Thursday 14 October 2021

முத்துக்குவியல்-64!!

 சாதனை முத்து:

உலக நாடுகளின் நன்மைகளில் பெரும் அக்கறையுடன் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பல்வேறு கிளை அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு. உலகின் நன்மைக்காகவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, ஆக்கப்பூர்வமான திட்டங்களில் வெற்றி காண்போருக்கு, இந்த அமைப்பு ஆண்டு தோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, இளம் சாதனையாளர்கள், ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டுக்கான, ‛உலகின் இளம் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். 

டெல்லியில் பள்ளிப் படிப்பையும், பெங்களூரில் பொறியியல் பட்டமும் பெற்ற வித்யுத் மோகன், எரிசக்தித் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது, 29 வயதாகும் இவர், பட்டப்படிப்பு முடித்தது முதலே இத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றியதோடு, அத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார். 


பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், அறுவடைக்குப் பின், விவசாயிகள், தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் விவசாயக் கழிவுகளை, பொது வெளியில் எரிப்பதால், தலைநகர் டெல்லி உட்பட, நாட்டின் பல முக்கிய நகரங்களில், காற்று மாசு அதிகரிக்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், அக்கழிவுகளை பயன்படுத்தி, எரி சக்திப் பொருட்களை தயாரிக்க வித்யுத் திட்டமிட்டார். அதற்காக, தகாசார் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவக்கினார். பின், விவசாயிகளிடமிருந்து, விவசாயக் கழிவுகளை விலை கொடுத்து வாங்கினார். வித்யுத் மோகன் கண்டுபிடித்துள்ள ஓர் இயந்திரம், நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப்பொருள்களைக் கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான உரத்தையும், கூடுதல் எரிசக்தி தரும் நிலக்கரி போன்ற பொருள்களையும் உருவாக்குகிறது. இவரது இந்த முயற்சியால், விவசாயக்கழிவுள் எரிக்கப்படுவதால் ஏற்படும் காற்று மாசு குறைக்கப்பட்டதோடு, இதுவரை வீணாக்கப்பட்டுக் கொண்டிருந்த கழிவுகளுக்கு, விலையும் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதில், ஆக்கப்பூர்வமாக செயல்படும் வித்யுத் மோகனை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, அவருக்கு, 2020ஆம் ஆண்டுக்கான, ‛உலகின் இளம் சாதனையாளர் விருது’ வழங்கியுள்ளது.


பருவ நிலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முக்கிய சர்வதேச விருதான " குழந்தைகளுக்கான பருவ நிலை விருது" பெற்றிருக்கும் திருவண்ணாமலை வினிஷா சர்வதேசப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி. இவர் சொல்கிறார்:

" ஒரு நாள் அம்மாவுடன் நடந்து போய்க்கிட்டிருந்த போது, இஸ்திரி போடும் தாத்தா இஸ்திரிப்பெட்டியில் கரியைப்போட்டு, ஊதி ஊதி புகையால் இருமி சிரமப்பட்டுக்கிட்டுருந்தார். மேலும் பயன்படுத்துற கரியை ரோட்டோரமாக கொட்டுவார். இப்படி இஸ்திரி வண்டியை பயன்படுத்துற எல்லோருமே பயன்படுத்துற கரியை ரோட்டோரமாகவோ, சாக்கடையிலோ கொட்டுறதை பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி எத்தனை கிலோ கரி நம் நாட்டுல எரிக்கப்படுது, அதற்கு எத்தனை மரங்கள் வெட்டப்படுது, அது ஏற்படுத்துற சுற்றுச்சூழல் தீங்கு என்று யோசிச்சேன். மின்சாரம் இல்லாமல் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் சோலார் இஸ்திரிப்பெட்டி வண்டியை வடிவமைக்க ஆரம்பிச்சேன். இந்த இஸ்திரிப்பெட்டி உள்ல சைக்கிள் வண்டியின் மேற்புறத்தில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 100 ஹெச் திறன் கொண்ட பாட்டரியை இணைச்சிருக்கிறேன். இந்த பாட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேர சூரிய ஒளி தேவைப்படும். அதன் பிறகு 6 மணி நேரம் இதைத்தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். "

