Tuesday 30 May 2017

ஆலமரம்!!!

மனிதர்கள் எல்லோரும் மகான்களாவதில்லை. உயர்ந்த சிந்தனைகளாலும் செயல்களாலும்தான் அவர்கள் மகான்களாகிறார்கள். அதற்கு எல்லையற்ற நேசமும் கருணையும் வேண்டும்.

' மனிதனாய்ப்பிறந்தால் அவன் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேன்டும் ' என்று எல்லோரும் பல தருணங்களில் நினைப்பது தான்! ஆனால் அந்த அர்த்தம் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும், அன்பையும் கருணையையும் மட்டுமே அந்த உயர்ந்த வாழ்க்கைக்கு மூலாதாரமாக இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டு அதன்படியே வாழ்ந்து கொன்டிருக்கும் ஒருவரைப்பற்றி ஒரு மாத இதழில் படிக்க நேர்ந்தது. படித்து முடித்த பிறகு அந்த பாதிப்பிலிருந்து என்னால் நெடுநேரம் விடுபட முடியவில்லை! இது ஒரு தவ வாழ்க்கையல்லவா, இப்படி யாரால் வாழ முடியும் என்று மனம் பிரமித்துப்போனது. அவரைப்பற்றி இதோ... எழுத ஆரம்பிக்கிறேன்.

நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களின் அருகில்கூட நெருங்க முடியாத அளவுக்கு துர்நாற்றமும் புண்களில் சீழ் பிடித்து சில சமயங்களில் புழுக்களும் வைத்து, உறவினர்களால் வெளியேற்றப்பட்டு, ஆதரவின்றி தெருக்களில் அலையும் தொழுநோயாளிகளைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து, குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிவித்து கருணை மழை பொழிந்து கொண்டிருக்கிறார் சமூக சேவகர் மணிமாறன்.



திருவண்ணாமலை அருகேயுள்ள தலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் சிறு வயதில் படிப்பில் நாட்டமின்றி, தந்தையின் ஆதரவுடன் தன்னுடைய பதினேழு வயதில் அன்னை தெரசாவின் ஆசிரமம் தேடி பயணமானார். பணம், முகவரி அடையாளம், உடைகள் பறி போய், பிச்சையெடுக்கும் கும்பலில் சிக்கி அடிபட்டு, தமிழ் பேசிய ஒரு ஆட்டோ டிரைவர் மூலம் அன்னை தெரசாவின் ஆசிரமத்தை அடைந்திருக்கிறார் இவர். பெண்கள் மட்டுமே தங்க முடியும் அங்கு என்பதால் இவரை வெளியில் தங்க வைத்து அந்த ஆசிரமத்தில் பணி செய்ய அவர்கள் அனுமதித்தனர். நான்கு மாதங்கள் தங்கி சேவை புரிந்து, சேவை பற்றி நன்கு உணர்ந்து தெரிந்து கொண்டு, 'பிறருக்கு உதவுவதற்காகவே இந்த உடலையும் உயிரையும் ஆண்டவன் படைத்திருக்கிறான்' என்ற உணர்வுடன் இவர் ஊருக்குத்திரும்பினார்.



திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப்பார்க்கத்தொடங்கினார் இவர். கிடைத்த 1100 சம்பளத்தில் தன் தந்தையிடம் 500 ரூபாய் கொடுத்து விட்டு, மீதமுள்ள பணம் முழுவதையும் சாலையோரம் வசிக்கும் எழைகளுக்கு உணவாகவே வழங்கி வந்தார். இதைப்பார்த்து விட்டு இவர் கம்பெனியின் நிறுவனர் பனியன் நிறுவனத்தில் மிஞ்சும் ஆடைகள், பிஸ்கட்டுகள் இவற்றை தானும் வழங்க, இவரின் சமூக சேவை வளரத்தொடங்கியது. வீதியில் அலையும் தொழுநோயாளிகளுக்கு எப்படி உதவலாம் என்ற யோசனையில் இருந்தவருக்கு தமிழக தொழுநோய் பிரிவு டைரக்டராக இருந்த திரு.ராமலிங்கம் உதவி செய்தார். பல விழிப்புணர்வு முகாம்களுக்கு இவரை அனுப்பி வைத்ததுடன் தொழுநோயாளிகளின் புண்களுக்கு எப்படி மருந்தளிக்க வேண்டும், நாம் எப்படி அந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளையும் வழங்கினார். அதன் பின் மணிமாறன் தனது பைக்கில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அத்தனை மருந்துகளையும் வைத்துக்கொண்டு, எங்கு தொழுநோயாளிகள் தென்பட்டாலும் அவர்களிடம் கனிவுடன் பேசி, ஆறுதலளித்து, சிகிச்சை அளித்து மருத்துவ மனைகளிலும் சேவை நிலையங்களிலும் சேர்ந்து அதன்பிறகும் அவர்களை தொடர்ந்து கவனிக்கவும் செய்கிறார் இவர்.



