Wednesday 27 March 2019

கம்போடியா- இரண்டாம் நாள் மாலை!!!


Pre Rup Temple

இந்த சிவனாலயம் இரண்டாம் இராஜேந்திர வர்மனால் கி.பி 10 ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதியில் அதாவது 961 அல்லது  962 ஆண்டில் எழுப்பப்பட்டது. மேல் தளத்தில் பிரம்மா, இலட்சுமி, விஷ்ணு, உமை மற்றும் சிவன் ஆகியோரின் சிலைகளைக் கொண்ட ஐந்து கோபுரங்கள் உள்ள இக் கோயிலை மலைக் கோயில் என்கின்றனர்.  இதன் ஒவ்வொரு தளங்களுக்கும் கோபுரங்களுக்கும் ஏறுவது சவாலானது. சில கோபுரங்களுக்கு ஏறுவதை தடைசெய்துள்ளார்கள்.



இது சைவர்களின் ஆசிரமம் என்றும் கூறுகின்றார்கள். இந்தக் கோவில்தான் அரச குடும்பத்தில் இறந்தவர்களுக்கு ஈமைக் கிரிகைகள் செய்யும் இடம் என்றும் சொல்லப்ப‌டுகிறது.





சூரியன் மறையும் காட்சி -PRE RUP மேலிருந்து!
ஒன்பதாம் நூற்றாண்டில் யசோவர்மன் என்னும் மன்னனால் சிவ‌ன், பிரம்மா, விஷ்ணு, புத்தருக்காக நான்கு ஆஸ்ரமங்கள் கட்டப்பட்டன்.அவனுக்குப்பின்னால் வந்த ராஜேந்திரவர்மன் சிவாலயமாக இக்கோவிலைக்கட்டினான் என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலின் பழைய பெயர் ராஜேந்திரபத்ரீஸ்வரா ஆகும்.



பெரும்பாலும் சிதைவுகளும் சிதிலங்களுமாய் காட்சி தரும் இந்த சிவாலயம் ராஜேந்திரவர்மன் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற‌தாய் விளங்கியது. இக்கோவில் பிரமிட் போல காட்சியளிப்பதாக சொல்லும் ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலில் நூலகம் இருந்ததாகவும் சொல்கிறார்கள். இது செங்கல்கள், லாட்ரைட் என்னும் கற்களால் கட்டப்பட்டது. 


இது மலைக்கோவில். மிக உயர‌மானது மட்டுமல்லாமல் செங்குத்தான படிகள் என்பதால் நான் மேலே ஏறிப்பார்க்கவில்லை. என் கணவர் வழிகாட்டியுடன் மேலே சென்று வந்தார்கள். மாலை மயங்கிய நேரம் என்பதால் மேலே புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை.



மறுநாள் காலை அந்த வழியே வந்தபோது மறுபடியும் புகைப்படங்கள் எடுத்தோம். 



Friday 15 March 2019

கம்போடியா இரண்டாம் நாள் தொடர்ச்சி!

இன்றுடன் வலைத்தளம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் முடிகிறது. 374 பதிவுகள் தான் எழுத முடிந்திருக்கிறது. ஆனாலும் நிறைய வேலைகள், அலைச்சல்கள், தொடர் பிரயாணங்கள், உடல்நலக்குறைவுகள் இடையே இந்த அளவு பதிவுகள் எழுத முடிந்ததே ஆச்சரியமாகத்தானிருக்கிறது. இனி வரும் தினங்களில் இன்னும் அதிகமாக பதிவுகள் எழுத வேண்டுமென்று நினைத்துக்கொண்டே இந்தப்பதிவை ஆரம்பிக்கிறேன். என்னுடன் கூடவே பயணித்து இத்தனை வருடங்கள் அருமையான பின்னூட்டங்கள் தந்து என்னை ஊக்குவித்த, உற்சாகப்படுத்திய அன்பு உள்ளங்களுக்கு என் இதயங்கைந்த நன்றி!!
கம்போடியா இரண்டாம் நாள் தொடர்ச்சி!

அங்கோர் வாட் சுற்றி முடிந்ததும் பயோன் கோவிலுக்குப்புறப்பட்டோம்.

 கிபி 1181இலிருந்து 1220 வரை வாழ்ந்த ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது பயோன். இது அங்கோர் தோமில் உள்ளது. அங்கோர் தோம் (பெரும் நகரம்), இப்போது கோயில்களை மட்டும் கொண்டிருக்கிறது. சுற்றிலும் காடுகள் நிரம்பியுள்ளன. இதன் தெற்கு வாயில் அழகானது. அகழியால் சூழப்பெற்றது. பாலத்தின் இரு பக்கங்களிலும் ஏழுதலை நாகத்தை வைத்து அசுரர்கள் கடைவதைப் பார்க்கலாம். திருபாற்கடலைக் கடையும் சிற்பங்களை அங்கோரில் பல இடங்களிலும் காண முடிகிறது.



