Friday 14 December 2018

முத்துக்குவியல்-53!!!

அதிசய மருத்துவ முத்து:                                                                                                                                                                  சமீபத்தில் 15 வருடங்களுக்கு முன் வெளி வந்த மங்கையர் மலர் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்த போது, அதில் ஒரு ஆச்சரியமான விஷயத்தை அறிந்து அசந்து போனேன். தீராத, குணப்படுத்த இயலாத வயிற்றுக்கோளாறுகள்,  கர்ப்பப்பை பிரச்சினைகள் இவற்றை ' நாபி நகர்ந்திருக்கிறது என்று சொல்லி அதற்கான மருத்துவம் செய்வார்களாம். இப்படி நாபி நகர்வதுண்டா, அதன் காரணமாக வயிற்றுக்கோளாறுகள் வருமா என்றால் ஆமாம் என்கிறது ' யோக சூடாமணி உபநிஷத் ' என்ற நமது புராண நூல்!  முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு யோகாசன ஆசிரியராக இருந்த தீரேந்திர பிரம்மச்சாரி தனது YOGIC SUKSHMA VYAYAMA என்னும் நூலில் 'நாபி சக்ரா' என்ற ஒரு அத்தியாயமே எழுதி இருக்கிறாராம். அதிகமான எடையை தூக்குவதாலோ  அல்லது மேலிருந்து கீழே விழுவதாலோ இந்தக் கோளாறு ஏற்படுவது உண்டு என்றும் பொதுவாக ஆண்களுக்கு வலது புறமாகவும் பெண்களுக்கு இடது புறமாகவும் நகர வாய்ப்புண்டு என்றும் குறிப்பிடுகிறார்.    இதற்கான சிகிச்சை முறையாய் சில யோகாசனங்களையும் இந்தக் கோளாறுகளைக் கண்டு பிடிக்கும் முறைகளையும் விரிவாக எழுதியுள்ளார். அனுபவப்பூர்வமான ஒரு வைத்திய முறையை இந்த மங்கையர் மலர் தொகுப்பில் ஒரு பெண்மணி குறிப்பிட்டிருக்கிறார். ஒரு அகலமான விளிம்புத்தட்டில் அல்லது பேஸினில் மஞ்சள் சுண்ணாம்பு கரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு எவர்சில்வர் அல்லது பித்தளை தம்ளரில் இலேசாக, அமுக்கி வைக்காமல் கால் தம்ளர் அளவிற்கு பழைய பேப்பர்களை சுக்கல் சுகலாகக் கிழித்துப்போடவும். எந்த இட‌த்தில் வலி அல்லது சுளுக்கு உள்ளதோ, அந்த இட‌த்தில் ஆரத்தி கரைத்த தட்டை சம தளமாக வைக்க வேண்டும். பேப்பர் துண்டுகள் உள்ள தம்ளரில் தீக்குச்சியைக் கிழித்துப்போட்டு, பேப்பர் பற்ற ஆரம்பித்ததும் ஆரத்தி தட்டின் நடுவில் எரியும் தம்ளரைக் கவிழ்த்து வைக்கவும். ஒரே வினாடியில் தட்டில் உள்ள ஆரத்தி முழுவதும் தம்ளரில் உறிஞ்சப்பட்டு விடும்! பிறகு மெதுவாக அந்தத் தட்டை எடுத்து ஓரத்தில் வைத்து விட வேண்டும். மெள்ள மெள்ள ஒரு மணி நேரத்தில் தம்ளரிலுள்ள தண்ணீர் முழுவதும் வெளியே வந்து விடும். வலியால் பாதிக்கப்பட்டவருக்கு பூரண நிவாரணம் கிடைத்து விடும்!!  இதுவும் ஒரு வகையில்  heat therapy போலத்தான்! சில குடும்பங்களில் இன்றளவிலும் இந்த வைத்திய முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாக அந்தப் பெண்மணி எழுதி இருக்கிறார். அவர் குடும்பத்திலேயே ஒருத்தர் தாம்பாளத்தை வைக்க, இன்னொருவர் தம்ளரைக் கவிழ்க்க, வலியால் துடிப்பவர் சீக்கிரமே அந்த வலியிலிருந்து விடுபட்டு விடுவாராம்!                                                                                              
அனுபவ முத்து:                                                                                                                                                                                    அறுபது சொல்வது அனுபவ நிஜம்.
அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்.
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள்.
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம்.
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை.

இசை முத்து:                                                                                                                                                                                            1981ல் வெளி வந்த மனதை மயக்கும் பாட்டு இது! KUDRAT என்னும் படத்தில் கிஷோர் குமார் பைரவி ராகத்தில் கம்பீரமாக உருக வைத்திருப்பார் அனைத்து இதயங்களையும்! நானும் இப்போதும் இந்தப்பாடலின் இனிமைக்கு அடிமை தான்! ஆச்சரியம் என்னவென்றால், இதே பாடலை அதே ராகத்தில் வேறு பாணியில் பர்வீன் சுல்தானா பாடி அற்புதம் நிகழ்த்தியிருப்பார்! எது இனிமை என்பதை பிரித்து சொல்ல இயலாத வண்ணம் இசை மட்டுமே ஜெயித்திருக்கும்! ஆனாலும் ஃபிலிம்ஃபேர் நடத்திய சிறந்த பாடகர்/பாடகி போட்டியில் பர்வீன் சுல்தானா தான் பரிசை வென்றார்! நீங்களும் அந்தப்பாடலை கேட்டுப்பாருங்கள்! பர்வீன் சுதானின் இந்தப்பாடலுக்கு பாடகியாய் முகபாவங்களால் அசத்தியிருப்பார் வட இந்திய ந்டிகை அருணா இரானி!