Thursday 31 December 2020

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 


2020ம் ஆண்டு இன்னும் சிறிது நேரத்தில் முடியப்போகிறது! துன்பங்களும் இழப்புகளும் போராட்டங்களுமாய் இந்த வருடம் கழிந்து சென்றது! கொரோனா என்னும் தொற்றால் கிடைத்த அனுபவங்கள், பாடங்கள் ஒருவேளை நமக்குக் கிடைத்த நன்மைகள் பட்டியலில் சேரலாம். இன்னொன்று, கொரோனாவால் பிரயாணங்கள், திருமணங்கள், துக்கங்களை முதலியவற்றைத்தவிர்த்ததினால் அதிக செலவுகள் செய்யாமல், இருப்பதை வைத்துக்கொண்டு பல மாதங்கள் ஓட்டியது அடுத்த நன்மை! இப்படிப்பட்ட சில நன்மைகள் தவிர, சுற்றிலும் நோக்கினால் உலகெங்கும் பொருளாதார இழப்பை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறுகின்றன. விழுந்த அடிகளை சமாளித்து மீண்டு எழுவதற்கு பல திட்டங்களை வகுக்குகின்றன. உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள்! ஆயிரக்கணக்கான தொழில்கள் மூடப்பட்டன! 



இந்த 2021 ஆண்டாவது அனைத்து துன்பங்களும் நோய்களும் விலகி ஓடி, எல்லோர் வாழ்க்கையிலும் வசந்தமும் நன்மைகளும் வர வேண்டும்! வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் அடைந்து கிடைக்கும் குழந்தைகள் முன்போல் துள்ளிக்குத்து பள்ளிகளுக்கு செல்வதும் ஆசை தீர ஓடியாடி விளையாடுவதும் நடந்தேற வேண்டும்! 


அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


Monday 28 December 2020

முகங்கள்-4!!!!


இது ஒரு உறவினர் ஒருவரின் வாழ்க்கையைப்பற்றியது. மனைவி 50 வயது முடிவதற்குள்ளேயே சர்க்கரை நோயால் இறந்து விட்டார். இரண்டு பிள்ளைகள், இரண்டு பெண்கள்., மூதத பிள்ளை தான் குடும்பத்தை தாங்கிய வேர். அந்தப்பிள்ளைக்கு சிறிய வயதிலேயே மார்க் 80 சதவிகிதம் எடுத்திருந்தாலும் ஏன் 90 சதவிகிதம் எடுக்கவில்லை என்று அடிமேல் அடி விழும். நோயுள்ள தாயின் வேலைகளை பள்ளிப்பருவத்திலேயே அந்தப்பிள்ளை செய்யும். மனதில் வலியோடு தான் வயதும் வளர்ந்தது. வியாபாரத்தில் நொடித்துப்போன அந்தப் பெரியவருக்கு உறவினர்கள் எல்லாம் உதவி செய்ய அந்தக் குழந்தைகள் எல்லாம் நல்லபடியாக படித்தார்கள். மூத்த மகன் வெளிநாடெல்லாம் சென்று பொருளீட்டி தன் அப்பா பெயரில் இடம் வாங்கி மிகப்பெரிய வீட்டையும் கட்டினார். மூத்த மகனின் திருமணத்தைப்பார்க்கக்கூட கொடுத்து வைக்காமல் அந்த தாயார் இறந்து போனார். மூத்த மகளின் திருமணமும் முடிந்தது.

அப்புறம் தான் பிரச்சினைகள், குடும்பத்தகராறுகள் எல்லாம் வரத்தொடங்கின. இத்தனைக்கும் மருமகளாக வந்த உறவுப்பெண் மிக நல்ல மாதிரி. அவரால் எந்தப்பிரச்சினையும் வரவில்லை. பிரச்சினையெல்லாம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் தான்.  மூல காரணம் இளைய தங்கையின் தேவையற்ற பேச்சுக்கள் தான். அவ்வளவு பிரச்சினைகளும் முற்றிப்போய் ஒரு நள்ளிரவில் தன் தந்தையையும் திருமணமாகாத தன் தங்கையையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் மகன். ஒடிந்து போனார் தந்தை. தங்கைக்கும் சரி, தம்பிக்கும் சரி, திருமணமோ அல்லது நல்ல வேலையில் அமர்த்துவதோ எதுவும் தன்னால் செய்ய முடியாது என்று மறுத்தும் விட்டார் அந்த மகன். இத்தனைக்கும் நல்ல வேலையில் சொந்த வீட்டுடன் மிக வசதியாக இருந்தார் அவர்.

வெளியேறி வந்த அந்த தந்தை யோசித்தார். 70 வயதைக்கடந்த நிலையில், தனக்கென்று எந்த சொத்தும் வாழ்வாதாரமும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்ததின் முடிவு எங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் தள்ளியது. மகன் தன் பெயரில் கட்டிய வீட்டை மகனுக்குத் தெரியாமல் ரகசியமாக விற்றார். வந்த தொகையில் நான்கு மனைகள் வாங்கி ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனை என்று நான்கு பிள்ளைகளுக்கும் எழுதி வைத்தார். மீதியில் தனக்கென ஒரு பிளாட் வாங்கினார். பாக்கியை வங்கியில் போட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கையை தொடர்வது என்று முடிவெடுத்தார். கடைசி பெண்ணுக்கும் பிள்ளைக்கும் சிக்கனமாக திருமணத்தையும் செய்து வைத்தார்.  ' நான் செய்தது உலகத்திற்கு இழிவாகத்தான் தெரியும். ஆனால் என்னைப்பொறுத்தவரை இது நியாயம்' என்று எழுதி வைத்தார் தந்தை.

வீட்டை விற்ற செய்தி கிடைத்ததுமே மூத்த மகன் பொங்கி எழுந்தார்.  தந்தைக்கும் மகனுக்குமிடையே நிறைய வாக்குவாதங்கள், கடிதங்கள் எல்லாம் நிகழ்ந்தன. அதன் பிறகும் சினம் தணியாத மகன் தந்தை மேல் வழக்கும் தொடர்ந்தார். எப்படியும் தந்தைக்கு தான் சாதகமாக வழக்கு முடியும் என்ற நிலையிலும் மகன் அதை ஒத்துக்கொள்ள மறுத்தார். இந்த வழக்கு சில வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்தது.

இடையே, நான் அந்த உறவினருடன் பேசிக்கொண்டிருந்த போது ' நீ வேண்டுமானால் அவனுடன் பேசிப்பார்க்கிறாயா? அவனுக்கு புரிகிற மாதிரி எல்லாவற்றையும் சொல்லி பேசிப்பார்க்கிறாயா?' என்று கேட்டார். இத்தனைக்கும் பிறகு அவருக்கு இன்னும் மகன் மீது பாசம் இருக்கிறது என்று புரிந்த போது, ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒத்துக்கொண்டேன். சென்னையில் இருந்த அவரின் மகனோடு தொலைபேசியில் பேசி, அவரின் தந்தையின் நிலைமையை புரிய வைக்க முயன்றேன். இறுதியில் ' நீ அவரிடம் தந்தையென்ற‌ பாசம் கூட காண்பிக்க வேண்டாம், அன்பு என்று கூட வேண்டாம். ஒரு வயதானவரிடம் காட்டக்கூடிய கருணையையாவது காண்பிக்கலாமே? அந்தக் க‌ருணையோடு அவருக்கு நீ சாப்பாடு போடலாமே? " என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ உங்களுக்குத் தெரியாது அவரைப்பற்றி. சாப்பிடுகிற சாப்பாட்டில் விஷம் வைக்கத் தயங்காதவர் அவர். அவர் தப்பு பண்ணியிருந்தால் கடவுள் அவரை தண்டிப்பார். நான் தப்பு பண்ணியிருந்தால் அதே கடவுள் என்னை தண்டிக்கட்டும்' என்றார். ' இதற்கு மேல் பேச முடியாது' என்று சொல்லி நான் பேசுவதை முறித்து விட்டேன். ஆனால் இந்த கடுமையான பேச்சுகளை நான் அந்தத் தந்தையிடம் சொல்லவில்லை. பூசி மழுப்பி விட்டேன்.

அதற்கப்புறம் ஓரிரு வருடங்களில் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். தன் தந்தை மரணப்படுக்கையில் இருந்த போது கூட தனக்கு இழந்த சொத்தை இப்போதாவது அவர் திரும்பத்தருவாரா என்பதிலேயே தான் அந்த மகனின் நாட்டமிருந்தது.

அதற்கு அடுத்த வருடமே அந்த மகனுக்கு கல்லீரல் செயலிழந்து போனது. 2,3 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். கல்லீரல் மாற்று சிகிச்சையும்  அவருக்கு செய்தாலும் பலன் கிடைப்பது  சந்தேகத்திற்கிடம் தான் என்று மருத்துவர்களும் சொல்லி விட்டார்களாம்.  உடலெல்லாம் நீர் தேங்கி அதற்காக அறுவை சிகிச்சைகள் செய்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அவரும் இறந்து போனார். எல்லா சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு ஒதுங்கி இருந்ததால் அவரின் இறப்பிற்கு மிக நெருங்கிய உறவுகள் கூட போகவில்லை.  அந்த இறப்பு செய்தி கிடைத்த பிறகு ஒரு வாரம் வரை அதன் தாக்கம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது.  ஒரு மகன் என்ன தப்பு செய்தாலும் அவன் பெற்றோர்களால் அதை மன்னிக்க முடிகிறது. தன் பெற்றோர்கள் தப்பு செய்தால் மட்டும் ஏன் அந்த மகனால் மன்னிக்க முடியவில்லை?  

