Sunday 17 January 2021

வேங்கையின் மைந்தன்!!!!



 பல நாட்கள் கழித்து, உண்மையில் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு முறை ‘ வேங்கையின் மைந்தன் ‘ என்னும் வரலாற்று புதினத்தைப்படித்து முடித்தேன்.  இளம் வயதில் ஆதர்ஸ எழுத்தாளர்களாக இருந்த  எழுத்தாளர்கள் கல்கி, நா.பார்த்த சாரதி, அகிலன், ஜெகச்சிற்பியன், ஜெயகாந்தன், கிருஷ்ணா முதலியோர்தான் என் தமிழார்வத்தை வளப்படுத்தினார்கள் என்று சொல்ல வேண்டும். கூடவே இவர்கள் எழுத்தாற்றலில் தொடர்ந்து வந்த நேர்மையும் உண்மையும்  சத்தியமும் கண்ணியமும் நம் மனதுக்குள்ளும் வளர பெரிய காரணிகளாகவும் இருந்தார்கள் என்பதும் உண்மை! கல்கிக்கு மணியம், அகிலனுக்கு வினு, நா.பார்த்தசாரதிக்கு விஜயா, வினு என்று வரையப்பட்டிருந்த ஓவியங்கள் அந்த வயதில் பிரமிப்பை ஏற்படுத்தி ஏகலைவனாக என்னையும் ஓவியராக்கின. பதின்மூன்று வயதிலேயே நான் வரைய ஆரம்பித்ததற்கும் இவர்கள் தான் காரணம்!


வேங்கையின் மைந்தனின் முக்கிய சிறப்புகள்:

வேங்கையின் மைந்தன்’ எழுத்தாளர்  அகிலன் எழுதிய புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். 1960 இல் கல்கி வார இதழில் ஓவியர் வினு  வரைய, மூன்று பாகங்கள் கொண்ட தொடர்கதையாக வெளி வந்தது. தனி நூலாகவும் வெளியிடப்பட்டு 2007 வரை 18 பதிப்புக்களைக் கண்டுள்ளது. முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிகாலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. சிவாஜி கணேசனால் நாடகமாக நடத்தப்பட்டுள்ளது.  அகிலன் அவர்களது மகன் அகிலன் கண்ணன் அவர்களால் நாடக வடிவமாக்கப்பட்டுச் சென்னை வானொலி நிலையத்தாரால் (AIR) தொடர் நாடகமாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.

மூன்று பாகங்கள் கொண்ட  இந்த வரலாற்றுப்புதினம் 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதை பெற்றுள்ளது.  அகாதமியின் சின்னத்துடன் இந்தியப் பிரதமராக அப்போதிருந்த ஜவஹர்லால் நேருவின் கையொப்பம் பொறிக்கப்பட்டச் செப்பேட்டினை, மார்ச் மாதம் 1964 ஆம் ஆண்டு, 15 தேதியில் இந்திய உதவி குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் கையால் பெற்றதைத் தன் வாழ்நாளின் முக்கிய நிகழ்வாக அகிலன் குறிப்பிட்டுகிறார்.

ரொம்பவும் முக்கியமான, ஆச்சரியபப்டும் விஷய்ம் இந்தக்கதையின் முடிவு! கல்கியில் வெளி வந்த போது இறுதி அத்தியாயத்தில் கதாநாயகி ரோஹிணி தான் செய்த தவறை உணர்ந்து தீயில் குதித்து உயிர் துறப்பதாகத்தான் கதையை முடித்திருந்தார் அகிலன். ஆனால் வாசகர்களின் கோபத்தையும் எதிர் விமர்சனங்களையும் தாங்க முடியாமல், இந்த நாவல் முதல்  பதிப்பாக வெளி வந்த போது, ரோகிணி பிழைத்துக்கொண்டதாக கதையை முடித்து விட்டார். இந்த மாதிரி ஒரு சம்பவம் எனக்குத்தெரிந்து வேறு எந்த எழுத்தாளருக்கும் நேர்ந்ததில்லை!!

இனி கதையைப்பற்றி!! 

வேங்கையின் மைந்தன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் அது நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைகிறது.

முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1012), அவரது மகன்   இணை அரசனாகப் பொறுப்பேற்றுப் பின் இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். அவன் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக் கொண்டான். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான். ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் இணைந்து சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

ஈழத்திலிருந்த பாண்டியர் முடியை, இராஜராஜ சோழன் காலத்தில் மீட்டுவர முடியவில்லை. அவர் இறக்கும் போது தனது வாழ்நாளில் தன்னால் செய்து முடிக்க முடியாத அக்காரியத்தைத நிறைவேற்ற வேண்டுமெனத் தன் மகன் இராஜேந்திர சோழனைக் கேட்டுக் கொண்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் தான் தனது தந்தையின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், தமிழர் மானம் காக்கப்படும் எனவும் உறுதியாய் இருந்த இராஜேந்திரர், தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அதே குறிக்கோளுடன் செயல்பட்டார்.  முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் மீட்டெடுக்கும் நோக்கோடும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் மீண்டும் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன் ஐந்தாம் மகிந்தன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.


