Sunday 22 August 2021

முத்துக்குவியல்-63!!

 அசத்திய முத்து:

சமீபத்தில் 'சிந்துடாய் சப்கல்' என்ற பெண்மணி பற்றி படித்தபோது மனம் நெகிழ்ந்து, கனமாகியது. வாழ்க்கை முழுவதும் ஒரு பெண் பல அவலங்களையும் துன்பத்தையும் மட்டுமே சந்தித்திருந்தாலும் அவளின் கருணை அழிவதில்லை, அவள் தன்னம்பிக்கை இறப்பதில்லை. அவள் என்றுமே தன் தாய்மை உணர்வை  இழப்பதில்லை. இந்தப்பெண்மணியும் அந்த மாதிரி காருண்யம் மிக்கவளாக இருக்கிறாள். இந்தப்பெண்மணியைப்பற்றி அறிகையில் மனம் நிறைவை உணர்கிறது. அவரைப்பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வர்தா மாவட்டத்தில் பிம்ப்ரி மாகே என்ற கிராமத்தில் கால்நடைகளை மேய்த்து பிழைக்கும் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சிந்துடாய் சப்கல். இவர் பிறந்ததே வேண்டாத ஒன்றாய் இருந்ததால் இவர் குடும்பத்தாரால் 'சிந்தி' என்றழைக்கப்பட்டார். மராத்தியில் 'சிந்தி' என்றால் கிழிந்த துணி என்று அர்த்தமாம்! எப்படிப்பட்ட கொடுமை இது! நான்காம் வகுப்பு வரை தான் இவரால் ப‌டிக்க முடிந்தது. தன் பன்னிரண்டாவது வயதில் தன்னை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபது வயதுக்குள் மூன்று ஆண் குழந்தைகளுக்கு தாயானார். மீண்டும் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும்போது கணவனால் எட்டி உதைக்கப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டார். அரை மயக்க நிலையில் மாட்டுத்தொழுவம் ஒன்றில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாய் வீட்டாராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தெருக்களிலும் ரயில்வே பிளாட்பாரங்களிலும் பாட்டு பாடி பிச்சையெடுத்து வாழ ஆரம்பித்தார். பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் சுடுகாட்டில் தங்கிக் கொள்வார். இறுதிச் சடங்குகளில் வாரி இரைக்கப்பட்ட தானியங்களை சேகரித்து அதை மாவாக்கி ரொட்டி செய்து எரிந்து கொண்டிருக்கும் சிதைகளிருந்த நெருப்பில் அதை சுட்டுத்தின்னும் அவல வாழ்க்கைக்கு தள்ள‌ப்பட்டார். எத்தனை அவலமான வாழ்க்கை அவருக்கு!


அதன் பின் தான் அவர் வாழ்க்கையில் திருப்பம் வந்தது. தன் பெண்ணை அநாதை பராமரிப்பு நிலைத்தில் விட்டு விட்டு, அநாதைக்குழந்தைகள் பலருக்காக இன்னும் கடுமையாக பிச்சையெடுக்க ஆரம்பித்தார். கிடைத்த பணம், நன்கொடைகளைக்கொண்டு அனாதை இல்லங்களை உருவாக்கினார். தன் வாழ்க்கையையே அநாதைகளைப் பராமரிக்க அர்ப்பணித்தார். 1050க்கும் மேற்பட்ட அநாதைக்குழந்தைக‌ளுக்கு இவர் அடைக்கலம் கொடுத்தார். விருது பணத்தில் மேலும் மேலும் நிலம் வாங்கி அநாதை விடுதி பராமரிப்பு பணிகளை விரிவு படுத்தி வருகிறார். தன்னால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் தங்கள் சொந்தக்கால்களில் நிற்கும் வரை அடைக்கலம் கொடுத்து வருகிறார். இவரால் வளர்க்கப்பட்ட பலர் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக இருக்கின்றார்கள். 


இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மராத்தி மொழியில் ' Mee Sindhutai Sabkal’ என்ற திரைப்படம் 2010 ஆம் அண்டில் வெளியானது. இந்த திரைப்படம் 54வது லண்டன் திரைப்பட விழாவில் திரையிடத்தேர்வானது. ' 1050 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் 'மாயி' [அம்மா] என்ற‌ழைக்கப்படும் சப்கலுக்கு 2016ம் ஆண்டு DY Patil Institute of Technology and research foundation கெளரவ டாக்டரேட் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது. அன்னை தெரசா விருது, பத்மஸ்ரீ விருது உளபட 500க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு இவர் கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார். ஃபீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து எழுவது போல குப்பைமேட்டிலிருந்து எழுந்து ஆயிரக்கணக்கான அனாதைக்குழந்தைகளை வாழ்க்கையில் உயர்த்தி மகத்தான சாதனை படைத்திருக்கும் இந்த உயர்ந்த பெண்மணியை வணங்குவோம்

 இசை முத்து:

ஏ.ஆர்.ரஹ்மானின் ' கண்ணாமூச்சி ஏனடா' பாடல் வயலினில் இங்கே இழைகிறது. அதுவும் நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் பிரபல வயலின் கலைஞர் ரூபா ரேவதி கரங்களால்! கேட்டு ரசியுங்கள்! 

Thursday 5 August 2021

சில வழிமுறைகளும் தீர்வுகளும்!!

 வயதானால் வலிகளுக்குப் பஞ்சமில்லை.