2008ல் மறைந்த திரு அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனைப்படி ' உலக மக்கள் சேவை மையம்' என்ற மையத்தைத்தொடங்கி, ' முகம் சுளிக்காது சேவை செய்யும் மனம் இருப்பவர்கள் என் மையத்திற்கு வாருங்கள் ' என்று அழைப்பு விடுத்தார். இன்றைக்கு இவரின் மைஉயத்தில் 450 உறுப்பினர்கள் சேவை புரிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமன்றி 17 மாநிலங்களிலும் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் இவருடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதுவரை இவர் 40000 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இவர் உதவிகள் செய்திருக்கிறார். இதில் பதினைந்தாயிரம் பேர் தொழுநோயாளிகள். நோயிலிருந்து விடுபட்டவர்கள் சுய தொழில் தொடங்கவும் வழி செய்துள்ளார் இவர். நோய்த்தாக்குதலினால் இறந்து போனால் அவர்களின் இறுதிக் காரியாங்களையும் இவரே செய்கிறார். ஆதரவற்றோர், தொழுநோயாளிகள் என 275 பேருக்கு இவர் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.



விபத்து பற்றிய தகவல்கள் இவருக்கு வந்தால் அங்கு சென்று முதலுதவிகள் செய்து வருகிறார். தவிர்க்க முடியாமல் இறந்து போனவர்களின் குடும்பத்தினரிடம் பேசி இதுவரை 22 ஜோடிக் கண்களை தானமாகப்பெற்று வழங்கியிருக்கிறார்.

இன்னும் அசத்தலான விஷயம், நேரம் கிடைக்கும்போது ஏதேனும் ஒரு ஊரின் தலைமை மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள பகுதிகளை சுத்தம் செய்கிறார். இது வரைக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சுத்தம் செய்து அங்கு குப்பைத்தொட்டிகளை அமைத்திருக்கிறார். இவர் செய்வதைப்பார்த்து அங்குள்ள மருத்துவர்களும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து மருத்துவமனைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வது தான் தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமென்று சொல்கிறார்.

இன்றைய தேதியில் கூட்டுக்குடும்பங்களின் அழிவை நினைத்து வருத்தப்படும் இவர், அப்படி உறவே இல்லாதவர்களுக்கு தான் உறவாக இருக்க வேண்டும், அவர்களுக்காக ஒரு ஆசிரமத்தை உருவாக்க வேண்டுமென்பதே தனது அடுத்த பயணத்தின் இலக்கு என்கிறார் இவர்.

தானும் இரத்த தானம் அளிப்பதுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் வழங்க தூண்டுகோலாகவும் இருந்து வருகிறார்.



அமெரிக்க பயாகிராஃபி இன்ஸ்ட்டியூட் தங்கப்பதக்கம், அமெரிக்க தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம், தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது, மத்திய அரசின் சிறந்த சமூக சேவகர் விருது என்ற பல்வேறு விருதுகளைப்பெற்றிருக்கிறார் இவர்.

மிகச் சிறிய விதை மனதில் விழுந்ததை தன் உயர்ந்த மனதினால் பெரிய ஆலமரமாக்கியிருக்கிறார் இவர். அதுவும் எப்படிப்பட்ட ஆலமரம்! தன் விழுதுகள் அனைத்தாலும் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் நிழல் தருவது என்ற உயர்ந்த சிந்தனை! அவரை மனதால் வணங்குகிறேன்!!!

மேலும் இவரைப்பற்றி முழுமையாக அறிய கீழ்க்கண்ட வலைத்தளத்திற்குச் செல்லலாம்.

http://worldpeopleservicecentre.org/


Thursday 18 May 2017

ஆதங்கம்!

10 நாட்களுக்கு முன் என் நெருங்கிய சினேகிதியின் பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு!

என் சினேகிதி பள்ளிக்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பில் எப்போதும் இருக்கிறார். எப்போதும் நான் துபாயிலிருந்து வரும்போதும் திரும்பவும் அங்கு செல்லும்போதும் தஞ்சை வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து செல்வது எப்போதுமே வழக்கம்! ஆனால் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் தொடங்கி ஜூன் தொடக்க‌ம் வரை எப்போதும் அவரின் இரு பெண்கள், பேரன்களுடன் மிகவும் பிஸியாகி விடுவார். இந்த வருடமும் ஜூன் மாதம் எல்லோரும் அவரவர் ஊருக்குச் சென்றதும் தஞ்சைக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்.

