Monday 28 May 2012

ஆதங்கம்!


அனுபவங்களும் மரணமும் நம் கூடவே வரும் நிழல் மாதிரி! பிரிக்க முடியாதவை! இந்த வேதாந்த உண்மை ஒரு பச்சிளங்குழந்தையின் விஷயத்தில் மனதில் உரைக்க மறுக்கிறது.
சென்ற வாரம் மனதை வருத்திய இரண்டு சம்பவங்கள்.
முதலாவது ஒரு குழந்தையைப்பற்றியது. இந்தக் குழந்தையின் வீட்டில் கோழிக்கறி சமைத்திருக்கிறார்கள். அதை சாப்பிட்ட தந்தை, மகன் இருவருக்குமே சாப்பிட்டதெல்லாம் உடனேயே வெளியில் வர மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்திருக்கிறார்கள். ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்த 2 வயது குழந்தை இறந்து விட்டது. காரணம் சாப்பிட்ட கோழிக்கறியாக இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஒரு வேளை பக்கத்து வீட்டில் கரப்பான் பூச்சிகளுக்கு மருந்தடித்து, அது காற்றில் பரவி இந்தக் குழந்தையைப் பாதித்திருக்குமோ என்றும் சந்தேகம். பொதுவாக, ஒரு வீட்டில் கரப்பான் பூச்சிகளுக்கான மருந்தை ஸ்பிரே செய்யும்போது, குளியலறை, டாய்லட், சமையலறைக்கதவுகளை இறுக்க மூடி விடவேண்டும். எங்கள் வீட்டில் மருந்து அடிக்கும்போது, எந்தெந்த அறைகளில் மருந்து அடிக்கிறோமோ, அந்த அறைகளைப் பூட்டுவதுடன் கீழே கதவு இடைவெளியிலும் டர்கி டவல் கொண்டு இறுக்கமாய் நூல் இடைவெளி கூட இல்லாது மூடி விடுவோம். இந்த மாதிரி சமயங்களில் சமையலறைக் கதவுகளையும் இது போல மூடுவோம். பூச்சி மருந்தின் தாக்கம் அந்த அறைகளை விட்டு வெளியே சிறிதும் வராது. இந்த மாதிரி செய்ய மறந்தால், அந்த விஷக்காற்று, பாத்ரூம் ஜன்னல் வழியே அடுத்த ஃப்ளாட்டிற்குப் போக வாய்ப்பு உண்டு. அந்த மாதிரியும் இங்கு குழந்தைகள் இறந்து போயிருக்கின்றன முன்பு.
குளிர்சாதனப்பெட்டியை எதற்குத்தான் உபயோகிப்பது என்பது கணக்கிலேயே இல்லாமல் போய் விட்டது இப்போதெல்லாம். தேவையில்லாத பொருள்களை அங்கு வைப்பது மட்டுமில்லை, சமைத்த உணவுப்பொருள்கள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அங்கு சேகரித்து வைக்கப்படுகின்றன. சாதாரணமாக சமைத்த ஒரு பொருளை ஃபிரிட்ஜில் வைத்து, அதை மறுநாள் சூடுபடுத்தும்போதே அது உடலுக்குக் கேடு விளைவிக்கிறது என்கிறார்க.ள் ஆராய்ச்சியாளர்கள். பாக்டீரியாக்கள் உருவாவதும் நாட்கணக்கில் சேமித்து வைக்கும் இறைச்சி, உணவுப் பொருள்களால் இரப்பை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதுடன் ஒரு வகையான விஷ வாயுவும் இறைச்சி மற்றும் உணவுப்பொருள்களினின்றும் பரவுகிறது என்கிறார்கள் உனவு சம்பந்தமான வல்லுனர்கள். இந்தக் குழந்தை எதனால் இறந்தது என்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை, ஆனால் மனதை மிகவும் பாதித்தது இந்தத் தளிரின் மரணம்.
இரண்டாவதும் ஒரு மரணம் பற்றியது தான். என் சினேகிதியின் தாயார் படுக்கையில் விழுந்திருப்பது பற்றியும் அவர்கள் மன உணர்வுகள் பற்றியும் முன்பே இங்கு எழுதியிருக்கிறேன். அவர்கள் சென்ற வாரம் காலமாகி விட்டார்கள். அதற்குப்பிறகு தான் பிரச்சினையே ஏற்பட்டிருக்கிறது. மின் தகனம் செய்வதற்காக ஏற்பாடு செய்ய என் சினேகிதியின் மகன் சென்றிருந்த போது, இறப்புச் சான்றிதழ் கொண்டு வந்தால்தான் தகனம் செய்ய முடியும் என்றதுடன் அப்படி கொண்டு வந்தாலும் ஒரு நாளைக்கு 5 பேருக்குத்தான் தகனம் செய்ய வேண்டுமென்ற கணக்கு இருக்கிறது, இதற்கு நீங்கள் முன்கூட்டியே முன் பதிவு செய்திருக்க வேண்டும் என்றார்களாம். ‘ எது எதற்குத்தான் முன் பதிவு செய்ய வேண்டுமென்று வரை முறை இல்லையா? இதற்கு எப்படி முன் பதிவு செய்ய முடியும்?’ என்று என் சினேகிதி தொலைபேசியில் அழுத போது, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு. அன்று முழுவதும் அருகிலுள்ள மருத்துவர்களிம் அலைந்தாலும் ‘ இந்த அம்மாவுக்கு சிகிச்சை ஒரு தடவையாவது அளித்திருந்தால்தான் நான் சான்றிதழ் தர முடியும்’ என்று அனைத்து மருத்துவர்களும் மறுத்து விட்டார்களாம். அதுவரை சிகிச்சை தந்த மருத்துவர் வெளியூரில். ஒரு வழியாய் அவர் மறு நாள் நண்பகலில் வந்து இறப்புச் சான்றிதழ் தந்த பிறகு தான் காரியம் முடிந்திருக்கிறது!!

