Tuesday 30 August 2011

EID MUBARAK!







அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்!



Wednesday 24 August 2011

ரசனையில்.....‍ நிஜமும் நிழலும்!!

சமீபத்தில் ரசித்த இரண்டு வெவ்வேறான விஷயங்களை மறுபடியும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ரசித்த முத்து-1

சில மாதங்களுக்கு முன் ஒரு தன்னார்வலத் தொண்டு நிறுவனம் செய்து வரும் வித்தியாசமான சேவையைப் பற்றிப் படித்த போது மனதில் ஆச்சரியம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும் ஏற்பட்ட‌து.

பொருளாதாரம் பின் தங்கிய குடும்பங்களில் பலவற்றில் அதிக குடிப்பழக்கத்தினாலும் பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையாலும் குடும்பத்தின் நிலைமையே சீர் குலைந்து போகிறது. அதில் பாதிக்கப்படுவது அக்குடும்பத்திலுள்ள குழந்தைகள்தான். அதுவும் படிக்கும் குழந்தைகள் என்றால் அவர்களின் படிப்பும் இடை நிறுத்தம் செய்யப்படுகின்றது. கேள்விக்குறியாகி விட்ட அவர்களின் எதிர்காலத்தை ஆச்சரியக்குறியாக மாற்றிக்கொன்டிருக்கிறது இந்த நிறுவனம். புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை அருகே செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த அமைப்பின் பெயர் 'டாக்டர் ரெட்டிஸ் ஃபவுண்டேஷன்'. முற்றிலும் இலவசமாக இந்த சேவையை செய்வதே இந்த நிறுவனத்தின் சிற‌ப்பு அம்சம்.

இந்த மாதிரி குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி, மற்றும் சில பயிற்சிகள் மூன்று மாதங்கள் வரையில் கொடுத்து, தகுந்த நிறுவனக்களில் வேலையும் வாங்கித் தருகிறது இந்த நிறுவனம். உணவுக்கோ, உடைக்கோ பணம் கொடுத்து அந்தந்த நிமிடங்களில் பிரச்சினையாக உள்ள சிலவற்றைத் தீர்ப்பதைக்காட்டிலும் இந்த சேவை மிகவும் உயரியதாகத் தோன்றுகிறது. இதன் மூலம் ஒரு குடும்பமே நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட வழி கிடைக்கிறது. இந்த விபரம் பலருக்குச் சென்றடைவதன் மூலம் இந்த மாதிரி சில குழந்தைகளுக்காவது சிலரின் கருணையான மனதினால் சிறப்பான பொருளாதாரச் சூழ்நிலை ஏற்படுமென்ற நம்பிக்கையும் மனதில் பிறந்திருக்கிறது!

ரசித்த முத்து-2

10 நாட்களுக்கு முன் ஒரு மலையாளப்படம் பார்க்க நேர்ந்தது. பெயர். 'கதை தொடருன்னு..'[கதை தொடர்கிறது].





மனதை அப்படியே ஆக்ரமித்து, நெகிழச்செய்த ஒரு அழகிய காவியம் இது என்று தான் சொல்ல வேன்டும். காலத்தால் அழியாத நடிப்பாலும் கதையாலும் புகழ் பெற்ற பல படங்கள் மலையாளத் திரையுலகில் வருவதுண்டு. அதுவும் முன்னணி கதாநாயகர்களான மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், திலீப் போன்ற அனைவருமே இந்த மாதிரி திரைக்கதைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சில திரைப்படங்கள் மனதை அதிர வைக்கும். சில படங்களோ நம் மனதை நெகிழ்த்தி நெக்குருக வைக்கும். சில படங்களோ முடிவை நம் ஊகத்திற்கே விட்டு ஒரு தொடர்கதை போன்ற வேதனையை சில நிமிடங்களுக்குக் கொடுத்து மறையும். அந்த மாதிரியான திரைப்படமிது.

மருத்துவம் பயிலும் ஒரு இந்து சமூகத்தைச் சார்ந்த மாணவிக்கும் முன்னுக்கு வந்து கொன்டிருக்கும் ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த இள‌ம் இசையமைப்பாளருக்கும் ஏற்படும் காதல் அவர்களின் பெற்றோர் அவர்களைத் தலை முழுகிய நிலையில் நிறைவேறுகிறது. ஐந்து வருடங்கள் போல் ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்வுடன் கழிந்த அவர்கள்  திருமண வாழ்க்கை, திடீரென்று விபத்தொன்றினால் அவனுக்கு மரணம் ஏற்பட முற்றுப்பெறுகிறது.