Monday 14 December 2020

முத்துக்குவியல்-59!!!

 பெருமித முத்து:

அமீரகத்தில் இந்து கோவில்:

கடந்த 2015ல் அமீரகத்திற்கு முதல்முறையாக பிரதமர் மோடி வந்த போது, அமீரகத்தில் வசிக்கும் இந்து மகக்ளுக்காக அவரின்  வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய அமீரகக் குடியரசின் தலநகர் அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்காக அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. அபுதாபியின் பட்டத்து இளவரசரின் உத்தரவுப்படி துபாய் அபுதாபி ஷேக் ஜாயத் சாலையில் அல் ரக்பா என்னும் இடத்தில் உள்ள அல் முரைக்கா என்ற இடத்தில் 25000 சதுர அடி இடம் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. அதன் பின் இக்கோவில் அடிக்கல் நாட்டு விழா 2018ல் பிரதமர் மோடி மீண்டும் வந்த போது நடைபெற்றது. இதைப்பற்றி முன்னரேயே எழுதியிருந்தேன்.


இந்தக் கோவில் கட்டும் பொறுப்பு குஜராத் மாநிலத்தில் பாப்ஸ் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 27 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோவிலின் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. சாதாரண கம்பி கான்க்ரீட் என்றில்லாமல் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு பாரம்பரிய முறையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக்கோவிலுக்காக கல்தூண்கள், சிற்பப்பணிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 707 கனமீட்டட் அளவுள்ள பாறைகள் குடையப்பட்டு சிற்பங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 


இந்து மததின் புராண இதிகாசங்களின் நிகழ்வுகள் சிற்பங்களாக உருவாகி வருகின்றன. இந்த சிற்பங்கள் செதுக்கும் பணியில் இதுவரை 2000 கலைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது முடிவடையும் தருவாயில் உள்ள சிற்பங்கள் கப்பல்கள் மூலம் அபுதாபிக்கு எடுத்து வரப்பட்டு கோவிலில் பொருத்தப்படும். 


அடுத்த ஆண்டு 2021 மார்ச் இறுதிக்கும் இந்தக்கோவில் சிற்பங்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


அதற்குள்ளாகவே சர்வதேச அளவிலான 2020ம் ஆண்டுக்கான ‘ வர்த்தக ரீதியிலான சிறந்த வடிவமைப்பு விருது’ இக்கோவிலைக் கட்டி வரும் பாப்ஸ் அமைப்பிற்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்து கோவிலின் கட்டுமானத்தில் சிறந்த எந்திர வடிவமைப்பிற்காக இந்த அமைப்பு விருதினைப்பெற்றுள்ளது. இப்போது 2-வதாக இந்த விருது கிடைத்துள்ளது.

சாதனை முத்து:

தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்கும் இடையேயுள்ள ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலக்ஷ்மி. அங்குள்ள அரசுப்பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறார். சென்ற வருடம் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய விண் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 'நாசா'வுக்குச் செல்ல நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4000 மாணவர்களில் இவரும் ஒருவர். மிகவும் ஏழ்மையில் இருக்கும் இவருக்காக, இவர் நாசா செல்வதற்காக‌ மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் அனைவரும் உதவ முன் வந்தார்கள். அது போல ' கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனம் இவருக்கு உதவ முன் வந்த போது, ஏற்கனவே அமெரிக்கா போவதற்கான உதவிகள் அனைத்தும் கிடைத்த நிலையில் வேறுமாதிரியான உதவி ஒன்றை இவர் கேட்டார். 



முந்திரிக்காடுகள் நிறைந்த இவர் கிராமத்தில் முந்திரிக்கொட்டைகளை வறுத்தெடுத்து அதிலிருந்து பருப்பை பிரித்தெடுத்து சாலையோரமாய் விற்பது தான் இந்த கிராமத்து மக்களின் தொழில். மிகவும் பின் தங்கிய இந்த கிராமத்தில் இருக்கும் ஓட்டு வீடுகளில் கழிப்பறை கிடையாது. காட்டுப்பக்கம் தான் அதற்கு ஒதுங்க வேண்டும். அதுவும் பெண்களுக்கு இது மிகப்பெரிய அவஸ்தை. ' எங்கள் வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டித்தர முடியுமா' என்று இவர் கேட்டார். அத‌ற்கு அந்த ' கிராமாலயா' நிறுவனம் ஒத்துக்கொண்டு 125 கழிப்பறைகளை கட்டிக்கொடுத்திற்கிறது!! இந்த மிகப்பெரிய சாதனையை செய்த இந்த ஏழைச்சிறுமியை பாராட்டுவதா அல்லது திறந்த மனதுடன் இந்த மாபெரும் உதவியைச் செய்த 'கிராமலாயாவைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.

இந்த வருடம் மே மாதம் நாசா செல்ல வேண்டியவர் கொரோனாவால் செல்ல முடியவில்லை. அதனால் அடுத்த வருடம் நாசா செல்லவிருக்கிறார் ஜெயலக்ஷ்மி!

தகவல் முத்து:

கண் தானம்:

தானமாகப்பெறக்கூடிய கண்களிலிருந்து கருவிழியை மட்டும் முறையாக அகற்றி, கருவிழி நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்தவரின் கருவிழியை மாற்றி அறுவை சிகிச்சை செய்வதே கண் தானத்தின் மூலம் நடைபெறுகிறது. கருவிழி நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்தவர்களுக்கு மட்டுமே கண் தானத்தின் மூலம் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து பார்வை வழங்க முடியும். மற்ற பார்வையிழப்புகளுக்கு கண் தானம் மூலம் பெறக்கூடிய கண்களின் மூலம் தீர்வளிக்க முடியாது. 

ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், இருதய நோயாளிகள், வயோதிகம், பக்கவாதம், நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண் தானம் செய்யலாம். கண் புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண் தானம் செய்யலாம். 

அரவிந்த் கண் வங்கி,மதுரை: 0452-4356100

அரவிந்த் கண் வங்கி,கும்பகோணம்: 98428 20007


Wednesday 25 November 2020

சில பாதிப்புகள், சில நிவாரணங்கள்-2 !!!

 அனுபவ ரீதியாக மிகச் சிறிய கை வைத்தியம் நம்மை அசத்தும் அளவிற்கு நமக்கு பலன் தருவதுண்டு. பல வருடங்களாக நாம் அவதியுற்று துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் சில வியாதிகளை, நோய்க்குறைபாடுகளை நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு சிறிய பொருள் சரியாகுவதுண்டு.  அப்படிப்பட்ட சில நிவாரணங்கள, நான் நேரிடையாக பலனடைந்த சில கை வைத்திய முறைகளை அனைவரும் நலம் பெற வேண்டி இங்கே தெரிவிக்கிறேன். 

ப‌ல் வலிக்கு நார்த்தங்காய் உப்பு ஊறுகாய்


பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது. சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இப்படித்தான் நார்த்தங்காயின் பலன் பற்றி எனக்கு முன்பு தெரியும். 

ஒரு சமயம் ஒரு பழைய புத்தக்த்தொகுப்பை [ 30 வருடங்களுக்கு முன் வெளி வந்தது  ]படித்துக்கொண்டிருந்தபோது, அதில் ஒரு சிறிய செய்தி ஈர்த்தது. பல்வலியால் அவதியுற்ற ஒருவர் அப்போது தான் ஒரு கிராமத்தில் தங்கியிருந்ததாகவும் பக்கத்து வீடில் சொன்ன வைத்தியத்தை தான் கடைபிடித்ததில் அப்போது போன பல்வலி அப்புறம் திரும்ப வரவேயில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். பல்வலி வந்தால் எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தில் ஒரு உப்பு நார்த்தங்காய் துண்டை வைத்து சற்று அழுத்தி மேல் பல்லால் அமிழ்த்தி வாயை மூடிக்கொண்டு ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்தால் பல்வலி அப்ப‌டியே குறைந்து விடும் என்றும் இரவு படுக்கப்போகும்போது இது போல செய்து கொண்டு தான் உறங்கியதாகவும் காலை அதை துப்பி விட்டு வெதுவெதுப்பான நீரில் வாய்கொப்பளித்ததும் வலி சுத்தமாக போய் விட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை நான் அப்போது இந்த வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தேன். ஒரு நாள் என் உறவினர் எனக்கு ஃபோன் செய்தார். திடீரென்று கடுமையான பல்வலி வந்ததாகவும் இந்த வைத்தியத்தை கடைபிடித்ததில் வலி பறந்து போய் விட்டது என்றும் கூறி எனக்கு நன்றி தெரிவித்தார். அப்புறம் என் நெருங்கிய உறவுகள், சினேகிதர்கள் அனைவருமே இந்த வைத்திய முறையை உபயோகிக்கிறார்கள். மருத்துவ ரீதியாக நார்த்தங்காய் ஊறுகாயிலுள்ள கசப்பும் உப்பும் பல் வலியை குணமாக்குகிறது.