இதற்காக, சுவீடனின் துணைப்பிரதமர் இஸபெல்லா லோவின், ஆன்லைன் விருது நிகழ்ச்சியில் இந்த விருதை வினிஷாவிற்கு வழங்கியிருக்கிறார். விருதுட்ன் பதக்கம், சான்றிதழ், 8.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அனைத்து வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருக்கிறார். மத்திய அரசால் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கபப்டும் ' பால சக்தி புரஸ்கார்' விருதும் வினிஷாவிற்கு கிடைத்துள்ளது. மேலும் ' தானாக இயங்கும் ஸ்மார்ட் மின் விசிறி ' கண்டுபிடிப்பிற்காக ஒரு விருதும் கடந்த ஆண்டு டாக்டர் அப்துல் அக்லாம் இக்னைட் விருதும் பெற்றிருக்கிறார் இவர்!!

பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு, சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படுகிறது. இந்த இறுதி போட்டி லண்டனின் அலெக்சாண்டிரா மாளிகையில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படைப்பாளிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வினிஷா உமாசங்கர் மற்றும் வித்யுத் மோகன் இருவரும் காணொலி மூலம் பங்கேற்கின்றனர். இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதி போட்டியில் தமிழக மாணவி வினிஷா உமா சங்கரின் சோலார் இஸ்திரி வண்டி பங்கேற்கிறது. வித்யுத் மோகனின் படைப்பும் சுற்றுச்சூழல் ஆஸ்கார் இறுதி பட்டியலில் இடம்பெற்று உள்ளது. 

உலக அளவில் இந்தியா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் உயர்ந்த கவுரவமாக கருதப்படும் இந்த விருதை வெல்வதற்காக வினிஷா மற்றும் வித்யுத் ஆகியோருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நாமும் வாழ்த்துவோம்!!!

ஆச்சரிய முத்து:

ஊரிலிருந்து சில மாத இதழ்கள் ஒரு நண்பர் மூலம் வந்திருந்தன. அதில் ' கோகுலம் கதிர் ' என்ற இதழில் என் ஓவியத்தைப் பார்த்தேன். 1984 என்று நினைக்கிறேன், ஆனந்த விகடன் இதழில் ஒரு சிறுகதைக்கு இந்த ஓவியத்தை வெளியிட்டிருந்தார்கள். முப்பத்தியேழு வருடங்கள் கழித்து அதை எங்கிருந்து எடுத்து பிரசுரம் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. இது தான் அந்த ஓவியம். 


பாதி மட்டும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது!!



Friday 1 October 2021

எக்ஸ்போ துபாய் 2020!!!!!

 

எக்ஸ்போ துபாய் 2020

துபாயில் மிக பிரம்மாண்டமாக எக்ஸ்போ 2020 கண்காட்சியானது 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா நேற்றிரவு 7.30 மணியளவில் தொடங்கி 1.30 மணி நேரம் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 1000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமீரகம் மற்றும் இந்தியா உப்பட 192 நாடுகள் பங்கேற்றது.  நாங்களும் ஆன்லைனில் பார்த்தோம். மொத்தம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற‌ தொடக்க விழா நிகழ்ச்சிகளில் இந்தியாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்க பாடகி மரியா கரே, அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லையோனல் மெஸ்சி, மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான அமீரக இசைக்கலைஞர் ஹுசைன் அல் ஜாஸ்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.


ஏ.ஆர் ரஹ்மான் முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த பெண் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் ‘பிர்தோஸ் ஆர்கெஸ்ட்ரா’ இசைக்குழுவினரின் புதுமையான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



பிரமாண்டமான மேடையில் வண்ணமயமான விளக்கொளியில் நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. ஒளி
, ஒலி காட்சி அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட மேடையில் டிஜிட்டல் திரையின் பின்புலத்தில் வியப்பூட்டும் வகையில் காட்சியமைப்புகள் ஒளி வெள்ளத்தில் மக்களை பரவசப்படுத்தின. 



