Friday 26 November 2021

ரஸமலாய்!!!

 ரொம்ப நாளாகிறது ஒரு சமையல் குறிப்பு போட்டு. அதனால் ஒரு இனிப்பான குறிப்பாக ‘ ரஸமலாய்’ பற்றி பதிவு பண்ணலாம் என்று நினைத்தேன். 

இனி ரஸமலாய் பற்றி:

ரஸமலாய் ஒரு பிரசித்தி பெற்ற பெங்காலி இனிப்பு. பொதுவாக எந்த CHEFம் பாலை திரைய வைத்து வடிகட்டி பனீராய் திரட்டி பிசைந்து உருட்டி செய்வார்கள். பாலைத்திரைய வைக்க வினீகர் அல்லது எலுமிச்சை சாற்றை உபயோகிப்பார்கள். சிலர் ரிக்கோட்டா சீஸ் உபயோகித்து செய்வார்கள். இது தான் பொதுவான முறை. இங்கு நான் கொடுத்திருப்பதோ முற்றிலும் வேறு முறை. இது மிகவும் சுலபமானதும் கூட. பாலைக்காய்ச்சும் வேலையுமில்லை. திரைய வைக்கவும் தேவையில்லை. ஒரு அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம். 35 வருடங்களுக்கு முன் என் சகோதரியிடம் கற்றுக்கொண்டது இந்த குறிப்பு. அன்றிலிருந்து இன்று வரை ரஸமலாய் செய்ய வேறு எந்த குறிப்பையும் நான் பயன்படுத்துவதில்லை இதைத்தவிர!

இனி குறிப்பிற்கு போகலாம்.

ரஸமலாய்:


தேவையானவை:

FULL CREAM பால் பவுடர் -1 1/4 கப் [ 315 ml ]+ 12 மேசைக்கரண்டி

மைதா- 1 ஸ்பூன்

பேக்கிங் பவுடர் -1 ஸ்பூன்

சீனி- 8 மேசைக்கரண்டி

குங்குமப்பூ- கால் ஸ்பூன்

முட்டை- 1

சமையல் எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

ஏலப்பொடி- அரை ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1 1/4 கப் பால் பவுடர், மைதா, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்று சேர்த்து மூன்று தடவைகள் சலிக்கவும். பின் சலித்த பால் பவுடரை ஒரு தட்டில் கொட்டி எண்ணெய் சேர்த்து பவுடர் முழுவதும் கலக்குமாறு பிசிறவும். பின் முட்டையை உடைத்து ஊற்றி பிசைவும். பிசைந்த பிறகு ஒரு முறை கையை கழுவி நீரில்லாமல் துடைத்து பின் பிசைந்தால் நன்கு பிசைய வரும். பிசைந்த மாவு மெழுகு போல இருக்க வேன்டும். அது தான் பதம். ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும். பிறகு பலிங்கி சைஸுக்கு உருண்டைகள் உருட்டி மூடி வைக்கவும். உருண்டைகள் உருட்டும்போது அழுத்தி உருட்டக்கூடாது. இலேசாக அழுத்தி உருட்ட வேண்டும். 


ஒரு அகன்ற பாத்திரத்தில் 4 கப் வெதுவெதுப்பான நீரைக் கொட்டி பாக்கியுள்ள பால் பவுடரையும் சீனியையும் கொட்டி நன்கு கலக்கவும். கட்டியில்லாமல் ஆனதும் அதிலிருந்து கால் கப் பாலை எடுத்து வைத்துக்கொண்டு பாக்கியை அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். கால் கப் பாலில் மேலும் கால் கப் கொதிக்கும் நீர் கலந்து குங்குமப்பூவை அதில் போட்டு ஊற வைக்க‌வும். பால் கொதிக்க ஆரம்பித்தததும் ரஸ மலாய்களை ஏழெட்டு எடுத்து அதில் போடவும். ஐந்து நிமிடத்தில் அவை மேலெழும்பியதும் அடுத்த பாட்ச் போடவும். இதே போல எல்லா உருண்டைகளையும் போட்டு முடிக்கவும். எல்லா உருண்டைகளும் அளவில் பெரியதாகி மேலே மிதக்க ஆரம்பிக்கும். இலேசாக தீயைக்குறைத்து குங்குமப்பூ கலந்த பாலையும் ஏலப்பொடியையும் சேர்த்து கவனமாக கிளறவும். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் கொட்டி மேலே பிஸ்தாவைத்தூவவும். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பரிமாறவும்.


Saturday 6 November 2021

முத்துக்குவியல்-65!!

 

அசத்தும் முத்து:

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் whatsapp - ஐ விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்ட செயலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.


திண்டுக்கல் அருகே உள்ள தாமரைபாடி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பிரனேஷ். 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் மாணவர் பிரனேஷ் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் கூகுளினால் நடத்தப்படும் கோடிங் ஆன்லைன் கிளாஸில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மாணவர் பிரனேஷ் வாட்ஸ்அப் செயலி போல "ஜெட் லைவ் சாட்" என்ற புதிய செயலியை உருவாக்கினார். இந்த செயலியை கூகுள் நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கூகுள் நிறுவனம் இந்த புதிய செயலிக்கு ஒப்புதல் அளித்து ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.



