Wednesday 1 April 2020

நாம் தனிமைப்படுத்தப்படும்போது....

துபாயிலிருந்து தஞ்சைக்கு மார்ச் 8ந்தேதி புறப்பட்டபோது இத்தனை பெரிய திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படும் என்பது தெரிந்திருக்கவில்லை. தெரியாத ரகசியங்கள் நிறைந்தது தானே வாழ்க்கை!

தஞ்சைக்கு பிப்ரவரி முதல் வாரமே வந்திருக்க வேண்டியது. அப்போது தான் கொரோனா புயல் வீசத்தொடங்கிய நேரம். அந்த நேரத்தில் நாங்கள் கிளம்புவதை எங்கள் மகன் விரும்பவில்லை. ஒரு மாதமானால் கொரோனாவின் தீவிரம் குறையுமென்று நினைத்து பிரயாணத்தை ஒரு மாதம் தள்ளிப்போட்டோம். அப்போதும்கூட மகனுக்கு எங்களை அனுப்ப அவ்வளவாக விருப்பமில்லை.



மார்ச் மாத ஆரம்பம் என்பதால் சென்னை விமான நிலையத்தில் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு, விலாசம், தொலைபேசி எண் முதலியவற்றை வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டார்கள்.  தஞ்சை வந்து 10 நாட்கள் வரை எந்த பிரச்சினையுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தீவிரமடைய ஆரம்பித்ததும் நிலைமையே தலைகீழாக மாறத்தொடங்கியது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்கள் இல்லங்களின் வெளியே ஸ்டிக்கர் ஒட்டபப்டுகின்றன என்றும் கேள்விப்பட்டதும் அதற்கு முன்பாகவே தேவையான சாமான்களை வாங்கிப்போட்டு விட்டு நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது என்று தீர்மானித்தோம். வேலை செய்யும் பெண்ணை தற்காலிகமாக நிறுத்தினோம். வீட்டின் மாடியை சற்று இழுத்துக்கட்ட நினைத்து அதற்கான வேலைகளை அப்போது தான் ஆரம்பித்திருந்தோம். ஜல்லி, மண், சிமிண்ட் எல்லாம் வந்து இறங்க, மேல் தளத்தில் சில பகுதிகளை இடிக்க ஆரம்பித்திருந்தார்கள். பொறியாளரிடம் எல்லா வேலைகளையும் நிறுத்தச் சொன்னோம். எல்லாவற்றுக்கும் தயாராக இருந்த போது சற்று தாமதமாகவே ரெவின்யூ அலுவலகத்திலிருந்து வந்து நாங்கள் சென்னை வந்து இறங்கிய ‘ மார்ச் 8ந்தேதியிலிருந்து ஏப்ரல் 16 வரை இந்த வீடு தனிமைப்படுத்தப்படுகிறது. உள்ளே நுழையாதே ‘ என்ற ஸ்டிக்கரை ஒட்டி, கையிலும் சீல் வைத்தார்கள்.
அன்றிலிருந்து இந்த தனிமைப்படுத்தல் வாழ்க்கை தொடங்கியது. நாமும் வெளியே போகக்கூடாது என்பதும் யாரும் நம்மை வந்து பார்க்கக்கூடாது என்பதும் முக்கிய விதிகள்.
என் சிறிய நூலகம்
அது வரை சரளமாக வந்து போன உறவுகள் இங்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். மூத்த குடிமக்கள், இவர்கள் தனிமையில் இருக்கிறார்களே, ஏதாவது ஒரு வகையில் உதவுவோம் என்ற மனிதாபிமான அடிப்படையான காருண்யம் கூட குறைந்து போயிற்று. அப்படி யாராவது வந்து நின்று பேசினால்கூட அடுத்தவர் அதைப்பார்த்து ‘ அவர்கள் அருகில் போ விட வேண்டாம் ‘ என்று எச்சரிப்பதும் காதில் விழுந்தது.

