Wednesday 31 December 2014

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



அன்பு மணம் வீசியதில் ஆனந்தம் வீட்டில் விளையாட‌,
இன்பம் எங்கும் நிறைந்திருக்க, ஈடில்லாத நிறைவு வழிந்திருக்க,
உண்மையும் உவகையும் சேர்ந்திருக்க,

ஊரும் உலகமும் வாழ்த்திசைக்க,
அனைத்து அன்பு உள்ள‌ங்களும் மகிழ்ந்திருக்க‌
அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


 

Sunday 21 December 2014

முத்துக்குவியல்-33!!

ரசித்த முத்து:

உச்சரிப்பு சரியில்லை. பேசினாலே இலக்கணப்பிழைகள் அதிகம்.  கூடவே ஒருமைக்குத்தாவும் மரியாதையின்மை.  இப்படி யாராவது குறுக்கே வந்தால் நமக்கு எரிச்சல் வருகிறது. கோபம் வருகிறது. சில சமயம் கை நீட்டும்போது கோபம் தலைக்கேறுகிறது.



ஆனால் இதுவே ஒரு மழலைப்பிஞ்சென்றால் நமக்கு ஏன் அத்தனையும் இனிமையாகவே இருக்கிறது?  'தொப்'பென்று தன் பிஞ்சுக்கையால் ஒரு அடி அடித்தால் ஏன் அது மட்டும் பூமாலை மேலே விழுந்தது போல அத்தனை சுகமாக இருக்கிறது?

சிறிய சமையல் முத்து:

ஐந்து நிமிடத்தில் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு விட்டு ஒரு சட்னி செய்யலாம். இதற்கு நாங்கள் 'அவசர சட்னி' என்று தான் பெயர் வைத்திருக்கிறோம்! சற்று பெரிய தக்காளி ஒன்று, பெரிய வெங்காயம் 2, புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு, வற்ற‌ல் மிளகாய் 8 இவற்றை உப்பு சேர்த்து நைய அரைக்கவும். ஒரு தாளிப்புக்கரண்டியில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து நாலைந்து சிறிய வெங்காயங்களை பொடியாக அரிந்து சிறிது கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு வதக்கி சட்னியில் கொட்டவும். தோசைக்கு அத்தனை சுவையாக இருக்கும் இந்த சட்னி!

கேள்வி முத்து:

சில வருடங்களுக்கு முன்பு ஜெயா தொலைக்காட்சியில் பாலச்சந்தர் இய‌க்கத்தில் சிந்து பைரவி 2 என்ற 'சஹானா' என்ற சீரியல் வெளியாகிக்கொண்டிருந்தது. நான் இதை எப்போதாவது நின்று சில காட்சிகளைப்பார்த்திருக்கிறேன். அந்தக் காட்சிகள் எல்லாமே பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த சில காட்சிகள் தான். அதில் ஒரு காட்சியில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ரசனையுடன் கவனிக்க பிரகாஷ் ராஜ் வசன நடையில் பாடுவார். பிரபல் பாடகர் ஓ.எஸ்.ஆருண் அதற்குப்பாடினார் என்று நினைக்கிறேன். அந்த பாடல் எப்படி ஆரம்பிக்கும், அதன் ஆரம்ப வரிகள் என்ன‌ என்பதை யாராவது சொல்ல முடியுமா?

குறிப்பு முத்து:



தும்பை இலைகளை காய வைத்து பொடித்து தணலில் போட்டால் வரும் புகைக்கு கொசுக்கள் ஓடி விடும்.

மருத்துவ முத்து:



இது ஒரு சகோதரியின் அனுபவமாக ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன். அவருடைய மகனுக்கு மெட்ராஸ் ஐ வந்திருக்கிறது. அந்த வலியோடு நண்பர்களை அழைத்துக்கொண்டு அவருடைய மகன் கடலில் குளித்து விட்டு வ‌ந்திருக்கிறார். மறு நாள் விழிக்கும் போது மெட்ராஸ் ஐ வ‌ந்த சுவ‌டே இல்லையாம். அதனால் உப்பு நீர் மெட்ராஸ் ஐயை குண‌ப்படுத்துகிறது என்பதைப்புரிந்து கொண்டு, சில நாட்களில் அவர் கண‌வருக்கு மெட்ராஸ் ஐ வந்ததும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை விட்டு நாலைந்து தடவை கண்க‌ளை கழுவச்சொல்லியிருக்கிறார். அவர் கணவருக்கும் வந்த மெட்ராஸ் ஐ உடனேயே மறைந்து விட்டதென எழுதியிருக்கிறார் அந்த சகோதரி!!

அதிர்ச்சியடைய வைத்த முத்து:

சமீபத்தில் படித்தேன். ஒரு பெண் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தபோது இரவில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். இத்தனைக்கும் அவரின் சகோதரி அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விழித்த போது தான் தெரிந்திருக்கிறது பின்னால் தொங்க விட்டிருந்த அவருடைய நீளமான கூந்தல் கழுத்து வரை வெட்டப்பட்டிருக்கிறது என்ற விபரம்.  தனியே பிரயாண‌ங்கள் செய்கிற போது நகைகள், உடமைகள், பணம் மட்டும் தான் இதுவரை பாதுகாக்கப்படுகிற பொருள்களாக இருந்தன. இனி அவற்றோடு கூந்தலையும் பெண்கள் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்போலத் தெரிகிறது!

இசை முத்து:

இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்  இவர்களது ஆழ்ந்த உச்சரிப்பா, மனதை ஈர்க்கும் பாடல் வரிக‌ளா, இந்த வரிகளை இவர்கள் தங்களது தேன் குரலில் பாடிய விதமா, அருமையான இசையமைப்பா, எதுவென்று எனக்கு இனம் பிரிக்கத்தெரிந்ததில்லை, ஆனால் எப்போது கேட்டாலும் அது முடியும் வரை அமைதியாக அப்படியே ரசித்துக்கொண்டிருப்பேன். அதன் காணொளி இதோ. நீங்களும் ரசியுங்கள். ஆனால் இதில் சித்ரா பாடிய பகுதி மட்டும் தான் இருக்கிறது. முழுப்பாடல் கிடைக்கவில்லை.
 

Wednesday 10 December 2014

தீர்த்தமலை!!

சமீபத்தில் அவ்வளவாக யாரும் அறியாத, ஒரு பழமையான கோவில் பற்றி அறிந்தேன். அதன் விபரங்கள் இதோ!

தீர்த்தமலை

தர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து கொட்டப்பட்டி சாலையில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் தீர்த்தமலை கிராமம் உள்ள‌து. இங்குள்ள‌ அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைக்கு தீர்த்தமலை என்றே பெயரிய்யு அழைக்கிறார்கள். மலை அடிவாரத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் மேலேறினால் சிறிது நேரத்தில் மலைக்கோவிலை அடைந்து விடலாம். மலை உச்சியில் தான் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலைப்பகுதியில் நடந்து செல்வதற்க்கு வசதியாக கற்காரையிலான சாய்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் ஐனூறு அடி உயரத்தில் அமைந்திருக்குமó மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியில், ஆங்காங்கே நடை மேடை மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.




ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட ராமபிரான் வழிபட்ட திருத்தலம். ராம பிரான் சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை.
இந்தக் கோவில் கி.மு 203ல் கட்டப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் அருணகிரி நாதரால் பாடப்பட்ட ஒரே தலம். 1040ல் ராஜேந்திர சோழனால் முன் மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. நாயக்க மன்னர்கள் ஆட்சியில் அங்குள்ள இன்னொரு கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலின் முன் மண்டபம் கட்டப்பட்டது.

தீர்த்தமலை அடிவாரத்திலும் மலை மீதும் தீர்த்தகிரீஸ்வரர், ராமலிங்க சாமி, சப்தகன்னியர், வடிவாம்பிகை அம்மன் என்று தனித்தனிக்கோவில்கள் உள்லன.
மலைக்கு மேற்கே வாயுதீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது.




தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது.இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்த மலை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மன் கோவிலுக்குப் பின்புறம் மலை உச்சியிலிருந்து பாறைகள் வழியாக ஊற்று நீர் 2000 வருடங்களாக கொட்டிக் கொண்டேயிருக்கிறது. வருடம் முழுவதும் மழை பொய்த்தாலும் இந்த ஊற்று நீர் கொட்டிக்கொண்டேயிருக்கிறது. இந்த ஊற்று நீரின் மூலம் எது, எங்கிருந்து ஊற்ரெடுத்து பிறக்கின்றது என்ற கேள்விக்கு விடை தெரிய வெளி நாடுகளிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பலர் வந்து ஆராய்ச்சி செய்தும் அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை. மேலிருந்து விழும் நீர் தலையிலோ உடலிலோ பட்டால் நோய்கள் முழுமையாக நீங்கும், பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் தீர்த்தமலைக்கு வந்த வண்ணமாகவே இருக்கிறார்கள்!!

Tuesday 2 December 2014

உதவி எனப்படுவது யாதெனில்...

பழைய புத்தகத்தொகுப்பொன்றைப் புரட்டிக்கொன்டிருந்தபோது, அவற்றில் ஒன்றில் ஒரு சினேகிதி சின்னச்சின்ன உதவிகள் பிறருக்குச்செய்வதைப்பற்றி எழுதியிருந்தார். உண்மையிலேயே அந்த கட்டுரையைப்படித்த போது மனசிற்கு இதமாக இருந்தது! என் மனதில் பதிந்தவைகளில் சிலவும் என் மன உனர்வுகளும் கலந்து இங்கே...!



ஒருத்தருக்கு உதவி செய்வதென்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பது தான்! ஆனால் அது எப்படிப்பட்ட உதவி, எந்த நபருக்குச் செய்கிறோம் என்பதைப்பொருத்து அதன் பரிமாணம் விரிந்து கொண்டே போகிறது. சிலர் தன் உறவு வட்டங்களுக்கிடையே மட்டுமே உதவி என்பதைச் செய்கிறார்கள். இதுவே வேற்று மனிதர் என்றாகிற போது மனசிலிருக்கும் கருணை ஊற்று வரண்டு விடுகிறது. சாலையில் அடிபட்டு விழுந்து கிடக்கும் மனிதர், மனநிலை பிறழ்ந்தவர், நிராதரவாய் அலைந்து திரிந்து கொன்டிருக்கும் மனிதர்கள் என்று இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரியவர்களுக்கு உதவுவதற்கு மிகப்பெரிய கருணை மனம் வேண்டும்.

