Tuesday 23 June 2015

சர்க்கரை நோய் -பாகம்-3!!!!

10 வருடங்களுக்கு முன் எனக்கு சர்க்கரை இருக்கிறது என்று கண்டறிந்ததும் இங்குள்ள என் இதய மருத்துவர் ' இனி மருந்துகள் ஆரம்பித்து விடலாம்' என்றார். நான் சென்னையிலிருக்கும் சர்க்கரை நோய்க்கென்றே உள்ள ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சென்று ஒரு முறை பரிசோதனை செய்து வருகிறேன் என்றேன். அது போலவே சென்னை சென்றோம்.

அங்கே முதற்கட்டமாக நம் உட‌ல்நிலையைப்பற்றிய தகவல்கள் பல கேள்விகள் மூலம் பதிவு செய்யப்பட்டன. அதற்கடுத்தாற்போல சில இரத்தப்பரிசோதனைகள், இதயத்திற்கான, பின் மூளைக்கான ஸ்கான்கள், எக்ஸ்ரேக்கள் என்றெல்லாம் சோதனைகள் செய்யப்பட்டன. அப்போது தான் சர்க்கரை ஆரம்ப நிலையில் இருக்கும் எனக்கு எதற்கு இத்தனை பரிசோதனைகள் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. கடைசியில் தலமை மருத்துவரிடம் சென்றதும் அவர் எதுவுமே விளக்கங்கள் சொல்லாமல் ' இந்த மாத்திரைகள் எல்லாவற்ரையும் தொடர்ந்து சப்பிட்டு வாருங்கள்' என்று சொல்லி அனுப்பி விட்டார். காலை 9 மணிக்கு அந்த மருத்துவ மனையில் நுழைந்த நாங்கள் மாலை 5000 ரூபாய் அனைத்திற்கும் கட்டணமாகக் கட்டி விட்டுத் திரும்பினோம். மறுநாளிலிருந்து மாத்திரை சாப்பிட ஆரம்பித்தேன். அடுத்த நாளே தாழ்நிலை ச்ர்க்கரையினால் கிட்டத்தட்ட மயக்கத்திற்குப்போய் விட்டேன். சர்க்கரை அதிகம் கலந்திருக்கும் ஃபான்டா சாப்பிட்டதும் தான் மயக்கம், பலவீனம் சரியானது. அடுத்த நாளும் இதே போல பாதிக்கப்பட்டதால் இங்குள்ள என் இதய மருத்துவருக்கு ஃப்போன் செய்து ஆலோசனை கேட்டேன். அவர் மாத்திரைகள் பெயர்கள், அதிலுள்ள மருந்து விகிதங்களையெல்லாம் படிக்கச் சொல்லிக் கேட்டு, எனக்கு ஒரு மாத்திரையே போதும், மற்றதையெல்லாம் எடுக்க வேண்டாமென்று சொன்னார். மிகவும் வீரியமான மருந்துகளைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார். அதன் பிறகு, அந்த மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்திருந்த ஃபைலை எடுத்து ஒவ்வொரு பக்கமாய் பார்த்தபோது தான் தெரிந்தது அவர்கள் என் பிரச்சினையையே தப்பாக எழுதியிருக்கிறார்க்ள் என்று! எப்போதிலிருந்து சர்க்கரை இருக்கிறது என்று கேட்டதற்கு கடந்த ஒன்பது மாதங்களாய் சர்க்கரை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது என்று நான் பதில் சொன்னேன். அவர்கள் 9 மாதங்கள் என்பதை ஒன்பது வருடங்களாக என் ஃபைலில் ரிக்கார்ட் பண்ணி விட்டார்கள். ஒன்பது வருடங்களாக சர்க்கரை என்பதால் தலைமை மருத்துவர் வீரியமான மாத்திரைகள் தந்து விட்டார்!