இப்போது அவரின் இரண்டாவது பெண்ணிடமிருந்து அழைப்பு! சாதாரணமாக எப்போதும்போல தொலைபேசி அழைப்பு என்று நினைத்து பேச ஆரம்பித்த எனக்கு தொலைபேசியில் குண்டு வெடித்ததைப்போல இருந்தது.

என் சினேகிதியின் மூத்த மகளின் மூத்த பேரன் [ முதல் பேரன்] பாட்டி வீட்டுக்கு வந்த இடத்தில் திடீரென உலகை விட்டு மறைந்து விட்டாரென்று சொன்னதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதினேழு வயது தான். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு நுழையும் ஆர்வத்தில் இருந்தவன். பெற்றோர் இவனைத்தான் மலை போல நம்பியிருந்தார்கள். கண்ணீருடன் அரற்றிய என் சினேகிதியிடமோ, அவரின் பெண்களிடமோ என்னால் எதுவுமே பேச முடியவில்லை. அவரின் சின்ன மகள் தான் எனக்கு மிகவும் பழக்கம். அவர்தான் அழுகையுடன் நடந்ததை விவரித்தார்.

முதல் நாள் எல்லா குழந்தைகளும் பானி பூரி வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள். அடுத்த நாள் எல்லோருக்கும் மூத்தவனான இந்தப்பையன் மட்டிலும் தொடர்ந்து வயிற்றுப்போக்கால் அவதியுற்றிருக்கிறான். தொடர்ந்து வயிற்றுப்போக்கு, வாந்தி, ஜுரம் என்று அவதியுற்று, மருத்துவரிடமும் சென்று அதற்கான மருந்துகளையும் எடுத்திருக்கிறான்.  ஐந்தாம் நாள் இரவு எனக்கு என்னென்னவோ செய்கிறது. மருத்துவமனை செல்லலாமா என்று நள்ளிரவு அவன் கேட்டதும் பயந்து போய் அவனைத்தொட்டுப் பார்க்கையில் உடம்பு முழுவதும் வியர்த்துக்கொட்டி, முழுவதுமாக சில்லிட்டும் போயிருந்திருக்கிறது. ஆனால் தெம்புடனேயே அவன் ஆட்டோவில் அமர்ந்து சென்றிருக்கிறான். ஆனால் அவனை அட்மிட் செய்ததுமே அவன் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாகவும் பல்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாமே தாழ்நிலைக்குப்போய் விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவனைக் காப்பாற்ற முடியாமல் மறு நாள் காலை அவன் இறந்தும் போய் விட்டான்.

இறந்து போகிற வயதா இது? அவனையே நம்பியிருந்த பெற்றோர் ஒரு பக்கம் நிலை குலைந்து போக, மறு பக்கம் பாட்டியான என் சினேகிதி அதிர்ச்சி தாங்காமல் தளர்ந்து போக, வீடே ஆறுதலுக்கு அப்பாற்பட்ட நிலைக்குப்போய் விட்டது.

எதனால் இந்த மரணம் என்பதை மருத்துவமனையால் சொல்ல முடியவில்லையாம். ஒரு வேளை இது FOOD POISONஆக இருக்கலாம் என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. இது பற்றி என் உறவினரிடம் பேசிக்கொண்டிருந்த போது, இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற என் சந்தேகத்தை சொன்னேன். அதற்கு அவர் இது FOOD POISON போலத்தான் இருக்கிறது என்று சொன்னார். சில நாட்களுக்கு முன் காலால் மிதித்து பானி பூரிக்கான மாவு பிசையப்படுவதாகவும் சாலையில் விற்கும் பானி பூரியை வாங்கி சாப்பிடாதீர்கள் என்றும் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தகவல் வந்ததாகச் சொன்னார். தனக்குத்தெரிந்த சிறு வயது கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென்று வயிற்றுப்போக்கு, வாந்தி, ஜுரம் என்று வந்து அன்று மாலையே இறந்ததாகவும் காரணம் விசாரித்த போது சாலையோரக்கடை ஒன்றில் பொரித்த கோழி வருவல் சாப்பிட்டதாகவும் தெரிந்தது என்றும் தெரிவித்தார்.