சின்னச் சின்ன உந்துதல்கள் தான் கருணை என்னும் படிகள் ஏற வழி செய்யும். நாளெல்லாம் வீட்டு வேலைகள் செய்யும் அம்மா, துணி காயவைக்கும் போது, நான் செய்கிறேனே என்று ஒரு கை கொடுக்கலாம். அப்பா வேலைக்குப் போகுமுன் வாகனத்தைத் துடைக்க முற்படும்போது 'அப்பா நான் துடைக்கிறேனே" என்று முன் வரலாம். காய்கறிக்காரியின் கூடையை இற‌க்கி வைக்க ஒரு கை கொடுக்கலாம். நமக்காக வேலை செய்து அச‌ந்து போகிறவர்களிடம் ஒரு விரிந்த புன்சிரிப்பு, ஒரு தம்ளர் மோர் கொடுக்கலாம். சாலையோரம் வழி கேட்பவர்களிடம் சுருக்கமான அசட்டையான பதில் தராமல் விரிவாய் புன்னகையுடன் வழி சொல்லலாம். இப்படி சின்னச் சின்ன உதவிகளை பிறருக்கு வாழ்க்கையின் வழி நெடுக செய்து கொண்டே போகலாம்.



ஒரு பழைய அனுபவம் நினைவுக்கு வருகிறது. பல வருடங்கள் முன்பு நடந்தது இது. வாசலின் முன் இருந்த சிறு கால்வாய் ஓரம் யாரோ ஒருவர் வலிப்பு வந்து துடித்துக்கொன்டிருந்தார். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொன்டிருந்தவர்கள், அந்த வழியே நகர்ந்து கொண்டிருந்தவர்கள் என்று பலர் இருந்தார்கள். நான் என் சகோதரி மகனை அழைத்து அவரை ஓரமாக நகர்த்தி உட்கார வைத்து, ஒரு இரும்புக்கம்பியை கையில் கொடுத்து பிடித்துக்கொள்ள‌ச் சொன்னேன். சிறிது நேரத்தில் வலிப்பு நின்று நுரை தள்ளுவதும் நின்றது. ராமநாதபுரத்திலிருந்து வேலை தேடி வந்ததாயும் வந்த இடத்தில் கையில் காசில்லாமல் உண்ணுவதற்கு வழியில்லாமல் அலைந்ததால் தன் வலிப்பு நோய் மீன்டும் வந்து தாக்கி விட்டதாயும் சொன்ன அவரை வீட்டினுள் அழைத்து பின்பக்கமாய் சென்று குளிக்கச் சொன்னோம். மறைந்த என் சகோதரி கணவரின் உடைகள் தந்து அணிந்து கொள்ள‌ச் சொன்னோம். வயிறார சாப்பாடு போட்டு, திரும்ப ஊருக்குச் செல்ல கையில் பணமும் கொடுத்தோம். கை கூப்பிய அவரின் கலங்கிய கண்களில் தெரிந்த நன்றியை என்னால் 25 வருடங்களுக்குப்பின்பும் மறக்க முடியவில்லை.

தக்க சமயத்தில் ஒருத்தருக்கு வலியப்போய் உதவி செய்யும்போது அந்த நபருக்கு அது எத்தனை ஆறுதலாக இருக்கும் என்பது அனுபவத்தில் உணரும்போது மட்டுமே தெரியும். 'தெய்வம் மாதிரி வந்து உதவினீர்கள்' என்று அவர்கள் வாய் நிறைய வாழ்த்தும்போது ஆத்ம திருப்தி என்பது என்னவென்று உங்களுக்கு புரியும்.



ஒரு ஆங்கில பத்திரிக்கையில் ஒருவர்  தினமும் யாரைப்பார்த்தாலும் Good day என்று சொல்வதையும், யாரிடம் பேசினாலும் 'உங்களிடம் பேசியது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது' என்று சொல்வதையும் பிடிவாதமான வழக்கமாக வைத்துக்கொன்டிருந்தாராம். இந்த மாதிரி சொல்வது மனிதர்களுக்கு எத்தனை இதமளிக்கும் என்பது உங்களுக்கு புரிந்தால் சங்கிலி போல என்னைத் தொட்ருங்கள் என்று எழுதியிருந்தாராம்.

இந்த வார்த்தைகள் எத்தனை சத்தியாமானது என்பதை மனதளவில் உணர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் இதைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அனுபவத்தில் இந்த சந்தோஷம் நமக்கு கிடைக்கும் போது அது எத்தனை ஆத்ம திருப்தி கொடுக்கும் என்பதை வாழ்க்கையில் பல சமயங்களில் உண்ர்ந்திருக்கிறேன்.
சென்ற மாதம் துபாயில் ஒரு ஒரு பெரிய வணிக வளாகத்தை சுற்றிப்பார்த்து விட்டு லிஃப்ட்டிற்காகக் காத்து நின்றோம் நானும் என் கணவரும். முதல் நாள் தான் எங்களின் நாற்பதாவது திருமண நாளை சிறப்பாக எங்களின் மகனும் மருமகளும் பேரனும் கொன்டாடியிருந்தார்கள். அருகில் வந்து நின்ற ஒரு வட இந்திய பெண்மணியின் ஆறடிக்கு மேலான உயரத்தையும் அசாத்தியமான பருமனையும் பார்த்துக்கொண்டே லிஃப்ட் உள்ளே நுழைந்தேன். உடனேயே அந்தப் பெண் என்னிடம் ' உங்களுக்குத் திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகின்றன?' என்று கேட்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாகிப்போய் விட்டது. ' ஏன் கேட்கிறீர்கள்? நேற்று தான் எங்களின் நாற்பதாவது திருமண நாளைக்கொண்டாடினோம்' என்றேன். அதற்கு அந்தப்பெண் ' உங்கள் இருவரையும் பார்க்கப் பார்க்க Made for each other என்று தோன்றியது. அதனால் தான் கேட்டேன். உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!!' என்று சொல்லி முடிக்கும்போது லிஃப்ட் தரைத்தளத்தில் வந்து நிற்க, புன்னகையுடன் அந்தப்பெண் வெளியே சென்று விட்டது. நான் ஒரு நிமிடம் அசந்து போனேன். வெளி நாட்டினர் இலட்சக்கணக்காக சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில், யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் திடீரென்று தோன்றி நல்ல வார்த்தைகளும் வாழ்த்தும் சொன்னது அதிகமான இதத்தையும் மகிழ்ச்சியையும் மனதில் நிறைய வைத்தது. ஒரு நல்ல வாக்கிற்கு எத்தனை வலிமை இருக்கிறது!!

இது போல நாம் ஒருவருக்கு அவர் எதிர்பாராத போது உதவுகையில், நல்ல வாத்தைகள் சொல்கையில் மனித சமுதாயத்தின்மீது அவருக்கு ஒரு அசாத்திய பிடிப்பும் நம்பிக்கையும் நேசமும் அவரைத் தொற்றிக்கொள்ளும். இது சங்கிலித்தொடராக மாறும். இக்கட்டு, அவசர உதவி என்றில்லை, நம் வீட்டிலேயே சின்னச் சின்ன உதவிகளை நம் உற்றவர்களுக்கு செய்து பாருங்கள், அது தொற்று வியாதி போல உங்களைப்பிடித்துக்கொள்ள்ளும்.



அடிப்படையில் நாம் எல்லோரும் நல்லெண்ணம் கொண்டவர்கள் தான். ஆனால் யோசித்து, கணக்கு பார்த்து செயல்படத் துவங்கும்போது கெட்ட எண்ணங்கள் ஒரேயடியாக அமுக்கி விடுகின்றன. இது மாதிரி உந்துதல்கள் மட்டும் தான் நல்லெண்ணங்களை தூக்கி விடுகின்றன.

ஒருவரைப்பார்த்து சிரிப்பதைக்கூட இப்போது ஒரு பெரிய உதவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மனதையும் முகத்தையும் கல்லாக வைத்திருந்தால் தான் மதிப்பு என்று பலர் நினைக்கிறோம். எங்கே சிரித்துப் பேசினால் உதவி கோரி வந்து விடுவார்களோ என்ற பயம் வேறு! பக்க்த்து வீட்டின் கதவு திறந்தால் நம் வீட்டின் கதவு அடைத்து விடுகிறது.

ரொம்ப ரொம்ப சின்ன உதவிகளை அவசரத்திற்கு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு அதன் பின் அதுவே பழக்கமாகி விடும். அதன் பின் எத்தனை நண்பர்கள் உங்களுக்குக் கிடைக்கிறார்கள் என்று பாருங்கள்! பிரமித்துப்போவீர்கள்!! உதவும் மனப்பான்மை நம்மில் வளர வித்திடுங்கள்!!

படங்கள் உதவி: கூகிள்

Sunday 23 November 2014

குளோபல் வில்லேஜ் கண்காட்சி!!!

 
இங்கே, துபாயில் வருடா வருடம் குளோபல் வில்லேஜ் என்ற அரங்கத்தினுள் பல நாடுகள் தங்கள் பொருட்களை வைத்து கண்காட்சி நடத்துகின்றன. இந்த கண்காட்சி அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நடக்கும். இந்தியா மற்றும் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் இந்தக் கண்காட்சிக்கு  வந்த வண்ணம் இருப்பார்கள். இந்தியா உள்பட பல நாடுகளில் விமான பயணச்சேவை செய்யும் நிறுவனங்கள் விமானப் பயணச்சீட்டு, விசா உள்பட எல்லாமே மிகக்குறைந்த விலையில் தரும்.
அரங்கத்தினுள் தின்பண்டங்கள், பழங்கள், உணவிற்கான தனி ஸ்டால்கள் அங்கங்கே அமைந்திருக்கும். கூடவே அங்கங்கே சுத்தமும் மிக அழகுமாய் கழிப்பறைகள்..
நான் எப்போதுமே இந்தக் கண்காட்சியைப்பார்க்கத் தவறுவதிலை. காரணம் ஒவ்வொரு நாடும் அதன் அரங்கத்தை அத்தனை அழகாய் அமைத்திருக்கும்.இந்த முறையும் சென்று ரசித்து வந்தேன். ஆனால் நேரமின்மையால் அனைத்து நாடுகளையும் பார்த்து ரசிக்க முடியவில்லை. ரசித்தவரை சில புகைப்படங்கள் உங்களுக்காக......


இரான் அரங்கம்
கம்போடியா அரங்கம்
கம்போடியா நாட்டுப்பெண்ணின் அலங்காரம்! கூட நின்று போட்டோ எடுக்க எல்லோருக்கும் அவசரம்!
சிங்கப்பூர் மலேஷியா அரங்கம்

முகப்பு நுழைவாயில் பகல் நேரத்தில்!
முகப்பு நுழைவாயில் இரவு நேரத்தில்!
ஐக்கிய அரபுக்குடியரசு அரங்கம்
பாகிஸ்தான் அரங்கம்
குவைத் அரங்கம்
இடையிலே போகும் சிறு இரயில்!
பின்னணியில் அரங்கங்களுடன் ஒரு வித்தியாசமான கோணம்!

 
 

Thursday 13 November 2014

முத்துக்குவியல் -32!!