இப்படிப்பட்ட மோசமான அனுபவத்துடன் தான் என் சர்க்கரை நோய்க்கான மருத்துவம் ஆரம்பித்தது. எந்த நோய்க்கும் ஒரு நல்ல, நம்மை அக்கறையுடன் கவனிக்கக்கூடிய மருத்துவர் நமக்குத்தேவை. பிரபல மருத்துவமனைகள் என்று பத்திரிகைகள், விளம்பரங்கள் சொல்வதை நம்பாதீர்கள். நமக்கு பழக்கமானவர்கள் சிபாரிசு செய்யும் நல்லதொரு மருத்துவரை உங்கள் குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் உடல்நலத்தை நீங்கள் சிறப்பாக கவனித்துக்கொள்ள முடியும். உங்கள் உடல் நிலைக்கேற்ப சிறப்பு மருத்துவரை அவரே பரிந்துரை செய்வார்.



சர்க்கரை அவ்வளவாக உங்கள் கட்டுக்குள் இல்லையென்றால் ஒரு குளுக்கோமீட்டர் வாங்கி தொடர்ந்து உங்கள் சர்க்கரை அளவை காலை வெறும் வயிற்றிலும் பின் சாப்பிட்டு 2 மணி நேரங்கழித்தும் சோதித்துப்பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். முந்திய இரவு சாப்பிட்டு மறுநாள் காலை 12 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும். அது போல காலை உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் எந்த உணவு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது, எந்த உணவில் ச்ர்க்கரை அதிகம் இருக்கிறது என்பதை நாமே அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் உணவு பழக்கங்களை சரி செய்து கொள்ளலாம்.

ஆனாலும்  குளுக்கோமீட்டர் எப்போதும் நம் சர்க்கரையின் அளவை சற்று கூடுதலாகவே காண்பிக்கும். அதை விட இரத்த பரிசோதனை செய்யுமிடத்தில் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுவது நல்லது. அதுவும் நம்பகமான பரிசோதனை நிலையமாக இருக்க வேண்டும்!!!

மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவார்கள்.  மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர் எப்படி கூறுகிறாரோ அவ்வாறே செய்தல் வேண்டும்.

மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும்.

சர்க்கரை மிக அதிகமாக, நம் கட்டுக்குள் இல்லையென்றால் மெதுவாக ஒவ்வொரு உறுப்பும் நம்மை பாதிக்க ஆரம்பித்து விடும்.

என் நெருங்கிய உறவினர் நாற்பது வயதினிலேயே சர்க்கரையினால் மரணமடைந்தார். சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளததனால் முதலில் பார்வை பாதிக்கப்பட்டது. கண்களில் இரத்தக்குழாய்கள் வெடித்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. அப்போதும் அவர் ச்ர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றதில்லை. சிறிது நாட்களில் உடலில் சர்க்கரையினால் கட்டிகள் தோன்ற ஆரம்பித்தன.  ச்ர்க்கரை அதிகம் இருந்தால் கட்டிகள் சுலபமாக ஆறாது. நாளடைவில் அவரின் சிறுநீரகம் பாதிப்படைய ஆரம்பித்தது. இரத்தத்தில் கிரியாட்டினின் அளவும் யூரியா அளவும் அதிகமாக ஆரம்பித்தன.
சிறுநீரகத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருந்தால் ரத்தத்தில் அதிகமாய் சேரும் உப்பு, பொட்டாசிய சத்துக்கள், சிரியாட்டினின் பாஸ்பேட்டில் இருந்து பிரியும் கிரியாட்டினின் எனும் வேதிப்பொருள் ஆகியவற்றை சிறுநீரகங்கள் வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். ரத்தத்தில் யூரியா எனப்படும் உப்பு சத்து அளவு 40 மில்லி கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். பொட்டாசிய சத்து 4.5 மில்லி கிராமுக்கு குறைவாகவும் கிரியாட்டினின் அளவு 1 மில்லி கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். சர்க்கரை இரத்தத்தில் அதிகமாக அதிகமாக இவை சிறுநீரில் வெளியேறுவதும் அதிகமாகும். ஒரு கட்டத்தில் இவை வெளியேறுவது மிக அதிகமாக, சிறுநீரை சுத்தகரிப்பது என்ற 'ஹீமோ டயாலிஸிஸ்' ஆரம்பித்து விடும். என் உற்வினருக்கு சிறுநீரகம் சுத்தமாக செயலிழந்த நிலையில் மருத்துவர்கள் கை விரித்த நிலையில் அப்போது தான் தன் நிலைமை அவருக்கு தீவிரமாக புரிய ' என்னை எப்ப்டியாவது காப்பாற்றுங்கள்' என்று அழுதார். இறுதியில் பரிதாமாக இறந்தும் போனார்.