சுகாதாரமற்ற சிறு உணவுக்கடைகள் சாலையெங்கும் முளைத்திருக்கிறது. எந்தக் கடையில் பழைய, வீணான பொருள்களை விற்கிறார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

இது மட்டுமல்ல, காய்கறிகளைக்கூட, அவை உரம் போட்டு வளர்க்கப்பட்டிருப்பதால் நன்கு கழுவி, அலசி அதன் பிறகே சமைக்க பல சமயங்களில் அறிவுறுத்தப்படுகிறது. இதை எழுதும்போது பழைய சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது.

ஒரு நரம்பியல் மருத்துவர், அறுவை சிகிச்சையில் புகழ் பெற்றவர், தான் செய்த ஒரு அறுவை சிகிச்சையைப்பற்றி ஒரு பெண்கள் இதழில் விவரித்திருந்தார்.

ஒரு வயதான் அம்மாவுக்கு தலையில் பொறுக்க முடியாத வலி என்று அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது அந்த அம்மாவின் மூளையிலிருந்து இரத்தக்குழாய் வழியாக கண்களுக்குள் புழுக்கள் வந்திருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார். அவற்றை நீக்கி சரி செய்து அவரை குணப்படுத்தி அதன் பின் அந்த அம்மாவிடம் அவரது உணவுப் பழக்க வழக்கங்களை விசாரித்த போது அவர் கொல்லைப்புறத்தில் பன்றிகள் மேயும் இடங்களில் வளர்ந்து கிடந்த கத்தரிக்காய்களை அடிக்கடி உண்டிருக்கிறார் என்று தெரிய வந்ததாம். கத்தரிக்காய்களில் பாவாடை என்னும் பகுதியில் அந்த பன்றியின் மலத்திலிருந்து வெளி வந்த புழுக்களின் முட்டைகள் ஒட்டியிருந்திருக்கின்றன. அந்தப்பாவாடையுடன் கத்தரிக்காய்களை சமைத்து உண்ணும்போது, உணவுக்கான அதிக பட்ச வெப்ப நிலையில்கூட அந்த முட்டைகள் அழியாமல் அது அவரின் உடலுக்குள் சென்று மூளையை அடைந்திருக்கிறது. அங்கேயே முட்டைகள் பொரித்து, புழுக்கள் உண்டாகி கண்ணுக்குள்ளும் வந்திருக்கின்றன. இந்த உண்மை சம்பவத்தை எழுதிய அந்த மருத்துவர், ' நான் பெண்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து காய்கறிகளை பல முறை கழுவி சுத்தம் செய்து சமையுங்கள்.' என்று வேண்டுகோள் விடுத்து முடித்திருந்தார்!

துபாய் போன்ற அரேபிய நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்கள் அமுலில் இருக்கின்றன. அவற்றிற்கு உடன்பட்டே ஒவ்வொரு உணவகமும் நடத்தப்பட வேண்டும். ஒரு உணவகத்தை 25 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்தியவர் என் கணவர். அத்தனை கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றுவதால்தான் அங்கே உணவகங்களில் தைரியமாக அமர்ந்து உண்ண முடிகிறது.

இங்கே....?

குழந்தைகளுக்கு வெளியில் பலகாரங்களையும் கோழி வறுவல் போன்றவைகளையும் பெரியவர்கள் தான் வாங்கிக்கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். வீட்டில் வறுத்த எண்ணெயையே இரண்டாம் முறை வேறு எதுவும் பொரிப்பதற்கு உபயோகப்படுத்தக்கூடாது என்ற அறிவுரைகள் அவ்வப்போது தொலைக்காட்சி, மீடியாக்களில் வருகின்றன. எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பொரித்த எண்ணெயிலேயே கடைகளில் மீண்டும் மீண்டும் வடை, போண்டா போன்றவற்றை பொரித்துக்கொடுக்கிறார்கள். அதை உண்ணுபவர்கள் பலருக்கு கான்ஸரும் வருகிறது. இப்படி எத்தனையோ பாதிப்புகள். புகழ் பெற்ற கடைகளில் விற்கும் பலகாரங்கள்கூட கெட்டுப்போயிருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. முதலில் பெரியவர்களுக்குத்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

முடிந்த வரையில் நாம் தாம் நம் நாக்கிற்கு கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை.

Friday 5 May 2017

திருவையாறு பஞ்சநாதேஸ்வரர்-[ பாகம் இரண்டு]!!!

தல விருட்சம் வில்வம். சூரிய புஷ்கரணியும் காவிரியும் தீர்த்தமாகும்.
இறைவனின் திருநாமங்கள்: ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பஞ்சநாதேஸ்வரர்
இறைவி: தர்மசம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி, திரிபுரசுந்தரி.

