Monday 30 August 2010

இன்றைய மருத்துவத்தில் நமக்கான விழிப்புணர்வு!

சமீபகாலமாக ஒரு சிறிய வியாதிக்குக்கூட ஸ்கான்கள் எடுக்கும் கலாசாரம் பெருகி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் இரத்த பரிசோதனைகள் செய்திருந்தாலும்கூட, வேறொரு மருத்துவரிடம் போக நேர்ந்தால் மறுபடியும் இரத்தப்பரிசோதனைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் பொது மக்களின் பொருளாதார சூழ்நிலையில் ஒரு வழி பண்ணி விடுகிறது.



எங்கள் ஊரில், அருகிலுள்ள புதிதாகத் திறக்கப்பட்ட சர்க்கரை ஆராய்ச்சி மருத்துவமனை ஒன்றிற்கு நானும் என் கனவரும் இரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ள விடியற்காலை சென்று இரத்தம் கொடுத்தோம். என் முறை வந்து அந்தப் பெண் இரத்தம் எடுத்த பிறகு, அதை உரிய இடத்தில் வைத்தபின் எதையோ அவசர அவசரமாகத் தேடியது. பின் கூட்டுகிற பெண்ணை அழைத்து “ இங்கே ஒரு சிரிஞ்ச் வைத்திருந்தேனே பார்த்தாயா?” என்று கேட்டது. [எனக்கு முன்னால் சென்றவரின் இரத்தம்! ]அதற்கு அந்த வேலைக்காரப்பெண் சொன்ன பதில் என்னைத்தூக்கிவாரிப் போட வைத்தது.


“ அது பழசு என்று நினைத்து குப்பைக்கூடையில் போட்டு விட்டேனே!”


உடனே இந்தப்பெண் ‘ ஓடு, போய் குப்பைக்கூடையிலிருந்து அதை எடுத்து வா” என்றது. அப்போதே முடிவு செய்து கொண்டேன் நமக்கு எல்லாமே மிக அதிகமாக இருக்கப்போகிறது என்று!!
 அதுபோலவே எங்கள் இருவருக்கும் 600க்கு மேல் கொலஸ்ட்ரால் முதல் எல்லா நிலைகளையும் ரிப்போர்ட் காட்டியது!!  இந்த மாதிரி அடிப்படை சுகாதாரம் இல்லாமல் இரத்தப்பரிசோதனைகள் நடப்பதும் அனுபவமற்ற-சரியான பயிற்சிகள் இல்லாதவர்களை வேலைக்கு வைப்பதும் அதிகமாகப் பெருகி வருகின்றன!

இங்கே எனக்குப் பழக்கமான சினேகிதி-அவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அப்போதுதான் ஆரம்பமாகியிருந்ததால் சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு பரிசோதனை செய்து கொள்ளப் போனார். காலையில் முதல் நபராக நுழைந்த அவர் அந்த மருத்துவ மனையை விட்டு வெளியே வரும்போது மாலை 5 மணி! காலையில் நுழைந்ததும் இளம் மருத்துவர்கள் அவரிடம் அவருடைய கடந்த கால நோய்கள், பிரச்சினைகள், பெற்றோர்களின் சரித்திரம் பற்றி கேள்விகள் கேட்டு குறித்துக்கொண்டனர். அதன் பின் தொடர்ச்சியாக கண், இதயம், மூளை என்று பல்வேறு பரிசோதனைகள். மொத்தம் 5000 போல செலவாகியது. இறுதியில் தலைமை மருத்துவர் எல்லாவற்றையும் பார்த்து, ஆலோசனைகள் சொல்லி மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்.

என் சினேகிதி, அதை சாப்பிட ஆரம்பித்த இரண்டாம் நாளிலிருந்து உடல் நலம் சரியில்லாமல் ஆகி விட்டார். சாப்பிட்ட 2-ம் நாளிலிருந்து கை கால்கள் துவண்டு, உடல் சில்லிட மயக்கம் வர ஆரம்பித்து விட்டது. அப்புறம் இனிப்பான பழச்சாறு, இனிப்புகள் எடுத்ததும் நடமாட முடிந்தது. இதே நிலை தொடர ஆரம்பித்தது. சர்க்கரைக்கு மருந்தெடுத்து விட்டு அப்புறம் இந்த மாதிரி பாதிப்புகள் வந்ததும் சர்க்கரை கலந்த இனிப்புகளை சாப்பிடுவதில் என்ன பலன் இருக்கும்? ரொம்பவும் முடியாமல்போய் அவர்களின் டாக்டர் இங்கிருப்பவரைத் தொடர்பு கொண்டு கேட்டதும் அந்த மாத்திரைகளில் உள்ள ‘ content ’-ஐப் படிக்கச் சொல்லிக் கேட்டு  ‘ ஒரே content