தகவல் முத்து:

காஸ்  சிலிண்டருக்கும் எக்ஸ்பைரி டேட் உண்டு. சிலிண்டரின் மேல் வ்ட்டமான கைப்பிடியைத்தாங்கிக்கொன்டிருக்கும் மூன்று பட்டியான கம்பிகளில் தான் நம் காஸ் சிலிண்டரின் எக்ஸ்பைரி டேட் போடப்பட்டிருக்கும். ஒரு வருடம் நான்கு காலாண்டுகளாய் பிரிக்கப்பட்டு அதற்கு ஒரு குறியீடும் இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரை A என்றும் ஏப்ரல் முதல் ஜுன் வரை B என்றும் ஜுலை முதல் செப்டம்பர் வரை C என்றும் D அக்டோபர் முதல் டிசம்பர் வரை என்றும் குறிப்பிடப்படுகிறது. உதாரண்த்துக்கு காஸ் சிலிண்டரில் A 14 என்று இருந்தால் அந்த காஸ் சிலிண்டரை 2014ம் வருடம் மார்ச் வரை தான் உபயோகப்படுத்த முடியும் என்று அர்த்தம். காஸ் சிலிண்டர் வாங்கும்போது இதையும் கவனித்து வாங்க வேன்டும் என்பது முக்கியம்.

இலக்கிய முத்து:

கீரனின் சொற்பொழிவிலிருந்து:
வாழை, தென்னை, பனை எல்லாமே அவைகளாகவே மட்டையையும் ஓலையும் கொடுக்கும். ஈச்ச மரங்கள் மட்டும் அவைகளாகவே மட்டையையோ, ஒல்லையையோ தராது. அரிவாளைத்தூக்கினால் தான் மட்டையைக் கொடுக்கும். அதுபோல, கஞ்சர்கள் நல்ல காரியத்திற்கு பண உதவி செய்ய மாட்டார்கள். அரிவாளைத்தூக்கும் போக்கிரிகளுக்குத்தான் பணத்தை கொடுப்பார்கள்.

அசத்தல் முத்து:

எண்ணங்கள் பற்றி கவனமாக இருங்கள்
அவை வார்த்தைகளாக உருவாகுகின்றன.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள்
அவை செயலாக உருப்பெறுகின்றன!
செயல்களில் கவனமாக இருங்கள்
அவை பழக்கமாக உருவாகுகின்றன!
பழக்கங்களில் கவனமாக இருங்கள்
அவை ஒழுக்கமாக உயர்வு பெருகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள்!
அது தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகின்றன!!


சமையல் முத்து:

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, ரோஸ்ட் செய்ததற்கான அழகிய நிறம் வர, வாணலியில் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் சீனி போடவும். காயும் எண்ணெயில் சீனி உருகி, கரைந்து பழுப்பு நிறமாகி நுரைத்து புகைய ஆரம்பிக்கும். இது தான் ச்ரியான பதம். உட்ன்டியாக உருளைக்கிழங்கு வறுவல் செய்ய ஆரம்பிக்கலாம். சீனி போட்டத்தையே கண்டு பிடிக்க முடியாது என்பதோடு, சீக்கிரம் அழகிய தோற்றம் வந்து விடும்.

மருத்துவ முத்து:

திடீரென்று வயிற்றின் இடது புறம் சூட்டு வலி ஏற்பட்டால் 1 ஸ்பூன் சீரகம், சிறிது கல் உப்பு இரண்டையும் வாணலியில் போட்டு வறுத்து நன்றாக வெடித்து ஓரளவு கருகியதும் எடுத்து அம்மியில் பொடித்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனேயே சூட்டு வலி மறையும்.

ரசித்த முத்து:

இது அவ்வையார், மனிதன் தன் வயிற்றை விளித்துப் பாடுவது போல அமைந்த பாடல்.
"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது."

மனிதன் தன் நாக்கைக்கட்டுப்படுத்தாமல் செய்யும் தவறுக்கு எதற்கு தன் வயிறை குறை சொல்ல வேன்டும் என்று நினைத்த ரமண மகரிஷி, வயிறு மனிதனை நோக்கிப் புலம்புவது போல பாடலை மாற்றிப் பாடினார்.
'' ஒரு நாழிகை வயிறு எற்கு ஓய்வு ஈயாய் நாளும்
  ஒரு நாழிகை உண்பது ஓயாய்
  ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும்பை கூர் என் உயிரே
  உன்னோடு வாழ்தல் அரிது''

பாடலின் பொருள் இதுதான்:
''மனிதனே! வயிறாகிய எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை. ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. ஒரு நாளும் என் துன்பம் உனக்கு தெரிவதில்லை. எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே! உன்னோடு வாழ்தல் அரிது.''
அவ்வையார் எழுதிய் பாடலின் பொருளை விடவும் ரமண மகரிஷி எழுதியது தானே அர்த்தம் மிகுந்திருக்கிறது?

Thursday 30 October 2014

கான்ஸருக்கு ஒரு தீர்வு!

கொடிய நோய்கள் முதல் சாதாரண உடல் நலக்குறைவுகள் வரை தீர்வுகள் கிடைத்து நலமடைந்தவர்களின் அனுபவங்களை எங்கு கேட்டாலும் அல்லது எந்த புத்தகத்தில் படித்தாலும் அவற்றினை இங்கே மருத்துவ முத்து என்ற தலைப்பில் நான் அவ்வப்போது அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதி வருகிறேன். அதன் தொடர்ச்சி தான் இந்த க்ட்டுரையும்!

ஒரு மாத இதழில் கான்ஸர் வந்து அவதிப்பட்ட தன் தாய்மாமனின் கதையை ஒரு சகோதரி எழுதியிருந்தார். முழங்கையில் கட்டிகள் வந்து, அவற்றை சாதாரண கட்டிகள் என்று நினைத்திருக்க, மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்ற போது அவை கான்ஸர் கட்டிகள் என்றும் உடலுக்குள்ளும் ஆங்காங்கே சிறு சிறு கட்டிகள் என்று பரவி, மூன்றாவது ஸ்டேஜிற்கு அவர் உடல் நிலை சென்று விட்டது என்று தெரிய வந்தபோது, குடும்பமே நிலை குலைந்து விட்டது. கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தாலும் அவர் 6 மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை தான் உயிருடனிருக்கமுடியும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

இந்த நிலையில் நண்பரொருவர், அவருடைய நண்பருக்கு நீண்ட நாட்கள் பக்கவாதத்தை கர்நாடகாவில் பத்ராவதியிலுள்ள ஒரு ஆசிரமத்தில் ஆயுர்வேத சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்தி விட்டதாகவுச் சொல்லி இவருக்கும் அங்கு சென்று சிகிச்சை தர ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார். மனமொடிந்து இருந்த நிலையில் யாருக்குமே நம்பிக்கை இல்லாது போனாலும் 'இதையும் முயன்று தான் பார்க்கலாமே' என்ற நினைப்பில் இவரின் தாய்மாமன் அங்கே அழைத்து செல்லப்பட்டார்.

கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்திலுள்ள பத்ராவதியில் 'ஸ்ரீசிவசுப்ரமண்யசாமி' என்ற பெயரில் இந்த ஆசிரமம் இயங்கி வருகிறது. பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட ஏழு மணி நேர பிரயாணம். நாள் பட்ட பல நோய்களுக்கு சிகிச்சை தருகிறார்கள்.

அங்குள்ல ஸ்வாமிஜி நம் விபரங்கள், மருத்துவ ரிப்போர்ட்கள், ஸ்கான்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து பார்த்து விட்டு, மருந்துகள் தருகிறாராம். சில நோய்களுக்கு அங்கேயே தங்கச் சொல்கிறார்கள். அப்படி தங்குபவர்களுக்கு மருந்துகளுடன் மருத்துவ குணமுள்ள உணவுகளும் தருகிறார்களாம். ஒரு ஊசியின் முனையால் எடுத்து சாப்பிடக்கூடிய மருந்துகளும் இருக்கின்றதாம்.

சகோதரியின் தாய்மாமன் இங்கே சேர்க்கப்பட்ட ஒரு மாதத்தில் உடலில் தெம்பு வந்ததுடன் நன்கு சாப்பிடவும் ஆரம்பித்திருக்கிறார். மேலும் இரண்டு மாத சிகிச்சைக்குப்பிறகு அவரை அழைத்த ஸ்வாமிஜி' இனி உங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. சந்தேகமிருந்தால் ஸ்கான் எடுத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினாராம்.. இது நடந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. இவரது தாய்மாமன் இப்போதும் பூரண நலத்துடன் இருப்பதாக அந்த சகோதரி எழுதி இந்த ஆசிரமத்து விலாசமும் கொடுத்திருக்கிறார்.
இங்கே செல்வதானால் இரு நாட்களுக்கு முன்பேயே ஃபோன் செய்து அனுமதி பெற்றுக்கொள்ள‌ வேண்டும்.

இத்தனை அருமையான ஒரு மருத்துவத் தீர்வை சொன்னதற்கு அந்த சகோதரிக்கு இங்கே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

விலாசம்:

ஸ்ரீ சிவ‌சுப்ரமண்யசாமி ஆஸ்ரமம்,
டி.கே.ரோடு, பத்ராவதி 577301,
ஷிமோகா மாவட்டம், கர்நாடகா
தொலைபேசி: 08282 267206


Monday 20 October 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளிக்கு ஒரு இனிப்பு செய்முறையை எழுதலாம் என்று நினைத்தபோது, பழம்பெரும் குறிப்பு ஒன்று நினைவுக்கு வந்தது. அது தான் அவல் வெல்லப்புட்டு. பொதுவாய் சீனியை வைத்து செய்யப்படும் இனிப்புகளை விடவும் வெல்லம், பனங்கல்கண்டை சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகைகள் நல்லது. இதில் பருப்பு, தேங்காய் போன்ற சத்துள்ள‌ பொருள்களும் அட்ங்கியிருக்கின்றன. இனி அவல் புட்டு செய்முறையைப் பார்க்கலாம்.


அவல் புட்டு

தேவையான பொருள்கள்:

அவல் ஒரு கப்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
துவரம் பருப்பு அரை கப்
தேங்காய்த்துருவல் அரை கப்
வெல்லம் ஒன்றரை கப்
சிட்டிகை உப்பு
ஏலப்பொடி அரை ஸ்பூன்


செய்முறை:

அவலை வெறும் வாணலியில் சிறு தீயில் வறுக்கவும்.
அவல் இலேசாகப்பொரிய ஆரம்பித்ததும் இறக்கி ஆறவைத்து பொடிக்கவும்.
பருப்பை இலை இலையாக வேக வைக்கவும்.
அவல் மாவில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
பருப்பு வெந்த வெதுவெதுப்பான நீர் விட்டு பிசிறவும்.
அவலைப்பிடித்தால் உருட்டும் வடிவம், விட்டால் உதிரும் வண்ணம் இருக்க வேன்டும்.
இது தான் சரியான பதம்.
வெல்லத்தை அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டுக் காய்ச்சவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வடிகட்டவும்.
பாகை மறுபடியும் முதிர்ப்பாகு நிலை வரும்வரை காய்ச்சவும்.
சில சொட்டுக்கள் பாகை தண்ணீரில் ஊற்றி விரலால் எடுத்து உருட்டிப்பார்த்தால் மெழுகுப்பதம் வர வேன்டும்.
அந்த நிலையில் பாகை எடுத்து அவல் மாவில் ஊற்றி நன்கு கிள‌றவும்.
பின் தேங்காய்த்துருவ‌ல், ஏலப்பொடி, பருப்பு சேர்த்து கிள‌றவும்.
பின் அதை அப்படியே அமுக்கி வைத்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
அதன் பின் எடுத்து கிளறிப் பார்த்தால் புட்டு போல உதிர் உதிராய் வ‌ரும்.
இப்போது சுவை மிகுந்த அவல் புட்டு தயார்!