குளத்தினுள் சிறு மண்டபம்!
தெற்கு கோபுர வாசல் வழியே நாம் நுழைவோம்.
தெற்கு கோபுர வாசலுக்கு நேரே காவிரி படித்துறை அமைந்துள்ளது. இந்த காவிரி நதியில் நீராடுவதை அப்பர் சுவாமிகள் வெகுவாக சிறப்பித்துள்ளார். புஷ்பமண்டப படித்துறை என்ற இத்துறையில் நீராடும் பக்தர்களை, ஐயாறப்பர் பெருஞ்செல்வந்தர்களாக மாற்றுவார் என்பது அப்பரின் வாக்கு.
இத்தலப் படித்துறையில் மார்கழி மாதம் கடைசி நாளன்று காவிரி அன்னை இங்கு தங்கி, ஐயாறப்பரை வழிபட்டு மறுநாள், தைப் பிறப்பன்று வருணனை அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. எனவே, பெண்கள் இன்றும் மார்கழி கடைசி நாளன்று இரவு இங்கு தங்கி ஐயாறப்பரை வழிபட்டு, தை முதல் தேதியன்று இந்தப் படித்துறையில் பொங்கல் தயாரித்து, காவிரி அன்னைக்கு மங்கலப் பொருட்களுடன் படைத்து வழிபடுகிறார்கள்.



தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும் வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. இவர்கள் தான் நுழைவாசலில் துவார பாலகர்களாக இருக்கிறார்கள்.

தென் கைலாயம்
இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.



தெற்கு வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும் இடப்புறமாக அமர்ந்துள்ளார் ஓலமிட்ட விநாயகர். சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

தென் கைலாயம் நுழைவாயில்
திருவையாறு ஐயாரப்பர் கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும்.முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது. இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூத லிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இலக்குமிக்கு இரண்டாம் பிராகாரத்தில் தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக் கிழமைதோறும் இலக்குமி புறப்பாடு இத்தலத்தில் நடைபெற்று வருகின்றது.


மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன.  நான்காம் பிரகாரத்தில் சூரிய புஷ்கரணி தீர்த்தம்,. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம்.



மேலும் இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது என்பதும் இத்தலத்தின் முக்கிய அம்சம், இறைவனின் கருவறையில் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்றுப் பிராகாரத்தை வலம் வரக்கூடாது என்பது இத்தலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.



இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு மணல் லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.

வட கைலாயம்! இது பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது!
இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.

இறைவன் சன்னதி!
இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசுசுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார்.

சுற்றுப்பிரகாரத்தில் ஓவியங்கள்!
மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும்.



இத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை.. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் "ஓலோக மாதேவீச்சுரம்' என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கைலாயம்" எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வட கயிலாயம் முதல் இராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் "தென் கைலாயம்" எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.. சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.



சமயக்குரவர்களில் ஒருவரான அப்பருக்கு சிவ பெருமான் திருவையாறில் கயிலைக்காட்சியினைக் காட்டி அருள் புரிந்தாகவும், இதனால் வடக்கே காசிக்கு தீர்த்த யாத்திரை செல்ல முடியாத பக்தர்கள் தென் கயிலாயமான திருவையாறு வந்தால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. சூரியனுடைய வழியில்வந்த ஸ்ரீ ராமன் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை பூஜித்து  வணங்கினார்.பொதுவாக சிவாலய‌ங்களில் நவக்கிரகங்கள் வேறு வேறு திசையில் இருக்கும்.
இதற்கு நேர் மாறாக திருவையாறில் நவக்கிரகங்களில் ஏனைய எட்டு கிரகங்கள் சூரியனையே பார்த்து நிற்கின்றனர்.

அம்மன் சன்னதியில் அழகு மிக்க தூண்கள்!
இங்குள்ள தியான மண்டபம் அல்லது முக்தி மண்டபம் சுண்ணாம்பு, கருப்பட்டியால் கட்டப்பட்டது. முக்தி மண்டபத்தில் விஷ்ணு, நந்தி தேவர், அகத்திய முனிவர் உபதேசம் பெற்றனர்.



இறைவனின் கோவிலுக்கு ஈசான்ய மூலையில் அம்மனின் கோவில் இரு திருச்சுற்றுகளுடன் உள்ளன. எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் இங்கு அம்பாளுக்கு அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

மிகவும் சுத்தமாக கோயிலைப் பேணி பாதுகாக்கிறார்கள். வட கைலாயம், முக்தி மண்டபம் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன! வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு அழகிய கோவிலை தரிசித்த திருப்தியுடன் திரும்பினேன்!!