எல்லோருமே மரணம் அமைதியான முறையில் அதிகம் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்புவோம். ஒவ்வொரு அவயமாய் வீணாகி, அடுத்தவரின் பரிதாபத்திற்கு ஆளாகி இப்படி துடிதுடித்து இறக்க நேர்வது கொடுமை!  சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ச்ந்தர்ப்பங்களை நிறைய இயற்கையே கொடுக்கின்றது. சந்தர்ப்பங்களை முழுவதுமாகப்பயன்படுத்திக்கொண்டு, அடுத்தவருக்கும் தொல்லை தராமல் வாழ்க்கையை இறுதி வரை நகர்த்திக்கொண்டு நாம் போக நமக்கு மன உறுதியும் நாக்குக் கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியம்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம். வெளியிடங்களில் உள்ள‌ கழிப்பறைகளை உபயோகிப்பதை அறவே தவிருங்கள். கழிப்பறைகள் மூலமாக ஒரு வகை மஞ்சள் காமாலை பரவுவதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவசியம் கழிப்பறையை உபயோகிக்க வேண்டுமென்றால் நன்கு கழுவி விட்டு உபயோகியுங்கள்.
சமீபத்தில் ஏற்க‌னவே கிரியாட்டினினும் யூரியாவும் அதிகமாயிருந்த என் கணவரின் சகோதரர் சென்னையில் அவரின் மகளுக்குத் துணையாக‌ மருத்துமனையில் சில காலம் இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயம் அவருக்கு மஞ்சள் காமாலை பரவியிருந்தது அவருக்கு தெரியவில்லை. குளிர் ஜுரம் வந்து மருத்துவமனையில் சேர்த்த போது அவருக்கு எல்லாமே மிக அதிகமாகி சிறுநீர் சுத்தகரிப்பு செய்தும் பலனன்றி இறந்து போனார்.

தாழ்நிலை சர்க்கரை : [ hypoglycemia ]


இரத்த‌த்தில் சர்க்கரை மிகவும் கீழே இறங்கும்போது தாழ்நிலை சர்க்கரை என்றாகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிக வீரியமான மருந்துகள் எடுக்கும்போதும் ஒழுங்கான நேரத்தில் உணவு எடுக்காதபோதும் இந்த‌ தாழ்நிலை சர்க்கரை ஏற்படுகிறது. மருந்து எடுத்த இரண்டு மணி நேரம் கழித்து அவசியம் ஏதேனும் பழம், இரன்டு மேரி பிஸ்கட் எடுப்பது அவசியம். மாத்திரையால் கீழிறங்கிக் கொண்டிருக்கும் ச‌ர்க்கரை மறுபடியும் சீரடையும்.  இதனால்தான் வெளியே செல்ல நேரிடும்போது சட்டைப்பையில் சில சாக்கலேட் வைத்திருக்கச் சொல்லுகிறார்கள். மாத்திரை எடுத்து 2, 3 மணி நேரங்களில் கால் சில்லிட்டு, உடல் மிக பலவீனமாக மாறும் நிலை அடிக்கடி ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள். அவர் அதற்கேற்ப உங்கள் மத்திரையை குறைத்து எழுதிக்கொடுப்பார்.

இது அல்லாமல் சர்க்கரை குறைய வேண்டுமே என்ற அதீத ஆவலில் மாத்திரைகளோடு ஏதாவது வெளித்தயாரிப்புகளான பவுடர்கள் எடுத்தால் சில நாட்களில் உங்களுக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படலாம்.

என் தாயார் விள‌ம்பரங்களில் பார்த்த ஒரு பவுடரை வாங்கி ஆர்வக்கோளாறில் சாப்பிடப்போக, ஒரு நாள் மாலை அப்ப‌டியே உட்கார்ந்தபடியே எந்த செயலும் இல்லாத உணர்வற்ற நிலைக்குப்போய் விட்டார்கள்! உடனே அவர்களின் நெஞ்சில் விக்ஸ் தடவி பர‌பரவென தேய்த்து விட்டதும் 10 நிமிடங்களில் மெதுவாகக் கண் திறந்தார்கள். பின் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம்.

