Tuesday 31 December 2013

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!




அன்பான குடும்பமும்
ஆயிரமாய் நற்சிந்தனைகளும்
இனியதாய் நற்பயன்க‌ளும்
ஈகையில் இன்பமும்
உயர்வான எண்ண‌ங்களும்
ஊரே தோழமையுமாய்
எல்லாமும் கைவரப்பெற்று
ஏற்ற மிகு வாழ்க்கை தனை

அனைவரும் அடைந்திருக்க‌
ஆயிரமாயிரம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



 

Tuesday 24 December 2013

அன்புள்ளங்களுக்கு இனிய நன்றி!!


என்னுடைய 200 வது பதிவு இது.

தமிழகத்துக்கும் அரபு நாட்டிற்குமான தொடர்ந்த பயண‌ங்கள், அது தொடர்பான சுமைகள் பல நேரங்களில் நான் நினைத்த அளவு எழுத இயலாமலும் பின்னூட்டங்கள் தர இயலாமலும் இருந்து வருகிற போதிலும் பதிவெழுதுவது என்பது குளிர்ந்த மழைச்சாரலில் அவ்வப்போது நனைகிற மாதிரி மனதுக்குக் கிடைக்கிற சந்தோஷம் இது! பதிவுலகில் நுழைந்ததிலிருந்து இன்று வரையிலும் பதிவுகள் வெளியிட்ட போது, எந்த ஒரு பதிவிலுமே ஆர்வமும் சுவாரஸ்யமும் எனக்குக் குறைந்ததேயில்லை.   இயல்பான எழுத்தார்வம் ஒரு காரணம் என்றாலும் அதற்கு முக்கிய காரணம் வலையுலக நண்பர்களாகிய உங்கள் அனைவரது அன்பும் தொடர்ந்து வரும் உங்களின் அருமையான பின்னூட்டங்களும் தான்!!

உங்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!!



சிலந்தி வலைகள்!!

வாழ்க்கையில் வளர்ப்புப்பிராணிகள் என்று பலரும் நாய், பூனை, பறவைகள் என்று அன்புடன் வள‌ர்ப்பதைப்பார்த்திருக்கிறோம். அவற்றையொட்டி பல விதக்ககதைகளை அறிந்திருக்கிறோம், ரசித்திருக்கிறோம். ஆனால் சிலந்திப்பூச்சிகளையும் ஒருத்தர் செல்லப்பிராணிகள் போல தன் வீட்டில் வைத்து வளர்க்க முடியும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அப்படியொரு செய்தியை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. மனிதர்களுக்கே உரிய ரசனையும் குணங்களும் சிலந்திகளுக்கும் இருப்பதை அறிந்த போது என் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது. நான் ரசித்த செய்திகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விலங்கியல் துறைப்பேராசிரியை திருமதி. அன்ன சுதாதேவி தன் வீட்டில் 40 க்கும் மேற்ப‌ட்ட சிலந்திப்பூச்சிகளை வளர்த்து வருகிறார். இவர் வீட்டில் சுவர், கதவு போன்ற எல்லா இடங்களிலும் சிலந்திப்பூச்சிகள் ஓடி விளையாடிக்கொண்டிருக்கின்றன. சிலந்திப்பூச்சிகளால் மனித வாழ்வுக்குக் கிடைக்கும் நன்மைகளைப்பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் இவர்



வலைகள் பின்னுவதால் இவற்றிற்கு வலையான் என்றும் பெயர் உண்டு. உலகில் 30 ஆயிரம் வகை சிலந்திப்பூச்சிகள் உள்ள‌ன.  பொதுவாக சிலந்திக‌ள் ஆறு மாதம் வரையில் தான் உயிர் வாழ்கின்றன. சிலந்திகள் முட்டையிட்டு வலை பின்னி அவற்றை மூடி பாதுகாக்கின்றன. இவை குக்கூன் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குக்கூனிலும் 10 முதல் 500 வரை முட்டைகள் இருக்குமாம்.
சிலந்திப்பூசிகளின் அடி வயிற்றில் ஆறு ஓட்டைகள் உள்ள‌ன. இவற்றின் வழியாக வரும் ' சிப்பனர் ரெட்' என்ற திரவம் காற்று பட்டதும் நூல் போல மாறி விடுகின்றது. இவற்றைக்கொண்டு தான் சிலந்திகள் வலை பின்னுகின்றன. இவற்றில் ஆர்ஃப் வலை, சீட் வலை, புனல் வலை என்று பல பிரிவுகள் உள்ள‌ன. இவை காற்று, மழையில் அழிந்து போகாத அளவிற்கு உறுதியானவை. விதம் விதமாக இவை வலை கட்டினாலும் இவற்றுக்கு கண் பார்வை கிடையாது. வலையில் ஏற்படும் அதிர்வுகளால்தான் உணவைக்கண்டறிகின்றன. சிலந்திகள் திரவ உணவை மட்டுமே உண்பதால் மற்ற‌ பூச்சிகளிலுள்ள திரவத்தை மட்டுமே உண்டு வாழ்கின்றன. வலையில் பூச்சிகள் வந்து சிக்கிக் கொண்டால் தன் உடலிலுள்ள விஷம் போன்ற திரவத்தை அதன் மீது செலுத்தி அவற்றை செயலிழக்க வைத்து அதன் பின் அந்த பூச்சிகளிலுள்ள திரவத்தை உறிஞ்சுகிறது.

அயல்நாடுகளில் இதய வால்வு அறுவை சிகிச்சைக்கும் பாரசூட், மீன் வலை தயாரிப்பிற்கும் சிலந்தியின் வலையை உபயோக்கிகிறார்கள். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க சிலந்திகளை வயல்களில் விடலாம் என்ற விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளிலும் ஈக்கள், கொசுக்கள் இவற்றை இந்த சிலந்திகள் அழிக்கின்றன.

பிளக்சிபல் என்ற சிலந்தி தினமும் 10 ஈக்களைப் பிடித்து தின்கின்றனவாம். அரைனஸ் என்ற சிலந்தி மாலையில் மட்டுமே வலை பின்னுமாம். அதாவது, மாலையில் வலை கட்டி பூச்சிகளைப்பிடித்து உண்டு விட்டு காலை தன் வலையைக் கலைத்து விட்டுச் சென்று  விடுமாம். யோலோபோரஸ், ஆர்ஜியோப்பல்சல்லா போன்ற சிலந்திகள் கண்கள் இல்லாமல் தன் வலையை நீள‌ அகலம் கச்சிதமாகப்பார்த்து வெள்ள நிற நூலால் பார்டர் கட்டி அழகு படுத்துமாம்.
ஸ்டிகேடைவஸ் என்ற வகை சிலந்தி தன‌க்கு இரை கிடைத்ததும் தன் குடும்பத்துடன் சேர்ந்து தான் உண்ணுகின்றன. அதே போல தன் குடும்பத்துடன் அருகிலுள்ள‌ கூடுகளுக்கு விருந்துக்கும் செல்லுமாம் தன் குடும்பத்துடன்!

இது போன்ற பல அரிய தகவல்களைச் சொல்லும் அன்ன சுதா தேவி மற்ற‌ உயிரினங்களுக்கு சரணாலயம் இருப்பது போல சிலந்திகளுக்கும் அரசாங்கம் ஒரு சரணாலயம் ஏற்படுத்த வேண்டும் என்று கோருகிறார்.

Wednesday 18 December 2013

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?

 சாதம் எப்படி உண்ண வேண்டும் என்பது பற்றிய சில குறிப்புகளை ஒரு புத்தகத்தில் படித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதைப் பகிர்ந்து கொள்ள நினைத்த போது, பழைய சங்க காலப் பாடல்களில் படித்த சில அழகிய கருத்துக்கள் நினைவில் எழுந்தன.

ஒளவையார் எது கொடியது என்ற தன் வெண்பாவில், எல்லாவற்றையும் விட கொடுமையானது, அன்பில்லா பெண்டிர் கைகளால் பரிமாறப்படும் உணவை உண்பது தான் என்று அழுத்தம் திருத்தமாகக்க் கூறியிருக்கிறார்.