இந்தக் காலகட்டத்தைத்தான் அகிலன் தன்னுடைய வேங்கையின் மைந்தன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சங்க காலம் முதல் பிற்கால வரலாற்றிலும் அழியா இடத்தைப் பெற்றது கொடும்பை மாநகரம். சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்குச் செல்லும் சாலையில் இரு நாடுகளுக்கும் எல்லை வகுத்து விட்டு இடையில் வளர்ந்த சிற்றசர் நகரம் அது. காலங்காலமாக அதை ஆண்டுவந்த வேளிர்கள் தம் வீரத்துக்குப் பேர் போனவர்கள். பிற்காலச் சோழர்களுடன் நெருக்கமான மண உறவு கொண்டிருந்த குலம் அது. முதலாம் இராஜராஜனின் மனைவியும் இராஜேந்திர சோழனின் தாயுமான வானதி கொடும்பாளூர்க் குலப்பெண். இக்கதையின் நாயகன் இளங்கோ கொடும்பாளூர் குலத்தோன்றல். இராஜேந்திரன் பாண்டிய நாட்டு முடியை ஈழத்திலிருந்து மீட்டு வந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னுமாக இப்புதினத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.

அவர் ஈழத்தின் மீது படையெடுப்பதற்காக செய்த ஏற்பாடுகளையும் ஈழத்துப் போரையும் அதில் அவர் அடைந்த வெற்றியையும் ஈழத்து அரசர் மகிந்தரை சோழநாட்டிற்கு சிறைபிடித்து வந்ததையும் இப்புதினத்தின் முதல் பாகமான முடிகொண்ட மாவேந்தன் சுவையுடனும் விறுவிறுப்புடனும் விவரிக்கிறது. இச்சாதனையில் கதைநாயகன் இளங்கோவின் பங்கும் வீரமும், ஈழத்து இளவரசி ரோகிணி பகைநாட்டைச் சேர்ந்தவளாய் இருந்தும் இளங்கோவிற்கு உதவியதும் அவர்கள் இருவருக்கும் இடையில் மலரும் காதலும் இப்பகுதியில் அழகுறப் புனையப்பட்டுள்ளது.

ஈழத்திலிருந்து வெற்றியுடனும் பாண்டியர்களின் முடியுடனும் திரும்பிய இராஜேந்திர சோழன் ஈழப் படையெடுப்புக்கு வீரர்களைத் தந்த பழையாறை நகருக்குச் சென்று போரில் தமது உறவுகளை இழந்த மக்களிடம் தன்னையே அவர்களின் உறவாகக் கொள்ளும்படி ஆறுதல் கூறி, இனிமேல் தனது தலைநகரை தஞ்சையிலிருந்து அவர்கள் ஊருக்கே மாற்றப்போகும் ஆனந்தமான செய்தியையும் அவர்களுக்களிக்கிறார். 


சோழபுரம் என்றொரு பிரம்மாண்டமான ஊரும், அங்கு தஞ்சை பெரிய கோவிலை ஒத்த ஒரு பிரம்மாண்டமான சிவாலயமும் ஊருக்கு எல்லையில் கடலென ஓர் ஏரியும் அமைக்கப்படும் என உறுதியளிக்கிறார். பாண்டியர்களால் எழுந்த சலசலப்புகளையும் சதிகளையும் ஒடுக்கிய பின்னர் தன் இளைய மகனான சுந்தரசோழனுக்கு, சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயரால் மதுரையில் முடிசூட்டி, புதியதொரு பாண்டியப் பரம்பரையை ஆரம்பித்து வைக்கிறார். மீட்கப்பட்ட வாளும் மகுடமும் நாட்டை ஆளும், அவைகளுக்கு பாதுகாவலராக சுந்தர சோழ பாண்டியனாக இருப்பார் என்று சொல்கிறார். ஈழத்தில் மீண்டும் முளைவிட்ட அமைச்சர் கீர்த்தியின் சதிகளை நாயகன் இளங்கோவை அனுப்பி முறியடிக்கிறார். இத்தொல்லைகளுக்கு முடிவு கட்டி முடிக்க, வடக்கே மேலைச் சாளுக்கியர் வாலாட்டுகின்றனர். அவர்களை முறியடிக்கப் படையெடுத்துச் செல்கிறார். தனது வடநாட்டுப் படையெடுப்பின் வெற்றிக் கொண்டாட்டமாக சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டு பெரியதொரு சிறப்பு விழா அமைய வேண்டும் என்ற நோக்கோடு நகர், கோவில், ஏரி இவற்றின் அமைப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டே படையெடுப்பைத் தொடங்குகிறார். அரசரின் வெற்றிகளில் எல்லாம் தோள்கொடுத்து நிற்கும் இளங்கோவின் வீரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டத்தில் இளங்கோவிற்கும் ரோகிணிக்கும் இடையே தோன்றிய காதல் தஞ்சையிலும் கொடும்பாளூரிலுமாக வளர்கிறது. ரோகிணி தன் பிறந்த நாட்டுப் பாசத்திற்கும் பகை நாட்டு இளவரசனிடம் மனதைப் பறிகொடுத்து விட்ட தனது காதலுக்கும் இடையிலான போராட்டத்தில் படும் அவதியும், அவளது மனப்போராட்டங்களால் அவளுக்கும் இளங்கோவிற்கும் இடையே நிகழும் கசப்பான அனுபவங்களும், இருவரது வேறுபட்ட குணாதிசியங்களால் எழும் முரண்பாடுகளையும் மீறி ஒருவரையொருவர் விட்டுவிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பும் வாசிப்போரையும் தவிப்புக்குள்ளாக்குகிறது.