Monday 21 May 2012

முத்துக்குவியல்கள்


இந்த முறை முத்துக்குவியல்கள் ஒரு விழிப்புணர்வு முத்தையும், ஒரு மருத்துவ முத்தையும் தாங்கி வருகின்றன.
கடந்த வாரம் படித்த ஒரு தகவல் தான் முத்துக்குவியலின் முதல் முத்தாக வருகிறது. பல கோடி ரூபாய்களை பரிசுத்தொகையை பரிசாகவும் மக்களின் ஆசையை முதலீடாகவும் வைத்து இன்றைக்கு சில தொலைகாட்சி நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பணம் புரட்டுகின்றன என்பதை இந்தத் தகவல்கள் புட்டு புட்டு வைக்கின்றன. இனி அதைப்பற்றி விளக்கமாக....
‘ மக்களின் ஆசையை, பலவீனத்தை மூலதனமாக்கி பல்வேறு தொலைகாட்சி சானல்கள் லாட்டரிக்கு இனையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ஏதாவது ஒரு பரிசு திட்டத்தை அறிவித்து குறிப்பிட்ட எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று சொல்வதை ஏற்று பல லட்சம் பேர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப்போகும் பரிசுத்தொகையைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. 
சில சமயம், திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓட்டி விட்டு அது தொடர்பான கேல்வியைக் கேட்டு, அதற்கு விடையைக் கேட்கிறார்கள். எந்த ஒரு நபரும் மிக எளிதாக இதற்கான பதிலைக்கூற முடியும். இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறி விடுகிறார்கள். எனவே 5000 முதல் ஒரு லட்சம் வரையிலான பரிசுப்பணத்தினைப் பெற நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கி விடுவார்கள். அது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே, கீழே ஒரு வரி ஓடிக்கொண்டிருக்கிறது. “ உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு ஒரு நிமிடத்திற்கு 10 ரூபாய் கட்டணம் உண்டு. அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள் இணைப்பைத் துண்டித்து விடுங்கள்” என்பது தான் அது. திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால் உடனே நீங்கள் பதிலைக்கூறி விட முடியாது. சில நிமிடங்க்ள் காத்திருப்புக்குப்பிறகே பதிலைக் கூற முடியும். நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தால் உங்களுக்கு 20 ரூபாய் ஆகி விடும். இதில் ரூ.10 முதல் 14 ரூ வரை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்திற்குப் போய் விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒரு லட்சம் பேர் தொடர்பு கொண்டால்  மொத்த வருமானம் 20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்திற்கு 14 லட்சம் கிடைக்கும். பாக்கி தனியார் தொலைபேசி நிறுவனத்துக்குப் போகும். இந்த 14 லட்சத்தில் பரிசுத் தொகை, மற்ற செலவுகள் போக, கொள்ளை லாபம் நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு கிடைக்கிறது. இப்படித்தான் கோடிக்கணக்கில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு, பல கோடி இலாபங்களை அள்ளுகின்றன தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள். சில தொலைகாட்சி நிறுவனங்கள், சானல்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோர்த்து லாட்டரிக்கு இனையான கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்.எம்.எஸ் மூலம் நடத்தப்படும் இந்த பலகோடி மோசடியை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது?’
இரண்டாவது ஒரு மருத்துவ உதவி பற்றியது.
பொதுவாய் சர்க்கரை வியாதியினால் உடலின் பல பாகங்கள் நாளடைவில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதில் மிக முக்கியமானவை சிறுநீரகம், இதயம் மட்டுமே. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழந்து போனால் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கு அதிகம் செலவாவது மட்டுமல்ல, அதற்குத் தேவையான பொருத்தமான சிறுநீரகம் கிடைப்பதும் சுலபமானதில்லை. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்துடன் உயிருடன் வாழ வாரம் அதை இரண்டு முறையாவது சுத்தகரிக்கப்பட வேண்டியதாகிறது. ஒரு தடவை சுத்தகரிக்க, அதாவது டயாலிஸிஸ் செய்ய குறைந்தது இன்றைய மருத்துவ உலகில் 2500 ரூபாய் ஆகிறது. மாதம் சுமார் 20000 ரூபாய் தேவைப்படுகிறது. இந்த அளவு செலவு தனது மாத வருமானத்தில் செய்ய இயலாமல் கலங்குபவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவளைக்கிறது சென்னை நுங்கம்பாக்கம் அருகேயுள்ள மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வருகிற SURAKSHA டயாலிஸிஸ் செண்டர். ஒரு தடவைக்கு 500 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொள்கிறது இந்த நிறுவனம். அதோடு டயாலிஸிஸ் செய்யத்தேவைப்படும் பொருள்களுக்கும் கட்டணம் எதையும் இந்த நிறுவனம் வசூலிப்பதில்லை.