லேசரின் உதவியில் மிக அழகான காட்சி அமைப்புகள் நிமிடத்துக்கு நிமிடம் வண்ணங்களை மாற்றி திகைக்க வைத்தன.

இன்றிலிருந்து இந்த எக்ஸ்போ 2020 ஆரம்பமாகிறது. 

இனி எக்ஸ்போ 2020 பற்றிய முக்கிய செய்திகள்.......

மத்திய கிழக்கு, தெற்காசியா, ஆப்பிரிக்கா பகுதியில் நடைபெறும் முதல் உலக எக்ஸ்போ இது. அரபு நாடுகள் அனைத்திற்கும் முதன் முதலாக நடத்தப்படும் முதல் உலகக் கண்காட்சி இது!

நவம்பர் 27, 2013 அன்று பியூரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போஷிஷன்ஸ் 154வது பொதுச்சபையை நடத்தியபோது, மொத்தம் 164 நாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தார்கள். அதில் 116 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய அமீரகம் வென்று தன் போட்டியாளரான ரஷ்யாவைப் பின்னுக்குத்தள்ளி உலக எக்ஸ்போ வழங்கும் நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.



சர்வதேசக் கண்காட்சியை நடத்தும் பிரான்ஸின் சர்வதேசக் கண்காட்சிகள் கூட்டமைப்பு (BIE) 2013ம் ஆண்டே 2020ம் ஆண்டில் கண்காட்சி நடைபெறும் இடத்தை அறிவித்திருந்தது. அதையடுத்து 2016ம் ஆண்டு தொடங்கி இதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியது அமீரகம். முதலில் இந்த உலகக் கண்காட்சி 20 அக்டோபர் 2020 முதல் 10 ஏப்ரல் 2021 வரையிலான ஆறு மாத காலத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.  பின்னர் 1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் மார்க்கெட்டிங் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு எக்ஸ்போ 2020 என்றே பெயரிட்டுள்ளது அமீரகம்.


INDIA PAVILION 

இதில் 192 நாடுகளின் பெவிலியன்கள், நேரடி பொழுது போக்குகள், மறக்க முடியாத சந்திப்பு இடங்கள், நகைச்சுவையான ஹாங்கவுட்கள் என்று பல வகையான நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. முற்றிலும் எதிர்கால சிந்தனைகளுடன் புதிய கண்டுபிடிப்புகளை பல பொழுது போக்குகளுடன் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இடம் தான் எக்ஸ்போ துபாய். இதன் தொடக்க நாள் 1/10/2021 நிறைவு நாள் மார்ச் 31ந்தேதி ஆகும். 3.48 சதுர அடி கிலோ மீட்டர் பரப்பளவில் துபாய் தெற்கு மாவட்டத்தில் அல் மக்தும் சர்வதேச விமான நிலையம் [ இந்த விமான நிலையம் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது] அருகே இது அமைந்துள்ளது.


INDIAN PAVILION AT NIGHT

துபாய் எக்ஸ்போ ' மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற கருப்பொருளைக்கொண்டே இயங்கவுள்ளது. இதில் மூன்று துணை கருப்பொருள்கள் உள்ளன: வாய்ப்பு, மொபிலிட்டி, மற்றும் நிலைத்தன்மை. பங்கேற்கும் நாடுகள் இந்த கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து, புதிய எல்லைகளை ஆராய்ந்து, வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தங்கள் யோசனைகளை வெளிப்படுத்தலாம். பிரத்தியேக அரங்கங்கள், பல்வேறு தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் என சிறப்பம்சங்களுடன் தினமும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.


