Friday 14 December 2018

முத்துக்குவியல்-53!!!

அதிசய மருத்துவ முத்து:                                                                                                                                                                  சமீபத்தில் 15 வருடங்களுக்கு முன் வெளி வந்த மங்கையர் மலர் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்த போது, அதில் ஒரு ஆச்சரியமான விஷயத்தை அறிந்து அசந்து போனேன். தீராத, குணப்படுத்த இயலாத வயிற்றுக்கோளாறுகள்,  கர்ப்பப்பை பிரச்சினைகள் இவற்றை ' நாபி நகர்ந்திருக்கிறது என்று சொல்லி அதற்கான மருத்துவம் செய்வார்களாம். இப்படி நாபி நகர்வதுண்டா, அதன் காரணமாக வயிற்றுக்கோளாறுகள் வருமா என்றால் ஆமாம் என்கிறது ' யோக சூடாமணி உபநிஷத் ' என்ற நமது புராண நூல்!  முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு யோகாசன ஆசிரியராக இருந்த தீரேந்திர பிரம்மச்சாரி தனது YOGIC SUKSHMA VYAYAMA என்னும் நூலில் 'நாபி சக்ரா' என்ற ஒரு அத்தியாயமே எழுதி இருக்கிறாராம். அதிகமான எடையை தூக்குவதாலோ  அல்லது மேலிருந்து கீழே விழுவதாலோ இந்தக் கோளாறு ஏற்படுவது உண்டு என்றும் பொதுவாக ஆண்களுக்கு வலது புறமாகவும் பெண்களுக்கு இடது புறமாகவும் நகர வாய்ப்புண்டு என்றும் குறிப்பிடுகிறார்.    இதற்கான சிகிச்சை முறையாய் சில யோகாசனங்களையும் இந்தக் கோளாறுகளைக் கண்டு பிடிக்கும் முறைகளையும் விரிவாக எழுதியுள்ளார். அனுபவப்பூர்வமான ஒரு வைத்திய முறையை இந்த மங்கையர் மலர் தொகுப்பில் ஒரு பெண்மணி குறிப்பிட்டிருக்கிறார். ஒரு அகலமான விளிம்புத்தட்டில் அல்லது பேஸினில் மஞ்சள் சுண்ணாம்பு கரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு எவர்சில்வர் அல்லது பித்தளை தம்ளரில் இலேசாக, அமுக்கி வைக்காமல் கால் தம்ளர் அளவிற்கு பழைய பேப்பர்களை சுக்கல் சுகலாகக் கிழித்துப்போடவும். எந்த இட‌த்தில் வலி அல்லது சுளுக்கு உள்ளதோ, அந்த இட‌த்தில் ஆரத்தி கரைத்த தட்டை சம தளமாக வைக்க வேண்டும். பேப்பர் துண்டுகள் உள்ள தம்ளரில் தீக்குச்சியைக் கிழித்துப்போட்டு, பேப்பர் பற்ற ஆரம்பித்ததும் ஆரத்தி தட்டின் நடுவில் எரியும் தம்ளரைக் கவிழ்த்து வைக்கவும். ஒரே வினாடியில் தட்டில் உள்ள ஆரத்தி முழுவதும் தம்ளரில் உறிஞ்சப்பட்டு விடும்! பிறகு மெதுவாக அந்தத் தட்டை எடுத்து ஓரத்தில் வைத்து விட வேண்டும். மெள்ள மெள்ள ஒரு மணி நேரத்தில் தம்ளரிலுள்ள தண்ணீர் முழுவதும் வெளியே வந்து விடும். வலியால் பாதிக்கப்பட்டவருக்கு பூரண நிவாரணம் கிடைத்து விடும்!!  இதுவும் ஒரு வகையில்  heat therapy போலத்தான்! சில குடும்பங்களில் இன்றளவிலும் இந்த வைத்திய முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாக அந்தப் பெண்மணி எழுதி இருக்கிறார். அவர் குடும்பத்திலேயே ஒருத்தர் தாம்பாளத்தை வைக்க, இன்னொருவர் தம்ளரைக் கவிழ்க்க, வலியால் துடிப்பவர் சீக்கிரமே அந்த வலியிலிருந்து விடுபட்டு விடுவாராம்!                                                                                              
அனுபவ முத்து:                                                                                                                                                                                    அறுபது சொல்வது அனுபவ நிஜம்.
அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்.
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள்.
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம்.
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை.

இசை முத்து:                                                                                                                                                                                            1981ல் வெளி வந்த மனதை மயக்கும் பாட்டு இது! KUDRAT என்னும் படத்தில் கிஷோர் குமார் பைரவி ராகத்தில் கம்பீரமாக உருக வைத்திருப்பார் அனைத்து இதயங்களையும்! நானும் இப்போதும் இந்தப்பாடலின் இனிமைக்கு அடிமை தான்! ஆச்சரியம் என்னவென்றால், இதே பாடலை அதே ராகத்தில் வேறு பாணியில் பர்வீன் சுல்தானா பாடி அற்புதம் நிகழ்த்தியிருப்பார்! எது இனிமை என்பதை பிரித்து சொல்ல இயலாத வண்ணம் இசை மட்டுமே ஜெயித்திருக்கும்! ஆனாலும் ஃபிலிம்ஃபேர் நடத்திய சிறந்த பாடகர்/பாடகி போட்டியில் பர்வீன் சுல்தானா தான் பரிசை வென்றார்! நீங்களும் அந்தப்பாடலை கேட்டுப்பாருங்கள்! பர்வீன் சுதானின் இந்தப்பாடலுக்கு பாடகியாய் முகபாவங்களால் அசத்தியிருப்பார் வட இந்திய ந்டிகை அருணா இரானி!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

Wednesday 28 November 2018

கானல் நீர்!!!

சென்ற மாதம் நண்பர் வீட்டில் ஒரு நிகழ்வு!  மனதை மிகவும் காயப்படுத்திய நிகழ்வு. வெளி நாட்டு வாழ்க்கை பற்றி கில்லர்ஜி சில நாட்களுக்கு முன்னெழுதியிருந்தது அது போன்ற பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்த ஆரம்பித்தது. அதற்கு முன் இங்கு மழையிலும் சில்லென்று உறைய வைக்கும் குளிர் காற்றிலும் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரம் கடும் உழைப்பில் கரைந்து கொண்டிருக்கும் நம் மக்களைப்பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல் நீராய் பாலைவனமாய் இருந்த இந்த நாடு கடந்த 40 வருடங்களில் மாட மாளிகையும் அழகு கோபுரங்களுமாய் தகதகக்கிறது. ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை குடும்பத்தைக்காக்க, எல்லாவற்றையும் துறந்து ஆண்கள் இங்கே வேலை தேடி வருவது மட்டும் நின்றபாடில்லை. இப்போதெல்லாம் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களின் படிப்பிற்கேற்றாற்போல வேலைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இங்கே வேலைக்கு கூலித்தொழிலாளர்கள் காலை ஐந்து மணியிலிருந்து தங்களது தொழிற்கூடங்களுக்கு அழைத்துச்செல்ல வரும் பேருந்துகளுக்காக அங்கங்கே காத்து நிற்பார்கள். அப்போதெல்லாம் எங்களின் உணவகம் அவர்களுக்காகவே காலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டு சுடச்சுட இட்லியும் சாம்பார், வடையுமாய் காத்திருக்கும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வடை அல்லது இட்லியைப்போட்டு அதன் மீது சாம்பாரை ஊற்றி வாங்கிச்செல்வார்கள். வெளியே வாங்கும் சாப்பாடு கட்டுபடியாகாதவர்கள் ஒருத்தருக்கொத்தர் முறை போட்டுக்கொண்டு ஒருத்தர் சமைப்பது, இன்னொருத்த‌ர் பாத்திரங்கள் கழுவுவது, இன்னொருத்தர் காய்கறிகள் அரிந்து தருவது என்று நாட்களை கடத்துவார்கள். வெள்ளிக்கிழமையானால் தாய் நாட்டுக்கு உறவுகளை அழைத்துப்பேசுவதும் அழுவதும் கலங்குவதும் எப்போதுமே நடக்கும். அப்போதெல்லாம் மொபைல் கிடையாது என்பதால் உறவுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்துப்பேசுவதற்கும் அத்தனை சீக்கிரம் தொட ர்பு கிடைக்காமல் தாவு தீர்ந்து விடும்.
இதில் எத்தனையோ சோகங்கள்! எத்தனையோ கண்ணீர்த்திவலைகள்!! எத்தனையோ பிரச்சினைகள்!!முதலில் குறிப்பிட்டிருந்த படி, சில நாட்களுக்கு முன் எங்கள் நண்பர் வீட்டில் ஒரு சோகம். கணவர் வெளி நாட்டில் வேலை செய்து குடும்ப‌த்தைக் காப்பாற்றிக்கொண்டு, பொருளாதார நிலையால் ஊருக்குக்கூட சில வருடங்களாகவே போகாமலிருந்தார். மனைவி எப்போதும்போல அவர் அனுப்பும் பணத்தில் சிக்க‌னமாக செல்வு செய்து கொண்டு, குழந்தைகளை படிக்க வைத்து, பாதுகாத்துக்கொண்டிருந்தார். கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொன்டிருந்த மூத்த பெண் திடீரென்று ஒரு நாள் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. பதறி, அழுது, பல நண்பர்களை வைத்து தேடியதில் அந்தப்பெண் தன் மனதுக்குப்பிடித்தவனுடன் சென்று விட்டது தெரிந்தது. இவர்கள் வீடு வசதியான, கெளரவமான வீடு என்பதால், கீழ் நிலையில் இருந்த அவனுடைய குடும்பம் யோசனை செய்து பெண்ணுக்குத்தாலி கட்டி, காவல் நிலையத்துக்கும் சென்று பாதுகாப்பும் செய்து கொண்டது. ஒரே ஊர் வேறு! இவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று அழுது, முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விடுகிறோம் என்று வீட்டுக்கு அழைத்துப்பார்த்தும் அந்தப்பெண் வர மறுத்து விட்டது. ' என்னைப்பொறுத்த வரை என் பெண் செத்து விட்டது' என்று பெண்ணின் தாயார் அழுத அழுகை நினைவை விட்டு மறைய‌ மறுக்கிறது. வெளி நாட்டில் வாழும் தந்தையோ அவளை நான் தலை முழுகி விட்டேன் என்று சொல்லி அழுகையோடு ஃபோனை வைத்து விட்டார். மூன்று நான்கு முறை அந்தப்பெண்ணின் தாயாரிடம் இங்கிருந்து கூப்பிட்டு பேசிய போதும் அவரின் குமுறலுக்கும் அழுகைக்கும் வார்த்தைகளால் என்னால் ஆறுதல் படுத்த முடியவில்லை. பெற்றோர் தன் மீது வைத்த பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் அருமையாக வளர்த்த பெண் கொடுத்த விலை இது!