தாழ்நிலை சர்க்கரை ஒரு நோயல்ல. மருந்துகளையும் அதன் பின் நம் உண‌வையும் கவனத்துட்ன் கையாண்டால் போதும், தாழ்நிலை சர்க்கரை ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்லலாம்.

மாதம் ஒரு முறை சர்க்கரைக்கான இரத்தப்பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். நாள்பட்ட ச்ர்க்கரை நோய்க்காரர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிரியாட்டினின், யூரியா அளவுகளையும் கண்டறிதல் வேன்டும். அத்துடன் மூன்று மாதங்களுக்கான் மொத்த சர்க்கரை அளவையும் [ HBA1C ]பரிசோதித்துப்பார்த்துக்கொள்ள‌ வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்த்த்தின் கொழுப்புக்களின் விகிதங்களையும் கண்டறிதல் வேன்டும்.
 
மருத்துவத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அக்குப்ப்ரெஷர், அக்குப்பங்சர், முத்திரைகள், யோகா என்று சர்க்கரையை கட்டுப்படுத்த பல்வேறு சிற்ந்த மருத்துவங்கள் இருக்கின்றன. எந்த மருத்துவ‌த்தையாவது முழுவதுமாக‌ மேற்கொண்டு, கூடவே நல்ல உண‌வுப்பழக்க வழக்கங்களையும் உட்ல் சுத்தத்தையும் மிதமான உடற்பயிற்சியையும் தொடர்ந்து கொண்டிருந்தால் சர்க்கரை நம்மை விட்டு முழுவ்துமாக‌ ஓடிப்போகாவிட்டாலும் நம்மை விட்டு எட்டியே நின்று கொன்டிருக்கும்!!

31 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

படிக்கப் படிக்க ஆவலாக இருக்கிறது. இருப்பினும் ஒரு புறம் பயமாக இருக்கிறது. தெளிவினை உண்டாக்கும் நல்ல தொடர். பகிர்வுக்கு நன்றி.

ப.கந்தசாமி said...

தெளிவாக சர்க்கரை நோய் பற்றிய விவரங்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள். இந்த மூன்றாவது பதிவில் சொல்லிய ஸ்பெஷலிஸ்ட் ஆஸ்பத்திரியில் செய்யும் தவறுகள் உண்மையானவை. நாம் ஜாக்கிரதையாக இல்லாவிடில் நமக்கு யமபட்டினத்திற்கு விசா கொடுத்து அனுப்பி விடுவார்க்ள.

Unknown said...

சித்த மருந்துகளை சர்க்கரைக் குறைப்பாட்டுக்கு நம்பலாமா ?உங்களுக்கு அதில் அனுபவம் உண்டா ?
மற்றவர்களும் இது சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் பலனளிக்கும் !

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

சர்க்கரை நோய் பற்றியும் கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறித்தும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். பலருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு ஏற்பட்ட வருந்தவைக்கும் அனுபவத்தை விழிப்புணர்வூட்டும் வகையில் பகிர்ந்தது நன்று.
நன்றி


மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!


மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி கிரேஸ்! என் அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டதன் காரணமே இதனைப்படிப்பவர்களுக்கு அவை பயனுள்ள‌தாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் தான்!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

ஆங்கில மருத்துவம் எனக்குப் பயனளிக்காத சமயத்தில் நான் மிகவும் மன உளைச்சலுக்குள்ளயிருந்த நிலையில் சித்த மருத்துவம் தான் என் சர்க்கரையை நார்மலுக்குக்கொன்டுவந்தது பகவான்ஜீ! கீழேயுள்ள இணைப்பில் அந்த என் அனுபவத்தை எழுதியிருக்கிறேன். படித்துப்பார்த்து உங்கள் அபிப்பிராயத்தை எழுதுங்கள். இந்த மருத்துவர் சித்த மருத்துவமும் ஹெர்பல் மருத்துவமும் கலந்து மருந்துகள் தருகிறார்!
http://muthusidharal.blogspot.ae/2014னளிக்காட 08/blog-post_21.html

KILLERGEE Devakottai said...


