Sunday 29 April 2012

விபத்துக்கள்- ஒரு பார்வை!


விபத்துக்கள் மனித வாழ்வில் எந்தெந்த ரூபங்களில் வருகின்றன என்பதை யாரும் அறிவதில்லை. சில விபத்துக்கள் ஒரு நொடியில் எந்தக் காரணமுமில்லாமல் நடக்கின்றன! சில விபத்துக்களோ, நம் கவனக்குறைவால் நடந்து நம்மை பாதிப்பதுடன் பிறரையும் பாதிக்கின்றன! தவறு என்று நன்கு தெரிந்திருந்தும் சில கோடுகளை நாம் கடக்க முயலும்போது, விபத்துக்கள் ஏற்பட்டு நம் தலையெழுத்தையே மாற்றுகின்றன!
சென்ற வாரம் உறவினர் ஒருவர் விபத்துக்குள்ளான செய்தி வந்தது. அவரின் மகளிடம் ஆறுதல் கூற அழைத்துப் பேசிய போது விபத்து எப்படி நடந்தது என்ற விபரம் தெரிந்தது. 60 வயதான் இவர் சாலையில் பைக்கில் போய்க்கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மெதுவாகப் போய்க்கொண்டிருந்ததால் அதை முந்திச் செல்ல பக்கவாட்டில் இறங்கிச்செல்ல, அங்கே நின்று கொண்டிருந்த காரின் கதவு உள்ளேயிருந்து அப்போது தான் திறக்கப்பட, இவரின் பைக், காரின் கதவில் மோதி, கதவு அப்படியே காற்றில் பறக்க, இவரது காலில் தொடைவரை கிழிய அவசர சிகிச்சைப் பிரிவில் இவர் சேர்க்கப்பட்டு, தையல்கள் போடப்பட்டு அதன் பின் பல மணி நேரங்கள் கழித்துத்தான் ஆபத்தில்லை என்று அறிவிப்பு வந்தது. முன்னால் செல்லும் வாகனம் மிக மெதுவாகப் போனால் அதை பக்கவாட்டில் சென்று கடப்பது எப்போதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அப்படி கடக்கும்போது, எந்த அளவு கவனமும் வேகக்குறைவும் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விபத்து ஒரு உதாரணம்!! அவரின் மகள் அழுத அழுகை இன்னும் நினைவிலேயே நிற்கிறது!