இந்த தெற்கு வாயிலில் இறங்கி புகைப்படம் எடுக்க முடியவில்லை. அனுமதியில்லை என்று வழிகாட்டி சொன்னார். காரிலிருந்த படியே தான் புகைப்படம் எடுத்தோம். பார்த்த சில வினாடிகளில் முகங்கள் கோபுரத்தின் நான்கு பக்கங்களிலும் அமைதியாய் மோன் தவம் செய்கிற காட்சி பிர்மிக்க வித்தது. 





அதன் வழியே உள்ளே நெடுந்தூரம் சென்றால் பயோன் கோவில் காட்சி தருகிறது. அடர்ந்த காட்டுக்குள்ளே இருக்கிறது. கோவில் முழுவதும் வெளி நாட்டினர் உலவிக்கொண்டிருந்தார்கள். 






அங்கோர் தோமில் சிகரம் வைத்தாற்போல் காணப்படுவது பயோன் கோயில். ஏழாம் ஜெயவர்மனால் தொடங்கப்பட்டு எட்டாம் ஜெயவர்மனால் முடிக்கப்பட்டது. ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தவர் என்பதால் லோகேஸ்வரரின் உருவங்கள் கோபுரங்களில் இருப்பதாக ஒரு சாரார் எண்ணுகின்றனர். ஆனால் அவை ஏழாம் ஜெயவர்மனின் உருவங்களாகக்கூட இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. 






அங்கோர் வாட்டைப் போன்று இதுவும் மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆனால் அதற்குள் வட்ட வடிவத்தில் கோவிலின் உட்புறம் படிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கையும் அடையப் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மொத்தம் முப்பத்தியேழு கோபுரங்கள். 



பெரும்பாலான கோபுரங்களின் நான்கு பக்கங்களிலும் முகங்கள். அவற்றின் அழகைச் சொல்ல வார்த்தைகளில்லை. அவற்றைத் தவிரவும் பல்வேறு மூலைகளிலும்  முகங்கள் ஏராளமாகச் செதுக்கப்பட்டுள்ளன.  அதன் உட்புற வாயில்கள் வழியே நுழைந்துவருவது ஒரு விசித்திரமான அனுபவம். 




படை வீரர்கள் ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டும் யானைகள் மீதேறியும் போர்க்களம் நோக்கிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் காணப்படுகின்றன.




இச்சிற்பங்களில் இராமன் மாயமானை விரட்டிக் கொண்டு போதல். வாலி சுக்ரீவன் போர், சீதை தீயினை வளர்த்து அதனுள் இறங்குதல் முதலிய இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுளளன.  


பயோன் சிலைகள் முற்றாக கட்டி முடிக்கப்படாத சிலைகள் என்று ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள்.



அழகிற்சிற‌ந்த இந்தக்கோவிலை விட்டு வெளியே வ‌ந்தோம்.

 

Monday 11 March 2019

கம்போடியா- இரண்டாம் நாள்!!

காலை 9 மணியளவில் உல‌கின் மிகப்பெரிய கோவிலுக்கு இன்று கிளம்பினோம். நகரத்திற்கு வெளியே எல்லா கோவில்களுக்குமான டிக்கட் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு சென்று டிக்கட் வாங்கினார் எங்கள் கம்போடிய வழிகாட்டி. நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு மாபெரும் கோவில்.


from the net
நகரத்திற்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய  கோயிலானது, உலகிலுள்ள மிகப்பெரிய அதிசயமாக காட்சி தருகின்றது. அதன் பெய‌ர்
அங்கோர் வாட் கோயில்



அங்கோர் வாட் என்ற பெயர் "nagara vata" என்ற சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதன் பொருள் கோயில் நகரம் என்பதாகும்.

அங்கோர் வாட் கோயில்  உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் . உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.


தொடர் சிதைவுகள், அழிவுகள், போராட்டங்கள், போர்கள், மாறுபட்ட கலாச்சாரங்கள் காரணமாக நெடுங்காலமாக  காட்டு மரங்களால் மூடப்பட்டு வெளி உலகிற்குத் தெரியாமல் கிடந்த அங்கூர் வாட் கம்போடியா பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த போது ஒரு பிரெஞ்சு ஆய்வாளனால் கண்டுபிடிக்கப்பட்டது.