ரொம்ப நாட்களாகவே ஒவ்வொரு முறையும் துபாயிலிருந்து இங்கு வந்து தங்கும்போது நாட்கள் மின்னலாய் மறைந்து விடும். வரும்போதே ஆயிரம் வேலைகள், முக்கிய திருமணங்கள், மருத்துவர்களின் சந்திப்புகள் என்று அடுக்கடுக்காக திட்டங்களும் கூடவே வருவதால் துபாய் மாதிரியே இங்கும் நாட்கள் யந்திரத்தனமாகவே பறக்கும். சற்று அமர்ந்து ஓய்வெடுக்க முனையும்போது திரும்பும் தேதி வந்து விடும். அவசர அவசரமாக தேவைப்படும் சாமான்கள் வாங்கி, அவற்றை பாக் செய்து திரும்பத் திரும்ப அவற்றின் எடையை சரி பார்த்து திரும்பவும் பறப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும். இந்த நிகழ்வுகள் கடந்த 40 வருடங்களாக ஒரே நேர்க்கோட்டில் எப்போதும் ஏற்படும் நிகழ்வுகள்!! அடிக்கடி ‘ கொஞ்ச நாட்களாவாது நம் வீட்டில் அப்பாடா என்று உட்கார்ந்து அமைதியாக நேரத்தை கழிக்க முடிந்ததா ‘ என்ற புலம்பல் மட்டும் ஓய்ந்ததில்லை!

இப்போது அந்த நேரம் கிடைத்திருக்கிறது! ஒவ்வொரு அறையையும் தூசி தட்டி சுத்தம் செய்யலாம். அடுக்கலாம். பழைய குப்பைகளை கிளறலாம். என் புத்தகங்களை எண் வாரியாக அடுக்கலாம். என் பழைய பொக்கிஷங்களை, என் ஓவியங்களை, என் கோலங்களை, ரசிக்கலாம். சுத்த தன்யாசி ஆலாபனையை உரத்த குரலில் ஓட விட்டு ரசிக்கலாம்! அமைதியாக ரசிக்க எத்தனை விஷயங்கள் இருக்கின்றன!

வாசலில் இன்று வரைந்த கோலம்
விடியற்காலைப்பொழுதில் வாசலில் போடும் அழகிய கோலத்துடன் அப்படித்தான் நாட்களை கழிக்க ஆரம்பித்திருக்கிறேன். அருகிலுள்ள ஒரு நண்பர் தேவையான பொருள்களை அவ்வப்போது வாங்கிக்கொடுத்து சென்று விடுவார். வாட்ஸ் அப் மூலம் மளிகை சாமான்களை வாங்கிக்கொள்கிறோம். இசையின் பின்னணியில் ஒவ்வொரு வேலையையும் ரசித்து செய்ய ஆரம்பித்து விட்டோம்! நேரம் தான் போதவில்லை எங்களுக்கு!!

29 comments:

வெங்கட் நாகராஜ் said...

கடைசி வரி - செம! நேரம் தான் போதவில்லை.

நேரம் நிறைய இருப்பதாக நினைத்தாலும் நேரம் நமக்கு பற்றாக்குறை தான். எத்தனையோ விஷயங்கள் உண்டு நாம் செய்ய.

தனிமையாக இருக்கும் இந்த நேரம் நமக்கு பல நிதர்சனம் சொல்லும் - அடுத்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

கவனமாக, நலமாக இருங்கள் மனோ ம்மா.... நலமே விளையட்டும்.

KILLERGEE Devakottai said...

வணக்கம் சகோ
தனிமைபடுத்தப்பட்டதை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்காமல் அத தங்களுக்கு சாதகமாக, சந்தோஷமாக எண்ணும் உங்களுக்கு எந்தக் குறையும் இறைவன் தரமாட்டான்.

நலமே விளையும் வாழ்க வளமுடன்.

துரை செல்வராஜூ said...

