Saturday 24 May 2014

அன்பிற்கேது எல்லை?

மகா கவி பாரதியின்

"வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு"

என்ற வைர  வரிகளைப்போல‌,

 பாவேந்தர் பாரதிதாசனின்

' வ‌ண்ண‌ப்பூவும் மணமும் போலே,
மகர யாழும் இசையும் போலே'

அன்பால் வாழ்க்கையில் காதலர் இருவர் இணைந்திருக்கும் அழகைச் சொல்லும் ஒரு பாடலை சமீபத்தில் படித்து ரசித்தேன்.

உண்மையான அன்பின் ஆழத்தை, சிறப்பை  அத்தனை அழகாய் காட்டியிருக்கிறார் இப்பாடலை எழுதிய சேரமான் பெருங்கடுங்கோன்! கலித்தொகையில் பாலைத்திணையில் வருகிறது இப்பாடல்!

தலைவன் பொருளீட்ட வேற்றூருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். நெடுநாள் பிரிவை எண்ணி அவனை அவன் வழியே செல்ல அனுமதிக்கவில்லை தலைவி! தானும் உடன் வருவதாகச் சொல்லுகிறாள். தலைவன் பதைபதைத்து இப்படி சொல்லுகிறான்.




பாடல்:

மரையா மரல் கவர, மாரி வறப்ப‌
வரை ஓங்கு அருஞ்சுரத்து, ஆர் இடைச் செல்வோர்
கரை அம்பு, மூழ்கச்சுருங்கி, புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்கு
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால்
என், நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர் அல்ல நெடுந்தகாய்! எம்மையும்
அன்புஅறச் சூழாதே ஆற்றிடை தும்மொடு
துன்பம் துணையாக நாடின், அது அல்லது
இன்பமும் உண்டோ எமக்கு?

தலைவன் சொல்கிறான்:

" கடப்பதற்கு மிகவும் கடினமான பாலைவனம்! வழி நெடுக கள்வர்களின் அம்புகள்! தன் கண்ணீரையே தண்ணீராக குடிக்கிற அளவு வரட்சி! தின்பதற்கு புல் இன்றி, கற்றாழையை புசித்து உயிர் வாழும் காட்டுப்பசு! இத்தனையும் கொண்ட கொடிய காடு! இத்தனி கொடிய காட்டு வழியே உன்னை நான் எங்கனம் அழைத்துச் செல்வது?"

பதில் உரைக்கிறாள் தலைவி:

" நான் என்ன காடு, பாலை பற்றியெல்லாம் அறியாதவளா? நீ சொல்லும் எதாலும் உனக்கு ஊறு நேர்ந்து விடாமல் காக்கவே நான் உன்னுடன் வருகிறேன்"

'துன்பங்கள் சூழ நீ செல்லும்போது உனக்கு உறுதுணையாக வருவதல்லாமல் எனக்கேது இன்பம்?'

ஒருவருக்கொருவர் இணை பிரியாது அன்பினால் வாழ்கின்ற இல்லற மாட்சிமையை இதை விட அழகாக வேறு எதுவும் சொல்ல முடியுமா?

நன்றி: Google


Wednesday 14 May 2014

நண்டு வளைகள்!!

சிகிரெட்டிலுள்ள நிகோடின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். நுரையீரல்களை அது பாதிப்பதுடன் கான்ஸரையும்  நுரையில்கள், வாய், லல்லீரல், சுவாசக்குழாயில் பரப்புகிறது. ஆனால் நாம் தினசரி உபயோகிக்கும் பேஸ்டிலும் அந்த நிகோடின் சிறு அளவில் கலக்கப்பட்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த விபரங்களை ஒரு பெண்கள் இதழில் படித்த போது அதிர்ந்து போனேன்!