பயனுள்ள பதிவு தொடர்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வு. ஒரே மருத்துவரிடம் நம்பிக்கை வைத்து, தொடர்ந்து அவரிடமே சிகிச்சை பெறுவதும், அவர் சொல்படி நாம் நடப்பதும்தான் எப்போதும் மிகவும் நல்லது.

’ஹை’ சுகரைவிட ’லோ’ சுகர்தான் மிகவும் ஆபத்தானது. அவ்வாறு ’லோ’ சுகர் உள்ளவர்களுக்கு, அவர்களால் எதையும் எடுத்துச் சாப்பிடக்கூட தெம்பு இல்லாமல், சுய நினைவு இல்லாமல், உடம்பு சீக்கரமாகப் படபடத்துப்போய் விடும். பிறரை உதவிக்கு அழைக்கவும் தோன்றாது. பேசக்கூட இயலாது. மயக்கம் வரக்கூடும். நள்ளிரவில் இது ஏற்பட்டால் மிகவும் சிக்கலாகும். அவர்களுக்கு கைக்கும் எட்டும் தூரத்தில் படுக்கை அருகிலேயே சாக்லேட்ஸ் போன்றவை எப்போதும் இருக்க வேண்டும். இவர்கள் {Low Sugar உள்ளவர்கள்} தனியே இருத்தலோ, தனியே பயணம் செய்தலோ கூடாது.

அருகே உள்ளவர்கள் தான் இதனையெல்லாம் கவனித்து, அவர்களுக்கு உடனடியாக நிறைய சர்க்கரை + உப்பைக் கலந்து குடிக்கச் செய்ய வேண்டும். இது ஓர் அவசர முதலுதவி மட்டுமே. பிறகு உடனடியாக அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த சர்க்கரை வியாதி எல்லோருக்கும் ஒரே விதமாக இருப்பது இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக படுத்தி வருகிறது.

அதனால் வேறு யார் சொல்லும் எதையும் கேட்காமல், நல்ல நம்பிக்கையான மருத்துவரிடம் ஆலோசித்து, அவர் சொல்படி மட்டுமே மருந்து / மாத்திரை / இன்சுலின் ஊசி போன்றவைகளை தவறாமல் எடுத்துக்கொண்டு, ஆகார கட்டுப்பாடுகள் + உடற்பயிற்சிகள் முதலியன எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவானதொரு விழிப்புணர்வுடன், PERIODICAL MEDICAL CHECK-UP செய்துகொண்டு, மருத்துவர் அல்லாத பிறர் சொல்வதைக் கேட்காமலும் இருந்தாலே போதும் ..... இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

பொதுவான விழிப்புணர்வு ஊட்டிடும் தங்களின் அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அறிய முடியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

பலருக்கும் பயன்படும் தகவல்கள்.....

முதல் இரண்டு பகுதிகளையும் நேரமெடுத்து படிக்க வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் தெளிவாக சொல்லி உள்ளீர்கள்... அனைத்தும் சில கண்டும் சில அனுபவித்தும் உள்ளேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
நன்றி

Unknown said...

Your article is good.
It is better to have A1C test while checking for sugar. This test gives approx sugar over 3 month range. A1C result should never exceed 7.0. one ought to be careful if it exceeds 6.5 itself. One can 'cheat' ( like exercising vigorously before the test etc ) in the glucose test. A1C is average sugar over 3 month

Yaathoramani.blogspot.com said...

தெளிவு தரும் அருமையானபதிவு
நீங்கள் சொல்வது போல்
பல பெரிய மருத்துவமனைகள்
விளம்பரத்தில்தான் அதிக அக்கறை
கொள்கின்றனர்.( நோயாளிகளைக் காட்டிலும் )
அறியாதன அறிந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Anuprem said...

பயனுள்ள தகவல்கள் ..........

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

தாழ்நிலை சர்க்கரை பற்றி விரிவாகச் சொல்லியிருப்பதற்கும் மற்றும் பயனுள்ள‌ சில குறிப்புகள் எழுதியிருப்பதற்கும் அன்பு ந‌ன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ண‌ன்! தாழ்நிலை சர்க்கரை பற்றியும் சில வரிகள் எழுத நினைத்து பின் மறந்து விட்டேன். தாங்கள் ஞாபகமூட்டியதற்கும் என் அன்பு நன்றி. தாழ்நிலை சர்க்க‌ரை பற்றியும் சில வரிகள் எழுதி என் பதிவில் இப்போது இணைத்துள்ளேன்.