உள்ள மாத்திரைகள் மூன்று விதமாக உங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அதனால்தான் இந்த பாதிப்பு. அதில் நான் சொல்லுகிற ஒரு மாத்திரை மட்டும் சாப்பிடுங்கள். “ என்று சொல்ல, அது மாதிரியே அவர் சாப்பிட்டதும் பிரச்சினை சரியாகியது. அப்புறம் அவர் இங்கு வந்து சேர்ந்ததும் அவரின் மருத்துவர் எல்லா ரிப்போர்ட்டுகளையும் பார்த்த போதுதான் கிளைமாக்ஸ் வந்தது!  சென்னை இளம் டாக்டர்கள் எடுத்த குறிப்பில் இவருக்கு கடந்த 9 மாதங்களாக சர்க்கரையின் பாதிப்புகள் என்று சொன்னதை அவர்கள் 9 வருடங்கள் என்று எழுதிவிட்டிருந்தனர்! அதனால்தான் அதிக அளவிற்கு அவருக்கு மாத்திரைகள் தரப்பட்டிருக்கின்றன!! இது எவ்வளவு பெரிய விபரீதம்! என் சினேகிதியும் தன் உடல்நலக்குறைவினால் தனது ரிப்போர்ட்டை திரும்ப எடுத்து பார்க்கவில்லை! நல்ல வேளையாக இங்குள்ள மருத்துவரால் அது சரி செய்யப்பட்டு விட்டது. இந்த மாதிரிதான் நிறைய மருத்துவ மனைகளின் தரம் இன்றிருக்கின்றன.

ஒரு முறை முதுகுவலியால் மிகவும் அவதியுற்ற நேரம்-

அலோபதி மருத்துவம் நிறைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதால், தெரிந்த ஒருத்தர் மிகவும் சிபாரிசு செய்த ஒரு அக்குப்ரெஷர் மருத்துவ டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்காக சென்னைக்கு என் தோழியுடன் வந்தேன். அப்போதெல்லாம் ஹோட்டலில் தனியாகத் தங்கி பழக்கமில்லை. உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள் இதிலெல்லாம் பல அனுபவங்கள் என்பதால் மிகவும் தேடி ஒரு நல்ல பெண்கள் விடுதியில் இடம் பிடித்த பின் அந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறச் சென்றேன். அவர் சிகிச்சை கொடுக்கும் நேரமோ மிகவும் வித்தியாசமானது. மதியம் ஒன்றிலிருந்து மாலை 4 வரை! அவர் வயதானவர். சிகிச்சை பெற வந்தவர்களின் கூட்டம் நிறைய இருந்தது. முதல் நாள் முதுகில் அக்குப்ரெஷர் சிகிச்சை கொடுத்தவர், நான் அதற்கு முன் எடுத்த மாத்திரைகளின் லிஸ்டைப் பார்த்தார். அதில் ஒன்றை காண்பித்து இதை மட்டும் தொடர்ந்து எடுங்கள் என்றார். நான் ‘ அதை எடுத்ததுமே எனக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைந்து விடும். காலை நீட்டிப் படுப்பதை விட வேறு எதுவும் செய்ய இயலாது. அதனால்தான் அதை நிறுத்தி விட்டேன்’ என்றேன். அவர் ரொம்பவும் அலட்சியமாக ‘இது ரொம்பவும் நல்ல மாத்திரை. அதனால்தான் சொன்னேன். ரொம்பவும் இரத்த அழுத்தம் குறைந்தால் பக்கத்திலுள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆகிக் கொள்ளுங்கள்’ என்றார்! ‘இதென்ன பைத்தியக்காரத்தனம் ‘ என்று மனதில் நினைத்துக்கொண்டே வெறுமனே தலையாட்டி வைத்தேன். பயத்தில் புலம்பிய சினேகிதியிடம் ‘அந்த மாத்திரையை சாப்பிடப்போவதில்லை. பயப்படாதே. 300 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்து கஷ்டப்பட்டு இடம் பிடித்து தங்கியிருக்கிறோம். இன்னும் 3 நாள் சிகிச்சை எடுத்து பார்ப்போம்’ என்றேன். மூன்றாம் நாள் சிகிச்சையின்போது சென்னனயிலிருந்த ஒரு சினேகிதியும் உடனிருந்தார். அந்த மருத்துவர் முதுகில் விரல்களை அழுத்தி ப்ரெஷர் கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று அவரின் விரல்கள் தொய்ந்து கீழே நழுவியது புரிந்தது. எதிரே அமர்ந்திருந்த என் சினேகிதிகளைப் பார்த்தேன். அவர்கள் சிரிப்பை சிரமப்பட்டு  அடக்கிக் கொண்டிருந்தார்கள். உடனே புரிந்து கொண்டேன்-பின்னால் அமர்ந்திருந்த டாக்டர் தூங்கி விழுகிறார் என்று!! அன்று மாலையே ஊருக்குக் கிளம்பி விட்டேன். இதற்காக எத்தனை மனக்கஷ்டங்கள், அலைச்சல்கள், பண விரயம்!! அத்தனையும் வீணாகிப்போனது!