டெல்லியிலுள்ள வேதியல் ஆய்வு நிறுவனமான டெல்லி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மசூட்டிகல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் 24 விதமான பேஸ்ட் வகைகளையும் 10 விதமான பற்பொடியையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. ஆய்வு முடிவுகள் வந்த போது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பேஸ்ட் வகைகளில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்பில் நிகோடின் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

நிகோடின் கேடு விளைவிக்கும் போதைப்பொருள் என்று அறிந்தும் அதை ஏன் பேஸ்ட் வகைக‌ளில் கலக்கிறார்கள்? இந்த நிகோடினின் குணமே, அது சேர்க்கப்பட்ட பொருளை மறுபடி மறுபடி நாம் வாங்கத் தூண்டுவது தான்! நம் குழந்தைகளில் சிலர் தான் முதன் முதலில் பயன்படுத்திய பேஸ்ட் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதன் காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்!

பல்லை விளக்கியதும் துப்பி நன்கு வாயை கழுவினாலும் நிகோடின் உடலுக்குள் செல்லுமா? கண்டிப்பாக உட்செல்லும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். சந்தேகமே வேண்டாம். நம் தோலில் உள்ள நுண் துவாரங்கள் வழியாகவே உட்புகும் தன்மை நிகோடினுக்கு உண்டு. வாயில் உள்ள மென்மையான சவ்வுகள், ஈறுகளின் வழியே உமிழ்நீரோடு நிகோடின் கலந்து அழகாக உள்ளே சென்று விடும்.

ஒரு சிகிரெட்டில் 2 முதல் 3 மில்லி கிராம் வரை நிகோடின் கலக்கப்பட்டிருக்கிறது. நம் பேஸ்டில் உச்சபட்சமாக 18 மில்லி கிராம் வரை நிகோடின் கலக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை பல் துலக்கினால் 9 முறை சிகிரெட் பிடித்ததற்கு சமம்.

அந்த ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்கள் கீழே:

பேஸ்டின் பெயர்             நிகோடின் கலந்துள்ல விகிதம் [மில்லி கிராம்]

வீக்கோ                     0.05
அல்கா தந்த் மஞ்சன்         1.0
யுனாதந்த்                   1.7
டாபர் செட்                  0.01
பயோ கில்                  16
கோல்கேட் ஹெர்பல்         18
நீம் துளசி                   10
ஸ்டோலின் பேஸ்ட்          0.06
ஹிமாலயா                  0.029
சென்ஸோபோர்ம்            0.065

இதற்குப்பின் நான் சென்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் எல்லாம் இந்த வகை பற்பசைகள் விற்பனையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். மிகவும் திகைப்பாய் இருந்தது. அப்படியென்றால் இந்த பற்பசைகள் மத்திய அரசால் தடை செய்யப்படவில்லையா?



20 தினங்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர்  திடீரென்று இறந்து போனார். வயது அறுபத்தியேழு என்றாலும் எந்த ஒரு தீவிரமான வலியோ அல்லது அபாய அறிவிப்போ இல்லாததால் தன்னை கல்லீரல் புற்று நோய் தாக்கியிருப்பது மரண‌த்தருவாயில் தான் அவருக்குத் தெரிந்தது. அவருக்கிருந்த ஒரே அறிவிப்பு அளவிற்கு அதிகமான சோர்வும் உடனேயே தூங்குவதும் தான். இதையும் கூட தனக்கிருந்த சர்க்கரை வியாதியின் தாக்கமாகத்தான் எடுத்துக்கொண்டார்.

நிறைய பேர் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் வலி இல்லாமலேயே போய் விட்டது என்றார்கள். இது பற்றி என் குடும்ப மருத்துவரிடம் கேட்டபோது அது உண்மையில்லை, புற்று நோய் நிறைய பேருக்கு அது இருப்பதே கடைசியில் அது தீவிரமாகும்போது தான் தெரிகிறது " என்றார். அதற்கு காரணங்களைக் கேட்ட போது, ' ஜீன்ஸ் காரணமாக சில சமயம் இருக்கிறது. பெண்கள் கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதும் ஒரு காரணமாக சிலருக்கு அமைகிறது. ஆனால் எந்த வித காரணங்களுமில்லாமலும் இது மனிதர்களைத் தாக்குகிறது என்றார்.