Monday 14 May 2012

சமையல் குறிப்பு முத்துக்கள்


குறிப்பு முத்துக்களில் இன்று சமையல் சார்ந்த சில முக்கிய குறிப்புக்கள் இடம் பெறுகின்றன. நாம் அன்றாடம் அதிகமாகப் புழங்கும் சமையலறையில் இது போன்ற சின்ன சின்ன குறிப்புகள் சில முக்கியமான சமயங்களில் பெரிதும் உபயோகமாக இருக்கின்றன. இனி குறிப்புகள்......  


1.     உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில், அதன் அடியில் சிறிது அரிசியைத் தூவி அதன் மேல் உப்பை போட்டு வைத்தால் உப்பில் ஈரம் கசியாது.

2.     மீனைக்கழுவும்போது 1 மேசைக்கரண்டி உப்பைச் சேர்த்து கழுவி, பிறகு ஒரு ஸ்பூன் வினீகர் சேர்த்துக் கழுவினால் மீனின் நாற்றம் இருக்காது.


3.     சீதாப்பழ விதைகளை வெயில் நன்கு காயவைத்து பருப்பு, அரிசி டப்பாக்களில் போட்டு வைத்தால் புழு பூச்சிகள் அண்டாது.



4. வீட்டில் ஈ தொல்லை அதிகமாய் இருந்தால் அங்கங்கே புதினா இலைகளை போட்டு வைத்தால் ஈக்கள் வராது.



5. முருங்கைக்காய்களை செய்தித்தாளில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் அதிக நாட்களுக்கு பசுமையாகவே இருக்கும்.



6. பொரித்த அப்பளங்கள் நமுத்துப் போய் விட்டால், அவற்றை வெறும் வாணலியில் சிறிது வறுத்து தேங்காய், புளி, பச்சை மிளாகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அத்தனை சுவை! சில அப்பள வகைகளில் உப்பு அதிகம் இருக்கும். அதனால் உப்பு மட்டும் குறைவாகப்போட்டு அரைக்கவும். இதே போல, நமுத்துப்போன அப்பளங்களுடன் பச்சை மிலகாய், தேங்காய்த்துருவல், துளி இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தயிரில் சேர்ட்து கலக்கினால் சுவையான அப்பளப்பச்சடி தயார்!!



7. குழம்பிலோ குருமாவிலோ காரம் அதிகமாகி விட்டால் 1 மேசைக்கரண்டி ஓட்ஸை குழைய வேக வைத்து அதில் சேர்த்தால் காரமும் தெரியாது, சுவையும் மாறாது.