கோயிலின் உட்புறத்திலும் அதைச் சுற்றியும் நெருக்கமாக வளர்ந்த மரங்களை வெட்டி அப்புறப் படுத்திக் கோயிலின் தோற்றத்தைக் வெளிப்படுத்த பல வருடங்கள் பிடித்தள்ளன. இதை முழுவதுமாய் வெளிக்கொணர்ந்ததில் அமெரிக்காவின் ' நாஸா' வின் பங்களிப்பு முக்கியமானது.  தமிழ் கலாசாரம் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்ததற்கான சான்றாக இந்த கோயில் இடம் பெறுகிறது.

எங்கள் வழிகாட்டி வெய்யில் தாங்காமல் துண்டை தலையில் போர்த்திக்கொண்டு நடக்கிறார்!!
இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது.





பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த விஷ்ணு கோவில் புத்த கோவிலாக மாறியது. இப்போதும் இந்தக் கோவிலில் மூர்த்தங்கள் இல்லாததால் வழிபாடுகளும் இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கிரேன் இல்லை, லாரிகள் இல்லை, அதிநவீன சாதனங்கள் இல்லை, இப்படி எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு அமைப்பை உருவாக்க, அந்தத் தலைமுறை மக்கள் தன் நேரம் முழுவதையும் இதற்கே செலவு செய்திருக்க வேண்டும்...!















தற்போதைய புத்தர் வழிபாடு!

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்ற‌ இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது.






இங்கு கிடைக்கும் இளநீர்! மிகப்பெரிய, வட்ட வடிவ இளநீர்! எங்கள் இரண்டு பேராலும் முழுவதுமாக குடிக்க முடியவில்லை!!
1.5 கிலோமீட்டர் நீளமும் 1.3 கிலோமீட்டர் அகலமும் கொண்ட செவ்வக வடிவிலான அகழி பார்ப்பதற்கே பிரமிப்பூட்டுவதாக இருந்தது. மூன்று தளங்களுடன் அறுபது மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தினை தூரத்திலிருந்தே காண முடிந்தது. கோயிலின் நுழைவாயிலில் சுமார் 800 மீட்டர் நீளத்தில் செதுக்கப்பட்டிருந்த பல்வேறு  சிற்பங்கள் இக்கோயிலின் அழகிற்கு அழகு சேர்த்தன. இடது பக்கம் அசுரர்களும் வலது பக்கம் தேவர்களும் கூடிநின்று பாற்கடலைக் கடைவதையும்,  தத்ரூபமாக செதுக்கியுள்ளனர்.

This is motor cycle rickshaw!!
பிரதான கோபுரத்தை அடைவதற்கு நீண்ட தாழ்வாரத்தையும் குறுகலான படிகளையும் கடக்க வேண்டியிருந்தது. இக்கோயிலின் சுவர்கள், தூண்கள், நடைபாதைகள், மேல்தளங்கள் என எங்கு பார்த்தாலும் சிற்பங்களே. இரண்டாம் தளத்தைக் கடந்து நடுப்பகுதிக்கு வந்தால் அங்கு தான் 200 அடிக்கு மேல் உயரம் உள்ள நடுக் கோபுரமும், அதைச் சுற்றி 4 சிறிய கோபுரங்களும் உள்ளன. தஞ்சைக் கோயில் விமானம் "தட்சிண மேரு" என்று கூறப்படுவதைப் போல் இதுவும் "மேரு மலை" - கடவுளின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து கடவுளும், அவரது பிரதிநிதியாக அரசர், தேவராஜாவாக இருந்து ஆட்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது. இங்கு பெரிய கற் கோபுரத்தின் அடியில் மூலவராக விஷ்ணு எட்டு கரங்களுடன் இருக்கிறார். காஞ்சிக் கோயில்களிலும் விஷ்ணுவுக்கு எட்டு கரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் திசை மேற்கு என்பதால் மேற்கு நோக்கிக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதலில் விஷ்ணு கோயிலாகக் கட்டப்பட்டது, மன்னர்கள் புத்த மதத்திற்கு மாறிய போது கோயிலும் மஹாயான புத்தக் கோயிலாக மாற்றப் பட்டது. பின் 14ம் நூற்றாண்டில் இலஙகையிலிருந்து வந்த தேரவாத புத்த மதத்தைச் சார்ந்த கோயிலாகத் தற்போது இருக்கிறது.