முன்பெல்லாம், அதாவது 50 வருடங்களுக்கு முன்னால் மொபைல், தொலைபேசிகளின் அதிகப்படியான புழக்கங்கள் இல்லாத காலத்தில், ஊரில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் உடனடியாக வெளிநாட்டிலிருந்து வீடு திரும்ப முடியாது. என் கணவரின் மூத்த சகோதரர் அரேபியாவிலும் [ அப்போதெல்லாம் அனைத்து அரபு நாடுகளும் சேர்ந்து அரேபியா என்றழைக்கப்பட்டது ] அடுத்த சகோத‌ரர் அஸ்ஸாமிலும் வேலை செய்து கொண்டிருந்த போது அவர்களின் தந்தை [ என் மாமனார் ] இறந்து போனதற்கு, அவர்களின் முகத்தினை க‌டைசியாகப் பார்க்க‌க்கூட வர முடியவில்லை. வீட்டுக்குக் கடமையாற்ற செல்ப‌வர்கள் அடிக்கடி கொடுக்கும் விலை இது!

முன்பு எங்கள் உண‌வகத்தில் மூன்று வேளையும் சாப்பிட ஒரு த‌மிழ் நண்பர் வருவார். இங்கே துறைமுகத்தில் நல்ல‌தொரு வேலையில் பல வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் வேலையை விட்டு விட்டு ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்லிச் சென்றார். சில மாதங்கள் சென்ற பின் என் கணவ‌ரின் இளைய சகோதரரிடம்  'உங்கள் சகோதரரின் உண‌வகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டு சொல்லுங்கள் ' என்று சொல்லியிருக்கிறார். அதன் காரணத்தையும் என் கணவரின் சகோதரரே சொன்னார். இங்கே பாலைவனத்தில் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் சம்பாதித்த பணத்தையெல்லாம் தன் மனைவி பெயரில் நிலமாகவும் ஆபரண‌ங்களுமாக வாங்கி சேமித்து விட்டுத்தான் அவர் ஊருக்குச் சென்றிருக்கிறார். சென்றதுமே அவரின் மனைவி ' நான் வேறு ஒருத்தரை இனி வாழ்நாள் முழுவத‌ற்குமாக சார்ந்து விட்டேன். என் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் இனி எனக்கே சொந்தம் ' என்று சொல்லி விட, அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்ட அவர் மறுபடியும் சாதாரண நிலைக்குத் திரும்பவே அதிக நாட்கள் பிடித்ததாம். நாங்களும் அதிர்ச்சியில் உறைந்து போனோம்! இது மனைவி மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கு கணவன் கொடுத்த விலை! அதே போல ஒற்றையாய் தனிமையில் குடும்பத்தை கவனித்துக்கொண்டு கணவனுக்காக ஒரு தவம் செய்வது போல மனைவி காத்துக்கொண்டிருக்க, வெளி நாட்டில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் ஆண்களின் கதைகளும் தொடர்ந்து கொன்டு தானிருக்கிறது!

மனைவியின் அன்பு, கணவனின் அக்கறை, குழ‌ந்தையின் மழலை, பெற்றவர்களின் பாசத்தவிப்பு, குடும்பம் என்ற குதூகலம், ஆசுவாசம்  என்று இவை அத்தனையையும் புறந்தள்ளினால் தான் பொருளாதார நிலை மேம்படும் என்றால் எல்லாவற்றிலிருந்தும் விலகிப்போக வேண்டியிருக்கிறது என்பது தான் நிதர்சனம்! அதுவரை இந்த அத்தனை சந்தோஷங்களும் கானல் நீர் தான்!!



Tuesday 13 November 2018

ரசித்த திரைப்படம்!!!

சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன்!
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்ப‌டி சில படங்கள் தலைகாட்டும்… அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒரு சிலராவது  தங்கள் கடந்த கால இளம் வயது வாழ்க்கையைத் திரும்பி பார்க்க வைக்கும்… அப்படி ஒரு படம்தான் விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் நடித்திருக்கிற 96!


ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவுக்கும், ராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கும் பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதல், பிரிவு, என்று நகரும் படம், திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயான திரிஷாவும் திருமணம் செய்துகொள்ளாமல் தனது காதல் நினைவுகளோடு வாழும் விஜய் சேதுபதியும் சந்திக்கும் போது, தனது காதல் உணர்வுகளை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல், அதே சமயம் அதை மறைக்கவும் முடியாமல் ஜானு தவிக்க, அதே நிலையில் விஜய் சேதுபதியும் இருந்தாலும், திரிஷா வேறு ஒருவடைய மனைவி என்ற எல்லைக் கோடு இருப்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு அவர்களின் காதல் வலியை படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்பத்துவது தான் ‘96’ படத்தின் கதை.

94 முதல் 96 வரை, பத்தாம் வகுப்பு பயின்ற ராமச்சந்திரனும் ஜானகி பெயர் இருப்பதால் எஸ்.ஜானகி பாடலை பாடும் பள்ளி வயது த்ரிஷாவான ஜானுவும் அந்த வயதிற்கே உரிய பசுமையான காதலில் மிதக்கிறார்கள். அது காதலென்பது அவர்களுக்கே புரியாத உணர்வாக இருக்கிறது. ஒரு முறை ஜானு நிறைய நாட்கள் விடுமுறையில் இருக்கும்போது தான் ராமச்சந்திரன் அதை உணர்கிறான். அவனுடைய காதல் பக்தியாக இருக்கிறது. ஆழமாக அழுத்தமாக இருக்கிறது. பேசாமலும் சரியாக நிமிர்ந்து கூட பார்க்காமலிருந்தாலும் தயக்கமாக தடுமாறி அவன் பேசும்போது, துள்ளலும் சிரிப்பும் மலர்ந்த முகமுமாக இருக்கும் ஜானு அவனிடம் மனதால் நெருங்குகிறாள்.



விடுமுறையில் அனைவரும் இருக்கும் போது ராமச்சந்திரன் குடும்பச்சூழ்ல் காரணமாக வேறு ஊருக்குப்போக நேருகிறது. அடுத்த வருடம் புது வகுப்பில் அவனைக்காணாது தவிக்கும் ஜானுவுக்கு, நண்பர்கள் மூலம் அவன் ஊரை விட்டுச் சென்று விட்டது தெரிந்து துடிக்கிறாள். தன்னை சரிப்படுத்த முயற்சி செய்து கொண்டவாறே, பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியிலும் கால் பதித்து, தந்தையின் வற்புறுத்தலில் இன்னொருவனின் மனைவியாகி சிங்கப்பூருக்குச் செல்கிறாள்.