இந்த அளவு மோதியும் அவர் உயிருடன் தப்பிப்பிழைத்து விட்டார் என்பது ஒரு மகிழ்வு கலந்த ஆச்சரியம்!! சமீபத்தில் ஒரு நண்பர் குடும்பத்தில், அவர் தந்தை சிறிது மது அருந்தி விட்டு சைக்கிளில் வெளியே போயிருக்கிரார். அந்த சமயம் சாலையில் இரு கார்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வர, ஒன்று அவரை இலேசாக இடித்து விட, அதிக காயங்கள் இன்றி, அவர் அந்த இடத்திலேயே இறந்து போனார்..
பல வருடங்களுக்கு முன் ஒரு நண்பருக்கு நடந்த விபத்து ஞாபகம் வருகிறது. இவருக்கு அதிகாலையில் பேப்பர் போடும் வேலை இங்கு. சைக்கிளில் போய்க்கொண்டிருந்த போது எதிரே அதி வேகமாய் வந்த ஒரு சிறு லாரி இவரை மோத, அப்படியே தூக்கி எறியப்பட்ட அவர் மயங்கிப்போனார். மனசாட்சிக்குப் பயந்து போன அந்த சூடான் நாட்டு குடிமகன், அவரை அப்படியே அள்ளி எடுத்து தன் காரில் போட்டு, மருத்துவ மனையில் கொண்டு போய்ச் சேர்த்தார். கால் எலும்புகள் தூள் தூளாகிப்போன நிலையில், அந்த எலும்புகளெல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது இங்கே. கால் சற்றே விந்தி விந்தி நடப்பதைத் தவிர வேறெந்தக் குறையுமின்றி உயிர் தப்பிப் பிழைத்தார் அவர்!
என் மகனின் பள்ளிப்பருவத்தில், ஒரு நாள், மணி அடித்ததும் பள்ளிக்கு வெளியிலிருந்து உள்ளே ஓடி வந்த போது, வழியில் இருந்த ஒரு பெஞ்சில் மோதிக் கீழே விழுந்ததில் நாக்கு முக்கால்வாசி துண்டிக்கப்பட்டு, இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்க, என் கணவர் மகனைத் தூக்கிக்கொண்டு ஓட, இங்கே எந்த மருத்துவமனையிலும் சேர்க்க மறுக்க, இறுதியில் அரசாங்க மருத்துவ மனையில் நாக்கை இழுத்துப்பிடித்துத் தைத்தார்கள். நாக்கு ஒன்றாய்ச் சேரும்வரை நாங்கள் பட்ட பாடு....!
சமீபத்தில் படித்த செய்தி இது. மனதை மிகவும் பாதித்தது.
ஒரு வீட்டில், நெயில் பாலீஷ் ரிமூவர் உபயோகித்து விட்டு வீட்டுப் பெண்கள் அதை கவனக்குறைவாய்  கீழே வைத்து விட்டு வேறு வேலையைப்பார்க்கச் சென்று விட்டார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து விழுங்கிய குழந்தை தொண்டை எரிய கத்தியதைத் தொடர்ந்து அதை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் என்று 5 நாட்கள் சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஒன்றுமில்லை என்று வீட்டுக்கு வந்த குழந்தையால் பசி வந்த போது உணவை விழுங்க முடியாமல் கதறி அழுதிருக்கிறது. மறுபடியும் மும்பையிலுள்ள பிரபல மருத்துவ மனை சென்று பார்த்தபோது தான்  குழந்தையின் உணவுக்குழல் மூன்றில் 2 மடங்கு எரிந்து போயிருப்பது தெரிந்திருக்கிறது. உடனே குழந்தையின் அடிவயிற்றில் ஒரு குழாயைச் செருகி அதன் மூலம் உணவைச் செலுத்தியிருக்கிறார்கள். இப்படியே 5 வருடங்கள் ஒரு நரகமாக சோர்வும் வேதனையுமாக குழந்தைக்குக் கழிய, உனவின் ருசி எப்படியிருக்கும் என்பதே குழந்தைக்கு மறந்து விட்டது. கடைசி முயற்சியாக அதற்கு மருத்துவர்கள் ஒரு அறுவை சிக்கிச்சை செய்தார்கள். எரிந்து போயிருந்த உணவுக்குழாயின் பகுதிகளை நீக்கி விட்டு மீதம் இருக்கும் பகுதிகளை இனைத்து விட்டார்கள். ஐந்து வருடங்களுக்குப்பிறகு அந்தக்குழந்தை இப்போது தான் ரசித்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறது!! யாரோ செய்த தப்பினால் அந்தக்குழந்தை ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறது!
தானாக வரும் விபத்துக்களை நம்மால் தவிர்க்க முடியாது! ஆனால் விபத்துக்கள் ஏற்பட நாம் காரணமாக வேண்டாம்!
கார் ஓட்டும்போது மேக் கப் போடுவது, முன்னால் போகும் காரை முந்தப்பார்ப்பது, சாலையைக்கடக்கும்போது கூட மொபைலில் பேசுவது- இதெல்லாம் வேண்டாமே!
எங்கு பயணித்தாலும், உங்கள் விலாசம், நீங்கள் சாப்பிடும் மாத்திரை விபரங்கள், உங்களின் மெடிகல் ஹிஸ்டரி, உங்களின் இரத்தத்தின் குரூப் வகை போன்ற விபரங்கள் அடங்கிய குறிப்பை உங்களுடன் எப்போதும் எடுத்துச் செல்லுங்கள். விபத்துக்களில் சிக்க நேரும்போது, இந்த விபரங்கள் உங்களுக்கான சிகிச்சையை துரிதப்படுத்தும்!!

Monday 23 April 2012

ஒரு நிமிடம் ரசிக்க!!


வாழ்க்கை முழுதும் சின்னச் சின்ன ரசனைகள்தான் வாழ்க்கையை சுவாரசியமாக ஆக்குவதுடன் அர்த்தமுள்ளதாகவும் உயிர்ப்புள்ளதாயும் மாற்றுகின்றன. சில சமயங்களில் படித்த சில வரிகள் அல்லது மிகச்சிறிய நிகழ்வுகள்கூட மிகப்பெரிய அர்த்தங்களையும் அனுபவங்களையும் கொடுக்கின்றன. வழக்கம்போல ரசித்த சில முத்துக்கள் இங்கே......

