Friday 26 February 2021

முத்துக்குவியல்-60!!!

 

சிந்திக்க வைத்த முத்து: 

நேற்று ஒரு இயற்கை மருத்துவர், Drug free diabetic club நடத்துபவர் யு டியூபில் பேசிய விஷயம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. சர்க்கரை நோய் பற்றி அவர் நிறைய பேசினார். ' இன்றைக்கு எந்த சர்க்கரை நோய் நிபுணரிடம் சென்றாலும் நமது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரைக்கேற்ப அவர்கள் மாத்திரைகள் கொடுப்பதுடன் நாம் பின்பற்ற வேண்டிய தினசரி உணவுப்பட்டியல் ஒன்றையும் கொடுக்கிறார்கள். அதன்படி  நாம் காலையில் 3 இட்லி அல்லது 2 சப்பாத்தி, மதியம் ஒரு கப் சாதம்+நிறைய காய்கறிகள், இரவிலும் அதே 3 இட்லி அல்லது 2 சப்பாத்தி வேண்டும். . இந்த உணவுப்ப‌ட்டியலைத்தானே சர்க்கரை நோயாளிகள் தினமும் கடைபிடிக்கிறார்கள்? மாவுச்சத்தை நிறுத்தாமல் குறைக்காமல் தினமும் சாப்பிட்டால் இதில் எப்படி சர்க்கரை குறையும்? நமக்குத்தேவை தினமும் 50 கிராம் கார்போஹைட்ரேட். ஆனால் காலை, மதியம், இரவு என்று நாம் 100 கிராம் மாவுச்சத்தை சாப்பிடுகிறோம். இப்படி சாப்பிட்டாலும் சர்க்கரை கூடத்தானே செய்யும்? சர்க்கரை நோய் மருத்துவர்கள் மாவுச்சத்தை குறைத்து புரதம், கொழுப்பு அதிகமான மெனுவைத்தானே சாப்பிட வற்புறுத்த வேண்டும்? ' என்று சொன்ன போது அதிச்சியாக இருந்தது. நானும் நாலைந்து வருடங்களுக்கு முன் இதைத்தானே கடைபிடித்தேன்? மனம் விழித்துக்கொண்ட போது மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்து பல வருடங்களாகியிருந்தன.. இந்த மெனுப்படி, தினமும் உணவு எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை கூடத்தானே செய்யும்?




அதற்கேற்றாற்போல மாத்திரைகளும் கூடத்தானே செய்யும்? அதிக மாத்திரைகளால் சிறுநீரகமும் மெல்ல மெல்ல கெடத்தானே செய்யும்? இதென்ன மருத்துவ முறை? மாவுச்சத்து மிக மிக குறைவாக உள்ள உணவுப்பட்டியலைத்தானே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்? அரிசி சாதத்தை பரிந்துரைக்கும் மருத்துவர் கூட பாலிஷ் செய்யப்படாத அரிசியை பரிந்துரைக்கவில்லையே? 

அசத்திய முத்து: 

ஷில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலியின் முதல் பெண் கலெக்டர். பல அரசு விருதுகளுக்கு சொந்தக்காரர். தன் பெண்ணை அரசு அங்கன்வாடியில் சேர்த்து அதிரடி காட்டியவர். .கர்நாடகத்தைச்சேர்ந்த இவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்காக மத்திய அரசின் ' தூய்மை இந்தியா திட்ட சிறப்பு விருது' கிடைத்திருக்கிறது.



 திருநெல்வேலி முழுவதும் கட்டப்பட்டிருக்கும் சமுதாயக் கழிவறைகளை சரியாக‌ பராமரித்து முறையான பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததற்காக இந்து விருது கிடைத்துள்ளது. மீனவப்பெண்களுக்கும் கிராமப்பெண்களுக்கும் காணி பழங்குடியினருக்கும் பல விதங்களில் உதவி செய்து வருகிறார். தற்போது சென்னையில் சுகாதார குடும்ப நல திட்ட அலுவலகத்தில் இணை செயலாளராக இருக்கிறார். 

அபாய முத்து: 

பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கு மூலையிலுள்ள ஒரு கிராமத்தில் 80 வயது பெரியவர் ஒருவர் தன்னை சுற்றி சுற்றி வந்து ரீங்காரமிட்ட ஒற்றை ஈயை கொல்ல மின்சார ராக்கெட் ஒன்றை உபயோகித்திருக்கிறார். அப்போது வீட்டிலிருந்த சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டரில் இலேசாக கசிவு ஏற்பட்டிருப்பது அவருக்குத் தெரியவில்லை. 