வருத்தமான விஷயம் நிறைய இடங்களில் காணப்பட்ட சிதைவுகள் தான். பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேன்டிய இந்தக் கோவில்கள் பின்னால் வந்த‌ மன்னர்களால் கவனிக்கப்படவில்லை. அதோடு சில கொடுங்கோல் ஆட்சியளார்களால்தான் நிறைய சிற்பங்கள், கட்டிடங்கள் சிதைக்கப்பட்டன.

குறிப்பு:


இந்த அங்கோர் வாட் கோவிலைக்காண ஒரு முழு நாள் வேண்டும். நாம் பயணத்திட்டங்களில் விவரம் புரியாது சுற்றுலா நிறுவன‌ங்கள் போட்டுக்கொடுத்த திட்டங்களை அப்படியே ஏற்கிறோம். ஒரு நாளைக்கு 4 கோவில்கள் என்பது சரியானது தானா என்பதை நாங்களும் யோசிக்கவில்லை. ஆனால் நேரடி அனுபவம் வேறு. இந்த அங்கோர் கோவிலுக்கு மட்டும் ஒரு முழு நாள் தேவைப்படுகிறது. ஏனெனில் கோவிலை அடையவே பல கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அடிக்க‌டி படிகள் ஏற வேன்டும். அதனால் காலை 7 மணிக்கே  சென்றடைவது நல்லது. அப்போது தான் சுட்டுப்பொசுக்கும் வெய்யிலிடமிருந்து ஓரளவாவது தப்பிக்க முடியும்!

இந்த அங்கோர் வாட் கோவிலின் முழு அழகையும் அதனாலேயே சரியாக பார்க்க முடியவில்லை. அதோடு அதன் முழு விபர்ங்களையும் கையில் வைத்துக்கொண்டு பார்த்தால்தான் சரியாக இருக்கும்!

Friday 1 March 2019

கம்போடியா-முதல் நாள் !!!

கம்போடியாவைப்பற்றி சிறு முன்னோட்டம்:

கிபி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை சென்லா என்னும் தமிழர் வழி வந்த பேரர‌சு கம்போடியாவை சிறப்பாக ஆட்சி செய்தது. அதன் பின் வந்த கெமர் பேரர‌சு [ KHMER DYNASTY ] பல்லவ வழித்தோன்றல்களுடன் மிகச்சிறப்பாக செல்வச் செழிப்புடன் ஆட்சி செய்தது. கெமர் பேரரசின் மன்னர்கள் தான் வரலாற்று சிறப்பு மிக்க கலைக்கோவில்களை கம்போடியாவில் உருவாக்கினார்கள்.

கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் , அண்டை நாடுகளான தாய்லாந்து, வியட்நாம் இவற்றுடனான போர்களினால் கம்போடியா தன் சுயம் இழந்தது.
1683 ஆம் ஆண்டு முதல் பிரஞ்சு காலனியாக இருந்த கம்போடியா 1915ல் ஜப்பானியர்களால் ஆக்ரமிக்கப்பட்டது. 1945ல் ஜப்பானியர்கள் வெளியேற்றப்பட்டு மீண்டும் பிரெஞ்சு காலனியின் ஆதிக்கம் வந்தது. மீண்டும் 1953ல் பிரெஞ்சு அரசாங்கம் கம்போடியாவுடன் சேர்ந்திருந்த வியட்நாமை தனி நாடாகப்பிரித்து, பின் கம்போடியாவிற்கு முடியாட்சியின் கீழ் சுதந்திர ஆட்சியைக்கொடுத்து விலகிக்கொண்டது. அதன் பின் தொடர்ந்து வந்த 20 வருடங்கள் முடியாட்சி, கம்யூனிஸ்ட் ஆட்சி, அதன் குழப்பங்கள், அதன் தொடர்பான அடக்குமுறைகளால் கம்போடியா பெரும் அழிவை ச்ந்தித்தது. 1975 முதல் ஆட்சி செய்த பால் பாட் என்னும் கம்யூனிச அரசனால் லட்சக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். மூன்று வருடங்களுக்குப்பிறகு, 1978ல் வியட்நாமிற்கும் கம்போடியாவிற்கும் ஏற்பட்ட போரில் கம்போடியா தோற்றது.

ஏறக்குறைய 20 ஆண்டுகள் நடைபெற்ற கொடிய போரினால் நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்து துறைகளும் பெரும் சிதைவடைந்து தற்போது மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, ஆகிய நாடுகள் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இங்கிலாந்து முறைப்படி மன்னரும் பிரதம மந்திரியும் கொண்ட அரசாட்சி நடக்கிறது. நெல் உற்பத்தியும் சுற்றுலாவும் நாட்டின் பிரதான வருவாயாக விள‌ங்குகின்றன.