 தற்போது ப்ளே ஸ்டோரில் சென்று ஜெட் லைவ் சாட் என டைப் செய்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் புதிய செயலி வாட்ஸ் அப் செயலியை விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்டுள்ளன. பாதுகாப்பு அதிகம் ஒருவர் அனுப்பும் தகவலை நமக்கு அறிமுகமில்லாத நபர் யாரும் பார்க்க முடியாது. பதிவிறக்கமும் செய்ய இயலாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் அதிகம் கொண்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் ஒரு தகவலை ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் இந்த புதிய செயலி மூலம் ஒரு தகவலை ஒரே நேரத்தில் பதினைந்து நபர்களுக்கு அனுப்பலாம். இது போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர் உருவாக்கியுள்ள இந்த புதிய செயலி, வாட்ஸ் ஆப்பைவிட பல்வேறு பரிணாமம் பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

துயர முத்து:

என் மகனின் அலுவலகத்தில் மேலாளராக வேலை செய்பவர் கொரோனாவால் ஊருக்குச் சென்றவர் திரும்பி வர முடியாமல் பல மாதங்கள் தமிழ்நாட்டில்  குடும்பத்தோடு இருந்து வந்தார். அங்கும் சரி, இங்கும் சரி, கொரோனா பரவல் அதிகரித்து நிலைமை மோசமாக இருந்ததால் அவரால் இங்கு வர முடியவில்லை. சமீப காலமாக மீண்டும் விமான சேவைகள் ஆரம்பித்ததும், இங்கும் நிலைமை சற்று சீராக ஆரம்பித்ததில் அவருக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாயும் பிறந்ததும் கிளம்பி வருவதாகவும் என் மகனிடம் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டார். சென்ற வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மகிழ வேண்டிய நேரத்தில் துன்ப இருள் மட்டுமே வீட்டில் பரவியது.

பிறந்த குழந்தைக்கு இரண்டு கண்களுக்கு பதிலாக ஒரு கண், வலது கண் மட்டுமே இருக்க, இடது கண் இருக்க வேண்டிய இடத்தில் கண் மூடியிருப்ப்து போல ஒரு கோடாக இருந்தது. அந்தக்கண்ணுக்கு சற்று தள்ளி ஒரு குட்டிக்கண் போன்ற துவாரமும் இருந்தது. புகைப்படத்தைப்பார்த்ததும் நாங்கள் அனைவரும் மிகவும் கலங்கிப்போய் விட்டோம். என்ன மாதிரியான கொடுமை இது! அந்தப் பெற்றோர் என்ன செய்வார்கள் இனி? கடைசி காலம் வரை எப்படி இந்தத்துயரத்தை சமாளிக்கப்போகிறார்கள்? . கதறி அழுபவரை என் மகனால் வார்த்தைகளால் தேற்ற முடியவில்லை. 

மூளையின் குறைவான செயல்பாடுகளால் சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இப்படி ஒரு கண் விழி அல்லது இரண்டு கண்விழியுமே இல்லாமல் பிறக்க நேர்ந்து விடுகிறது என்பதும் இந்த நிலைக்கு Anophthalmia என்று பெயர் இருப்பதும் தெரிய வந்தது.

என் சகோதரி மகள் கண் அறுவை சிகிச்சை நிபுணர். அவரிடம் பேசியதில் இனி இந்தக்கண்ணிற்கு எதுவுமே செய்ய முடியாது. பார்வையற்ற நிலை தான் எப்போதும். ஆனால் வலது கண்ணின் பார்வை சரியாக இருக்கிறதா என்று தான் இனி கவனிக்க‌ வேண்டும். ஆனால் மருத்துவர்களுக்கு மூன்றாம் மாதத்தில் தான் பார்வை சரியாக உள்ளதா என்று கண்டு பிடிக்க முடியும் என்று சொன்னார். மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் நிறைய உபகரணங்கள் இருப்பதால் அங்கு அழைத்துச் சென்று பரிசோதிப்பது நல்லது என்றும் சொன்னார். அதன் படி அங்கே பரிசோதனைகள் செய்ததில் குழந்தையின் பார்வைக்குறைபாடு உறுதியானதும் குழந்தையின் பெற்றோர் கண்ணீர் வழிய இடிந்து போய் விட்டார்கள். சில சமயங்களில் நம் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதேயில்லை!!

இசை முத்து:

இந்தப்பாட்டு எப்போது கேட்க நேர்ந்தாலும் மனதை பிசையும். எஸ்.பி.பியின் இனிய குரல் என்னவோ செய்யும். அந்த காட்சியமைப்பிற்கு ஏற்ற தாக்கத்தை இந்தப்பாட்டும் இவரது ஆழமான குரலும் எப்போதுமே கொடுக்கும். கேட்ட பிறகு என் கருத்து பெரும்பாலும் நிறைய பேருடைய கருத்தாகவே இருக்கும்! 

Wednesday 3 November 2021

தீபாவளி நவாழ்த்துக்கள்!

 


அனைத்து 

அன்புள்ளங்களுக்கும் 

இனிய தீபாவளி நவாழ்த்துக்கள்!