Sunday 28 April 2013

ஹரிதாஸ்- ஒரு பார்வை!

இரு மாதங்களுக்கு முன்பே வெளி வந்திருந்தாலும் இப்போது தான் ஹரிதாஸ் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. மனதை அங்கங்கே நெகிழ வைக்கிற, கண்கள் கலங்க வைக்கிற, உடலும் மனமும் செயல்களும் நன்றாக இருக்கிற நமக்கெல்லாம் அப்பால் மனம், உடல், செயல்கள் அனைத்திலும் குறைபாடுகள் உள்ள ஒரு உலகத்தைப்பற்றிப் புரிய வைக்கிற ஒரு அருமையான திரைப்படத்தைப் பார்த்த நிறைவு ஏற்பட்டது.



படத்தைப்பற்றி மேலே சொல்லும் முன்னால் ' ஆட்டிஸம்' எனப்படும், இன்னும் பரவலாக அறியப்படாத, விழிப்புணர்வு தேவைப்படுகின்ற ஒரு நரம்பு சம்பந்தமான நோய் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேன்டும். நோக்கம் எதுவுமற்ற பார்வையுடன் எதிலும் சம்பந்தமில்லா செயல்பாடுகளுடன் தன் உணர்வுகளை வெளியே காட்டத்தெரியாது, அதிகம் பேசக்கூட தெரியாத மனிதர்கள் இவர்கள். யதார்த்ததிலிருந்து விலகி இருக்கும் இவர்களைப்புரிந்து கொள்ளாமல் உலகம் சில சமயங்களில் இவர்களை மன நிலை பிறழ்ந்தவர்களக வர்ணிக்கிறது

மன நிலைக்குறைபாடுள்ளவர்கள் கூட சில விஷயங்களை நன்கு புரிந்து கொள்ளுவார்கள். சிலரால் சுவையை கண்டு பிடித்து நன்றாக ருசித்து உண்ன முடியும். சிலர் தன் அறிவுக்குப்புலப்படாதவற்றைக் கேள்விக்கு மேல் கேள்வி கேட்பார்கள். 37 வயதாகும் என் சகோதரி மகனும் மன நிலை பிறழ்ந்தவர் தான். ஆனால் வீட்டிலுள்ள எல்லோரைக்காட்டிலும் ஞாபக சக்தி அதிகம். சம்பந்தப்பாடாதவர்கள் யார் யாரையோ நினைவு வைத்துக்கொண்டு, திடீரென்று இன்று அவர்களுக்குப் பிறந்த நாள், வாழ்த்து சொல்லவில்லையா என்று கேட்கும் போது ஆச்சரியமாயிருக்கும்.  



ஆட்டிஸம் குறைபாடு உள்ளவர்களுக்கோ தன் உணர்வுகளை வெளிப்படுத்தவே தெரியாது! மற்ற குழந்தைகளிடமிருந்து ஒதுங்கியே இருப்பது, வித்தியாசமானவற்றை ரசிப்பது, தான் சொல்ல நினைப்பதை மற்றவர்கள் கைப்பிடித்து எந்த வகையிலாவது உண‌ர்த்த முயல்வது என்று அவர்கள் தனி உலகமாக வாழ்கிறார்கள். அவர்களை நம் உலகத்திற்குள் இழுக்க மிகுந்த முயற்சியும் பொறுமையும் தேவை. இப்போதெல்லாம் இதற்கான பயிற்சிகளே சிகிச்சைகளாக பல இடங்களில் செய்து தருவது ஆறுதலான விஷயம் என்றாலும், ஒவ்வொரு முயற்சியிலும் பயிற்சியிலும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மட்டுமே முக்கியத் தேவை. இதற்கு வேறு எந்த வித சிகிச்சையோ மருந்து, மருத்துவமோ கிடையாது. தேவைப்படுவதெல்லாம் பெற்றோர்களின் பொறுமை, அன்பு, சகிப்புத்தன்மை மட்டுமே!  பெற்றோர், நண்பர்கள் கொடுத்த பயிற்சி, அன்பு, காண்பித்த அக்கறை இவற்றால் ஆட்டிஸ நிலை மாறி சாதனை செய்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். அந்த‌ மாதிரி ஒரு சாதனையை தன் மகன் செய்ய வேன்டும் என்று ஆசைப்படுகிறவர் தான் இந்தக் கதையின் கதாநாயகன்.