என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோஅன்பிலாள் இட்ட அமுது என்றும் கூறியிருக்கிறார்.

இன்னொரு வெண்பா [பாடல் சரியாக நினைவில் இல்லை]
பாலும் தேனும் பாகும் கலந்து அத்தனை சுவையான அடிசிலும் அன்பில்லாத கையால் உண்ணும்போது விஷமாகிறது. அதுவே பழைய சாதம் கூட அன்போடு பரிமாறப்படுகிறபோது, அதுவே அமிர்தமாகிறது என்று அழகாகக்கூறுகிறது !


முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழிகளின் சிறப்பும் பாடல்களின் அருமையும் நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது!

சரி, இப்போது சாதம் எப்படி சாப்பிட வேன்டும் என்ற விஷயத்திற்கு வருகிறேன்.

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?


சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.
தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்குக்காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும்சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்ப்டி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேக வைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயு வை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும்போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக் கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்ல தெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள். முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது. பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும் பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். சிலர் சாம்பார், ரசம், வற்றல் குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல். மோர் சாதம் செரிமானக்கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது. சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

Tuesday 10 December 2013

முத்துக்குவியல் -24!!

ஆச்சரியப்பட வைத்த முத்து:



நோபல் பரிசு பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தப்பரிசு என்ன காரணத்தால் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்த போது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இயற்கையான முறையில் எல்லோருக்கும் உதவ வேன்டும் என்ற உந்துதலில் அவை ஏற்படுத்தப்படவில்லை. தன் பெயருக்கு விளைந்த களங்கத்தைத் துடைக்கவே நோபல் பரிசுகளை வருடா வருடம் தரும் முறையை ஏற்படுத்தினார் நோபல்!
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் முதன் முதலாக டைனமைட்டை கண்டுபிடித்தார். சிறிது நாட்களில் அவர் சகோதரர் இறந்த போது, இவர் இறந்ததாக தவறாகப் புரிந்து கொண்ட ஒரு பிரெஞ்சு நாளிதழ், டைனமைட் கண்டு பிடித்த இவர் ஒரு மரண வியாபாரி என்று குறிப்பிட்டிருந்தது. தன் பெயர் உலக சரித்திரத்தில் தவறாக இடம் பெறப்போகிறது என்று அஞ்சினார் ஆல்ஃப்ரெட் நோபல். தீர யோசித்தவர் தன் உயிலை எழுதினார். அதன் படி, தன் சொத்துக்களில் பெரும் பங்கை இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் என்ற ஐந்து பிரிவுகளில் உலகளாவிய பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் தன் பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி விட்டு இறந்து போனார். நோபல் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து 1901ஆம் ஆண்டு டிசம்பர் 10ந்தேதியிலிருந்து முதன் முதலாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன் முதலாக எக்ஸ்ரேயைக் கண்டு பிடித்த ராண்ட்ஜன்  பரிசு பெற்றார்.

ரசித்த முத்து:

வீழ்ந்தால் விதையாக விழு.
எழுந்தால் மரமாக உயர்ந்து எழு.
ஓடினால் ஆற்றைப்போல ஓடு.
தேடினால் கடல் கடந்து தேடு.
நேசித்தால் மனித நேயத்தை நேசி.
வாசித்தால் உழைப்பின் மகத்துவத்தை வாசி! 


[அவசியமான] குறிப்பு முத்து:

கரப்பான் பூச்சிக்கு பயப்படாதவர் யார்? வீட்டிற்கு வீடு அரசாட்சி செய்யும் இதை அழிக்க ஒரு குறிப்பு: சினேகிதி சொன்னது இது.
வெள்ளரி தோல்களை ஒரு அலுமிய பாத்திரத்தில் போட்டு வைத்தால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் கிட்டே வராது.

மருத்துவ முத்து:

மூக்கிலிருந்து நீர் கொட்டுவதற்கு:
மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, சமையல் மஞ்சளை எண்ணெயில் நனைத்து பிறகு விளக்கில் சுட்டால் வரும் புகையை முகர்ந்தால் மூக்கிலிருந்து நீர் கொட்டுவது நிற்கும்.



SMART SOCKS:

சாதாரணக்குழந்தைகளை விட, எடை குறைவாக, மூச்சுத்திணறல் போன்ற பல்வகைப் பிரச்சினைக‌ளுடன் பிறக்கும் குழந்தைகளை பொதுவாய் மருத்துவ மனைகளில் இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவை, இதயத்திடிப்பினை தாய் அறிந்து கொள்ளும் விதத்தில் அமெரிக்காவில் ஒரு பிரபல நிறுவனம் ' ஸ்மார்ட் ஸாக்ஸ்' தயாரித்துள்ள‌து.
இந்த ஸாக்ஸை குழந்தைக்கு அணிவித்து விட்டால் இந்த ஸாக்ஸிலுள்ள ஒரு கருவி குழந்தையின் இதயத்துடிப்பு, தோலின் தன்மை, உடலின் வெப்ப அளவு, தூக்கத்தின் நிலைகள், போன்றவற்றை பதிவு செய்து அதன் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள‌ ஸ்மார்ட் ஃபோனுக்கு அந்தத் தகவல்களை இணைய தளம் மூலம் அனுப்பி வைக்கிறது. குழந்தைக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ இதயத்துடிப்பில் மாறுதல்கள் ஏற்பட்டாலோ இந்தக் க‌ருவியின் மூலம் ஸ்மார்ட் ஃபோனுக்கு எச்சரிக்கை அலாரம் வடிவில் உடனடியாக வந்து சேரும். பெற்றோரும் உடனடியாக மருத்துவரை அழைக்க முடியும்.

கலங்க வைத்த முத்து:



இந்தப்புகைப்படத்தை என் சினேகிதி அனுப்பியிருந்தார். குழந்தையை அதன் தாய் அன்போடு கொஞ்சும் பின்னணியில் ஒரு கவிதை! முதியோர் இல்லத்தில் வாடும் ஒரு தாயில் கண்ணீர் தான் தலைப்பு!
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வ்யிற்றில்!
நான் இருக்க ஒரு இருட்டறை
கூடவா இல்லை உன் வீட்டில்?

 

Tuesday 26 November 2013

இதுவும் கடந்து போகுமா?

10 நாட்களுக்கு முன் பிரபல சர்க்கரை நோய் நிபுணரைப்பார்க்கப் போயிருந்தேன். எடை பார்க்கும் மிஷின் மேல் நிற்கச் சொன்னது வரவேற்பில் இருந்த‌ பெண். அது எழுதிய எடையைப்பார்த்ததும் திகீரென்றது. 10 நாட்களுக்கு முன் வந்ததற்கும் இப்போதைக்கும் 4 கிலோ குறைந்திருந்தது. மனசு அப்படியே கலவரமாகி விட்டது. எப்படி இது 10 நாட்களில் சாத்தியமாகும்? உடலில் ஏதாவது மோசமான பிரச்சினை இருந்தாலொழிய இப்படி திடீரென்று எடை இறங்காது. குட்டையாய் குழம்பிப்போனது மனது. வேறெதிலும் மனம் பதியவில்லை. என் முறை வந்ததும் மருத்துவரிடம் பேசிய போது என் சந்தேகத்தைக்கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே ' இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். உயரத்திற்கு சரியான எடையில் தானே இருக்கிறீர்கள்? இதற்கு மேலும் குறைந்தால் தான் கவலைப்பட வேண்டும்' என்றார். அப்போது தான் அவரைக்கூர்ந்து கவனித்தேன். அவரின் வாய் ஒரு பக்கம் கோணியிருந்தது. ஸ்ட்ரோக் வந்தவர்களுக்குத்தானே அப்படி இருக்கும்? எல்லா சந்தேகங்களும் மனதைக்குடைய அவர் எழுதிய மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். 
 
