Friday 15 February 2019

கம்போடியா-ஒரு முன்னோட்டம்!!!

பல வருடங்களுக்கு முன், வலையுலகில் உலவிக்கொண்டிருந்த ஒரு நாள், ஒரு கோவிலின் மிக அழகிய ஓவியத்தைக்காண நேர்ந்தது. ஒரு கை தேர்ந்த ஓவியரின் வண்ணத்தீற்றல்களில் நுணுக்கமான சிற்பங்களுடன் அந்த கோவிலின் அழகு மனதை மயக்கியது.



என்றேனும் வாய்ப்பு கிடைத்தால் இந்தக்கோவிலை சென்று பார்க்க வேண்டுமென்று அந்த வினாடி நினைத்தேன். காலங்களின் சுழற்சியில் அந்த ஆசையை மறந்தே போய் விட்டேன். சென்ற டிசம்பர் மாதம் என் மகன் என்னையும் என் கணவரையும் எங்கேனும் சில வெளி நாடுகளுக்கு பயணம்  சென்று வருமாறு வற்புறுத்திய போது, அதற்கிசைந்து நான் தேர்வு செய்த இடம் அந்த கோவில் இருக்கும் நாடு தான்! அது கம்போடியா!




கம்போடியாவுடன் வியட்நாம், சிங்கப்பூர் என்று அந்தப்பயணம் அமைந்தது.
ஆனால் கம்போடியா சென்று அங்கிருந்த கோவில்களைப்பார்த்தபோது, அவற்றின் அழகு எந்த அளவிற்கு என்னை பிரமிக்க வைத்ததோ, அதே அளவிற்கு அக்கோவில்களின் சிதைவு என்னை வேதனையில் ஆழ்த்தியது. திரும்பி வந்த பிறகு முழுமையாக கம்போடியாவின் வரலாற்றை அறிந்து கொள்ள முயன்றேன். தெரிந்து கொண்டவை எல்லாம் என்னை பிரமிக்க வைத்தன.





கம்போடியாவின் கோவில்கள் அனைத்தும் உதயவர்மன், ஜெயவர்மன், ராஜேந்திர வர்மன், சூர்ய வர்மன் என்னும் பெயர்கள் கொண்ட அரசர்களால் கட்டப்பட்டவை. அங்கு செல்லும் முன் நான் அறிந்து கொண்டது, கம்போடிய நாட்டு அரசியான சோமாதேவியை மணந்து கொண்ட இந்திய இளைஞன் ஒருவன் அதற்குப்பின் தன் மாமனார் அளித்த நிலத்தையும் ஊரையும் கொண்டு மெல்ல மெல்ல கோட்டைகளை நிறுவி, ஊர்களை வென்று அரசனாகி, பின் கைமர் என்ற பேரரசுக்கு சக்கரவர்த்தியானான் என்பது தான். ஆனால் திரும்ப வந்து நான் அறிந்து கொண்டதோ ஆயிரமாயிரம் தகவல்கள்.