ஒரு வார்த்தைக்கூட பேசத்தெரியாத, எப்போதும் முகத்தை சாய்த்து வைத்துக்கொண்டு, கண்கள் சுழல, எங்கோ மிதக்கும் விழிகளுடன் தன் உலகில் எப்போதுமே மூழ்கியிருக்கும் சிறுவன் ஹரி, மனதில் வலியுடன் தன் மகனின் நிலை மாறாதா என்று தவித்துப்போராடும் அவனின் அப்பா, ஹரியின் பேதமையாலும் அவனின் அப்பாவின் கண்ணியமான நடத்தையாலும் ஈர்க்கப்பட்டு, ஹரிக்கு ஒரு மானசீக தாயாய் கூடவே உதவிகள் செய்யும் டீச்சர் என்று மூன்று கதாபாத்திரங்களிடையே இந்தக் கதை சுழல்கிறது.



என்கெளண்டர் அதிகாரியாக வரும் நடிகர் கிஷோர் தன் மகனை எப்படியாவது குணமாக்க வேண்டுமென்று துடிக்கிறார். அதனால் எல்லோரும் படிக்கும் மாநகராட்சிப்பள்ளியில் அவனை சேர்க்கிறார். இந்த மாதிரி தனித்தன்மையுடைய குழந்தைகளை சமாளிப்பதில் சினேகா வல்லவர் என்பதால் தலைமையாசிரியை ஹரியை சினேகாவின் வகுப்பிற்கே அனுப்புகிறார். டீச்சரான சினேகாவிற்கு அவர்கள் பால் கவனம் சற்று அதிகமாக படிகிறது. கிஷோர் நீண்ட விடுப்பில் இருந்தாலும் அவ்வப்போது வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் ஹரியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவூட்டுவது, விளையாடுவது என்று ஹரியுடனான அன்பு சினேகாவிற்கு கூடுதல் நெருக்கத்தை அளிக்கிறது.. ஒரு முறை ஹரி காணமல் போய் சினேகா கண்ணீரும் புலம்பலுமாய் தவியாய்த்தவித்து அதன் பின் ஹரி திரும்பக் கிடைத்ததும் மனதளவில் ஹரியையும் கிஷோரையும் மிகவும் நெருங்கி விடுகிறார். ஹரிக்கு அம்மாவாக இருக்க விரும்புவதாய் நேர்மையுடன் கிஷோரிடம் சொல்லவும் செய்கிறார். ஆனால் வழக்கமான தமிழ் சினிமாவாக இல்லாமல், கிஷோர் அவரது விருப்பத்தை மறுத்து விடுகிறார் கண்ணியமாக!

ஒரு நாள் மகன் ஒரு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குதிரைகள் ஓடுவதை ரசிப்பதையும் அவற்றின் பின்னாலேயே ஓடுவதும் கண்டு பரவசப்படுகிறார் ஹரியின் தந்தை. அவனை ஒட்டப்பந்தய வீரனாகக்க முடிவு செய்கிறார். இதற்காக ஒரு பயிற்சியாளரிடம் செல்கிறார். அந்த பயிற்சியாளர் ஏளனமாகப் பேசி மறுக்கவே, அந்த அலட்சியமும் ஏளன வார்த்தைகளும் கிஷோருடைய உறுதியை மேலும் பலமாக்குகின்றன. தானே பயிற்சியாளனாகிறார். மகனுக்கு அசுரப்பயிற்சி கொடுக்கிறார்.. மெல்ல அவர் மகன் அந்த நூலைப்பிடித்துக்கொன்டு புரிந்து கொண்டு ஓட முயற்சிக்க அவர் மனதில் மட்டும் பரவசம் வரவில்லை. நம் மனதிலும் அதே பரவசம் எழுகிறது. அசுர வேகமாக அந்த ஓட்டம் மாறுகிற போது அந்த தந்தைக்கு மகிழ்வும் பெருமையும் போட்டி போடுகிறது.  அவனை ஏளனம் செய்த அதே பயிர்சியாளர் அருகே வந்து ' இவன் சாதாரண ஓட்ட பந்தய வீரனில்லை. மராத்தன் ஓட்டம் ஓடக்கூடிய திறமை உடையவன்' என்று சொல்லும்போது நம்மால் கண்கள் கலங்காதிருக்க முடியவில்லை!



