Friday 8 January 2016

முத்துக்குவியல்-40!!!

அசத்திய முத்து:

மதுரையில் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்கென்றே ஓசையின்றி இயங்கி வருகிறது உபகார்’  என்ற அமைப்பு. இதன் செயலாளரும் சிறப்புப் பயிற்றுனருமான ராதா ருக்மணி 1990ம் ஆண்டிலிருந்து இந்தப்பணிக்காக தன்னை அர்ப்பணித்து வ‌ருகிறார். பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தன் அமைப்பின் மூலம் கல்வி மற்றும் வாழ்வாதாரங்களை உருவாக்கித் தருகிறார் இவர்.
முதலில் இந்த அமைப்பு பார்வையற்றவர்களுக்காகத் தொடங்கப்பட்டது, பின்பு இது காது கேளாதோர், வாய் பேசாதோர் என்று பலதரப்பட்ட ஊனமுற்றோர்களுக்காக விரிவாக்கப்பட்டது.
இங்கே உடல் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று முதலில் அவர்களுடைய பெற்றோர்களுக்குத்தான் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதனால் வீட்டிலுள்ளோருடன் பார்வையற்றவர்கள் வாழ இயல்பான சூழ்நிலை ஏற்படுகிறது. இவர்கள் பள்ளி செல்லும் வயதடைந்ததும் அவர்களை இந்த அமைப்பு பொறுப்பேற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு மேலும் பயிற்சிகள் கொடுத்து மற்ற பள்ளிகளில் அவர்களை சேர்க்கிறது. இதற்காக அந்தப் பள்ளிகளில் இவர்களே சில சிறப்பு ஆசிரியர்களை பணியில் அமர்த்துக்கிறார்கள். 11 மாவட்டங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநில, மத்திய அரசு உதவிகளுடன் இந்த திட்டம் அருமையாக நடந்து வருகிறது.கல்விக்கு அப்பாலும் தொழிற்கல்வி, விளையாட்டுக்கள் இவற்றிலும் இவர் பிரகாசிக்க வழி வகைகள் செய்யப்படுகின்றன.
இத்தனை நல்ல விஷயங்களிலும் திருமதி ராதாருக்மணிக்கு ஒரு வருத்தம் இருப்பதை மனந்திறந்து சொல்கிறார். ‘ பார்வையற்ற இளைஞர்களை மணக்க பல இளம் பெண்கள் முன்வருவது போல, பார்வையற்ற பெண்களை மணந்து கொள்ள இளைஞர்கள் முன்வருவதில்லல!!’

மருத்துவ முத்து:

சமீபத்தில் நான் மருத்துவர் ஒருவரை இங்கே சந்தித்தபோது அவர் ப்ருன் [PRUNE]
என்ற உலர்ந்த பழத்தை வாங்கி தினமும் இரண்டு சாப்பிடச் சொன்னார். அதற்கான காரணங்களை அவர் சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். இங்கே சுலபமாகக் கிடைக்கும் இந்தப் பழத்தை இத்தனை வருடங்களாக மிஸ் பண்ணியிருக்கிறேன் அதன் அருமை தெரியாமல்!! ப்ள்ம்ஸ் பழத்தின் ஒரு வகை இது.


 பல வகையிலும் இது பதப்படுத்தப்படுகிறது. முற்றிலும் உலராமல் சற்று ஈரப்பசையுடன் இருக்கும் இதன் உபயோகங்களைக் கேட்டால் நீங்கள் பிரமித்துப்போவீர்கள்!


இது இதயநோய் மற்றும் கான்ஸர் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை சீராக வைக்கிறது. எலும்புகளை அதிகம் தேயாமல் பாதுகாக்கிறது. வயதாகும்போது ஏற்ப்டும் முதிர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. இங்கெல்லாம் எல்லா கடைகளிலும் கிடைக்கும் இது நம் இந்தியாவில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைக்குமென்று நினைக்கிறேன்.

ரசித்த முத்து:

சென்ற வாரம் பிரபல இந்தித்திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்ஸாலி தயாரித்து இயக்கிய ‘ பாஜிராவ் மஸ்தானி ‘ என்ற திரைப்படம் பார்த்தேன்.




