Monday 17 June 2019

வித்தியாசமான புகைப்படங்கள்!!!

கம்போடியா ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த தோட்டத்தில் வைத்திருந்த சிலை இது!
தேங்காயை மட்டையோடு வெட்டி உள்ளேயுள்ளதை நீக்கி அவைகளில் செடிகளை வளர்க்கிறார்கள்!அதை கம்பிகளால் பாக்கு மரத்தோடு இணைத்திருக்கிறார்கள்!
என் கணவர் எடுத்த புகைப்படம்! ஒரு பெண் முகம் ஐந்து உட‌ல்கள்!எத்தனை அரிதான சிற்பத்திறமை!

கம்போடியாவிலுள்ள‌ ஒரு கோவிலின் சிற்பம் இது!
வியட்நாமிலுள்ள‌ ஒரு புகழ் பெற்ற இடத்தின் வெளியே கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசிக்கிறார்கள்! இவர்களில் பலர் பார்வை அல்லது செவிப்புலனை இழந்தவர்களாக இருக்கிறார்கள்! அல்லது அங்கஹீனமானவர்களாக இருக்கிறார்கள்! வியட்நாம் போரில் வெடிகுண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள். சுற்றுலா பயணிகளினால் தான் அவர்களுக்கு வருமானம்!
வியட்நாமீய புதுமணத்தம்பதி!!
வியட்நாமில் உறங்கும் புத்தர்!
வியட்நாமில் உள்ள ஒரு புத்த ஆலயத்தின் மேல் உள்ள சிலை! இதுவும் புத்தர் என்றே சொல்லப்படுகிறது!
என் 2 வயது பேத்தி விஹானா பந்து வீச, மருமகள் அதை அடிக்கத் தயாராகிறார்!

Monday 3 June 2019

வியட்நாம் உணவும் ஒரு எட்டு வயது சிறுமியின் கதையும்!!!

இஸ்லாமிய ச‌கோதர, சகோதரிகட்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!



இங்கு ரம்தான் நோன்பு மிகச் சிறப்பான ஒன்று. நோன்பு ஆரம்பித்த நாளிலிருந்து வெளியே யாரும் பார்க்கும்படி உண்ணுதல் கூடாது என்ற சட்டம் அமுலில் இருக்கிறது. நோன்பு மாலையில் முடிந்து மறுநாள் காலை மீன்டும் தொடங்கும் வரை முப்பது நாட்களும் இரவு கடைத்தெரு முழுக்க ஜே ஜே என்றிருக்கும். நோன்பு முடிந்து ரம்ஜான் அன்று எங்கு பார்த்தாலும் இனிப்புகள், விருந்துகள் என்று அமர்க்களப்படும்.

*********************************************************************************

வியட்நாம் போரில் உடலெங்கும் தீப்புண்களால் பாதிக்கப்பட்ட ஒரு எட்டு வயது சிறுமியின் கதை!

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது  இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் நிர்வாணமாக ஒரு சிறுமி! தெற்கு வியட்நாம் போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான இந்தச் சிறுமி ஓடி வரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது. சுமார் 19 வருடங்களாக நடந்து கொண்டிருந்த வியட்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது.

போரின் உச்சத்தில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும், 11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டுபோயினர்.
போர் உச்சத்தில் இருந்த காலகட்டமான 1972 ஜூன் 9-ம் நாள் தெற்கு வியட்நாம் பெட்ரோலிய ரசாயனம் கொண்ட நாப்பாம் குண்டினை தெற்கு வியட்நாமில் இருக்கும் (அப்போது வடக்கு வியட்நாமின் கட்டுப்பாட்டில் இருந்த) 'தராங்பாங்க்’ என்ற கிராமத்தில் வீசியது. இந்த நிலையில்தான் அந்தக் கிராமத்தில் இருந்த எட்டு வயதான சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள். அப்போது சிறுமி கிம் ஃப்யூக்கின் உடைகள் முழுவதும் எரிந்து உடலிலும் தீக்காயம் பரவிட்ட நிலையில் ''சுடுது சுடுது'' என்று கதறியபடியே ராணுவம் இருந்த பகுதியை நோக்கி ஓடி வருகிறாள்.

அந்த நேரத்தில் புகைப்படம்  எடுத்துக் கொண்டிருந்த அசோசியேட்டட் பிரஸ்சின் புகைப்பட பத்திரிகையாளர் நிக் வுட் (Nick Ut) தனது வியு ஃபைண்டர் ஓரத்தில் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியை பார்த்தார். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, தன் கேமராவை அவளை நோக்கி திருப்பினார். நிர்வாணமாக ஓடிவந்த சிறுமி கிம் ஃப்யூக்கை படம் எடுக்கத் தொடங்கினார்.

அந்தச் சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு நின்றுவிடாமல், அவளுக்கு முதலுதவி செய்து தன் காரிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிர் பிழைக்கவும் வைத்த நிக்குக்கு அப்போது வயது 19 மட்டுமே. பிறகு, தன் அலுவலகத்துக்குச் சென்ற நிக், அந்தப் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ஆசிரியர் குழுவினரிடம் காட்டியபோது, சிறுமி நிர்வாணமாக இருப்பதைக் காரணமாக காட்டி முதலில் அவர்கள் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது.

இதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உலகில் இருந்த அத்தனைப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் போருக்கு எதிரான படமாக அடையாளப்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அமெரிக்க ராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல், வடக்கு வியட்நாமிடம் தெற்கு வியட்நாம் சரணடைந்தது. 1976-ல் ஜூலை 2-ல் 'வியட்நாம் சோசலிசக் குடியரசு’ (The Socialist Republic of Vietnam) உருவானது. இந்தப் படத்துக்காக நிக்குக்கு 1973-ல் நோபல் பரிசுக்கு இணையான பத்திரிகை துறையில் உயரிய விருதான ’புலிட்சர் விருது’ வழங்கப்பட்டது.




அந்த சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவர் 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக (UNESCO Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார். 1997-ல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம் ஃப்யூக். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து 'Kim Phuc Foundation International' என்ற பெயரில் இயங்கி வருகிறது.

Bánh tráng

இது  வியட்நாமிய அரிசி பூரி என்று சொல்லலாம். அரிசிமாவிலும் மரவள்ளிக்கிழங்கு மாவிலும் சில பொருள்கள் சேர்த்து கரைத்து ஆவியில் மாவாக‌ வேக வைத்து செய்கிறார்கள். அந்த மாவை எப்ப‌டி அப்பளம் போல இடுகிறார்கள் எனப‌தை இந்த வீடியோ காண்பிக்கிறது.



இந்த பூரியில் அசைவ மசாலா அல்லது சைவ ம‌சாலா, காய்கறிகள் வைத்து மூடி எண்ணெயில் பொரித்து உண்கிறார்கள்!