பயண ஓளிப்படக் கலைஞராக இருக்கும் விஜய் சேதுபதி (இராமச்சந்திரன்), ஒரு கல்லூரியிலும் ஒளிப்படம் தொடர்பான வகுப்பு எடுக்கிறார். தன்னுடைய மாணவர்களை ஒளிப்படம் தொடர்பான பயணச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, கொள்ளிடத்தில் வெள்ளம் என்பதால் தஞ்சை வழியே பயணப்பட நேரிடுகிறது. விடியற்காலை வெளிச்சத்தில் தஞ்சை அவரின் சிறு வயது நினைவுகளை மனதின் ஆழத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறது. தான் படித்த பள்ளியை ஒவ்வொரு அங்குலமாக பார்த்து ரசிக்கிறார்.




தன் கூட பழகிய நண்பர்களை வாட்ஸ் அப் மூலம் ஒன்று சேர்த்து மூன்று மாதம் கழித்து ஒரு தேதியில் சந்திப்பதாக முடிவு செய்கிறார். எல்லோரும் அந்த நாளன்று சென்னையில் சந்திக்கிறார்கள்.

எல்லோருக்கும் பிரியமான ஜானுவும் சிங்கப்பூரிலிருந்து தனியே வருகிறாள். அனைவருட‌னும் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாலும் ராமச்சந்திரனைத்தேடி ஜானுவின் கண்கள் அலைகின்றன. ஜானு வந்து விட்டாள் என்பது தெரிந்ததும் தனியே போய் தயக்கமாக நின்று கொண்டிருக்கும் ராமச்சந்திரன் அவளே வந்து பேசும்போது தயக்கமாகப்பேசுவதும் காதலை வெளிகாட்டாமல் அடக்கி வைப்பதும் பம்முவதுமாய் அதே பத்தாம் வகுப்பு மாணவனைத் திரும்பவும் கொன்டு வருவது ரசனையான காட்சி!

விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பு சற்று நம்மை வியக்க வைக்கிறது.

தான் விரும்பியவன் இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து அவனுக்கு பெண் பார்க்க துடிப்பதும்  வீட்டுக்கு கூப்பிடும் விஜய் சேதுபதியை பார்த்து  ‘இந்திர லோக மேனகை,ஊர்வசி,ரம்பைகளை அதே டிரஸ்சில் அனுப்பினாலும் அவங்களை பத்திரமா பாத்துப்படா நீ’ என தன் காதலன் மீதான நம்பிக்கையை சொல்வதும் கடைசியில் பிரிவை தாங்க முடியாமல் உடைந்து அழுதுவதும் அத்தனை அழகு. திரிஷா என்கிற கதாபாத்திரத்தை மறந்து, ஜானுவாகவே தெரிகிறார்.

40-ஐ தொடும் ஆண் மகன் தன் காதலியைப் பார்த்து படும் வெட்கம், ‘தனக்கானவனை தவறவிட்டுவிட்டோமே’ என்கிற ஒரு கட்டத்தில் கதறி அழும் திரிஷாவின் தவிப்பு,  பள்ளிப் பருவத்தில் இயல்பாக மலரும் தோழமை, உள்ளுக்குள்ள் குமுறும் காதலை மனதின் ஆழத்தில் ஆழ்த்தி இன்னொருவன் மனைவி என்ற மரியாதையுடன் நடத்தும் ராமச்சந்திரனின் கண்ணியம், தன் வீட்டில் அவளின் சிறு சிறு பொருள்களை பொக்கிஷமாக பாதுகாத்து வ்ருவதை வெகுளித்தனத்துடன் அவளிடம் காண்பிக்கும்போது ஏற்படும் நெகிழ்வு, என பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார் இயக்குநர்.




விஜய்சேதுபதி - த்ரிஷா ஒன்றாகக் கழிக்கும் அந்த இரவு தான் படத்தின் பலம். பள்ளியில் பலமுறை விஜய்சேதுபதி கேட் டும் ஒருமுறைகூட பாடாத ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலை விஜய் சேதுபதியின் வீட்டில் அந்த இரவில் த்ரிஷா பாடும் தருணமும், அப்போது விஜய்சேதுபதியின் பரவசமும் ரசனையானவை.

இவர்களின் பின்னணி பள்ளி பருவக் காட்சிகளில் வரும் ஆதித்யா (எம்.எஸ். பாஸ்கரின் மகன்) மற்றும் கௌரி கிஷன் இவர்களின் நடிப்பும் அருமை. 96 காதல் கதை என்பதால் அடிக்கடி வரும் இளையராஜாவின் பாடல்கள் 35 வயதைக் கடக்கும் அனைவரையும் பள்ளி பருவத்திற்கே அழைத்துச் செல்கிறது.

பழைய காதலியுடன் அந்த ஒருநாள் இரவுப் பொழுது. கரணம் தப்பினாலும் விரசமாகிவிடும். ஆனால் எந்த நெருடலும் இல்லாமல், எல்லை தாண்டாமல், எந்த சினிமாத்தனமும் இல்லாமல் மன உணர்வுகளை வைத்தே காட்சிப்படுத்தியதில் நம்மையும் நெகிழ்த்தி, அழகாய் நிமிர்ந்து நிற்கிறது மொத்த படமும்.

ராம், ஜானு, அவர்களின் கதை, இசை என எல்லாமுமாக சேர்ந்து நினைவுகளை கிளறிவிடுவதால் நமக்கும் கடந்தகாலத்திற்கு ஒரு நடை போய்விட்டு வந்த அனுபவம் நேர்கிறது.

Wednesday 31 October 2018

துபாயில் ஒரு விருந்து!!!


கடந்த 28ந்தேதி எங்களின் நாற்பத்தி நாலாவது திருமண நாள்!

பேரன், பெயர்த்தியுடன் நாங்கள்!
மகன் இங்குள்ள ' நஸிம்மா ராயல் ' என்ற ஐந்து நட்சத்திர விடுதிக்கு மதியம் உணவிற்கு அழைத்துச்சென்றார். இதுவரை இங்கிருக்கும் எத்தனையோ ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளுக்கு உணவருந்த சென்றிருக்கிறோம். ஆனால் இப்படியொரு சுவையை, பரிமாறப்பட்ட அத்தனை உணவுகளிலும் நான் ருசித்த‌தில்லை.
நஸிம்மா ராயல் ஹோட்டல்
பொதுவாய் ஒவ்வொரு உணவு விடுதிக்கும் ஒர் தனிப்பட்ட சிறப்பு அடையாளம் உண்டு. என் மகன் கல்லூரியில் படிக்கும் பருவத்தில் இந்த நாட்டின் தலைநகரான அபுதாபியில் 'ஹில்டன் ஹோட்டலில்' வந்து 

ice tea
நுழையும் அனைவரும் அருந்தும் விதத்தில் ஒரு பெரிய தங்க நிற குடுவையில் தெளிவான டீ இருக்கும். சர்க்கரை, புதினா இலைகள், எலுமிச்சம்பழ சாறு, இஞ்சி துருவல்கள் கலந்து ஐஸ் கட்டிகளுடன் ஐஸ் டீ நம்மை வரவேற்கும். அந்த சுவையை நான் எந்த ஐஸ் டீயிலும் ருசித்ததில்லை.

சார்ஜாவில் ரயின்போ ஸ்டீக் ஹெளஸ் என்ற ஒரு உணவு விடுதி இருக்கிறது. அங்கு வழங்கப்படும் சாலட் வகைகளை நான் எந்த ஐந்து நட்சத்திர உணவு விடுதியிலும் பார்த்ததில்லை. 

MUTHABAL SALAD
அதிலும் அரேபிய சாலட் 'முத்தபல்' என்ற ஒன்று அத்தனை சுவையுடன் இருக்கும். அது வேறு ஒன்றுமில்லை. சுட்ட கத்தரிக்காய் விழுதுடன் அரைத்த எள் விழுதை ஒரு குறிப்பிட்ட அளவில் கலக்க வேண்டும். கடந்த 40 வருடங்களாக நான் இதன் அடிமை!

இப்படி ஒவ்வொரு உணவு விடுதியிலும் ஒரு குறிப்பிட்ட உணவு வகை மற்ற எல்லா உணவு வகைகளையும் தூக்கி அடிக்கும். ஆனால் இந்த உணவு விடுதியில் அனைத்து உணவு வகைகளும் அபுதமான சுவையுடன் இருந்தன. அதோடு வகை FUSION உணவு வகைகள் அதாவது பழைய உணவுக்குறிப்புடன் புதிய சில மாற்றங்கள் செய்வது., உதாரணத்திற்கு பால்கோவாவுடன் சோன் பப்டியைக்கலப்பது, சோளே பட்டூராவை குட்டி குட்டி பட்டூராக்களாக, அதுவும் கீரை கலந்து, மசாலா கலந்து செய்வது இப்படி செய்யும் மாற்ற்ங்களை அதிக ருசியுடன் வழங்குவது இந்த உணவு விடுதியின் சிறப்பு.