முழங்கால் வலிக்கு சியா விதைகள்



சினேகிதி சொன்னாரென்று சியா விதைகள் சாப்பிட ஆரம்பித்தேன் சென்ற வருடம். பொதுவாய் சியா விதைகள் பாஸ்பரஸ், கால்ஷியம் போன்ற பல வகை சத்துக்கள் உடையது என்றும் ‌இரத்த அழுத்தத்திற்கு, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு மற்றும் பல நோய்களுக்கு மிக நல்ல பலன் தருமென்றும்  தெரிய வந்ததால் தினமும் அரை ஸ்பூன் எடுத்து கால் கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின் காய்ச்சிய பாலில் ஊற்றி மறுபடியும் கொதிக்க வைத்து குடிக்க ஆரம்பித்தேன். ஒரு மாதங்கழித்து திடீரென்று முழங்காலில் வலி குறைய ஆரம்பித்தது. கால் குடைச்சல், நரம்பு இழுத்தல் போன்ற கால் பிரச்சினைகள் எல்லாமே சரியாகி, 15 வருடங்களாக இரவில் அடிக்கடி ஏற்படும் நரம்பு சுருட்டலும் நின்று போய் விட்டது.எந்த பிரச்சினைகளுமில்லாமல் நடக்க முடிவது மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அப்புறம் முழங்கால் வலி இருப்பவர்களுக்கு இந்த வைத்தியத்தை சொல்ல ஆரம்பித்தேன். எங்கள் வீட்டைக் கட்டிய என்ஜினீயருக்கு சொல்லி அவரின் கால் வலி மிக மிகக் குறைந்து விட்டது என்று அவர் நன்றி சொன்னதும் மகிழ்வாக இருந்தது.

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் இதை எடுக்கக்கூடாது. மிகத்தரமான புரதம் இதில் இருப்பதால் அவை சிறுநீரகத்திற்கு பாதிப்பு உண்டாக்கலாம்.

வயிற்றுப்போக்கிற்கு:



வயிற்றுப்போக்கு அதிகமாகும்போது, ஒரு ஸ்பூன் சீனி, ஒரு ஸ்பூன் உப்பு இரண்டையும் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு மெதுவாக நிற்க ஆரம்பிக்கும். சிறு குழந்தைகளுக்கு இரண்டையும் சிட்டிகை அளவில்  போட்டுத்தர வேண்டும்.

ஏலக்காய் வைத்தியம்:


எப்படி நெஞ்சு வலிக்கு நெஞ்சின் நடுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு அமுக்குவது போன்ற உணர்வு, நெஞ்செரிச்சல், தொண்டையை இறுக்குதல், அடி நெஞ்சில் வலிப்பது போன்ற உணர்வு என்றெல்லாம் ஏற்படுகிறதோ, அதே பிரச்சினைகள் அஜீரணம், வாயுக்கோளாறு, இவற்றிற்கும் ஏற்படும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலிக்கும்.  என் மகனுக்கு திருமணம் ஆன சமயம். நள்ளிரவில் என் மகன் எங்கள் அறைக்கதவைத்தட்டி மருமகள் நெஞ்சு வலியால் துடிப்பதாயும் உடனேயே மருத்துவமனைக்கு கிளம்புமாறும் மிகுந்த பதற்றத்துடன் சொன்னார். நான் மருமகளுக்கு தைரியம் சொல்லி விட்டு, 3 ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று அதன் சாற்றை விழுங்கிக்கொண்டே தயாராகும்படியும் நாங்களும் உடனேயே கிளம்புகிறோம் என்று சொல்லி உடை மாற்றிக்கொண்டு கிளம்பும்போதே என் மருமகளுக்கு நெஞ்சு வலி சட்டென்று நின்றது. நெஞ்செரிச்சல், திணறல் எல்லாமே சரியாகி விட்டது. ஆரோக்கியமான, இளம் பெண்ணுக்கு இதய பிரச்சினை இப்படி திடீரென்று வர வாய்ப்பில்லை என்று நினைத்தது சரியாகி விட்டது. இப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும் என் மருமகள் சென்ற வாரம் கூட இதை நினைவு கூர்ந்து பேசினார்.  இந்த வைத்தியத்தை சொல்லி பலனடைந்தவர்கள் ஏராள்ம். அப்போது கிடைக்கும் மன திருப்திக்கு நிகராக எதுவுமேயில்லை என்று கூட சொல்லலாம். இப்போதும்கூட, வயிறு ஒரு மாதிரியாக சங்கடம் பண்ணினால் 3 ஏலக்காய்களை எடுத்துப்போட்டுக்கொள்வேன். அந்த மாதிரியான அருமையான மருந்து இந்த ஏலக்காய். 


Wednesday 4 November 2020

சில பாதிப்புகள், சில நிவாரணங்கள்!!

 மூட்டு வலிக்கு முடவாட்டுக்கால் சூப்

ஊரில் இருந்தபோது நான் நாட்டு மருந்து கடைக்குச் சென்ற போது தற்செயலாக நான் இந்த மூலிகைக்கிழங்கை பார்த்தேன். சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, விற்பனையாளர் ஒரு கப் சூப் கொடுத்து குடிக்கச் சொன்னார். சுவை அருமையாக இருந்தது. இதையே வீட்டில் நாம் தாராளமாக சாமான்கள் சேர்த்துப் போடும்போது இன்னும் அருமையாக இருக்குமென்று நினைத்துக்கொண்டேன். விசாரித்த போது,  அது ‘ முடவாட்டுக்கால் கிழங்கு சூப்’ என்றும் மூட்டு வலிகள் அனைத்தையும் போக்க வல்லது என்றும் சொன்னார்கள். கிழங்கையும் கையில் எடுத்துப்பார்த்து விட்டு சூப் தயாரிக்கும் முறையையும் கேட்டறிந்து கொண்டேன். இந்தக் கிழங்கை கொல்லிமலையிலிருந்து தருவித்திருக்கிறார்கள்.



இம்மூலிகை கிழங்கு மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. இது கொல்லிமலை, ஏற்காடு, , கஞ்ச மலையிலும் மற்றும் சதுரகிரி மலையில் கிடைக்கின்றது.

இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.

முடவாட்டுக்கால் என்பதன் விளக்கம் :



முடவன் - ஆட்டும் - கால் என்பதாகும்.அதாவது மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி,முடக்கு வாதம்  [ Arthritis ] நீங்கி குணமடைவார்கள். 

முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :

முடவாட்டுக்கால் கிழங்கு     - 50 - கிராம் 

மிளகு                                    - 20 - No

சீரகம்                                    - 1/4- டீஸ்பூன் 

பூண்டு                                   - 3  பல் 

தக்காளி                                 - 1

அனைத்தையும் ஒன்றிரண்டாய் நசுக்கி அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும்.சுவையாக இருக்கும். 

இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும். ஒரு வீடியோவில் பார்த்தபோது, இரவில் இந்தக் கஷாயம் வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்று சொன்னார்கள். இதோடு சில புதினா இலைகளோ, கறிவேப்பிலைகளோ சேர்க்கலாம் என்றும் அதிக வலியால் கஷ்டப்படுபவர்கள் ஒரு மண்டலம் [ 48 நாட்கள் ] சாப்பிட்டு வர வேண்டுமென்றும் சொன்னார்கள்.

2006 ம் வருடத்தில் தோன்றிய சிக்குன் குனியா என்னும் மூட்டுவாத காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர்  முடவாட்டுக்கால் [சூப்] கசாயத்தினால் எளிதில் குணமடைந்தார்களாம். .

கைகளில் ஆணி:

பொதுவாய் நான் கால்களில் தான் ஆணி வந்து பார்த்திருக்கிறேன். வெறும் கால்களில் நடக்கும்போது, ஏதாவது குத்தி காயம் ஆழமாகப்போய் அதற்கு மருத்துவம் செய்து கொண்டாலும் அந்த இடத்தில் ஆணி வளர்வதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என் உறவினருக்கு கைகளில், கை விரல்களில் ஆணிகள் வளர்ந்தன. வலியினால் மிகவும் துடித்துக்கொண்டிருப்பார். இதைப்பற்றி இன்னொரு சினேகிதியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மல்லிகை இலைகளை நசுக்கி சாறெடுத்து தடவி வரச்சொன்னார். இதை என் உறவினரிடம் நான் சொல்லி, அது போலவே தடவிய ஓரிரு நாட்களிலேயே அத்தனை ஆணிகளும் மறைந்து விட்டதாகவும் ஆணிகள் இருந்த சுவடே தெரியவில்லை என்றும் என் உறவினர் மிகுந்த மகிழ்ச்சியோடு சொன்னார். வலி நீங்கிய அவரது குரலின் மகிழ்ச்சி என்னை நெகிழ வைத்தது.



சமீபத்தில் RELISPRAY என்னும் மருந்து கால் ஆணிகளுக்கு நல்ல பலன் தருவதாகப்படித்தேன். இது பொதுவாய் மூட்டு வலி, முதுகு வலி போன்ற எந்த வலிக்கும் உடனடி நிவாரணம் தருமாம். 