பிரச்னையின் தீவிரம் குறைந்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்...

ரசனையுடன் சொல்லியிருக்கிறீர்கள்..
ஆனாலும் மனம் பதறுகிறது...

எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக....

மனோ சாமிநாதன் said...

உங்களின் அக்கறைக்கு அன்பு நன்றி வெங்கட்!
அறுபத்தைந்து வயதைக்கடந்த நிலையில் மனிதர்களைப்பற்றி நிறையவே புரிந்திருந்தும் இந்த மாதிரி யாருமற்ற நிலையில் உதவ முன் வராதவர்கள் செயல் கொஞ்சமேனும் வலிக்கத்தான் செய்கிறது. இதுவும் கடந்து போகுமென்று நினைத்து கடந்து சென்று கொண்டிருக்கிறோம்!

மனோ சாமிநாதன் said...

அக்கறையும் நல்வார்த்தைகளும் மிகுந்த உங்களின் வாழ்த்து மனதின் தைரியத்தை அதிகரித்தது கில்லர்ஜி! அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்களுக்குப்பின் என் வலைத்தளம் வந்து இப்படி தைரியம் சொல்லியிருப்பது மனதின் வலிமையை அதிகரிக்கிறது சகோதரர் துரை செல்வராஜ்! என் மனம் நிறைந்த நன்றி உங்களுக்கு!!

முற்றும் அறிந்த அதிரா said...

ஓ இப்படி எல்லாம் அங்கு நடக்குதோ மனோ அக்கா, ஆனா பெப்ரவரியிலேயே பிரச்சனை அதிகம் தலை தூக்கிவிட்டபடியால நீங்கள் இன்னும் கொஞ்சம் தாமதித்திருக்கலாம், இருப்பினும் அதனாலென்ன, பொருட்கள் வாங்கித்தர ஆள் இருப்பதால், நன்கு ரெஸ்ட் எடுங்கோ.. அயலவர்கள் அப்படி இருப்பது அதுவும் நம் நாட்டில்.. கவலைக்குரிய விடயமே...

ஸ்ரீராம். said...

பாஸிட்டிவ் அப்ரோச்...    விரைவில் கடந்து விடும் நாட்கள்.  எல்லாம் நன்மைக்கே...

திண்டுக்கல் தனபாலன் said...

கவனமாக இருங்கள் அம்மா...

உங்களிடம் பேச வேண்டும் என்று கைப்பேசியில் குறித்து வைத்துள்ளேன்... எனது எண் 9944345233

கரந்தை ஜெயக்குமார் said...

அது வரை சரளமாக வந்து போன உறவுகள் இங்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். மூத்த குடிமக்கள், இவர்கள் தனிமையில் இருக்கிறார்களே, ஏதாவது ஒரு வகையில் உதவுவோம் என்ற மனிதாபிமான அடிப்படையான காருண்யம் கூட குறைந்து போயிற்று. அப்படி யாராவது வந்து நின்று பேசினால்கூட அடுத்தவர் அதைப்பார்த்து ‘ அவர்கள் அருகில் போ விட வேண்டாம் ‘ என்று எச்சரிப்பதும் காதில் விழுந்தது.

வேதனை
இப்படியுமா உறவுகளும் நண்பர்களும் இருப்பார்கள்
கடைசி வரியில் நேரம் போதவில்லை என்று சொல்லியுள்ளது மகிழ்வினைத் தருகிறது
எப்பொழுதும் ஏதோ ஒரு வேலையில் முழ்கி இருங்கள்
இதுவும் கடந்து போகும்

Yaathoramani.blogspot.com said...

கட்டாயத்தனிமை இல்லாவிட்டால் நமக்கு தனிமைச் சுகம் என்பது எட்டாக்கனியே..ஒருவகையில் இது கூட நன்மைக்கே எனப்படுகிறது..

priyasaki said...