ரசித்த வாசகம்:
இந்த வாசகத்தை நான் மிகவும் ரசித்தேன். நல்வாழ்க்கை என்பது எது என்பதை மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது!
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள்.
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம்.
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை.
ரசித்த ஒரு சமையல் குறிப்பு:



பொதுவாக, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிளகாய்ப்பொடி அல்லது பூண்டுப்பொடி என்பது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். என்ன தான் மணக்க மணக்க சாம்பார் இருந்தாலும், நாக்கு ருசிக்க சட்னி இருந்தாலும் இந்தப் பொடிகள் இல்லாவிட்டால் சிலருக்கு இட்லியும் சரி, தோசையும் சரி ருசிக்கவே ருசிக்காது. அதுவும் தஞ்சை மாவட்டத்தில் இது ரொம்பவும் முக்கியமான ஒன்று. வீட்டுக்கு வீடு செய்யும் முறை மாறுபட்டிருக்கும். அதில் இந்த பூண்டுப்பொடி மிளகாய் வற்றலும் பூண்டும் உபயோகித்து செய்வது. அதில் நல்லெண்னையை ஊற்றிக்குழப்பி இட்லிக்குத் தொட்டுக்கொள்ள வேண்டும். என் சினேகிதியின் பெண் அவரின் அத்தை வீட்டில் செய்யும் பூண்டுப்பொடி பற்றி சொன்னதும் அசந்து விட்டேன். ஒரு கப் மிளகாய் வற்றலுக்கு 30 பல் பூண்டுகள் சேர்த்து துளி புளி சேர்த்து காரசாரமாக பூண்டுப்பொடி செய்வது மட்டுமல்லாமல் சாப்பிட உட்காரும்போது சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து அந்த பூண்டுப்பொடியில் குழைத்து இட்லிக்கு தொட்டுக்கொள்ளுவார்களாம்! பாருங்கள், இட்லிக்கு எத்தனை சுவையான, வக்கணையான, காரசாரமான பூண்டுப்பொடியென்று!
ரசித்த சிறுகதை!
தீய பழக்கங்களிலிருந்து தன் மகனை விடுவிக்க வேண்டுமென்று ஒரு தந்தை ஒரு ஞானியிடம் கேட்டுக்கொண்டார்.
அவனை ஞானி காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு புல்லைக் காண்பித்து ‘ இதை பிடுங்கி எறி’ என்றார். பையனும் இரு விரல்களால் புல்லைப் பிடுங்கி எறிந்தான்.
ஒரு சின்னச் செடியைக் காட்டி இதை அகற்று என்றார் ஞானி. கையால் அதை இழுத்துப் பிடுங்கி எறிந்தான் அந்தப்பையன்.
கொஞ்சம் பெரிய செடியைக்காட்டி அதையும் அகற்றச் சொன்னார் ஞானி. கொஞ்சம் போராடி, செடியை இரு கைகளலும் பிடுங்கி எறிந்தான் அவன்.
ஒரு மரத்தைக் காட்டி இதை அகற்று என்றார் ஞானி. சிறுவன் ‘அதை எப்படி அகற்ற முடியும்?” என்றான்.
ஞானி அமைதியாக, ‘ தீய பழக்கங்களும் அப்படித்தான். சிறியவையாக இருக்கும்போதே அவற்றை அகற்றாவிட்டால் அவை மரமாக வேறோடிப்போகும். அப்புறம் அவற்றை யாராலும் நீக்க முடியாது’ என்றார்.
சிறுவன் உணர்ந்து மனம் தெளிந்தான்.
 ரசித்த சிறு கவிதை:
ஒவ்வொரு நவீன வசதியும் வரும்போது ஒரு நல்ல பழக்கமோ அல்லது உழைப்போ சாகடிக்கப்பட்டு விடுகிறது! அது போன்ற நவீன வசதியை நினைத்து ஆதங்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு புதுக்கவிதை! ஒரு மாத இதழில் படித்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!!

மீந்து போன குழம்பு வேலைக்காரிக்கு..
பக்கத்துத் தெரு அத்தையுடன் பகிர்ந்து சாப்பிட நெய்ப் பணியாரங்கள்...
வீடு தேடி வரும் தோழிக்குத் தரும் அரைத்த மருதாணி....இப்போது எதுவுமே இல்லை!
பகுத்துக்கொடுக்கும் பழக்கத்தையே பாழாக்கி விட்டது குளிர்சாதனப்பெட்டி!