எலும்பு சம்பந்தமான மூட்டு வலி, குதிகால் வல், இடுப்பு வலி என்று தொடர்ந்து வருவதும் சர்க்கரை ஏறுவதும் இரத்த அழுத்தம் உயர்வதும் முதியவர்களை அதிகமாகவே ஆட்டிப்படைக்கின்றன. நோய்களை கட்டுப்பாட்டில் வைப்பதும் அதிக வலிகள் இல்லாமல் உடலை பராமரிப்பதும் சவால்களாகவே இன்றைக்கு இருந்து வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, பல வித மருத்துவ முறைகளை கடைப்பிடிக்க நேருகின்றது. அதையும் தாண்டி சின்னச் சின்ன வைத்திய முறைகள் நமது நோய்களின் கடுமையைக் குறைக்க வழி செய்கின்றன. அந்த மாதிரி சில வைத்திய முறைகள், நான் என் ஃபைலில் சேகரித்து வைத்திருந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். யாருக்கேனும் இவை பலன் கொடுத்து நோயின் கடுமையைக்குறைத்தால் அதுவே இந்தப்பதிவிற்கான பரிசாய் மாறும்.  

சர்க்கரை நோய் குறைய:

1. எருக்கம் இலைகள் இரண்டை எடுத்து கால்களை நன்கு கழுவிக்கொண்டு காலின் அடிபாகத்தில் இலைகளின் அடிபாகத்தை வைத்து சாக்ஸ் போட்டு பொருத்திக்கொள்ள வேண்டும். இரவில் இதை உபயோகிக்கக்கூடாது. 


பகலில் தினமும் 6 மணி நேரம் உபயோகிக்க வேண்டும். இதைப்போல ஏழு நாட்கள் செய்யும்போது எட்டாம் நாள் உங்களுக்கு 50 முதல் 60 வரை சர்க்கரை குறைந்திருக்கும்.

2. 300 கிராம் செலரி தண்டுகளை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். அதை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு 6 எலுமிச்சம்பழங்களின் சாறை அதன் மீது பிழிந்து ஒரு சிறு தட்டால் மூடி, ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் ஊற்றி, இந்த சிறிய பாத்திரத்தை அதனுள் வைத்து அந்த தண்ணீரை கொதிக்க விடவும்.


 கொதி வந்ததும் தீயைக் குறைத்து கொதி நிலையில் 2 மணி நேரம் வைத்திருக்கவும். பின் அடுப்பை அணைத்து, சூடு நன்றாக குறைந்ததும் சிறு பாத்திரத்தில் வைத்த செலரிக்கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு மேசைக்கரண்டி குடித்து வரவும். விரைவில் சர்க்கரை நார்மலுக்கு வரும்.

சைனஸ் பிரச்சினைக்கான தீர்வு இது:

சாறு நீக்கிய எலுமிச்சம்பழத்தோல்களைப்போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். எந்த மூக்கு துவாரத்தில் நீர் வடிகிறதோ அந்த மூக்கு துவாரத்தால் இழுத்து அடுத்த துவாரத்தால் காற்றை வெளி விட வேண்டும். பிறகு அதே துவாரத்தால் உள்ளே இழுத்து நீர் வடியும் துவாரத்தால் வெளி விட வேண்டும். 

மூட்டு வலி‍ யூரிக் அமிலம் அதிகரித்தால்:



பப்பாளிக்காய் ஒன்றை எடுத்து சிறு துண்டுகளாக்கியது 1 கப் வேண்டும். இதை 2 கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். 5 சின்ன வெங்காயம் அரிந்து போட்டு தீயைக் குறைகக்வும். இடித்த பூண்டுப்பற்கள் 4, சீரகம் அரை ஸ்பூன், ஒன்று பாதியாய் இடித்த மிளகுத்தூள் 1 ஸ்பூன், 2 சிட்டிகை உப்பு போட்டு ஐந்து நிமிடம் குறைந்த தீயில் கொதித்ததும் இறக்கி சூப் போல சாப்பிடவும். 7 நாட்களுக்கு காலை 11 மணி போல சாப்பிடவும். அதிகப்படியாக தேங்கி நிற்கும் யூரிக் அமிலம் நீங்கும். வலி குறையும். அதன் பின் வாரம் இரு முறையாவது இதை செய்து குடிக்கவும். யூரிக் அமிலத்தின் அளவு சீராகி விடும்.

பித்தப்பை கற்களுக்கு:


ஒரு வெள்ளை கத்தரிக்காயும் தோலுடன் ஒரு எலுமிச்சம்பழமும் நன்கு அரைத்து சிறிது நீர் கலந்து வடிகட்டி ஏழு நாட்களுக்கு குடித்து வரவும். எட்டாவது நாள் கற்கள் நீங்கி விடும்.

களைப்பிற்கு:

முருங்கைக்காய் விதை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். 



அதை வாங்கி உடைத்துப்பார்த்தால் உள்ளே கருப்பு விதை இருக்கும். இது விட்டமின் பி அதிகம் உள்ளது. தினமும் ஒரு விதை சாப்பிட்டு வரவும். 

குதிகால் வலிக்கு:


கொள்ளு மாவு 2 ஸ்பூன், நல்லேண்ணெய் 1 ஸ்பூன், வினீகர் 1 ஸ்பூன், கல்லுப்பு 1 ஸ்பூன் இவற்றை ஒரு கப் தயிரில் நன்கு கலந்து குழைக்கவும். இந்த பேஸ்டை குதிகாலில் பாதி கால் வரை தடவி துணி வைத்து கட்டி இரவு தூங்க வேண்டும்.. கால் வலி காலையில் சரியாகி விடும்.