இனிப்புக்களுடனும் அகம‌கிழ்வுடனும் அனைவரும் தீபாவளியைக்கொண்டாடி மகிழ‌ என் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!

Friday 10 October 2014

அமுத மொழிகள்!!

சமீபத்தில் சுவாமி சிவானந்தர் சொன்ன சில அறிவுரைகளைப்படிக்க நேர்ந்தது. அவை எல்லாமே பொன்வரிகள் தான். மொத்தத்தில் எல்லா துன்பங்களுக்கும் மனம் தான் காரணம் என்கிறார். யோசனை செய்து பார்க்கையில் அது உண்மை தான் என்று நமக்கும் புரிகிறது. ஆனால் பல சமயங்களில் அறிவை பாசம், அன்பு, அக்கறை போன்ற உணர்வலைக‌ள் ஜெயித்து விடுகின்றன. அப்புறம் அல்லல்களுக்குக் கேட்பானேன்! இதோ அவர் சொன்ன சில அறிவுரைகள்! படித்து ரசியுங்கள்!

மன அமைதி பெற ஸ்ரீ சுவாமி சிவானந்தர் சொன்ன அறிவுரைகள்:

நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் செய்வது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் ஏன் அல்லலுற வேண்டும்?
 
யாரையும் எதையும் குறை கூறாதீர்கள். பிறருக்குத்தீர்ப்பளிக்கும் அதிகாரம் நமக்கில்லை. உங்கள் மன அமைதியைப்பாதுகாக்க உங்கள் சொந்த வேலையில் கவ‌னம் செலுத்தினால் மட்டும் போதும்.

பயனுள்ள‌ நன்மை பயக்கும் விஷயத்தை செய்ய நாட்கணக்கில் யோசிக்காதீர்கள். அதிக யோசனை இறுதியில் நல்ல காரியங்களை செய்ய விடாமலேயே தடுத்துவிடும்.

ஆக்கப்பூர்வமான காரியங்களில் இடைவெளி ஏற்படுவது கூட, சில கவனக்குறைவான வினாடிகள் கூட வாழ்வில் உங்களைக் கீழே தள்ளி விடும். நேரத்தைப் பொன்போல பாதுகாத்து அதை மிகவும் பயனுள்ள விதத்தில் செலவழியுங்கள்.

நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்க வேன்டாம். மானசீக பிரார்த்தனைகள், நல்ல நூல்களைப்படிப்பதில் செலவழியுங்கள். எல்லா தொல்லைகளும் மனதில் தான் ஆரம்பிக்கிறது. கடுஞ்சொற்களும் தீய செயல்களும் மனதில் தான் உதிக்கின்றன. எனவே மனதை சுத்தமாக வைத்திருங்கள். வாழ்க்கையென்னும் நதி ஸ்படிகம் போல தூய்மையாகப் பாயும்.
 
உங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள். பிறகு பிச்சைக்காரனைப்போல திரியாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல வாழுங்கள்.

காரணத்துடன் மட்டுமே பேசுங்கள். எல்லாவிதமான தேவையற்ற‌ பேச்சையும் தவிருங்கள். அளந்தே பேசுங்கள். களங்கமற்ற‌ நல்ல நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ள‌ப்பட்டு பிரிவை உண்டாக்குகின்றன. 
 
உங்களிடம் கேட்கப்பட்டாலன்றி எவருக்கும் புத்திமதி சொல்லப்போகாதீர்கள்.

எப்போதும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். அது எப்போதுமே உருப்படியான விளைவுகளைத்தராது. மற்ற‌வர்களைப் புண்படுத்துவதுடன் சில சமயங்களில் உறவுகளிடையே தேவையற்ற‌ விவாதம் பிரிவையே உண்டாக்கி விடுகிறது.
 

Tuesday 30 September 2014

முத்துக்குவியல்-31!!

மருத்துவ முத்து:

என் சினேகிதி ஒருவர் என் வீட்டில் தங்கும்போதெல்லாம் வெந்நீரை அடிக்கடி எடுத்து சுடச்சுட, ரசித்து ரசித்து குடிப்பார்.  நான் அதைப்பார்த்து சிரிக்கும்போதெல்லாம் வெந்நீரின் மகிமைகளை எடுத்துச் சொல்வார். அவர் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதானென்பது எனக்கும் தெரியும். என்றாலும் இப்படி ரசித்து ரசித்து குடிப்பது அபூர்வம் என்று நினைத்துக்கொள்வேன். இதோ, உங்களுக்கும் வெந்நீரின் நற்பயன்களை எழுதி விட்டேன்!!
வெந்நீரின் நன்மைகள்:
எண்ணெய் பலகாரங்கள், இனிப்பு சாப்பிட்டால் சில சமயங்களில் நெஞ்சு கரிக்கும். அப்போது ஒரு தம்ளர் வெந்நீரை மெதுவாக குடித்தால் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய் விடும்.
காலையில் சரியாக மலம் கழிக்கவில்லையென்றால் வெந்நீரை குடியுங்கள். உடன் பயன் கிடைக்கும்.
உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனக்கல்கண்டு கலந்து குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய் கசப்பும் மறைந்து விடும்.
உடல் வலிக்கு நல்ல வெந்நீரில் குளித்து இந்த சுக்கு கலந்த வெந்நீரைக் குடித்து படுத்தால் நன்கு தூக்கம் வருவதுடன் வலியும் மறைந்து விடும்.
அதிகம் தூரம் அலைந்ததனால் ஏற்படும் கால்வலிக்கும் வென்னீர் தான் தீர்வு. பெரிய பிளாஸ்டிக் வாளியில் பொறுக்குமளவு சூடான வெந்நீர் கொட்டி உப்புக்கல் போட்டு அதில் கொஞ்ச நேரம் பாதங்களை வைத்து எடுங்கள்.
காலில் இருக்கும் அழுக்கைப்போக்க வெந்ந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதங்களை வைத்து எடுங்கள்.
மூக்கில் அடைப்பு ஏற்பட்டால் வெந்நீரில் சில சொட்டுக்கள் நீலகிரித்தைலம் விட்டு முகர்ந்தால் தீர்வு கிடைக்கும்.
வெய்யிலில் அலைந்து விட்டு வந்து உடனே ஐஸ் தண்ணீர் அருந்துவதைக்காட்டிலும் சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது தான் தாகம் தீர்க்கும் நல்ல வழி.

குறிப்பு முத்து:

சாதத்தில் எறும்புகள் வந்து விட்டால்:
ஒரு சிறு கிண்ணத்தில் சீனியைப்போட்டு சாதத்தின் மீது வைத்தால் எறும்புகள் சாதத்தை விட்டு நக்ர்ந்து சீனியை மொய்க்க ஆரம்பித்து விடும்.

வருத்தப்பட வைத்த முத்து:

இரு மாதங்களுக்கு முன் நடந்தது இது. சென்னை ஏர்ப்போர்ட்டில் எனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறும்போது அந்த சம்பவம் நடந்தது. எனக்கு முன்னால் தனது உடமைகளுடன் சென்றவர் ஒரு சிகிரெட்டை எடுத்து பற்ற‌ வைத்துக்கொண்டு தீக்குச்சியை தூக்கி எறிந்தார். சற்று அருகில் நின்று கொன்டிருந்த போலீஸ்காரர் உடனே அருகில் வந்தார். ' ஏர்ப்போர்ட் உள்ளே சிகிரெட் பிடிக்கக்கூடாதென்று உனக்குத் தெரியாதா?' என்று கேட்டதும் உடனே சிகிரெட் பிடித்தவர் அதை அணைத்தார். போலீஸ்காரர் அதற்கப்புறமும்  விடவில்லை. ' நீ தூக்கியெறிந்த தீக்குச்சியை எடுத்து இதோ இந்தக்குப்பைக்கூடையில் போடு' என்றார். அவரும் வாயைத்திறக்காமல் கீழே கிடந்த தீக்குச்சியை எடுத்து குப்பைக்கூடையில் போட்ட பிறகு தான் அந்த போலீஸ்காரர் அவரை விட்டார். பார்த்துக்கொண்டிருந்த எனக்குத்தான் மிகவும் வருத்தமாக இருந்தது. வெளி நாட்டில் வசிக்கிறோம். அங்குள்ள சட்ட திட்டங்களை மதிக்கிறோம். அவற்றை மீறுவதற்கு பயப்படுகிறோம். பயந்து கொண்டாவது அவற்றைப் பின்பற்றுகிறோம். அங்குள்ள பொது இடங்களில் குப்பைகள் போடாமல் அதற்கென்றே வைத்திருக்கும் குப்பைத்தொட்டியில் போடுகிறோம். இங்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம் நாடு என்பதாலா? அல்லது குப்பைகள் எல்லா இடங்களிலும் இல்லாமலேயாவா இருக்கிறது என்ற அலட்சியத்தாலா?










 









 

Tuesday 23 September 2014

அவ்வையார்!!!

திருவள்ளுவருக்கு நிகராக கருதப்படுபவர் ஒளவையார். 'ஞானக் குறள்கள்' பலவற்றை எழுதியதுடன் அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் போன்ற அழியா முத்துக்களைத்தந்தவர் அவர்.
உண்மையில் நாடு அறிந்த ஒளவையார் மூவர். சமய ஒளவையார் இருவர்.
சங்க கால அவ்வையார் ஒருவர். இவர் பாலையைப்பாடியவர். அதியமானுடன் வாழ்ந்தவர். தகடூர் மன்னன் அதியமானிடம் பேரன்பு கொண்டவர். நீண்ட நாள் வாழும் வகையில் தான் பெற்ற நெல்லிக்கனியை தான் உண்ணாது அவ்வையார் நீண்ட நாள் வாழ வேன்டும் என்று அதியமான் தன் நண்பர் அவையாருக்குக்கொடுத்ததாக வரலாறு. இந்த நெல்லிக்கனியின் பெருமை அறியாது உண்டு, அதன் பின் அதன் பெருமை அறிந்து, அதிய‌மானைப்புகழ்ந்து அவ்வையார் பாடிய‌ பாடல் புறநானூற்றில் இடம் பெற்றிருக்கின்றது. இவர் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைப் பாடியுள்ளார். இவை சங்க கால இலக்கியமான எட்டுத்தொகையில் அடங்குகின்றன. போரொன்று நடவாதிருக்க, அதியமானின் விருப்பதிற்கிண‌ங்கி தொண்டைமானிடம் தூது சென்றவர். "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்'
என்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான்
பக்தி நூல்களில் முதல் நூலாகக் கருதப்படும் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார்.
சமய அவ்வையார் சோழ நாட்டினர் என்றாலும் பாண்டிய நாடு, சேர நாடு என்று எல்லா நாட்டினரும் வணங்கப்பட்டவராக  இருந்தார். மூதுரை, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, நல்வழி போன்ற பல நூல்களை எழுதியவர்.