மின்சார ராக்கெட்டை உபயோகிக்கத் தொடங்கியதுமே வீட்டின் சமையலறை வெடித்து சாம்பலானது. இலேசான காயங்களுடன் அவர் தப்பி விட்டார். ஆபத்துக்கள் எந்தெந்த வடிவில் எல்லாம் வருகிறது!! மின்சார ராக்கெட்டை உபயோகத்தில் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்கவும். 

இசை முத்து: 

என்னுடைய all time favourite-என்றைக்குமே என் மனதில் முதலிடத்தில் இருக்கும் பாட்டு இது. சுத்த தன்யாசி ராகத்தில் சுசீலா தன் தேன் குரலில் மயங்க வைப்பார். அதனாலேயே ராகங்களில் எனக்கு மிகவும் பிடித்த ராகமாக ‘ சுத்த தன்யாசி ‘ ஆகி விட்டது. ஆச்சரியம் என்னவென்றால், எப்போது இந்தப்பாட்டைக் கேட்டாலும் அதன் இனிமைக்கு முன்னால் வேறு எதுவும் மனதுக்கு அந்த சில நிமிடங்களில் புலப்படுவதில்லை. அந்த மாதிரியான பாதிப்பை இன்றைக்கும்கூட இந்தப் பாட்டு உண்டாக்குகிறது!! கர்ணன் திரைப்படத்தில் வரும் ‘ கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? ‘ பாடல் தான் அது. பொதுவாக வெகு சிலரே அதே இனிமையுடன் பாடுவார்கள். எல்லோராலும் இதை அத்தனை எளிதாக பாடி விட முடியாது. அப்படி ஒரு பெண் மிக இனிமையாக இந்தப்பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டு ரசியுங்கள். இந்தப்பாடல் உருவாக தில்ரூபா, ஷெனாய், சந்தூர் போன்ற இசைக்கருவிகள் உபயோகிக்கப்பட்டதாம். பாடல் ஆரம்பிக்கும் முன் தொலைக்காட்சியில் அதிகமான இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் இந்தப்பாடல் உருவான விதம் பற்றி இன்னும் நிறைய சொல்லுகிறார்.


 


Monday 15 February 2021

எண்ணங்கள்!!!

ஆறுதலும் தைரியமும் கொடுத்து அன்புடன் எழுதிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய நன்றி!!


 கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட 25 நாட்களுக்குப்பிறகு மீண்டும் வலைத்தளம் வருகிறேன்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் இங்கே ஐக்கிய அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக பத்திரிக்கைகளில் செய்தி வருகின்றன. ஆரம்பத்தில், கடந்த மார்ச்சில் இருந்த அதிக தாக்கம் இப்போது இருக்கிறது. ஆனாலும் அதிக கட்டுப்பாடுகள் இல்லாமல் திறமையாக சமாளித்து வருகிறது அரசு. மார்ச்சுக்குள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என்று சொல்லுகிறது அரசு. 

அனைத்து வியாபாரங்களும் படுத்து விட்டன. பெரிய பெரிய கம்பெனிகள் தங்கள் தொழிலாளர்களை வெளியே மொத்தமாக அனுப்புகின்றன. உணவகங்கள் அத்தியாவசியமான தொழிலாய் போய் விட்டதனால் ஓரளவு உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன. அதனாலேயே மளிகை. காய்கறி வியாபாரம் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. எங்கள் உணவகங்களும் பல சட்ட திட்டங்களுடன் இயங்கி வருகின்றன. சென்ற வருடம் போல இந்த சமயத்திலும் மீண்டும் பாதி இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்று சுகாதார அலுவலகம் சொல்லி விட்டது. 