அந்தப் பெண் குழந்தையை வைத்துக் கொன்டு, அந்தக் குழந்தையின் படிப்பு கெடாதிருக்கவும் பசியாற்றவும் அந்தப் பெண் நடத்தும் போராட்டங்களும் மனப்போராட்டங்களும்தான் அதற்க‌ப்புறம் வரும் தொடர்கதை. அவள் பணம் கொடுக்காமல் ஏமாற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஜெயராம் அவளின் கதை கேட்டு நெகிழ்ந்து போய் அவளைத் தன் காலனிக்கு வந்து குடியேற்றுகிறார். அந்தக் காலனி மக்கள் அனைவருமே பல வேதனைகளில் இருந்தாலும்கூட அவளிடமும் அவள் குழந்தையிடமும் அன்பு காட்டுவதுடன் எல்லோருமே சேர்ந்து அவளின் தடைப்பட்ட சில மாதங்களின் படிப்பையும் முடிக்க வைத்து அவளை மருத்துவராக்கி விடுகிறார்க‌ள்.

அந்த சமயத்தில் அந்தப் பேரக்குழந்தையைப்பார்த்த அவளின் கணவனின் பெற்றோர் அந்தக் குழ‌ந்தை தன் மகனின் வாரிசு என்று உரிமை கோரி நிர்ப்பந்தம் செய்ய‌ஆரம்பிக்கிறார்கள். அந்த சிக்கல்களிலிருந்து அவளை காப்பாற்ற நினைக்கும் அவளின் சினேகிதி தன் கணவர் பணியாற்றும் வெளிநாட்டு மருத்துவ மனையில் அவளுக்கும் வேலை வாங்கி கொடுத்து அவளை அதற்கு ஒத்துக்கொள்ள‌ச் சொல்லி வாதிடுகிறாள். தன் சேவை இந்தக் காலனிக்குத்தான் சொந்தம், தன் நன்றியுணர்வும் இனி அவர்களுக்குத்தான் என்று சொல்லிக் கலங்கும் கதாநாயகியை அந்த காலனிவாசிகள் மாற்றுகிறார்கள். ஜெயராம் மனதிலிருக்கும் மெல்லிய காதல் அப்படியே கதிகலங்கிப்போனாலும், மனதில் மெதுவாக சமாதானமாகி அவ‌ளை அனுப்புவதுடன் கதை முடிகிற‌து. கதாநாயகி மனதிலும் அந்தக் காதல் இருக்கிறதா என்று இயக்குனர் சொல்லாமலேயே கடைசி வரை இருந்து விடுகிறார். ஜெயராம் இதயம் முழுக்க அவளின் நினைவுகளுடன் காத்திருப்பதாய் திரைப்படம் முடிகிறது.

முற்றிலும் யதார்த்தமான‌ காட்சிகளுடன் மென்மையாக பூக்கும் உணர்வுகளுடன் அழகாய் சென்று அற்புதமாய் முடிகிறது இந்தப்படம்.

Monday 15 August 2011

இட்லி மாவில் பாக்டீரியா!!!

சில மாதங்களுக்கு முன் தினசரியிலும் மாத இதழ்களிலும் சில விழிப்புணர்வுச் செய்திகளைப் படிக்க நேர்ந்தது. எல்லாமே அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் தாம். இவை அனைவருக்கும் பயன் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

முதலாவது முத்து:
 
சமீப காலத்தில் ரெடிமேட் தோசை, இட்லி மாவு சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன ஜோராக விற்பனையாகி வருகிறது. அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அவசரத்தேவைக்கு இது வரப்பிரசாதமாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் படித்த ஒரு செய்தி மனதை அப்படியே கலக்கியது. பெண்களுக்கு இந்த அவசர யுகத்தில் பல விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகின்றது. ஆனால் இட்லி மாவு விஷயத்தில்கூட விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதை நம்பவே முடியவில்லை. 