நீர்க்கடுப்பு:

வெய்யில் காலங்களில் வியர்வை அதிகமாக கொட்டித்தீர்க்குமளவு நாம் வெளியில் அலைய நேரிடும்போது அதிக வியர்வையினால் உடல் நீர் சுருங்கி சிறுநீர் கழிப்பதில் பெரும் வலி உண்டாகும். சில சமயங்களில் சொட்டு சொட்டாய்  சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் தீப்பற்றி எரிவது போல இருக்கும். நீர்க்கடுப்பு என்பது சிறுநீரக பாதையில் உண்டாகும் அழற்சி. 



இதற்கு புளி நீரும் கருப்பட்டி அல்லது வெல்லமும் கலந்து குடித்தால் உடனேயே சரியாகும் என்று சொல்வார்கள். கால் விரல்களில் சுண்ணாம்பு வைத்தால் நீர்க்கடுப்பு சரியாகுமென்பார்கள். வெந்தய நீர், பார்லி வேக வைத்த நீர் நல்லதென்பார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக நல்லதான ஒரு வைத்தியம் இருக்கிறது. கறுப்பு உளுந்து ஒரு கைப்பிடி எடுத்து நன்கு கழுவி ஒரு சொம்பு நீரில் ஊற வைத்து குடித்து வர வேண்டும். ஒரு அரை மணி நேரம் ஊற வைத்த நீர் கூட உடனடியாக பலனளிக்கும். அதைக்குடித்த பிறகு சிறுநீர் பிரியும்போது வலி வெகுவாக குறைந்திருக்கும். குடிக்கக் குடிக்க சுத்தமாக வலியென்பதே இருக்காது. இதை பல வருடங்களாக நாங்கள் கடைப்பிடிக்கிறோம். நாடு விட்டு நாடு மாறும்போது எங்களுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படுவது இந்தப்பிரச்சினையால் தான். என் சினேகிதிகள், உறவுகள் அனைவருக்குமே இந்த வைத்தியம் தெரியும்.  கறுப்பு உளுந்து இல்லாவிட்டால் வெள்ளை உளுந்து கூட உபயோகிக்கலாம்.  காலை ஊறவைத்த நீர் குடிக்ககுடிக்க மீண்டும் அதை நிரப்பிக்கொள்ளலாம். இரவில் சற்று வாடை அதிகமாயிருந்தால் மீண்டும் அதையே கழுவி உபயோகிக்கலாம். அல்லது மீண்டும் ஒரு கைப்பிடி உளுந்தை ஊற வைக்கலாம். ஒரு நாள் முழுவதும் அவ்வப்போது குடித்து வந்தால் பல நாட்களுக்கு பாதிப்பு மீண்டும் வராது.

தொடரும்....



Thursday 22 October 2020

முகங்கள்-3!!!!

 

என் கணவரின் நண்பர் அவர். கல்லூரி நண்பர். கல்லூரிக்காலங்களில் சீரான சிந்தனைகள் கொண்டிருந்தார்.  வெடிச்சிரிப்பும் கிண்டல் பேச்சுகளும் சுறுசுறுப்பும் அவரின் கூடப்பிறந்தவை. வங்கி அதிகாரியாக அவருக்கு வேலை கிடைத்தது.. அவரவர் திருமணங்களுக்குப்பிறகு சந்திப்புகள் குறைந்து விட்டன.  அதுவும் வெளிநாட்டில் வாழ்வதால் குறைந்து போன உறவுகளில் அவரின் நட்பும் ஒன்று.

ரொம்ப காலத்துக்குப்பிறகு, சமீபத்தில் என் கணவர் தன் கல்லூரி நண்பர்களையெல்லாம் தேடிப்பிடித்து சந்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர் இருக்குமிடத்தையும் கண்டுபிடித்து அவரின் வீட்டுக்குச் செல்ல முடிவு பண்ணினோம்.

ஒரு வழியாய் தஞ்சைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றபோது கோலூன்றி எங்களை வரவேற்ற அவரைப்பார்த்ததும் ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது. தவறி விழுந்து கால் எலும்பு நொறுங்கி பல முறை அறுவை சிகிச்சைகள் செய்திருந்தார். அவற்றில் தவறுதலான வழிகாட்டுதல்களின் காரணமாக  சில தவறான சிகிச்சைகள் செய்ததால் அவருக்கு பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அவரைப்பார்த்தபோது மனது கனமாகிப்போனது. அவரின் மகன்கள் இருவரும் குடும்பத்துடன் சென்னையில் இருப்பதாயும் தன் மனைவியுடன் தான் தனியாக இருப்பதாயும் சொன்னார்.  எந்த நோய்க்கும் எந்த அறுவை சிகிச்சைக்கும் அவர் இரண்டாவது ஒப்பினியன் எந்த மருத்துவரிடமும் எடுக்கவில்லை என்பது புரிந்தது. அவரை தஞ்சையிலுள்ள எங்கள் உறவினரான அறுவை சிகிச்சை நிபுணரிடம் காட்டி கால்களை பரிசோதிக்க வைத்தோம். என் கணவர் அவருக்கு உடைகள் மாற்றவும் நடக்க வைக்கவும் உதவியபோது கண்கள் கலங்கி விட்டார்.



அப்புறம் தான் எங்களுக்கு ஒரு அத்திர்ச்சியான விஷயம் தெரிந்தது. 20 வருடங்களுக்கு முன் அவர் பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்டு மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டபோது மருத்துவர் அவர் குடும்பத்தினரிடம்
இவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழியிருக்கிறது. ஒரு வீரியம் மிக்க ஊசி போடுவதன் மூலம் இவரின் உயிரைக் காப்பாற்றி விட முடியும். ஆனால் எப்போது வேண்டுமானாலும் இவரின் பார்வை போய் விடும். நீங்கள் சம்மதித்தால் மட்டுமே இந்த ஊசி போட முடியும்.” என்று சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் கூடிப்பேசி, சம்மதித்து அவருக்கு அந்த ஊசி போடப்பட்டு அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.  கடந்த 20 வருடங்களுக்கு அவரின் பார்வை போகவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். கடந்த சில வருடங்களாகத்தான் அவர் பார்வை இலேசாக மங்கத்தொடங்க ஆரம்பித்திருக்கிறது. இதில் அதிர்ச்சியும் ஆச்சரியமுமான விஷயம் ஒன்றே ஒன்று தான். இந்த 20 வருடங்களில் அவரோ அவர் குடும்பத்திலுள்ளவர்களோ இதற்கான எந்த முயற்சியையும் எடுக்க வில்லை! ஒரு கண் மருத்துவரிடம் சென்று இதைப்பற்றி அலசி கண்களைக்காப்பாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என்ற எந்த பிரயத்தனமும் செய்யவில்லை என்பதை நம்பவே முடியவில்லை. இத்தனைக்கும் நன்கு படித்த, அரசியல் செல்வாக்குள்ள குடும்பம்.  இப்போது அவருக்கு இலேசாக பார்வைக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எங்களின் வற்புறுத்தலுக்கு சம்மதித்து என் சகோதரியின் மகளான கண் மருத்துவரிடம் சென்றார். கண் அறுவை சிகிச்சை நிபுணரான அவர் பார்வை குறையத்தொடங்கி விட்டது. இனி பார்வையைத்திரும்பப் பெற முடியாது  என்று ஆழ்ந்த பரிசோதனைக்குப்பின் உறுதியாகச் சொல்லி விட்டார்.  மிகவும் வருத்தமாக இருந்தது எங்களுக்கு.

இப்போது தன் முன்னே அருகில் வந்து நிற்பவர்களை மட்டுமே அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது அவரால்.   எழுபதுகளில் இருக்கும் அவருக்கு சரியாக நடக்க முடியாத நிலையில் இதுவரை இருந்த பார்வையும் முழுமையாக இல்லாது போய் விட்டால், அப்புறம் மீதமிருக்கும் வாழ்க்கையை எப்படி அவரால் மனதளவிலும் உடலளவிலும் சமாளிக்க முடியும் என்பதை நினைக்கையில் மனம் வேதனையில் ஆழ்கிறது.

கண் பார்வை கொஞ்ச நஞ்சம் இருக்கும்போதே எங்கள் இல்லத்துக்கு வர வேண்டுமென்று ஆசைப்பட்டார். நாங்களும் சரியென்றோம். ஆனால் இந்தக் கொரோனாவால் வர இயலாமல் போய் விட்டது. இனி எப்போது பார்க்க நேரிட்டாலும் அப்போது அவரது பார்வை இருக்குமா?

Sunday 4 October 2020

பழைய ஓவியமும் புதிய வாசகமும்!!!

னக்கு ஒரு வாட்ஸ் அப் வந்தது. அறுபதுகளில் வெளி வந்த, கோபுலு, மாயா, ஜெயராஜ் போன்ற‌ பிரபல ஓவியர்கள் வரைந்த அட்டைப்படங்களுக்கு இன்றைய சூழ்நிலையில் அனைவரையும் தாக்கி வரும் கொரோனா வைரஸ் எங்கும் உலவி வரும் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல வாசகங்கள் இணைக்கப்பட்டு வெளி வந்திருக்கும் வாட்ஸ் அப் அது. இங்கே பதிவிடுகிறேன். நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!!


 












Wednesday 23 September 2020

இது ஒரு வித்தியாசமான பிரயாணம் !!!!