 

எடை குறைந்திருப்பற்றி என் புலம்பலைக் கேட்ட‌ என் கணவர் ' வீட்டிற்கு வந்து எடை பார்க்கும் க‌ருவியில் எடையை சரி பார்த்த பிறகு கவலைப்படுவதில் அர்த்தம் உண்டு. அதற்குள் எதற்கு குழம்பிப்போனாய்?' என்று கடிந்து கொண்டார்கள். அப்புறம் எங்கள் வீட்டு எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தால் பழைய எடை தான் இருந்தது. ஒரு மாதிரி உயிர் வந்தது. அப்புறம் விசாரித்ததில் நிறைய மருத்துவமனைகளில் நமக்கு முன் எடை பார்த்தவர்கள் சென்ற பிறகு திரும்ப அதை பழைய நிலைக்கு ஜீரோ செட்டிங்கிற்கு பணியாளர்கள் சரி செய்வதே இல்லை என்று தெரிந்தது!! இதனால் எத்தனை மனக்குழப்பம்! எத்தனை தவிப்பு!! அந்த மருத்துவரைப்பற்றியும் விசாரித்தேன். அவருக்கு சமீபத்தில் தான் ஸ்ட்ரோக் வந்து மருத்துவக்கண்காணிப்பில் இருந்ததாகச் சொன்னபோது திகைப்பாக இருந்தது. இந்த மாதிரி நிலையில் மருத்துவ பிராக்டீஸ் செய்யலாமா 

நான் பொதுவாக எந்த மருத்துவர் எந்த மருத்து எழுதிக்கொடுத்தாலும் மருந்துக்கடை வைத்திருக்கும் ஒரு சினேகிதிக்கு ஃபோன் செய்து அந்தந்த மருந்து வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் தராமல் இருக்குமா என்று கேட்டுக்கொள்வேன். அதே போல, அவர் எழுதிக்கொடுத்த மருந்தப்பற்றி கேட்டதும் ' இந்த மருந்தா? இது இந்திய அரசாங்கம்  தடை செய்யப்பட்ட மருந்தாயிற்றே?? இதை சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று தானே தடை செய்தார்கள்? தடையை நீக்கி விட்டார்களா என்ன? என்று என்னையே திருப்பிக்கேட்டார். சொரேலென்றது எனக்கு! அதற்க‌ப்புறம் என் குடும்ப டாக்டரிடம் சென்ற போது, அவர் சிரித்தவாறே ' உங்களுக்கு மட்டுமல்ல, நான் யாருக்குமே இந்த மாத்திரையை எழுதித் தரமாட்டேன்' என்றார். 

ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்றாலும் ஓரளவு கற்ற‌, படித்த அறிவு இருப்பதாலும், கேள்விகளும் விளக்கங்கள் கேட்பதாலும் அதிர்ஷ்டவசமாக தப்பித்திருக்கிறேன். படிப்பறிவு இல்லாதவர்களும் பொருளாதார வசதி இல்லாதவர்களும் தான் நம் சுதந்திர இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்ன செய்வார்கள்? 

சமீபத்தில் ஸ்ரீராம் தன் வலைத்தளத்தில் வெளியிட்ட ' மருத்துவ அராஜகங்கள்' என்ற பதிவைப்படித்தேன். சிந்திக்க வைத்த‌ பதிவு அது. ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளராய் இருந்த குணால் சாஹாவிற்கே தன் மனைவியைத் தவறான சிகிச்சையிலிருந்து மீட்டெடுக்க முடியவில்லை என்றால் நம் நாட்டின் மிகச் சாதாரண பிரஜைகள் என்ன செய்ய முடியும்? அது போன்ற அராஜகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கிறது. விடிவு காலம் எப்போது?

 

Tuesday 19 November 2013

வலிகள்!!....!!

பொதுவாய் நம் எல்லோருக்குமே தினம் தினம் விதம் விதமாய் அனுபவங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. சில மகிழ்ச்சியில் துள்ள‌ வைப்பதாய், சில ஆழ்ந்து யோசிக்க வைப்பதாய், சில தனிமையில் விழி நீர் சிந்த வைப்பதாய்.. எத்தனை எத்தனை அனுபவங்கள் வாழ்க்கை நெடுக நம்மைப்புடம் போடுகின்றன! நம் வாழ்க்கையில் வந்து கடந்து செல்கின்ற சில அனுபவங்கள் தான் வலியைக்கொடுக்கின்றன என்பதில்லை, யாருக்கோ வலித்தால் கூட நமக்கும் சேர்த்தே வலிக்கின்றது. யாருக்கோ கண்கள் கலங்கினால் கூட நம் விழிகளும் ஈரமாகின்றன. வாழ்க்கை முழுமைக்கும் நம் கூடவே இந்த வலிகளும் பயணம் செய்கின்றன!

இரன்டு அனுபவங்கள் இந்த வாரம்! இரண்டுமே மனதில் வலியைக் கொடுத்தவை.

முதலாம் அனுபவம் தெரிந்த ஒரு பெண்ணைப்பற்றியது. சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு யதேச்சையாகச் சந்தித்தேன். வீட்டிற்கு வந்தவர் வழக்கமான சுறுசுறுப்பின்றி சோர்வாகக் காணப்பட்டார். பிறகு பேச முற்பட்டவரின் கண்கள் கலங்கிப்போயிருந்தன. அதுவரையிலும் அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு அதிகம் தெரிய வந்ததில்லை. ஒரு முறை, தன் பாட்டி வீட்டிலிருந்து 7 கல் தொலைவிலுள்ள ஹோட்டலிலிருந்து ரவா தோசை வாங்கி வரும்படி கேட்டதற்காக இரவு 10 மணிக்குச் சென்று வாங்கி வந்ததாகக்கூறி வீட்டில் அப்படிப்பட்ட தீராத நிர்ப்பந்தங்கள், தொல்லைகள் இருப்பதாகக்கூறி நொந்து கொண்டார். சொந்தமான சிறு தொழில் நடத்தியும் இடைப்பட்ட நேரத்தில் வெளியில் சென்று வேலை பார்த்தும் இவர் தான் குடும்பத்தின் முக்கிய பொருளாதார மையமாகத் திகழ்கிறார். இதைத்தவிர வேறு எதுவும் எனக்கு அவரைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.

தளர்ந்து போய் அமர்ந்திருந்தவர் மெதுவாக தன்னைப்பற்றிக் கூற ஆரம்பித்தார்.
  
இவரது தாத்தாவிற்கு ஐந்து மகன்களும் நான்கு மகள்களும் பிறந்திருக்கிறார்கள். வீட்டின் முத்த மகள் தான் இவரின் தாயார். தாயாரின் சிறிய தம்பியையே இவர் மணந்திருக்கிறர். முதல் குழந்தை உதடுகள் இல்லாமல் பிறந்ததாம். எப்படியிருந்திருக்கும் இவருக்கு! மூன்று முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து குறையை சரி செய்திருக்கிறார். இரண்டாவது குழந்தை கருத்தரித்த போது, அதுவும் அப்படி பிறந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து மருத்துவர்களிடமும் ஸ்கான் செய்து பார்த்து விவாதித்திருக்கிறார். கருக்கலைப்பு செய்து விடவும் முடிவு செய்திருக்கிறார்.  மருத்துவர்கள் ஸ்கானில் குழந்தை நன்றாக இருப்பதாகக் கூற, தாய்மையை மறுபடியும் எதிர்கொள்ள‌ முடிவு செய்திருக்கிறார். குழந்தை பிறந்த போது தான் ஸ்கான் செய்து பார்த்தவர்கள் சொன்னது தவறு என்பதை உணர்ந்திருக்கிறார். அந்தக்குழந்தையும் உதடுகள் இல்லாமலும் தொண்டையில் உள்ளே ஒரு துளையுடனும் பிறந்தது. திடப்பொருள்கள் எது சாப்பிட்டாலும் அது சாப்பிட்டதும் மூக்கின் வழியே உடனே வெளியில் வந்து விடும். அதைப்பார்த்துப் பார்த்து எந்த‌ அளவிற்கு வேதனைப்பட்டிருப்பார் இவர்!  இந்தக்குழந்தைக்கும் இரு அறுவை சிகிச்சை நடந்து முடிந்து விட்டதாம். மூன்றாவது பாக்கியிருக்கிறதாம்.