வை.கோபாலகிருஷ்ணன் said...

மனோ சாமிநாதன் said...

//தாழ்நிலை சர்க்கரை பற்றி விரிவாகச் சொல்லியிருப்பதற்கும் மற்றும் பயனுள்ள‌ சில குறிப்புகள் எழுதியிருப்பதற்கும் அன்பு ந‌ன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ண‌ன்!//

எனக்கும், என் மனைவிக்கும் இதில் கொஞ்சம் அதிக ஆண்டு நேரடி அனுபவங்கள் இருப்பதால், ஏதோ எனக்குத்தெரிந்த சில விஷயங்ளைப் பகிர்ந்துகொள்ள நேர்ந்தது. மற்றபடி இது விஷயமாக யாருக்கும் நான் எந்த ஆலோசனைகளும் சொல்வது இல்லை. ஏனெனில் இது சம்பந்தமாக முழுவதும் படித்து பட்டம் பெற்ற மருத்துவர் அல்ல நான்.

//தாழ்நிலை சர்க்கரை பற்றியும் சில வரிகள் எழுத நினைத்து பின் மறந்து விட்டேன். தாங்கள் ஞாபகமூட்டியதற்கும் என் அன்பு நன்றி. தாழ்நிலை சர்க்க‌ரை பற்றியும் சில வரிகள் எழுதி என் பதிவில் இப்போது இணைத்துள்ளேன்.//

பார்த்தேன். படித்தேன். மிக்க மகிழ்ச்சி. அதில் தாழ்நிலை சர்க்கரை ஏற்படுவதற்கான காரணங்களாகத் தாங்கள் சொல்லியுள்ளவைகள் ஒருசில எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவையெல்லாம் உண்மையும்கூட. அதாவது ......

1) சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிக வீரியமான மருந்துகள் எடுக்கும்போதும், ஒழுங்கான நேரத்தில் உணவு எடுக்காதபோதும் இந்த‌ தாழ்நிலை சர்க்கரை ஏற்படுகிறது.

2) இது அல்லாமல் சர்க்கரை குறைய வேண்டுமே என்ற அதீத ஆவலில், மாத்திரைகளோடு ஏதாவது வெளித்தயாரிப்புகளான பவுடர்கள் எடுத்தால், சில நாட்களில் உங்களுக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படலாம்.

3) என் தாயார் விள‌ம்பரங்களில் பார்த்த ஒரு பவுடரை வாங்கி ஆர்வக்கோளாறில் சாப்பிடப்போக, ஒரு நாள் மாலை அப்ப‌டியே உட்கார்ந்தபடியே எந்த செயலும் இல்லாத உணர்வற்ற நிலைக்குப்போய் விட்டார்கள்! உடனே அவர்களின் நெஞ்சில் விக்ஸ் தடவி பர‌பரவென தேய்த்து விட்டதும் 10 நிமிடங்களில் மெதுவாகக் கண் திறந்தார்கள். பின் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம். //

இதுபோன்ற பலவித அனுபவங்களால் மட்டுமேதான் நான் யார் சொல்லும் எந்தவொரு ஆலோசனைகளை ஏற்பது இல்லை. ஒருவர் வெந்தயப்பொடி சாப்பிடு என்பார், மற்றொருவர் வெங்காயம் சாப்பிடு என்பார். வேறொருவர் முளைகட்டிய பயிறு நிறைய சாப்பிடு என்பார். மற்றொருவர் பாகற்காய் நிறைய சேர்த்துக்கொள் என்பார். ஆளாளுக்கு ஒவ்வொரு வைத்தியம் சொல்வார்கள். ஏற்கனவே அதற்கான மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நாம் இவர்கள் சொல்லும் எதையும் காதிலேயே வாங்கிக்கொள்ளக்கூடாது.

இதைவிட சிலர் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அக்குப்ப்ரெஷர், அக்குப்பஞ்சர், முத்திரைகள், யோகா என அனைத்திலும் கலந்துகட்டியாக மாறி மாறி சிகிச்சை எடுத்துகொள்வார்கள் / நம்மையும் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள்.