மொத்தமாக இதுவரைப் பட்ட அனுபவங்களினால் சில சட்ட திட்டங்களை நாங்கள் எப்போதும் கடைப்பிடிக்கத் தவறுவதில்லை.


நமக்கென்று ஒரு குடும்ப மருத்துவர் மிகவும் அவசியம். ஜுரம், வயிற்று வலி போன்ற சிறு பிரச்சினைகளை அவரே சரி செய்து விட முடியும். பெரிய பிரச்சினைகளுக்கு அவர் சுட்டிக்காண்பிக்கும் மருத்துவர்களிடம் செல்வது நமக்கு பெருமளவு நம்பிக்கையையும் பலனையும் தரும்.


எந்த மருத்துவரிடம் சென்றாலும் சரி- அவர் கொடுக்கும் அத்தனை மாத்திரை, மருந்துகளையும் வாங்காமல் இரு நாட்களுக்கு மட்டும் வாங்கிக் கொண்டு, அவை உடலுக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே மேற்கொண்டு வாங்க வேண்டும்.


கண்டிப்பாக மருத்துவர் குறிப்பிட்ட அத்தனை நாட்களுக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் பாதியிலேயே நிறுத்தக்கூடாது. ஒத்துக்கொள்ளாத மாத்திரைகளைப்பற்றிச் சொல்லி மருத்துவரிடம் வேறு மாத்திரை எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.


நாமாக மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கி உட்கொள்ளுவது மிகப்பெரிய தவறு.


மருத்துவரிடம் செல்லும்போது கையோடு அதற்கு முன் எடுத்த மருந்துகளின் விபரம், சிகிச்சை விபரம் இவற்றை ஒரு குறிப்பாக டைப் செய்து எடுத்துச் செல்வது மிகவும் நல்லது. இத்தோடு நாம் தற்சமயம் எடுக்கும் மாத்திரை விபரங்கள், நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும் மருந்துகளின் விபரங்கள், இரத்தப்பிரிவு விபரம் இவை அனைத்தும் அந்தக் குறிப்பில் இருக்க வேண்டும். இதனால் மருத்துவருக்கும் சிகிச்சை செய்ய வசதி. அவருக்கும் நம் உடல்நிலைப்பிரச்சினைகளை சீக்கிரமாகப் புரிந்து கொள்ள முடியும். சில மருத்துவர்கள் ‘ சீக்கிரம் சொல்லுங்கள்’ என்று பறப்பார்கள். நமக்கு அப்போது பார்த்து அனைத்தும் மறந்து போகும் பதட்டத்தில்! இந்த குறிப்புதான் அப்போது உதவி செய்யும். அதை மிகச் சிறிதாக ப்ரிண்ட் எடுத்து பர்ஸிலோ கைப்பையிலோ வைத்துக்கொண்டால் அவசரகால சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டால், பக்கத்தில் யாரும் இல்லாத நிலையிலும்கூட மருத்துவர்கள் இதைப்படித்துப் பார்த்து உங்களுக்கு உடனேயே சிகிச்சை எடுக்க முடியும்.