கல்லீரல் சம்பந்தமாக எந்த நோய் தாக்கினாலும் மருத்துவர்கள் உடனேயே கேட்பது ' நோயாளி மது அருந்துவாரா?' என்பது தான். இது எனக்கு சில சமயங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வாழ்நாள் முழுவதும் போதைப்பொருள் போல மது அருந்துபவர்களையும்,  தொடர்ந்து கண்மண் தெரியாமல் மது அருந்தி கீழே விழுந்து கிடந்தவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்களுக்கெல்லாம் கல்லீரல் கடைசி வரை பாதிக்கவேயில்லை!!

என் சினேகிதியின் தாயார் சில மாதங்களுக்கு முன் இதே மாதிரி பாதிப்பிற்குள்ளானார். எழுபது வயதிலும் நன்றாக வேலை செய்து சில மைல்கற்கள் தொலைவில் உள்ள வயலுக்குச் சென்று மேற்பார்வை பார்ப்பதும் மாடு கன்றுகளை கவனிப்பதுமாகவும் இருந்தவர். திடீரென்று சில சமயங்களில் அவருடைய செயல்களில் மறப்பதும் பின்னர் ' நானா இப்படி சொன்னேன், செய்தேன்?' என்று சொல்வதுமாக இருந்திருக்கிறார். அவருக்கு உயர் இரத்த அழுத்தமோ சர்க்கரையோ வேறு எதுவும் பிரச்சினைகளோ இருந்ததில்லை. இந்த ஞாபகம் தப்புவது அதிகமானதால் நரம்பியல் துறை நிபுணரிடம் அழைத்துச் சென்று காண்பித்ததில் வேறு ஏதோ பிரச்சினை என்பது மருத்துவருக்குப்புரிய அவர் ஸ்கான் எடுக்கச் சொல்லவும் அப்போது தான் அவரை கல்லீரல் புற்று நோய் தாக்கியிருப்பது தெரிய வந்ததுடன் அது முற்றி மூளை வரை கான்ஸர் செல்கள் பரவி விட்டதால் தான் அவருக்கு ஞாபக மறதியும் நினைவு தப்புதலும் இருந்து வந்தது என்பது தெரிந்த போது அவர் உயிர் பிழைத்திருக்க முடியாத கட்டத்திற்குச் சென்று விட்டார்.

மற்றொரு நண்பரின் அம்மாவிற்கு பெருங்குடலில் கான்ஸர் பரவி, குடலை வெட்டியெடுத்து, கழிவுகள் வெளியேற வெளியில் ஒரு பையை வைத்து அவரின் உயிரைக்காப்பாற்றினார்கள்.

இப்படி எங்கு திரும்பினாலும் கான்ஸர் என்பதே அதிகம் தாக்கும் நோயாக சமீபத்தில் இருக்கிறது. முன்பு சகோதரி ஹுஸைனம்மா தனது பதிவில் ' நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களான க்ரீம்கள், பவுடர் முதல் அத்தியாவசியப் பொருளான பல்தேய்க்கும் பேஸ்ட் வரை சேர்க்கப்பட்டிருக்கும் ”பாராபென்” என்ற வேதிப்பொருள் ஒரு முக்கிய கான்ஸர்-காரணி ' என்று எழுதியிருந்தார்கள். தாய்மையடைந்திருக்கும் நிலையில் ஒரு பெண் எக்ஸ்ரே கதிர்களின் தாக்கத்திற்கு ஆளாகியிருந்தால் அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் கான்ஸர் வர வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

ஒருவருக்கு தொடர்ந்து இருமல் ,பேதி,எடை குறைவு,காரணமில்லாமல் உடல் சோர்வு, உடல் வலி போன்றவை இருந்தால் அலட்சியப்படுத்தாமல்மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்வது நல்லது.

இல்லத்தரசிகள் பொரித்த எண்ணையிலேயே மீண்டும் பொரித்தல்,வண்ணங்கள் சேர்த்து உணவுப்பண்டங்கள் தயாரித்தல் இவற்றை தவிர்க்க வேண்டும். மைக்ரோ வேவ் சமையல் முறையில் பிளாஸ்டிக் பாத்திரங்கள் வைத்து சமைக்க வேண்டாம். அதற்கு பதிலாக மைக்ரோ வேவ் சமையல் செய்வதற்கென்றே இருக்கும் பீங்கான், கண்ணாடிப்பாத்திரங்களை உபயோகிக்கவும்.