அந்த இறுதிக்கட்டம் வரும்போது, அவரின் மகன் அவரின் ஆசைப்படியே சினேகா டீச்சரின் துணையுடன் மைதானம் வந்து மராத்தன் ஓட்டத்தில் கலந்து கொள்கிறான். அதே நேரம் கிஷோர் அவரது எதிரிகளால் கொல்லப்படுகிறார். மைதானத்தில் ஹரியை ஓட வைப்பதும் மனப் பின்னணியில் அவரின் 'ஓடு ஓடு' என்ற குரலே! ஓடி முடித்ததும் மெதுவாக ஹரி முதன் முதலாக ' அப்பா' என்று வாய் திறந்து சொல்கிறான்! அதைக் கேட்டு, அவன் முதல் பரிசு வாங்குவதைப்பார்த்து சினேகா விம்மியழுகிறார்! படம் இப்படியே முடிகிறது..கனத்த மனதோடு தான் எழ முடிகிறது! பின்னாளில் சினேகாவின் வளர்ப்புப் பிள்ளையாக, ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக, முழு மனிதனாக அவன் மாறுகிறான்...அந்த நிலைiயில் தன் தந்தையை நினைத்து, அவர் தன்னை ஒரு முழு மனிதனாக ஆக்க பட்ட பாட்டை சொல்ல ஆரம்பிக்கும்போது கதை தொடங்கி அவன் அவரது இலட்சியத்தைப்பூர்த்தி செய்ததைச் சொல்கையில் கதை முடிகிறது!

இந்தக் கதையைத் தேந்தெடுத்து இத்தனை சிறப்பாக இயக்கியதற்கு முதலில் இயக்குனரைத்தான் பாராட்ட வேண்டும். ஹரியாக நடித்த சிறுவனை ஒரு நடிகனாக பார்க்கவே முடியவில்லை. படம் முழுவதும் அவனை ஆட்டிஸம் பாதித்த ஒரு இளங்குருத்தாகவே பார்க்க முடிகிற அளவிற்கு கதையோடு அவன் ஒன்றிப்போனானா அல்லது அப்படி நடிக்க வைத்தது இயக்குனரின் திறமையா என்று நமக்குள் விவாதம் ஏற்படுகிறது. டீச்சராக நடித்த சினேகாவும் தந்தையாக நடித்த கிஷோரும் அருமையாக செய்திருந்தாலும் ஹரி அவர்களுக்கு மேலே ஒரு படி போய் விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

சின்ன சின்ன குறைகள் படத்தில் இல்லாமலில்லை. நகைச்சுவை என்ற பேரில் சூரி போரடிப்பது, என்கவுண்டர் அதிகாரிகள் தண்ணியடித்து உருண்டு கிடப்பது போன்ற காட்சிகள், குத்துப்பாடு இவை எல்லாம் சில கரும்புள்ளிகள். இயக்குனருக்கு வியாபார நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, ‘ ஆட்டிஸம்’ என்று கொடிய பிரச்சினையை கதைக்களனாக வைத்துக்கொண்டு, இந்தப் பிரச்சினைக்ளுடன் போராடி வரும் பெற்றோருக்கு ‘ உங்கள் குழந்தையும் நிச்சயம் சாதனை படைக்கும்; என்ற உறுதியையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருப்பதற்காகவும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் தவிர்த்து அன்பும் சினேகிதமும் கூட அழகாக மலர முடியும் என்பதை மிக அழகாகக் காட்டியிருப்பதற்காகவும் இயக்குனர் குமாரவேலை மனதாரப் பாராட்டலாம்!!
 