சங்க கால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். இரண்டாவது அவ்வையார் பக்தர்களுடன் வாழ்ந்தவர். மூன்றாவது அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்து குழந்தைகளுக்காக பல நூல்களை இயற்றியவர். நான்காவது அவ்வையார் தான் 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று முருகன் வினவிய கதையில் இடம் பெற்றவர். இவர் தனிப்பாடல்கள் பலவற்றை எழுதியவர்.
நம் தமிழகத்தில் அவ்வைக்கு பல இடங்களில் கோவில்கள் உள்ளன. தஞ்சையை அடுத்துள்ள‌ திருவையாற்றில் உள்ள‌ அவ்வை கோவில் மிகவும் பிரசித்தமானது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துனை வேந்தர் அவ்வை நடராசன் அவர்கள் தலைமையில் அவ்வை கோட்டம் நிர்மாணித்து அதனுள் அவ்வை கோவிலையும் கட்டினர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள‌ இந்த ஆலயத்தில் கருவறையும் விமானமும் இணைந்து 15 அடியில் கம்பீரமாக நிற்கிறது. கருவறையில் இரண்டே காலடி உயரத்தில் வலது கையில் செங்கோலும் இடது கையில் ஓலைச்சுவடியும் கொண்டு கம்பீரமாக அவ்வையார் நிற்கிறார்.
நெல்லிக்கனி பிரசாதத்துடன் தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது.
அவ்வையை வணங்கினால் படிப்பு வரும், திருமண‌ம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் உலவுவதால் பெண்கள் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் திரண்டு வருகிறது.

தமிழகத்தில் நாகர்கோவில் நெல்லை சாலையில் முப்பந்தல் என்னும் இடத்திலும் நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள பூதப்பாண்டியிலும் நாகை மாவட்டம் துளசியாப்பட்டிணத்திலும் அவ்வை கோவில்கள் அமைந்துள்ள‌ன. குமரி மாவட்டத்தில் ஒரே தாலுகாவில் மூன்று கோயில்கள் இருக்கின்றன. இங்குள்ள தோவாளை தாலுகாவில் ஆண், பெண் பாகுபாடின்றிப் பலரது பெயரும்கூட அவ்வையார்தான்! அவ்வை மூதாட்டியை தெய்வமாக்கி, நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் நாஞ்சில் நாட்டில் இருந்து வருகிறது. இதற்கு அவ்வை நோன்பு என்று பெயர். ஆரல்வாய்மொழி - பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழாக்குடியை அடுத்து ஒரு அவ்வையார் அம்மன் கோயில் உள்ளது. இதற்கு நெல்லியடி அவ்வை என்று பெயர். அழகியபாண்டியபுரம் பக்கத்தில் உள்ள குறத்தியறை மலைச்சரிவில் உள்ள குடைவரைக் கோயிலையும் அந்தச் சுற்றுவட்டார மக்கள் அவ்வையார் அம்மன் கோயில் என்றே சொல்கிறார்கள். இந்தச் கோயில்களில் எல்லாம் ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூடி, கூழும் கொழுக்கட்டையும் படைத்து வழிபடுவார்கள்.

தமிழுக்குத்தொண்டு செய்த அவ்வையாரை நம் பெண்கள் இன்னும் தெய்வமாகப்பாவித்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

Thursday 11 September 2014

நார்த்தங்காயும் பல்வலியும்!!

பொதுவாய் கசப்புத்தன்மை சிறிது கொண்ட நார்த்தங்காய் எனக்குப் பிடிக்கும். நார்த்தங்காயில் உப்பு ஊறுகாய், மிளகாய்த்தூள் போட்ட ஊறுகாய் செய்வதுண்டு. நார்த்தங்காயை சற்று பெரிய துன்டுகளாய் அரிந்து வேக வைத்து, மிளகாய் அரைத்துப்போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி உப்பும் சேர்த்து செய்யும் ஊறுகாய் அத்தனை ருசியாக இருக்கும். தயிர் சாதத்திற்கு அமிர்தமாய் ருசிக்கும். இதைத்தவிர நார்த்தங்காய் ஜூஸ் எடுத்து, சிறிது எலுமிச்சை சாறும் வெல்லமும் அல்லது சீனியும் கலந்து குடிப்பது வழக்கம். எலுமிச்சை சாதம் போல நார்த்தங்காய் சாதமும் நன்றாக இருக்கும்.



மற்ற‌படி, அதன் மருத்துவப்பயன்கள் சிலவற்றையும் அறிந்திருக்கிறேன். ஆனால் ரொம்பவும் வித்தியாசமாக ஒரு பலனை சமீபத்தில் தான் அறிந்தேன்.

20 வருடங்களுக்கு முன் வெளி வந்த ஒரு பழைய புத்தகத் தொகுப்பில்  படிக்க நேர்ந்த ஒரு மருத்துவக்குறிப்பு இது. பல்வலிக்கு பல மருத்துவக்குறிப்புகள் படித்திருக்கிறேன். இது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

நகரத்தில் வாழ்ந்த ஒரு பெண்மணி, கிராமத்திற்குச் சென்றபோது பல்வலி வர, அங்குள்ள‌வர்கள் சொன்ன கை வைத்தியம் இது. உடனேயே வலியும் போய் பற்களும்  வலியில்லாமல் வலுவுடன் இருப்பதை உணர்ந்து அடுத்தவர்களுக்கும் பயன்பட எழுதிய விபரம் இது.

முன்பெல்லாம் உப்பு நார்த்தங்காய் போட்டு வீட்டில் பீங்கான் ஜாடியில் ப்த்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். வருடம் முழுவதும் கெடாமல் இருக்கும்.


பல் வலியின் போது, எந்தப் பல் வலிக்கிறதோ அந்த பல் முழுவதும் படுவது போல ஒரு உப்பு நார்த்தங்காய் துன்டை அமுக்கி வைத்துக்கொன்டு அப்படியே படுத்துறங்கி விடலாம். காலை வலி இருக்காது.காலை எழுந்ததும் வாய்க்கொப்பளித்து விட்டு உப்பு கலந்த வெதுவெதுப்பான வெந்நீரில் வாயைக்கொப்பளிக்க வேன்டும். இது போல 3 நாட்கள் செய்து வந்தால் நார்த்தையிலிருக்கும் உப்பும் கசப்பும் பல்வலிக்குக் காரணமான பூச்சிகளைக் கொன்று பற்களை முன்னை விட வலுவானதாக மாற்றி விடுகிறதாம்.

துபாயிலுள்ள என் உறவினருக்கு இந்த விஷயத்தைச் சொன்னேன். அடுத்த வாரமே அவர்கள் ஃபோன் செய்து, தனக்கு திடீரென்று பல்வலி வந்ததாகவும், இந்த வைத்தியத்தை செய்ததுமே பல்வலி காணாமல் போய்விட்டதாகச் சொன்னதும் எனக்கு ஏதோ அவார்ட் கிடைத்தது போல அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
உப்பு நார்த்தங்காய் செய்யும் விதம்:
நார்த்தங்காயை கழுவி துடைத்து, சுருள் சுருளாக நறுக்கவும். தனியாக வராமல் ஸ்பிரிங் போல் வரவேண்டும்.
கல் உப்பை சுருளுக்குள் திணித்து, 3 நாட்கள் அப்படியே ஜாடியில் போட்டு வேடு கட்டி வைக்கவும். தினமும் குலுக்கி மட்டும் விடவும்.
நான்காம் நாள் தண்ணீரிலிருந்து (உப்பு கரைந்து தண்ணீராக இருக்கும்) எடுத்து காயை மட்டும் வெய்யிலில் காய வைக்கவும்.
மாலையில் திரும்ப எடுத்து, அந்த தண்ணீருக்குள் போட்டு குலுக்கி வைக்கவும்.
இது போல் தண்ணீர் வற்றும் வரை செய்யவும்.
பிறகு வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும். மேலே உப்பு பூத்து விடும். அப்போது எடுத்து ஜாடியில் எடுத்து வைத்துக் கொண்டால் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.





நார்த்தங்காயின் மருத்துவ பலன்கள்:

இந்த ஊறுகாயில் ஒரு துண்டெடுத்து உப்பை நன்கு கழிவிய பின் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குண‌மாகும்.
நார்த்தங்காயை எந்த விதத்திலும் உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுத்தமாகும்.
பசியைத்தூன்டும்.
வாயுக்கோளாறை நீக்கும்.
அடிக்கடி ஏப்பம் வருவதுடன் இது சீரணமாக நெடு நேரமாகும். ஆனால் நார்த்தங்காயின் மருத்துவப்பலன்கள் அதிகம்.

புகைப்பட உதவி: கூகிள்

 

Monday 1 September 2014

முத்துக்குவியல்-30!!!

குறிப்பு முத்து:

அயர்ன் பாக்ஸில் பழுப்பு நிறக்கறை இருந்தால்:



ஈரத்துணி கொன்டு சோடா மாவை ஒத்தி எடுத்து அந்தக் கரையைத்துடைத்தால்  கறை முழுவதுமாக நீங்கி விடும்.

சிரிக்க வைத்த முத்து:

சமீபத்தில் படித்தது இது! எப்படியெல்லாம் யோசித்து எழுதி சிரிக்க வைக்கிறார்கள் என்று தோன்றினாலும் படித்ததும் புன்னகைக்க்காமல் இருக்க முடியவில்லை!! நீங்களும் படித்து ரசியுங்கள்!




நம்மோட ரெண்டு கண்களுக்கும் உள்ள உறவு உங்களுக்குத் தெரியுமா?
ரெண்டும் ஒண்ணை ஒண்ணு பாத்துக்காது.
ஆனால்
ரெண்டும் ஒன்றாகத்தான் பார்க்கும்.
ஒன்றாகத்தான் சிமிட்டும்.
ஒன்று சேர்ந்து தான் கண்ணீர் விடும்!ஒரேபக்கம் தான் பார்க்கும்.
ஒரே நேரம் தான் கண்கள் மூடித்தூங்கும்!
இரு கண்களுக்கும் உள்ள உறவு அந்த அளவு ஆழமாக வேரோடிய உறவு!
ஆனால்...
ஒரு பெண்ணைப்பார்த்தால் மட்டும் ஒண்ணு மட்டும் தான் கண்ணடிக்கும்.. மற்றது சும்மா இருக்கும்!
இதிலிருந்து ஒரு விஷயம் தெள்ளத்தெளிவா தெரியுது...

ஒரு பெண் நினைச்சா எந்த உறவையும் வெட்டி எறிஞ்சிட முடியும்!!


அபாய முத்து

:
சிகிரெட்டில் புற்று நோயை வரவழைக்கக்  கூடிய 43 காரணிகள் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது தற்போது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை காட்மியம், பூச்சிக்கொல்லி மருந்தான டி.பிடி தயாரிக்கப்பயன்படும் பென்சீன், கழிவறை சுத்தம் செய்யப்பயன்படும் அம்மோனியா, இறந்த உயிரினங்களை பாதுகாக்கப் பயன்படுகிற பார்மால்டிஹைடு, மற்றும் விஷ வாயுக்கள், காற்றை மாசுபடுத்தும் துகள்கள் போன்றவை உள்ளன!!