8. சின்ன வெங்காயத்தின் தோலை சுலபமாக உரிக்க, முதல் நாளே அவற்றை ஃபிரிட்ஜில் வைத்து மறு நாள் உரிக்கவும். உரிக்க சுலபமாக வரும்.

9. புளித்தண்ணீரில் கையை நனைத்து விட்டு வெண்ணெயை கையிலெடுத்தால் கையில் வெண்ணெய் ஒட்டாமல் வரும்.

10. உப்பு கலந்த வெந்நீரில் துணியை நனைத்து டைனிங் டேபிளைத் துடைத்தால் ஈக்கள் வந்து மேசையில் அமராது.

படங்கள் உதவி: கூகிள் தேடுபொறி





     




Monday 7 May 2012

ஒரு ரிப்போர்ட்டரின் கதை.....!

ஸ்வாலே- Swa Le!

REPORTER,  என்பது இதன் அர்த்தம்.
2009-ல் வெளி வந்த இந்த மலையாளத் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். ஒரு ரிப்போர்ட்டராக, செய்திகள் சேகரிப்பவராக வாழும் மனிதனுக்கு எத்தனை நிர்ப்பந்தங்கள், சுமைகள், கவலைகள் என்பதை இந்தத் திரைப்படம் மிக அருமையாக சித்தரிக்கிறது. நடிகர் திலீப் ஆசாபாசங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மனிதனாக இதில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். நல்லொழுக்கமும் நல்ல பழக்க வழக்கங்களும் உயர்ந்த சிந்தனைகளும் உடைய மனிதனாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தொடர்ந்து அப்படி வாழ்வது ஒரு மனிதனுக்கு எத்தனை சிரமம் இந்த வாழ்க்கையில் என்ற கரு தான் கதையின் அடி நாதம்.
இன்றைய வாழ்க்கையின் அத்தியாவசியப் பொருளான ‘கைபேசி’ என்ற ஒன்று இல்லாத எண்பதுகளில் நடந்த கதையாக இந்தப் படம் செல்லுகிறது.
வீட்டை எதிர்த்து, வெளியேறி காதாநாயகன் திலீப்பும் அவர் நேசித்த பெண்ணான கோபிகாவும் திருமணம் செய்து கொண்டு ஒரு சிறிய கிராமத்தில் வீடு பிடித்து வாழுகிறார்கள். ஒரு சிறு ஆற்றைக் கடந்து தினமும் கதாநாயகன் தன் பத்திரிகை அலுவலகம் வந்து தனக்கான பயணங்களையும் அலுவல்களையும் மேற்கொள்ள வேண்டும். இளம் மனைவி தாய்மையடைந்து, அருகேயிருந்து பார்த்துக்கொள்ள யாருமேயில்லாத சூழ்நிலையில் ஒரு சாதாரண பத்திரிகை அலுவலகத்தில் குறைந்த சம்பளத்தில் தினமும் கதாநாயகன் அல்லல்படும் வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது கதை.



ஞானபீட விருது பெற்ற அறிஞரும் எழுத்தாளருமான சிவசங்கரன் பிள்ளை, எல்லா உறுப்புக்களும் மெல்ல உயிர் விட்ட நிலையில் இறப்பை நோக்கி நினைவிழந்து கிடக்கிறார். அவரின் இறப்பு தன் பத்திரிகையில்தான் முதலில் வர வேண்டும் என்று ஒவ்வொரு பத்திரிகையும் தன் ரிப்போர்ட்டரை அவர் இல்லத்தருகே நாட்கணக்காக தவம் கிடக்க வைக்கிறது. ஒவ்வொரு ரிப்போர்ட்டரும் அலைபேசி வசதியின்றி, குடும்பத்துடன் பேச வழியின்றி பல வித மன உளைச்சல்களுடன், அவசரங்களுடன் ஆதங்கக்குமுறல்களுடன் தவித்து நெகிழ வைக்கிறார்கள். கடைசிப் பதிவு பத்திரிகையில் ஏற வேண்டிய, விடியற்காலை 3 மணி வரை காத்திருந்து விட்டு, அதன் பின் தன் சைக்கிளில் தன் கிராமத்துக்குப் பறக்கும் கதாநாயகன், அந்த சிறிய ஆற்றைக் கடக்க பகலில் அடிக்கடி வந்து செல்லும் படகு இல்லாததால் நீந்தியே அதைக்கடந்து, வீட்டை அடைந்து தன் மனைவி அமைதியாக தூங்குவதைப்பார்த்ததும் ‘ அப்பாடா’ என்று பெருமூச்செறிகிறான். ஒரு அன்பான, அக்கறையான நியாயமான பயம் அது!