உணவுகளில் சர்க்கரை, உப்பு, அசைவ உணவு, காப்பி இவற்றை அதிகம் தவிர்ப்பது நல்லது. முக்கியமாய் வெளியில் சாப்பிடுவது, ஃபாஸ்ட் ஃபுட் அடிக்கடி சாப்பிடுவது, சுகாதாரமற்ற தண்ணீரை அருந்துவது, பழங்கள், காய்கறிகள் இவற்றை சுத்தமாகக் கழுவி உபயோகிக்காதது, மிகுந்த உணவுப்பொருள்களை பல நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்பது இவையெல்லாம் கிருமிகளை மாலை போட்டு வரவேற்பதற்கு சமம்.

கிரீன் டீ கான்ஸரை உண்டாக்காது தடுக்கக்கூடிய வல்லமை படைத்தது. ப்ராஸ்டேட் கான்ஸர், மார்பகப் புற்றுநோய் உட்பட மூன்று கப் கிரீன் டீ குடித்தால் நமக்குக் கிடைக்கிற பலன்கள் ஏராளம். சத்தான உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலமாகவும் காய்கறிகளை நிறைய சமைத்து உண்பதன் மூலமாகவும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் உடலை கான்ஸர் கிருமிகள் அண்டாது. அதேபோல தொடர்ந்து நடைப்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்யும் உடலில் ஆக்ஸிஜன் நிரம்பியிருக்கும். அதுவும் கான்ஸர்கிருமிகள் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செய்வதைக் குறைக்கும்.

 கனகல் என்றொரு மரத்தின் இலைக்காம்பை சாப்பிட்டால் கான்ஸர் குணமாகி விடும் என்று ஒரு வலைப்பக்கத்தில் படித்தேன். அதென்ன ' கனகல்' மரம்? யாருக்கேனும் இது பற்றி தெரியுமா?

இந்த நண்டுகள் நம் உடலின் உள்ளே நுழைந்து ஒவ்வொரு உறுப்பிலும் வளைகள் ஏற்படுத்தி அவற்றை அழிக்கும் முன்னே நம் உடம்பை நாம் பாதுகாத்து அவற்றை உள்ளே நுழைய முடியாது அரண்களை ஏற்படுத்திக் கொள்வோம். நல்ல உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், நல்லறிவு இவைகள் தாம் அந்த அரண்கள்!!
 

Monday 5 May 2014

துபாய் அழகு!!!!

இன்றைக்கு துபாயின் சில அழகிய இடங்களையும் சில வித்தியாசமான  புகைப்படங்களையும் பார்க்கலாம்.

DUBAI CREEK ஓரமாய் நடந்த போது எடுத்த புகைப்படம் இது!

துபாய் மால் உள்ளே souk என்ற பகுதி இது! துபாயின் கட்டக்கலையின் அழகை இங்கே பார்க்கலாம்! 




உலகப்புகழ் பெற்ற மிக உயரமான கலீஃபா டவரின் கீழ் துபாய் மால் என்னும் மிகப்பிரசித்தி பெற்ற மால் உள்ள‌து. அதில் உள்ள‌ இந்த அக்வேரியம் மிகவும் புகழ் பெற்றது. கண்ணாடித்தடுப்பிற்குள் ஆயிரக்கணக்கான் மீன் இனங்கள் மிதந்து கொண்ற டிருப்பதைப்பார்க்கலாம்!!





இதுவும் துபாய் மாலினுள் உள்ள CANDY SHOP!! ! சரவென்று குழந்தைகளை கட்டுப்படுத்துவதென்பது எப்போதுமே மிகவும் சிரமமான காரியம்! எப்படியெல்லாம் மிட்டாய் வகைகளை அலங்கரித்து அழகு செய்திருக்கிறார்கள் பாருங்கள்!!