Wednesday 14 May 2014

நண்டு வளைகள்!!

சிகிரெட்டிலுள்ள நிகோடின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். நுரையீரல்களை அது பாதிப்பதுடன் கான்ஸரையும்  நுரையில்கள், வாய், லல்லீரல், சுவாசக்குழாயில் பரப்புகிறது. ஆனால் நாம் தினசரி உபயோகிக்கும் பேஸ்டிலும் அந்த நிகோடின் சிறு அளவில் கலக்கப்பட்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த விபரங்களை ஒரு பெண்கள் இதழில் படித்த போது அதிர்ந்து போனேன்!

டெல்லியிலுள்ள வேதியல் ஆய்வு நிறுவனமான டெல்லி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மசூட்டிகல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் 24 விதமான பேஸ்ட் வகைகளையும் 10 விதமான பற்பொடியையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. ஆய்வு முடிவுகள் வந்த போது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பேஸ்ட் வகைகளில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்பில் நிகோடின் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

நிகோடின் கேடு விளைவிக்கும் போதைப்பொருள் என்று அறிந்தும் அதை ஏன் பேஸ்ட் வகைக‌ளில் கலக்கிறார்கள்? இந்த நிகோடினின் குணமே, அது சேர்க்கப்பட்ட பொருளை மறுபடி மறுபடி நாம் வாங்கத் தூண்டுவது தான்! நம் குழந்தைகளில் சிலர் தான் முதன் முதலில் பயன்படுத்திய பேஸ்ட் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதன் காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்!

பல்லை விளக்கியதும் துப்பி நன்கு வாயை கழுவினாலும் நிகோடின் உடலுக்குள் செல்லுமா? கண்டிப்பாக உட்செல்லும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். சந்தேகமே வேண்டாம். நம் தோலில் உள்ள நுண் துவாரங்கள் வழியாகவே உட்புகும் தன்மை நிகோடினுக்கு உண்டு. வாயில் உள்ள மென்மையான சவ்வுகள், ஈறுகளின் வழியே உமிழ்நீரோடு நிகோடின் கலந்து அழகாக உள்ளே சென்று விடும்.

ஒரு சிகிரெட்டில் 2 முதல் 3 மில்லி கிராம் வரை நிகோடின் கலக்கப்பட்டிருக்கிறது. நம் பேஸ்டில் உச்சபட்சமாக 18 மில்லி கிராம் வரை நிகோடின் கலக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை பல் துலக்கினால் 9 முறை சிகிரெட் பிடித்ததற்கு சமம்.

அந்த ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்கள் கீழே:

பேஸ்டின் பெயர்             நிகோடின் கலந்துள்ல விகிதம் [மில்லி கிராம்]

வீக்கோ                     0.05
அல்கா தந்த் மஞ்சன்         1.0
யுனாதந்த்                   1.7
டாபர் செட்                  0.01
பயோ கில்                  16
கோல்கேட் ஹெர்பல்         18
நீம் துளசி                   10
ஸ்டோலின் பேஸ்ட்          0.06
ஹிமாலயா                  0.029
சென்ஸோபோர்ம்            0.065

இதற்குப்பின் நான் சென்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் எல்லாம் இந்த வகை பற்பசைகள் விற்பனையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். மிகவும் திகைப்பாய் இருந்தது. அப்படியென்றால் இந்த பற்பசைகள் மத்திய அரசால் தடை செய்யப்படவில்லையா?



20 தினங்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர்  திடீரென்று இறந்து போனார். வயது அறுபத்தியேழு என்றாலும் எந்த ஒரு தீவிரமான வலியோ அல்லது அபாய அறிவிப்போ இல்லாததால் தன்னை கல்லீரல் புற்று நோய் தாக்கியிருப்பது மரண‌த்தருவாயில் தான் அவருக்குத் தெரிந்தது. அவருக்கிருந்த ஒரே அறிவிப்பு அளவிற்கு அதிகமான சோர்வும் உடனேயே தூங்குவதும் தான். இதையும் கூட தனக்கிருந்த சர்க்கரை வியாதியின் தாக்கமாகத்தான் எடுத்துக்கொண்டார்.