உணவு விடுதியின் பெயர் த்ரேசிந்த். இந்திய உணவு விடுதி. உலகின் மிக உயர்ந்த கட்டிடமான பூர்ஜ் கலிஃபா இருக்கும் சாலையில் இந்த நஸ்ஸிம்மா ஹோட்டல் அமைந்துள்ளது. 


பல வகை மெனு இருக்கின்ற்ன. நாம் விரும்பினவற்றை தருவிக்கலாம். அல்லது குறிப்பிட்ட செட் மெனுக்களை ஆர்டர் பண்ணலாம். அசைவம் அல்லது சைவம், complimentary starters, starters from the chef, juices, main course,  desserts  என்ற வகையை அடக்கியது ஒருவருக்கு 2500ரூ. 16 வகைகளை கொண்ட இன்னொரு செட் மெனு ரூ 4500லும் 7500லும் இருந்தது. நான் முதலாம் வகையையே தேர்வு செய்தேன். முக்கிய காரணம் உணவு ஹெவியாக வேண்டாம் என்பது.

ஆர்டர் செய்ததும் முதலில் ஒரு மண் குடுவையை நடுவில் வைத்து அதில் சில ஐஸ் கட்டிகளைப்போட்டு சில திரவங்களை ஊற்றினார் பரிமாறுபவர். 


உடனேயே நுரையுடன் வாசனையுடன் உள்ளிருந்து வழிந்தது புகை! இது வாசனை தெரபியாம். வரவேற்கும் விதமும் கூட! முகம், கைகள் துடைக்க குளிர்விக்கப்பட்ட துண்டுகள் வந்தன.

அதன் பின் முதல் வகை ஸ்டார்ட்டர் பிளேட் வந்தது. உணவு வகைகளை விளக்கிச் சொல்லி சென்றார்கள். 


வெண்டைக்காய் சிப்ஸ், பானி பூரி, வெள்ளரி ரோல்ஸ், தக்காளி சாலட், சில மாறுதல்களுடன் குஜராத்தின் டோக்ளா அதில் இருந்தன.


அதன் பின் அசைவம், சைவம் அடங்கிய அடுத்த ஸ்டார்ட்டர் பிளேட் வந்தது. வறுத்த ரால், பனீர் கோப்ஃதா, காலிஃபிளவர் 65, கறி மசாலா வந்தன.

சாப்பிட்டு முடிந்ததும் ஒரு முறை மேசையை சுத்தம் செய்தார்கள். ஒரு செயற்கையான குட்டி மரத்தைக் கொண்டு வைத்தார்கள். 



மறுபடியும் வாசனையும் புகையுமாக இருந்தது. 

எலுமிச்சம்பழ மூடியில் உறைய வைக்கப்பட்ட பெரி பழச்சாறு!
அதனடியில் எலுமிச்சை மூடியில் பெரி பழங்களின் சாறை ஊற்றி உறைய வைத்திருந்தார்கள். இது வாயை சுத்தம் செய்வதற்காக என்று விளக்கம் கொடுத்தார்கள்!


அதன் பின் மெயின் கோர்ஸ் வந்தன. பட்டர் சிக்கன், சோளே பட்டூரா, மட்டன் தேங்காய் வறுவல், ரொட்டிகள், நான்கள், சாதம் அவற்றில் அடக்கம்.

உண்டு முடித்ததும் மறுபடியும் கைகளைத்துடைக்க சூடான துண்டுகள் கொண்டு வந்து தந்தார்கள்.

கடைசியாக இனிப்பு வகைகள். சின்னச் சின்ன சாக்கலேட் உருண்டைகளின் மீது COFEE DESSERT சோழி வடிவத்தில் வந்தன.


இன்னொரு மரப்பெட்டியில் ஏலக்காய்கள் படுக்கை மீது புகழ் பெற்ற குஜராத் இனிப்பான பேதா’ [ PETHA] வந்தன. கூடவே பழங்கள் கலந்த 




புட்டிங். இணையாக ஒரு பெரிய தட்டில் பால்கோவா போன்ற இனிப்பின் மீது தூவப்பட்ட சோன்பப்டி!

இதில் அனைத்து உணவு வகைகளும் அதிக ருசியுடன் இருந்தன என்பது தான் இந்த விடுதியின் ஸ்பெஷாலிட்டி. அதன் பின் வீட்டிற்கு வந்து இந்த விடுதியைப்பற்றி படித்துப் பார்த்தால் அப்படி புகழுரைகள்! இங்கே ஒரு முறை வந்து சாப்பிட்டிருக்காவிட்டால் நீங்கள் துபாயில் இருப்பதில் அர்த்தமேயில்லை என்று கூட ரசிகர் கூட்டம் சொல்லியிருந்தது! ஆனால் அந்த புகழுரையை இந்த விடுதி நிரூபித்துக்கொண்டிருக்கிறது!!
 

Tuesday 2 October 2018

முத்துக்குவியல்-52!!!

தன்னம்பிக்கை முத்து:

மாளவிகா ஐயர்! இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில் வாழ்ந்திருந்த இவரின் பள்ளிப்பருவம் ஒன்பதாம் வகுப்பு வரை இனிமையாக கழிந்திருக்கிறது.



அன்று தான் அந்த பதிமூன்று வயது சிறுமியின் வாழ்வில் விதி விளையாடியது. அன்று அவள் அணிந்திருந்த ஜீன்ஸில் சின்னதாக ஒரு கிழிசல் இருந்தது. ஃபெவிகால் வைத்து அந்தக் கிழிசலை ஒட்டிய மாளவிகாவுக்கு ஒரு கனமான இரும்பால் அதைத் தட்டி சமன்படுத்தினால் ஒட்டியது தெரியாது என்று தோன்றியது. கனமாக ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டே சென்ற போது தெருவில் ஒரு இரும்புக் குண்டு போல ஏதோ தெரிந்திருக்கிறது. அந்தக் குண்டு வெடிகுண்டு என்று மாளவிகாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பகுதியில் இயங்கி வந்த வெடிகுண்டுக் கிடங்கு ஒன்று சில காலத்திற்கு முன் தீக்கிரையாகி அதன் பொருள்கள் அந்தப் பகுதியெங்கும் சிதறிக் கிடந்தன. அவை செயலிழந்தவை என்று கருதியதால் அப்பகுதி மக்கள் அவற்றிற்குப் பெரிய முக்கியத்துவம் தரவில்லை.
மாளவிகா எடுத்த வெடிகுண்டு செயலிழக்காத வெடிகுண்டு. அவள் அதை எடுத்து ஒட்டிய ஜீன்ஸில் பலமாகத் தட்டிய போது அது வெடித்தது. அந்த இடத்திலேயே மாளவிகா தன் இரண்டு கைகளையும் இழந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் பலத்த சேதத்திற்கு உள்ளாயின. வெளியே ஓடி வந்த அவளுடைய தாய் “என் குழந்தையின் கைகள் எங்கே?” என்று கதறியது தான் அவள் மயக்கம் அடைவதற்கு முன் கேட்ட கடைசி வார்த்தைகள்.
அதிகமாய் ரத்தம் வெளியேறி இருந்த, கைகள் இல்லாத, கால்கள் உடலில் இருந்து அறுபடும் நிலையில் உள்ள அந்தச் சிறுமி பிழைப்பாளா என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு இருந்தது. பிழைத்தாலும் ஒரு காய்கறியைப் போல தான் அசைவற்று முடங்கி இருக்க வேண்டி இருக்கும் என்று பார்த்தவர்கள் நினைத்தார்கள்.
அடுத்ததாக செயற்கை உயிர் மின்சாரக் கைகள் (Bio-Electric Hands) அவளுக்கு சென்னையில் பொருத்தப்பட்டன. அவற்றையும் பயிற்சிகள் மூலமாகவே அவளால் பயன்படுத்த முடியும் என்கிற நிலை. அதையும் சலிக்காமல் செய்த மாளவிகா அந்தக் கைகளைக் கொண்டு மெல்ல எழுதவும் கற்றுக் கொண்டாள். ஆரம்பத்தில் மிகப் பெரியதாகத் தான் அவளால் எழுத்துக்களை எழுத முடிந்தது.