மிகப்பெரிய பிரம்மாண்டமான தயாரிப்பு இது. பழுப்பும் கருஞ்சிவப்பும் வெண்மையுமான வண்ணங்களில் படம் முழுவதும் ஒரு ஓவியம் போல படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் மராத்திய அரசில் பிரதம தளபதியாக மிகப்பெரிய செல்வாக்குடன் வாழ்ந்த பாஜிராவ் என்ற வீரனின் வாழ்க்கையில் இணைந்த மனைவியும் பின் அவன் மனதில் நுழைந்த பெண்ணும் அவர்களின் போராட்டங்களும் தான் கதை. வழக்கம்போல கதாநாயகனும் அவனின் மனதுக்கினிய பெண்ணும் இறுதியில் இறந்து போக, மனைவி தனியே நிற்க, படம் முடிகிறது. .. ..

மாட மாளிகைகளும் ஓவியங்களும் கண்ணாடி விளக்குகளும் பிரம்மாண்டமான அமைப்புகளும் சிலைகளும் காசிபாய் என்ற முதல் மனைவியின் நடிப்பும் இரண்டாவதாக வருன் மஸ்தானியின் கதக் நடனமும் அவரின் கண்களும் சோகமும் எல்லாமே அசத்துகின்றன.

படத்தில் ஒரு இடத்தில் மஸ்தானி கதாநாயகன் அறியாமல் அவனின் தர்பாருக்கு வந்து காதலுடன் இசைத்தவாறே நடனமாடும் காட்சி வரும். அந்த தர்பாரின் பிரமிக்க வைக்கும் அழகும் நடனமும் இசையும் அப்படியே நம்மை அசத்துகிறது. நீங்களும் அசந்து போக அந்தக் காட்சியை இங்கே இனைக்கிறேன். ரசியுங்கள்!!



பக்தி முத்து:

சித்தூருக்கு அருகே உள்ள வேப்பஞ்சேரி என்ற கிராமத்தில் உள்ள லக்ஷ்மி நாராயணர் கோவில் 250 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் உள்ளே 21 அடி தசாவதார சிலை உள்ளது. மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் ஒரே சிலையில் அமைந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அசத்திய முத்துவில் கூறப்பட்டுள்ள, மதுரையில் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்கென்றே ஓசையின்றி இயங்கி வரும் ’உபகார்’ என்ற அமைப்பின் சேவை பாராட்டுக்குரியது.

// ‘ பார்வையற்ற இளைஞர்களை மணக்க பல இளம் பெண்கள் முன்வருவது போல, பார்வையற்ற பெண்களை மணந்து கொள்ள இளைஞர்கள் முன்வருவதில்லை!!’//

கேட்க வருத்தமாகத்தான் உள்ளது.

பெண்களுக்கு எதையும் ஏற்றுக்கொண்டு, பொறுமையாக சமாளிக்கும் துணிச்சல் இருக்கிறது .... ஆனால் அது ஆண்களுக்கு அவ்வளவாக இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இருப்பினும் வாழ்க்கைத்துணைத் தேர்வில், பொதுவாக யார்தான் இவ்வாறு ரிஸ்க் எடுக்க விரும்புவார்கள்? ஆயிரத்தில் ஒருவர் இருந்தாலே மிகவும் அதிசயம் தான்.

மருத்துவமுத்து, மிகவும் பயனுள்ளதாகத் தெரிகிறது.

மற்ற இரு முத்துக்களுக்கும் வழக்கம்போலச் சிறப்பானதாக உள்ளன.

ezhil said...

அசத்திய முத்து நிஜமாகவே அசாத்திய முத்துதான்..

கரந்தை ஜெயக்குமார் said...

முத்துக்கள் அருமை சகோதரியாரே
நன்றி

ஸ்ரீராம். said...