நிறைய பேர் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் வலி இல்லாமலேயே போய் விட்டது என்றார்கள். இது பற்றி என் குடும்ப மருத்துவரிடம் கேட்டபோது அது உண்மையில்லை, புற்று நோய் நிறைய பேருக்கு அது இருப்பதே கடைசியில் அது தீவிரமாகும்போது தான் தெரிகிறது " என்றார். அதற்கு காரணங்களைக் கேட்ட போது, ' ஜீன்ஸ் காரணமாக சில சமயம் இருக்கிறது. பெண்கள் கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதும் ஒரு காரணமாக சிலருக்கு அமைகிறது. ஆனால் எந்த வித காரணங்களுமில்லாமலும் இது மனிதர்களைத் தாக்குகிறது என்றார்.

கல்லீரல் சம்பந்தமாக எந்த நோய் தாக்கினாலும் மருத்துவர்கள் உடனேயே கேட்பது ' நோயாளி மது அருந்துவாரா?' என்பது தான். இது எனக்கு சில சமயங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வாழ்நாள் முழுவதும் போதைப்பொருள் போல மது அருந்துபவர்களையும்,  தொடர்ந்து கண்மண் தெரியாமல் மது அருந்தி கீழே விழுந்து கிடந்தவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்களுக்கெல்லாம் கல்லீரல் கடைசி வரை பாதிக்கவேயில்லை!!

என் சினேகிதியின் தாயார் சில மாதங்களுக்கு முன் இதே மாதிரி பாதிப்பிற்குள்ளானார். எழுபது வயதிலும் நன்றாக வேலை செய்து சில மைல்கற்கள் தொலைவில் உள்ள வயலுக்குச் சென்று மேற்பார்வை பார்ப்பதும் மாடு கன்றுகளை கவனிப்பதுமாகவும் இருந்தவர். திடீரென்று சில சமயங்களில் அவருடைய செயல்களில் மறப்பதும் பின்னர் ' நானா இப்படி சொன்னேன், செய்தேன்?' என்று சொல்வதுமாக இருந்திருக்கிறார். அவருக்கு உயர் இரத்த அழுத்தமோ சர்க்கரையோ வேறு எதுவும் பிரச்சினைகளோ இருந்ததில்லை. இந்த ஞாபகம் தப்புவது அதிகமானதால் நரம்பியல் துறை நிபுணரிடம் அழைத்துச் சென்று காண்பித்ததில் வேறு ஏதோ பிரச்சினை என்பது மருத்துவருக்குப்புரிய அவர் ஸ்கான் எடுக்கச் சொல்லவும் அப்போது தான் அவரை கல்லீரல் புற்று நோய் தாக்கியிருப்பது தெரிய வந்ததுடன் அது முற்றி மூளை வரை கான்ஸர் செல்கள் பரவி விட்டதால் தான் அவருக்கு ஞாபக மறதியும் நினைவு தப்புதலும் இருந்து வந்தது என்பது தெரிந்த போது அவர் உயிர் பிழைத்திருக்க முடியாத கட்டத்திற்குச் சென்று விட்டார்.

மற்றொரு நண்பரின் அம்மாவிற்கு பெருங்குடலில் கான்ஸர் பரவி, குடலை வெட்டியெடுத்து, கழிவுகள் வெளியேற வெளியில் ஒரு பையை வைத்து அவரின் உயிரைக்காப்பாற்றினார்கள்.

இப்படி எங்கு திரும்பினாலும் கான்ஸர் என்பதே அதிகம் தாக்கும் நோயாக சமீபத்தில் இருக்கிறது. முன்பு சகோதரி ஹுஸைனம்மா தனது பதிவில் ' நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களான க்ரீம்கள், பவுடர் முதல் அத்தியாவசியப் பொருளான பல்தேய்க்கும் பேஸ்ட் வரை சேர்க்கப்பட்டிருக்கும் ”பாராபென்” என்ற வேதிப்பொருள் ஒரு முக்கிய கான்ஸர்-காரணி ' என்று எழுதியிருந்தார்கள். தாய்மையடைந்திருக்கும் நிலையில் ஒரு பெண் எக்ஸ்ரே கதிர்களின் தாக்கத்திற்கு ஆளாகியிருந்தால் அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் கான்ஸர் வர வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

ஒருவருக்கு தொடர்ந்து இருமல் ,பேதி,எடை குறைவு,காரணமில்லாமல் உடல் சோர்வு, உடல் வலி போன்றவை இருந்தால் அலட்சியப்படுத்தாமல்மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்வது நல்லது.

