Sunday 26 June 2016

ஓட்ஸ் பழ சாலட்!!!

காலை உணவுகளில் பலவகை இருக்கின்றன இட்லி, இடியாப்பம், தோசை, பொங்கல், பூரி என்று! ஆனால் இப்போதெல்லாம் மாவுப்பொருளைக்குறைக்கும் விதமாக சிறு தானியங்களான கேழ்வரகு, வரகு, திணை, கம்பு, சாமை போன்றவற்றில் இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என்று செய்யும் வழக்கம் பரவலாக வந்து விட்டது.

காலை நேரத்தில் ஆவி பறக்க இட்லிகளும் தொட்டுக்கொள்ள காரசாரமாக இட்லி மிளகாய்த்தூளும் பூண்டு சட்டினியும் சாப்பிடுபவர்கள் ஒரு மாறுதலாக காலையில் இந்த ஓட்ஸ் சாலட் ஒரு நாள் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். சத்து மிக்க பழங்களும் ஓட்ஸ் மற்றும் பால் கலந்த பூண்டு சட்டினியும் சாப்பிடுபவர்கள் ஒரு மாறுதலாக காலையில் இந்த ஓட்ஸ் சாலட் ஒரு நாள் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். சத்து மிக்க பழங்களும் ஓட்ஸ் மற்றும் பால் கலந்த அருமையான உணவு இது. ஓட்ஸ் தானியத்தில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளன. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம். இவை கொழுப்புச்சத்தையும் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கின்றன. ஓட்ஸிலுள்ள‌ அதிக அளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தை சுத்தகரிக்கின்றது. பழங்களிலுள்ள சத்துக்களைப்பற்றியும் அனைவருக்கும் தெரியும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உணவாகும்போது அது உடலுக்குக் கொடுக்கும் நன்மைகள் பல.

இது தனியாக அறைகளில் தங்கி உணவு செய்து சாப்பிடும் இளைஞர்களும் சுலமாக செய்து கொள்ள முடியும்.

இனி ஓட்ஸ் சாலட் செய்யப்போகலாம்.


ஓட்ஸ் பழ சாலட்
தேவையானவை:

மாம்பழங்கள், ஆப்பிள்கள், பேரீச்சை, மாதுளை, வாழைப்பழங்கள் சேர்ந்த கலவை 2 கப்
பால் 2 கப்
ஓட்ஸ்‍ கால் கப்
சிட்டிகை உப்பு
தேன் 2 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை 2 மேசைக்கரண்டி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே காய்ச்சிய பாலை மிதமான சூட்டில் ஊற்றி
பால் கொதிக்கும்போது  தீயை மட்டுப்படுத்தி ஓட்ஸ் மற்றும் உப்பைச் சேர்க்கவும். ஒரு சில நிமிடங்களில் ஓட்ஸ் வெந்து குழைந்து விடும். இறக்கி ஆற வைத்து ஓட்ஸ் கலவை கெட்டியாக இருந்தால் மேலும் பால் ஊற்றி தளர இருக்குமாறு கலக்கவும். பழக்கலவைகள், திராட்சை தேன் சேர்த்து கலக்கவும். கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.

பி.கு:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழங்கள், வாழைப்பழங்களை நீக்கி விடவும்.     

Thursday 9 June 2016

பிச்சைக்காரன்!

இன்று என் ஏழு வயது பேரன் வரவேற்பறையை ஒரு தியேட்டர்போல அலங்காரம் செய்து குடிப்பதற்கு பழரசங்கள், கொரிப்பதற்கு நொறுக்கல்கள் எல்லாம் செட் பண்ணி எங்களை அமர வைத்து ஏதேனும் சினிமா பார்த்தே ஆக வேண்டுமென்றார். அவருக்காக தலையாட்டவும் ஒரு லிஸ்ட் காண்பித்து  which film would you like to see sir? என்று கேட்டார். அவர் தியேட்டர்  மானேஜராம்! அப்படி செலெக்ட் செய்த படம் தான் பிச்சைக்காரன்! பேரனுக்காக ஆரம்பித்து, கடைசியில் படத்தில் ஆழ்ந்து போக ஆரம்பித்து விட்டோம்.

விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும் சாதனா டைட்டஸ் கதாநாயகியாகவும் நடித்த படம் இது.




கதாநாயகனின் தாய் கணவன் இல்லாது தனி மனுஷியாக போராடி மகனை வளர்த்து ஆளாக்குகிறாள். மிகப்பெரிய நூற்பாலைகளின் உரிமையாளராக ஆகி வெளிநாட்டில் படித்து திரும்பிய மகனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறாள். அன்றே கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து தாயை கோமா நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஆங்கில வைத்தியம், கேரள ஆயுர்வேத வைத்தியம் எல்லாம் செய்தும் பலனில்லாது  தவிக்கும் மகனிடம் ஒரு துறவி ‘ 48 நாட்கள் [ஒரு மண்டலம்] பிச்சைக்காரனாக வாழ்ந்தால் அவனின் தாய் பிழைப்பாள் என்று சொல்கிறார். அவன் யாரென்ற அடையாளம் வெளியில் தெரியக்கூடாது என்றும் தினமும் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் என்றும் ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கும்போது அவன் கையில் காசு இருக்கக்கூடாது என்றும் சொல்கிறார்.