 கடந்த 44 வருடங்களாக ஒரு விமானப்பிரயாணம் இத்தனை சிரமமாக இருந்ததில்லை. சென்ற மார்ச்சில் இந்தியாவில் கால் பதித்தபோது அவ்வளவாக கொரோனா எங்கும் பரவாத சமயம். இந்தியாவில் 2,3 பேருக்கு பாதிப்பு இருந்தது. அமெரிக்காவில் இரண்டு பேரும் ஜப்பானில் ஒருத்தரும் சைனாவில் மட்டும் சில மரணங்களும் நிகழ்ந்திருந்தன. ஊருக்கு வந்து சில முக்கிய வேலைகளை கவனித்து விட்டு 40 நாட்களில் திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் தான் ஊருக்கு வந்தோம்.  அதன் பின் தான் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து மின்னல் வேகத்தில் உலக நாடுகளிலும் இந்தியாவிலும் கொரோனா பரவ ஆரம்பித்த பின் கடந்த ஆறு மாதங்களாக தஞ்சை வாசம் தான். எங்கள் விசாக்கள் காலாவதியாகி, என் கணவரின் டிரைவிங் லைசென்ஸும் காலாவதியானது. துபாயிலுள்ள எங்கள் உணவகம் என் கணவர் இல்லாமல் எங்கள் மேலாளர் மூலமே இயங்கி வந்தது. ஆறு மாதங்களாக உணவகத்தின் நிர்வாகம் அலைபேசி வழியான ஆலோசனைகள் மூலமே நடந்து வந்தது.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஒரு வழியாக துபாய்க்குத் திரும்பி வரும் எங்கள் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். இந்திய அரசாங்கமும் ஐக்கிய அரபுக்குடியரசும் இணைந்து vandhe Bharath scheme என்ற திட்டத்தின் கீழ் வேலைகளை இழந்து தவித்து நிற்கும் /சொந்த ஊருக்கு இந்த சமயத்தில் வரத்துடிக்கும்  மனிதர்களை அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற நகரங்களிலிருந்து இந்தியாவிற்கும் அதே போல ஐக்கிய அரபுக்குடியரசில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், கணவனைப்பிரிந்து இந்தியா வந்தவர்கள் திரும்பவும் துபாய்க்கு திரும்பவும் தினமும் இந்தியாவின் பல நகரங்களுக்கு விமான சேவையை ஏற்படுத்தி வைத்தன.  அதில் துபாய்க்கு வருபவர்களுக்கு ICA APPROVAL தேவையென்றும் ஷார்ஜா, அபுதாபி முதலிய அமீரகங்களுக்கு அது தேவையில்லையென்றும் முன்னரேயே அறிவிப்பு வந்திருந்தது. நாங்கள் அப்ரூவல் வாங்கிருந்தாலும் ஷார்ஜாவுக்கு பகலிலேயே வசதியான நேரத்தில், அதுவும் திருச்சியிலிருந்தே கிளம்பியதால் ஷார்ஜாவுக்கே டிக்கட் வாங்கப்பட்டது. என் மகனுக்கு துபாயில் சுற்றுலா அலுவலகம் இருப்பதால் அதன் மூலம் தஞ்சையில் உள்ள ஒரு சுற்றுலா அலுவலகத்தில் செப்டம்பர் 10ந்தேதிக்கு எங்களுக்கு டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன. அதற்கு முன்னர் நாங்கள் துபாய்க்கு  வரத்தகுதியானவர்களா என்பதை ICA மூலம் துபாயில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதை உறுதிப்படுத்திய பின் அந்த அலுவலகம் எங்களுக்கு டிக்கட் வழங்கியது. 

டிக்கெட் வழங்கும்போதே பிரயாணத்தேதியிலிருந்து 96 மணி நேரங்களுக்குள் PCR test எனப்படும் கரோனா வைரஸ் உடலிலுள்ளதா என்ற டெஸ்ட்  செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தியது. அதன் படி 7ந்தேதியே திருச்சி சென்று மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் நானும் என் கணவரும் அந்த டெஸ்ட் பண்ணிக்கொண்டோம். அதற்கப்புறம் பிரயாணத்திற்கான வேலைகளில் ஆழ்ந்திருந்தாலும் 9ந்தேதி எங்கள் இருவருக்கும் நெகடிவ் என்று ரிசல்ட் வரும்வரை நிம்மதியில்லை. 

10ந்தேதி திருச்சி ஏர்ப்போர்ட்டில் நுழைந்ததுமே அங்கிருந்த கூட்டத்தைப்பார்த்ததும் அசந்து போனேன். எங்கள் பெட்டிகளை மருந்துகளால் ஸ்ப்ரே செய்தார்கள். வெளி வாயிலில் வழக்கம்போல் டிக்கட், விசா இவற்றை பரிசோதனை செய்யும் அதிகாரிகள் இந்த முறை தடுப்பிற்கு அப்பால் நின்றார்கள். நாம் இங்கிருந்தே பாஸ்போர்ட்டில் விசா உள்ள பக்கத்தை காண்பிக்க வேண்டும்.  அப்புறம் உள்ளே நுழைந்ததும் பெரிய க்யூ. ஐக்கிய அரபுக்குடியரசில் நுழைவதற்கான ஆதாரங்கள், கொரோனா நெகடிவ் என்ற சான்றிதழ் எல்லாவற்றையும் பல இடங்களில் பரிசோதனை செய்தார்கள். விமானத்திற்குள் நுழைவதற்காக காத்திருக்கக்கூட நேரமில்லை. அறிவிப்பு வந்ததும் விமானத்தினுள் நுழைந்தோம். அவரவர் இருக்கையில் ஒரு பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது. ஒரு குட்டி தண்ணீர் பாட்டில், ஒரு துண்டு கேக், ஒரு சிறிய சீஸ் சாண்ட்விச் அதனுள் அடக்கம். எதுவென்றாலும் அழைத்தால் மட்டுமே வந்து என்னவென்று கேட்போம் என்று ஏர்ஹோஸ்டஸ் அறிவித்து உள்ளேமறைந்தார். அதற்கப்புறம் விமானம் தரையிறங்கும்வரை அவர் வெளியே வரவில்லை. முன்புறம் இருக்கும் டாய்லட் உபயோகிக்க அனுமதிக்கப்படவில்லை. வால் பக்கம் இருக்கும் டாய்லட் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றும் அறிவித்து விட்டார்கள். விமான நிலையத்திலும் எங்கும் கடைகள், உணவகங்கள் கிடையாது. பயணிகள் வசதிக்காக ஒரே ஒரு உணவகம் திறந்து வைத்தார்கள். 

மற்றபடி பிரயாணம் சுமுகமாகவே இருந்தது. திருச்சி விமான நிலையத்திலேயே ஒவ்வொரு பயணிக்கும் பிளாஸ்டிக் மாஸ்க்கும் உடல் முழுவதும் மூடும் பிளாஸ்டிக் கவரும் கொடுத்தார்கள். 

ஒரு வழியாக விமானம் ஷார்ஜாவில் தரையிறங்கியது. இறங்கிய எல்லோரையும் ஒரு பெரிய ஹாலில் உட்கார வைத்தார்கள். எங்களுக்கு முன் பாகிஸ்தானிய விமானம் வந்திருந்ததால் அந்த பாகிஸ்தானிய பயணிகள் யாவரையும் டெஸ்ட் செய்து முடித்த பிறகு எங்களை அழைத்து எங்கள் பாஸ்போர்ட், ஐக்கிய அமீரக குடியரசியின் ஐடி கார்ட் இவற்றை வாங்கி பரிசோதித்து விட்டு, கொரோனா டெஸ்ட்டிற்கு அனுப்பினார்கள். அதை முடித்து விட்டு ஒரு வழியாக வெளியே வந்தோம்.

அன்று மாலையே, விமான நிலையத்தில் செய்த கொரோனா வைரஸ் டெஸ்ட் ‘ நெகடிவ் ‘ என்ற தகவலும் மொபைலுக்கு வந்தது.

ஆறு மாதங்களுக்குப்பிறகு என் பேரன், பேத்தி, மகன், மருமகளைப்பார்த்தபோது அத்தனை சிரமங்களும் மறைந்து போனது.


Saturday 29 August 2020

முத்துக்குவியல்-58!!

அதிசய முத்து:
   
அமெரிக்காவின் வடக்கேயுள்ள வடக்கு அலாஸ்காவில் உள்ள பரோ என்னும் நகரம்[ utqiagvik] டிசம்பரில் ஒவ்வொரு வருடமும் இருளில் மூழ்குகிறது. மார்ச் முடிய சூரியனைக்காணாமல் இருளிலேயே மூழ்கியிருக்கும் இந்த நகரம் சுமார் 4000 மக்கள் வாழும் நகரம். நார்மல் வெப்ப நிலை அந்த சமயத்தில் சைபருக்கும் கீழே செல்லுகிறது.  இந்த நகரத்தில் கிடைக்கும் எண்ணெய் வளமும் ஆய்வுகள் ஆராய்ச்சிக்கூடங்களும் மக்களை எப்போதும் வசதியாக வாழ வைக்கிறது. சுமார் 67 நாட்களுக்கு சூரியன் உதிக்காமல் இருக்கும் இந்த நகரம்.