இதற்குள் இரண்டாண்டு காலம் ஓடி விட்டது. மகள் தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறாளே என்று பெற்றோர் ஆறுதல் அடைந்தனர். ஆனால் மாளவிகா அதில் திருப்தி அடையவில்லை. அவளுக்கு அவளுடைய பள்ளித் தோழி ஒருத்தியின் தொடர்பு போன் மூலம் இருந்து கொண்டே இருந்தது. பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால் அதற்கு மும்முரமாகப் படித்துக் கொண்டிருப்பதாக அந்தத் தோழி தெரிவித்தாள்.
மாளவிகாவுக்கு தானும் அந்தப் பொதுத் தேர்வை எழுத வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. அதை அவள் தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருந்த மகள், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புப் பாடங்களை இது வரை தவற விட்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு மூன்று மாதங்களில் தயாராக முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தாலும் மகளின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போட அவர்கள் விரும்பவில்லை.
இது போல் உடல் ஊனமுற்றவர்கள் சொல்லச் சொல்ல எழுத அரசு ஆட்களை நியமித்து தேர்வு எழுத அனுமதிப்பதால் அவளை அவளால் முடிந்த வரை படிக்க மட்டும் சொன்னார்கள். மூன்று மாதங்கள் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மாளவிகா படித்தாள். வீடு வந்த பிறகும் மாலையும் இரவும் விடாப்பிடியாகப் படித்தாள்.
மாளவிகா தேர்வு எழுதினாள். எட்டாம் வகுப்பு வரை சாதாரண மாணவியாக இருந்த மாளவிகா இத்தனை குறைபாடுகளுக்கு மத்தியில் தேர்வெழுதி மாநில அளவில் ரேங்க் வாங்கியது தான் தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி. கணிதம் மற்றும் அறிவியலில் சதமடித்த அவள் ஹிந்தித் தேர்வில் 97% எடுத்து மாநிலத்தில் ஹிந்தியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள். பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியாளர்கள் எல்லாம் அவள் வீட்டுக்கு ஓடி வந்த போது மாளவிகா பெருமகிழ்ச்சி அடைந்தாள் என்றாலும் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எல்லாம் முடிந்தது என்று ஊர் நினைத்த வேளையில் தங்கள் மகள் சாதித்துக் காட்டியதில் அவர்கள் மனம் நிறைந்து போனது. அதன் பின் மாளவிகா ஒன்றன் பின் ஒன்றாகப் பல சாதனைகள் புரிந்தாள்.
அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது மாளவிகாவை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வரவழைத்து பாராட்டி இருக்கிறார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற மாளவிகா யார் உதவியும் இல்லாமல் தானே பயணங்கள் செய்கிறார். இன்று உலகநாடுகள் பலவற்றிற்குச் சென்று பேசும் அளவு உயர்ந்திருக்கிறார். பல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் நடனம் கூட ஆடி பார்வையாளர்களை பிரமிக்கவும் வைத்திருக்கிறார். அழகாக உடைகள் உடுத்துவதில் ஆர்வம் உள்ள அவர் உடல் ஊனமுற்றவர்களுக்கான ஆடைகள் விளம்பரத்திலும் இன்று மிளிர்கிறார்.
இன்று உடல் ஊனமுற்ற குழந்தைகள் பலருக்கும் ஒரு மகத்தான வழிகாட்டியாக நாட்டில் வலம் வரும் அவர் அது போன்ற எத்தனையோ குழந்தைகளிடம் தானும் நிறைய கற்க இருப்பதாக உணர்ந்து கற்று வருவதாகவும் பணிவாகச் சொல்கிறார்.

அசத்தும் முத்து:

புற்று நோய் மற்றும் கொடிய நோய்களால் தாக்கப்பட்டு, அதற்கான மருத்துவ செலவுகளை செய்ய இயலாது தவிக்கும் நோயாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது மிலாப் என்னும் கூட்டு நிதி திரட்டும் தளம். [https://milaap.org/ ] பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு உதவும் ஆன் லைன் திட்டம் இது. நோயாளிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நன்கொடைக்கான இன்ஷூரன்ஸ் உருவாக்குவது, ஆன்லைனில் க்ரவுட் ஃஃபண்டிங் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, டிஜிட்டல் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு அவர்கள் சார்பாக நிதி திரட்ட ஆட்களை நியமித்தல் போன்ற முயற்சிகளையும் மிலாப் மேற்கொள்ளுகிறது.
இதுவரை மிலாப் தளத்தில் மட்டுமே மருத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்காக 150 கோடி திரட்டப்பட்டுள்ளது.

தகவல் முத்து:

வெளியூர் சென்றிருக்கும் உங்கள் உறவினர் தன் பர்ஸ் ஏ.டி.எம் கார்டு உள்பட அல்லது கைப்பையைத் தொலைத்து விட்டால் சாப்பிடவோ, தங்கவோ, பயணிக்கவோ வழியில்லாத நிலையில் அவர் எப்படியாவது அருகிலுள்ள ஒரு பெரிய போஸ்ட் ஆபீஸ் சென்று உங்களுக்கு ஃபோன் செய்தால் போதும், நீங்கள் அவருக்கு உதவி செய்ய முடியும்.

நீங்களும் உங்கள் பகுதியிலுள்ள பெரிய போஸ்ட் ஆபீஸிற்கு செல்ல வேண்டும். அங்குள்ள இ.எம்.ஒ என்ற ஃபாரத்தை வாங்கி எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதை எழுதி பூர்த்தி செய்து, அந்த பணத்தை அங்கே செலுத்தினால் உங்களிடன் சீல் செய்யப்பட்ட ஒரு கவரை தருவார்கள். அதில் ஒரு டிஜிட்டல் எண் இருக்கும். அதை வெளியூரில் தவித்துக்கொண்டிருக்கும் உங்கள் உறவினருக்கு மெஸேஜ் செய்தால் போதும். அவர் அந்த எண்ணை அந்த போஸ்ட் ஆபீஸில் சொல்லி தன் ஃபோடோ ஐ.டி ஐ காண்பித்து பணத்தைப்பெற்றுக்கொள்ள முடியும். பெரும்பாலோனோர் தங்கள் மொபைலில் போட்டோ ஐ.டி யை வைத்துக்கொள்வதல் பிரச்சினை இல்லை.

சங்கீத முத்து:

காலஞ்சென்ற பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது குரலில் ஒலித்த ' மரணத்தை எண்ணி' பாடலையும் ' உள்ளத்தில் நல்ல உள்ளம் ' பாடலையும் கேட்டு ரசிக்காதவர்கள் மிகவும் குறைவு. அந்தப்பாடலை இன்றைய பாடகர் முகேஷ் தன் கம்பீரக்குரலில் இங்கு பாடுகிறார்! கண்கலங்கி கண்ணீர் வழிய அனைவரும் ரசிக்கும் காட்சி நம்மையும் நெகிழ வைக்கிறது. நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்கள்!!

Tuesday 11 September 2018

வாட்ஸ் அப் வினோதங்கள்-3!!!



திருச்சியில் அரசு மருத்துவ மனையின் நோயாளிகளுக்கு தினமும் காலை கஞ்சியும் மதியம் உணவும் வழங்கி வருகிற‌வரைப்பற்றிக்கூறும் நிகழ்ச்சி இது! அதுவும் கடந்த 26 வருடங்களாக!  


ஒரு ஏழைத்தாயின் கண்ணீர்க்குமுறல் இது! இவரின் வார்த்தைகள் நெஞ்சை சுடுகிறது! பாசத்தை மறக்கும் பிள்ளைகளுக்கு தண்டனை வேண்டும் என்கிறார் இவர்!

  
கல்லிலே மட்டும்தானா கலைகளை வடிக்க முடியும்? ஒரு மனிதனுக்கு முடி வெட்டுவது கூட சிறந்த கலை தான்! 



அம்மியும் கீத்து வண்டியும் டயரை வைத்து விளையாடும் சிறுவர்களும் குடிசை வீடும் ரேடியோவும்- இன்னும் எத்தனை எத்தனை பழைய இனிய நினைவுகள்!!!



ஒரு இளம் பெண்ணுக்கு இதை விடவும் அழகாக எப்படி புத்திமதி சொல்ல முடியும்? முத்தான வரிகள் ஒவ்வொன்றும்!!



இந்தப்பெண்மணியின் ஒவ்வொரு வார்த்தையும் மனசை பாதிக்கிறது! கண்களிலிருந்து கண்ணீர் வழிவதை தவிர்க்கவே முடியவேயில்லை!      

Thursday 30 August 2018

உயர்ந்தவர்கள்!!