ஒரு மிகப் பெரிய மருத்துவர் இதைப் படித்து விட்டு என்னிடம்


‘இதை நான் இங்கு சிகிச்சை எடுக்க வரும் எல்லோரிடமும் காண்பித்து இதைப்போல செய்யுங்கள் என்று சொல்லப் போகிறேன். இதனால் எங்களுக்கு சிகிச்சை செய்ய எவ்வளவு வசதியாக இருக்கிறது’ என்றார். இன்னொரு சிறந்த மருத்துவர் என்னைப்பாராட்டி விட்டு ‘ இதில் ஒரு சின்ன திருத்தம் செய்து கொள்ளுங்கள். இதில் நிறைய வருடங்களின் சரித்திரம் இருக்கிறது. எல்லா டாக்டர்களுக்கும் இதைப்படிக்க பொறுமை இருக்காது. அதனால் ஒரு 10 வருடங்களுக்கான முக்கிய பிரச்சினனகளை மட்டும் தனியாக ப்ரிண்ட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவர்களுக்கு அது வசதியாக இருக்கும். அவர்களுக்குத் தேவைப்பட்டால் முழு ஹிஸ்டரியையும்கொடுக்கலாம்’ என்றார். நானும் அதையே கடை பிடிக்கிறேன். ஏகப்பட்ட பிரச்சினைகள் கொண்ட நம் உடலுக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள்,குறைபாடுகள் உள்ள இன்றைய மருத்துவத்துறைக்கும் இடையே இந்த மாதிரி விழிப்புணர்வுடன் நாம் கடைப்பிடிக்கும் சில விஷயங்கள் நம்முடைய கஷ்டங்களைப் பெருமளவில் குறைக்கும்!!







Tuesday 24 August 2010

மந்தையில் சில கறுப்பாடுகள்!

உலகத்தில் வேறெந்தப்பதவியும் கடவுளுக்கு நிகராகப்பேசப்பட்டதில்லை. உயிரைக்காக்கும் தொழிலைக் கையிலெடுத்து பல வயிறுகளில் தினமும் பால் வார்க்கும் மருத்துவர்களுக்கு மட்டும்தான் அந்த சிறப்பு இருக்கிறது. அளவு கடந்த கருணையும் மனித நேயமும் இந்த மருத்துவத்துறையை அதிகம் மதிப்புள்ளதாக ஆக்குகிறது.



ஆனால் இன்றைய மருத்துவர்களில் எத்தனை பேர் தனது சிறப்பை உணர்ந்து மருத்துவம் செய்கிறார்கள்?


தவறுதலான அணுகுமுறைகள், கவனக்குறைவுகள், கருணையின்மை, எரிந்து விழுதல், பணத்தாசை என்று இன்னும் ஆயிரமாயிரம் காரணங்கள் இன்றைக்கு மருத்துவத் துறைக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றன.
 தனியார் மருத்துவமனையில் பணத்தைக்கொட்டினாலும் சரி, அரசு மருத்துவ மனையானாலும் சரி, உரிய சிகிச்சை நிறைய பேருக்குக் கிடைப்பதில்லை என்பது மட்டுமல்ல, தவறான சிகிச்சைகளும் நடந்து இன்றைக்கு பல்லாயிரம் மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்கிறார்கள். கிடைத்த கசப்பான அனுபவங்களோ எந்த மருத்துவரிடமும் நம்பிக்கையின்மையுடனும் சந்தேகத்துடனும்தான் பேச வைக்கின்றன.


கடந்த ஜுன் மாத ‘சினேகிதி’ இதழில்கூட ஒரு நாலு வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை பற்றிய செய்தி வந்திருந்தது. அந்த வயதில் அவனுக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை நடந்தபோது அவனுக்கு அளவுக்கதிகமாக அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டு விட்டதால் அவனின் கைகளும் கால்களும் செயலிழந்து விட்டன. அதோடு அவனுடைய பெற்றோரின் ஆயிரமாயிரம் கனவுகளும் செயலிழந்து போய் விட்டன. இன்றைக்கு 33 வயது வாலிபனாக இருக்கும் அவன் இன்னும் படுத்த படுக்கையாக இருக்கிறான். அவனுடைய பெற்றோர்தான் அவனை சக்கர நாற்காலியில் வைத்து அவனை எங்காவது அழைத்துச் செல்கிறார்கள். எத்தனை வேதனை அந்த பெற்றோருக்கும் அவர்களுடைய மகனுக்கும்!!

என் சினேகிதியின் கணவரின் வலது கை திடீரென்று செயலிழந்து போனது. பல விதமான பரிசோதனைகளுக்குப் பின் டாக்டர் ஒரு கையில் சிகிரெட்டுடனும் மறு கையில் ஜர்தா பீடாவுடனும் பேச ஆரம்பித்தார்.


“உங்கள் கணவருக்கு அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் அதுவும் அதில் 30 சதவிகிதம்தான் வெற்றி கிடைக்கும்”!


என் சினேகிதி நிலை குலைந்து போனார். சக நண்பர்கள், உறவினர்கள் சிபாரிசு செய்த ஒரு நாட்டு வைத்தியரிடம் சென்றார். அவர் கொடுத்த மூலிகை எண்ணெயை ஒரு மாதம் தடவினார். செயலிழந்து போன கை முழுவதுமாக சரியானது!!