 67 நாட்களுக்குப்பிறகு முதல் சூரிய வெளிச்சம் வரும்போது சூரியனின் ஒரு சிறு பகுதி மட்டும் தான் தெரியுமாம். அது ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த சூரிய வெளிச்சமும் வெப்பமும் 20 நிமிடங்கள் கூடுமாம். இப்படியே அதிகரித்து அடுத்த வாரம் சூரிய வெளிச்சம் 4 மணி நேரம் நீடித்திருக்குமாம். இப்படியாக கூடி, மே மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஆகஸ்ட் வரை இரவு நேரத்திலும் மறையாது சூரியன் இருப்பதால் ‘ நள்ளிரவு சூரிய நகரம்’ என்றும் இந்த நகரம் அழைக்கப்படுகிறது.  ஆகஸ்ட் மாத நடுவில் சிறிது சிறிதாக அஸ்தமனம் ஆரம்பிக்கிறது. முதல் சில நாட்கள் சில மணி நேரங்கள் மட்டுமே இருளில் மூழ்கும் நகரம் படிப்படியாக சூரிய வெளிச்சம் குறைந்து நவம்பர் இறுதியில் இருளில் மூழ்குகிறது.

சிரிப்பு முத்து:




டாம் என்ற பூனையும் ஜெர்ரி என்ற எலிக்குமான சண்டைகள் கார்ட்டூன்களாக எழுபதுகளில் தொலைக்காட்சிகள் அனைத்திலும் வந்து புகழ் பெற்றது. இப்போதும்கூட அதன் வீடியோக்களை மக்கள் அவ்வப்போது பார்த்து ரசிப்பதுண்டு. அந்த அளவிற்கு அவற்றின் தாக்கம் மக்களிடம் இப்போதும்கூட இருக்கிறது. இந்த வீடியோ இந்தியாவிற்கும் சைனாவுக்குமான பிரச்சினைகளை மையமாக வைத்து தயாரித்து சிரிக்க வைத்துள்ளார்கள். நான் மிகவும் ரசித்தேன். நீங்களும் ரசியுங்கள்.

கவிதை முத்து:



இப்படியும் கூட கவிதை எழுதலாம். இந்த காலத்து சிறுவர்களின் கற்பனை திகைக்க வைக்கிறது!வாட்ஸ் அப்பில் வந்தது.

இசை முத்து:

சங்கர் மஹாதேவன் பாடிய ‘ உன்னைக் காணாது நான் “ பாடல் தனை எல்லோரும் கேட்டு ரசித்திருப்பீர்கள். அதில் பல குரல்கள், பல வாத்திய இசைகள் சங்கர் மகாதேவனோடு கூடவே இழைந்து நம்மை மெய்மறக்க வைக்கும். இதன் கீழே ஒருவர் ‘ என்ன அழகு என் தமிழ்! என் தமிழ் நதி போல எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்துக்கொள்ளும்’ என்று குறிப்பிட்டிருப்பார். அது தான் உண்மை! அதோடு ஸ்வரங்களும் இணையும்போது மொழிக்கும் தேசத்துக்கும் அப்பாற்பட்ட இசை இழைந்து நம்மையும் மயக்குகிறது.



Wednesday 19 August 2020

தெரியாத செய்தியும் செய்யக்கூடாதவையும்!!!

வயது ஏறிக்கொண்டே இருந்தாலும் இன்னும் நாம் அறியாத,விஷயங்கள் கடலளவு இருக்கின்றன. சில ஆச்சரியமான நிகழ்வுகள் அவ்வப்போது நம்மை அசத்துகின்றன. சில சமயங்களில் அவற்றின் காரணங்களும் புரிவதில்லை. இங்கே இரண்டு செய்திகள். முதலாவது செய்தி நான் கேட்டறிந்தது. இரண்டாவது செய்தி நான் படித்தறிந்தது.

முதலாவது செய்தி:

இதைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.  மிக இலேசாக அறிந்திருக்கிறேன். சமீபத்தில் என் அக்கா மருமகள் சொன்ன விஷயம் இது. அவர்கள் பக்கத்து கவுன்ஸிலர் வீட்டிலிருந்து திருமணப்பத்திரிக்கை கொண்டு வந்து வைத்து அழைத்தார்களாம். யாருக்குத்திருமணம் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் வீட்டில் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்ப மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருமணம். ஒவ்வொரு வருடமும் இது மாதிரி பத்திரிக்கை அடித்து கொண்டாடுகிறார்களாம். இப்படி திருமணம் செய்தால் நல்ல மழை வரும் என்பது ஐதீகமாம்! அரச மரத்தை ஆணாக பாவித்து அதற்கு புது வேட்டி சுற்றி வேப்ப மரத்துக்கு பட்டுப்புடவை சுற்றி அந்த வீட்டில் உரிமையாளரே வேப்ப மரத்துக்கு பொட்டு வைத்து தாலி கட்டினாராம். அனைவருக்கும் சாப்பாடு செய்திருக்கிறார்கள். நம் கல்யாணங்களில் செய்வது போல எல்லோரும் பணம் வைத்துக்கொடுத்திருக்கிறார்கள். கிளம்பும்போது வளயல்களும் பூவும் வைத்துக்கொடுத்தார்களாம்.


கோடி கன்னிகாதானங்கள் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தை ஒரு அரசு-வேம்பு திருமணம் செய்வதால் பெறலாம். அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர். அரசமரம் சிவபெருமான். வேம்பு சக்தி எனப்படும் தேவி. தனக்கு அருகில் வேறெந்த மரத்தையும் வளரவிடாத அரசமரம் வேப்பமரத்தினை மட்டும்  தனக்குள்ளேயே வளர அனுமதிப்பது இந்த விஞ்ஞான உலகிலும் நாம் காணும் இயற்கை அதிசயங்களில் ஒன்று. பொதுவாக, அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டு வைப்பதில்லை. அவை தானாகவே ஒன்றிணைந்து வளருகின்றன என்று கூகிள் சொல்லுகிறது.

இரண்டாவது செய்தி:

சில சமயங்களில் போகிற போக்கில் நாம் பழக்கம் காரணமாக சில காரியங்களை செய்கிறோம். ஆனால் அப்படி செய்கிற காரியங்கள், பழக்கங்கள் சரியானவை தானா என்று நமக்குத் தெரிவிதில்லை. சமீபத்தில் மாத இதழில் படித்த தகவல் ஒன்று செய்யக்கூடாத செயல்கள் என்று சிலவற்றைக் கூறுகிறது. படித்துப்பாருங்கள்.

செய்யக்கூடாதவைகள்:

1. தலைக்கு வைக்கும் தலயணை மீது அமரக்கூடாது.

2. எண்ணெயிலும் நீரிலும் நம் நிழலைப்பார்க்கக்கூடாது. கோலம் போடக்கூடாது.

3. திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற திருத்தலங்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேரடியாக நம் வீட்டுக்குத்தான் வர வேண்டும். இத்தனால் புண்ணியங்கள் சேரும். வேண்டிக்கொண்ட விஷயஙள் நிறைவேறும்.

4. பூஜையறையில் வடக்குப்பார்த்து தெய்வப்படங்களை வைக்கக்கூடாது.

5. எப்போதும் கால், தொடை ஆட்டிக்கொண்டிருக்கக்கூடாது. நம் உடலிலுள்ள சக்தி வீணாகும். நம் மீதான மரியாதையும் மதிப்பும் குறையும்.

6. பாவி பாவி என்றுயாரையும் திட்டக்கூடாது. திட்டப்பட்டவன் பாவம் செய்திருந்தால் திட்டியவன் இன்னும் பாவியாகிறான். திட்டப்பட்டவன் பாவம் செய்யாதவனாக இருந்தால் இரு மடங்கு பாவம் சொன்னவனை சேரும்.

7. உணவைப்பிசைவது, உருட்டுவது, வழிப்பது, திட்டிக்கொண்டும் சிந்திக்கொண்டும் சாப்பிடுவது கூடாது. அடுத்த பிறவியில் உண்ணும் உணவுக்கு பஞ்சம் ஏற்படும். பிச்சை எடுத்தாலும்கூட உணவு கிடைக்காது.

8. துணியை தலையில் சுற்றிக்கொண்டு சாப்பிடக்கூடாது.

9. தீபத்தின் நிழலிலும் மனிதனின் நிழலிலும் தங்கக்கூடாது.

10. காலை, மாலை சந்தியாகால வேளையில் சாப்பிடுவதும் உறங்குவதும் கூடாது.

11. பந்தியில் உணவு பரிமாறும்போது ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் பரிமாறி  ஓரவஞ்சனை செய்யக்கூடாது. இது பட்டினிக்கு வழி வகுக்கும்.

12. உண்ணும்போது விளக்கு அணைந்தால் உண்ணுவதை நிறுத்தி விட வேண்டும். மறுபடியும் வெளிச்சம் வந்ததும் தட்டில் உள்ளதை மட்டுமே சாப்பிட வேண்டும். மறுபடியும் அதில் உணவை சேர்க்கக்கூடாது.


Saturday 8 August 2020

கோவைக்காய் துவையல்!!!


கோவைக்காயில் பொரியல், கூட்டு, குழம்பு, பச்சடி என்று பல வகை சமையல் இருக்கின்றன. இப்போது வருவது கோவைக்காய் துவையல். குறிப்பை எழுதுவதற்கு முன்னால், கோவைக்காயைப்பற்றி சில வரிகள்.... 