இன்றைய மருத்துவ முத்துக்களில் மூன்று சிறந்த மருத்துவர்களையும் அவர்களின் சாதனைகளையும் குறிப்பிட்டிருக்கிறேன். நோயால் வாடும் யாருக்கேனும் இந்த மருத்துவர்களின் வைத்தியம் கிடைத்து அவர்கள் குணமானால் அதுவே இந்தப்பதிவை எழுதியதற்கான நிறைவைத்தந்து விடும்!

DR.MOHAN RAO

தெரிந்த 2 நண்பர்கள் சொன்ன விபரம் இது. அவர்களின் நண்பர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு கால்கள், கைகள், பேச்சு செயலிழந்த நிலையில் இந்த மருத்துவரிடம் சென்று அதுவும் ஒரு மாதங்கழித்து யாரோ சொன்னதன் பேரில் சென்று வைத்தியம் பார்த்ததில் நடக்கவும் பேசவும் முடிவதாக சொன்னார்கள். பக்கவாத தாக்குதல் ஏற்பட்டு கூடிய விரைவில் சென்றால் அவர் முழுவதும் குணப்படுத்தி விடுவதாகவும் சொன்னார்கள். என்னிடம் அந்த மருத்துவரைப்பற்றிய நோட்டீஸ் ஒன்றைக்கொடுத்தார்கள். அதில் வைத்தியரிடம் மூன்று முறை திரவ ரூபத்தில் கொடுக்கப்படும் மருந்தை சாப்பிட வேண்டும் என்றும்  நோயாளிகள் வரும்போது ஒரு கிலோ சாப்பாட்டு புழுங்கலரிசி எடுத்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சில சமயம் இரவில் தங்குவதற்கும் ஆயத்தமாக வர வேன்டும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நண்பர்கள் அன்று மாலையே மருந்து கொடுத்து அனுப்பி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதற்கு கடும் பத்தியம் இருக்கிறது. 15 நாட்கள் வரை அசைவம், இனிப்பு, வெற்றிலை பாக்கு உபயோகிக்கக்கூடாது.
2 மாதம் வரை தக்காளி, தேங்காய், நெய், பால், தயிர், மீன் கேழ்வரகு, உளுத்தம்பருப்பு [ இட்லி,தோசை கூடாது ] சாப்பிடக்கூடாது. ஆந்திர அரசு இந்த வைத்தியசாலைக்கு தனி பஸ் விட்டிருக்கிறதாம்.

மருத்துவர் மோகன்ராவ் குடும்பம் நூறு வருடங்களாக இந்த வைத்தியம் செய்து, பக்கவாதத்தை குணப்படுத்தி வருகிறது! மூன்று வேளைகள் மருந்து கொடுத்து கையிலும் மருந்துகள் கொடுத்து நோய்க்கு ஏற்ப 15 அல்லது 20 நாட்கள் கழித்து மருத்துவர் மோகன்ராவ் வரச்சொல்கிறாராம். மருந்துகளுக்கு மட்டும் ரூ.500 வாங்கிக்கொள்கிறாராம்!!

இந்த வைத்தியரின் விலாசம்:
DR.C.MOHAN RAO,
Marati C Ranoji Paralysis Vydyam) , Virupakshi Puram Village, Near ChappidipallePost
Palamaner, Chittoor - 517408, ,
CELL: 9440459200/PHONE: 08579 200347.

DR.JAYALAKSHMI.

டாக்டர் திருமதி ஜயலக்ஷ்மி பற்றி நிறைய பேர் அறிந்திருப்பார்கள். தொலைக்காட்சி, யு டியூப், வார பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் முதலியவற்றில் இவரது தொடுசிகிச்சை பற்றிய தகவல்களை அடிக்கடி அளித்து வருகிறார். அக்குபங்க்சர், அக்குப்பிரெஷர் சிகிச்சை மூலம் பல நோய்களை சரியாக்குகிறார் இவர்.



பல வருடங்களுக்கு முன் என் கணவருக்கு தோள்பட்டை வலி மிக அதிகமாக இருந்தது. அலோபதி வைத்தியம், நாட்டு வைத்தியம் எதனாலும் சரியாகவில்லை. முதன் முதலாக இவரைப்பற்றி கேள்விப்பட்டு சென்னைக்கு இவரிடம் காண்பிக்கச் சென்றோம். காதருகில் 2 இடங்களிலும் தோள்பட்டை அருகிலும் அக்குபங்சர் செய்தார். 10 நிமிடங்கள் கழித்து கையை உதறச் சொன்னார். சுத்தமாக வலி போய் விட்டிருந்தது. எங்களால் அதை நம்பவே முடியவில்லை! இன்று வரை அந்த வலி இல்லை. அதனால் எனக்கு எந்த உடல்நலப்பிரச்சினையென்றாலும் இவரிடம்தான் சென்று வருகிறேன். மருந்தில்லா வைத்தியம் என்பதால் என்ற பிரச்சினைகள் இல்லை.
இவர் விலாசம்: no:19, door no:C-5, woodbridge apartment, Venkatraman street, T.NAGAR, CHENNAI-17. Phone: 044 - 28151832, 9840095385

ஞாயிறன்றும் புதனன்றும் இவர் வைத்தியம் பார்ப்பதில்லை. மற்ற நாட்களில் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை மட்டுமே நோயாளியைப்பார்க்கிறார், இப்போதெல்லாம் புதன்கிழமை கூட இவரது உதவியாளர்கள் பார்ப்பதாக தற்போது டாக்டர் சொன்னார்கள்.

DR.PRATHEEP NAMBIYAR

டாக்டர் பிரதீப் நம்பியார் இந்தியாவின் மிகச்சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரில் ஒருவர். இதயம், நுரையீரல், நெஞ்சுப்பகுதி என்று கிட்டத்தட்ட 7000 அறுவை சிகிச்சைகள் தனது 25 வருட அனுபவத்தில் செய்துள்ளார்.



அதில் நுண்ணிய இதய அறுவை சிகிச்சைகளும் அடங்கும். ' நம்பியார் டெக்னிக் ' என்று அவர் பெயரில் தற்போது டெல்லியில் மட்டும் ஒரு நுண்ணிய பை பாஸ் அறுவை சிகிச்சை இதயத்தில் செய்யப்படுகிறது! இதைப்பற்றி டாக்டர் பிரதீப் குமார் " இதில் பின்ஹோல் சர்ஜரி மூலம் நோயாளியின் இட‌து மார்புக்குக்கீழே 2 அங்குல அளவு கிழிக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று இரத்தக்குழாய்களில் பிளாக் இருக்கும்போது பைபாஸ் செய்வதற்கு மார்புக்குள்ளிலிருந்து மார்பின் உள் தமனி உபயோகப்படுத்தப்படுகிறது. கால் நரம்புகளை வைத்து பைபாஸ் செய்யும்போது அது சாதாரணமாக 10,12 வருடங்களுக்குத்தான் செயல்படுகிறது. இந்த சர்ஜரி 25,30 வருடங்களுக்கு நிலைத்து நிற்கக்கூடியது. நோயாளி 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 10 நாட்களில் அவர் நார்மலாக தன் வேலைகளில் ஈடுபடலாம். மேலும் தொற்று ஏற்படுவதும்  தழும்பு வருவதும் மற்றும் ரத்த‌ம் ஏற்ற வேண்டிய அவசியம் இவை அனைத்துக்குமான அபாயம் இந்த சர்ஜரி முறையில் குறைவு "என்றார்.
இந்த அறுவை சிகிச்சை தற்போது டெல்லியில் மட்டுமே செய்யப்படுகிறது.

டாக்டர் பிரதீப் நம்பியார் தற்போது ஹரியானாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் இருக்கிறார்.

HOSPITAL ADDRESS
Columbia Asia Hospital, Block F, Gol Chakkar,
Palam Vihar
Gurgaon Haryana 122017
India


Tuesday 21 August 2018

கிராமத்திற்கு ஒரு டிக்கெட்!!! [VILLAGE TICKET!!!! ]



சென்ற ஜுலை 27ந்தேதி நான் என் கணவருடன் சென்னையில் இரண்டு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. ஹோட்டலில் தங்கியிருந்த போது, ஆங்கில நாளிதழைப்புரட்டிய என் கண்ணில் அன்றைக்கு ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் கிராமத்து கலைஞர்களையும் சமையல் வல்லுனர்களையும் உழவர்களையும் மரியாதை செய்யும் கிராமீயத்திருவிழா நடைபெறுவதாகச்சொல்லி 'நம்ம ஊரு, நம்ம பாரம்பரியம், நம்ம உணவு எல்லாவற்றையும் இங்கு வந்து கண்டு களியுங்கள்! ' என்று நிர்வாகம் விளம்பரப்படுத்தியிருந்தது.