இல்லத்தரசிகள் பொரித்த எண்ணையிலேயே மீண்டும் பொரித்தல்,வண்ணங்கள் சேர்த்து உணவுப்பண்டங்கள் தயாரித்தல் இவற்றை தவிர்க்க வேண்டும். மைக்ரோ வேவ் சமையல் முறையில் பிளாஸ்டிக் பாத்திரங்கள் வைத்து சமைக்க வேண்டாம். அதற்கு பதிலாக மைக்ரோ வேவ் சமையல் செய்வதற்கென்றே இருக்கும் பீங்கான், கண்ணாடிப்பாத்திரங்களை உபயோகிக்கவும்.

உணவுகளில் சர்க்கரை, உப்பு, அசைவ உணவு, காப்பி இவற்றை அதிகம் தவிர்ப்பது நல்லது. முக்கியமாய் வெளியில் சாப்பிடுவது, ஃபாஸ்ட் ஃபுட் அடிக்கடி சாப்பிடுவது, சுகாதாரமற்ற தண்ணீரை அருந்துவது, பழங்கள், காய்கறிகள் இவற்றை சுத்தமாகக் கழுவி உபயோகிக்காதது, மிகுந்த உணவுப்பொருள்களை பல நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்பது இவையெல்லாம் கிருமிகளை மாலை போட்டு வரவேற்பதற்கு சமம்.

கிரீன் டீ கான்ஸரை உண்டாக்காது தடுக்கக்கூடிய வல்லமை படைத்தது. ப்ராஸ்டேட் கான்ஸர், மார்பகப் புற்றுநோய் உட்பட மூன்று கப் கிரீன் டீ குடித்தால் நமக்குக் கிடைக்கிற பலன்கள் ஏராளம். சத்தான உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலமாகவும் காய்கறிகளை நிறைய சமைத்து உண்பதன் மூலமாகவும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் உடலை கான்ஸர் கிருமிகள் அண்டாது. அதேபோல தொடர்ந்து நடைப்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்யும் உடலில் ஆக்ஸிஜன் நிரம்பியிருக்கும். அதுவும் கான்ஸர்கிருமிகள் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செய்வதைக் குறைக்கும்.

 கனகல் என்றொரு மரத்தின் இலைக்காம்பை சாப்பிட்டால் கான்ஸர் குணமாகி விடும் என்று ஒரு வலைப்பக்கத்தில் படித்தேன். அதென்ன ' கனகல்' மரம்? யாருக்கேனும் இது பற்றி தெரியுமா?

இந்த நண்டுகள் நம் உடலின் உள்ளே நுழைந்து ஒவ்வொரு உறுப்பிலும் வளைகள் ஏற்படுத்தி அவற்றை அழிக்கும் முன்னே நம் உடம்பை நாம் பாதுகாத்து அவற்றை உள்ளே நுழைய முடியாது அரண்களை ஏற்படுத்திக் கொள்வோம். நல்ல உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், நல்லறிவு இவைகள் தாம் அந்த அரண்கள்!!
 

23 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள [பயமுறுத்தும்] விழிப்புணர்வுப்பகிர்வு.

பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் சகோதரியாரே
நல்ல உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், நல்லறிவு இவைகள் தாம் அந்த அரண்கள்!!

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் அனைவரையும் படிக்கச் சொன்னேன்... நன்றி...

priyasaki said...

பேஸ்ட்டில் நிக்கோடின் என்பது அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல் அக்கா.
நிச்சயம் நம்மிடையே விழிப்புணர்வு அவசியம். அருமையான பயனுள்ள பகிர்விற்கு நன்றி மனோ அக்கா.

தி.தமிழ் இளங்கோ said...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை. கேன்சர் மட்டுமல்ல இப்போது எல்லா நோயுமே எப்போது வந்து என்ன செய்யும் என்று சொல்ல முடியவில்லை.

நிலாமகள் said...