குழந்தை வளர்ப்பு, தன் சகோதரியையும் தாயையும் கவனித்தல் என்ற எதிலுமே பட்டுக்கொள்ளாமல் இருக்கும் கணவரை நினைத்துப் பொருமுகிறார் இவர். 'தன் சொந்த தாயாரையும் சகோதரியையும் கூடவா கவனிக்க மனம் வராமலிருக்கும் ஒருத்தருக்கு? என் அம்மாவிற்கு இரவு நேரங்களில் ஆஸ்த்மா தொந்த‌ரவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும் கூட நான் தான் அந்த‌ நேரத்திலும் மருத்துவரிடம் ஓட வேண்டும்!' என்று குமுறுகிறார் இவர். ஒன்பது குழந்தைகளைப்பெற்றும் யாருக்கும் தன் தாயை வைத்து பராமரிக்க மனமில்லையாம். 'எங்கள் வீட்டில் வைத்து திடீரென்று இறந்து போனால் என்ன செய்வது? வீட்டு உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது?' என்கிறார்களாம். இத்தனைக்கும் தற்போது அந்த மூதாட்டிக்கும் இரண்டு கண்களும் தெரிவதில்லையாம். 'வாழ்க்கை போராட்டம் நிறைந்தது தான். ஆனால் போராட்டம் மட்டும் தான் வாழ்க்கை என்றால் எப்படி இந்த வாழ்க்கையை சகித்துக்கொண்டு வாழ்வது?' என்று கண்ணீர் விட்டு அழுத அவருக்கு, மனம் முழுவதும் ரணங்களை மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் அவருக்கு  என்னால் வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியவில்லை!! நல்ல நேரமும் காலமும் அவருக்கு சீக்கிரமே வரும் என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது!!

                                              ***************************************

  சச்சின் டெண்டுல்கரைப்பற்றி நிறைய எழுதப்பட்டு விட்டது. எனக்கும் எழுத சில அனுபவங்கள் பாக்கியிருக்கிறது. 1989ம் வருடம் அவர் முதன் முதலாக பாகிஸ்தான் சென்று விளையாட ஆரம்பிக்கும் முன் இந்தியாவில் ஒரு எக்ஸிபிஷன் மாட்சில் விளையாடினார். ஆறுகள் தொடர்ந்து பவுண்டரியைத் தாண்டி பல முறை பறந்து சென்றன. அப்படியே பிரமித்து உட்கார்ந்திருந்தேன். ஸ்ரீகாந்த் அவரை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். கூட்டத்தின் கரகோஷம் விண்ணைப்பிளந்தது. இது தான் அவரை முதன் முதலாகப்பார்த்தது. அப்புறம் பாகிஸ்தான் சென்று விளையாடியதையெல்லாம் பார்க்க முடியவில்லை. நாளிதழ்களில் படித்ததுடன் சரி. ஷார்ஜாவில் இருந்தபோது சச்சின் 17 வயதில் இங்கிலாந்து சென்று அவர்களின் பந்துகளை துவம்சம் செய்தார். அப்போதெல்லாம் இப்போது போல நேரடி ஒளிபரப்பு என்பது இல்லையென்பதால் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு படுத்தவாறே ரேடியோவில் லைவ் கமெண்ட்ரியைக் கேட்டது நினைவுக்கு வருகிறது. ஒரு டெஸ்ட் மாட்சில் இங்கிலாந்து வீரர் ஆலன் லாம்ப் சச்சினின் பந்து பவுண்டரியை நோக்கிப்பறந்ததை தடுக்க முடியாமல் ' வாட் எ செவ‌ன்டீன்!' என்று சொல்லி வியந்து போனது மிகவும் புகழ் பெற்ற‌ வாசகம்.



ஷார்ஜாவில் தான் இந்தியா அதிக ஒரு நாள் போட்டிகளை விளையாடியுள்ள‌து. அது போன்ற கூட்டத்தையும் ரசிகர்களையும் விண்ண‌திர எழுந்த ஸ்லோகன்களையும் வேறு எங்கேயும் அதுவரை யாரும் பார்த்ததில்லை. புழுதிப்புயலில் ஆவேசத்துடன் விளையாடிய சச்சினை மறக்க முடியுமா? தோற்றாலும்கூட, 237 ரன்களை இந்தியா அடைந்தால் இறுதி விளையாட்டிற்குத் தகுதி பெறும் என்ற நிலையில் அந்த புழுதிப்புயல்கூட அவரின் ஆவேசத்திற்கு முன் பறந்தோடியது. இந்தியா 237 ரன்களை பெற்றதும் ரசிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஆனந்தக் கூத்தாடியதைப்பார்த்து ஆஸ்திரேலிய காப்டன் ஸ்டீவ் வாஹ் சொன்னார்,' தோற்றுப்போன ஒரு டீம் இப்படி சந்தோஷப்படுவதை நான் இப்போது தான் பார்க்கிறேன்!''  என்று!! அது தான் சச்சின் டென்டுல்கர்! அடுத்த நாள் இறுதிப்போட்டியில் சச்சின் அதே போல ஆவேசத்துடன் விளையாட, இந்தியா ஜெயித்தது. அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே சொன்னார், ' தூங்கும்போது கூட சச்சின் பந்துகள் என் தலைக்கு மேல் ஆறுகளை நோக்கிப் பறந்தன!' என்று!!

1999 என்று நினைக்கிறேன். தஞ்சை வந்திருந்த போது, என் சகோதரி இல்லத்தில் கிரிக்கெட் மாட்ச் ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்த வீட்டிலிருந்த குடும்பத்தினர் வந்து அவசரமாக வெளியில் செல்வதாகவும் திரும்பி வர நாலைந்து மணி நேரமாகும் என்றும் சொல்லி அவர்கள் பிள்ளையைப்  அதுவரையில் பார்த்துக்கொள்ள‌ச் சொல்லி என் சகோதரியிடம் சொல்லிச் சென்றனர். அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதிருக்கும்‍, என் அருகில் வந்து உட்கார்ந்தவன் தான்! உண‌ர்ச்சிப்பெருக்குடன் கூக்குரல்கள், விமர்சனங்கள், எனக்கு இடை இடையில் விளக்கங்கள் என்று துல்லியமாக ரசித்த அவனைப்பார்த்து அசந்து போயிருந்தேன் நான்!! ஐந்து வயதுக் குழந்தை முதல் தள்ளாடும் வயதில் முதியவர்கள் கூட சச்சினின் ரசிகர்கள் தான்!!

இந்தியாவையும் ஒவ்வொரு இந்தியனையும்  பெருமையடையச் செய்தவர் அவர். கடந்த 15ந்தேதி அவர் உணர்ச்சிப்பெருக்குடன் விடை பெற்ற போது, பிட்சைத்தொட்டு வணங்கிய போது ஆயிரமாயிரம் கண்கள் கலங்கிக்கொண்டேயிருந்தன. என் கண்களும் கலங்க, மனதில் ஒரு இனம் புரியாத வலி!!

Monday 11 November 2013

முத்துக்குவியல்-23!!

அறிவியல் முத்து:

பாக்கு சாப்பிடுவதால் நெஞ்சு வலி உன்டாகுமா?



வரும். பாக்கு ஒரு irritantஆக செயல்படுகிறது. அதனால் உண‌வுக்குழலிலும் இரப்பையிலும் காணப்படும் சிலேட்டுமப்படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது. இதனால் நெஞ்சு வலி உண்டாகுகிறது.