ஒரே ஒரு நல்ல விஷயம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வாடகையை ஓரளவிற்கு குறைத்து விட்டன. வீடுகள் நிறைய காலியாகி விட்டன. இருக்கிற கம்பெனிகளும் பாதி சம்பளம் தான் கொடுக்க முடிகிறது ஊழியர்களுக்கு. துபாயைப்பொறுத்த வரை, சுற்றுலா தான் நாட்டின் வருமானத்திற்கு பெருமளவில் ஆதாரமாக இருக்கிறது. அதில் விழுந்த அடியால் நிறைய சுற்றுலா கம்பெனிகள் பல இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. நிறைய சுற்றுலா கம்பெனிகளின் உரிமையாளர்கள் வேறு தொழில்களில் இறங்கி விட்டார்கள். என் மகனும் சுற்றுலா கம்பெனி வைத்திருப்பவர். இன்னும் சில மாதங்களுக்கு விமானங்கள் முழுமையாக இயங்க முடியாத நிலையில் எல்லா நாடுகளுமே இருப்பதால் என் மகனும் எங்கள் உணவக தொழிலில் முழுமையாக இறங்கி விட்டார். ஆச்சரியம் என்னவென்றால்  இளம் தம்பதிகள் கொரோனாவைப்பற்றி கவலைப்படாமல் துபாய்க்கு சுற்றுலா வந்து செல்கிறார்கள். மாஸ்க் போட்டுக்கொண்டு, முதல் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்து ரசிக்கிறார்கள். கொரோனோவைப்பார்த்து அலுத்துப்போய் விட்டது போலிருக்கிறது அவர்களுக்கு!

சமீபத்தில் தான் அதுவும் கொரோனா பாதித்த பிறகு தான் படித்தேன் கொரோனா பாதித்தால் நாவின் சுவை நரம்புகள் வேலை செய்யாது என்பதை. அது தான் கொரோனா பாதிப்பின் முதல் அடையாளமாம். எங்கள் அனைவருக்குமே நாக்கு மரத்துப்போய் எந்த சுவையுமே 10 நாட்களுக்கு தெரியாமல் இருந்தது. அடுத்தது முகரும் சக்தியும் போய் விடுகிறது. அப்புறம் தான் வரட்டு இருமல், காய்ச்சல், இருமல், உடம்பு வலி என்று தொடர்கிறது. மூச்சுத்திணறல் பற்றி கேட்ட போது, எங்கள் டாக்டர் " கொரோனா பாதித்ததே தெரியாமல் மிகவும் தாமதமாக கண்டு பிடித்து அதற்குள் அதன் பரவல் உடலில் அதிகமாகிப்போனால் எப்படியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பத்து நாட்களுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடும். ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டு விட்டால் அந்த மாதிரி பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. முதல் பத்து நாட்களுக்குள் மூச்சுத்திணறல் வரவில்லையென்றால் அதற்கப்புறம் வராது. " என்று சொன்னார். 

வெளியே செல்ல வழியில்லாமல் தனிமைப்படுத்திக்கொண்டு விட்ட‌தால் எங்கள் உணவகங்களை மேலாளர்கள் தான் பார்த்துக்கொண்டார்கள். தொலைபேசி வழியாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தோம். 

திடீரென்று ஒரு உணவக மேலாளரின் மனைவி ஊரில் இறந்து விட்டதாக தகவல் வந்தது. அவரை உடனேயே அனுப்பி வைத்தோம். அவர் முப்பதாம் நாள் காரியங்களை முடித்து விட்டு திரும்பி வந்தார். அவர் வந்து ஒரு வாரம் ஆகவில்லை. அதற்குள் முக்கியமான சமையல்காரருக்கு மயக்கம் ஏற்பட, பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு ஆஞ்சியோ செய்து தான் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அப்போது கூட, அவர் ஊருக்குப்போக விரும்பவில்லை. நாங்கள் எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் செய்திருப்பதால் இங்கே சிகிச்சையோ அறுவை சிகிச்சையோ மேற்கொண்டால் மிகவும் குறைந்த செலவிலேயே சிகிச்சை முடிந்து விடும். அவருக்கு ஆஞ்சியோ செய்ததில் மூன்று அடைப்புகள் இருந்ததால் இன்றைக்கு அவருக்கு மூன்று ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. மொத்த செலவும் நம் இந்திய ரூபாயில் பத்தாயிரம் தான்!! 

பல வருடங்களுக்கு முன்பு. என் கொழுந்தனாருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த போது எங்கள் உயிரே எங்களிடம் இல்லை. அந்த அளவு பதட்டமும் க‌வலையும் இருந்தன. இப்போதோ எல்லாமே சர்வ சாதாரணமாக போய் விட்டது. 


Monday 1 February 2021

இதுவும் கடந்து போகும்!!!