எழுத்தாளர் சிவசங்கரன் கதாநாயகனின் சிறு வயதில் அவனுக்கு ஒரு ஆதர்ச குருவாக இருந்து அறிவையும் எழுத்தையும் சில காலங்கள் சொல்லிக் கொடுத்தவர். அவர் இப்படி அசையாது கிடப்பதைப் பார்க்கும் திலீப் கண் கலங்கி அவர் நலமாக உயிர்த்தெழ வேண்டி முதலில் பிரார்த்தனை செய்து கொள்கிறான். நாளாக நாளாக, மனைவியின் அனாதரவான நிலையும் தன் கையாலாகாதத் தனமும் அவனின் நல் உனர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் ‘ எப்போது தான் இவர் இறந்து போவார்?’ என்ற சலிப்பு அவனுக்கே ஏற்பட்டதும் அவன் மனது கலங்கிப்போகிறது. தன் சக ரிப்போர்ட்டரிடம் ‘ நாமெல்லாம் கூட பினம் தின்னிக்கழுகுகள் மாதிரி தான் இல்லை?’ என்று கசந்து போய் சொல்லுகிறான். மேலும் சில நாட்கள் அப்படியே கடந்து செல்ல, மனைவின் பிரசவ பயமும் அவளை அருகேயிருந்து கவனிக்க முடியாத தன்னிரக்கமும், சட்டென்று அந்த வேலையை உதறி விட முடியாத ஆத்திரமும் ‘ ஒன்றுமேயில்லாத, எல்லா உறுப்புகளும் செயலற்றுப்போன அந்த மனிதரை நாமே தான் கொன்றால் என்ன?’ என்று முடிவெடுக்க வைக்கிறது. நள்ளிரவில் அந்த முடிவை செயல்படுத்த அவரின் வீட்டிற்குள் புகுந்த அவன், தன் சிறு வயதில் பார்த்த அவரின் புகைப்படத்தைப் பார்க்கிறான். அவர் சொல்லிக்கொடுத்த அனைத்தும் நினைவுக்கு வருகையில் மனம் கூசிப்போகிறான் அவன். திரும்ப நினைக்கும்போது, யாரோ உள்ளிருந்து ஓடுவதைப் பார்த்து அவனைத் துரத்துகிறான். பிடிபட்டது, அவனுடன் பழகிய சக ரிப்போர்ட்டர்தான். கதறி அழும் அவன் திலீபிடம் ‘ என்னால் குடும்பத்தை விட்டு இப்படி மன உளைச்சல் தினம் தினம் பட முடிய வில்லை. அதனால்தான் அப்படி செய்தேன். அவரைக் கொன்று விட்டேன். நீயே உன் பத்திரிகை ஆபிஸில் சொல்லி முதல் செய்தியாக போட்டுக்கொள். எனக்கது வேண்டாம். நான் தான் இந்தக் கொலையைச் செய்தேன் என்று மட்டும் யாரிடமும் சொல்லி விடாதே’ என்று காலைப்பிடித்துக் கண்ணீர் விடுகிறான்.



படம் இதோடு முடியவில்லை. பின்னாளில் திலீப் அதே எடிட்டர் நாற்காலியில் அமர்ந்து,‘ தன் மனைவியைப் பார்க்க மருத்துவ மனை செல்ல வேண்டும்’ என்று கெஞ்சும் இளம் ரிப்போர்டரிடம் ‘ உன் மனைவியை யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். இந்த செய்தியை நம் பத்திரிகை தான் போட வேண்டும் முதலில். அதற்கான வழியைப்பார்’ என்று அதட்டும் ஒரு முதலாளியாக மாறிய திலீப்புடன் முடிகிறது!!
சந்தர்ப்பங்களும் தத்தளிப்புகளும் மட்டும் ஒரு மனிதனை மாற்றுவதில்லை, பதவியும் பணமும்கூட அவனை மாற்றுகிறது என்பதை முகத்தில் அறைவது போல இந்தப்படம் சொல்லி முடிக்கிறது.
அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம் இது!!