Thursday 21 December 2023

முத்துக்குவியல்-70!!

 வாழ்நாள் முழுவதும் பேசவே முடியாதவள்  என்று மருத்துவர்களால் தீர்மானம் செய்யப்பட்ட ஒரு பெண் குழந்தை இன்று உலகிலேயே ஐக்யூ அதிகமான பெண்ணாக உருவாகி பல்வேறு விஞ்ஞானிகள், உலகின் புகழ்பெற்ற மகத்தானவர்கள் முன் 15 வயதிலேயே உரையாற்றி, 23 வயதில் இன்று மகத்தான சாதனைகள் செய்து கொண்டிருக்கிறார். அவரைப்பற்றி இதோ:

சாதனை முத்து:

இளம் வயதிலேயே தன் அறிவுக்கூர்மையால் பல சாதனை நிகழ்த்தி வருபவர் விலாசினி. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த குமாரசாமி, சேது ராகமாலிகா ஆகியோரைப்பெற்றோராக கொண்ட விலாசினி பிறந்த போது குறை மாதக் குழந்தை. பேசவே என்றும் முடியாது, 30 நாட்கள் கூட வாழ இயலாவர் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்.

பிறந்த 41வது நாளிலிருந்து தினமும் 20 மணி நேரம் தனது தாயிடம் பேசுவதற்காக பயிற்சி பெற்று, ஒன்பதாவது மாதத்திலேயே பேசத்தொடங்கியவர். இரண்டரை வயதிலேயே மேடையேறி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கான ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளித்தவர்.

சராசரி மனிதர்களுக்கான நுண்ணறிவுத்திறன். ஐக்யூ லெவல் 90 முதல் 110 வரை இருக்கும். விசாலினிக்கோ ஐக்யூ லெவல் 225. இது உலகிலேயே அதிகம்.



தொடக்கப்பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளை ஒரே கல்வியாண்டில் முடித்து அடுத்த வருடம் மூன்றாம், நான்காம் வகுப்புகளை அதே ஆண்டிலேயே முடித்தார். எட்டாவது வகுப்பு முடித்த நிலையில் சிறப்பு அனுமதியோடு விருதுநகர் பல்கலைக்கழகத்தில் பி.டெக் கணினி அறிவியலில் சேர்ந்து நான்காண்டு படிப்பை மூன்று ஆண்டுகளிலேயே முடித்து 96 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றார். அமெரிக்க முன்னணி நிறுவனமான சிட்கோவின் சி.சி.என்.ஏ தேர்வில் 12 வயது பாகிஸ்தான் மாணவி இர்டிஸா ஹைதரை தன் 10வது வயதிலேயே முறியடித்தார். பி.டெக் முடித்த பின் பல நாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக ஊதியத்துடன் வேலை வாய்ப்புகள் வந்த போதிலும் உலகின் முன்னணி பல்கலைக்கழங்களிடமிருந்து மிக அதிக கல்வித்தொகையுடன் மேற்படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் வந்தும் இவர் தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே இரண்டாண்டு எம்.டெக் படிப்பை 98 சதவிகிதம் பெற்று ஒன்றரை ஆண்டுகளிலேயே மீண்டும் முதல் மாணவியாக தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். 

தற்போது செயற்கை நுண்ணறிவுத்துறையில் பி.எச்.டி படிப்பிற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

15 வயதிலேயே இவரின் திறமையை வியந்து இந்திய வெண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவில் உரையாற்ற அழைப்பு விடுத்தது. இஸ்ரோ இயக்குனர் தலைமையில் 700க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்தியில் இவர் ' புதிய தகவல் தொழில் நுட்பங்கள்' குறித்து விரிவாக உரையாற்றினார்.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 15 வயது மாணவியான விசாலினிக்கு இஸ்ரோ ஒரு ஆராய்ச்சிப்பணியை அவ்ழங்கியது. 2 ஆண்டுக்ளில் முடிக்க வேண்டிய அந்தப்பணியை 35 நாட்களில் முடித்து நாட்டிற்கு சமர்ப்பித்தார்.

இவருக்கு 11 வயதானபோதே 15 சர்வதேச கணினி மாநாடுகளுக்கு தலைமை விருந்தினராஆ அழைக்கப்பட்டு கம்ப்யூட்டர் நெட் வொர்க்கிங் குறித்து சிறப்புரையாற்றினார்.

தமிழக அரசு நான்காண்டுகளுக்கு முன்பே, 11ம் வகுப்பு ஆங்கிலப்படநூலில் விசாலினியைப்பற்றிய பாடத்தை சேர்த்தது.

பார்வைக்குறைபாடு உள்ள‌ மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியின்றி தாங்களே புத்தகங்களை வாசிக்கும் விதமாக ஒரு கருவியை உருவாக்கியுள்ளார். அது விரைவில் உபயோகத்துக்கு வரவுள்ளது.

தற்போது தகவல் தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்னறிவை அடிப்படையாக வைத்து பாதுகாப்பு சார்ந்து சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் இவர். இவரது எதிர்கால இலட்சியம் அறிவியல் துறையில், இந்தியாவிற்கு நோபல் பரிசு பெற்றுத்தர வேண்டும் என்பதாகும்.

சாதனை முத்து-2

இந்த இதய மருத்துவர் ஆசியாவிலேயே அறுவை சிகிச்சையின்றி வால்வுகளை மாற்றி வைக்கும் திறன் படைத்தவர். இவரின் பேச்சுத்திறனையும் இந்த வீடியோவில் ரசித்த‌போது பிரமித்துப்போனேன். உடலின் பல பாகங்களை இப்படியெல்லாம் இந்த அளவிற்கு ரசனையோடு பேச முடியுமா? மனதில் இவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கினேன்!! கேட்டு ரசித்து அனுபவியுங்கள்!!

இவரைப்பற்றி மேலும் அறிய: https://www.saisatish.com/