அதிர்ச்சியளித்த முத்து:

இன்றைக்கு விபத்துக்களும் மரணங்களும் நம்ப முடியாத வகையில் பல விதங்களில் ஏற்படுகின்றன. இங்கே தஞ்சையின் செல்வந்தர் ஒருவருக்கு ஏற்பட்ட மரணம் அதிர்ச்சி அளிக்கக் கூடியது. பல் செட் கட்டியிருந்த 70 வயதிற்கும் மேற்பட்டவர் அவர். சாதாரணமாக உறங்கச் செல்கையில் பல் செட்டைக் க‌ழற்றி வைத்து விட்டு உறங்குவது அவர் வழக்கம். அன்று அது போல அதை கழட்ட முயற்சித்துக்கொன்டிருக்கையில் திடீரென்று விருந்தினர் வர, அதை அப்படியே விட்டு விட்டு விருந்தினரிடம் பேசப்போய் விட்டார். விருந்தினர் சென்ற பிறகு கழட்ட முயற்சித்த பல் பற்றிய நினைவின்றி அமர்ந்தவருக்கு தூக்கக் கலக்கத்தில் தலை சாய்ந்திருக்கிறது. அந்த அதிர்வில் பல் கழன்று உள்ளே சென்று மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ள, மருத்துவரிடம் செல்வதற்குள்ளேயே மூச்சுத் திணறலால் உயிரிழந்து விட்டார் அவர். நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு தீடீர் விபத்தால் ஏற்பட்ட அவரின் மரணம் இங்கு எல்லோரையுமே பாதித்து விட்டது.

சிரிக்க வைக்க முத்து:

5 வயது பெண்:

ஏம்மா உன் முடியில் 2 முடி வெள்ளையாய் தெரியுது?

அம்மா:

அதுவா, நீ அம்மா சொல்வதைக் கேட்காமல் கத்தறப்போ ஒரு முடி வெள்ளையாயிட்டு. நீ சேட்டை பண்ணுற‌ப்போ இன்னொரு முடி வெள்ளையாயிட்டு.



குழந்தை:

அப்போ நீ ரொம்பவே சேட்டை பண்ணுவே போலிருக்கு?

அம்மா திகைப்புடன்

ஏன் அப்படி சொல்லுறே?

குழந்தை:

பாட்டியோட முடி எல்லாமே வெள்ளையா இருக்கே?

குறிப்பு முத்து:


குக்கரிலுள்ள ஸ்க்ரூ லூஸானால் குக்கர் சூடாக இருக்கும்போதே முறுக்கி விடவும். அப்படி செய்தால் பிடிகள் அடிக்கடி லூஸாகாது.

ரசித்த முத்து:

வெற்றியின் போது கைத்தட்டும் பத்து விரல்களை விட, சோதனையின் போது கண்ணீரைத் துடைக்கும் ஒரு விரலே உயர்ந்தது.
பேச வேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்து விட்டால்
அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.

மருத்துவ முத்து:



துள‌சி இலைளை தேங்காய்ப்பால் விட்டு மையாக அரைத்து நெற்றிப்பொட்டு வைக்கும் இடத்தில் ஏற்படும் அரிப்பிற்கு தொடர்ந்து தடவி வந்தால் நாளடைவில் அரிப்பு சரியாகி விடும்.

புகைப்படங்களுக்கு நன்றி: GOOGLE

 

Wednesday 6 November 2013

மாங்கல்ய பலமருளும் மங்கள நாயகி!!

சென்ற முறை மயிலாடுதுறைக்கு என் சினேகிதியுடன் சென்ற போது, வழியில் இருக்கும் திருமங்கலக்குடியிலுள்ள‌ கோவிலைப்பார்க்க ஆசையாக இருக்கிறது என்றார். அதனால் கும்பகோணத்திலிருந்து கதிராமங்கலம் வழியாக திருமங்கலக்குடி கோவிலுக்குச் சென்றோம். குடைந்தையிலிருந்து ஆடுதுறை சென்று அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சென்றாலும் இக்கோவிலை அடைந்து விடலாம்.இக்கோவிலிலுள் உறைந்திருக்கும் இறைவி மங்களாம்பிகையை வழிபட்டால் மாங்கல்ய பலம் என்றும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

 

இத்தல வரலாறு சுவாரசியமானது. மன்னன் குலோத்துங்க சோழனின் காலத்தில் அலைவாணர் என்னும் அமைச்சர் மன்னனின் வரிப்பணத்தைக்கொன்டு திருமங்கலக்குடியில் தான் கண்டெடுத்த சுயம்புலிங்கத்திற்குக் கோயில் கட்டினார். அதையறிந்த மன்னன் சீற்ற‌மடைந்து அமைச்சரை சிரச்சேதம் செய்யுமாறு உத்தரவிட, அந்த அமைச்சரின் மனைவி திருமங்கலக்குடி இறைவி மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்ல்யக்காப்பு தருமாறு நெஞ்சுருகி அழுதாள். இருப்பினும் மன்னனின் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, அமைச்சரின் உயிரற்ற‌ உடல் அவரின் கோரிக்கப்படி திருமங்கலக்குடியில் தகனம் செய்ய வேண்டி அங்கே எடுத்துச் செல்லப்பட்டது. அவர் உடல் திருமங்கலக்குடிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவர் மீண்டும் உயிர் பெற்றார். அதனால் அன்று முதல் தன்னை வழிபடுவோர்க்கு இறைவி மங்கள நாயகி மாங்கல்ய பலம் அருளுவதாக தல வரலாறு சொல்கிறது.

 

 
நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் அருகிலுள்ள சூரியனார் கோவில். தோஷத்தை நீக்கியதோ திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள  பிராணவரதேஸ்வரர். இதைப்பற்றியும் ஒரு சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது. 

காலவர் என்ற தவத்தில் சிறந்த முனிவர் தனக்கு வரப்போகும் தொழு நோயை அறிந்து அதைப்போக்க‌ முன்வினைப்பயன்களுக்கேற்ப பலன்கள் தரும் நவக்கிரகங்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். நவக்கிரகங்களும் அவரது தவத்தின் பயனாய் நேரில் தோன்றி அவருக்கு குஷ்ட நோய் பீடிக்காதிருக்க வரமருளினார்கள். இதனை அறிந்த பிரம்மா கடும் சினம் கொன்டார். நவக்கிரகங்களை அழைத்து, " சிவனின் ஆணைப்படியும் கால தேவனின் வழிகாட்டுதலின் பேரிலும் அவரவர் வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்கள் மட்டுமே அளிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. தனித்து இயங்கும் அதிகாரம் உங்களுக்கில்லை. எல்லையை மீறி தன்னிச்சையாக நடந்ததால் அதே தொழு நோய் உங்களை பீடிக்கட்டும்' என்று சாபமிட்டார். பிரம்மனின் சாபத்தினால் அவர்களுக்கு தொழு நோய் பற்றியது. பிறகு மன்னிப்பு கேட்டு அரற்றிய நவக்கிரகங்களுக்கு சாப விமோசனமும் தந்தார் பிரம்மன். அதன் படி நவக்கிரகங்கள் திருமங்கலக்குடி வந்து கடும் தவம் இயற்ற‌த்தொடங்கினர். 

 திருமங்கலக்குடிக்கு வந்த அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி கடும் உண்ணா நோன்பு இருந்து திங்கள் கிழமைகள் மட்டும் வெள்ளெருக்க இலையில் தயிர் சாதம் புசித்து நவக்கிரகங்கள் தவம் புரிந்து வந்தன. 79ம் நாள் இறைவனும் இறைவியும் காட்சி தந்து அவர்களின் தொழு நோயைப்போக்கி, 'அருகில் ஒரு ஆலயம் அமைத்து அங்கு வந்து உங்களை வழிபடுபவர்களுக்கு தோஷங்களைத்தீருங்கள்' என்று உபதேசித்தார்கள். காலவ முனிவரும் தன்னால் இத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருந்தி, நவக்கிரகங்களுக்கு அருகில் ஒரு கல் தொலைவில் ஒரு ஆலயம் அமைத்துத் தந்தார். அதுவே புகழ் பெற்ற சூரியனார் கோவில் ஆயிற்று. அதனால் திருமங்கலக்குடியை வழிபட்ட பிறகே சூரியனார் கோவிலை வழிபட வேன்டும் என்பது தொன்று தொட்டு வந்த‌ மரபாக உள்ளது.
 