Monday 16 April 2012

ஆற்றாமை


வாசலிலேயே காத்திருந்தாள் என் சினேகிதி விஜயா. காரை விட்டு இறங்கியதுமே ஓடி வந்து கைகளைப் பற்றியவளின் உதடுகள் துடித்தன.
“ இப்போ எப்படி இருக்கு அம்மாவுக்கு?
“பரவாயில்லை. ஆனால் கவலையாகவே இருக்கு!”
உள்ளே நுழைந்து அவள் அம்மாவைப்பார்த்ததும் மனசு கனமானது. உடல் குறுகி, வலியின் வேதனையில் முனகல் தொடர என்னைப்பார்த்ததும் ஒரு கணம் யோசனை தெரிந்தது. உடனேயே ஞாபகம் வர மெலிசான குரலில் விசாரணை.
“ எப்படி இருக்கிறாய்? ரொம்ப நாள் ஆச்சு பார்த்து!..”
“ நான் நல்லா இருக்கேன். உங்க உடம்பு தேவலாமா?”
“ நல்லாவே இல்லை. எங்கே, இவள் டாக்டரிடம் என்னை அழைத்துப்போவதே இல்லை..”
குபுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது என் சினேகிதியின் விழிகளில். அதை முழுங்கிக்கொண்டு, வெதுவெதுப்பான கஞ்சியைக் கொண்டு வந்து அம்மாவுக்கு புகட்டினாள். வாயைத் துடைத்து விட்டு சாய்ந்தாற்போல உட்கார வைத்தாள். அவள் மறுபடியும் சமையலறை சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் என்னிடம் மகளைப்பற்றி சரசரவென்று மனதிலிருந்து குறைகள் வெளியே தெறித்து விழுந்தன. விஜயா வந்து அமர்ந்து ஒரு கணம் கூட ஆகியிருக்காது, உடற்கழிவுகள் அந்தப் பாயிலேயே வெளியேற, மறுபடியும் அம்மாவை துடைத்து விட்டு, ஆசுவாசப்படுத்தி சாய்ந்தாற்போல அமர வைத்து, கழிவுகளை நீக்கி, பாயையும் அந்த இடத்தையும் அலசி விட்டு நிமிர்வதற்குள் விஜயாவுக்கு உடம்பு இற்றுப்போயிருப்பது தெரிந்தது.

சும்மாவா! அவளுக்கும் 60 வயது முடிந்தது இரு மாதங்களுக்கு முன்பு! மகள்களுக்குத் திருமணம் முடித்தாயிற்று. மகனும் கணவரும் வீட்டில் இருக்கும்போது அம்மாவைத் தூக்க, மெல்ல கழிவறைக்கு கொண்டு செல்ல உதவுகிறார்கள். ஒரு தம்பியும் இருக்கிறான் பக்கத்துத் தெருவிலேயே. அவனுடைய மனைவியும் வேலைக்குச் செல்லுவதால் அம்மாவை தன் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதை முன்னமேயே தெரிவித்து விட்டான். இதே மகன் தன் அம்மா உடம்பு நன்றாக இருக்கும்போது தன் அம்மாவை தன் செளகரியங்களுக்காக வீட்டில் வைத்துக் கொண்டவன் தான். இப்போது எந்தப்பயனும் இல்லாத அம்மாவை எதற்காக வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்? ஒரு வேலைக்காரி போல அந்த வீட்டில் வேலைகள் செய்திருந்தாலும் அம்மா தன் வாயைத் திறந்து எந்த குறையும் மகனைப்பற்றிச் சொன்னதில்லை. ஏனென்றால் அவன் மகன்! மகளைப்பற்றி மட்டும் மனதில் எத்தனை குறைகள்!!
அம்மா முனகலுடன் உறங்கியதும் விஜயா என்னருகில் வந்து அமர்ந்தாள்.
“ அம்மா சென்ற மாதம் கட்டிலிலிருந்து விழுந்து விட்டதாய் எழுதியிருந்தேனல்லவா, அப்போது டாக்டரிடம் அழைத்துச் சென்ற போது, அம்மாவின் எலும்புகள் எல்லாம் கிட்டத்தட்ட நொறுங்கி விட்டதாக டாக்டர் சொன்னார். வயசும் 80க்கு மேல்! எந்த மருந்தும் வைத்து தேய்க்கக் கூடாது என்கிறார். அம்மாவுக்கோ வலி தாளமுடியவில்லை. மருந்து தேய்க்க மாட்டாயா? என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். அக்கம் பக்கத்திலிருந்து வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லோரிடமும் நான் கவனிப்பதில்லை, மருந்து தேய்த்து விடுவதில்லை என்று ஒரே புலம்பல்! நீயே பார்த்தாயல்லவா, நீ வந்து உட்கார்ந்த இந்த அரை மணி நேரத்தில் என்னென்னவெல்லாம் நான் செய்கிறேன் என்று! எனக்கும் உடம்பு வலிக்கிறது, இற்றுப்போகிறது, இருந்தாலும் இந்த நோயுடன் போராடும் ஒரு அம்மாவிற்கு என்ன குறையை நான் வைத்தேன்? நான் போதாதென்று என் கணவர், மகன் என்று அத்தனை பேரும் இவர்களைப் பார்த்துக்கொள்கிறோம். இது புரியவில்லையா அம்மாவுக்கு?”
விஜயாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்ப் பொழிந்தது.