அனைத்து முத்துகளும் அருமை. அசத்திய முத்துவுக்குப் படம் இல்லாதது ஒரு குறை. நல்ல மனிதர்களின் முகங்களைப் பார்ப்பதும் ஒரு புண்ணியம்தான். பாஸிட்டிவ் பகுதிக்கு எடுத்துக் கொள்கிறேன், படம் இல்லையே என்கிற குறையோடு!

இராஜராஜேஸ்வரி said...

அருமையாக , பயனுள்ள முத்துகள்..

தி.தமிழ் இளங்கோ said...

எல்லாமே நல்முத்துக்கள். மருத்துவக் குறீப்பில் சொல்லப்படும் பழம் இங்கே அல்லது எங்கே வாங்கலாம் என்ற தகவல் கிடைத்தால் சொல்லவும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்முத்துக்களைப் பற்றிய நல்பகிர்வு. நன்றி.

ஹுஸைனம்மா said...

ப்ரூன்ஸ் பழம், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, என் தந்தை உண்டு வருகிறார். மேலும் நாங்கள் இந்தியா செல்லும்போதும் வாங்கிச் செல்லும் பழம் - உறவுகளுக்குக் கொடுக்க. ஆனால், அதில் இத்தனை நன்மைகள் இருக்கிறது என்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும்.

இந்தியாவில் “ஆல்பகரா பழம்” என்று வழங்கப்படுவது இந்தப் பழம்தான் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏனெனில், இந்திய உறவினர்கள் எங்களிடம் “ஆல்பகரா பழம் வாங்கிட்டு வாங்க” என்றுதான் சொல்வார்கள்.

Unknown said...

Prunes are excellent for constipation.
( malachikkal).
Rajan

priyasaki said...

எல்லா முத்துக்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி மனோக்கா.

Thenammai Lakshmanan said...

ப்ரூன்ஸ் மட்டும் சாப்பிட்டிருக்கிறேன். மற்ற முத்துகள் அற்புதம் மனோ மேம். புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹுசைனம்மா பதிவு அருமை . கம்பைன் ஸ்டடி. ஆனால் கருத்திட முடியவில்லை. :) அதே இங்கே தெரிவிக்கிறேன் ஏன்னா அவங்க கமெண்ட் இங்கே இருப்பதால் மனோ மேம். மன்னிக்கவும் :)

shameeskitchen said...

அனைத்து தகவல்களும் அருமை.

ப்ரூன்ஸ் பழம் நான் எப்போழுதாவது வாங்கி சாப்பிடுவேன். ஆனால் அதில் இத்தனை பலன்கள் இருக்கும் என்று இப்பொழுது தான் அறிந்தேன்.

@ ஹுஸைனம்மா : ஆல்பகடா பழம் என்பது ப்ளம்ஸ் பழத்தை தான் குறிப்பிடுவார்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி,


பதிவு அருமை. ரசித்தேன்.முத்துக்களை பற்றிய விளக்கங்கள் மிகவும் நன்று. என் தளம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்.தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த புத்தாண்டு, மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

ஹுஸைனம்மா said...

நன்றி தேனக்கா. என் கமெண்டைப் பார்த்ததும் என் பதிவு ஞாபகம் வந்து உடனே பாராட்டியது ரொம்ப சந்தோஷம்க்கா!!



@shameeskitchen : நீங்க //ஆல்பகடா பழம் என்பது ப்ளம்ஸ் பழத்தை தான் குறிப்பிடுவார்கள்.// என்று சொல்ல்ருக்கீங்க. மனோ அக்காவும், ப்ரூன்ஸ் என்பது ப்ள்ம்ஸ் பழத்தின் ஒரு வகை இது என்றுதான் சொல்லிருக்காங்க. அப்ப சரிதானே!! :-)

அருள்மொழிவர்மன் said...

பயனுள்ள தகவல்..
கடைகளில் பலமுறை இந்த ப்ரூன்ஸ் பழத்தைப் பார்த்துள்ளேன் ஆனால் சுவைத்ததில்லை. இம்முறை கண்டிப்பாக ருசித்துப் பார்க்கப்போகிறேன்.

உபகார் அமைப்பு - பலரும் அறியாத செய்தி...பகிர்ந்தமைக்கு நன்றி!