 
 

Sunday 21 April 2013

ஷார்ஜா உணவுத் திருவிழா!!

முன்பெல்லாம் ஷார்ஜாவில் நகரத்திற்குள்ளேயே எக்ஸ்போ என்று பெயரிட்ட  பெரிய வளாகத்திற்குள் நவீனக்கூடாரங்கள் அமைக்கப்பட்டு பல வித கண்காட்சிகளை நடத்தப்பட்டு வந்தன. வருடம் பூராவும் புத்தகக் கண்காட்சி, கைக்கடிகார கண்காட்சி, தொழில் சாதனக்கள் கண்காட்சி, கல்வி சம்பந்தமான கண்காட்சி, ரமதான் கண்காட்சி என்று மிகவும் சுவாரஸ்யமாக கண்காட்சிகள் இருக்கும்.  வருடம் ஒரு முறை உணவுக்காக கண்காட்சி அமைக்கும்போது, அதுவும் நுழைவுக்கட்டணமில்லை என்னும்போது கூட்டம் அலை மோதும்.

இப்போது இந்த எக்ஸ்போ வளாகம் நகர்ப்புற எல்லைக்கு வந்து விட்டது. அதனால் முன்போல அடிக்கடி போகும் வழக்கம் நின்று விட்டது. அதற்குப்பதிலாக அங்கங்கே அமைந்திருக்கும் பல பூங்காக்களில் சில கண்காட்சிகள் குளிர்காலத்திலும் இலேசன வெயில் தொடங்கும் காலத்திலும் நடைபெற்று வருவது தற்போதைய வழக்கமாகி விட்டது. சென்ற வாரம் ஒரு குழந்தைகள் பூங்காவில் உணவு சம்பந்தமான விழா என்று அறிவிப்புகள் அங்கங்கே போட்டிருப்பதைப்பார்த்ததும் இதற்குப்போய் வரலாமென்று புறப்பட்டோம்.



இரு மருங்கிலும் சிறு சிறு உணவகங்கள்.  அதன் வழியே சென்றால் இடையில் ஒரு மேடையில் சமையல் சம்பந்தமான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. லெபனான், செளதி அரேபியா, இராக்-இப்படி அரபு நாடுகளின் உணவு செய்முறை விளக்கமும் போட்டியும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சமையல் போட்டி நடைபெற்றுக்கொன்டிருக்கிறது!
பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து அவற்றின் தலைமை சமையல்காரர்கள் வருகை புரிந்து செய்முறை விளக்கக்கூட்டம் நடத்துகிறார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் இந்திய சமையல்காரர்கள் வருவதாகச் சொன்னார்கள்!

குழந்தைகள் விளையாடும் குட்டிப்பூங்கா! என் பேரன் விளையாட ஆயத்தமாகிறார்!

அருகேயிருக்கும் கால்வாய்!
வானுயர்ந்த கட்டிடங்கள்!!
நாங்கள் மாலையில் முன்னதாகவே சென்று விட்டதால் எங்குமே கூட்டமில்லை. குழந்தைகள் பூங்காவிலுமே கூட்டமில்லை.

மத்திய கிழக்கு அரபு நாடுகளின் பிரபல ஸ்நாக் ஐட்டமான ‘ ஃபலாஃபெல் இங்கே பிரசித்தம். கடந்த 37 வருடங்களாய் இங்கே வசித்து வந்தாலும், பல தடவைகள் பல இடங்களில் இந்த FALAFEL  ருசித்திருந்தாலும் இங்கு சாப்பிட்டது போல ஒரு அதி ருசியான ஃபலாபெல் வேறெங்கும் சாப்பிட்டதேயில்லை!