 பதினைந்து நாட்களுக்கு முன், பொங்கல் முடிந்த அடுத்த சில நாட்களில் என் மருமகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டது. அடுத்த நாளிலேயே மகனுக்கும் அதே மாதிரி உடம்பு முழுவதும் வலி வந்ததும் என் மகன் காரை எடுத்துக்கொன்டு கொரோனா சென்டருக்குச் சென்று பரிசோதனை செய்து வந்தார். அடுத்த நாளிலேயே பாஸிடிவ் என்ற ரிசல்ட் வந்து விட்டது. அன்றைக்கே சற்று அதிகமாக பணம் கட்டியதும் வீட்டிற்கே வந்து அனைவருக்கும் சாம்பிள் எடுத்துச்ச் என்றார்கள். அடுத்த நாளே எங்கள் எல்லோருக்கும் பாஸிடிவ் என்ற தகவலுடன் அரசு சுகாதார அமைப்பிலிருந்து செய்தி வந்தது. அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படியாக தகவல் வந்தது. உடனேயே வேலை செய்யும் பெண்ணை தற்காலிகமாக நிறுத்தினோம். பேப்பர் பிளேட்டுகள், தம்ளர்கள், அத்தியாவசிய உணவுப்பொருள்கள் என்று வாங்கினோம். அடுத்த நாளிலிருந்து காய்ச்சல், உடல் வலி, குளிர், சளி, இருமல், ஒவ்வாமை என்று அனைவருக்கும் தீவிரமாக உடலை படுத்தி எடுக்க ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு தெரிந்த தமிழ் மருத்துவரிடம் தேவையான ஆலோசனைகள் பெற்றோம். தினமும் விட்டமின்கள் C, D, ZINC எடுப்பதுடன் காய்ச்சலுக்கும் தீவிர சளி பிடித்தலுக்கும் மருந்துகளை வாட்ஸ் அப்பிலேயே எழுதி அனுப்பினார். மிகவும் கவனமாக இருக்கும்படியும் அதிகமான ஓய்வெடுக்கும்படியும் உடலை வருத்தி வேலைகளை செய்தால் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகுமென்றும் சொன்னார். வீட்டிலுள்ள இரு சிறு குழந்தைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அவர்களுக்கு ஒரு டானிக் போல தரச்சொன்னார்.


கடந்த 15 நாட்கள் வீடே ஒரு க்ளினிக் போல ஆகியது. மிகுந்த உடல் பிரச்சினைகளுக்கிடையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக நகர்ந்தது. காய்ச்சலால் உடல் தள்ளாமை. வலி மாத்திரையைப்போட்டுக்கொண்டு, வலுக்கட்டாயமாக ஏதேனும் உணவு தயாரித்தாலும் யாருக்குமே சாப்பிட முடியாமை, வெளியிலிருந்து உணவு வாங்கினாலும் அதே நிலைமைதான். வெளியே துபாய் குளிர் 15 டிகிரிகளுக்கு இரவு நேரத்தில் இறங்கியது. ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றங்களுடன் நாள் நகர்ந்து சென்றது. 11 நாட்கள் முடிவில் அரசாங்கத்தின் சுகாதார அமைப்பிலிருந்து ' நீங்கள் வெற்றிகரமாக கொரோனா பாதிப்பை கடந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். இனி நீங்கள் மகிழ்வுடன் இருங்கள்' என்று தகவல்கள் வந்தன. அப்படியும் மெதுவாக சிறு சிறு வலிகளுடன் நாட்கள் கடந்து கடந்த இரண்டு நாட்கள்தான் எல்லோரும் கொஞ்சம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். குவாரன்டைன் நாட்கள் பதினான்கையும் கடந்து வந்து விட்டோம். இப்போது தான் வீடு மெதுவாக இயங்கத்தொடங்கியிருக்கிறது. வேலைக்காரப்பெண் வேலை செய்ய வந்து விட்டது. கொஞ்சம் அப்பாடா என்றிருக்கிறது. இன்னும் சிறிது இருமல், தொண்டையில் பாதிப்பு என்று இன்னும் உள்ளே மருந்துகள் போய்க்கொண்டிருக்கின்றன. இழந்த தெம்பு திரும்பி வர இன்னும் மூன்று மாதங்களாகும் என்று மருத்துவர் சொல்லி, சத்தான உணவு வகைகள், அசைவம் என்று சாப்பிடச் சொல்லியிருக்கிறார். இன்னும் சோர்வு இருக்கிறது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன!!!