இரும்புச்சத்து அதிகம் உள்ள கோவைக்காயை வாரத்தில் இருமுறை பொரியல், கூட்டு போலச் செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல்  பிரச்சனை தீரும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக  வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்ஒரே ஒரு கொவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும்   மேலும், சிறுநீரகத்தில் கல் இருந்தால்,  கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கல் முழுமையாக நீங்கி விடும்.  

இப்போது குறிப்புக்குப்போகலாம்:


கோவைக்காய் துவையல்.

தேவையானவை:

கோவைக்காய்-10
சின்ன வெங்காயம்- ஒரு கைப்பிடி
தக்காளி-2
வற்றல் மிளகாய்-4
புளி சிறு நெல்லியளவு
கறிவேப்பிலை இலைகள்-10
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 1  மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
காயம் சிறு துண்டு
நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது 

செய்முறை:

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
மிக மெல்லியதாக அரிந்த கோவைக்காய்களை அதில் போட்டு நிதானமான தீயில் பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றவும்.
உளுத்தம்பருப்பு, காயம் இவற்றைப்போட்டு பொன்னிறத்துக்கு வறுக்கவும்.
பின் சின்ன வெங்காயங்களைப்போட்டு மிளகாய் வற்றல்களையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளித்துண்டுகளை கறிவேப்பிலை, மல்லியுடன் சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் வெளியே எடுத்து ஆறவைத்து கோவைக்காய், உப்பு, புளியுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
மிகவும் சுவையான துவையலான இது இட்லி, தோசை, தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.

குறிப்பு: கோவைக்காய் பழமாக, சிவப்பாக இல்லாமல் அரியும்போது பச்சையாக இருப்பது அவசியம். கோவைக்காய் மிக இலேசான கசப்பு சுவையில் இருக்கும். ஆனாலும் சமைக்கும்போதோ, சமைத்த பின்னோ அந்த கசப்பு தெரியாது. ஆனால் சில கோவைக்காய்கள் அளவுக்கு மீறி கசக்கும். அதனால் கோவைக்காய்களை மிக மெல்லியதாய் அரியும்போது நாவில் போட்டு சுவைத்து பார்ப்பது நல்லது. அதிக கசப்பு எந்த விதத்திலும் உதவாது.

Sunday 26 July 2020

ஒரு கேள்வியும் ஒரு சாதனையும்!!!!

ஒரு கேள்வி!

சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா?' என்று கேட்டதும் இன்றைக்கு ஆடி அமாவாசை என்பதால் விரதமிருந்து சமைக்கணும்மா. அப்புறம் தான் சாப்பிடனும்.' என்றது. கூடவே ஆண்கள் தான் தர்ப்ப்ணம் பண்ணனும் என்கிறார்கள். பெண்கள் அதைச் செய்ய முடியாது. அதனால் விரதமாவது இருந்து சமைக்கலாம் என்று வருஷா வருஷம் இப்படித்தான் செய்கிறேன்' என்றது. அது சென்றதும் அதைக்கேட்டுக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுப்பெண்,  ' இது தப்பும்மா.கணவர் இருக்கும்போது இறந்து போன பெரியவர்களுக்காக இந்த சுமங்கலிப்பெண் விரதம் இருக்கக்கூடாது' என்று சொன்னது. ' அதற்கு காரணம் என்ன? ' என்று நான் கேட்டதும் ' எனக்கு அதற்கெல்லாம் பதில் தெரியாது' என்றது. அதன் பிறகு என் சினேகிதியை தொலைபேசியில் அழைத்துக்கேட போது அவரும் ' காரணம் தெரியாது' என்றே சொன்னார். காரணம் கீதா சாம்பசிவம் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

இளம் வயதில் என் தந்தை காவல் அதிகாரியாய் பணியாற்றிய சமயங்களில் ஆடிப்பெருக்கு, சரஸ்வதி பூஜைக்குக்கூட பத்தாடைகள் அணிந்து சாமி கும்பிடுவோம். ஆனால் பெரியாரின் அடிபணிந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டபோது பூஜை புனஸ்காரங்கள் நின்று போயின. என் மாமியார் நான் உள்பட தன் ஏழு மருமகள்களுக்கும் எந்த சீரும் கேட்கவில்லை. ஜாதகம் என்ற ஒரு விஷயமே நடந்ததில்லை. திருமணச்செலவும் மணமகன் வீட்டினர் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்களை மனங்குளிர வரவேற்று உணவருந்தித்தான் செல்ல வேண்டும் என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அது போலவே எங்களையும் பழக்கி வைத்திருந்தார்கள். எங்கள் வீட்டில் சின்னக்குழந்தைகள்கூட வந்தவர்களை சாப்பிட்டுப்போகச்சொல்வார்கள். இப்படி எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்கள் இருந்த போதிலும்  மேற்சொன்ன நாளுங்கிழமையுமான பழக்க வழக்கங்கள் என் அம்மா வீட்டோடு நின்று போய் விட்டதென்றே சொல்லலாம். அம்மா வீட்டிலுமே ரொம்பவும்  முறைமைகளைப்பார்க்க மாட்டார்கள்.

சென்ற திங்கட்கிழமை தான் என் நெருங்கிய சினேகிதியும் இறந்த நாள். சென்ற வருடம் இறந்தார்கள். அவர்களின் மகன் தன் 27ம் வயதில் சாலை விபத்தில் இறந்து போனான். 2003ம் வருடம் என்று நினைக்கிறேன். அன்றிலிருந்து அவர்களின் மலர்ந்த முகம் மறைந்து விட்டது. கணவர் நோய்வாய்ப்பட்டு 10 வருடங்கள் கழித்து இறந்து போனார். பெண் வீட்டில் தான் கடைசி வரை இருந்தார்கள். அவர்கள் கணவர் இறந்ததும் கொள்ளி வைப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் சகோதரிகள் வழியில் நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு கொள்ளி போட உரிமையில்லையென்றும் அவர்கள் கணவர் வழி சகோதரர்கள் பிள்ளைகளில் யாராவது தான் கொள்ளி போட வேண்டுமென்று சொல்லவே, என் சினேகிதி தன் மகளையே தன் அப்பாவுக்கு கொள்ளி வைக்கச் சொல்லி விட்டார்கள். இப்போது அம்மாவும் இறந்த போது அதே பெண் தான் அவர்களுக்கும் கொள்ளி வைத்தது. சென்ற திங்கள் அன்று நான் ஒரு வருட பூர்த்தியில் திவசம் எப்படி நடந்தது என்று அந்தப்பெண்ணை விசாரிக்கையில் ‘ நான் தான் செய்தேன் அத்தை. ஐயர் வைத்து நொய்யலாற்றங்கரையில் அம்மாவுக்கு தவசம் செய்தேன்.’ என்றது. காலம் மாற மாற பழக்கங்கள் மாறுகிறதா? அப்படியென்றால் அமாவாசை அன்று அந்தப்பெண் தானே விரதமிருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்?

ஒரு சாதனை

ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையைப்படித்ததனால் வந்த தாக்கம் மிகப்பெரிது என்பதை பிரசாந்த் கேட் உணர்த்தியிருக்கிறார். அந்த செய்தி இது தான்.
ஒவ்வொரு வருஷமும் சுமார் 40000 மக்களுக்கு சாலை விபத்துக்களில் கைகள் இல்லாமல் போகின்றன. சிலர் பிறப்பிலேயே கைகள் இல்லாமல் பிறக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்ததினால் உருவானது தான் " இனாலி கைகள்"!



கைகள் இல்லாதவர்களுக்கு ரோபோட்டிக் முறையில் கைகளை இவர் எந்த செலவுமில்லாமல் தன் அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.
இவரது முயற்சிக்கு வித்திட்டவர் பிரான்ஸ் நாட்டு நிக்கோலச் ஹட்செட். அவர் பயோனிக் முறையில் தனக்குத்தானே கைகளை உண்டாக்கிக்கொண்டவர்.
அவரை முன்னுதாரணமாக மனதில் ஏற்றுக்கொண்டார்.  பிறவியிலேயே கைகளை இழந்த ஒரு சிறுமிக்கு கைகள் வழங்க முயற்சி செய்த போது உலக நாடுகளில் அதற்கான விலையைப்பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சாதாரண, எளிய மக்கள் எப்படி கைகளைப்பெறுவார்கள் என்ற கேள்வியும் மற்றவர்களின் கிண்டலையும் புறக்கணிப்பையும் பொருட்படுத்தாத மன உறுதியும் இவரது இலக்கை, ஒரு உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேற வைத்தன. இடை விடாது நிதி திரட்டி ஆயிரம் கைகளை இவர் முதன் முதலாக தயாரித்தார். இதில் 700 கைகளை இலவசமாகவும் மீதமுள்ள 300 கைகளை விற்று வந்த பணத்தில் மறுபடியும் கைக‌ள் செய்து அவற்றையும் இலவசமாக கொடுத்தார்.

இலவசம் என்றால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதால் இப்போது ஒரு விலையும் இதற்கு மதிப்பிட்டு விற்பனை செய்கிறார்.
எப்படி மூளையின் உத்தரவிற்கு ஏற்ப கைகள் செயல்படுகின்றனவோ, அதேபோல இந்த செயற்கை கைகளும் செயல்படும். இந்த ரோபோட்டிக் கைகள் மூலம் 10 கிலோ எடை வரை தூக்க முடியும்.