இன்னொரு சினேகிதி, கர்ப்பப்பை நீக்கம் செய்தவர், வயிற்று வலிக்காக வயிறு சம்பந்தமான நிபுணரிடம் சென்றார். அவர் தன் உதவியாளரிடம்[ ரேடியாலஜிஸ்ட்] ஸ்கான் பண்னச் சொன்னார். அவர் ஸ்கான் பண்ணிக்கொண்டே இப்படி சொல்கிறார்-“ என்ன டாக்டர்! இவர்களுக்கு கர்ப்பப்பையைக் காணோம், சினைப்பைகளையும் காணோம்?”


டாக்டர் சொல்கிறார்-“நல்லா தேடிப்பாரு, கிடைக்கும்”


படுத்துக்கொண்டிருந்த என் சினேகிதிக்கு பகீரென்று ஆனது. தனக்கு கர்ப்பப்பையைத்தானே அறுவை சிகிச்சையில் எடுத்தார்கள்! சினைப்பைகளை எப்போது எடுத்தார்கள்? அப்படி எடுத்திருந்தால் ஏன் அந்த டாக்டர் இதைச் சொல்லவில்லை? அதற்கு உரிய மருத்துவ சிகிச்சையும் ஏன் தரவில்லை? இப்படியெலாம் அவருக்கு படுத்திருந்த நிலையில் மனம் கலங்கியது.


அப்புறம் டாக்டர் சொன்னார் “சும்மா சொன்னேன். இவர்களுக்கு கர்ப்பப்பை நீக்கம் நடந்துள்ளதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள் ”


அவரிடமிருந்து வெளியே வந்ததும் என் சினேகிதி நேராகப்போன இடம் தனக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம். அவர் அமைதியாக ‘ அப்படி சின்னைப்பையை நீக்கம் செய்ய வேண்டிய நிலை இருந்திருந்தால் உங்களிடம் அனுமதி பெற்றுத்தான் செய்திருந்திருப்போம். உங்கள் ரிப்போர்ட்டில் ‘ கர்ப்பப்பை நீக்கம் மட்டும்தானே குறிப்பிட்டிருக்கிறோம்? என்று சொன்னார்.


ஆனாலும் இன்று வரை என் சினேகிதிக்கு சந்தேகம் தீரவில்லை.


10 வருடங்களுக்கு முன் அதிக காய்ச்சலினால் வீட்டுக்கு அருகிலுள்ள டாக்டரிடம் சென்றேன். அவர் சில மருந்துகளைக் கொடுத்து விட்டு மறு நாள் வரச்சொனார். மறு நாள் என்னைப்பரிசோதித்தவர் எனக்கு இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி ஏற்கனவே இரத்த அழுத்தத்திற்காக நான் எடுத்துக்கொண்டிருந்த மாத்திரையின் அளவை அதிகரித்தார். இப்படியே மறு நாளும் இன்னும் இரத்த அழுத்தம் குறையவில்லை என்று மறு நாளும் அதிகரித்தார். எனக்கு பயமாகி விட்டது. மேலும் காய்ச்சலும் குறைந்து நடக்கவும் முடிந்ததால் நகரின் மையத்திலுள்ள இதய மருத்துவரிடம் சென்றேன். அவரிடம் நடந்ததைச் சொன்னதும் மெதுவாகச் சிரித்து விட்டு வேறு மாத்திரைகள் கொடுத்தார். இரத்த அழுத்தம் நார்மலுக்கு வந்தது. அப்புறம் இங்கு வந்து என் இதய மருத்துவரிடம் எல்லாவற்றையும் சொன்னதும் அவருக்கு வந்ததே கோபம்! “ உங்கள் இதயத்துடன் எத்தனை தூரம் அந்த டாக்டர் விளையாடியிருக்கிறார் ! உங்கள் காய்ச்சலுக்குக் கொடுத்த ஒரு சிரப்பில் decongestent என்ற content உள்ளது. இந்த மாதிரி மருந்துகள் உடனேயே காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் சரியாக்கும். ஆனால் இரத்த அழுத்தத்தை அதிகரித்து விடும். இனி எந்த டாக்டரிடம் சென்றாலும் இந்த decongestent என்ற content உள்ள மருந்தோ மாத்திரைகளோ வேண்டாம் என்று சொல்லிக் கேளுங்கள் “ என்று சொன்னார். இது போல நமது வியாதிக்கு ஆராய்ச்சியெல்லாம் பண்ணி நாமே வைத்தியம் செய்து கொள்ள வேண்டிய நிலை இன்று பரவலாக ஏற்பட்டுள்ளது. படித்தவர்கள் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். கேள்விகள் கேட்கலாம். படிக்காதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது.


சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நண்பர் ஒருத்தருக்கு நேர்ந்த அனுபவம் இன்னும் மோசமானது. அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது பக்கத்திலிருந்த உறுப்பையும் மருத்துவர் நீக்கி விட்டார். பின்னர் உடலில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் மருத்துவரை திரும்பவும் அவர் சந்தித்து காரணம் கேட்டபோது அந்த மருத்துவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?


“ ஒரு நாளில் எத்தனையோ அறுவை சிகிச்சை செய்கிறேன். ஒரு வேலை அந்த இடத்தில் சீழ் பிடித்திருந்து நான் அதை நீக்கியிருக்கலாம். எனக்கு நினைவில்லை. “!


அவர் அதிர்ந்து போய் “ எனக்கு இந்த விஷயத்தை அப்போதே நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா?” என்று கேட்க, அந்த மருத்துவர் ரொம்பவும் கூலாக, “ ஒருவேளை உங்கள் உறவினரிடம் சொல்லியிருப்பேன். அவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்’ என்றார்!


இதை எதிர்த்து கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போவதா? வழக்கு போடுவதா? இதில் அந்த மருத்துவருக்கு தக்க தண்டனை கிடைத்து விடுமா? காணாமல் போன உறுப்புகளுக்கு, அதனால் உடலில் விளைந்த சேதங்களுக்கு என்ன விதத்தில் நியாயம் கிடைக்கும்?


மருத்துவ/மருத்துவர்களிடமான பிரச்சினைகள் மறுபடியும் தொடரும்.. .. ..



Thursday 19 August 2010

அன்பென்ற வேர்களின் பலம்.. .. ..

இலக்கியங்களிலும் கவிதைகளிலும் புதினங்களிலும் திரைப்படங்களிலும் பழங்காலத்திலிருந்து இன்றைய காலம் வரை தாய்மையைப்பற்றி-அதன் சிறப்பையும் உயர்வையும் பற்றி எழுதாத கவிதைகளில்லை! பாடாத பாடல்கள் இல்லை!! சொல்லாத வார்த்தைகள் இல்லை!!! ஆனால் சொல்லாத-வெளிப்படாத உணர்வுகளுக்கு என்றுமே ஒரு புனிதம் உண்டு. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்ற கவித்துவமான வரிகளுக்கு இணையானதுதான் ஒரு தந்தையின் பெருமை!



ஆலமரம் எத்தனையோ பேர்களுக்கு குளிர்ச்சி தருகிறது! நிழல் தருகிறது ஒரு தாய் தன் குழந்தைகளுக்குத் தரும் இதம் போல! ஆனால் அந்த ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் அதன் வலிமையான வேர்களைப்பற்றி யாரும் பேசுவதில்லை!

சில வருடங்களுக்கு முன் தஞ்சையில் என் வீட்டருகேயுள்ள-எனக்கு பழக்கமுள்ள ஒரு பெண் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. அவர்களுக்காக காத்திருந்தபோது அங்கே புதிதாக ஒட்டப்பட்டிருந்த இரு சிறிய சுவரொட்டிகளை கவனித்தேன். முதலாவது தாய்மையின் உயர்வைப்பற்றிய கவிதை. மிக அருமையாக இருந்தது. அடுத்ததுதான் என்னை முதலில் வியப்பிலாழ்த்தி, பின் நெகிழ்ந்து கனிந்து போக வைத்தது.

அந்த கவிதை.. .. .. ..

“ அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால்
  அப்பா இல்லத்தின் அடையாளம்!
  அம்மா ஊட்டுவது அன்பு.
  அப்பா காட்டுவது மனத்தெம்பு!

  நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா-ஆனால்
  அந்த உணவை சம்பாதித்துத் தருவது அப்பா என்பதை
  மறந்தே போகிறோம்!

  கல்லில் இடறும்போது வாயில் வரும் வார்த்தை
‘அம்மாடியோ!’
  காரில் மோதி கீழே விழும்போது வாயில் வரும் வார்த்தை
 ‘ஐயோ அப்பா!’

  ஏனெனில் சின்னச்சின்னத் துன்பங்களில்
  தேடுவது அம்மாவின் அன்பு!

  ஆனால் பெரிய துன்பங்களில் துணை நிற்பது
  அப்பாவின் ஆதரவு!

   அப்பா ஒரு நெடிய ஆலமரம்!
   அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்!’

மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசி பாராட்டியபோது அவர்களின் விழியோரத்தில் கண்ணீர் முத்துக்கள்!!

‘என் அப்பா சமிபத்தில்தான் இறந்து போனார்கள். ஆனால் அவரின் அன்பு, அவர் கொடுத்த மனத்தெம்பு, தைரியம், தன்னம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழந்து விட்டேன்!’ என்றார்கள்.