புகைப்பட முத்து:

நாங்கள் ஷார்ஜாவில் பல வருடங்களாக எங்கள் உண‌வகத்திற்காக காய்கறிகள் வாங்கிக்கொண்டிருக்கும் கடையிலிருந்து ஒரு விசேஷ நாளில் அதன் நிறுவனர் எங்கள் இல்லம் வந்து கொடுத்த பழ வகைகள் இவை!!

பழங்களுடன் என் கணவர்
வருத்தப்பட வைத்த முத்து:

சமீபத்தில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பேசிக்கொன்டிருந்த போது, பேச்சு இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் நடைமுறைகள், குழந்தைகளின் படிப்பு சுமைகள் பற்றி சரமாரியாய் அவரவர் தங்களின் அபிப்பிராயங்களை சொல்லிக்கொன்டிருந்தோம். பேச்சுக்கிடையே சமீப காலத்தில் ஒரு ஆசிரியை ஸ்கேலால் அடித்து ஒரு பையனுக்கு கண் பார்வை பிரச்சினை ஆனதைப்பற்றிய செய்தி விவாதமாக வந்தது. அப்போது அங்கு அமர்ந்திருந்த, அரசுப்பள்ளியில் பணி செய்கிற என் உறவுப்பெண்மணி  சொன்னார். ' மன அழுத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. நாங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் முன் அவர்களுக்கு கவுன்சிலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாடத்தில் கவனம் இல்லாத ஒரு மாணவனை தினமும் பார்க்க நேர்ந்தால் அவனை தனியே கூப்பிட்டு விசாரித்து, அவன் மனதிலுள்ள‌தை வெளியே வரவழைத்து, ஆறுதல் அளித்து, உற்சாகத்தை ஏற்படுத்தி அவனை பாடங்கள் படிப்பதில் உற்சாகத்துடன் செயல்படுத்தும்போது நாங்கள் களைப்படைந்து விடுகிறோம். நாங்களும் காலை 4 மணிக்கு எழுந்து சமைந்து, வீட்டில் பெரியவர்களை கவனித்து, எத்தனையோ கிலோ மீட்டர்கள் பயணித்து பள்ளிக்கு வருகிறோம். என் சினேகிதி ஒரு நாள் வகுப்பில் பாடம் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் எதற்கோ ஸ்கேலை எடுத்தாராம், உடனே ஒரு பையன் எழுந்து ' என்ன டீச்சர், ஜெயுலுக்கு போக ஆசையாக இருக்கிறதா?' என்று கேட்டானாம். இத்தைகைய மாணவர்களை எப்படி சமாளிப்பது?'  என்றார். எங்களுக்கு உடனேயே பதில் சொல்ல முடியவில்லை!!

மருத்துவ முத்து:

உடம்பில் தோன்றும் மருக்களை நீக்க:

கட்டிப்பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து அது பசை போல ஆனதும் தினமு அதை மருவில் தடவி வந்தால் சிறிது நாட்களில் அந்த மரு மறையும்.

Thursday 21 August 2014

சர்க்கரையுடன் நலமாக வாழ!!

சென்ற வருடம் என் கணவருக்கு மிகுந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதன் பின் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண நலமடைந்த விபரம் பற்றி இங்கே என் வலைத்தளத்தில் எழுதியிருந்தேன். அந்த ச்மயம் மன உளைச்சல் காரணமாக என் சர்க்கரையின் அளவு அதிகமாக ஏறத்தொடங்கியது. எந்த விதமான டயட்டிற்கும் மருந்துகளுக்கும் குறையவில்லை.

பொதுவாய் சர்க்கரை வியாதிக்கு ஆரம்ப நிலையில் மெட்ஃபோர்மின் மாத்திரைகள் குறைந்த அள‌வில் கொடுப்பார்கள். பின் சரியான டயட் பின்பற்றாமலிருந்தாலோ, மன உளைச்சல்கள், அளவு கடந்த கார்போஹைட்ரேட் உண‌வுகள் காரணமாகவோ இந்த மாத்திரையின் அளவுகள் அதிகரிக்கும். அதுவும் போதாமல் ஒரு கட்டத்தில் இந்த மெட்ஃபோர்மின் மாத்திரைகளுடன் வீரியம் மிக்க மருந்துகளைக் கலந்து மருத்துவர்கள் தருவார்கள். இவைகளும் பயன்படாத கட்டத்தில் இன்சுலின் தர வேன்டிய கட்டாயத்தில் நோயாளி இருப்பார். பொதுவான நடைமுறை இது தான்.

வெளிநாட்டிலும் தமிழ்நாட்டிலும் அலோபதி மருத்துவர்கள் மாற்றி மாற்றி கொடுத்த வீரியமம் மிக்க மருந்துகள் கூட‌ பலனளிக்காத நிலையில் சகோதரர் கரந்தை ஜெயக்குமார் எங்கள் சந்திப்பின்போது குறிப்பிட்ட ஒரு சித்த மருத்துவரிடம் சென்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.

இந்த மருத்துவரைப்பற்றி சகோதரர் ஜெயக்குமார் ஏற்கனவே தன் வலைத்தளத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். தன் இல்லத்தரசிக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட உடல் நலப்பிரச்சினைகளை இந்த மருத்துவர் சரி செய்த விதம் பற்றி எழுதியிருப்பதை கீழ்க்கண்ட இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

http://karanthaijayakumar.blogspot.com/2013/10/blog-post.html



சித்த மருத்துவர் தம்பையா அவர்கள் தஞ்சையில் அகத்தியர் இல்லத்தில் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருபவர். வடலூர் இராமலிங்க அடிகளாரின் பேரடியாராய் அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, நடத்தி வருபவர். இதைச்சுற்றி அகத்தியர் ஆலயம், இராமலிங்க அடிகளார் தியான மண்டபம் என அமைதி தவழும் இடங்களும் சுவர்களில் வரைந்திருக்கும் சித்தர்களின் பாடல்களும் நம் மனதிற்கு ஒரு இனம் புரியாத அமைதியினைக் கொடுக்கும்.

மதியம் நூறு முதல் 200 பேர்கள் வரை தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அருகில் உள்ள திலகர் திடலில் ஏழை எளியவருக்கு தினந்தோறும் அன்னதானம் செய்து அவர்களின் பசியாற்றி வருகிறார்.
மருத்துவர் தம்பையா அவர்களிடம் என் பிரச்சினையைச் சொன்னதும் என் கரத்தைப்பற்றி நாடி பிடித்து பார்த்த மருத்துவர் அவர்கள், ' சர்க்கரையை முழுவதும் குணப்படுத்த இயலாதென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உடலில் பரவியிருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி சுத்தம் செய்து விட்டாலே பாதி நோய்கள் மறைந்து விடும். அதைத்தான் உங்களுக்கு நான் செய்யப்போகிறேன்.' என்று கூறி மருந்துகள் கொடுத்தார்கள். கூடவே நான் வழக்கமாக எடுத்து வரும் வீரியம் மிக்க அலோபதி மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

கூடவே, பொதுவாய் சர்க்கரை உடலில் அதிகமாகும்போது அதற்காக சில குறிப்பிட்ட மெட்ஃபோர்மின் மருந்துகள் எடுத்துக்கொள்ள‌ நேரும்போது உடம்பில் வயிற்றில் அசிடிட்டியும் அதிகரிக்கிறது. அதனால் வாயு அதிகரிக்கிற‌து. அதன் காரணமாய் உணவில்  பாகல், சுண்டைக்காய், அகத்தி போன்ற கச‌ப்பான காய்களையும் பித்தம் உண்டாக்கும் பீர்க்கையையும் நீக்குமாறும் நாட்டுப்பழங்களை அறவே நீக்குமாறும் சொன்னார்கள்.
20 நாட்களுக்குப்பிறகு சர்க்கரையின் அளவு மெதுவாகக் குறையத்தொடங்கியது. அதன் பிறகு வீரியம் மிக்க அலோபதி மருந்துகள் ஒத்துக்கொள்ளாததால் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைக்குறைத்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அந்த மருந்துகளை முழுவதுமாக நிறுத்த வேண்டியதாயிற்று.  இப்போது சர்க்கரைக்கு ஆரம்ப காலத்தில் எடுத்துக்கொண்ட சாதாரண மெட்ஃபோர்மின் மாத்திரையே எடுத்துக்கொண்டிருக்கிறேன். முன்போல போதிய பழங்கள் சாப்பிட முடிவதோடு, மனதில் அமைதியும் நிறைய வந்து சேர்ந்திருக்கிறது.

ஒரு மருத்துவரிடம் நாம் போகும்போது நமது உடல்நலம் பற்றிய வேதனை, குழப்பம், வலி இவற்றுடன் தான் செல்கிறோம். நம் மனக்கவலையைப்போக்கி, மனதுக்கு தைரியம் கொடுத்து,  நம் சந்தேகங்கள் யாவற்றையும் தன் விளக்கங்களால் தீர்த்து, திரும்பி வரும்போது ஒரு புதிய நம்பிக்கையையும் மனதிற்குக் கொடுப்பது ஒரு சில சிறந்த மருத்துவர்களால் மட்டுமே முடியும். அந்த மாதிரி தன்மையுள்ள ஒரு மருத்துவரை திரு. தம்பையா அவர்களிடம் நான் காண‌ நேர்ந்தது வெகு நாட்களுக்குப்பிறகு மனதுக்கு மிகுந்த நிம்மதியையும் மன நிறைவையும் அளித்தது.

இந்த அனுபவத்திற்குப் பிறகு என் நண்பர்கள், உறவினர்கள் சிலரை மருத்துவர் தம்பையா அவர்களிட்ம் அனுப்பியிருக்கிறேன். அவர்களும் தங்களின் கடுமையான நோயின் தாக்குதல்களிலிருந்து விடுபடத் தொடங்குவதாக சொல்லுவது மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

இதற்காக மருத்துவர் தம்பையா அவர்களுக்கும் சகோதரர் ஜெயக்குமார் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்!!!

நான் அடைந்த நிம்மதியை பலவிதமான நோய்களின் தாக்குதலினால் வாடி நிற்கும் பலரும் அடைய வேண்டுமென்பதற்காகவே இங்கே என் பிரச்சினையையும் எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரை யாருக்கேனும் பயன்பட்டால் இந்தப் பதிவை எழுதியதற்கான பலன் கிடைத்ததென்று மகிழ்வேன்.