தனக்கு முழுமையாக தைரியமும் ஊக்கமும் கொடுத்த தன் மனைவி பெயரான " இனாலி "யையே இந்தக்கைகளுக்கு பெயராக வைத்திருக்கிறார். மற்றவர்களின் நிதி, உதவிகளால் இவரின் இந்த இயக்கம் சிறப்பாக இயங்கி வருகிறது.

https://inalifoundation.com/

Thursday 16 July 2020

முத்துக்குவியல்-57!!!

ரசித்த முத்து:

கவிஞர் கருணானந்தம் அவர்கள் ஒரு பாவலர் ஆவார். இவரின் படைப்புகளை 2007 - 08 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது. கருணானந்தம் அவர்கள் 15.10.1925 இல் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவர். தஞ்சை மாவட்டம் சுங்கம் தவிர்த்த சோழன் திடல் என்னும் ஊரைச் சார்ந்தவர். அஞ்சலகப் பணியாளராகத் தொடங்கிப் பின்னாளில் தமிழக அரசுச் செய்தித் துறையில் துறை இயக்குநராகப் பணியாற்றியவர். மிகச்சிறிய தலைப்புகளை வைத்து கருத்து மிக்க பாடல்கள் இயற்றியவர். ' படி ' என்னும் தலைப்பில் ஒரு பாடல் இங்கே!!!


படி படியென்றே தலையில் அடித்துக்கொண்டார்;
     பள்ளி விட்டுக் கல்லூரிப்படி மிதித்தேன்!
" ஏற்றிவிடும் ஏணிக்குப் படிகள் உண்டா"
     ஏறிய பின் இப்படியும் சில பேர் கேட்பார்!
போற்றியவர் குளறுபடிக்கொள்கையாலே
     புளுகுகின்ற படியாகிப்புழுதி வாரி
தூற்றிடுவார் பெரும்படியாய்! மாடி மீதில்
     தூக்கி விடும் மின் தூக்கி பழுதாய்ப் போனால்
மாற்று வழி சுழற்படி தானன்றோ? என்றும்
    மறவாதபடியிருப்போம் படிக்கட்டைத்தான்!
கரும்படி உன் சொல்லெனக்குக் காரிகையே,
    கண்டபடி உளறாதே! கடைக்கண் வீசித்
திரும்படி என் கன்னத்தில் இதழ் படிந்தே
    தித்திக்கும்படியாக படித்தேன் ஊறி
வரும்படியாய் முத்திரையும் தருவாய் என்றால்
    வளைவாயிற்படி வரைக்கும் வருவாள், செல்வாள்
" துரும்படி என் மாற்றாரின் பகைமையெல்லாம்!
     தூளாகும் படிமுறிப்பேன், பார் பார்" என்பான்!

ஆச்சரிய முத்து:

சமீபத்தில் எங்கள் தண்ணீர் தொட்டியில் அரையடி நீளத்தில் ஒரு பாம்பு நீச்சலடித்துக்கொண்டிருந்தது. தண்ணீரின் அளவைப்பார்க்க தொட்டியின் கதவைத்திறந்த என் கணவர் பாம்பைப்பார்த்ததும் அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக்கொண்டு வாளி, கம்பு, என்று ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பல முயற்சிகள் செய்தும் பாம்பை பிடிக்க முடியவில்லை.



மாடியில் வேலை செய்து கொண்டிருந்த கொத்தனாரை அழைத்ததும் அவர் கையாலேயே அதைப்பிடித்து கொஞ்சம் தூரம் சென்று அதை விட்டு விட்டு வந்தார். அதன் பெயர் செவிட்டு பாம்பாம். மனிதர்கள் காதில் புகுந்து கொண்டு ஒரு வழி பண்ணி விடுமாம். என் கணவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால் இப்படியொரு பாம்பைப்பற்றி கேள்விப்பட்டதில்லை என்றார்கள்! யாராவது இந்தப்பாம்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

அசத்தும் முத்து:






ஆட்டோமியம் என்ற இந்த கட்டிடம் பெல்ஜியத்தின் தலைநகரான Brussels-ல்  அமைந்துள்ளது. 1958ல் அங்கே உலகப்பொருட்காட்சி நடந்த போது அதற்கு சில வருடங்களுக்கு முன் நடந்த உலகப்போரில் அணுகுண்டுகள் ஜப்பானில் வீசப்பட்டதை ஒட்டி ‘ அணுவை’ மூலப்பொருளாக வைத்து இந்த கட்டிடத்தை வடிவமைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.  அதன்படி இதில் ஒன்பது கோளங்கள் சேர்க்கப்பட்டது. இது இரும்புத்தாதில் உள்ள 9 அணுக்களைக்குறிக்கும். ஒவ்வொரு அணுவும் பல கோடி மடங்கு பெரிதாக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 60 அடி விட்டமுள்ளது. குழாய்கள் மூலம் இவற்றை இணைத்தனர்.

அணுகுண்டு ஜப்பானை அழித்ததால் இதைக்கட்டுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதாம். ஆனாலும் அணுவை ஆக்கப்பூர்வமாகக்காட்டவென்றே இதைக்கட்டுவதாக பெல்ஜியம் கூறி இதைக்கட்டியது. இதில் ஒரு கோளத்திலிருந்து இன்னொரு கோளத்திற்கு செல்ல எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோளமும் ஒவ்வொரு உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்டது. உயரத்தில் உள்ல கோளத்தில் அங்கிருந்தே ப்ரஸ்ஸல்ஸ் நகரை முழுவதும் பார்க்கும்படியாக உணவகம் அமைக்கப்பட்டிருக்கிறது.  மக்கள் தங்குவதற்கேற்ற அறைகள் இன்னொரு கோளத்தில் அமைக்கப்பட்டன. 120 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடம் கட்டி முடிக்க 3 வருட்ங்கள் தேவைப்பட்டன். கண் கவரும் ஒளி விளக்குகள் சுற்றுலாப்பயணிகளின் கவர்வதெற்கென்றே நிர்மாணிக்கப்பட்டுடுள்ளன.

இசை முத்து:

ரூபா ரேவதி ஒரு மலையாளி. சிறந்த பாடகி மட்டுமல்ல, அருமையாக வயலின் வாசிப்பவர். சமீபத்தில் வெளி வந்த ' பிகில்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளி வந்த‌ இனிமையான பாட்டான ' உனக்காகவே நான் வாழ்கிறேன் ' என்னும் பாடலை மயங்கும் வித்தத்தில் வாசித்திருக்கிறார். கேட்டு ரசியுங்கள்!


Tuesday 7 July 2020

மறக்க முடியாத ஓவியர்களும் அவர்களின் ஓவியங்களும்!!!

சிறு வயதில் அப்போதெல்லாம் வார இதழ்களான ஆனந்த விகடன், கல்கி,குமுதம், தினமணி கதிர் மற்றும் மாத இதழான கலைமகள் இதழ்களில்  சிறுகதைகளுக்கு பிரபல ஓவியர்கள் படம் வரைவார்கள். சிறுகதைகளின் வீரியம் புரியாத சின்னஞ்சிறு வயது. ஆனால் ஓவியங்களின் அழகின் தாக்கம் பாதித்தது. ஏகலைவனாய் நான் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தது அப்போது தான். எல்லா ஓவியர்களும் மனதை கொள்ளை கொண்டார்கள் என்றாலும் கல்கியின் ஓவியர் வினுவும் ஓவியர் நடராஜனும் என் மானசீக குருவானார்கள்.
அந்த கால ஓவியர்கள் சிலரின் ஓவியங்கள் இங்கே..உங்கள் பார்வைக்கு..

1.இது எனக்கு மிகவும் பிடித்த ஓவியர் நடராஜனின் ஓவியம்! ' கலைமகளிலும்' தீபாவளி மலர்களிலும் வண்ண ஓவியங்கள் நிறைய வரைந்திருக்கிறார். மற்ற வார இதழ்களில் இவரது ஓவியங்களை நான் கண்டதில்லை!
 

2. ஓவியர் வினு வரைந்த ஓவியம் இது!


3. ஓவியர் சிம்ஹாவின் ஓவியம். இவர் அறுபதுகளில் நிறைய விகடனில் வரைந்துள்ளார்.


4. ஓவியர் ராஜம் வழங்கிய ஓவியம் இது. நிறைய கோடுகளும் வித்தியாசமான வண்ணக்கலவைகளும் இவரின் ஓவியங்களில் நிரம்பியிருக்கும்!


5. இவர் ஓவியர் உமாபதி. நகைச்சுவைத்துணுக்குகள் வரைவதில் வல்லவர். இவர் இத்தனை அழகாய் வண்ண ஓவியம் வரைவாரா என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது இந்த ஓவியம்!



6. ஓவியர் ஸுபா வரைந்தது இது!


.  7. ஓவியர் கோபுலுவின் ஓவியம் இது! ஆனந்த விகடனின் மிகச்சிறந்த ஆஸ்தான ஓவியர் இவர். கோட்டு ஓவியங்கள் வரைவதில் வல்லவர். சன் டிவி, குங்குமம் வார இதழ் லோகோ இவர் வரைந்தது தான்!