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து, மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால், இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோத்ச‌வத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. மங்களாம்பிகை என்ற‌ மங்களநாயகி அம்மன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார் 

இறைவன் பிராணவரதேஸ்வரர் என்றும் பிராணநாதேஸ்வரர் என்றும் பிராணநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை என்றும் மங்கள நாயகி என்றும்  அழைக்கப்படுகிறார். 

உடலில் நோயுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இறைவனுக்கு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நிவேதனம் செய்து அதை சாப்பிட்டு வந்தால் வியாதிகள் நீங்கப்பெறுவார் என்பது இங்கு தொடர் வரலாறு! 

இத்தலம் அப்பர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். ஊர் மங்கலக்குடி, அம்பாள் மங்களாம்பிகை, மங்கள விமானம், மங்கள தீர்த்தம், மங்கள விநாயகர் என மங்களமே உருவாக இருப்பதால் இது, பஞ்ச மங்களத்தலம் எனப்படுகிறது.

 

 


Wednesday 30 October 2013

ரவா வாழைப்பழ கேசரி!!

தீபாவளி பல வித இனிப்பு வகைகளுடன், நெய் வாசத்துடன் நெருங்கிக்கொன்டிருக்கிறது. பல வருடங்களாயிற்று தீபாவளியின் போது தமிழகத்தில் இருந்து! இந்த வருடம் தான் ய‌தேச்சையாக அது சாத்தியமாகியிருக்கிறது. வீதியெங்கும் வெடிகளும் மத்தாப்பூ வகைகளும் கடைகளில் நிரம்பி வழிகிறது. முறுக்கு மாவு அரைப்பதும் அதிரசத்துக்கும் பயத்தம்பருப்பு லட்டுவிற்கும் மாவரைக்க, பெண்கள் பல வேலைகளுக்கிடையே மெஷினில் அரைத்து வருகிறார்கள். கடைத்தெரு செல்லவே முடியாதபடி,தஞ்சையின் முக்கிய வீதிகளிலுள்ள துணிக்கடைகடைகளில் அத்தனை கூட்டம், அடாத மழையிலும் கூட! வார இதழ்களும் மாத இதழ்களும் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் விள‌ம்பரங்களையும் நிரப்பி அதிக விலைக்கு விற்க ஆரம்பித்து விட்டன! தீபாவளியின் அத்தனை அமர்க்களங்களையும் ரசிக்க ஆரம்பித்து விட்டேன். 

சரி, ஒரு இனிப்பைத்தந்து தீபாவளியை வரவேற்கலாமென்று நினைத்து இந்த வாழைப்பழ கேசரியைப்  பற்றி எழுத ஆரம்பிக்கிறேன்.  

பொதுவாய் கேசரி எல்லோரும் அறிந்த இனிப்பு தான். ஆனால் இந்த கேசரி செய்யும் முறை சற்றே வித்தியாசமானது. அதுவும் அதில் வாழைப்பழ துண்டுகள் சேர்க்கும்போது அலாதியான ருசி வந்து விடும். என்ன வாழைப்பழம் என்பதைப்பொறுத்து ருசியின் தன்மை வித்தியாசப்படும். ரஸ்தாளி நல்ல ருசி கொடுக்கும். முயன்று பாருங்கள்!


 
ரவா வாழைப்பழ கேசரி
தேவையான பொருள்கள்: 
வாழைப்பழம்- 2 [ கனிந்தது]
நெய்- 1 கப்
முந்திரிப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
திராட்சை   -   1 மேசைக்கரண்டி
ரவா            -  1 கப்
காய்ச்சி ஆறவைத்த பால்- 2 கப்
சீனி                   - 2 1/2 கப்
இலேசான சூடுள்ள நீர்- 1 கப் 

செய்முறை: 

நெய்யை மெதுவான தீயில் சூடாக்கவும்.
முதலில் முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுத்து வைத்துக்கொள்ள‌வும்.
அதன் பின் திராட்சையை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
பிறகு அதே நெய்யில் ரவாவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
பிறகு அதில் பால், சீனி, நீர் சேர்த்து கெட்டியாகும் வரை சமைக்கவும்.
பிறகு வாழைப்பழங்களை மிகச் சிறிய துண்டுகளாக்கிச் சேர்க்கவும்.
மேலும் 5 நிமிடங்களுக்கு மெதுவான தீயில் திராட்சை, முந்திரிப்பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.

சுவையான ரவா வாழைப்பழக்கேசரி தயார்!! 

நெய் மணக்கும் இனிப்புக்களுடன்





மத்தாப்பூ, வெடிகளுடன்


              வலைச்சர அன்புள்ள‌ங்கள் இனிதே தீபாவளியைக்கொண்டாட‌
அன்பின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
 

 

 
 
 


 

Tuesday 22 October 2013

இல்லத்து நிவாரணிகள்!!

நம் சமையலறையில் இருக்கும் பொருள்களைக்கொண்டும் வெளியில் கிடைக்கும் சில எளிமையானப் பொருள்களைக்கொண்டும் அன்றாடம் நமக்கு ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளைத் தீர்க்க முடிகிறது. சின்னச் சின்ன சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. அந்த மாதிரியான சிறு சிறு வீட்டுக்குறிப்புக்கள் இதோ!



1..பலகாரம் செய்யும்போது எண்ணெய் வைக்கும் வேளையில் இஞ்சி சிறிது, சிறிது வாழைப்பட்டைத்துண்டு இவற்றை நசுக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்துப்போட்டு பிறகு பலகாரம் செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது. பலகாரத்திலும் எண்ணெய் வாசம் வராது.



2.  வாழைத்தண்டின் மேல் பட்டையை நீக்கி தண்ணீர் நிறைந்த மெல்லிய பிளாஸ்டிக் பை ஒன்றில் முக்கி முடிச்சிட்டு வைத்தால் 15 நாட்களானாலும் கெடாது.



3.  சீதாப்பழ விதைகளை வெய்யிலில் காய வைத்து அரிசி, பருப்பு டப்பாக்களில் போட்டால் பூச்சி, புழுக்கள் அண்டாது.

4.  மல்லியை முளைக்க வைக்க, ஒரு சமமான பலகையால் இலேசாக அழுத்தி எடுத்தால் போதும். முழுதாய்ப் போட்டால் முளைக்காது.

5.  அவசரமாக இட்லி மாவு புளிக்க மாவை ஹாட்பாக்ஸில் ஊற்றி வைக்கவும்.



6.  மோர் புளிக்காதிருக்க சிறிது வெண்ணெய் உருட்டி அதில் போட்டு வைத்தால் மோர் புளிக்காது.



7.  உபயோகித்த முட்டை ஒட்டை ஆங்காங்கே போட்டு வைத்தால் பல்லி வீட்டை விட்டு ஓடி விடும்.



8..மழைக்காலங்களில் தீப்பெட்டிகளில் ஏழெட்டு அரிசி மணிகளைப்போட்டு வைத்தால் தீக்குச்சிகள் நமுத்துப்போகாது.

9. ஒரு கைப்பிடி பொரியை பொடித்து சேர்த்தால் ரவா உப்பும மிகவும் சுவையாக இருக்கும்.

படங்கள்: கூகிளுக்கு நன்றி!!
 

Friday 4 October 2013

முதற்பதிவின் சந்தோஷம்-தொடர்பதிவு!!

' முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவில் கலந்து கொள்ளுமாறு சகோதரர் தமிழ் இளங்கோ என்னை சென்ற மாதம் அழைத்திருந்தார்கள். அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

முதல் பதிவென்பதை என் வாழ்க்கையில் இரண்டு மூன்று கட்டங்களாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது.