ஃபலாஃபெல் உருண்டைகள்!
அது வேறொன்றுமில்லை. வெள்ளைக்கொண்டைக்கடலையை ஊறவைத்து நாம் மசாலா வடைக்கு அரைப்பது போல கொரகொரப்பாக அரைத்து, கூடவே FAVA BEANS என்பதையும் சிறிது சேர்த்தரைத்து நறுக்கிய பூண்டு, சிறிது வெங்காயம், மிகக்குறைந்த அளவில் மிளகு, சீரகம், காரம் சேர்த்து சிறு சிறு வடைகளாய் தட்டி பொரித்தெடுப்பது தான் இந்த ஃபலாபெல் சிற்றுண்டி.

பெரிய அளவில் செய்யப்படும் ஃபலாஃபெல்கள்!
 இங்கே பிட்டா ப்ரெட் என்று மெல்லியதாக அரிசி சப்பாத்தி போல மைதாவில் செய்யப்பட்ட ஒன்று எல்லா பேக்கரிகளிலும் கிடைக்கும். அதே போல தஹிணி சாஸ் என்பதும் அரேபியரிடையே பிரசித்தம். வெள்ளை எள்ளுடன் பூண்டு சிறிது, எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து அரைத்துத்  தயாரிக்கப்படுவது அது. இந்த பிட்டா பிரெட்டில் இந்த சாஸை தாராளமாகத் தடவி அதனுள் இந்த Falafel வடைகள் சில வைத்து கூடவே லெட்டியூஸ் இலைகள், வெள்ளரித் துண்டுகள் வைத்து சுருட்டி கொடுத்தால் அது தான் Falafel Sandwich!!

ஃபலாஃபெல் சாண்ட்விச்!
அங்கே விளையாடிக்கொண்டிருந்த பல நாட்டுக் குழந்தைகளை ரசித்து விட்டு, இந்த ஃபலாஃபெல் உருண்டைகளை வாங்கி சாப்பிட்டு விட்டுத் திரும்பினோம், இன்னொரு நாள் சென்று முழுவதுமாய் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே!! 
 

Sunday 14 April 2013

முத்துக்குவிய‌ல்-19!!!

அழகிய முத்து:

மேஜை மலை:



மேடு பள்ளமாக உயர்ந்து நிற்கும் மலைகளிடையே விதிவிலக்காக, வித்தியாசமாக ஏறக்குறைய சமதளமான மேற்பரப்புடன் காட்சியளிக்கிறது இந்த மேஜை மலை. 1087 மீட்டர் நீளத்துடன் இந்த மலை தென் அமெரிக்காவில் தொடங்கி 'கேப் ஆப்ஃ குட் ஹோப்'பில் முடிகிறது. இம்மலையின் பெரும்பகுதி மணற்பாறையால் ஆனது. பனி படர்ந்த இம்மலையின் மேற்பரப்பைப் பார்க்கையில் வெள்ளைத்துணி போர்த்திய பெரிய மேஜை போல இருப்பதால் இந்தப் பெயர் அதற்கு வந்தது. மேலூரிலிருந்து மதுரை செல்லும்போது, மதுரையை நெருங்கும்போது இது போன்ற ஒரு நீளமான மலை வரும். அது தான் ஞாபகத்துக்கு வருகிறது இந்த மேஜை மலையைப் பார்க்கும்போது!!

அசத்திய முத்து:



கிராம்பு:

கிராம்பு மரத்தில் விளையும் ஒரு வகை பூ! ஒரு மரத்தில்ல் 80 வருடங்கள் வரை இது பூக்கிறது! உலகத்தேவையில் 80 சதவிகிதத்திற்கு மேல் ஜான்ஸிபாரிலிருந்து தான் வருகிறது. இந்தியா, இலங்கையிலும் இது விளைவிக்கப்படுகிறது.

இது பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள அசிடைல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினை போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. மூட்டு வலி, பல்வலி, தலைவலி போன்ற‌ பல வகை வலிக்கு கிராம்பு நிவாரணமளிக்கிறது.

அறிவியல் முத்து:



IPHONE SPIDER.!!