அவனால் உடனே அதற்கு ஒப்புக்கொள்ள முடியவில்லை. தயங்குகிறான். குழம்புகிறான். கடைசியில் அம்மா என்ற மந்திரச்சொல் பிச்சைக்காரனாக அவன் முடிவு எடுக்கக் காரணமாகிறது. முதல் நாள் அவனுக்கு பிச்சை எடுக்கத்தெரியவில்லை. அவனைப்பார்த்தால் பிச்சைக்காரனாக மற்றவர்களுக்கும் தெரியவில்லை. தன் பணக்காரக்களையைப்போக்க அவன் பலவிதங்களிலும் கஷ்டப்படுகிறான். எங்கே போய் பிச்சை எடுப்பது, எப்படி பிச்சை எடுப்பது என்றும் புரியவில்லை. கடைசியில் பிச்சைக்காரர்கள் கூட்டம் ஒன்று அவனுக்கு நட்பாகவும் உதவியாகவும் அமைய அவன் பிச்சையெடுக்க ஆரம்பிக்கிறான்.




யதேச்சையாக அம்மா தனக்காகப் பார்த்து வைத்திருந்த பெண் சாலையில் விழுந்து கிடக்கும் ஒருவனுக்கு உதவுவதைப்பார்க்கிறான். மனம் கனிகிறது. மனசில் அன்பு பிறக்கிறது. அவளும் அவனை நேசிக்க ஆரம்பிக்கிறாள்.

அந்த நாற்பத்தெட்டு நாட்களை அவன் பிச்சையெடுத்து கழிப்பதற்குள் அவன் சொத்துக்கு அலையும் பெரியப்பா, அவனை அழிக்கத்துடிக்கும் ரவுடிக்கும்பல், அவனைக்கவிழ்க்க அலையும் வில்லன்கள் அனைவரையும் எதிர்கொண்டு அவன் போராட வேண்டியிருக்கிறது. அவனின் நிஜ அடையாளத்தைக் காட்ட முடியாமல் பல தடவைகள் தவிக்கவும் வேண்டியிருக்கிறது. இந்த சத்திய சோதனையை அவன் உறுதியாக ஏற்கிறான்.

இடையே அவனின் காதலி அவன் பிச்சைக்காரன் என்பதை தெரிந்து கொள்கிறாள். கோபத்துடனும் ஆவேசத்துடனும் அவனை விட்டு விலகுகிறாள். கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அங்கே  வேதனை பிறக்கையில் தான் தெரிகிறது தன்னால் அவனை மறக்க முடியாதென்பது! ‘ வேறேதும் வேலை செய்து பிழைக்க முடியாதா?’ என்று கேட்கையில் அவன் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான். ‘நான் கொடுக்கும் பணத்தையாவது ஒரு பிச்சையாக நினைத்து ஏற்றுக்கொள்ளக்கூடாதா? என்று அவனிடம் கேட்கிறாள். அவன் உடனே மண்டியிட்டு கைகளை நீட்டி யாசிக்கிறான். அவள் அந்தக் கைகளில் தன் முகத்தைப்புதைத்து அழுகிறாள். ரொம்பவும் கவித்துவமான காட்சி இது!

ஆனால் யதேச்சையாக அவள் அவன் யாரென்பதை கணினி மூலம் அறிகிறாள். அவனிடம் உண்மையைச் சொல்லாமல் அவன் பிச்சையெடுப்பதற்கும் உதவி செய்கிறாள்.

இறுதியில் அவன் ஒரு மண்டலம் பிச்சையெடுத்து, அந்தப் பணத்திலேயே சாப்பிட்டு, அடுத்தவர்களுக்கு உதவி செய்து, பாக்கியை கோவில் உண்டியலில் போட்டு 48 நாட்களையும் முடிக்கிறான். அவன் தாய் உயிர்த்தெழுகிறாள்!

தாயை சக்கர நாற்காலியில் அமர்த்தி தள்ளிக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவன் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னருகே பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் ஒருவனை கவனிக்காமல் இருக்கிறான். அவன் தாய் சொல்கிறாள்
“ ஒன்று அவனுக்கு பிச்சையிடு அல்லது இல்லை என்று சொல்லியனுப்பு. அவனைக் காக்க வைக்காதே. பிச்சைக்காக காத்திருக்கும் வலியை உன்னால் புரிந்து கொள்ள முடியாது”!

அவனும் அவளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, படம் அங்கே ஸ்டைலாக முடிவு பெறுகிறது!

ரொம்ப நாட்களுக்குப்பிறகு இந்தப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன். ரொம்பவும் நுணுக்கமான உணர்வுகளும் சில அழகிய காட்சிகளுயும் மெலிதான நகைச்சுவையும் பிச்சைக்காரர்களுக்கென்றிருக்கும் நியாயங்களும் படத்தை மிகவும் ரசிக்க வைத்தது. இந்தப்படத்தை அவசியம் பார்க்கலாம்!