உண்மைதான்! அன்பிற்குரியவர்கள் திடீரென்று மறையும்போது அந்த அன்புடன் வாழ்வில் உள்ள நம்பிக்கையும் அதைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் ஆட்டம் கண்டு விடுகின்றது! அந்தக்கவிதையில் உள்ளது போல பெரிய துன்பங்களில் தெம்புடன் பிடித்துக்கொண்ட தோள்கள் மறைந்து விட்டன!

ஒரு தந்தையின் பெருமையை உணர்த்த இதைவிட எளிமையான, அழகான கவிதையை நான் படித்ததில்லை!

Saturday 14 August 2010

பசுமையுடன் இளமை அழகு!!

இளம் வயதில் வரைந்த ஆயில் பெயிண்டிங் இது. ஆயில் பெயிண்டிங் பழகிக்கொண்டிருந்த புதிது! . சுற்றிலும் பசுமையாய், பனி படர்ந்த மலையின் பின்னணியில், காஷ்மீரப்பள்ளத்தாக்கில் கையில் ஆட்டுக்குட்டியுடன் நிற்கும் இளம் காஷ்மீரப்பெண்ணை வரைந்திருக்கிறேன்.

Monday 9 August 2010

நலமுடன் வாழ

மறுபடியும் சில மருத்துவக்குறிப்புகள். ஒரு சிலருக்காவது இவை பயன்பட்டால் எழுதிய நோக்கத்திற்கு பலன் கிடைத்து விடும்.


முதலாம் மருத்துவ முத்து:




5 மிளகுகளின் பொடி, 10 உலர்ந்த கருப்பு திராட்சை, ஒரு ஸ்பூன் சோம்புத் தூள்- இவற்றை ஒரு கப் நீரில் இரவு ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் கசக்கிக் குடித்து வந்தால் பித்தப்பை கற்கள் அழிந்து விடும்.


இரண்டாம் மருத்துவ முத்து:


நோயாளிகள் உபயோகப்படுத்தும் வென்னீர்ப்பையில் சிறிது உப்பைச் சேர்த்தால் வெகு நேரத்திற்கு சூடு குறையாமல் இருக்கும்.


மூன்றாம் மருத்துவ முத்து:


வெந்நீரின் நன்மைகள்:


வெந்நீர் இரத்ததிலுள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. அடிக்கடி வெந்நீர் சாப்பிடுபவர்களுக்கு தலைவலி வருவதில்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள்வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடித்தால் உடனே வலி குறையும்.


நான்காம் மருத்துவ முத்து:




காலையில் வெறும் வயிற்றில் அரை கப் முட்டைக்கோஸ் சாறு குடித்து வந்தால் முற்றிய அல்சர்கூட முழுவதும் குனமாகும்.


ஐந்தாம் மருத்துவ முத்து:


தேள் கொட்டினால்:


கடித்த இடத்தின் மேல் பகுதியில் ஒரு கயிறால் உடனேயே கட்டு போட வேண்டும். 9 மிளகுகளை ஒரு சுத்தமான வெற்றிலையில் வைத்து மடித்து நன்கு மென்று விழுங்கும்படி செய்து சிறிது தண்ணீரும் குடிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அரை மூடி முற்றிய தேங்காயைக் கீற்று போட்டு நன்கு மென்று தின்று சக்கையைத் துப்ப வைக்க வெண்டும். அரை மூடி தேங்காயைத் தின்பதற்குள் வலியும் விஷமும் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து விடும். ஒன்றரை மணி நேரத்தில் வலி முழுவதுமாக நீங்கி விடும்.


ஆறாம் மருத்துவ முத்து:


காய்ந்த மகிழம்பூவை நல்லெண்ணையில் போட்டு தொடர்ந்து வெய்யிலில் வைத்து வந்தால் மகிழம்பூவின் சாறு முழுவதும் நல்லெண்ணையில் இறங்கி விடும். தலை கனம், தொடர்ந்த ஜலதோஷம் இவற்றால் அவதியுறும்போது இதைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Wednesday 4 August 2010

முத்துக்குவியல்

இது பல தரப்பட்ட முத்துக்களின் தொகுப்பு என்பதால் இப்பகுதி முத்துக்குவியலாகிறது.
முதலாம் முத்து:



தக்காளி, காரட்டில் புற்று நோயை எதிர்க்கும் சத்துக்கள் இருக்கின்றன. அதிலும் காரட்டில் இருக்கும் betacarotene என்ற சத்துப்பொருளை விட தக்காளியில் இருக்கும் lycopene என்ற சத்து இரண்டு மடங்கு அதிகமாக புற்று நோயை, அதிலும் நுரையீரல், சிறுநீரகச் சுரப்பிகளில் ஏற்படும் புற்று நோயை எதிர்க்கிறது என்று ஹார்வர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்!! அதனால் விதைகளை நீக்கி தக்காளி, காரட் கலந்த சாலட் தினமும் உண்பது மிகவும் சிறந்தது.