அவள் கரங்களை ஆதூரத்துடன் தடவிக் கொடுத்தேன்.
“ தம்பி இங்கு வருவதேயில்லையா?”
கசப்பான புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது.
“ வருகிறான் தினமும் இரண்டு வேளை! அவன் வந்து சாப்பாடு கொடுத்தால் இவர்கள் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிடுகிறார்கள். அதனால் கட்டாயம் வரவேண்டும் இரண்டு வேளை என்று சொல்லியிருக்கிறேன். அவனும் எங்கே முழு பாரமும் தன் மேல் வந்து விடுமோ என்ற பயத்தில் தினமும் வந்து போகிறான்.. “
என் மனமும் ஆற்றாமையில் குமைந்தது. என்ன நியாயம் இது! இவள் சமைத்துத் தந்தாலும் அக்கறையுடன் இந்த அளவு விழுந்து விழுந்து செய்தாலும் கவனிப்பதில்லை என்று குறை! கவனிக்காமல் அலட்சியப்படுத்தி, கடமைக்காக வந்து எட்டிப்பார்த்து, தன் கையால் இதே உணவை மகன் கொடுக்கும்போது கொஞ்சம் அதிகமாகவே உள்ளே செல்கிறது! தாய்மையிலும் பாரபட்சம் இருக்கிறதா?
“ விடு விஜயா! வயது முதிரும்போது பெரியவர்கள் குழந்தையாக மாறி விடுகிறார்கள் என்று தான் உனக்குத் தெரியுமே! மனம் முதிராத குழந்தையாக இவர்களை நினைத்துக்கொள்”
“ குழந்தையென்றால் அடிக்க முடியும். திட்ட முடியும். இவர்களை என்ன செய்வது? நம் குழந்தை அடுத்த வீட்டில் போய் நம்மைக் குறை சொல்லாதே! அக்கம் பக்கத்தில் நான் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள். இருந்தாலும் ‘ பெற்ற அம்மாவே மகளைப்பற்றி இப்படிச் சொன்னால், ஒரு வேளை அது உண்மையாகவே கூட இருக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றாதா? காலத்துக்கும் எனக்கு அது கெட்ட பெயர்தானே?”
“ அம்மா! பேசாமல் இருக்க மாட்டீர்களா?”
அதட்டியபடி உள்ளே நுழைந்தான் விஜயாவின் மகன் ப்ரகாஷ்.
“ வாங்க பெரியம்மா! பாருங்கள், அம்மா இப்படித்தான் எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு புத்திமதி சொல்லுங்கள். கீதையில் சொல்லியிருக்கிறதல்லவா, கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று. இதை எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அம்மா தான்.  எப்போதுமே தானாக வந்து மடியில் விழும் எந்த விஷயத்திற்கும் மதிப்பில்லை. அம்மாவின் அன்பும் அப்படித்தான். கிடைக்க முடியாத தூரத்தில் மாமாவின் அன்பு இருப்பதால் அதற்காகத் தான் பாட்டி ஏங்கித் தவிக்கிறார்கள். அவ்வளவு தான். எல்லோருக்குமே வயதானவர்கள் அருகேயிருந்து கவனிக்கும் கொடுப்பினை கிடைக்காது பெரியம்மா. எங்களுக்கு அது கிடைத்திருக்கிறது.....”
தந்தைக்கே உபதேசித்த மகனாய் எனக்கு அவன் தோன்றினான். 25 வயதில் முதிர்ச்சியடைந்த மகன், 85 வயதில் மனம் இன்னும் முதிராத தாய்-இரண்டு பேருக்கும் நடுவே கலங்கிய கண்களுடன் என் சினேகிதி! அவள் மனம் இந்த விளக்கத்தால் சமாதானமாகி விடுமா என்ன?
வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு உண்மையிலேயே பதில் தெரிவதில்லை!


