Tuesday 7 July 2020

மறக்க முடியாத ஓவியர்களும் அவர்களின் ஓவியங்களும்!!!

சிறு வயதில் அப்போதெல்லாம் வார இதழ்களான ஆனந்த விகடன், கல்கி,குமுதம், தினமணி கதிர் மற்றும் மாத இதழான கலைமகள் இதழ்களில்  சிறுகதைகளுக்கு பிரபல ஓவியர்கள் படம் வரைவார்கள். சிறுகதைகளின் வீரியம் புரியாத சின்னஞ்சிறு வயது. ஆனால் ஓவியங்களின் அழகின் தாக்கம் பாதித்தது. ஏகலைவனாய் நான் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தது அப்போது தான். எல்லா ஓவியர்களும் மனதை கொள்ளை கொண்டார்கள் என்றாலும் கல்கியின் ஓவியர் வினுவும் ஓவியர் நடராஜனும் என் மானசீக குருவானார்கள்.
அந்த கால ஓவியர்கள் சிலரின் ஓவியங்கள் இங்கே..உங்கள் பார்வைக்கு..

1.இது எனக்கு மிகவும் பிடித்த ஓவியர் நடராஜனின் ஓவியம்! ' கலைமகளிலும்' தீபாவளி மலர்களிலும் வண்ண ஓவியங்கள் நிறைய வரைந்திருக்கிறார். மற்ற வார இதழ்களில் இவரது ஓவியங்களை நான் கண்டதில்லை!
 

2. ஓவியர் வினு வரைந்த ஓவியம் இது!


3. ஓவியர் சிம்ஹாவின் ஓவியம். இவர் அறுபதுகளில் நிறைய விகடனில் வரைந்துள்ளார்.


4. ஓவியர் ராஜம் வழங்கிய ஓவியம் இது. நிறைய கோடுகளும் வித்தியாசமான வண்ணக்கலவைகளும் இவரின் ஓவியங்களில் நிரம்பியிருக்கும்!


5. இவர் ஓவியர் உமாபதி. நகைச்சுவைத்துணுக்குகள் வரைவதில் வல்லவர். இவர் இத்தனை அழகாய் வண்ண ஓவியம் வரைவாரா என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது இந்த ஓவியம்!



6. ஓவியர் ஸுபா வரைந்தது இது!


.  7. ஓவியர் கோபுலுவின் ஓவியம் இது! ஆனந்த விகடனின் மிகச்சிறந்த ஆஸ்தான ஓவியர் இவர். கோட்டு ஓவியங்கள் வரைவதில் வல்லவர். சன் டிவி, குங்குமம் வார இதழ் லோகோ இவர் வரைந்தது தான்!


16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திறமைகளின் தொகுப்பு சிறப்பு... அனைத்துமே அருமை...

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அழகு. எத்தனை நளினம் இந்த ஓவியங்களில். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

எல்லா ஓவியங்களும் அழகு.  நீங்கள் ஓவியர் உமாபதி பற்றிச் சொல்லி  இருப்பது போலவே ஓவியர் வாணி அவர்கள் வரைந்த அசோக் மேத்தா படம் பார்த்து அதிசயித்துப் போப் பகிர்ந்திருந்தேன்.  பழைய மஞ்சரி, கலைமகள் இதழ்களில் சிறு / நெடுங்கதைகளுக்கு இன்னும் (நமக்கு அல்லது எனக்கு) புதிய ஓவியர்கள் எல்லாம் வரைந்திருக்கிறார்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஓவியங்கள் அனைத்தும் மனதைக் கவர்கின்றன.
தஞ்சையில் ஓவியர் தங்கம் என்று ஒருவர் இருக்கிறார்.
தினத்தந்தியில் பணியாற்றியபோது, தினத் தந்தியின் இலட்சினையாகிய கலங்கரை விளக்கத்தை ஓவியமாய் தீட்டிக் கொடுத்தவர் இவர்தான்.
பொன்னியின் செல்வன் முழுக் கதையினையும், சித்திரக் கதையாக மாற்றிவருகிறார். இதுவரை ஐந்து தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்
நன்றி சகோதரி

துரை செல்வராஜூ said...

அழகழகான் ஓவியங்கள் மனதைப் பரவசப்படுத்துகின்றன...

கல்கியில் வினு அவர்களது ஓவியங்கள் பிடித்தமானவை..

ஆயினும் தாங்கள் வரைந்த ஓவியங்களைக் காணவில்லையே!...

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ, அற்புதமான பதிவு.
எத்தனை அழகான சித்திரங்கள். பழைய
நாட்கள் சித்திரங்களைக் காணும் போது
அந்த நாட்களின் நினைவுகள் மனத்தில் அலை மோதுகின்றன.
மிக மிக நன்றி மா.
ராஜம் அவர்கள் மைலாப்பூர் வாசி. குடும்பத்துக்கே அவரைத் தெரியும்.
காலங்கள் மாறினாலும் மாறாத அழியாத
ஓவியங்கள்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து எழுதிய இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து எழுதிய இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஓவியர் தங்கம் அவர்களின் ' பொன்னியின் செல்வன்' இப்போது ஒரு மகளிர் இதழில் வெளி வந்து கொண்டிருப்பார்த்தேன். இது மிகச் சிறந்த முயற்சி! மிகவும் கடினமானதும் கூட!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்! விரைவில் என் கோட்டோவியங்கள் சிலவற்றை பகிர உள்ளேன்!

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வல்லிசிம்ஹன்! அன்பு நன்றி!!

Geetha Sambasivam said...

அனைத்து ஓவியர்களின் ஓவியங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். சித்ரலேகா என்றொருவர் வரைவார். முன்னால் ஆனந்த விகடனில் சிலம்புச் செல்வம் என்னும் பெயரில் சிலப்பதிகாரம் வந்தப்போ ஒரு பக்கம் அவர் படம் நிறைக்கும். அதைத் தவிரவும் "சில்பி"அவர்களின் தெய்வீகப் படங்கள் விகடன், கல்கி தீபாவளி மலர்களில் வரும். மணியம் அவர்களின் ஓவியங்களும் பிடித்தமானவை. பொன்னியின் செல்வனுக்கு அவர் வரைந்த வந்தியத்தேவனையும், குந்தவையையும், அருள்மொழியையும், பூங்குழலியையும், ஆழ்வார்க்கடியானையும் மறக்க முடியுமா? அதே போல் சிவகாமியின் சபதத்துக்கு வரைந்த ஓவியர் சந்திராவும்! அலை ஓசைக்கும் சந்திராதான் வரைந்தார் என நினைக்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

அப்போதெல்லாம் புதிதாக ஒரு தொடர்கதை தொடங்கப் போகிறது என்றால் யார் அதற்கு படம் போடப்போகிறார் என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருப்போம். எங்கள் காலம் மாயா, மாருதி, ஜெயராஜ், ம.செ. காலம்.

எல்லா ஓவியங்களும் மிக அழகு. ஓவியர் மணியம், அவர் புதல்வர் மணியம் செல்வம்(ம.செ.) ஓவியங்களையும் பகிர்ந்திருக்கலாம். உங்களுடைய ஓவியங்களையும் இணைத்திருக்கலாம்.

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா! சித்ரலேகா ஓவியங்களை நானும் ரசித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சிலப்பதிகார பாடல்களுக்கு அவர் வரைந்துள்ள ஓவியங்களுடனான தொகுப்பு என்னிடமும் சில உள்ளன. சந்திராவின் ஓவியங்களும் என்னிடம் [ அலையோசை நாவல் என நினைக்கிறேன்]உள்ளன.
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!