இந்த நவீன கைபேசியை கைகளில் அணிந்து கொள்லலாம். கைபேசி உற்பத்திகளில் முன்னணியில் திகழும் ஆப்பிள் நிறுவனம் இலகுவாக பயன்படுத்தக்கூடிய இந்த நவீன கைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பரவலாக வந்து விட்டால் கைபேசியை கைகளில் தூக்கிக் கொண்டு சுமக்க வேண்டியதில்லை!!

ரசித்த முத்து:

சமீபத்தில் இலக்கியத்தின் வகைகளை பழங்களை ஒப்பிட்டு ஒரு மாத இதழில் வெளி வந்த இந்தத் தகவலை மிகவும் ரசித்துப்படித்தேன். அந்த ரசனையான தகவல் இதோ உங்களுக்கு:

இலக்கியங்களின் தரத்தை மூன்று வகைகளாகக் கூறுகிறார்கள். திராட்சா பாகம், கதலி பாகம், நாரிகேள பாகம் ஆகும்.

திராட்சா பாகம்:

திராட்சை பழத்தை சுவைக்க கடுமையான முயற்சி எதுவும் தேவையில்லை. வாயில் எடுத்துப்போட்டவுடனே அதன் சுவை தெரியும்.
உதாரணம்- கவிதை போன்ற இலக்கியங்கள்
அதனை சுவைக்கத் தொடங்கியவுடனேயே அதன் சுவையை நம் அறிவு ருசிக்கத் தொடங்கி விடும். இவ்வகையான இலக்கியங்கள் திராட்சா பாகமாகும்.

கதலி பாகம்:

கதலி பழத்தை உரித்த பின்னர் தான் அதன் சுவையை உணர முடியும். அதைப்போன்ற சிறு முயற்சியை தேட வைக்கும் இலக்கியங்களை கதலி பாகம் என்று கூறுகிறார்கள். பாரதியார், பாரதிதாசன், வள்லலார் பாடல்கள் இந்த வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படுகின்றன.

நாரிகேளா பாகம்:

இவை தேங்காய் போன்று மிகவும் சிரமப்பட்டு பொருள் தேட வேண்டிய இலக்கியங்கள்.

நாரிகேளம் என்பது தேங்காய். தேங்காயை சிரமப்பட்டுத்தான் அதன் மட்டையிலிருந்து பிரிக்க முடியும். இதற்கு சங்ககால இலக்கியங்கள் உதாரணங்கள். அவற்றை நாமாக சுவை உணர முடியாது. அதற்குத்தக்க பேராசிரியர்களைக்கொண்டே அதன் பொருளை உணர முடியும். எனவே தான் இவ்வகை இலக்கியங்கள் நாரிகேள பாகமென்று பிரிக்கப்பட்டுள்ளன.

குழப்ப முத்து!!

சில காலமாய் சில நண்பர்களின் வலைத்தளங்களைப் பார்வையிட முடியவில்லை. எப்போது அவற்றைத் திறந்தாலும் வலைப்பக்கங்கள் குதித்துக்கொண்டே இருக்கின்றன. அதை நிறுத்தி, படித்து ரசித்து பின்னூட்டங்கள் தர முடிவதில்லை. திருமதி.கோமதி அரசு, திரு.ஜனா –இவர்களது பக்கங்களைப்பார்வையிட முடியவில்லை. எல்லோருக்குமே இந்த பிரச்சினை இருக்கிறதா, அல்லது எனக்கு மட்டும் தானா என்றும் புரியவில்லை. சில வாரங்களுக்கு முன் இதற்கு திருமதி.ஹுஸைனம்மா ஏதோ தீர்வு எழுதியிருந்ததாக ஞாபகம்.

அனைத்து அன்பு ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் இனிய‌ த‌மிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!!!

 

Sunday 7 April 2013

அதி ருசியான முத்து!


சமையல் முத்து இன்று இனிப்பைத்தாங்கி வருகிறது!

இது எல்லோருக்குமே மிகவும் பிடித்த ஒரு இனிப்பு!