அன்று மாலை அங்கே சென்றோம். நடன‌ங்கள், வாத்திய இசையுடன் வரவேற்பு பலமாக இருந்தது.

வரவேற்பு!!!



அதைக்கடந்து சென்றால் பருத்திப்பால் நம்மை வரவேற்றது. நல்ல சுவை! குயவர்கள் மண்ணைக்குழைத்து மண் பாண்டங்களை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள்.


 அதற்கடுத்தாற்போல பெரிய மைதானம்! மறந்து போன தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, உறியடி போன்ற விளையாட்டுக்கள், மாட்டு வண்டி சவாரி, குடை ராட்டினம், உணவுக்கடைகள், குடிசை வீடுகள், வண்ணக்கோலங்கள், ஐயனார் கோயில், கரகாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், சிலம்பாட்டம், நையான்டி மேளம் என்று அமர்க்களமாக இருந்தது. மாட்டு வண்டியில் நிறைய பேர் ஏறிச்சென்றார்கள்!


ஆடுபுலி ஆட்டம்



ஜட்கா [ குதிரை ] வண்டி!!



கரகாட்டம்!! மிகவும் அருமையாக இருந்தது! ஆடிய பெண் இறுதியில் அழகாக ஆங்கிலம் பேசினார்!

கரகாட்டத்தைத்தொடர்ந்து மயிலாட்டம், புலியாட்டம் ஆட காத்திருக்கிறார்கள்! 

மயிலாட்டமும் காவடியாட்டமும்!










உணவுக்கடைகள் சிறுதானிய உணவு, அசைவம், பலகாரங்கள், சைவ உணவு, எண்ணெய் பலகாரங்கள் என்று பிரித்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கம் நாவல் பழங்கள் கூட விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த உணவைத்தவிர கறி விருந்து என்ற பெயரில் நண்டு சாறு, கணவாய் குழம்பு, சென்னை மீன் குழம்பு, முட்டை கொத்துக்கறி, பிச்சிப்போட்ட கோழிக்கறி, பள்ளிப்பாளையம் சிக்கன், கொங்கு நாட்டு கறி, ஹொக்கனேக்கல் மீன் வறுவல், தூத்துக்குடி எறா மசால், நெத்திலி வறுவல், காடை வறுவல், செட்டி நாட்டு சுறா புட்டு, புதுக்கோட்டை முட்டை மாஸ், கடலூர் நண்டு மசாலா, விருதுந‌கர் பொரிச்ச பரோட்டா என்று 32 விதமான அசைவ உணவு வகைகள் உள்ள சாப்பாடு தனிக்குடிலில் பரிமாறப்பபட்டது. விலை ரூ.750. கல்யாண விருந்து என்று 32 வகைகளில் பலகாரங்கள் பறிமாறப்பட்டது. விலை 500 ரூ. நாங்கள் சாமை சாம்பார் சாதம், சுண்டல் வகைகள், வாழைப்பூ பக்கோடா, எலுமிச்சை சாதம் வாங்கி சாப்பிட்டோம்.

மொத்தத்தில் மறந்து போன நமது சமூக வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் நினைவூட்டிய விதம் அருமை! நாங்களும் சின்ன வயது சந்தோஷங்களை ஒரு முறை அனுபவித்த மாதிரி இருந்தது.






Tuesday 14 August 2018

கண்ணனும் உத்தவரும்!!!

பி.ஆர்.சாமி என்னும் வலயக நண்பரின் அருமையான பதிவொன்றைப்படித்தபோது பிரமித்துப்போனேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன் தன் கதாபாத்திரத்தினைப்பற்றி விளக்கும் காட்சி அது. நீங்களும் ரசிக்க இதோ அந்தப்பதிவிலிருந்து சில வரிகள்....

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், “உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.



தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே  கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள், புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.

“பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.  முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ, ‘உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, ‘தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து  தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.’ திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் – துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, “ “ “துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப் படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?’ என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.


பகவான் சிரித்தார். “உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்” என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
“துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, ’ நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்’ என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். ‘ஐயோ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப்பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி…ஹரி…அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.

“அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா?”

புன்னகைத்தான் கண்ணன். “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.

“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் உத்தவர்.

“உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.



அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை

Monday 6 August 2018

விமானப்பயணங்கள்!!

மதுரைத்தமிழன் ஏர் இந்தியாவைப்பற்றி எழுதியிருந்ததைப்படித்த போது, பழைய நினைவலைகள் மீண்டும் எம்பி எழுந்தன! 42 ஆண்டுகள் தொடர்ச்சியான விமானப்பயணங்கள்! எப்படி இருந்தவையெல்லாம் எப்படி மாறி விட்டன!

1976ம் வருடம் ஜூன் மாதம் எனது முதல் விமானப்பயணம்! பயம் இருந்தது. குமட்டல் ஏற்படுமோ என்ற சந்தேகம் இருந்தது. முதன் முதலாக இன்னொரு நாட்டில் தரையிறங்கிய போது பிரமிப்பு இருந்தது. அப்போதைய காலத்தில் பயணம் செய்த எங்களுக்கும் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கும் மக்களுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசங்கள்! இப்போதுள்ள தலைமுறை பஸ் பயணத்தைப்போலவே தான் விமானப்பயணத்தையும் காஷுவலாக எடுத்துக்கொள்கிறது! எந்த ஒரு பிரமிப்பும் காணோம்!

அன்றைய‌ துபாய் விமான நிலையம்!
அப்போதெல்லாம் விமானப்பயணம் என்பது காஸ்ட்லியாக இருந்தது. பயணிகளுக்கு ஏர் இந்தியா மகாராஜா வரவேற்பு தான் தரும்! அதுவும் ஏர் இந்தியாவின் சின்னமான தலை குனிந்து வணக்கம் செய்யும் மகாராஜாவைப்போலத்தான் விமானப் பணிப்பெண்களின் சேவையும் இருக்கும்.

இன்றைய துபாய் ஏர்ப்போர்ட் உள்ளே!
1976 வாக்கில் மும்பை வழியே தான் துபாய்க்கு முதன்முதலாக பயணிக்க வேண்டியிருந்தது . அப்போதெல்லாம் நேரடி விமான சேவை சென்னை துபாய்க்கு கிடையாது. மும்பை வந்தாலும் சென்னைக்கோ அல்லது துபாய்க்கோ செல்ல உடனடி விமான சேவைகள் இருக்காது. அதனால் அடுத்த நாள் செல்லும்வரை பயணிகள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்படுவார்கள். அடுத்த வருடமே ஏர் இந்தியா விமானங்கள் முதன் முதலாக சென்னைக்கு நேரடி சேவையைத் துவக்கின. எங்களுக்கெல்லாம் அப்படியொரு சந்தோஷம். அதுவும் தொடர்ச்சியாகக்கிடையாது.

சென்னை வந்து அடுத்த நாள் நாங்கள் தஞ்சை செல்ல ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் தான் பயணிப்போம். ஒரு முறை சென்னை வந்து இறங்கி, மாமனார் இல்லத்திற்கு வருவதாகத் தந்தி கொடுத்து விட்டு சினேகிதி வீட்டில் தங்கி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் சென்றால் என்னைப்பார்த்து எல்லோருக்கும் அதிர்ச்சி! நான் கொடுத்த தந்தி போய் சேரவேயில்லை! அடுத்த நாள் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த போது தான் அந்தத் தந்தியே வந்தது! அதை நான் தான் கையெழுத்து போட்டு வாங்கினேன்!!

பிறகு திருச்சியிலிருந்து விமான சேவை  1990 களில் தொடங்கியது.இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் ஷார்ஜாவிலிருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கியிருந்தது. [ சரியான வருடம் நினைவில் இல்லை ] ஆரம்ப நாட்களில் பயணிகளின் பெட்டிகள் காட்டுச்செடிகளின் இடையேயுள்ள கன்வேயர் பெல்ட்டில் தான் பயணித்து உள்ளே வரும். ஒரே தமாஷாக இருக்கும்! பயணிகள் உபயோகிக்க ஒரே ஒரு டாய்லட் மட்டுமே இருந்தது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது!

மெல்ல மெல்ல காட்சிகள் மாறின. இன்றைக்கு அதி நவீன வசதிகளுடன் திருச்சி விமான நிலையம் மாறியிருக்கிறது. தஞ்சை சேலம், திருச்சி மாவட்ட மக்களுக்கு இன்றைக்கு துபாயிலிருந்தும் ஷார்ஜாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்து செல்ல தினசரி விமான சேவைகள் இயங்குகின்றன.