ஒரே வைத்தியத்திலேயேகூட டாக்டரை அடிக்கடி மாற்றுவார்கள் / மாற்றச்சொல்லி ஆலோசனை கூறுவார்கள்.

இவையெல்லாம் கூடவே கூடாது என்பேன் நான். இதனாலும் சுகர் லெவல் அடிக்கடி மாறக்கூடும். தொடர்ச்சியாக நம் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதும், அவர் சொல்படி கேட்பதும் மட்டுமே மிகவும் நல்லது.

>>>>>




வை.கோபாலகிருஷ்ணன் said...

இதில் எனக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு அனுபவங்களின் தாக்கங்களைத்தான் என் படைப்பான “நீ .... முன்னாலே போனா .... நா .... பின்னாலே வாரேன்” என்ற கதையினில், மருத்துவ நிபுணர் ஒருவர் சொல்வது போலவும், பாதிக்கப்பட்ட ஒருவர் சொல்வது போலவும் ஆங்காங்கே கொண்டு வந்துள்ளேன். அதன் மீள் பதிவுக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html

என்றும் அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

நிதனமாகப் படித்துப்பாருங்கள் வெங்கட்! கருத்துரைக்கு அன்பு ந்ன்றி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய‌ கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

//Your article is good.
It is better to have A1C test while checking for sugar. This test gives approx sugar over 3 month range. A1C result should never exceed 7.0. one ought to be careful if it exceeds 6.5 itself. One can 'cheat' ( like exercising vigorously before the test etc ) in the glucose test. A1C is average sugar over 3 month //

Thanks a lot for the valuable details. I have also mentioned a line about it. Nowadays the doctors insist that the HBA1C should be maintained at 6 only.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி அனுராதா !

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் தெளிவான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

விரிவான தகவல்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ண‌ன்!!

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல விளக்கங்கள்! எனக்கும் சர்க்கரை நோய் உண்டு. பரம்பரை...சர்க்கரை நோய் என்பதை விட நம் உடலில் உள்ள ஒரு சிறு குறைபாடே. மெட்டபாலிசம் கொஞ்சம் தடுமாறுவதால். நானும் என் உடலை நானே அப்செர்வ் செய்து எந்த உணவு சாப்பிட்டால் கூடுகிறது....குறைகிறது, எவ்வளவு சாப்பிட்டால் என்றெல்லாம் பார்த்துச் சாப்பிட்டு கன்ட்ரோலில் உள்ளது. எனக்கும் மருத்துவமனை அனுபவம் உங்களை போன்றே. நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் நானும் அதே மருத்துவமனையைத்தான் குறிப்பிடுகின்றேன் என்று எண்ணுகின்றேன்.....இப்போது நான் அங்கு செல்வதில்லை.....அனாவசியமாகச் சில பரிசோதனைகள்.....சரியாக டெஸ்ட் செய்யாமல் பிபிக்கு எல்லாம் உடனுக்குடன் மாத்திரை எழுதி விடுகின்றார்கள். எனக்கு பிபி கிடையாது ஆனால் மாத்திரை எழுதினார்கள்.....அப்படி எடுத்துக் கொண்டால் அது நமது சிறுநீரகத்தை பாதிக்கும் வாய்ப்புண்டு என்று எனது மகன் சொல்லி இனி அங்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி செல்வதில்லை....

னாமே நமது உடலை அப்செர்வ் செய்துவிட்டால் பிரச்சனை இல்லை.....ஃபாஸ்டிங்க், போஸ்ட் ப்ராண்டியல் டெஸ்டை விட 3 மாத ஆவெரெஜ் டெஸ்ட் HbA1C டெஸ்ட் நல்லது.....நீங்களும் சொல்லி இருக்கின்றீர்கள்....ஆம் 6 தான் சொல்கின்றார்கள்...அதற்குள் இருந்தால் குட் கன்ட்ரோல்...

நல்ல அழகான விளக்கமான கட்டுரை.....பாராட்டுகள்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

முதல் 2 பாகங்களும் வாசித்துவிட்டோம்....நல்ல தொகுப்பு....வாழ்த்துகள்.