Monday 9 April 2012

மறுபடியும் வீட்டு வைத்தியம்!!


மறுபடியும் சின்னச் சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே கைவைத்தியம் செய்து கொள்வதைப்பற்றி எழுதுகிறேன். மருத்துவரிடம் செல்லாமல் செலவும் அதிகமில்லாமல் பலனளிக்கும் வைத்திய முறைகள் இவை.
1.சளியினால் தலை கனம் வரும்போது:

7,8 கிராம்பை சந்தனக்கல்லில் மையாக இழைத்து நெற்றி முழுவதும் பற்று போடவும்.


2. வாய்வு சேர்ந்து விட்டால் ஏப்பமும் அதிகமாக வரும். ஒரு பிடி கொத்தமல்லி விதைகளுடன் அதில் கால் பாகம் சோம்பு சேர்த்து இரண்டையும் பொன் வறுவலாக வறுத்துப் பொடித்து ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு ஸ்பூன் இந்த பவுடரைக் கலந்து குடித்தால் ஏப்பம் நிற்கும்.
3. நாய் கடித்து விட்டால் உடனே சிறிது வேப்பிலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்து கடிவாயில் மஞ்சளுடன் சேர்த்துக் கலந்து தடவி விட்டால் விஷம் ஏறாது.

4. பித்த மயக்கம் உள்ளவர்கள் தினமும் காலை வேப்பங்கொழுந்து சாப்பிட்டு வருவது பலனளிக்கும்.
5. மூச்சுத்திணறலுக்கு முதல் உதவி:
      சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்படும்போது மூச்சுத்திணறல் உண்டாகும். இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 நிமிடங்களுக்குள் முதலுதவி செய்ய வேண்டியது மிக அவசியம். முதுகிலும் தலையிலும் தட்டுவது பயன் தராது. பாதிக்கப்பட்டவரின் பின்புறம் நின்று கொண்டுஅவரது வயிற்றைச் சுற்றி உங்கள் இரு கரங்களையும் கட்டிக்கொள்ளவும். அவரது வயிற்றில் தொப்புளுக்கு மேலே மேல் நோக்கி அழுத்தம் தர வேண்டும். பாதிக்கப்பட்டவரை கொஞ்சம் முன் பக்கமாக குனியச் சொல்லவும். அவருக்கு சுவாசப்பாதையில் அடைப்பு விடுபடும்வரை திரும்பத் திரும்ப அவரது வயிற்றில் அழுத்தம் தரவும்.

6. ரோஜா இதழ்களை அடிக்கடி தின்னும் பழக்கம் உள்ளவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வருவதில்லை.  நிழலில் நன்கு உலர்த்தப்பட்ட ரோஜா இதழ்களை தேநீர் தயாரிப்பது போல கஷாயம் செய்து பாலும் சீனியும் கலந்து குடித்தால் அஜீரணம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் சரியாகும். 10 ஆரஞ்சுப்பழங்களில் கிடைக்கும் விட்டமின் C சத்து ஒரு ரோஜாப்பூவின் இதழ்களில் கிடைக்கிறது.


7. வெந்தயம் அரை ஸ்பூனை துளி நெய்யில் வறுத்துப்பொடித்து ஒரு தம்ளர் மோரில் கலந்து குடித்தால் உஷ்ண பேதி சரியாகும்.

8. கொய்யாவில் வாழையை விட பொட்டாசியம் அதிகமாயும் ஆரஞ்சை விட விட்டமின் சி அதிகமாயும் இருக்கிறது. சர்க்கரை நோய், இதய பலவீனம், மலச்சிக்கலுக்கு நல்லதொரு பழம்.