இச்சூழ்நிலை எல்லா இடத்திலும் உண்டு. சில இடங்களில் வேறுபாடாக இருக்கும். ஆனால் மக்கல் மனநிலை ஒன்றுதான். நீங்க புத்தங்கள் படிக்கலாம்.ப்ளக் ல் எழுதலாம். நன்றாக ரெஸ்ட் எடுங்கோ மனோக்கா. எல்லாம் நல்லதே நடக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

சுத்த தன்யாசி ஆலாபனையை உரத்த குரலில் ஓட விட்டு ரசிக்கலாம்! //

செம மனோக்கா!!! யெஸ் தனிமைப்படுத்தலும் நமக்கு தேவைதான் அவ்வபோது. நம் தனிப்பட்ட ரசனைகள், வேலைகளைச் செய்யவும் இது உதவும். பல நல்ல விஷயங்கள் புரிபடும்.

அதுவும் கடைசி வரி!! செம! கரெக்டாகச் சொன்னீங்க....இப்போ நேரம் பத்தாதுதான்.

வெரி பாசிட்டிவ் மனோக்கா. நல்ல விஷயம். இதுவும் கடந்து போகும். நடப்பதெல்லாம் நன்மைக்கே. கவனமாக இருங்க. கோலம் ரொம்ப அழகா இருக்கு..

கீதா

மனோ சாமிநாதன் said...

நாங்கள் மார்ச் 8ந்தேதி சென்னை வந்திறங்கிய போது இந்தியாவில் எந்த மரணமும் நிகழவில்லை அதிரா. கொரோனா அப்போது தான் பரவ‌ ஆரம்பித்திருந்தது. அது விரைவில் அடங்கி விடும் என்று நினைத்து தான் வந்தோம். மாறாக கொரோனோ மிகவும் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது!
ஆனால் நான் எழுதியது போல நல்ல ஓய்வு எடுப்பதுடன் சுறுசுறுப்பாக வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம்!
கருத்துரைக்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

தங்களின் அக்கறையான சொல்லுக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

தங்க‌ளின் அறிவுரை என் தைரியத்தைக்கூட்டியது. தங்களுக்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

தங்க‌ளின் அறிவுரை என் தைரியத்தைக்கூட்டியது. தங்களுக்கு என் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்! !!

மனோ சாமிநாதன் said...

blessing in disguise என்று ஆங்கிலத்தில் சொல்வது போல எதிர்பாராமல் கிடைத்த இந்த தனிமையும் நேரமும் மனதில் நிம்மதியைத்தான் தருகிறது. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியானது சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

அன்பான வார்த்தைகளூக்கு இனிய நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள் கீதா! உங்கள் எழுத்து மனதில் மிகவும் மலர்ச்சியை உண்டு பண்ணியது என்று தான் சொல்ல வேண்டும். என் அன்பு நன்றி உங்களுக்கு!

கோமதி அரசு said...

நீங்கள் ஓவியம் நன்கு வரைவீர்கள் தானே! அதை மீண்டும் ஆரம்பித்து செய்யுங்கள்.

தனிமை படுத்த பட்டதை நினைத்து கஷ்டமாய் இருக்கிறது.
நீங்கள் நினைத்த மாதிரி வீட்டு வேலைகள் செய்ய முடியவில்லை , இப்படித்தான் எங்களுக்கும் பாதியில் நிற்கிறது வீட்டு ரிப்பேர் வேலைகள்.

எங்களை தனிமை படுத்தவில்லை அப்படியும் யாரும் வருவது இல்லை.
எங்கும் வெளியில் போககூடாது என்பதால் அவர் அவர் வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள்.


போனில் விசாரித்து கொள்கிறார்கள்.

வீட்டு வேலைக்கு யாரையும் அனுமதிப்பது இல்லை வளாகத்தில்.
வேலைகளை பார்ப்பதில், பேரனுடன் பேசுவதில் , வலைத்தளம் படிப்பது என்று நேரம் போதவில்லைதான்.