விலாசம்:
டாக்டர் தம்பையா,
அகத்தியர் இல்லம்,
ரத்தினவேல் நகர்,
மாதாக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்.
இந்த மாதாக்கோட்டை சாலை தஞ்சாவூரிலுள்ள பழைய ஹவுஸிங் யூனிட் அருகே குழந்தை யேசு கோவிலுக்கு எதிரே காவேரி நகருக்கென்று ஒரு சாலை பிரிந்து செல்லும். அந்த சாலையிலேயே பயணித்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அகத்தியர் இல்ல்ம் என்ற போர்டு இருக்கும். அதிலிருந்து சற்று உள்நோக்கி பயணிக்க வேண்டும்.
மருத்துவர் ஐயா ஞாயிறு தவிர மற்ற‌ கிழமைகளில் காலை நேரங்களில் மட்டுமே வைத்தியம் பார்க்கிறார். முன்கூட்டியே ஃபோன் செய்து விட்டு செல்வது நல்லது.






 

Monday 11 August 2014

நட்பெனும் தொடர்பதிவு!

சில மாதங்களுக்கு முன் அன்பு சகோதரிகள் கீதமஞ்சரி, இளமதி இருவரும் இந்தத் தொடர்பதிவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். தொடர் அலைச்சல்கள், வேலைச்சுமைகள் என்று இது வரை நேரம் கிடைக்காமல் இருந்தது. ஒரு வழியாக கிடைத்த சிறிது நேரத்தில் இந்தத் தொடர் பதிவிற்கான கேள்விகளுக்கான பதில்களை எழுதுகிறேன்.

1.உங்கள் 100 வது  பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

பிறரைச் சார்ந்து வாழ்வது மூப்பின்போது தவிர்க்க முடியாததாய் தொடர ஆரம்பிக்கிறது. புற வலிகள், தள்ளாமை இவற்றுடன் 100 வயது வரை வாழ்ந்திருக்க மிகுந்த மன பலம் வேண்டும். அந்த மன பலம் மனதுக்கு நெருங்கியவர்களின் அன்பினாலும் பரிவினாலும் சகிப்புத்தன்மையினாலும் மட்டுமே கிடைக்கும். அதனால் நூறாவது பிறந்த நாள் என்று ஒன்று வந்தால் அது என் மனதிற்கு இதம் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டுமே இருக்கும். பொருள்ளாதார வசதியும் இருந்தால் அவர்களுக்கு சிறந்த பரிசுகள் கொடுக்கும் நாளாகவும் அது அமையும்!!

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புறீர்கள்?

பிரியசகி சொன்னது போல மனித மனங்களை! மிகச் சாதாரணமானவராக நாம் நினைப்பவரிடம் பேரன்பு ஒளிந்திருப்பதும் நெருங்கியவராய் நாம் நினைப்பவரிடத்தில் துரோகம் ஒளிந்திருப்பதும் வாழ்க்கையின் ரகசியம். இதில் நுழைந்து மனித மனங்களைக் கற்க முயலும்போது தான் ரகசியம் கொஞ்சமாவது புரிபடுகிறது!!
ஓவியம், இசை, சமையல், தையல் மட்டுமே தெரியும். இன்னும் எத்தனைக் கலைகளை கற்க முடியுமோ அத்தனையையும் கற்க வேண்டும்!

3. கடைசியாக சிரித்தது எப்போ? எதற்காக?
  
 கடைசியக எத‌ற்குச் சிரித்தேனென்பது ஞாபகமில்லை.ஆனால் எப்போது நினைத்தாலும் என் பேரன் கேட்ட ஒரு கேள்வி என்னை சிரிக்க வைக்கும். குழந்தைகளுக்கு துக்கமோ, வலிகளோ, எதுவும் தெரியாதல்லவா? தெரிந்தவர் ஒருத்தரின் மரணச்செய்தியைச் சொல்ல உறவினர் ஒருத்தர் என் சம்பந்தி வீட்டுக்கு வந்திருக்கிறார். செய்தியைச் சொல்லி ' அவர் மேலே போய்விட்டார்' என்றிருக்கிறார். இதைக் கவனித்துக்கொன்டிருந்த என் பேரன்   [ பெயர் விமல் ஆதித்யா] ' எப்ப்டி மேலே போனார்? ஃப்ளைட்டில் ஏறிப் போனாரா?" என்று கேட்க, துக்கத்தை சொல்ல வந்தவருக்கே சிரிப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை!

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இப்போதெல்லாம் அறிவித்து விட்டுத்தான் பவர் கட் செய்கிறார்கள். அதனால் முதல் நாளே அடுத்த நாளுக்கு சாப்பிட தயிர்சாதம், புளியஞ்சாதம் செய்து விடுவேன். [ சாப்பட்டுப்பிரச்னை தான் முதல் பிரச்சினை! அதனால் அதை முதலில் சரி செய்து கொள்ள‌ வேண்டும்.]
பின் ரொம்ப நாளாக படிக்க வேண்டுமென்று நினைத்து முடியாமல் தேங்கிக்கொன்டிருந்த புத்தகங்களை தயாராய் எடுத்து வைத்துக்கொள்வேன். இன்வர்ட்டரின் சக்தி தீரும் வரை கணினியில் பிடித்த பாடல்களைக் கேட்பதும் வலைத்தளங்களில் மேய்வதுமாக பாதி நாள் கழிந்து விடும்.
ஆனல் எல்லாவற்றையும் விட ரொம்பவும் சுலபமான விஷ‌யம், ரொம்ப நாட்களாய் போக வேண்டுமென்று விரும்பி, ஆனால் போக முடியாமலேயே இருந்த இடங்கள் அல்லது வெளியூரிலுள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வது!

5.உங்களுடைய குழந்தையின் திருமணநாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

உணர்ச்சிப்பெருக்கான அன்றைய தினத்தில் மனதின் ஆழத்திலிருந்து ' என்றைக்கும் நீ மகிழ்வுடன் இருக்க வேண்டும்' என்று வரும் சாதாரண வாழ்த்திற்குக்கூட‌ வலிமை அதிகம்!! நானும் அதைத்தான் சொன்னேன்!

6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்.?

அமைதியின்மை!

7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்.?

பிரச்சினைகளைத் தனியாக சமாளித்த அனுபவங்கள் உண்டென்றாலும் சில சமயங்களில் கணவரும் மகனும் உதவுவது உண்டு!

8.உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். 
அதைக் கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?


இளமையில் நிச்சயம் தாக்கம் இருக்கும். இப்போது அது போன்றவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டதால் இந்த மாதிரி விஷயங்கள் பாதிப்பு ஏற்படுத்தாது. இருப்பினும் தேவையில்லாமல் நம்மைப்பற்றி தவறான செய்திகள் பரவும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கும் தார்மீகக் கடமை நமக்கு இருக்கிறது.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்துவிட்டால்,அவரிடம் என்ன சொல்வீர்கள்?

நண்பர் இறந்து அவரின் மனைவிக்கு ஆறுதல் சொல்லப்போன கொடுமையான அனுபவம் இருக்கிறது. அவரின் இழப்புக்கு என்னவென்று ஆறுதல் கூறுவது? வார்த்தைகளுக்கு அர்த்த்ம் இல்லாத நேஎரங்களில் இதுவும் ஒன்று!

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீங்க.?

நிறைய [ கொஞ்ச‌ம் சத்தமாக] பாட்டு கேட்பேன். அதுவும் பி.சுசீலா பாடிய பழைய பாடல்கள், 'கண்கள் எங்கே,  மாலைப்பொழுதின்  மயக்கத்திலே'   போன்ற‌ அமுத  கானங்களை !  

என்னை அன்புடன் அழைத்து என் எண்ணங்கள் சிலவற்றை இங்கே எழுதச் செய்ததற்கு அன்பிற்கினிய கீதமஞ்சரி, இளமதிக்கு என் மனம் கனிந்த நன்றி!!

இந்தத் தொடர்பதிவை தொட‌ர்ந்திட நான் அழைப்பது:

சகோதரிகள்:

1. ப்ரியா-http://wordsofpriya.blogspot.com/
2. ஹுஸைனம்மா  -http://hussainamma.blogspot.ae/
3. நிலாமகள் http://nilaamagal.blogspot.ae/
4. எழில்- http://nigalkalam.blogspot.com/

சகோதரர்கள்:

1. தமிழ் இள‌ங்கோ--http://tthamizhelango.blogspot.com/
2. கரந்தை ஜெயக்குமார்- http://karanthaijayakumar.blogspot.com/
3. சாமானியன்--http://saamaaniyan.blogspot.ae/

Wednesday 30 July 2014

முத்துக்குவியல் -29!!

தகவல் முத்து:
:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சந்தை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தை எனக் கூறப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் காய்கறி, தானியங்கள், தங்கம், வெள்ளி, இரும்பு சாமான்கள் மட்டுமல்லாது ஆடு, மாடுகள் என அனைத்து பொருட்களும் விலை மலிவாக கிடைக்கின்றன. 
ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு விற்பனை நடக்கின்றது. அந்தந்த இடங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுக்கு தேவையானதை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ வாங்கி செல்வது வழக்கம். இதன்மூலம், கணிசமாக பணம் மிச்சமாகும் என்கின்றனர் அந்த சந்தை பற்றி தெரிந்தவர்கள்.
இதற்கப்புறம் புகழ் பெற்றிருப்பது நாமக்கல்லிருந்து 30 கி.மீ தொலைவில் பேளுக்குறிச்சியில் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு நேரத்தில் நடக்கும் சந்தை. கடுகு, சீரகம், மிளகு, போன்ற பலசரக்குகள் முதல் சோம்பு, ஏலம், கசகசா போன்ற மசாலா பொருள்களும் துவ்ரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், புளி, போன்றவைகளும்  மிகவும் மலிவாகக் கிடைக்கிறது.

அதிசய முத்து:

ஆப்கானிஸ்தான் நாட்டில் ' கார்டெஸ்' என்ற இடத்தில் நின்ற நிலையில் நான்கு கைகளுடனும் பாம்பை பூணூலாக அணிந்தும் கழுத்தில் ருத்திராட்ச மாலை தரித்தும் இடத்தந்தம் ஒடிந்தும் ஒரு பெரிய விநாயகர் காட்சி அளிக்கிறார். இதைப்படித்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கடந்த கால சரித்திர நிகழ்வுகள் நமக்கு அவ்வப்போது ஆச்சரியங்களை அளித்துக்கொண்டிருக்கின்றன!!

எச்சரிக்கை முத்து:

' ஆண்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை உலகம் நோக்கிச் சென்று கொன்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. மக்கள் சாதாரண தொற்றுக்களாலும் சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகலாம் என்றும் கூறுகிறது. சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள் உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளிடம் இருந்தும் கூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருக்கிறதாம். இது இப்போது உலக அளவில் ஒரு பெரிய அபாயத்தை எட்டியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுவதும் முக்கியகாரணமாக கூறும் உலக சுகாதார நிறுவனம் புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவில் உருவாக வேண்டும் என்றும் அவை பயன்படுத்த வேண்டிய முறைகளையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

மருத்துவ முத்து:

சர்க்கரை நோய்க்கு எளிமையான மருந்து:



தேவையானவை:

வெந்தயம்‍ 50 கிராம், கருஞ்சீரகம்‍ 25 கிராம், ஓமம்‍ 25 கிராம், சீரகம்‍ 25 கிராம்
இவற்ரை ஒன்றாகச் சேர்த்து வறுத்துப்பொடி செய்யவும். இதில் ஒரு சிறு ஸ்பூன் எடுத்து தினமும் வெறும் வயிற்றில் காலை சுவைத்து சாப்பிடவும். வேன்டுமானால் சிறிது தண்ணீர் அதன் பிறகு குடித்துக்கொள்ளலாம். ஒரு வாரம் இப்படி செய்து வந்தால் சர்க்கரையின் அளவு நிறைய குறையும்.