சாளுக்கியரை ஒடுக்குவதற்காக படையெடுத்துச் சென்ற இராசேந்திரர் சாளுக்கியரின் கொட்டத்தை அடக்கி வென்றபின், சாளுக்கிய நாட்டோடு நில்லாது மேலும் வடதிசை நோக்கிச் சென்ற சோழ படைகள் வடதிசை மாதண்ட நாயகர் அரையன் இராஜராஜன் தலைமையில் கங்கை வரை சென்று புலிக்கொடியை நாட்டுவதும், கங்கை நீரைக் குடங்களில் அடைத்து யானை மேல் ஏற்றிக் கொண்டு சோழ நாடு திரும்பிய வெற்றி ஊர்வலமும், புதிதாக அமைக்கப்பட்ட சோழபுர நகரம் கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டப் பெருவிழாவும் இம்மூன்றாம் பாகத்தின் முக்கிய நிகழ்வுகள்.

இந்நிகழ்வுகளின்போது நடைபெறும் வீரதீரச் செயல்களும், நேர்கொள்ளப்பட்ட இன்னல்களும், அவற்றைச் சமாளித்த திறமையும் கற்பனை நயம் கலந்து விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் வாசகர்களின் ஆவலைத் தூண்டும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இளங்கோ ரோகிணி காதல் வளரும் விதமும் ரோகிணியின் தவிப்பான காதலும், தான் விரும்பும் நாயகன் வேறொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்தும் அப்பெண்ணைத் தங்கையாக நினைத்து அவர்கள் காதலுக்கு உறுதுணையாக நிற்கும் அருள்மொழி நங்கையின் தியாகமும் நாட்டுப்பற்றும் அவர்களுக்கிடையேயான உறவுக்கு பெரியோர்களால் தரப்படும் தீர்வும் சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது.

இராசேந்திரரின் கடாரத்தின் வெற்றியும் அதில் இளங்கோ ஆற்றலும் முடிவுரையில் தரப்பட்டுள்ளன. 

மொத்தத்தில் என் மனங்கவர்ந்த புதினங்களில் இதுவும் ஒன்று!


Wednesday 13 January 2021

பொங்கலோ பொங்கல் !!!

 

துன்பங்கள் யாவும் விலகிச்சென்று, மகிழ்வும் நன்னலமும் அனைத்து வளங்களும் அனைவரது இல்லங்களிலும் பொங்கித்ததும்ப‌அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

மறுபடியும் துபாயில் பொங்கல்! தமிழ் உணவகங்கள் எல்லாம் நாளை பொங்கல் விருந்து தரும் இங்கு. ஏற்கனவே தமிழ் சந்தை, தமிழ் மார்ட் போன்ற தமிழ்க்கடைகளில் இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து, வாழையிலை, வாழைப்பழங்கள் எல்லாம் அமோக விற்பனை!!! எங்கள் உணவகங்களும் 22 உணவு வகைகளுடன் விருந்து படைக்கின்றன!!‌!! பொங்கல் கோலங்களும் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் தான் இப்போதெல்லாம் இருப்பதில்லை! வாட்ஸ் அப் வருவதற்கு முன்னால் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அமோகமாய் விற்கும் கடைகளில் நுழைந்தால் கை நிறைய வாங்கிக்கொண்டு தான் வருவோம். அதுவும் 15 நாட்களுக்கு முன் வாங்கினால் தான் ஒவ்வொரு வாழ்த்திலும் வீட்டிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு ஏர் மெயிலில் அனுப்ப வசதியாக இருக்கும். 

காலையிலேயே பொங்கல் வைத்து விடுவேன். அப்போது தான் மதியம் பொங்கல் விருந்து சாப்பிட எங்கள் உணவகங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும்! தலைவாழை இலை போட்டு பணியாளர்கள் பரிமாறும் காட்சி மிக அழகாய் இருக்கும். எங்கிருந்தோ தொலைதூரத்திலிருந்தெல்லாம் ஃபோன் பண்ணி சொல்லி விட்டு தம்ழ் மக்கள் சாப்பிட வருவார்கள். எங்கள் உணவ விருந்து லிஸ்ட் இதோ!



சென்ற பொங்கலன்று எங்கள் குடும்ப உறவினர்கள் அனைவரும் கூடி கிராமத்தில் பொங்கலிட்டார்கள்.  கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப்பிறகு! நாங்கள் மட்டும் கலந்து கொள்ள முடியவில்லை.  

அந்த புகைப்படங்களும் இங்கே இணைத்திருக்கிறேன்.

மாட்டுப்பொங்கலன்று!




கீழே துபாய்ப்பொங்கல்!!