Sunday 25 March 2018

புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்!!!


தஞ்சையில் பெரிய கோவிலான பிரகதீஸ்வரர் கோவிலுக்கு நிகரான மிகவும் புகழ் பெற்ற கோவில் இது. அம்மனுகென்றே ஒரு ஆலயம் என்பதால் எப்போதுமே கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும். பல சரித்திர நிகழ்வுகள், அசாதாரண உண்மைகள் அடங்கிய கோவில் இது. 



தஞ்சையை தலைநகராய் ஆட்சி செய்து வந்த வெங்கோஜி மன்னர் ஒரு சமயம் சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு இரவு தங்கினார். கனவில் வந்த அம்பிகை தஞ்சையருகே புன்னை வனத்தில் புற்று வடிவில் இருக்கும் தன்னை வந்து வணங்கும்படி சொல்லி மறைந்தார். வெங்கோஜி மன்னர் புற்று இருந்த இடத்தை சீரமைத்து கூரை அமைத்து அப்பகுதிக்கு புன்னை நல்லூர்  என்று பெயரிட்டு 1680ம் ஆண்டு அவ்வூரை ஆலயபராமரிப்பிற்காக வணங்கினார்.

தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக நிர்மாணித்தார்கள். தஞ்சைக்கு கிழக்கே காவல் தெய்வமாக அவர்கள் அமைத்ததே புன்னை நல்லூர் மாரியம்மன் என்று சோழ சம்பு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் புன்னை வனமாக மாறி விட்ட அந்த இடத்தைத்தான் வெங்கோஜி மீட்டெடுத்திருக்கிறார்.




1763 1787ல் தஞ்சையை ஆண்டு கொன்டிருந்த துளஜேந்திரராஜா என்னும் மன்னனின் மகள் வைசூரியால் பாதிக்கப்பட்டு அவளது கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டதும் மகளின் கண் குறைபாடு நீங்கியதால் மனம்மகிழ்ந்து மன்னன் ஒரு சிறிய கோவிலும் கட்டினான். இம்மன்னனே சிறந்த ஞானியான சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளை வரவழைத்து புற்று வடிவிலிருந்த அம்மனுக்கு சிலை வடிவில் நான்கு கரங்களுடன் மாரியம்மன் உருவம் அமைத்தான்.மேலும் சிவனை வழிபட கைலாச நாதர் என்னும் கோவிலையும் கட்டினான். 0739லிருந்து 1763 வரை ஆண்ட பிரதாப சிங்க மகாராஜா அருள்மொழிப்பேட்டை என்னும் கிராமத்தை மான்யமாக அளித்ததோடு, பெருமாளையும் வணங்கும் பொருட்டு இந்தக்கோவிலுக்கு வடதிசையில் அருள்மிகு கோதண்டராமர் கோவிலையும் கட்டி மான்யங்களையும் வழங்கினார். நேபாள மன்னரால் அந்த நாளில் பரிசாக வழங்கப்பட்ட சாளக்கிராமம் என்னும் கல்லினால் ஆனவை இக்கோவிலினுள்ள ஸ்ரீராமர், சீதா தேவி, லக்ஷ்மணர், சுக்ரீவர் மூர்த்தங்கள்


பின்னாளில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் இக்கோயிலுக்கு கோபுரம், மகாமண்டபம், வெளி மண்டபம், நர்த்தன மண்டபம், இரண்டாம் பிரகாரம் முதலியவற்றைக் கட்டுவித்தார். மராட்டிய மன்னரான வீர சிவாஜி இக்கோவிலுக்கு மூன்றாம் திருச்சுற்றை அமைத்துக்கொடுத்தார்அமைத்துக்கொடுத்தார். 1892ல் சிவாஜி மகாராஜாவின் பட்டமகிஷி ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டிக்கொடுத்தார். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்து 1950ம் ஆண்டு குடமுழுக்கும் செய்தார்.


 இக்கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று வடிவில் இருக்கிறார். அபிஷேகம் செய்யபப்டுவதில்லை. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு சாற்றப்படுகிறது. அச்சமயம் வெண்திரையில் அம்பாளை வரைந்து அதற்கு ஆவாஹனம் செய்து அதற்குத்தான் ஆராதனைகளும் அர்ச்சனைகளும் செய்யப்படுகிறது. மூலஸ்தான அம்மனுக்கு அச்சமயம் தினந்தோறும் இருவேளை சாம்பிராணித்தைலமும் புனுகும் ஜவ்வாதும் அபிஷேகம் செய்யப்படுகிறது. தைலக்காப்பின்போது அம்பாளுக்கு வெப்பம் அதிகரிப்பதால் இளநீரும் தயிர் சாதமும் படைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்திலும்,சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்துத் தானாகவே மாறி விடும் வழக்கம் தற்போதுவரை உள்ளது. இதன் காரணமாகவே, இந்த அம்பிகையைமுத்து மாரியம்மன்என்று அழைக்கிறார்கள்


விஷ்ணு துர்க்கைக்கும் உற்சவ மூர்த்தத்திற்கும் தினந்தோறும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. உள்ளே அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மனுக்கு தனி சன்னதி இருக்கிறது. நான் சென்ற சமயம் தீபார்த்தனைக்குப்பிறகு, குங்குமத்திற்கு பதிலாக விபூதி கொடுத்தபோது, ஆச்சரியமாக இருந்தது. குருக்கள் விபூதி வழங்கப்படும் ஒரே அம்மன் சன்னதி இது மட்டும்தான் என்று கூறினார். மேலும் உக்கிரமான முத்து மாரியம்மன் மருமகள் என்றும் சாந்தமான பேச்சியம்மன் மாமியார் என்றும் கூறினார்.


தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் 6 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. தல விருட்சம் வேப்ப மரம். தீர்த்தம் வெல்லக்குலம். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோவில்களுள் இதுவும் ஒன்று. காலை ஐந்து மணி முதல் இரவு 9 வரை திறந்திருக்கும் இந்தக்கோவில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை திறந்திருக்கிறது. புற்
புற்று வடிவில் உள்ளதால் அம்மனுக்கு அபிஷேகம்



இங்கு உள்தொட்டி நிரப்புதல் என்ற பிரார்த்தனை இருக்கிறது. அம்மை வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு அருகிலுள்ள உள்தொட்டியிலோ அல்லது வெளித்தொட்டியிலோ அருகிலுள்ள குளத்திலிருந்து நீர் கொன்டு வந்து நிரப்பினால் அம்மன் குளிர்ச்சியடைந்து அதன் காரணமாக தங்களுக்கு வந்துள்ள அம்மையையும் ஓரிரு நாட்களில் மறைந்து விடுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. கண் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலுக்கு வந்து நேர்ந்து கொண்டு கண் பார்வை சரியானதும் கண்ணில் மாவிளக்கு ஏற்றுகிறார்கள்


அது போல வயிற்று வலியாலும் கட்டிகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமானதும் வயிற்றில் மாவிளக்கு போடுகிறார்கள். உடம்பில் கட்டி வந்து பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் குணமானதும் வெல்லக்கட்டிகள் வாங்கி குளத்தில் கரைத்து தங்கள் நேர்த்திக்க்டனை செலுத்துகிறார்கள்.


கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன. அம்பாளுக்கு ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூச்சொரிதல், தேரோட்டம், முத்துப்பல்லக்கு, தெப்ப உற்சவம் போன்ற திருவுழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.