என் இளம் வயதுப்பருவம் முழுக்க முழுக்க புத்தகங்கள் தான் என் முதற்காதலாக, உற்ற சினேகிதியாக இருந்திருக்கின்றன. கல்கியின் ‘ சிவகாமியின் சபதமும்’ ஆங்கிலத்தில் ‘Denise Robins நாவல்களும் கீட்ஸ், ஷெல்லி, தாமஸ் மூர் இவர்களது கவிதைகளும் தான் அந்த வயதுக்கனவுகளில் வலம் வந்திருக்கின்றன.. அதனாலேயோ என்னவோ, மனதில் கதை எழுதும் தாகம் இருந்து கொண்டே இருந்தது. இளம் வயதில் அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணி செய்த போது, ஒரு நாள் மனதில் அதுவரை தேக்கி வைத்திருந்த ஆர்வத்தையெல்லாம் கொட்டி எழுதி
‘ பிரிந்து விட்ட பாதைகள் இணைவதில்லை’ என்ற சிறுகதையாக அப்போது, எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக்கொண்டு வெளி வந்து கொண்டிருந்த ‘ தினமணி கதிர்’ வார இதழுக்கு அனுப்பி வைத்தேன். எழுத்துலகில் இது தான் என் முதற்பதிவு.

அப்போதெல்லாம் பிரபல எழுத்தாளர்கள், தங்கள் முதல் சிறுகதை எத்தனை எத்தனை தொடர் முயற்சிகளைக் கண்டிருக்கின்றன என்று எழுதியதையெல்லாம் படித்திருந்ததாலோ என்னவோ கதை பிரசுரமாகுமா என்ற தவிப்போ, கனவோ ஏதுமின்றி, மற்ற என் வேலைகளில் மூழ்கி கிட்டத்தட்ட சிறுகதை அனுப்பியதையும் மறந்தே போனேன். ஒரு நாள் தினமணிக்கதிரைப் புரட்டியபோது, என் சிறுகதை என் பெயரில், ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களோடு வெளிவந்திருப்பதைப்பார்த்ததும், மகிழ்ச்சி, பிரமிப்பு எல்லாமே ஒரே நேரத்தில் மின்னல் போலத் தாக்கின. அதன் பின் வந்து சேர்ந்த ஆசிரியரின் கடிதம், ஊக்குவிப்பு, கதை எழுதியதற்கான அன்பளிப்பு எதுவுமே மனதில் ஊன்றிப்பதியாத அளவு நான் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன்னால் புகழ் பெற்ற வார இதழில் வெளி வந்த இந்த முதல் பதிவின் சந்தோஷத்தை இன்றைக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்கத்தெரியவில்லை. ஆனால் மிக இளம் வயதில் கைகளில் வந்து விழுந்த புதையலாய், வரமாய் அதை நினைத்துக் கொண்டாடியது மட்டும் இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.

இணைய உலகில் முதற்பதிவு என்றால் அது ஒரு சமையற்குறிப்பு தான். www.mayyam.com என்ற வலைத்தளத்தின் உணவுப்பிரிவில் என் மகன் ஆர்வத்துடன் தொடங்கி வைத்தது தான் Mano’s Tamilnadu delicacies என்ற பகுதி. கணினியைப்பற்றி அதிகம் அறியாத காலம் அது. ஓரளவு இதைப்பற்றிய அறிவுடன் இதற்குள் நுழைந்த பிறகு தான் கணினி முன் உலகம் எத்தனை சிறியது என்று புரிய ஆரம்பித்தது. என் சமையல் பகுதி பல லட்சம் பேர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. எத்தனையோ பேர்களுக்கு சமையல் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். இதில் மன நிறைவும் சந்தோஷமும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தான் அறுசுவை நிறுவனர் பாபுவின் அழைப்பிற்கிணங்கி சமையல் நிபுணர்கள் திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம், திருமதி. ரேவதி  ஷண்முகத்துடன் இணைந்து ஒரு சமையல் போட்டியின் நடுவராக பங்கேற்க நாகைப்பட்டிணத்திற்குச் சென்றேன். அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் எனக்காக காத்திருந்தது. அறுசுவை நிறுவனர் என் உறவினர் என்ற செய்தி அனைவரும் உரையாடிக்கொண்டிருந்த போது யதேச்சையாகத் தெரிந்து மனதில் மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. உலகம் சிறியது தான் என்ற உண்மை புலப்பட்டபோது பிரமிப்பேற்பட்டது. அதே அறுசுவையில் எல்லோருக்கும் பிரியமானவராக அறியப்பட்ட, வர்மக்கலைகள், மருத்துவம், ஆழ்நிலைத்தியானம் என்று தொடர்கள் எழுதிக்கொன்டிருந்த‌ திரு. ஹைஷ் கடைசியில் இதே மாதிரி என் உறவினர் என்று அறிந்த போது நம்ப முடியாத ஆச்சரியமும் மகிழ்ச்சியும் மனதில் சூழ்ந்தன. இணைய உலகத்தால் கிடைத்த அருமையான உறவுகள் இவை. இது தான் மிகப்பெரிய சந்தோஷம் என்று சொல்ல வேண்டும்.

தொடர்ந்து ஒரு சில வருடங்கள் என் சிறுகதைகள், ஓவியங்கள் சில
பிரபல பத்திரிகைகளில் வெளி வந்த பின் சூழ்நிலைகள் காரணமாக என்னுள் இருந்த கதாசிரியையை நான் உள்மனதிலேயே அதிக வருடங்கள் உட்கார வைத்து விட்டேன். காலச் சுழற்சியில் கடமைகள் முடிந்து எனக்கென்று சில மணி நேரங்கள் கிடைத்த போது,  எனக்கு மட்டும் வடிகால் இல்லையா என்று உள்ளே உறங்கிக்கொண்டிருந்த கதாசிரியை எழுந்து நின்று கேட்டதும் எனக்கென்று ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது குறித்து முயற்சிகளில் இறங்கினேன். கதைகள், கவிதைகள், மருத்துவம், ரசனை, சிந்தனை, கலைகள் என்று பல முத்துக்கள் இணைந்திருப்பதால் என் வலைப்பூ ‘முத்துச்சிதறல்’ ஆயிற்று. இது நாம் பெற்ற குழந்தை போல! எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்யலாம், அழகு பார்க்கலாம்! இதை ஒரு நல்ல தளமாக உருவாக்குவதற்கு சினேகிதிகள் ஸாதிகா, ஆசியா, ஜலீலா உதவினார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 

முதல் பதிவை 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி எழுதினேன். முதல் பதிவே குழந்தை வளர்ப்பு பற்றி இளம் அன்னையர்களுக்கு என் வேண்டுகோள் என்ற முறையில் அமைந்திருந்தது. முதல் பதிவு கொடுத்தது சந்தோஷமும் மன நிறைவும் கலந்த ஒரு உணர்வு!! எல்லாவற்றையும் விட, வலைப்பூவில் பதிவுகள் எழுதுவதும் பின்னூட்டங்கள் இடுவதும் நம் உணர்வுகளையும் அறிவையும் விசாலமாக்குகிறது என்பதுடன் அதிக தேடல்களை உண்டாக்குவதால் தனி உற்சாகமும் ஆர்வமும் எப்போதுமே மனதளவில் ததும்பிக்கொண்டேயிருக்கின்றன. இதன் மூலம் அருமையான நட்பும் அன்பும் தொடர்கதையாய் கிடைத்துக்கொண்டேயிருக்கிற்து. பதிவுலகின் மிகப்பெரிய சந்தோஷம் இது தான்!!

Monday 23 September 2013

மூன்றாவது உலகப்போர்!!!

இந்தியாவில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வெகு விரைவில் வரலாம் என்று அமெரிக்காவின் நாசா  உள்பட கருத்துக்கணிப்புகளும் விமர்சனங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் பசுமைப்புரட்சிக்கு பல உள்ளங்கள் வித்திட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் வயல்களைத்தூர்த்தும் மரங்களை வெட்டியும் கட்டடங்கள் எழும்புவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. பல மாதங்கள் முன்பு, ஒரு மாத இதழில் உலகமுழுதுமுள்ள தண்ணீர்ப்பற்றாக்குறைகள் பற்றி விரிவாக சுட்டிக்காட்டி எழுதியிருந்த தகவல்களைப் பபடித்தபோது பகீரென்று இருந்தது. அந்தத் தகவல்களை கீழே சுருக்கி எழுதியிருக்கிறேன்.. .. ..