கோலம் அழகு. ஒவ்வொரு காரியத்தையும் ரசித்து செய்தால் நேரம் ஓடிவிடும்.பத்திரமாய் இருங்கள் மளிகை சமாங்கடை வீட்டுக்கு கொடுத்தவர்கள் கூட கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் வீட்டுக்கு போய் தான் வாங்க வேண்டி இருக்கிறது.

காய், பால் மட்டும் அனுமதி உள்ளே.

விரைவில் எல்லாம் சரியாக இறைவன் அருள் புரிய வேண்டும்.

unmaiyanavan said...

நேரம் தான் போதவில்லை எண்டு நீங்கள் மட்டும் தான் சொல்லியிருக்கிறீர்கள். அருமை.

Geetha Sambasivam said...

இப்படித் தனிமைப்படுத்தப்பட்டதன் மூலம் உறவினரின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்திருக்கும். எங்கள் வளாகத்தில் கடுமையான கட்டுப்பாடை குடியிருப்போர் சங்கமே ஏற்படுத்தி உள்ளது. யாரும் அனாவசியமாக வெளியே போவதில்லை. எங்களுக்குப் பால் மட்டும் வேலை செய்யும் பெண் வாங்கிக் கொடுத்து வருகிறாள். எங்கள் இயலாமையை நினைத்து அதை அனுமதித்திருக்கிறார்கள். மற்றபடி கீழே இருக்கும் வணிக வளாகத்தில் காய்கள், மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டோம். அது ஒன்றரை மாதமானும் வந்து விடும். ஆகவே வெளியே செல்ல வேண்டிய தேவை இல்லை.

Geetha Sambasivam said...

மருமகள் சுமார் 3 வருடங்களுக்குப் பின்னர் பெற்றோரைப் பார்க்க வந்தாள் குழந்தையுடன். அவள் இந்த மாதக் கடைசியில் திரும்ப வேண்டும். எங்கே! அங்கே மகன் தனியாக அவ்வளவு பெரிய வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். அக்கா வீடு பக்கத்திலேயே இருந்தும் அங்கே போக முடியாது. அனைவரும் வீட்டில் இருந்து அலுவலக வேலையைச் செய்கின்றனர். எனக்கு மருமகள் இப்படி மாட்டிக் கொண்டது தான் வருத்தத்தைத் தருகிறது. எவ்வளவு ஆவலுடன் வந்தாள். எங்கும் போக முடியவில்லை. :(

ராமலக்ஷ்மி said...

வருத்தம் அளிக்கிறது தங்கள் சூழல். உதவும் நண்பர்களும் இருப்பது ஆறுதல். நாட்கள் விரைவில் நகர்ந்து விடும். கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

Bhanumathy Venkateswaran said...

உங்களுடைய பாசிடிவ் அப்ரோச் மிகவும் பிடித்திருக்கிறது. கடினமான நேரத்தில் மனிதர்களின் உண்மையான சுபாவத்தை அறிந்து கொள்ளலாம். இதுவும் கடந்து போகும்.

Kasthuri Rengan said...

சோதனையான காலக்கட்டத்தில் மிகுந்த மனஉறுதியும் தன்னம்பிக்கையும் அவசியம் ...மீள்வோம் சந்திப்போம்

Anuprem said...

உங்களின் நேர்மறை எண்ணங்கள் மிக அழகு மா ...

எல்லாம் நன்மைக்கே , ஏற்கனவே அடுத்தவர்கள் பற்றிய புரிதல்கள் இருந்தாலும் இப்பொழுது இன்னும் இன்னும் பல புரிதல்களை தருகிறது இந்த நேரம் ...

தங்களை போலவே நேரம் பற்றாமல் நானும் இருக்கிறேன் ...

அமைதியாக , பிரார்த்தனைகளுடன் நாட்கள் செல்லுகின்றன