9. 1 ஸ்பூன் தனியா, 1 ஸ்பூன் சீரகம் இரண்டையும் பொடித்து 200 மில்லி தண்ணீரில் ஊறப்போடவும்.இரவு முழுவதும் ஊறியதும் காலை எழுந்து குடிக்கவும். இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். 

10. 200 மி.லி தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெனிலா எசென்ஸைக் கலந்து உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவோ, ஈயோ உங்கள் பக்கம் நெருங்காது.







Tuesday 3 April 2012

துபாயில் ஒரு உலகப் பொருட்காட்சி!!

இரண்டு நாட்களுக்கு முன் இங்கே துபாயில் இருக்கும் குளோபல் வில்லேஜ் [ GLOBAL VILLAGE ] சென்றிருந்தேன். ஷார்ஜாவிலிருந்து துபாய் 15 கிலோ மீட்டர்தான் என்றாலும் அதன் பின் இந்த துபாய் லாண்டிற்கு 30 நிமிடங்கள் பயணம் செல்ல வேண்டும். 120 கி.மீ வேகத்தில் 40 நிமிடங்களில் இந்த குளோபல் வில்லேஜிற்கு சென்றடைந்தோம்.
வரவேற்பு முகப்பு
துபாய் நகரைத்தாண்டி இந்த பிரம்மாண்டமான பொருட்காட்சி நகரை துபாய்லாண்ட் என்ற இடத்தில் அரசு நிர்மாணித்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும்  பல நாடுகள் பங்கேற்கும் இந்த பொருட்காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும்.
ஏமன் நாட்டு அரங்க முகப்பு
ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாடை பிரதிபலிக்கும். வருடா வருடம் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் முடிய இந்த பொருட்காட்சி நடக்கிறது.
ஸ்பெயின் நாட்டு அரங்க முகப்பு
ஒவ்வொரு நாட்டு ஸ்டாலும் அதன் கலாச்சாரப் பின்னணியில் அமைந்திருக்கும். இந்தியாவிலேயே பல கலாச்சாரங்கள் புதைந்திருப்பதாலும் பல மொழிகள் இணைந்திருப்பதாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக, ஒரு முறை திப்பு சுல்தான் கோட்டை, ஒரு முறை ஆக்ரா கோட்டை- இப்படி பல விதமாக இந்திய அரங்கம் நிர்மாணித்து அசத்தும்.
இந்திய அரங்க முகப்பு
இந்திய கலை நிகழ்ச்சி
இந்திய அரங்கினுள் இருக்கும் கடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்தில் கிடைக்கும் சிறப்பான பொருள்களைக் கொண்டு அமைந்திருக்கும். மாலை 4 மணியிலிருந்து இரவு 12 மணி வரை இந்த பொருட்காட்சி திறந்திருக்கும்.
எகிப்து நாட்டு அரங்க முகப்பில் உள்ள ஓவியம்
திங்கட்கிழமை ஆண்கள் தனியாக அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களுக்கும் குடும்பத்துடன் கூடிய ஆண்களுக்கும் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தாய்லாந்து அரங்க முகப்பு க்ரீக் அருகே
கடந்த 15 வருடங்களாக இந்த பொருட்காட்சி வெவ்வேறு இடங்களில் நடந்தாலும் 2006-லிருந்து துபாய்லாண்ட் என்ற இந்த இடத்தில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

உணவு ஸ்டால் ஒன்றில் உருளைக்கிழங்கை ஸ்பைரலாக அடுக்காக வெட்டி எண்ணெயில் வறுத்துத் தருகிறார்கள்.
பல்வேறு விளையாட்டுக்கள், பல நாடுகளின் அழகு அணிவகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், பல்வேறு நாடுகளின் உணவகங்கள் போன்ற சிறப்புகள் உண்டு.
இந்த முறை  45 நாடுகள் கலந்து கொண்டதாகவும் 4 மில்லியனுக்கு மேல் இங்கிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் வருகை தந்ததாயும் 2 மில்லியனுக்கு மேல் வருமானம் வந்துள்ளதாயும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அத்தனை புகைப்படங்களையும் இங்கே இணைக்க முடியவில்லை. ஒரு சில புகைப்படங்கள் மட்டும் இனைத்திருக்கிறேன்.