இரண்டாம் முத்து:

மொட்டை அடிப்பது நல்லதா? நல்லதுதான் என்று மருத்துவம் கூறுகிறது. வருடத்திற்கொரு முறை மொட்டை அடிப்பதால் தலையில் உள்ள பொடுகு, பேன், கரப்பான், புழுவெட்டு, போன்ற நோய்க்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. மண்டையில் உள்ள கண்ணுக்குத் தெரியாத துவாரங்கள் வியர்வையையை நன்கு வெளியேற்ற வழி பிறக்கிறது. சிறு வயதினருக்கு முடியும் அடர்த்தியாக வளர்கிறது
மூன்றாம் முத்து:

2007-ஆம் ஆண்டு உச்சநீதி மன்ற நீதிபதி ஒருவர் , பள்ளிகளில் சாதியை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டுமென்று மானவர்களைக் கட்டாயப்படுத்துதல் கூடாது; என்று குறிப்பிட்டார். அப்போதைய பத்திரிக்கைகள் எல்லாம் பாராட்டித் தீர்த்தன. ஆனால் இது இன்னும் தமிழ் நாட்டில் முற்றிலும் அழிந்து விட்டனவா என்பது சரியாகத் தெரியவில்லை. தமிழகத்தைப்பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைச் சாதியினர்/தாழ்த்தப்பட்டோர், பிற வகுப்பினர் என்பதை வைத்துத்தான் அரசு சலுகைகளை அளிக்கிறது. உட்பிரிவுகள் குறிப்பிடப்படுவதில்லை என்று சொல்கிறார்கள். இப்போதைக்கு காகிதத்தில் அழிக்கப்பட்டால்தான் நாளடைவில் மனங்களிலிருந்து சாதி வேற்றுமை ஒழியும்.

நான்காம் முத்து:

குற்றாலத்திலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கேரள எல்லையிலுள்ள தென்மலாவில் அழகிய ‘வண்ணத்துப்பூச்சி பூங்கா’ உள்ளது. 20 முதல் 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பமுள்ள, பூக்கள், தாவரங்கள் நிறையப்பெற்ற சீதோஷ்னத்தில்தான் வண்னத்துப்பூச்சிகள் வாழும். அப்படிப்பட்ட இடத்தில், இந்தியாவிலேயே முதல் முதலாக அமையப்பெற்ற Butterfly Park இது. இந்தியா முழுவதுமிருக்கும் 126 வகைகளுக்கும் மேற்பட்ட வண்னத்துப்பூச்சிகளை இங்கே கொண்டு வந்து வடிவமைத்திருக்கிறார்கள். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் இது.

ஐந்தாம் முத்து:

சில வருடங்களுக்கு முன் மனதை நெகிழ வைத்த சம்பவம் இது. நெருங்கிய உறவினர் ஒருவர் தன்னிடம் வேலை செய்த வயதான பென்மணிக்கு உரிய கூலிப்பணமான 3000 ரூபாயைத் தராமல் இழுத்துக்கொண்டே போக, பொறுமையிழந்த அந்த வயோதிகப் பெண்மணி மண் வாரி இறைத்து சாபமிட்டுச் சென்று விட்டது. இதைக் கேள்விப்பட்ட என் கணவர் அந்தப் பெண்மணியை வரச்சொல்லி 3000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார்கள். அந்தப் பெண்மணி கண் கலங்க அந்தப் பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்து விட்டு, 13 ரூபாயை திரும்பக் கொடுத்தது. ‘என்ன இது’ என்று கேட்டதற்கு ‘எனக்குச் சேர வேண்டியது ரூபாய் 2987 மட்டும்தான் அய்யா ’ என்றது. ‘பரவாயில்லை. வைத்துக்கொள்’ என்று பலமுறை சொன்னபோதும் மறுத்ததோடு அல்லாமல், என்னைக்கூப்பிட்டு ‘ நீங்கள் நன்றாக வாழவேண்டும். அந்த அய்யாவை நிறைய சாபமிட்டுப் பேசி விட்டேன். அந்த அய்யாவும் நல்லபடியாக வாழ வேண்டும் என்றது. அந்த ஏழையின் நேர்மையும் தன்மானமும் என்னை அன்று மிகவும் நெகிழ வைத்து விட்டது!!