இன்று சில வகை ரெடிமேட் தோசைமாவு உயிருக்கே உலை வைக்கக்கூடிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

சிலர் மாவு தயாரிக்கும்போது ஏரி, குளம் போன்ற பொது இடத்தில் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்களாம். சுத்தமில்லாத அந்த நீரில் விலங்குகளின் கழிவுகள் அதிக அளவில் கலந்திருக்கும். இந்தக் கழிவுகள் ஹைட்ரஜன் சல்பைடு தன்மை உள்ள பாக்டீரியாவை உண்டாக்குகின்றன. இந்த பாக்டீரியாக்க்களால் தீவிர வயிற்று வலி, வாந்தி, குமட்டல், கடும் வயிற்றுப்போக்கு போன்றவை தொடர்கதையாகி, அதோடு வேறு ஏதேனும் நோயும் சேரும்போது உயிரே போகக்கூடிய விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த விபரங்களைக் கூறிய கன்ஸ்யூமர் அமைப்பைச் சேர்ந்த திரு.தேசிகன், சமீபத்தில அவர்கள் சென்னையில் நடத்திய சோதனையில் கடைகளில் விற்கும் 55 சதவிகித இட்லி, தோசைமாவில் இந்த பாக்டீரியாக்கள் கலந்திருப்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்லுகிறார்.

இரண்டாவது முத்து:


குன்னூரில் உள்ல தேயிலை வாரியம் தேயிலையின் தரத்தைப் பெருக்கவும் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றது. இவர்கள் சமீபத்தில் நடத்திய பரிசோதனைகளில் ஆந்திரா, தமிழகத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தேயிலையில் கலப்படம் செய்து விற்று வருவதாக கண்டுபிடித்திருக்கின்றனர். புற்று நோயை உண்டாக்கும் ஜிலேபி பவுடரை அதில் கலக்கி விற்கிறார்கள். ஒரு ஸ்பூன் கலப்பட தேயிலையில் 4 கப் தேனீர் தயாரிக்க முடியுமென்பதால் இந்தக் கலப்பட தேயிலை அமோகமாக விற்பனை ஆகிறது. பல பெரிய நிறுவனங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளன. இந்த வாரியம் சட்ட உதவியுடன் தேயிலை வியாபாரத்தில் இந்த மாதிரி நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியாதபடி செய்து விட்டாலும் அவர்கள் ஹைகோர்ட்டில் தடை வாங்கி தொடர்ந்து இந்த வியாபாரத்தை செய்து வருகின்றார்களாம்.

நல்ல தேயிலையை எப்படி கண்டு பிடிப்பது என்பதையும் அவர்களே சொல்லித் தருகிறார்கள். தேயிலையை சாதாரண நீரில் போட்டால் உடனேயே சிவந்த கலர் வந்தால் அது கலப்பட தேயிலை. நல்ல தேயிலையை சாதாரண நீரில் கலந்தால் கலர் மாறாது. வெந்நீரில் போட்டால் மட்டுமே நல்ல தேயிலை சிவந்த கலருக்கு மாறும்.

மூன்றாவது முத்து:

இதுவும் ஒரு மாத இதழ் செய்தி தான்! சமையல் செய்யும்போது ஸ்டவ் அருகே ஓடிய கரப்பான் பூச்சியைக் கொல்ல ஸ்ப்ரே செய்ததால் உடனேயே காஸ் சிலிண்டர் வெடித்து அந்த வீட்டுப் பெண்மணி பலத்த காயமடந்து உயிருக்குப் போராடி வருவதாக தகவல். இந்தத் தகவலையொட்டி இந்த இதழ் ரிப்போர்ட்டர் தீயணைப்பு அதிகாரியிடம் விபரம் கேட்ட போது ‘கரப்பான் பூச்சிக்கான ஸ்ப்ரே என்றில்லை, செண்ட், பாடி ஸ்ப்ரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருள்களை சமையலறையில் பயன்படுத்தவே கூடாதென்றும், அனைத்து ஸ்ப்ரேக்களுமே 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திலேயே வெடிக்ககூடியவை என்றும் அவர் தெரிவித்தாராம்.

பொதுவாக இந்த மூன்று விஷயங்களிலுமே பெண்கள் கவனமாக இருப்பது மிக நல்லது.







Monday 8 August 2011

பூவையும் பூக்களும்! !!

ரொம்ப நாட்களுக்குப் பின் இந்த ஓவியம் வரைந்து முடித்திருக்கிறேன். போஸ்டர் வண்ண‌க்கலவைகள் தான் உபயோகித்தது. எங்கள் உண‌வகத்திற்காக இதை வரைந்து தருவதாக என் மகனிடம் வாக்குறுதி தந்து விட்டதால் அதிக பொறுமையுடன் வரைந்திருக்கிறேன். எப்போதுமே முகம் அழகாக வந்து விட்டால் மற்ற‌தெல்லாம் அவசர தீற்றல்களாயிருக்கும். மிக வேகமாக முடித்து விடுவேன். இது மட்டும்தான் அதிக நேரம் எடுத்து பொறுமையாக வரைந்தது.