இன்றைய திருச்சி ஏர்ப்போர்ட்!
அடுத்தாற்போல பட்ஜெட் ஏர்லைன்ஸ் வந்து விட்டன. அதைப்பார்த்து விட்டு நடைமுறையில் இருக்கிற மிகப்பெரிய ஏர்லைன்கள் பலவும் இந்த பட்ஜெட் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்து விட்டன. இன்றைக்கு விமான பயணக்கட்டணம் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் முன்பிருந்த வசதிகளோ, மென்மையான அணுகுமுறையோ, அக்கறையோ இன்றில்லை. பெரும்பாலும் அனைத்து ஏர்லைன்களும் சாப்பாடு தருவதை நிறுத்தி விட்டன. எமிரேட்ஸ் உள்ளிட்ட மிகச்சில நிறுவனங்கள் மட்டுமே உணவு கொடுக்கின்றன. அவர்களது சாப்பாடும் அளவு, தரம் இரண்டையும் குறைந்து விட்டன. சில ஏர்லைன்கள் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் விமானத்திலேயே விற்பனை செய்கின்றன. அமரும் இருக்கைகள்கூட இன்று மாறி விட்டன.

இன்றைக்கு காட்சிகள் முழுமையாக மாறி விட்டன. ஒரு சாதாரண, பொருளாதாரத்தில் மிகக்கீழுள்ள ஒருவர் கூட இன்று விமானத்தில் போகுமளவு சமூக நிலை மாறி விட்டது. ஆனால் தரம், அக்கறையான அணுகுமுறை எல்லாமே மறைந்து விட்டது.

நவீனமயமாக்கலில் நல்ல விஷயங்கள் அழிந்து விடுவது இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் விஷயம் தானே?


Sunday 8 July 2018

முழங்கால் வலியும் சில தீர்வுகளும்!!!


இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொள்ள முடியாத வலி ஏற்படும். இது முதுமையில் தான் வரும் என்பதெல்லாம் இப்போது பொய்த்து விட்டது. நடைமுறை பழக்க வழக்கங்களாலும் கால்களுக்கு சரியான பயிற்சியில்லாததாலும் இளம் வயதினருக்குக்கூட இப்போதெல்லாம் மூட்டு வலி வருகிறது. பாரம்ப‌ரியத்தன்மையும் ஒரு காரணம். அசைவம் சாப்பிடுவதாலும் மூட்டுக்கள் பாதிப்படைகின்றன என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மூட்டுவலிக்கு முக்கியமான   காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களாலான   குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை   குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.



மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. கீழே தரையில் உட்கார்ந்து எழ முடியாது. டாய்லட் சீட்டில் உட்கார்ந்து எழ முடியாது. இரவு நேரங்களிலும் வலியினால் புரண்டு படுக்க முடியாமல் நல்ல தூக்கம் இருக்காது. சில சமயம் நடக்கவோ, நிற்கவோ முடியும் ஆனால் காலை மடித்து கட்டிலில் அமர்வதற்குள் வலியில் உயிர் போய் விடும். மூட்டுக்களில் மட்டுமல்லாது, பக்க வாட்டில் இரு புறமும் வீக்கமும் மூட்டிற்கு அடியிலுள்ள பள்ளத்தில் வலியும் இருக்கும்.

பொதுவாய் அலோபதி மருத்துவரிடம் செல்லும்போது இதற்கான எக்ஸ்ரே, அதைப்பார்த்து மருந்து மாத்திரைகள், உடற்பயிற்சிகள், பிஸியோதெரபி மூலம் வலியைக்குறைத்தல் என்று சிகிச்சை முறைகள் இருக்கும்.

எனது மூட்டுவலிக்காக இங்கே தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கே எலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் என் உறவினர் வழக்கம்போல மேற்க‌ண்ட சிகிச்சை முறைகளை செய்து விட்டு, ஒரு வேளை கால்களிலுள்ள இரத்தக்குழாய்களில் எங்கேனும் அடைப்பு இருக்கிறதா என்று ஒரு ஸ்கான் பண்ணி பார்த்து விடலாமா என்றார். கால்களில் மட்டும் பண்ணும் ஸ்கான் இது. முடிவில் எங்கேயும் அடைப்பு இல்லையென்றாலும் என் இடது கால் முட்டிக்கு பின்னாலுள்ள பள்ளத்தில் உள்ளே BAKERS CYST என்னும் கட்டி இருப்பதையும் வெரிகோஸ் வெயின் ஆரம்பித்திருப்பதையும் அந்த ஸ்கான் கண்டுபிடித்தது.

வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும்,வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும்.

நமது மூட்டுக்களை சமனப்படுத்திக்கொன்டிருக்கும் சினோவியல் என்ற திரவம் மூட்டுவலி, மூட்டு வீக்கம், யூரிக் ஆசிட் அதிகரித்தல் மற்றும் காலில் அடிபடுதல் போன்ற காரணங்களால் அதிகரிக்கிறது. இப்படி அதிகரிக்கின்ற திரவம் வேறு வழியில்லாமல் மூட்டுக்கு நேர் பின்னால் உள்ள பள்ளத்தில் தனிக்கட்டியாக உருவாகிறது. இதுவே பேக்கர்ஸ் கட்டி எனப்படுகிறது.



இதற்கென்று தனி மருத்துவமோ அல்லது மருந்து மாத்திரைகளோ இல்லை. ஆரம்ப நிலையில் போதுமான ஓய்வை கால்களுக்குக் கொடுப்பதும் நிற்கும்போதும் வேலைகள் செய்யும்போதும் COMPRESSED STOCKING அணிவதும் வென்னீர் ஒத்தடம் கொடுப்பதுமே இந்தக்கட்டி பெரிதாவதை தடுக்கும்.

இது சில வாரங்களில் சில சமயம் சில மாதங்களில் மறைந்து போய் விடும் என்றும் மருத்துவர் கூறினார்கள். அப்படி மறையாமல் இப்போது சிறியதாக இருக்கும் கட்டி பெரியதாக வளர்ந்து விட்டால் கட்டியை முழங்கால்களின் பின்னால் ஆக பார்க்க முடியும். அப்போது வலி மிக அதிகமாக இருக்கும். அப்போது அறுவை சிகிச்ச மூலம் இந்த கட்டியை நீக்குவார்கள் என்றும் மருத்துவர் கூறினார்.

அதன் பின் கூகிள் மூலம் இந்தப்பிரச்சினையினால் கஷ்டப்பட்டவர்கள் எப்படி குணமானார்கள் என்பதைத்தெரிந்து கொள்ள முடிந்தது.

தெரிந்த தீர்வுகள்:

1. COOL PACK AND HOT PACK. இதை மாறி மாறி முழங்காலுக்குக் கீழே வைத்துக்கொள்ள வேன்டும்.
2. தினமும் மூன்று முறைகள் ஒரு தம்ளர் வென்னீரில் [ குடிக்கும் சூட்டில்] 1 மேசைக்கரண்டி ஆப்பிள் சிடார் வினீகர், 1 ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இப்படி மாறி மாறி COOL PACK AND HOT PACK சிகிச்சை மேற்கொண்ட போது என் முழங்கால் வலியும் பின்னால் உள்ள வலியும் வீக்கமும் வெகுவாக குறைந்து விட்டது.
அதன் பின் சென்னையிலுள்ள மருத்துவர் ஜெயலக்ஷ்மியிடம் அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக்கொண்டதில் வலி 90 சதவிகிதம் மறைந்து விட்டது. முழங்காலின் மூட்டுக்களில் வயதாக வயதாக தேய்மானம் ஏற்படுவது இயல்பான விஷயம். ஆனால் அதீத வலி ஏற்படும்போது இந்த மாதிரி ஸ்கான் எடுத்துப்பார்த்து அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

மூட்டு வலிக்கும் சில தீர்வுகள்:

1. கடுகு எண்ணெயை சூடு செய்து மூட்டுக்களில் தடவி மெதுவாய் மஸாஜ் செய்து, உடனேயே வென்னீர் ஒத்தடம் தர வேண்டும்.
2. ஒரு வெங்காயத்தை எப்சம் சால்ட் 2 மேசைக்கரண்டியுடன் அரைத்து வலி உள்ள இடத்தில் வைத்து ஒரு மெல்லிய துணியினால் கட்ட வேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் இதை நீக்க வேண்டும். இதனாலும் வலி பெருமளவில் குறைகின்றது.
3. புங்க எண்ணெய், வேப்பெண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் இவற்றை சம அளவு எடுத்து காய்ச்ச வேண்டும். எண்ணெய் புகைந்து வரும்போது அடுப்பை அணைத்து அதில் 4 கட்டி சூடத்தைப்போட்டு வைக்க வேண்டும். சூடம் கரைந்து எண்ணெய் ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்ட்டும். இதைத் தடவி வரும்போது வலி வெகுவாகக் குறையும்.