U.A.E PAVILION

ஒவ்வொரு நாட்டின் பெவிலியன்களிலும் சாகசத்தையும் ஆச்சரியத்தையும் இங்கு காணலாம். வெவ்வேறு 192 நாடுகளின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் பயணமாக இது திகழும். ஒவ்வொரு நாளும் அறுபதுக்கும் மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகள் நடைபெறும். பாடல், ஆடல், தேசீய தினக் கொண்டாட்டங்கள், ஓபராக்கள், விளையாட்டு நிகச்சிகள் என்று எதற்குமே குறைவில்லை. 192 நாடுகளின் சிறப்பு உணவு வகைகளுடன் 200க்கும் மேற்பட்ட உணவகங்கள் பார்வையாளர்கள் ரசித்து சாப்பிட இங்கே காத்திருக்கின்றன.

இந்திய அரங்கில் இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் பங்கேற்க உள்ளது. மொத்தம் இந்தியாவின் 9 மத்திய மந்திரிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.



இதில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் தனித்துவ மிக்க அரங்கில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடு அரங்கேறியுள்ளது. மேலும் ஒளி மற்றும் ஒலி காட்சிகளுடன் பிரமாண்ட மேடையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்போ 2020 கண்காட்சி முன் “அல் வாசல் பிளாசா” உள்ளது. இதில் கோள வடிவிலான 360 டிகிரியில் ஒளிரும் திரையும் அமைத்துள்ளனர்.  மேலும் இந்த கண்காட்சியை அமீரகம் முழுவதும் 430 இடங்களில் பெரிய திரை மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமீரகத்தில் அந்நிய முதலீட்டை பிரதமர் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நிலையில் இந்த எக்ஸ்போ அதற்கான தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, ரியல் எஸ்டேட், சுற்றுச்சூழல் மண்டலங்கள் மற்றும் பொதுத்துறை சார்ந்து முதலீடுகளை ஊக்கப்படுத்தி வருகிறது அமீரகம்.  இந்தக் கண்காட்சியை தொடக்கமாகக் கொண்டு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க இந்த நாடு திட்டமிட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை ஒட்டி உலகின் மிகப்பெரிய சூரியசக்தி திட்டம் ஒன்றிலும் துபாய் முதலீடு செய்துள்ளது. இது  தவிர துபாயின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு மொத்தம் 82 புதிய திட்டங்களை இந்தக் கண்காட்சி மூலம் செயல்படுத்த உள்ளது அமீரகம்.

இந்த வளாகத்தில் ரூ.450 கோடி செலவில் இந்திய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 4 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்திய அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

 


குறிப்பாக 5 டி.எஸ். என்ற கருப்பொருளில் திறன், வர்த்தகம்,  பாரம்பரியம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் என 5 அம்சங்கள் நிறைந்த காட்சியமைப்புகள் இடம்பெற உள்ளது. இதில் அந்த கட்டிடத்தில் மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது.


ANOTHER IMAGE OF INDIAN PAVILION

 ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கப்பட்ட பெவிலியன்களுடன், பிரதிநிதிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், கண்டுபிடிப்புகள் மூலம் உலகில் எவ்வாறு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார்கள், இதனால் சுற்றுலா பயணிகள், சாத்தியமான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளிகளை அழைக்கிறார்கள். உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த எக்ஸ்போஸ் ஒரு சிறந்த இடம். இத்தகைய சவால்களுக்கான தீர்வுகளைத் தேடுவதற்கு நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒன்று கூடுகிறார்கள்.

உலகிலேயே மிகப்பெரிய மின் தூக்கி [ஒரு தடவையில் 160 பேர்களை ஏற்றிச்செல்லும்] இதில் பயன்படுத்தப்படுகிறது. 203 பேருந்துகள் நாடு முழுவதும் பார்வையாளர்களை இலவசமாக எக்ஸ்போ தளத்துக்கு ஏற்றிச் செல்கின்றன. எமிரேட்ஸ், எதிகாட், ஃபிளை துபாய் போன்ற விமானங்கள் உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு எக்ஸ்போவிற்கான ஒரு நாள் நுழைவுச்சீட்டை இலவசமாகத்தருகின்றன!