தான் காம்பினேஷன் என்கிறார்கள். சிலருக்கு எதுவுமே தொட்டுக்கொள்ளாமல் சும்மாவே சாப்பிடப்பிடிக்கும்.[எனக்கும் அப்படித்தான்]

நான் இங்கே கொடுக்கப் போவது முருங்கைக்கீரை அடை!




முருங்கைக்கீரை அடை

தேவையான பொருள்கள்:
துவ‌ர‌ம் ப‌ருப்பு= 1 க‌ப்
பாசிப்ப‌ருப்பு‍ = அரை க‌ப்
க‌ட‌லைப்ப‌ருப்பு=‍ 1 க‌ப்
உளுத்த‌ம்ப‌ருப்பு‍ =அரை க‌ப்
புழுங்க‌ல‌ரிசி‍ = அரை க‌ப்
ப‌ச்ச‌ரிசி= அரை க‌ப்
வ‌ற்ற‌ல் மிள‌காய்‍=8
சோம்பு=1 ஸ்பூன்
பொடியாக‌ அரிய‌ப்ப‌ட்ட‌‌  வெங்காய‌ம்=2
தேங்காய்த்துருவ‌ல்=அரை க‌ப்
க‌டுகு‍=1 ஸ்பூன்
நெய்‍= 1 ஸ்பூன்
எண்ணெய்=1 ஸ்பூன்
க‌றிவேப்பிலை=சிறிது
முருங்கைக்கீரை= 1 க‌ப்
தேவையான‌ உப்பு
செய்முறை:

ப‌ருப்பு வ‌கைகளையும் அரிசி வகைகளையும் தனித்தனியாக, போதுமான‌ நீரில் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் ஊற‌ வைக்க‌வும்.

முத‌லில் அரிசி வ‌கைக‌ளை மிள‌காய், சோம்பு சேர்த்து இலேசான‌ கொர‌கொர‌ப்புட‌ன் அரைக்க‌வும்.

பிற‌கு ப‌ருப்பு வ‌கைக‌ளைச் சேர்த்து கொர‌கொர‌ப்பாக‌ உப்புட‌ன் சேர்த்து அரைக்க‌வும்.

தேங்காய்த்துருவ‌ல், முருங்கைக்கீரை, வெங்காய‌ம் சேர்க்க‌வும்.

நெய், எண்ணெய் இர‌ண்டையும் சேர்த்து சுட‌ வைத்து க‌டுகு, காய‌ம், க‌றிவேப்பிலைக‌ளைத் தாளித்து அடை மாவில் கொட்டி க‌ல‌க்க‌வும்.

தோசைக்க‌ல்லில் மெல்லிய‌ அடைக‌ளாய் வார்த்து, பொன் முறுவ‌லாய் ஆகும் வ‌ரை வேக‌விட்டு எடுக்க‌வும்.

சுவையான‌ முருங்கைக்கீரை அடை சூடாக‌ இப்போது த‌யார்!!!