கம்போடியாவின் ஆட்சி மொழி கெமர் மொழியும் பிரெஞ்சு மொழியும் ஆகும்.
கம்போடியாவின் தலநகரம் நாம் பென் [ Phnom Penh ] என்றாலும் இன்னொரு நகரான சியாம் ரீப் [ SIEM REAP ] தான் அனைத்து கோவில்களும் உறையும் நகர்!

இனி எங்கள் பயணம் தொடங்குகிறது.....

எங்களின் கம்போடியா பயணம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் 18ந்தேதி
[ இரண்டு மாதங்களுக்கு முன் ] தொடங்கியது. அன்றிரவு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்டு மறுநாள் விடியற்காலை தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் சென்றடைந்தோம். அங்கிருந்து 2 மணி நேரத்தில் கம்போடியாவின் சியாம் ரீப் நகரை சென்றடைந்தோம்.

அங்கிருந்த 3 நாட்களும் எங்களுக்கென ஒரு வழிகாட்டியும் தனியான காரும் தன் தொடர்பிலுள்ள வியட்நாம் சுற்றுலா நிறுவனம் மூலம் எங்கள் மகன் ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் தங்கியிருந்தது ' சோமாதேவி '[ SOMADEVI RESORTS ] என்ற நான்கு நட்சத்திர விடுதி.

DHAKSHIN RESTAURANT
ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்த போதே மதியம் 2 மணி ஆகி விட்டதால் முன்னதாக என் மகன் பேசி வைத்திருந்த ' DHAKSHIN 'என்ற தமிழ் உணவகத்துக்குச் சென்றோம். சாம்பார், பொரியல் வகைகளுட்ன் சாப்பாடு அருமையாக இருந்தது. உணவக உரிமையாளர் பன்னீர் செல்வம். சிங்கப்பூர் வாழ் தமிழர். நன்கு பேசியதுடன் சில உதவிகளும் செய்து, நல்ல யோசனைகளையும் தந்தார்.
அதன் பின் எங்கள் ஹோட்டலுக்குச் சென்றோம்.

கலையழகு மிகுந்த அந்த ஹோட்டலைப்போல் இது வரை நான் பார்த்த நாடுகளிலோ அல்லது துபாயிலோ நான் பார்த்ததில்லை. வரவேற்பறையில் அத்தனை அழகழான சிற்பங்கள்!

ஹோட்டல் முகப்பு
        சிலைகளும் அலங்காரங்களும்!!






ஒரு அறையின் கதவு!









இது நாங்கள் தங்கியிருந்த எக்ஸிகியூட்டிவ் பிரிவு

சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு நாங்கள் எங்கள் வழிகாட்டி சொன்ன அட்டவணையின்படி முதலில் சென்ற இடம் WEST BARAY எனப்படும் மிகப்பெரிய ஏரி. கம்போடியா முழுமைக்கும் தண்ணீர் இங்கிருந்து தான் முன் காலத்தில் சென்றதாகவும் இப்போது அப்படிப்பட்ட உபயோகம் இல்லையென்றும் வழிகாட்டி சொன்னார்.



2 கிலோ மீட்டர் அகலமும் 8 கிலோ மீட்டர் நீளமும் உள்ள இந்த ஏரியின் நடுவே இடிபாடுகளுடன் கூடிய ஒரு ஹிந்து கோவில் உள்ளது. விவசாயத்துக்காக இது அந்தக்காலத்தில் பயன்பட்டதாக சொல்லப்பட்டதை சில ஆராய்ச்சியாளர்கள் தற்போது மறுத்திருக்கிறார்கள். ஏரியின் நடுவே கோவில் இருந்திருப்பதால் இது புனிதமான இடமாக வழிப்பாட்டுக்குரியதாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.இது அரசன் முதலாம் ஜெயவர்மனால் ஆரம்பிக்கப்பட்டு, உதயாதித்த வர்மனால் முடிக்கப்பட்டது.

apsara dance






BUFFET DINNER
இரவு உணவு ஒரு ஹோட்டலில் இருந்தது. பெரியளவில் BUFFET உணவு. இப்படிப்பட்ட மிகப்பெரிய BUFFETஐ நான் இது வரையில் பார்த்ததில்லை. மிகப்பெரிய அளவிலிருந்த அசைவ உணவு வகைகளை விலக்கி, சாலட், பழங்கள், இனிப்புக்கள் என்று ஒரு வழியாக உண்ண ஆரம்பித்தோம்!சாப்பிட்டவாறே அங்கே மேடையில் ஆடிய 'அப்ஸரா' நடனத்தை கண்டு ரசித்தோம். முதல் நாள் அமைதியான உறக்கத்தில் முடிந்தது.