வர்மன் என்று பெயர் முடிவதால் அவர்கள் பல்லவ மன்னர்களாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சென்ற மாதம் தஞ்சையில் இருந்த போது, தந்தி தொலைக்காட்சியில்  ‘கடல் கடந்து தடம் பதித்த தமிழர்கள்’ என்ற தொடர் நிகழ்ச்சியில் கம்போடியா நாடு முன்பு காம்போஜம் என்ற பெயரில் இருந்ததெனவும் அதை பல்லவ மன்னர்கள் ஆண்டு வந்தனர் என்றும் அவர்களில் ஒரு பிரிவினரே காஞ்சியை ஆண்ட பல்லவ அரசர்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்த பல்லவர்கள் மெளரிய ஆட்சியில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்றும் அவர்களே கம்போடியா நாட்டை ஸ்தாபித்தவர்கள் என்றும் அவர்களே பல்லாயிரம் வருடங்களுக்கு முன் தென் கிழக்கு ஆசியாவை ஆட்சி செய்த ஸ்ரீவிஜய பேரரசில் இருந்த சைலேந்திரர்களில் ஒரு பிரிவினர் என்றும் தெரிய வந்தது. காஞ்சியை ஆண்ட பல்லவர்களுக்கு வாரிசு இல்லாமை ஏற்பட்டபோது அவர்களின் வேண்டுதலில் காம்போஜ [கம்போடியா] மன்னன் தன் குல இளவல் ஒருவனை அனுப்பியதாகவும் அவன் வழி மன்னர்கள் தான் பிற்காலத்தில் காஞ்சியை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த மகேந்திரவர்மன் வழியினர்! இவர்கள் வழி சந்ததியினர் இந்தோனேஷியா, சுமத்ரா, பர்மா, வியட்நாம் நாடுகளில்கூட அரசர்களாக பல்லாண்டு காலம் ஆட்சி செய்து கலைகளியும் இந்து மதத்தினையும் தமிழர் பண்பாட்டையும் தலைமுறை தலைமுறையாக பரவச்செய்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்!

கி.பி முதலாம் நூற்றாண்டிலேயே இந்தியர்கள் காம்போஜ நாட்டிற்கு குடியேறி இருக்கிறார்கள்.  அதே போல் அந்த நாட்டு மக்களும் நாகப்பட்டினம் போன்ற கடலோர பிராந்தியங்களில் குடியேறி இருக்கிறார்கள். லாவோஸ், சியாம், பர்மா, மலேயா தீபகற்பம் அடங்கிய பேரரசாக அது திகழ்ந்தது. சைவமும் வைணவமும் தழைத்தோங்கி, எண்ணற்ற கோவில்கள் உருவாக்கப்பட்டு, ராமயணமும் மகாபாரதமுமான சிற்பங்கள் அவற்றில் பதிப்பிக்கப்பட்டன.

8ம் நூற்றாண்டுகளில் தோன்றிய ஸ்ரீவிஜய பேரரசு இந்து மதத்தைத் தழுவியிருந்தாலும் அதற்குப்பின் தெற்காசிய நாடுகளின் பேரரசாகத்தோன்றிய சைலேந்திரர்கள் காலத்தில் மஹாயான புத்தமதம் வேரூன்றியது. காம்போஜம் மெல்ல மெல்ல வீழ்ச்சியுற்று அழிந்தது.
   
பிற்காலத்தில் சோழப்பேரரசின் ராஜேந்திர சோழன் இந்த சைலேந்திரர்களை வென்று கடாரம் வென்று  வெற்றியைக்குவித்தது இன்றும் சரித்திரத்தில் இருக்கிறது! இந்த தெற்காசிய நாட்டு சரித்திரங்கள், அரசியல், புகழ் பெற்ற சரித்திர கால ஆளுமைகளை வைத்துத்தான் எழுத்தாளர் சாண்டில்யன் ‘ கடல் புறா’ என்ற சரித்திரம் கலந்த கதையாக சுவாரஸ்யமாக எழுதினார்!!!

இனி நாம் கம்போடியாவிற்குச் செல்லலாம்!




8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க காத்திருக்கிறேன்...

ஸ்ரீராம். said...

மிக மிக சுவாரஸ்யமான இடம், தகவல்கள்.

தொடரக் காத்திருக்கிறேன்.

unmaiyanavan said...

சீக்கிரம் அழைத்துச் செல்லுங்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சோழ மண்ணில் பிறந்தவர்கள், இக்கோயில்களின்மீது அதிக நாட்டம் செலுத்துவர். உடன் பயணிக்கக் காத்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி தனபாலன்! ரசிக்க‌வும் பகிரவும் விரைவில் தகவல்களையும் புகைப்படங்களையும் வெளியிடுகிறேன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சொக்கன் சுப்ரமணியன்!

மனோ சாமிநாதன் said...

உங்களின் கருத்து முற்றிலும் சரியே. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோத்ரர் ஜம்புலிங்கம்!