கிராமப்புறத்து பழமையான இனிப்பு! ரொம்பவும் குறைந்த பொருள்களைக்கொண்டு அதி ருசியைக் கொடுக்கக்கூடிய பால் கொழுக்கட்டையைத்தான் இங்கே குறிப்பிடுகிறேன். வெறும் அரிசிமாவுடன் வெல்லம், தேங்காய், ஏலக்காய் மட்டுமே சேர்த்து செய்து விடலாம் இதை!

என் அம்மா வீட்டில் 40 வருடங்களுக்கு முன்பு இதை அடிக்கடி செய்வது நினைவுக்கு வ‌ருகிறது. நல்ல பச்சரிசியை ஊற‌வைத்து, பின் தண்ணீரை வ‌டித்து நிழலில் உலர வைத்து, உரலில் இடித்து, பதப்ப‌டுத்திய மாவை இரண்டு முறை சலித்து பிற‌கு வெந்நீர் கலந்து பிசைவார்கள். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகள் செய்து மல்லிகை மொக்கு போல சற்று அழுத்தி ஒரு ஈரத்துணியில் போட்டு வைப்பார்கள். கொதிக்கும் நீரில் அவற்றைப்போட்டு ஒரு கொதியில் அவை வெந்து மேலே வந்ததும் தேவையான வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து இற‌க்குவார்கள்.

புகுந்த வீட்டில் என் மாமியார் செய்யும் முறை சற்று வித்தியாசப்படும். சிலர் தேங்காய்த்துருவல் சேர்க்காமல் கடைசியில் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்குவார்கள். இன்னும் சிலர் தண்ணீருக்குப்பதிலாக பாலில் பால் கொழுக்கட்டையை வேக வைப்பார்கள். எப்படிச் செய்தாலும் பால் கொழுக்கட்டையின் சுவையையே தனி தான்! என் கணவருக்கு மிகவும் பிடித்தது இது! பிறந்த நாளுக்கு என்ன செய்து தர என்று கேட்டால், என் கணவரின் பதில் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும், ' பால் கொழுக்கட்டை!' என்று!!



பால் கொழுக்கட்டை:

தேவையானவை:

ப‌ச்சரிசி‍- 1 கப்
பொடி செய்த‌ வெல்ல‌ம்- 2 க‌ப்
ப‌ச்ச‌ரிசி மாவு‍ தேவையான‌து
ஏல‌ப்பொடி-‍ 1 ஸ்பூன்
தேங்காய்த்துருவ‌ல்‍- அரை க‌ப்

செய்முறை:

ப‌ச்ச‌ரிசியை ஊற‌‌ வைத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் போதுமானது சேர்த்து நன்கு மைய‌ அரைக்க‌வும்.

இத்துட‌ன் போதுமான‌ அரிசி மாவு சேர்த்துப்பிசைய‌வும்.

பிசையும் பதம் வழுவழுவென்று முறுக்கு உரலில் போட்டுப் பிழியக்கூடியதாய் இருக்க வேன்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

ஒரு முறுக்கு உரலில் காராசேவு அச்சு போட்டு மாவை உள்ளே வைத்து மூடி கொதிக்கும் தண்ணீருக்கு மேல் உரலைப் பிடித்து தண்ணீரில் விழுமாறு மாவைபிழியவும்.

பால் கொழுக்கட்டை வெந்து மேலே வந்ததும் அடுத்த பாட்ச் பிழியவும்.

இது போல எல்லா மாவையும் பிழிந்து முடிக்கவும்.
எல்லாம் பிழிந்து மேலே வரும்போது பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் தளர இருக்க வேண்டும். அதனால் தண்னீர் பற்றாவிடில் போதுமான வெந்நீர் ஊற்றிக்கொள்ள‌வும்.

பிறகு வெல்லப்பொடி, ஏலம் சேர்க்கவும்.

ள‌ல்லாம் கலந்து குழைந்து வ‌ரும்போது தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.

5 நிமிடங்கள் மெதுவான தீயில் வைத்திருந்து விட்டு பாத்திரத்தை இற‌க்கவும்.

சுவையான பால் கொழுக்கட்டை தயார்!!