Wednesday, 6 April 2011

அனுபவங்களே முத்துக்களாய்.. .. ..!!!

நம் வாழ்க்கை, தினந்தோறும் சோகம், மகிழ்வு, அதிர்ச்சி, கசப்பு, -இப்படி பல உணர்வுகளை அள்ளித்தெளித்து, அனுபவங்களால் நம்மை முதிர்ச்சியடைய வைக்கிறது. இலைகளினூடே ஒளிரும் ஒளிக்கற்றைகள் போல், நெடுகச் செல்லும் இந்த அனுபவங்களிடையே சில கவிதைகள், கதைகள், சில அசத்தும் சம்பவங்கள், கொஞ்ச நேரம் நம்மை நிற்க வைத்து புன்னகைக்கச் செய்கின்றன, ரசிக்கச் செய்கின்றன!! நம்மை யோசிக்க வைக்கின்றன!!


சமீபத்தில் ரசித்த கவிதை இது. வாழ்க்கையின் நிதர்சனமும்கூட. ஒரு வாரமலரில் வெளி வந்திருந்தது.



'அச்சம் தவிர்' என்கிறான் பாரதி

'பயந்து நட' என்கிறார் அப்பா!

'துணிந்து நில் என்கிறான் பாரதி

'பணிந்து நட' என்கிறாள் அம்மா!

'ரவுத்திரம் பழகு' என்கிறான் பாரதி

கோபம் குறை என்கிறான் அண்ணன்!

'சிறுமை கண்டு பொங்குவாய்' என்கிறான் பாரதி

'நமக்கேன் வம்பு, கண்டு கொள்ளாதே' என்கிறார் கணவர்!

'நாடாளச் சொல்கிறான்' பாரதி.

'வீட்டுக்குள் ஒடுங்கச் சொல்கிறார்' மாமியார்!

'பெண்மையைப்போற்றுவோம்' என்கிறான் பாரதி.

தூற்றத் துடிதுடிக்கிறது ஊர்!

சகல் விஷயங்களிலும்

உதைபடும் பந்தாய்

அலைக்கழிக்கப்படுகிறேன் நான்!

யார் சொல்வதைக் கேட்பதாம்?

***************************************

இதுவும் கூட நான் பொக்கிஷமாக என் டைரியில் பல வருடங்களாகப் பாதுகாத்து வரும் ஒரு ஆங்கிலக் கவிதை. தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதுவும் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்த்தும் கவிதை! அது மட்டுமல்ல, இது ஒரு வழிகாட்டியும்கூட.. .. ..

இனி கவிதை .. ,, .. ..

“எல்லோருக்குமே நம் வாழ்வில் முன் வரிசையில் இடம் தந்து விட முடியாது.

சிலர் மட்டும் தூரத்தில் வைத்தே அன்பு செய்யப்பட வேண்டியவர்கள்.

மாறுபட்ட, கருத்திற்கு ஒவ்வாத, விரும்பத்தகாத உறவுகளை இதுபோல தூரத்தில் வைக்கும்போது, இந்தச் செயல் எந்த அளவு நம் வாழ்க்கையை மாற்றுகிறது என்பது பிரமிப்பளிக்கக்கூடிய விஷயம்!

உங்களைச்சுற்றி இருக்கும் உறவுகளை கூர்ந்து கவனியுங்கள்.

எந்த உறவு உங்களை மேல் நிறுத்துகிறது?

எந்த உறவு உங்களைக் கீழே தள்ளுகிறது?

எந்த உறவு உங்களை ஊக்குவிக்கிறது?

எந்த உறவு உங்களை அதைரியப்படுத்துகிறது?

தரம், வளர்ச்சி, அமைதி, அன்பு, உண்மை இவற்றை நீங்கள் தேடத்தேட, யாரை நம் வாழ்க்கையில் முன் வரிசையில் உட்கார வைக்க வேண்டும், யாரை பின் வரிசையில், பால்கனியில் உட்கார வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

தேடலில் கிடைக்கும் வலியை முத்துக்களாக்குங்கள்.



கடந்த காலத்தில், நிகழ்காலத்தில் நிறைய நிகழ்வுகள் உங்களை சோர்வடைய வைத்திருக்கும், வெறுப்படைய வைத்திருக்கும், சிந்தனையைத்தூண்டியிருக்கும், உங்களையே விழுங்கியிருக்கும். இந்த பாதிப்புக்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஒரு வகையான பாதிப்பு, சிப்பியினுள் நுழையும்போது, அது ஒரு திரவத்தை சுரந்து அந்த பாதிப்பை ஒரு போர்வை போல மூடுகிறது. பல மாதங்களுக்குப்பின் இது ஒரு முத்தாக மாறுகிறது.

அது போல ஒரு பாதிப்பு, உங்களுக்குள் நுழையும்போது, அது உங்களையே கரையான் போல அரித்து, பல வித நோய்களை உண்டு பண்ணுகிற அளவு அந்த பாதிப்பிற்கு நீங்கள் இடம் கொடுக்கலாம். அல்லது இந்த பாதிப்பு உங்களை எதுவுமே செய்ய இயலாதவாறு இது போன்ற விலைமதிப்பற்ற ‘முத்துக்கு’ச் சமமான அறிவு முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பெற்று எதிர்காலத்திற்குத் தேவையான நம்பிக்கையையும் புதிய பார்வையையும் பெறலாம்.

எது வேண்டும் உங்களுக்கு?

படங்களுக்கு நன்றி: http://www.tamilvu.org/

                                           http://www.appusami.com/