பற்பசையில் கூட நிகோடின் கலப்பா ! இவர்கள் வியாபார உத்தியை உடைப்பில் போட!
ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட பேஸ்ட் பெயர்ப் பட்டியலில் அவசரமாக கண்களை ஓட்டினேன். அப்பாடா! நம்ம பிராண்ட் இல்ல. (சோதனைக்கு போனால் தான் தெரிய வரும்)

கல்லீரல் புற்று பற்றி விரிவான தகவல்கள் நல்ல எச்சரிக்கை!

வெங்கட் நாகராஜ் said...

அட பற்பசியிலும் நிகோடின்... எதைப் பயன்படுத்தினாலும் பயம் வருகிறது இப்போதெல்லாம்....

KILLERGEE Devakottai said...

சகோதரிக்கு Dr பட்டமே கொடுக்கலாம் உண்மையை உண்மையாக விளக்கியதற்க்கு.
Killergee
www.killergee.blogspot.com
Abu Dhabi

ஹுஸைனம்மா said...

சமீபத்தில் தோழி ஒருவர், “கேன்ஸர் பெருகிவரும் இக்காலத்தில், மாரடைப்பின்மீது ஒரு மரியாதை வருகிறது” என்று நிலைத்தகவல் இட்டிருந்தார். எத்தனை உண்மையானது அது!!

”பாராபென்” குறித்து அறிந்ததிலிருந்து நானும் அவை இல்லாத பொருட்களைத் தேடித் தேடி வாங்க முயற்சிக்கிறேன். ஆம், முயற்சி அளவில்தான் உள்ளது!!

மரணத்தைவிட, மரணம் இலகுவாக இருக்க வேண்டும் என்கிற பயமே அதிகமாகி வருகிறது!!

ஸ்ரீராம். said...

டூத் பேஸ்ட் உண்டாக்கும் அபாயம் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. எதில்தான் ஆபத்து இல்லை என்று தேடும் நிலைக்கு வந்து விட்டோம். சமையலில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டால் கேன்சர் வரும் வாய்ப்பை அது குறைக்கும் என்று சமீபத்தில் ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன்.

சேலம் மாவட்டத்தில் அதிக அளவு கேன்சர் இறப்புகள் நிகழ்கின்றன என்று அரசாங்கம் அங்கு ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தியுள்ளதாக செய்தித் தாளில் படித்தேன்.

மனோ சாமிநாதன் said...

சிலர் காரணமே இல்லாமல் திடீரென்று கான்ஸரால் இறப்பது பயமுறுத்துவதாகத்தான் இருக்கிறது சகோதரர் வை.கோபாலகிருஷ்னாண்! கருத்திட்டமைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வீட்டில் அனைவரும் படித்ததறிய மகிழ்ச்சியாக இருந்தது தனபாலன்! நிறைய பேருக்கு இந்த உண்மைகள் சென்றடைய வேண்டுமென்பது தான் இந்தப்பதிவின் நோக்கம். கருத்துரைக்கு இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பேஸ்டில் இந்த் நிகோடின் கலக்கிறார்கள் என்பது எனக்கும் அதிர்ச்சி தான் பிரியசகி! இன்னும் நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களில் டீத்தூள் உள்பட கான்ஸர் உண்டாக்கும் ரசாயஙங்கள் கலக்கப்படுகின்றன என்பது தான் வேதனை!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் இளங்கோ! கான்ஸர் மட்டும் தான் சப்தமே இல்லாமல் உடம்பு முழுவதும் பரவி திடீரென்று மரணிக்க வைக்கிறது. அந்த வகையில் அவை உண்டாவதற்கான காரணங்களை, நம் பழக்க வழக்கங்களை புறம் தள்ள வேன்டியது மிகவும் அவசியமாகிறது. கருத்துரைக்கு இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வாங்க நிலா! ரொம்ப நாளாயிற்று நீங்கள் இங்கு வந்து கருத்திட்டு! அன்பு நன்றி உங்களுக்கு!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் பாராட்டி கருத்துரை வழங்கியதற்கும் அன்பு நன்றி சகோதரர் கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா! ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?

மனோ சாமிநாதன் said...

தகவல்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வைத் தரும் பதிவு.

Geetha said...

விழிப்புணர்வு பதிவு...நன்றி

Geetha said...

பயனுள்ள பகிர்வு நன்றி