மூன்றாவது உலக யுத்தம் உண்டாகுமானால் அது பெரிய அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது நாட்டை விஸ்தரிக்கும் ஆசையிலோ ஏற்படப்போவதில்லை. தண்ணீருக்காக மட்டுமே அந்த யுத்தம் ஏற்படும் என்று ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலர் புர்டோஸ் கூறியுள்ளார்.
இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தாலும் அதில் தண்ணீர் அளவு மூன்று சதவிகிதம் மட்டுமே என்பது அதிர்ச்சியான விஷயம். மொத்த நீரின் அளவில் 97 சதவிகிதம் உப்பு நீராக உள்ளது.

இந்த சதவிகித நல்ல நீரைக்கொண்டு தான் இந்த உலகின் அனைத்து நாடுகளிலும் பயிர் உற்பத்தி, மனித வாழ்வு என அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது. உலகின் மூன்று சதவிகித மொத்தத் தண்ணீரின் பயன்பாட்டில் 92 சதவிகிதம் விவசாயப்பயன்பாட்டிற்கும் ஐந்து சதவிகிதம் குடிநீர் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கும் மூன்று சதவிகிதம் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 

நமக்குக் கிடைக்கும் மூன்று சதவிகித நல்ல நீரையும் எவ்வித கட்டுப்பாடுமின்றி தண்ணீர் சேமிப்பு வழி முறைகள் ஏதுமின்றி மிக தாராளமாக செலவழிப்பதால் ஆண்டுக்கு ஆண்டு தண்ணீரின் அளவு குறைகிறது. இருக்கக்கூடிய மிகக்குறைந்த நீரிலும் அதிக அளவு தொழிற்சாலைகளின் கழிவுகள், மாசுக்கள் கலப்பதால் அவையும் ஆபத்தான நீராய் மாறி வருகின்றன.

இயற்கையின் கொடை நீர் பனிமலைகள் உருகுவதாலும் ஆறுகள், ஏரிகள் மூலமாகவும் நிலத்தடி நீராகவும் நமக்கு கிடைக்கிறது. இப்படி அரிதான வளங்களிலிருந்து உருவாகும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்ற அபாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இயற்கையின் கொடையான காடுகள் அழிக்கப்படுவதால் உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.



நிலத்தடி நீரோட்டங்களின் திசை மறுவதாலும் உலகில் அதிகரித்து வரும் வெப்ப நிலை உயர்வால் பனிமலைகள் வெகு விரைவாக உருகி வருவதாலும் விரைவில் மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே வருங்காலத்தில் பண பலமோ படை பலமோ ஆயுத பலமோ ஒரு நாட்டின் வெற்றியை தீர்மானிக்கப்போவதில்லை. ஒரு நாட்டில் நிறைந்துள்ள தண்ணீர் வளமே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்ககூடிய சக்தி வாய்ந்ததாக உள்ளது. இப்போதே தண்ணீருக்கான யுத்தம் தொடங்கி விட்டது எனலாம்.
வல்லரசு நாடுகளைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ந்து வரும் நாடுகள் அல்லது கீழை நாடுகளில் வர்த்தக நிறுவனங்களாக நுழைந்து உலக வர்த்தக நிறுவனங்களின் உதவியுடன் அந்த நாட்டின் நீர் ஆதாரங்களைக் கைப்பற்றி குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருவது இதற்கு சான்று.

பன்னாட்டு நிறுவனங்கள் நீர் ஆதாரங்களுக்கு அருகில் தங்கள் நிறுவனங்களை அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் இயற்கையின் கொடையை முற்றிலும் உறிஞ்சி வருவதால் பல நீரோடைகள் வரண்டு வருகின்றன. நாளடைவில் அனைத்து தேவைகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தி வருகின்றன.
2015ம் ஆண்டில் இந்தியாவின் பல பகுதிகளிலும் வட ஆப்பிரிக்காவிலும் கடும் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மேற்கூரை என்று வர்ணிக்கப்படும் இமயமலையின் உச்சியில் பனிமுகடுகளிலிருந்து உருவாகி வரும் ஆசியாவின் மிக நீளமான நதி என்று பெயர் பெற்றிருக்கும் பிரம்மபுத்ரா நதியை சீனா தன் அதிகார பலத்தால் தனது பகுதிகளுக்கு திசை திருப்பி விடுகிறது. இதனால் இந்தியா, திபேத் நாடுகளின் பல பகுதிகளில் நீரோட்டம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா-சீனாவிற்கிடையே நதி மோதல் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இது போல சீனாவின் துயரம் என்று வர்ணிக்கப்படும் மஞ்சள் நதியை திசை திருப்பியதிலும் சீனா-தாய்லாந்து நாடுகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் ஜோர்டானின் நதி நீர் ஆதாரங்களை பயன்படுத்துவதில் இஸ்ரேல்-சிரியா நாடுகளிடையே கடும் மோதல் தொடங்கியுள்ளது. எகிப்தின் முக்கிய நீர் ஆதாரமான நைல் நதியின் குறுக்கே யாரேனும் அனை கட்டினால் ராணுவ பலம் கொண்டு அவர்களை அழிப்போம் என்று எகிப்து பகிரங்கமாக எச்சரித்துள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ்-மியான்மர் நாடுகளிடையேயும், தாய்லாந்து-கம்போடியாவிற்கிடையேயும் நீர் ஆதாரங்கள் பிரச்சினையால் மோதல் இருந்து வருகிறது.

வளர்ந்த நாடுகள் நீர் ஆதாரங்களை முறைப்படுத்தியுள்ளதாலும் சேமிப்பு போன்ற வழிகளைப்பயன்படுத்தி வருவதாலும் அவை குடிநீர்ப்பஞ்சத்திலிருந்து ஓரளவு தப்பிக்கும் நிலை இருக்கிறது. ஆனால் உலகில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள நாடாக இரண்டாவது இடத்திலுள்ள இந்தியாவின் நீர் வளக்கொள்கை ஏட்டளவிலேயே உள்ளது. வட இந்தியாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலத்தில் தென் இந்தியாவில் வரட்சி தலை விரித்தாடும் அவல நிலையை இங்கு மட்டுமே காண முடியும். இந்தியாவின் தேசீய சொத்தாக நதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் நீர் வளம் மிகுந்த மாநிலங்கள் அவற்றை தங்கள் சொத்தாகவே பாவித்து வருகின்றன. நதி நீர் இணைப்பு மிகச்சிறந்த வழியென்றாலும் அதில் யாரும் துரும்பை எடுத்துக்கூட கிள்ளிப்போடவில்லை. முன்னேறிய நாடுகள் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தண்ணீர்ப்பஞ்சத்தை தீர்க்க தொலை நோக்குத் திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலோ நதி நீர் பிரச்சினைகள் வாக்கு வங்கி அரசியலோடு பிணைக்கப்பட்டு இருப்பதால் உள்நாட்டிலேயே மோதல்கள் தான் ஏற்படுகின்றன.

2025ம் ஆண்டு ஆசிய, மத்தியக்கிழக்கு, ஆப்பிரிக்க நடுகளில் மிகக்கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று உலக நதி நீர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இப்போதாவது விழித்து எழுந்து நீர் ஆதாரங்களை முறைப்படுத்தவும் காக்கவும் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மூன்றாம் உலக யுத்தத்தின் அழிவிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.

நாமும் நம் பங்கிற்கு மழை நீர் சேகரிப்பதை தீவிரமாக்குவதோடு, மரங்களை நடுவதையும் ஊக்குவிப்போம்!!

படங்களுக்கு ந‌ன்றி: கூகிள்