ரசிக்கும் முத்து:




மொகலாயச் சக்கரவர்த்தி அக்பருக்கும் ஆமிர் நாட்டு  இந்திய ராஜப்புத்திர இளவரசி ஜோதாவிற்கும் இடையே மலர்ந்த காதலை மிக அழகாக வெளியிட்டுக்கொன்டிருக்கிறது ' ஜோதா அக்பர்' என்னும் சீரியல். இது ஜீ தொலைக்காட்சியில் தினமும் மாலை ஒளிபரப்பிக்கொன்டிருக்கிறார்கள். மொகலாயர்களின் கட்டிடக்கலையின் பிரமிக்க வைக்கும் அழகும் இந்து அரசர்களின் வீரமும் சிறந்த நடிப்பும் இரு மதங்களின் பல்வேறு வேற்றுமைகள் அன்பென்ற ஒன்றினால் அழகாய் இணையும் காட்சிகளும் என்னை தினமும் ஈர்க்க வைத்துக்கொன்டிருக்கின்றன. ஹிந்தியில் ஏற்கனவே ஒளிபரப்பிக்கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப தமிழ் உரையாடல்கள் இருக்கின்றன. தமிழ்ச்செறிவோடு கூடிய வசனக்களும் அக்பரின் கம்பீரமான குரலும் இந்த சீரியலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அப்படியே ஒன்றிப்போய் ர்சித்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!










 

Wednesday 23 July 2014

சித்தர் குரு நமச்சிவாயர்!!

சித்தர்களின் வாழ்க்கையைப்பற்றிய வரலாறுகளைப் படிக்கும்போது ஆச்சரியம் மேலிடுகிறது. முன்பு தேரையர் என்ற சித்தர் விளைவித்த ஆச்சரியங்களைப்பற்றி  படித்து, அவற்றைப் பகிர்ந்து கொன்டேன். இப்போது எழுதவிருப்பது மற்றொரு சித்தரைப்பற்றி!

' குரு பிதா குருர் மாதா குருதேவா பரசிவா
  சிவருஷ்டரே குருஸ்த்ராதா குரோருஷ்டேண காஷ்சன்'

[ குருவே தந்தை: குருவே தாய்: குருவே இறைவன்: கடவுளுக்கு கோபம் வந்தால் குரு காப்பாற்றுவார். ஆனால் குருவிற்கு கோபம் வந்தால் நம்மைக் காப்பாற்றுபவர் யாரும் இல்லை.]

' குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேஸ்வரந‌
  குரு சாஷாத் பரம் தத்வம் தஸ்மாத்குரும் உபாஸ்ரயேத்நந'

[ குருவே பிரம்மா; குருவே விஷ்ணு; குருவே மகேஸ்வரன்; குருவே பரப்ரம்ம சொரூபனாகவும் இருக்கிறார். குருவை முழுமையாகச் சரணடைதல் அனைத்திலும் உயர்ந்தது.

இப்படி வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் கூறப்பட்டிருக்கிறது.

ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவிற்குப் பெருமை. அதன் படி சீடனாக வந்து குருவிற்குத் தொன்டு செய்து, குருவிற்கு குருவாகவே உயர்ந்தவர் நமச்சிவாயர்.
இயல்பிலேயே ஞானம் வாய்க்கப்ப‌ட்டிருந்த இவர் ஒரு நல்ல குருவைத்தேடி காடு மேடெல்லாம் அலைந்து கடைசியில் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே பிரம்மத்தில் லயித்த பார்வையுடன் புற உணர்வுகளை மறந்த தவத்தில் திருவண்ணாமலை வீதிகளில் அலைந்து கொண்டிருந்த குகை நமச்சிவாயத்தைக்கண்டதும் இவரே நம் குரு என முடிவு செய்து அவர் பின்னாலேயே போக ஆரம்பித்தார். ஆனால் அவரோ இவரைத் திரும்பியும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. குகை நமச்சிவாயருக்கு பசித்தால் இல்லங்கள் முன் நின்று 'நமச்சிவாயம்!' என்பார். உள்ளிருப்பவர்கள் வெளியே வந்து அவரின் குவிந்த கரங்களில் கஞ்சியையோ அல்லது கூழையோ ஊற்றுவார்கள். அதனை உறிஞ்சிக்குடித்த பின் குகை நமச்சிவாயர் அகன்று விட, அவர் கரங்களினின்றும் கீழே வழிந்து விழும் மிகுதியான கஞ்சியை கையேந்திக் குடிப்பார் இளைஞர் நமச்சிவாயர். தன்னை சீடராக குகை நமச்சிவாயர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவர் உறங்கும் மலைப்பகுதி சென்று உறங்கும் அவரின் பாத‌ங்களைப் பிடித்து விட்டு, அவர் உறங்கிய பின்பே தானும் உறங்கச் செல்லுவார்.
ஒரு நாள் குருவின் பாதங்களை மெல்லப்பிடித்து விட்டுக்கொண்டிருந்த சீடர் திடீரென்று பெருங்குரலில் சிரிக்க ஆரம்பித்தார். குகை நமச்சிவாயர் கோபமடைந்து காரணம் கேட்க, ' ஒன்றுமில்லை குருவே, திருவாரூர் தியாகராஜர் சன்னதியில் நடனமாடிக்கொன்டிருந்த பெண்ணொருந்தி திடீரென்று கீழே விழுந்து விட்டாள். அதைப்பார்த்து மக்களெல்லாம் சிரிக்கவே, எனக்கும் சிரிப்பு வந்து விட்டது என்றார். அதைக்கேட்ட குருவானவர் ஆச்சரியமுற்று, ' ' இவன் இருப்பது இங்கே, ஆனால் காட்சியை உணர்வது அங்கே' என்று நினைத்தவர் ' அப்பா, நீ இன்றடைந்த நிலையே வேறு! இன்று முதல் என் சீடனாகி விட்டாய்' என்றார்.

மற்றொரு நாள் குரு அருகே பவ்யமாக நின்று கொன்டிருந்த சீடர், திடீரென்று எரிந்து கொன்டிருந்த தீயை அணைப்பது போல பாவனை செய்து தன் வேஷ்டி நுனியைத் திருகினார். குரு காரணம் கேட்க, ' குருவே, தில்லை கோவிலில் திரைச்சீலை தீப்பற்றி எரிந்தது. அதைக் கோயில் குருக்கள் அணைத்தார். அதனால் நானும் அந்தத் தீயை அணைத்தேன்' என்றார். குரு ஆச்சரியத்துடன் எழுந்து நின்று, ' நமச்சிவாயம்! நீ இன்றிருப்பது மிக மிக உயர்ந்த நிலை' என்று வாழ்த்தினார்.

ஒரு நாள் தான் உண்ட உணவு செரிக்காமல் திடீரென்று உமிழ்ந்தார் குரு. உடனேயே சீடர் நமச்சிவாயம் அதை அருகிலிருந்த மண் கலயத்தில் தாங்கிப்பிடித்தார். குரு சீடரை நோக்கி ' இதனை மனிதர் காலடி படாத இடமாகப்பார்த்துக்கொட்டி வா' என்றார். சீடரும் மண் கலத்தை சுமந்து வெளியே சென்று சற்று நேரத்தில் திரும்பி வந்தார். வந்தவரிடம் குரு கேட்டார், ' மனிதர் காலடி படாத இடம் பார்த்து கொட்டினாயா?' சீடர் மிகவும் பணிவாக ' மனிதர் காலடி படாத இடம் ஏது என் வயிற்ரைத்தவிர? அதனால் நானே அதை விழுங்கி விட்டேன்' என்றார் மிக இயல்பாக!

குரு அப்படியே திகைத்துப்போனார். எத்தனை மன உறுதி இருந்தால், எந்த அளவு உயர்ந்த சிந்தனை இருந்தால், எந்த அளவு குருவிடம் பக்தி இருந்தால் தான் உமிழ்ந்ததை கொஞ்சம் கூட அறுவறுப்பு இல்லாமல் அதை விழுங்கியிருப்பார்?

கண்களில் கண்ணீர் பெருக சீடரைத்தழுவினார். ' அப்பா, நீ இனி சீடன் இல்லை. குரு நமச்சிவாயர். ஆத்மஞானத்தைப்பொறுத்தவரை மிக உயர்ந்த நிலை அடைந்து விட்டாய் இனி நீ சிதம்பரம் சென்று தில்லை கோவிலில் இருப்பாயாக. அங்கே உன்னால் ஆக வேண்டிய வேலைகள் இருக்கின்றன. இனி நீ இங்கே இருப்பது சரியில்லை. ஒரே கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுவது சரியில்லை. அப்படி கட்டுவதும் முறையில்லை" என்றாராம்.

குரு வாக்கிற்கு மறுவாக்கில்லை என்பதால் குரு நமச்சிவாயர் சிதம்பரம் புறப்பட்டார். வழியில் பசி அதிகமானதால்

"அண்ணா மலையா ரகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே- நண்ணா
நினைதொறும்போற்றிசெயநின்னடியாருண்ண
மனை தொறும் சோறுகொண்டு வா"

என்று அம்பிகையை நினைத்துப்பாடவே, அம்பிகை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலிருந்து உணவு வகைகளை எடுத்து வந்து அயர்ந்து கிடந்தவருக்கு கொடுத்து பசியாற்றினாராம். இப்படி வழி நெடுக அவரின் பசி தீர்க்க இறைவியை அன்னம் கொண்டு வரும்படி அவர் பாடல் பாட, இறைவியே நேரில் உணவெடுத்து வந்து அவர் பசியாற்றியதாக வரலாறு.

குரு நமச்சிவாயர் தில்லை கோவில் சென்று தங்கி பாமாலைகள் பாடினார். அதன் அருகே உள்ள திருப்பாற்கடல் என்னும் தலத்தில் தவமியற்ற ஆரம்பித்தார். அவர் அடி தொழுத அடியவர் அளித்த பொன்னையும் பொருளையும் கொண்டு ஆலயத்திருப்பண்னிகள் செய்தும் ஏழைகள் துயர் துடைத்தும் பலருக்கும் நன்மைகள் செய்தும் பாமாலைகள் இயற்றியும் புகழ் பெற்று வாழ்ந்தார்.

இவர் இயற்றிய ' அண்ணாமலை வெண்பா' மிகவும் புகழ் பெற்றது.
இவ்வாறு ஒரு சீடராக, குருவாக, பக்தராக, ஆலயப்பணியாளராக, புலவராக, ஞானியாக பல காலம் வாழ்ந்த குரு நமச்சிவாயர் திருப்பாற்கடல் அருகேயுள்ள‌ திருப்பெருந்துறையில் மகா சமாதி அடைந்தார்.